
பகவத்கீதை பகுதி 19 – மகாபாரதக் கதை
ஆதிபர்வம் -4 – வியாசர்
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
நாராயணம், பத்மபுவம், வஸிஷ்டம் சக்திம் ச தத்புத்ர பராசரம் ச வ்யாஸம் சுகம்
கௌடபதம் மஹாந்தம் கோவிந்த யோகீந்த்ரம் அதாஸ்ய சிஷ்யம் |
ஸ்ரீ சங்கராச்சார்யம் அதாஸ்ய பத்மபாதம் ச ஹஸ்தாமலகம் ச சிஷ்யம் தம் தோடகம்
வார்த்திககாரம் அன்யான் அஸ்மத் குரூன் ஸந்ததம் ஆனதோஸ்மி ||
மேலே சொல்லப்பட்டுள்ள ஸ்லோகத்தில் குரு பரம்பரையைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். ஸ்ரீமன் நாரயாணன், அவரது மகன்/சீடன் நான்முகப் பிரம்மா; அவரது மகன்/சீடன் வசிஷ்டர்; அவரது மகன்/சீடன் சக்தி; சக்தியின் மகன்/சீடன் பராசரர்; பராசரரின் மகன்/சீடன் வியாசர்; வியாசரின் மகன்/சீடன் சுகப் பிரம்மம்; சுகரின் சீடர் கௌடபாதர்; கௌடபாதரின் சீடர் கோவிந்தபாதர்; கோவிந்தபாதரின் சீடர் ஆதிசங்கரர்; சங்கரரின் சீடர் பத்மபாதர்; பத்மபாதரின் சீடர் ஹஸ்தாமலகர்.
வசிஷ்டரின் மகனான சக்தி விரைவில் இறந்துவிடுகிறார். அவரின் இறப்புக்குப் பிறகே பராசரர் பிறக்கிறார். எனவே வசிஷ்டர் பராசரரை வளர்த்து அவருக்கு குருவாக இருந்து வேதங்களைக் கற்பிக்கிறார். சிலகாலம் கழித்து வசிஷ்டர் பராசரரைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார். ஆனால், பராசரர் மானுடம் சிறக்கவும் வேதங்கள் புனருத்தாரணம் ஆகவும் வேண்டி ஒரு புத்திரனைத் தான் கர்ப்பாதானம் செய்வதன் மூலம் பெற்றுத் தருவதாகவும் திருமணம் என்னும் பந்தம் வேண்டாம் என்றும் வேண்டினார்.
ஒரு முறை கங்கைக்கரையில் அக்கரைக்குச் செல்லப் படகுக்குக் காத்திருந்த வேளையில் மச்சகந்தி என்னும் கன்னிகை படகு ஓட்டி வர அவள் படகில் பயணித்த பராசரர் அவள் அழகிலும், அவள் விருத்தாந்தத்திலும் மனம் திருப்தி உற்றவராய் அவளிடம் தான் இன்னார் எனக் கூறி இப்போது இன்னும் சற்று நேரத்தில் குறிப்பிட்ட கிரகநிலையுடன் கூடிய வேளை வரப் போவதால் அப்போது அவர் அவளுடன் கூடினால் சத்புத்திரன் பிறப்பதோடு உலகம் உய்யவும் அந்த மகன் உதவி செய்வான் என்று சொல்கிறார்.
முதலில் மறுக்கிறாள் மச்சகந்தி. தன் கன்னித் தன்மை போய்விடுமே எனப் பதறுகிறாள். மேலும் பராசரர் போன்ற கற்றுணர்ந்த பிரமசாரி ஒரு மீனவப் பெண்ணான அவளைத் தொட்டுக் கூடினால் உலகம் அபவாதமாகப் பேசுமே எனப் பயப்படுகிறாள். ஒரு குழந்தைக்காக இத்தகைய தவறு செய்யலாமா என்றும் கேட்கிறாள். அவளைப் பல்வேறு ஆறுதல் மொழிகள் சொல்லித் தேற்றிய பராசரர் அவளுக்குப் பிள்ளை பிறந்த உடனேயே அவள் மீண்டும் பழைய மாதிரி கன்னித் தன்மையை அடைவாள் என வாக்கும் கொடுக்கிறார்.
அதன் பின்னர் பராசரர் அந்தத் தருணம் இயற்கையின் அமைப்பும், கிரஹங்களின் அமைப்பும்,உயர் நன்மை தரும் காலமாகவும் இருப்பதாகக் கூறி அருகிலுள்ள ஒரு தீவுக்குப் படகை ஓட்டிச் செல்லும்படி அவளிடம் சொல்கிறார். அவள் உடலில் அதுவரை இருந்த மீன் வாடையை முற்றிலும் போக்கிப் பரிமள காந்தியாக்கிய பின்னர், அங்கே பனி மூட்டத்தை உருவாக்கி அவளுடன் கூடுகிறார். அவர் நினைத்தபடியே ஆண் மகவு பிறக்கிறது.
குழந்தை கருமை நிறத்துடன் இருந்ததாலும் தீவில் பிறந்ததாலும் க்ருஷ்ண த்வைபாயனர் என்னும் பெயரைச் சூட்டுகிறார். குழந்தையைத் தன்னுடன் எடுத்துச் சென்று ரிஷிகளின் ஆசிரமத்தில் வளரச் செய்தார். மச்சகந்தி நினைக்கும் நேரம் அவள் மகன் அவளை வந்து பார்ப்பான் என்னும் வரத்தையும் அருளுகிறார்.




