spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ஸ்ரீ சிருங்கேரி ஆச்சார்யர்களின் வித்தையும், வினயமும்!

ஸ்ரீ சிருங்கேரி ஆச்சார்யர்களின் வித்தையும், வினயமும்!

- Advertisement -

ஸ்ரீ சிருங்கேரி ஆச்சார்யர்களின் வித்தையும், வினயமும்:- பகுதி: 1
– மீ.விசுவநாதன்

sringer navarathri puja
sringer navarathri puja

ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிருங்கேரியில் “கணபதி வாக்யார்த்த சபை” நடைபெறும். அதில் கலந்து கொள்ள பாரத தேசத்தின் எல்லாப்பகுதியில் இருந்தும், நேபாளத்தில் இருந்தும் வித்வான்கள் வருவது வழக்கம். இந்த சபையில் அனைவரும் சமஸ்கிருதத்தில்தான் உரையாடுவார்கள். சாஸ்திரத்தில் இருந்து ஏதேனும் ஓர் பொருளை எடுத்துக் கொண்டு விவாதிப்பார்கள்.

இந்த சபைக்கு சிருங்கேரி ஆசார்யார்களே தலைமை தாங்கி நடத்துவார்கள். சிறப்பாக விவாதங்களை வைத்து நிரூபணம் செய்த பண்டிதர்களுக்குப் பொன்னும், பொருளும் பிரசாதமாக வழங்கி அவர்களைப் பெருமைப் படுத்துவார்கள். வேதம் கற்றவர்களின் பெருமையை உலகறியச் செய்யவும், கற்றவர்களுக்கு இன்னும் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தையும், பணிவையும் ஏற்படுத்தும்.

இத வித்வத்சபையில் கலந்து கொள்ளும் பண்டிதர்கள் காலையில் சாஸ்திர விஷயத்தில் ஏதேனும் ஒரு பொருளை எடுத்துக் கொண்டு தங்களுக்குள் விவாதிப்பார்கள். மாலையில் சபையில் ஜகத்குரு ஸ்ரீ ஆசார்யாளின் முன்பு அதை நீண்ட நேரம் விவாதிப்பார்கள். வித்வான்களுக்குள் ஒரு முடிவு எட்ட வில்லையானால் அதற்கு ஆசார்யாள் அவர்கள் சாஸ்த்திரத்தில் இருந்தும், இலக்கிய நூல்களில் இருந்தும் தகுந்த மேற்கோள்களைக் காட்டி அந்த வாதத்திற்கான சரியான விளக்கத்தைத் தருவார்கள். அந்த விளக்கத்தில் உள்ளம் பூரித்த பண்டிதர்களின் முகமலர்ச்சியே அதற்குச் சான்றாக அமையும்.

பண்டிதர்களுக்கு விளக்கம் சொல்லும் பொழுது எந்த ஒரு நிலையிலும் உணர்ச்சி வசப்படாமலும், கனிவாகவும், பணிவாகவும் பேசும் சிருங்கேரி குருநாதர்களின் பண்பைச் சான்றோர்களும், ஆன்றோர்களும் வியந்து போற்றப் படுவதை பக்தர்கள் கேட்டுப் பரவசமடைந்திருக்கிறார்கள்.

sringeri
sringeri

ஒரு முறை ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள் (ஸ்ரீ சாரதா பீடத்தின் முப்பத்தி ஆறாவது பீடாதிபதி) ஆந்திர மாநிலத்தில் விஜயயாத்திரை செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஜகத்ருவை தரிசிப்பதற்காக அங்கே அந்தஊரில் உள்ள ஒரு வேத பண்டிதர் வந்திருந்தார். அவர் வேதம் நன்கு கற்றடங்கிய மகாபண்டிதர். நன்கு கற்ற சான்றோரையோ, வேத பண்டிதர்களையோ கண்டால் சிருங்கேரி ஆச்சார்யர்களுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகும்.

அதனால் அந்த வேத பண்டிதரைப் பார்த்து,” சாஸ்த்ரிகளே….உங்களை மாதிரிப் பெரிய பண்டிதர்களெல்லாம் அவசியம் “வித்வத் சபை”க்கு வருகை தரவேண்டும். அப்போதுதானே சபையை நடத்துவதன் நோக்கம் நிறைவேறும். உங்களைப் போன்ற பண்டிதர்கள் வந்து கலந்து கொண்டு தங்களது வாதங்களை வெளியிட்டால் தானே எங்களைப் போன்றவர்கள் மேற்கொண்டு பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும்” எனக் கூறினார். கல்வியில் ஸ்ரீ சரஸ்வதியின் அம்சமான ஆச்சார்யாளே இவ்வளவு அடக்கமாக இருப்பது குருநாதரின் விநயத்தையே காட்டுகிறது என்று உணர்ந்து அந்த சாஸ்த்ரிகள் மிகுந்த சந்தோஷத்தோடு தொடர்ந்து வித்வத்சபைகளில் கலந்து கொண்டார்.

வித்வத் சபையில் கலந்து கொள்பவர்கள் ஆச்சார்யர்களின் அபார அறிவாகிய அமுத ஊற்றில் இருந்து தங்களால் எவ்வளவு பருக முடியுமோ அவ்வளவு பருகிக்கொள்கிறார்கள். இது போன்ற பல அரிய செய்திகளை “ஞாலம் போற்றும் ஞான குரு” என்ற புத்தகத்தில் ஸ்ரீமான் கி. சுரேஷ்சந்தர் பதிவு செய்துள்ளார்.

1990ஆம் வருடம் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில், எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுடன் சிருங்கேரிக்குப் போய் இருந்தேன். அப்பொழுதுதான் அவர் அம்மன்தரிசனம் ஆன்மிக மாத இதழில் அதன் ஆசிரியர் கீழாம்பூர் எஸ். சங்கரசுப்ரமணியன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க பெரியபுராணம் சிறுகதைத் தொடர் எழுதத் துவங்கியிருந்தார்.

“கணபதி வாக்யார்த்த சபை” (வித்வத் சபை) நடந்து கொண்டிருந்த சமயம். காலையில் தோரண கணபதி, ஸ்ரீ சங்கரர், ஸ்ரீ சாரதாம்பாள், ஸ்ரீ வித்யாசங்கரர் ஆலய தரிசனம் முடித்துக் கொண்டு, துங்கையில் மீனுக்குப் பொரி போட்டு அதன் அழகைக் கண்டு ரசித்த பின்பு நதிக்கு அக்கரையில் இருக்கும் நரசிம்ம வனப்பகுதிக்குச் சென்றோம். அது சாதுர்மாச காலம் என்பதால் சன்யாசிகள் நதியைக் கடந்து வராமல் ஓரிடத்தில்தான் இருப்பார்கள். அங்கு ஸ்ரீ சச்சிதாநந்த சிவாபிநவ நரசிம்ம சுவாமிகள், ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வாமிகள், ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மகாஸ்வாமிகளின் அதிஷ்டானங்களை தரிசனம் செய்த பின்பு ஆசார்யாளை தரிசனம் செய்து விட்டு வந்தோம்.

மீண்டும் மாலையில் “வித்வத் சபை” ஆரம்பித்தவுடன் அங்கு சென்று பக்தர்களுடன் அமர்ந்து கொண்டு அந்த நிகழ்ச்சி முழுவதும் பார்த்து விட்டு ஆறுமணிக்குத் துங்கைகரைக்கு வந்து சந்தியாவந்தன மண்டபத்தில் அமர்ந்து கொண்டு சந்தியாவந்தனம் செய்தோம்.

அந்த ரம்யமான சூழ்நிலைகளைக் கண்ட பாலகுமாரன் அவர்கள்,” விச்சு…இங்கிருத்து போகவே மனசு இல்லை. நீ கொடுத்து வச்சவன்….இன்னிக்குப் பார்த்தோமே அந்த வித்வத் சபை. அது பல்கலைக் கழகம்தான். எத்தனை பண்டிதர்கள் வாதம் செய்கிறார்கள்..அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருக்கும் இந்த ஆசார்யாள் அம்பாளின் சொரூபம்தான். எத்தனை அறிவு, எத்தனை அடக்கம். எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. ஆனாலும் அந்த சபையில் என்ன நடக்கிறது என்பதை என்னால் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த குருநாதர் ஞானவான் ஐயா….” என்று சொல்லி ஆசார்யாள் இருக்கும் திசைநோக்கி தன் இருகைகளையும் கூப்பினார்.

பின்பு நாங்கள் அங்கிருந்து மெல்ல ஸ்ரீ சாரதாம்பாளைத் தரிசிக்க வடக்குக் கரையில் இருக்கும் கோவிலை நோக்கி நடந்தோம்.

(வித்தையும் விநயமும் தொடரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe