கொல்கத்தாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் சேலை கட்டியவாறு இணையத்தில் பதிவிட்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.
ஆண், பெண் என்ற பாலின வேறுபாட்டை களைவதற்காக பலரும் பல்வேறு வழிகளில் முயன்று வருகின்றனர். ஆணையும், பெண்ணையும் பாலின ரீதியாக வேறுபடுத்திக் காட்டும் உடையில் இருந்து தொடங்க வேண்டும் என பேஷன் உலகின் கூறிவந்த நிலையில், சில அதனை முயற்சி செய்யவும் தொடங்கியுள்ளனர்.
அதாவது, ஆண்கள், பெண்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட உடை என எதுவும் இல்லை, யார் வேண்டுமானாலும் எந்த உடையையும் உடுத்தலாம் என பேஷன் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அவர்களின் முயற்சிக்கு வலு சேர்க்கும் விதமாக கொல்கத்தா இளைஞர் ஒருவர் புடவையில் இருக்கும் புகைபடத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, தனது மாநில மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் ஏப்ரல் 15 ஆம் தேதி வங்காள மக்களின் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அதற்கு தற்போது இத்தாலியில் வசித்து வரும் கொல்கத்தாவைச் சேர்ந்த புஷ்பக் என்ற இளைஞர், பச்சை நிறத்திலான சேலையை அணிந்து கொண்டு தனது உறவினர்களுக்கும், மாநில மக்களுக்கும் புகைப்படம் மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
அந்தப் புகைப்படத்தில் பச்சை நிற சேலை அணிந்திருப்பதுடன், சிவப்பு லிப் ஸ்டிக் மற்றும் ஐ ப்ரோவும் எடுத்துள்ளார். அவரின் இந்த முயற்சிக்கு நெட்டிசன்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதே புஷ்பக் கடந்த ஆண்டும் இணையத்தில் வைரலானார்.
லிப் ஸ்டிக் அடித்திருக்கும் புகைப்படத்தை தனது தாய்க்கு அனுப்பியபோது அக்கம்பக்கத்தினர் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர். இதனால் அவரது தாயும் புஷ்பக்கை கண்டித்துள்ளார். அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்த புஷ்பக் அடுத்த நாளும் சிவப்பு கலர் லிப்ஸ்டிக் அடித்து புகைப்படம் பதிவிட்டதுடன், அக்கம் பக்கத்தினருக்கும் லிப்ஸ்டிக்கை பார்சல் அனுப்பினார். விரைவில் மீண்டு வாருங்கள் என்றும் கேப்சனிட்டிருந்தார். அவரின் இந்த பதிலடி இணையத்தில் வைரலானது.
ஆண்கள் பெண்களின் உடையை அணிவதும், பெண்கள் ஆண்களின் உடையை அணிந்து கொள்ளும் புதியவகை பேஷன் மெதுவாக வளர்ந்து வருகிறது.
இந்தி நடிகர்களான ரன்வீர் சிங், ஆயுஷ்மான் குர்ரான, ஜிம் சர்ப் ஆகியோரும் இதுபோன்ற ஸ்டைல்களை முயற்சி செய்துள்ளனர். ரன்வீர் சிங் ஹீல்ஸ் வைத்த செப்பல் மற்றும் அதற்கேற்ற உடையை அணிந்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
பாப் சிங்கர் ஹேரி ஸ்டைல்ஸ் கடந்த ஆண்டு முழுவதும் நடத்திய ஃபோட்டோ சூட்டில் பெண்கள் உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருந்தார். குறிப்பாக ஜாக்கெட், ஸ்கர்ட் உள்ளிட்ட உடைகளை அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்து ஆன்லைனில் பதிவிட்டார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ரோபோடிக் என்ஜினியர் மார்க் பிரையன் என்பவர் பெரும்பாலும் பெண்கள் உடைகளை மட்டுமே அணிந்து கொண்டு இருப்பதாக அமெரிக்க செய்தி ஊடகம் ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டது.
இது குறித்து பேசிய மார்க் பிரையன், தனக்கு 3 குழந்தைகள் இருப்பதாகவும், வித்தியாசமாக செயல்படுவது தனக்கு பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். அவரது உடை தேர்வுக்கு மார்க் பிரையனின் மனைவியும் முழு ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
உடையில் வேறுபாட்டை காண்பிப்பதாக கூறி புகைப்படம் எடுக்கும் இதுபோன்றவர்களுக்கு ஆதரவு இருக்கும் அதேநேரத்தில் கேலியும் கிண்டல்களும் சமூகவலைதளங்களில் கொடிக்கட்டிப் பறக்கின்றன.