மிர்பூரில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. முன்னதாக டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சர்பராஸ் அகமது 25 ரன்களும், குர்ராம் மன்சூர் 10 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் 8 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி பந்துவீச்சில் ஹர்திக் பாண்டையா 3.3 ஓவர்களில் 8 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
மேலும் ஜடேஜா 2, நெஹ்ரா, பூம்ராங், யுவராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினார். இதனையடுத்து 84 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி முதலில் தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித், ரஹானே டக் அவுட் ஆகி அதிர்ச்சி தந்தனர். ரெய்னாவும் 1 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த விராட்கோலி – யுவராஜ் சிங் ஜோடி நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தது.
அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விராட்கோலி 49 ரன்களில் ஆட்டமிழந்தார். வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களமிறங்கிய பாண்டையாவும் டக் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய டோனி யுவராஜ் சிங்குடன் சேர்ந்து வெற்றியை உறுதி செய்தனர். இறுதியில் இந்திய அணி 15.3 ஓவர்களில் 85 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர் 3, முகமது சமி 2 விக்கெட் வீழ்த்தினர்.


