தெலுங்கில்- பி.எஸ். சர்மா
தமிழில்- ராஜி ரகுநாதன்
‘மூஷிக சர்ப பேடிகா நியாய:’ –
மூஷிக: – எலி. சர்ப்ப பேட்டிகா – பாம்புப் பெட்டி.
ஏதோ ஒரு தெரியாத அதிர்ஷ்ட சம்பவம், அப்போதுவரை இருந்த குழப்பமான சூழலை விலக்கி வழியைத் தெளிவாக்கும். அதுவே ‘மூஷிக சர்ப்ப பேடிகா’ நியாயம் அளிக்கும் செய்தி.
ஒரு ஊரில் பாம்புகளைப் பிடித்து விளையாட்டு காட்டி வாழ்ந்து வந்த நரசய்யா என்பவன் இருந்தான். ஒருநாள் அவன் தன் பாம்புப் பெட்டியை வீட்டில் வைத்து விட்டு வேறு வேலையாக அடுத்த கிராமத்திற்குச் சென்றான். திரும்பி வருவதற்கு தாமதமாகியது. பாவம் பாம்பு. உடலைச் சுருட்டிப் படுத்து பெட்டியிலேயே அடைபட்டிருந்தது. பசி அதனை வாட்டியது. என்ன செய்வதென்று அதற்குப் புரியவில்லை. அதற்கு நகரும் சக்தி கூட இல்லை. அப்போது ஒரு வியப்பான சம்பவம் நிகழ்ந்தது. அந்த அறைக்குள் நுழைந்த ஒரு சுண்டெலி அந்த பெட்டிக்குள் ஏதாவது உணவு கிடைக்கும் என்றெண்ணி அதில் ஒரு துளையிட்டு அதற்குள் நுழைந்தது. பிறகு என்ன நேர்ந்திருக்கும் என்று கூறத் தேவையில்லை. தன் வாயில் வந்து விழுந்த இரையை பாம்பு ருசித்து உண்டு பசியாறியது. அதோடு எலி செய்த துளை வழியே வெளியே தப்பித்துச் சென்றது.
இதிலிருந்து என்ன தெரிகிறது? உயிரினங்களின் வளரச்சியும் தேய்வும் கண்ணுக்குத் தெரியாத (அதிருஷ்ட) தெய்வத்தின் கரங்களில் உள்ளது. இந்த கதையில் வரும் நாகதேவதை கஷ்டத்தில் உள்ள உயிரினத்துக்கு குறியீடு. வாயில் வந்து விழுந்த எலி அதிருஷ்டம் அனுப்பிய பரிகாரத்திற்கு குறியீடு.
நிராசை, சோர்வு, மன அழுத்தம் இவற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து விடுதலை பெற ஒரு நல்ல வழி கிடைப்பதும் சுதத்திரத்தை அனுபவிப்பதும் இந்த நியாயத்தின் சிறப்பு. இப்படிப்பட்ட சிக்கலான நிலையில் இருந்து அதிருஷ்டவசமாக காப்பாற்றப்பட்ட பல வரலாற்று சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.
ராமாயணம் சுந்தரகாண்டத்தில் 28 வது சர்கத்தில் சீதாதேவி வருந்தும் சம்பவம் வர்ணிக்கப்படுகிறது. அரக்கப் பெண்களின் இடையில் அவர்களின் கடினமான வசைகளைக் கேட்டுக் கொண்டு இருக்கவேண்டி வந்ததோடு ராவணன் கூறும் விருப்பமற்ற சொற்களும் அவளை கடும் வேதனைக்கு உள்ளாக்கின. “நான் என் தலைப் பின்னலையே தூக்குக் கயிறாகக் கொண்டு மரணிப்பேன்” என்று முடிவெடுக்கிறாள். அதே நேரம் ஹனுமான் உரைத்த ராம கதையைக் கேட்டதும், பல நல்ல சகுனங்கள் தென்பட்டதும் நிகழ்ந்தன. திடீரென்று அவளுடைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்தது. அனுமனின் மூலம் சுபச் செய்திகளை காதால் கேட்டாள். ராமனுடைய மோதிரத்தைப் பார்ப்பதற்கும் தொடுவதற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனையே ‘மூஷிக சர்ப்ப பேடிக’ நியாயமாக தர்க்க பண்டிதர்கள் விவரிப்பார்கள்.
பஞ்ச பாண்டவர்கள் என்றால் திருதராஷ்டிரனுக்கும் துரியோதனனுக்கும் அளவுக்கதிகமான அசூயை. பல உபாயங்களால் அவர்களை அழித்துவிட திட்டம் தீட்டினர். அதற்கு புரோச்சனனின் உதவியை நாடினர். அவன் அரக்கு மாளிகையில் குந்தி தேவியோடு கூட பஞ்ச பாண்டவர்களை வைத்து எரித்துவிடுவதற்கு திட்டம் தீட்டிக் காத்திருந்தான். பாண்டவர்களுக்கு தெய்வத்தின் உதவி விதுரன் அனுப்பிய சுரங்கம் தோண்டும் கனகனின் வடிவில் வந்தது. அவன் அரக்கு மாளிகையில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு சுரங்கம் தோண்டினான். பாண்டவர்களும் குந்திமாதாவும் ஆபத்தில் இருந்து தப்பினர்.
இது எவ்வாறு நடந்தது? இதுவே ‘மூஷிக சர்ப்ப பேட்டிக’ நியாயம் என்பது.
சுவாமி விவேகானந்தர் 1893 ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி சர்வ மத மகாசபையில் பங்கு பெறுவதற்கு அமெரிக்க கிளம்பினார். ஆனால் அந்த சபை செப்டம்பர் மாதத்தில் நடக்க இருப்பது பின்னர்தான் தெரிந்தது. அதில் பங்கு பெறுவதற்கான நுழைவுச் சீட்டுகள் காணாமல் போயின. அதில் பேச்சாளராக பங்கு பெறுவதற்கு இயலாது. புதிதாக பதிவு செய்வதற்கான கால அவகாசம் முடிந்து விட்டது. அத்தனை மாதங்கள் அங்கு தங்கி இருப்பதற்கான வசதியும் இல்லாத சூழ்நிலை. குளிரில் நடுங்கியபடி ஒரு அட்டைப் பெட்டியில் இரவைக் கழித்தார். சன்யாச சம்பிரதாயத்தின்படி உணவுக்காக வீடு வீடாக யாசித்தார். அவரை பலர் விரட்டிவிட்டனர். பணியாளர்கள் கூட அவமதித்தனர்.
“இறைவன் இங்கு என்னை அழைத்து வந்துள்ளான். அவனே ஏதோ ஒரு வழி காட்டுவான்” என்று நினைத்தார் சுவாமிஜி. அடுத்த கணம் ஒரு விந்தை நடந்தது. முழுக் காட்சியும் மாறிவிட்டது. அதிருஷ்டக் கரம் வேலை செய்தது. ஒரு வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு ஒரு பெண்மணி சுவாமிஜியிடம் வந்தார். யாரோ அனுப்பியது போல் ஆதரவாக குசலம் விசாரித்தார். தன் இல்லத்துக்கு வரவேற்றார். அந்த அன்னையின் பெயர் ஜார்ஜ் டபிள்யு ஹேல். முதல் நாள் வீதியில் இருந்த மனிதர் மறுநாள் தேசத்திலேயே பிரமுகரான ஒரு செல்வந்தரின் வீட்டில் விருந்தினராக இருந்தார். இது எவ்வாறு சாத்தியம்? ஏதோ தெரியாத அதிருஷ்ட சக்தி இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது. அதனையே ‘மூஷிக சர்ப்ப பேட்டிக நியாயம்’ விளக்குகிறது.
அதன் பின் விவேகானந்தர் சர்வ மத சபையில் பங்குபெறுவதற்கு வழி பிறந்து இரவோடிரவாக ச்வாமிஜியின் புகழ் நாடெங்கும் பரவியது. The Cyclonic Monk of India என்று அந்த நாட்டுப் பத்திரிகைகள் பாராட்டின. உலகிலேயே சிறந்த நட்சத்திரமாக சுவாமி விவேகானந்தர் ஒளி வீசினார் என்பது அனைவரும் அறிந்ததே.
அது 16வது நூற்றாண்டு. முஸ்லீம் வன்முறையாளர்களின் அட்டூழியங்கள், மத மாற்றங்கள், பெண்களை அபகரித்து மானபங்கப்படுத்துவது, கோவில்களை இடித்து உடைப்பது… போன்ற செயல்களால் அனைவரும் மன வேதனையடைந்திருந்த காலம். அந்த அநேரத்தில் சமர்த்த ராமதாசர் அப்போதைய சூழ்நிலையைக் கண்டு மனமுருகினார். “அன்ன நாஹி – வஸ்த்ர நாஹி என்று நதியில் அர்க்கியம் விடுவதற்குக் கூட சூழ்நிலை அனுகூலமாக இல்லை. நான் வாழ்ந்து என்ன பயன்?” என்று மனம் வருத்தினார். அதிருஷ்டம் சிவாஜியின் வடிவில் வந்தது. மூன்று நான்கு தசாப்தங்கள் ஹிந்துக்களை கண்ணால் பார்ப்பதற்குக் கூட முஸ்லீம்கள் அஞ்சும் நிலைமை ஏற்பட்டது. வேத மதம் வலிமை பெற்றது. ‘மூஷிக சர்ப்ப பேட்டிக’ நியாயத்திற்கு இதுவும் ஒரு உதாரணமே.
தற்கால சம்பவம் ஒன்றும் இந்த நியாயத்தை நினைவு படுத்துகிறது. 2004 முதல் 2014 வரையான காலகட்டத்தில் ஒரு வேற்றுநாட்டுப் பெண்மணி இந்தியப் பிரதமர் ஆகவேண்டி இருந்த துரதிருஷ்ட சூழ்நிலை மாறினாலும் அவர் ரிமோட் மூலம் நடத்திய ஹிந்து எதிர்ப்பு கருத்து கொண்ட தசாப்தம் பலருக்கும் வேதனை அளித்தது.
தேச பக்தர்களான மேதைகள் கூட, “இனி இவ்வளவுதான். நம் தேசத்தின் தலைவிதி மாறாது” என்றெண்ணி மெளனமாக கண்ணீர் விட்ட நாட்கள் அவை. வெட்கமின்றி ஊழல் மேல் ஊழலாக நடந்தேறிக்கொண்டிருந்தன. செய்வதறியாது ஹிந்துக்கள் தவித்த நேரத்தில் அதிருஷ்டம் வந்துதித்தது. அயோத்தியில் ராமாலயம் கட்டுவதற்கு வழி பிறந்தது. காஷ்மீருக்கு நடந்த அநியாயம் சரிசெய்யப்பட்டது. எதனால்? தெய்வச் செயலால்! இதனையே ‘மூஷிக சர்ப்ப பேட்டிக நியாயம்’ என்பர்.
தனி மனித வாழ்க்கையிலும் குடும்ப வரலாற்றிலும் கூட இந்த மாற்றங்களைப் பார்க்க முடியும். அதிருஷ்டம் என்றால் இது தான் போலும் என்று நினைப்போம்.
இந்த கதையை பர்த்ருஹரி தன் நீதி சதகத்தில் இவ்வாறு விவரிக்கிறார்…
பக்னாஸஸ்ய கரண்ட பிண்டித தனோ: ம்லானேந்த்ரியஸ்ய க்ஷுதா கருத்வாகுர்விவரம் ஸ்வயம் நிபதிதோ நக்தம் முகே போகின: |
த்ருப்தஸ்தத்பிஸிதேன சத்வர மசௌ தேனைவ யாத: பதா
ஸ்வ்ஸ்தாஸ்திஷ்டத தைவயேவ ஹி பரம் வ்ருத்தௌ க்ஷயே காரணம் ||
பொருள்: வளர்ச்சிக்கும் சிதைவுக்கும் தெய்வமே காரணம். அதனால் நம் மனம் நடுநிலையில் இருக்க வேண்டும். இதுவும் கடந்து போகும் – இந்த துன்பமும் நீங்கி விடும் என்று மனநிம்மதி கொள்ள வேண்டும் என்கிறது சுபாஷிதம்.