அட்சய என்றால்… வளர்தல் என்று பொருள்…! என்ன செய்யலாம் இந்த நாளில்!

Published:

atchaya thrithiyai5 - 2026

அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.

அட்சய’ என்றால் வளருதல் என்று பொருள். அதனால்தான் அள்ள அள்ளக் குறையாமல் இருக்கிற பாத்திரத்தை, அட்சயப் பாத்திரம் என்று அழைத்தார்கள். ஆக, அட்சயம் என்றால் வளருதல். சயம் என்றால் கேடு என்று அர்த்தம். அட்சயம் என்பது, கேடு இல்லாத, அழிவு இல்லாத பொருள் என்று பொருள் என்கிறார்கள்

அட்சய திருதியை என்பது செல்வ வளம் தரும் நாளாக போற்றப்படுகிறது. அன்றைய தினம் மகாலட்சுமி அனைவரின் வீட்டிற்கும் வருகிறாள் என்பது ஐதீகம். அட்சய திருதியை நன்னாளில், முடிந்த அளவுக்கு தானம் செய்யச் சொல்கிறது சாஸ்திரம்.

ஆகவே, தானம் செய்யுங்கள். அதனால், வீட்டில் சகல சுபிட்சங்களும் நிறைந்திருக்கும். ஐஸ்வரியம் பெருகும். கடனில்லாத வாழ்க்கையை வாழ்வீர்கள் . ஏழை மாணவர் கல்விக்கு உதவலாம். ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு சென்று உணவு, இனிப்புகள் வழங்கலாம்.

காலையில் குளித்து கடைக்கு சென்று கல் உப்பு வாங்கி வரவும் பிறகு வீட்டில் தயிர் சாதம் செய்து அதனுடன் நெல்லிக்காயை நறுக்கி கலந்து விடவும்பிறகு குருமிளகு நிறைய கலந்த உளுந்து வடை தயார் செய்து மூன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவும்.

அடுத்த அட்சய திருதியை அன்று நமது தரித்திரங்கள் தீர்ந்து நமது வாழ்க்கை மென் மேலும் உயர்ந்து கொண்டே போகும் கோயில்களில் அன்னதானம் செய்யலாம். குறிப்பாக தயிர் சாதம், தேங்காய் சாதம், நீர் மோர், பழங்கள் கலந்த பால் சாதம், பால் பாயசம் போன்றவை வழங்கலாம்.

தயிர் சாதம் ஏழைகளுக்குத் தருவது 11 தலைமுறைக்குக் குறைவில்லா அன்னம் கிடைக்க வழிவகுக்கும். இந்த நாளில் குலதெய்வ ஆலயத்துக்கு சென்று வழிபடலாம்.

பிரசித்தி பெற்ற ஸ்தலங்களுக்கும் செல்லலாம். குழந்தைகளின் கல்விக்கு தேவையான புத்தகங்கள், நோட்டு, பேனா, கம்ப்யூட்டர் போன்ற சாதனங்கள் வாங்கலாம்.

அட்சய திருதியை அன்று குழந்தைகளுக்கு எழுத கற்றுக் கொடுத்தால் அவர்களது கல்விச் செல்வம் பெருகும். சுபகாரியங்களுக்கு பிள்ளையார் சுழி போடலாம்.

வங்கியில் புதுக்கணக்கு ஆரம்பிக்கலாம். டெபாசிட் செய்யலாம்.

புதிய பூஜைகள், விரதங்கள், விட்டுப்போன வழிபாடுகள் தொடங்கலாம்.

அரிசி, பருப்பு போன்ற மளிகை பொருட்கள் வாங்கலாம்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

அட்சய திருதியை அன்று புண்ணிய நதிகளில் நீராடினால் பாவம் போகும். பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் முக்கூடல் எனப்படும் மூன்று புண்ணிய நதிகள் சங்கமிக்கும் இடம் உள்ளது. அட்சய திருதியை அன்று அங்குச் சென்று நீராடினால் நல்ல பலன் கிடைக்கும்.

புத்தாடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும். கற்பூரம் தானம் செய்தால் சக்ரவர்த்தியாகும் பிறப்பு கிடைக்கும்.

தாமரை, மல்லிகைப்பூ தானம் செய்தால் மன்னர் குலத்தில் பிறப்பு கிடைக்கும். தாழம்பூ தானம் செய்தால் மகாவிஷ்ணுவின் அருள் கிடைக்கும்.

பாக்கு, வாசனைத் திரவியங்கள், பழங்கள் தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.

தானியங்கள் தானம் செய்தால் அகால மரணத்தில் இருந்து தப்பிக்கலாம்.

மோர், பானகம், குடிநீர் ஆகியவற்றை தானம் செய்தால் முற்பிறவி பாவம் தீர்ந்து வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

தன் சக்திக்கு ஏற்ப தானம் செய்யலாம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும்.

வெள்ளி வாங்கினால் சரும நோய்கள், மனக்குழப்பம், நிம்மதியின்மை ஆகியவை தீரும்.

அட்சய திருதியை அன்று நாம் எதை வைத்து பூஜை செய்கிறோமோ அது பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். தங்கம், வெள்ளி என்பது அவரவருடைய தனிப்பட்ட விருப்பம்.

ஆனால் இன்றைய உடனடி தேவை என்பது தண்ணீர். எனவே அட்சய திருதியை அன்று ஒரு குடம் அல்லது ஒரு சொம்பு நிறைய தண்ணீரை இறைவன் முன்பு வைத்தும் குறைவில்லாத தண்ணீர் செல்வத்தை வழங்குமாறு பிரார்த்தனை செய்யுங்கள்.

முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும்.

பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதிசொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான்

சோதிட சாத்திரத்தின்படி இந்நாளில் சூரியனும் சந்திரனும் சம அளவு உயரொளியுடன் விளங்கும் என நம்பப்படுகிறது.

akshaya 4 - 2026அட்சய திருதியை நவன்ன பர்வம் எனவும் அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை ரோஹிணி நட்சத்திரத்துடன் வரும் நாள் மிக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.

இந்து இதிகாசப்படி, அட்சஷய திருதியை நாளன்றே வேதவியாசர் மகாபாரத இதிகாசத்தை விநாயகரிடம் எழுதச் சொல்லி கட்டளையிட்டார்.

திருமாலின் அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது. இன்றும் கோவாவும் கொங்கண் பகுதியும் பரசுராம சேத்திரங்கள் எனக் குறிப்பிடப் படுகின்றன.

வைசாக மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் நாளான அட்சய திருதியை வருடத்தின் மிகப் புனிதமான நாட்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. செல்வத்திற்கு அதிபதியான குபேரரே செல்வமிக்க கடவுள் என நம்பப்படுகிறார். இந்த நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி தந்தரம் எனும் நூல் கூறுகிறது.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

இந்த நாளில், குபேர லட்சுமி பூசை நடத்தப்படுகிறது. அதில் லட்சுமி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்சன குபேர எந்திரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.

ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு செய்யும் தானம், தர்மம், உதவிகள் பல பிறவிகளுக்கு புண்ணிய பலன் தரும்

akshaya 5 - 2026ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம் அருகில் உள்ள ஸிம்மாசல நரஸிம்ம ஸ்வாமியின் திருமுக தரிசனம் இந்த ஒருநாள்தான் நடைபெறும். மற்றபடி வருடம் முழுக்க திருமுகத்தில் சந்தனகாப்பு தான் சாற்றி இருப்பார்கள்.

பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் வருடா வருடம் நடைபெறும் ரத யாத்திரைக்கான தேர் கட்டும் பணியை அன்றுதான் தொடங்குவார்கள்.

இமயமலையில் உள்ள பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோவில்கள் அன்று முதல் தரிசனத்திற்கு திறப்பார்கள். கும்பகோணத்தில் அன்று காலை 12 எம்பெருமான்களுக்கு கருடசேவை வைபவம் நடைபெறும். கும்பகோணம்  சக்ரபாணி கோவிலில் அட்சய திருதியை அன்று திருக்கல்யாணம் நடத்தப்படும்.

தாதம்பேட்டை T பழுர் அட்சய திருதியை அன்று கருட சேவை இங்கு நடத்தப்படுகிறது. அட்சயதிருதியை அன்று பட்டீஸ்வரம் வந்து சங்கு- சக்ரதாரியான
கோபிநாத பெருமாளை தரிசிப்பது ரொம்ப விசேஷம் என்பர். இந்தத் திருநாளை ஒட்டி இங்குக் கொண்டாடப்படுவதே பிரதூகப் பெருவிழா!

அட்சயதிருதியை நாளன்று… இந்தத் தலத்தில், பிரதூகப் பெரு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வருடாவருடம் அன்று மாலை 5 மணி அளவில் கோபிநாத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து மாலை 6 முதல் 7 மணி வரையிலும் பிரதூக (அவல்) முடிச்சு வழங்கும் வைபவம் நடைபெறும்.

இந்த வைபவத்தின்போது, மூன்று கைப்பிடி அளவு அவலை புதுத் துணியில் முடிச்சாகக் கட்டி, கோபிநாத பெருமாளுக்கு சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பு. இதனால் தொழில் விருத்தி ஏற்படும்; வளம் பெருகும்; குபேர வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.

பக்தர்கள் கோயிலிலேயே அவல் முடிச்சு வாங்கி பெருமாளுக்குச் சமர்ப்பித்து
அவல் முடிச்சுகளை மொத்தமாகச் சேகரித்த பட்டாச்சார்யர், அவை அனைத்தையும் பெருமாளுக்கு சமர்ப்பித்து ஆரத்தி காண்பித்த பின் திரும்ப பக்தர்களுக்கு
அவல் முடிந்து தரப்பட்ட மஞ்சள் துணி, பிரசாதமாகத் தரப்படுகிறது. அவலில் தேங்காய் மற்றும் சர்க்கரை கலக்கப்பட்டு, வந்திருந்த பத்தர்களுக்கு கொடுக்கப் படுகிறது.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

பாண்டவர்களுக்கு சூரியபகவானிடமிருந்து அன்று தான் அட்சயபாத்திரம் கிடைத்தது. சுதாமா என்கிற குசேலர் அன்று தான் துவாரகையில் கிருஷ்ணனை சந்தித்தார். ஆதிசங்கரர் அன்று தான் கனகதாரா ஸ்தோத்திரம் இயற்றினார். குபேரன் அன்று தான் பத்ம நிதி மற்றும் சங்க நிதியை பகவானிடமிருந்த கிடைக்கப்பெற்றான்.

காசி அன்னபூரணி அன்று தான் தன்னுடைய தரிசனத்தை உலக மக்களுக்கு காட்சியளித்து அருள் புரிந்தாள்.

அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படி?

அட்சய திருதியை தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். பிறகு சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும். அப்போது விஷ்ணு அஷ்டோத்திரம் மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்வது மிக, மிக நல்லது.

அன்று பகலில் திரவ ஆகாரம் மட்டும் சாப்பிட்டு மகாவிஷ்ணுவை மனதில் நினைத்து விரதம் மேற் கொள்ள வேண்டும். விரத சமயத்தில் விஷ்ணு ஸ்தோத்திரம் சொல்லிக் கொண்டோ அல்லது கேட்டுக் கொண்டோ இருப்பது நல்ல பலன்களைத் தரும்.

அலுவலகம் அல்லது வெளியில் வேலை பார்ப்பவராக இருந்தால், “ஓம் நமோ நாராயணாய’ என்றோ, “ஸ்ரீமகாவிஷ்ணுவே நமக’ என்றோ மனதுக்குள் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

அட்சய திருதியை தினத்தன்று காலை, மாலை இரு நேரமும் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு போய் மனதை பெருமாளிடம் ஒப்படைத்து மனம் உருகி வழிபட்டால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.

காலையில் கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் மாலை சென்று பெருமாளை வணங்கி, துளசி, தீர்த்தம் பிரசாதம் வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்து வழக்கமான உணவை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

மஞ்சள் மகிமை

வீட்டிற்கு மஞ்சள் வாங்கினால் போதுமானது. மங்களகரமானது மஞ்சள். இதில் அனைத்து மகிமையும் உள்ளது. இதில் கஸ்தூரி மஞ்சள் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு தனி சக்தி உண்டு. மஞ்சள் பொடியாகவும் வாங்கலாம், மஞ்சள் கிழங்காகவும் வாங்கலாம்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img