
கட்டாய மதமாற்றம் தொடர்பான வழக்கில், அரசியல் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு என்று கூறி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘இது முக்கியமான பிரச்னை. உங்கள் அரசியலை இதில் கலக்க வேண்டாம்’ என உச்ச நீதிமன்றம் தமிழக அரசைக் கடுமையுடன் குறிப்பிட்டது.
கட்டாய மதமாற்றம் தொடர்பாக வழக்குரைஞர் அஸ்வினி குமார் உபாத்யாய, உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடர்ந்துள்ளார். ‘மக்களை அச்சுறுத்தியும், பரிசுகள், பணப் பலன்கள் வழங்கி ஏமாற்றியும் நடக்கும் மதமாற்று மோசடியை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ‘கட்டாய மதமாற்றம் என்பது மிகப் பெரும் பிரச்னையாகும். இது நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையது’ என, உச்ச நீதிமன்ற அமர்வு கூறியிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிகுமார் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும்படி அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணியிடம் அமர்வு கேட்டது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் குறுக்கிட்டு, ”இது அரசியல் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு. தமிழகத்தில் இதுபோன்று கட்டாய மதமாற்றம் ஏதும் நடக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.
இதற்கு அமர்வு கண்டனம் தெரிவித்தது. நீங்கள் இவ்வாறு கொந்தளிப்பதற்கு வேறு சில காரணங்கள் இருக்கலாம். நீதிமன்றத்தை வேறொரு களமாக மாற்ற முயற்சிக்க வேண்டாம். நாங்கள் நாடு முழுதும் உள்ள நிலைமை குறித்து ஆராய்ந்து வருகிறோம். கட்டாய மதமாற்றம் என்பது நிச்சயம் மிகப் பெரும் பிரச்னைதான். உங்கள் மாநிலத்தில் அந்தப் பிரச்னை இருந்தால், அது ஆபத்து; இல்லாவிட்டால் நல்லது. உங்களைக் குறிப்பிட்டு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக எப்படி கருதுகிறீர்கள். இந்த விவகாரத்தை வீணாக அரசியலாக்க வேண்டாம்… என்று கண்டித்தனர்.
இதை அடுத்து, வழக்கின் விசாரணை பிப்ரவரி ஏழாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.