Home Blog Page 124

காலமானார் மூத்த தேசபக்தர் குமரி அனந்தன்! தலைவர்கள் இரங்கல்!

kumari ananthan - 2026

காங்கிரஸின் மூத்த தலைவர் குமரி அனந்தன் தமது 93ம் வயதில் காலமானார். வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி ஏப்.8ம் தேதி செவ்வாய்க் கிழமை இரவு காலமானார்.

மிகச் சிறந்த தேசியவாதி, தேசபக்தர். தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு முக்கியத்துவம் தந்து, அவர்களின் நினைவுகளை மாணவர்கள் மத்தியிலும் தமிழகத்தின் மக்கள் மத்தியிலும் பதியச் செய்ய தம் கடைசிக் காலம் வரை தளராது பாடு பட்டவர். மிகச் சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்தவர். இலக்கியச் செல்வர் என அனைவராலும் அழைக்கப்பட்டார். தமிழில் இலக்கியப் புலமை பெற்றவர். அரசியலோடு கூட, இலக்கியப் பேச்சாற்றல் மிக்க இலக்கியவாதியாகவும் போற்றப்பட்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர் குமரி அனந்தன். 5 முறை எம்எல்ஏ.,வாகவும், ஒரு முறை எம்பி.,யாகவும் இருந்துள்ளார். மறைந்த குமரி அனந்தனுக்கு ஒரு மகன், நான்கு மகள்கள். இவரது மகள் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் பாஜக.,வில் மாநிலத் தலைவராகவும், பின்னர் தெலங்கானா, புதுவை மாநில ஆளுநராகவும் செயல்பட்டவர். மறைந்த காங்கிரஸ் எம்.பி., வசந்தகுமார் இவரது சகோதரர்.

சாத்தான் குளம் ராதாபுரம், திருவெற்றியூர் தொகுதிகளில் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977 ம் ஆண்டில் நடைபெற்ற லோக்சபா தேர்லிலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி என பெயர் வர காரணமாக இருந்தவர்.

விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி எழுப்பும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. தமிழில் தந்தி விண்ணப்பங்கள், பணவிடை அஞ்சல் போன்றவற்றில் தமிழ் இடம் பெற வேண்டும் என போராடி பெற்றுத் தந்தவர்.

பல முறை யாத்திரைகளை மேற்கொண்டவர். இவரது பாத யாத்திரைகள் மூலம் தேசியத்தை கிராமங்களிலும் பட்டிதொட்டிகளிலும் பரப்ப முயன்று வந்தார். பாரத மாதா சங்கம் என்ற சங்கம் அமைத்து சுதந்திரப் போரில் ஈடுபட்ட செங்கோட்டை வாஞ்சிநாதனின் நினைவாக, மணியாச்சி ரயில் நிலையத்தை ‘வாஞ்சி மணியாச்சி’ ரயில் நிலையம் என அழைக்கப்படக் காரணமாக அமைந்தவர் குமரி அனந்தன். அதுபோல், தியாகி சுப்பிரமணிய சிவா கனவு கண்ட பாரதமாதா ஆலயம், பாப்பாரப்பட்டியில் அமைய வேண்டும் என்பதில் பெருமுயற்சி எடுத்து வந்தவர்.

மறைந்த குமரி அனந்தனுக்கு , 2024ம் ஆண்டு தமிழக அரசால் தகைசால் விருது வழங்கப்பட்டது. மறைந்த குமரி அனந்தன் உடல் சென்னை சாலி கிராமத்தில் உள்ள டாக்டர் தமிழிசையின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே தலைவர்கள் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்கின்றனர்.

தனது தந்தையின் மறைவு குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் வெளியிட்ட பதிவு:

தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை… தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று…. பெருமையாக. பேச வைத்த என் தந்தை திரு.குமரி அனந்தன் அவர்கள்… இன்று என் அம்மாவோடு.. இரண்டர கலந்து விட்டார்… குமரியில்.. ஒரு கிராமத்தில் பிறந்து.. தன் முழு முயற்சியினால்… அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக… தமிழ் மீது.. தீராத பற்று கொண்டு… தமிழிசை என்ற பெயர் வைத்து… இசை இசை… என்று கூப்பிடும் என் அப்பாவின்… கணீர் குரல்… இன்று காற்றில்.. இசையோடு கலந்து விட்டது…. வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று… சீரான வாழ்க்கை வாழ்ந்தவர்…

இன்று தான் வளர்த்தவர்கள் எல்லாம்… சீராக வாழ்வதைக் கண்டு… பெருமைப்பட்டு.. வாழ்த்திவிட்டு.. எங்களை விட்டு மறைந்திருக்கிறார்… என்றும். .. அவர் பெயர் நிலைத்திருக்கும். தமிழக அரசியலில்.. பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும்…. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா… நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ… அதை மனதில் கொண்டு… உங்கள் பெயரில்… நாங்கள் செய்வோம் என்று… உறுதியோடு… உங்களை வழி அனுப்புகிறோம்…

உங்கள் வழி உங்கள் வழியில்…… நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல… நாமும் மகிழ்ச்சியாக இருந்து.. மற்றவர்களின் மகிழ்விக்க வேண்டும்.. என்று உங்கள் ஆசை ஆசையை.. எப்போதும் நிறைவேற்றுவோம்… போய் வாருங்கள் அப்பா தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன்… நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்….

பாஜக., மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை வெளியிட்ட இரங்கல் பதிவு!

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவரும், அக்கா திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களின் தந்தையாருமாகிய, இலக்கியச் செல்வர், ஐயா திரு. குமரி அனந்தன் அவர்கள், இன்று நம்மிடையே இல்லை என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், அப்பழுக்கின்றி பணியாற்றியவர். பல்வேறு தமிழ் இலக்கியங்கள் சார்ந்த நூல்களை எழுதியவர்.

பனைமரங்கள் பாதுகாப்புக்காவும், நதிகள் இணைப்புக்காகவும், பாரதமாதா கோவில் அமைக்கவும், பாதயாத்திரைகள் மேற்கொண்டவர். தலைசிறந்த தேசியவாதியான ஐயா திரு. குமரி அனந்தன் அவர்களது மறைவு, தமிழகத்துக்கும், இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு.

தகப்பனாரை இழந்து வாடும் அக்கா திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா, இறைவன் திருவடிகளை அடைய வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!

IPL 2025: அதிக ரன்; ஃபீல்டிங்கிலும் சேஸிங்கிலும் கோட்டை விட்ட அணிகள்!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் – 08.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

லக்னோ vs கொல்கொத்தா

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி (238/3, நிக்கோலஸ் பூரன் 87, மிட்சல் மார்ஷ் 81, எஉடன் மர்க்ரம் 47, ஹர்ஷித் ராணா 2/51, ரசல் 1/32) கொல்கொத்தா நட் ரைடர்ஸ் அணியை (234/7, அஜிங்க்யா ரஹானே 61, வெங்கடேஷ் ஐயர் 45, ரிங்கு சிங் ஆட்டமிழக்காமல் 38, சுனில் நரேன் 30, ஆகாஷ் தீப் 2/55, ஷர்துல் தாகூர் 2/52, ஆவேஷ் கான், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கட்) 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற கொல்கொத்தா அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த லக்னோ அனி தொடக்க வீரர்கள் எய்டன் மர்க்ரம் (28 பந்துகளில் 47 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் மிட்சல் மார்ஷ் (48 பந்துகளில் 81 ரன், 6 ஃபோர், 5 சிக்சர்) சிறப்பாக ஆடினர்.

11ஆவது ஓவரில் எய்டன் மர்க்ரம் ஆட்டமிழந்த பின்னர் விளையாட வந்த நிக்கோலஸ் பூரன் (36 பந்துகளில் 87 ரன், 7 ஃபோர், 8 சிக்சர்) தனது அதிரடி ஆட்டத்தில் ஆட்டத்தின் போக்கையே மாற்றினர். 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 3 விக்கட் இழப்பிற்கு 238 ரன் எடுத்தது.

          239 என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய கொல்கொத்தா அணி முதல் நான்கு விக்கட் விழும் வரை மிகச் சிறப்பாக விளையாடியது. க்விண்டன் டி காக் (9 பந்துகளில் 15 ரன், 2 சிக்சர்), சுனில் நரேன் (13 பந்துகளில் 30 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்), அஜிங்க்யா ரஹானே (35 பந்துகளில் 61 ரன், 8 ஃபோர், 2 சிக்சர்), வெங்கடேஷ் ஐயர் (29 பந்துகளில் 45 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) என முதன் நான்கு மட்டையாளர்களும் சிறப்பாக ஆடினர்.

ஆனால் 13ஆவது ஓவரில் ரஹானே, 14ஆவது ஓவரில் ரமன்தீப் சிங் (1 ரன்), 15ஆவது ஓவரில் ரகுவன்ஷி (5 ரன்), 17ஆவது ஓவரில் ஆண்ட்ரூ ரசல் (7 ரன்) ஆகியோர் ஆட்டமிழந்ததால் கொல்கொத்தா அணியின் ரன் சேர்க்கும் வேகம் திடீரெனக் குறைந்தது.  அதன் பின்னர் ரிங்கு சிங் (15 பந்துகளில் 38 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்), ஹர்ஷித் ராணா (9 பந்துகளில் 10 ரன்) வெற்றி இலக்கை அடைய முயற்சித்தும் கொல்கொத்தா அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 234 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியைச் சந்தித்தது.

          ஆட்ட நாயகனாக லக்னோ அணியின் மட்டையாளர் நிக்கோலஸ் பூரன் அறிவிக்கப்பட்டார்.    

பஞ்சாப் vs சென்னை

பஞ்சாப் கிங்க்ஸ் அணி (219/6, பிரியான்ஷ் ஆர்யா 103, ஷஷாங்க் சிங் ஆட்டமிழக்காமல் 52, மார்கோ ஜேன்சன் ஆட்டமிழக்காமல் 34, கலீல் அகமது 2/45, அஷ்வின் 2/48, முகேஷ் சௌத்ரி, நூர் அகமது தலா ஒரு விக்கட்) சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை (201/5, ரச்சின் ரவீந்திரா 36, டேவன் கான்வே 69, ஷிவம் துபே 42, எம்.எஸ். தோனி 27, லாக்கி ஃபெர்கூசன் 2/27, கிளன் மேக்ஸ்வெல் 1/11, யஷ் தாகூர் 1/39) 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. ஆனால் முதல் எட்டு ஓவர் முடிவதற்குள் பிரப்சிம்ரன் சிங் (பூஜ்யம் ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (9 ரன்), மார்கஸ் ஸ்டோனிஸ் (4 ரன்), நெஹல் வதேரா (9 ரன்), கிளன் மேக்ஸ்வெல் (1 ரன்) ஆகியோர் ஆட்டமிழந்தனர். இவர்கள் எடுத்த மொத்த ரன் 23 ரன். மேக்ஸ்வெல் ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர் 83/5. மீதமுள்ள 60 ரன் களை பிரியன்ஷ் ஆர்யா அடித்தார். 42 பந்துகளில், 7 ஃபோர், 9 சிக்சர்களுடன், 103 ரன்கள் அவர் அடித்தார்.

13.4 ஓவரில் அவர் ஆட்டமிழக்காமல் 20 ஓவர் வரை அவர் ஆடியிருந்தால் கிரிஸ் கெயில் போல 175 ரன் எடுத்திருக்க வாய்ப்பிருந்தது. ஆர்யா ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர் 154/6. அடுத்த ஆறு ஓவர்களில் ஷஷாங்க் சிங் (36 பந்துகளில் 52 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் மார்கோ ஜேன்சன் (19 பந்துகளில் 34 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் அதிரடியாக அடி அணியின் ஸ்கோரை 20 ஓவர்களில் 219/6 என உயர்த்தினர்.   

          20 ஓவர்களில் 220 ரன் என்ற வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆட வந்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரச்சின் ரவீந்த்ரா (23 பந்துகளில் 36 ரன், 6 ஃபோர்) மற்றும் டேவன் கான்வே (49 பந்துகளில் 69 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். இன்று ருதுராஜ் கெய்க்வாட் (ஓரு ரன்) சோபிக்கவில்லை.

டேவன் கான்வே உடன் இணைந்து ஷிவம் துபே (27 பந்துகளில் 42 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) சிறப்பாக ஆடினார். ஆனால் அவர் ஆட்டமிழக்கும்போது மீதமுள்ள நான்கு ஓவர்களில் வெற்றிக்கு இன்னமும் 69 ரன்கள் தேவைப்பட்டன. அந்த சமயத்தில் 17.5ஆவது ஓவரில் டேவன் கான்வே ரிடயர்ட் ஹர்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

துபே ஆட்டமிழந்தபோது தோனி (12 பந்துகளில் 27 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்) ஆடவந்தார். கான்வே ஆட்டமிழந்தபோது ரவீந்திர ஜதேஜா (ஆட்டமிழக்காமல் 9 ரன்) ஆடவந்தார். தோனி 20ஆவது ஓவரில் முதல் பந்தில் அவுட் ஆனார். அப்போது விஜய் ஷங்கர் (2 ரன்) ஆடவந்தார். இந்த மூவராலும் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. அதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 201 ரன் மட்டுமே எடுத்தது. எனவே 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

          ஆட்ட நாயகனாக பஞ்சாப் அணியின் மட்டையாளர் பிரியான்ஷ் ஆர்யா அறிவிக்கப்பட்டார்.

          இன்று நடந்த இரண்டு ஆட்டங்களும் அதிக ரன் அடிக்கப்பட்ட ஆட்டங்கள். இரண்டு ஆட்டங்களிலும் இரண்டாவதாக ஆடிய அணிகள் சிறப்பாக ஆடியபோதிலும் கடைசியில் ரன் ரேட்டை அதிகப்படுத்த முடியாததால் சொற்ப ரன்களில் தோல்வியைத் தழுவின. சென்னை அணி பந்து வீசியபோது கையில் வந்து விழுந்த பந்துகளைக்கூடத் தவறவிட்டு கேட்ச் பிடிக்காமல் விட்டனர்.

மதுரை – குருவாயூர் ரயிலில் பொதுப் பெட்டிகளை குறைப்பதற்கு பயணிகள் எதிர்ப்பு!

railway news - 2026
#image_title

மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் எண்ணிக்கையை குறைத்து ஸ்லீப்பர் பெட்டிகளை அதிகரித்துள்ளது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழியாக இயங்கும் கொல்லம் மெயில் வேளாங்கண்ணி விரைவு ரயில்களில் நின்று பயணிக்க கூட இடம் கிடைக்காத சூழலில் பயணிகள் குருவாயூர் மதுரை குருவாயூர் ரயிலை அதிகம் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த ரயில் பொது பெட்டிகள் குறைக்கப்பட்ட தால் பயணிகள் பாடு இனி திண்டாட்டம் தான்.

மதுரை- – செங்கோட்டை எக்ஸ்பிரஸ், செங்கோட்டை- – கொல்லம் எக்ஸ்பிரஸ், புனலுார் — குருவாயூர் இன்டர்சிட்டி ஆகிய மூன்று ரயில்களை இணைத்து 2023 ஆகஸ்ட் முதல் மதுரை- – குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16327/16328) ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயிலில் 9 முன்பதிவு இல்லாத பெட்டிகள், மூன்றாம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டிகள் 2, குளிர்சாதன பெட்டி 1 என 14 பெட்டிகள் உள்ளன.

மதுரை– செங்கோட்டை, செங்கோட்டை– கொல்லம், குருவாயூர்– புனலூர் ஆகிய 3 முன்பதிவில்லா பயணிகள் ரயில்களையும் இணைத்து மதுரை – -குருவாயூர் இன்டர்சிட்டி ரயில் ஆக. 27 முதல் இயக்கப்படுகிறது.

மதுரையில் இருந்து தினமும் காலை 11:20 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், ராஜபாளையம் செங்கோட்டை, கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் வழியாக மறுநாள் நள்ளிரவு 2:10 மணிக்கு குருவாயூர் சென்றடையும் வகையிலும், மறு மார்க்கத்தில் குருவாயூரில் இருந்து காலை 5:50 மணிக்கு புறப்பட்டு இரவு 7:30 மணிக்கு மதுரை வந்தடையும் வகையில் ரயில் இயக்கப்படுகிறது.

மதுரையிலிருந்து குருவாயூருக்கு மூன்றடுக்கு ஏ.சி பெட்டியில் பயணிக்க ரூ. 845, ஸ்லீப்பர் பெட்டியில் பயணிக்க ரூ.315 கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இந்த ரயிலில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டி ஒன்றும், ஸ்லீப்பர் பெட்டிகள் 2ம், முன்பதிவில்லா பெட்டிகள் 10 உட்பட 14 பெட்டிகள் உள்ளன.

இந்த ரயில் மதுரை குருவாயூர் இடையே 519 கிலோ மீட்டர் தூரத்திற்கு 15 மணி நேரம் பயணிக்கிறது. ஆனால், சென்னையில் இருந்து புறப்பட்டு மாலை 5:45 மணிக்கு மதுரை வரும் எக்ஸ்பிரஸ் ரயில், திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம் வழியாக சுற்றி 603 கிலோமீட்டர் தூரத்தை 14 மணி நேரத்தில் பயணிக்கிறது.

ஆனால் மதுரை-ராஜபாளையம்-செங்கோட்டை குருவாயூர் ரயில் இயற்கை எழில் கொஞ்சும் மலை வழியாக பகலில் செல்வதால் பயணிகள் மத்தியில் வரவேற்பு உள்ளது

இதனால் தற்போது சி.பி.சி தொழில்நுட்பத்தில் மறு சீரமைக்கப்பட்ட பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. சி.பி.சி தொழில்நுட்பத்தில் பெட்டிகளை தானியங்கி இணைக்கும் வசதி, விபத்துகளின் போது பெட்டிகள் ஒன்றுக்கொன்று ஏறுவதை தடுத்தல், தடம் புரள்வது மற்றும் விபத்தை தடுக்கும் அம்சத்துடன் 24 பெட்டிகள் இழுக்கும் திறனுடன் உள்ளது.

ஏற்கனவே முன்பதிவு பெட்டிகளில் இடமில்லாமல் காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருவதால் முன்பதிவு பெட்டிகளை அதிகரிக்க பயணிகள் சார்பில் தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால் ஏப். 15- முதல் முன்பதிவில்லாத பெட்டிகள் எண்ணிக்கையை 9-ல் இருந்து 5 ஆக குறைத்து, ஸ்லீப்பர் பெட்டிகள் 2-ல் இருந்து 6-ஆக அதிகரித்து ரயில்வே அறிவித்துள்ளது.

2023 வரை மதுரை- -செங்கோட்டை பாசஞ்சர் 14 முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தது. 3 ரயில்களை இணைத்து பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்த நிலையில் தற்போது முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்படுவது பயணிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கோட்டை- புனலுார் மலை ரயில் பாதையில் 21 எல்.எச்.பி அல்லது 24 ஐ.சி.எப் பெட்டிகளுடன் ரயில் இயக்க ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு அமைப்பு அனுமதி வழங்கியுள்ள நிலையில் கூடுதல் பெட்டிகளை இணைக்காமல் ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளது.

மதுரை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லுார், தென்காசி, செங்கோட்டை பயணிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழியாக இயங்கும் கொல்லம் மெயில் வேளாங்கண்ணி விரைவு ரயில்களில் நின்று பயணிக்க கூட இடம் கிடைக்காத சூழலில் பயணிகள் குருவாயூர் மதுரை குருவாயூர் ரயிலை அதிகம் பயன்படுத்தி வந்தனர்.

தற்போது இந்த ரயில் பொது பெட்டிகள் குறைக்கப்பட்ட தால் பயணிகள் பாடு இனி திண்டாட்டமாகத்தான் இருக்கும். எனவே பயணிகள் நலன் கருதி இந்த ரயிலிலும் செங்கோட்டை மயிலாடுதுறை ரயிலிலும் கூடுதலாக ஐந்து பொது பெட்டிகள் இணைக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

IPL 2025: மீண்டும் மும்பைக்கு எதிராக வென்ற பெங்களூர்

ipl 2025 games - 2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐ.பி.எல் 2025 – பெங்களூரு vs மும்பை – வான்கடே, மும்பை – 07.04.2025

ராயல் சேலஞ்சர்ஸ் அணி (221/5, விராட் கோலி 67, ரஜத் படிதர் 64, ஜிதேஷ் ஷர்மா ஆட்டமிழக்காமல் 40, தேவதத் படிக்கல் 37, ட்ரண்ட் போல்ட் 2/57, ஹார்திக் பாண்ட்யா 2/45, விக்னேஷ் புதூர் 1/10) மும்பை இந்தியன்ஸ் அணியை (209/9, திலக் வர்மா 56, ஹார்திக பாண்ட்யா 42, சூர்யகுமார் யாதவ் 28, வில் ஜேக்ஸ் 22, ரியன் ரிக்கிள்டன் 17, ரோஹித் ஷர்மா 17, க்ருணால் பாண்ட்யா 4/45, ஹேசல்வுட் 2/37, யஷ் தயாள் 2/46, புவனேஷ் குமார் 1/48) 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே முதலில் மட்டையாட வந்த பெங்களூரு அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் (4 ரன்) முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான விராட் கொலி (42 பந்துகளில் 67 ரன், 8 ஃபோர், 2 சிக்சர்), தேவதத் படிக்கல் (22 பந்துகளில் 37 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ரஜத் படிதர் (32 பந்துகளில் 64 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) ஆகிய மூவரும் சிறப்பாக ஆடினர். கடைசிக் கட்டத்தில் ஜிதேஷ் சர்மா 4 சிக்ஸ் 2 ஃபோர் அடித்து, 19 பந்தில் 40 ரன் எடுத்து அதிரடி காட்ட,  பெங்களூர் அணி சிறப்பான ஸ்கோர் பெற்றது. 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன் எடுத்தது.

222 ரன் என்ற கடின வெற்றி இலக்குடன் களத்தில் இறங்கிய மும்பை அணியில், தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் ரயன் ரிக்கல்டன் இருவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். 9 பந்தில் 1 சிக்ஸ் 2 ஃபோர் உடன் 17 ரன் அடித்து ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. ரிக்கல்டன் 17 ரன்னுடனும், வில் ஜோக்ஸ் 22 ரன்னுடனும் நடையைக் கட்டினார்கள். அதிரடி காட்டுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூரிய குமார் யாதவ், பந்துக்கு ஒரு ரன் என்ற நிலையில் 26 பந்தில் 28 ரன்களே எடுத்தார். இதில் 5 ஃபோர்கள். மீதமுள்ள பந்துகளை வீணடித்தார்.

திலக் வர்மாவும் பாண்டியாவும் அதிரடி காட்டி ரசிகர்களை மகிழ்வித்தார்கள். வர்மா 29 பந்துகளில் தலா 4 ஃபோர், சிக்ஸ்களுடன் 56 ரன்களை குவித்தார். அதிரடி காட்டிய பாண்டியா 15 பந்தில் 4 சிக்ஸ் 3 ஃபோர்களுடன் 42 ரன் குவித்தார். எனினும் பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 209 ரன்களே எடுக்க முடிந்தது.

இதனால் பெங்களூர் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

tenkasi temple kumbabhishekam - 2026

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பக்தர்கள் சிவகோஷம் முழங்க வேத பாராயண முறைப்படி நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

வடக்கே காசி தெற்கே தென்காசி என்று அழைக்கப்படும் சிவதலங்களில் ஒன்றாக உள்ள தென்காசி மாவட்ட நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்றதும் பழமை வாய்ந்த திருத்தலமான காசி விஸ்வநாதர் ஆலயத்தில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் இன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன.

மகா மண்டபம், பிரகார மண்டபம், கொடிமரம், மாடமதில், ராஜகோபுரம், விமான கோபுரங்கள், சுதை வேலை, பஞ்சவர்ணம் பூசுதல், ஸ்தூபி ஸ்தாபனம், தீர்த்தக்குளம் புனரமைப்பு என திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 3-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின.

அதனை தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. இன்று அதிகாலையில் 6-ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெற்று, காலை 9 மணி முதல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூா்த்திகளுக்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வை தென்காசி நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சென்னை, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளாவில் கொல்லம் திருவனந்தபுரம் பகுதியில் இருந்தும் சிவனடியார்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நெல்லை சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) சந்தோஷ் கடிமணி மற்றும் தென்காசிட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தென்காசி நகரப்பகுதி வழியாக வாகனங்கள் இயக்கப்படாமல் புறநகர் பகுதி வழியாக வாகனங்கள் இயக்கப்படுகிறது.

தென்காசி நகரப்பகுதியை சுற்றி தற்காலிகமாக 11 இடங்களில் வாகன நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இரவு காசிவிஸ்வநாதர் உலகம்மன் திருக்கல்யாண விழா நடைபெற்றது.செவ்வாய் கிழமை முதல் 41நாள் மண்டல பூஜை வழிபாடுகள் துவங்கும்.

வக்ப் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்; சட்டத்தின் சிறப்பம்சம் என்ன?

president draupati murmu - 2026
#image_title

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்ப் சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து, சட்டம் அமலுக்கு வந்துள்ளது. 

வக்ப் வாரிய சட்டங்களில் பல ஆண்டுகளுக்குப் பின் மத்திய அரசு சாமானிய மக்களுக்கு பலனளிக்கும் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டது. இதன் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட வக்ப்சட்டத் திருத்த மசோதா, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில் இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்றிரவு ஒப்புதல் அளித்தார். இதை அடுத்து இந்த மசோதா சட்டமாகி நடைமுறைக்கு வருகிறது. 

முன்னதாக, வக்ப் சட்டத் திருத்த மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்ட போது, எதிர்க்கட்சியினர் கடும் விவாதங்களை முன்வைத்தனர். அதற்கு ஆளும் பாஜக., தரப்பில் இருந்து அமைச்சர்கள் பதில் கொடுத்தனர். எனினும், வக்ப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் உச்ச நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவித்தனர். 

இந்நிலையில் வக்ப் சட்டத்திருத்த மசோதா குறித்த தெளிவினை ஏற்படுத்த அரசுத் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

வக்ப் திருத்த மசோதா 2024-ன் முக்கியமான நன்மை தரும் அம்சங்கள் எவை? 

1. வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு அதிகரிப்பு

வக்ப் வாரியங்களுக்கு கடுமையான கணக்கெடுப்பு மற்றும் நிதி வெளிப்படுத்தல் கட்டாயம் செய்யப்படுகிறது. CAG அல்லது மூன்றாவது தரப்பினரால் வழக்கமான ஆடிட் நடத்துவதன் மூலம் மேல் கண்காணிப்பு மற்றும் மோசடி தடுப்பு உறுதி செய்யப்படுகிறது.

2. தகவல் தெளிவுக்கான டிஜிட்டலாக்கம்

வக்ப் சொத்துகளின் பதிவுகளை டிஜிட்டல் வடிவமாக மாற்றும் முயற்சியை வலுப்படுத்துகிறது. இதனால் தெளிவாக அறிதல் மற்றும் மறு பயன்பாட்டைத் தடுப்பது சாத்தியமாகிறது. மேலும், இணையதளத்தில் தகவல்களை எளிதில் பார்க்க மக்களுக்கு வழிவகை செய்கிறது.

3. துன்புறுத்தல் மற்றும் பின்தொடர்தல் தடுப்பு

புதிய மற்றும் வலிமையான சட்டம் வக்ப் நிலங்களில் ஆக்கிரமிப்பு (encroachment) நடத்துவதைத் தடுக்கும். வாரியங்களுக்கு சொத்துக்களை பாதுகாக்க வேகமான நடவடிக்கை எடுக்க உரிமை வழங்குகிறது.

4. சொத்துக்களின் தீர்க்கமான பயன்பாடு

வக்ப் நிலங்களை கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறைகளில் பயன்படுத்த ஊக்குவிக்கிறது. இது வக்ப் சொத்துகளின் தான தர்ம நோக்கினை சரியாகப் பூர்த்தி செய்கிறது.

5. நிறுவன மேலாண்மை மறுசீரமைப்பு

வக்ப் வாரியத்தில் தகுதியான நபர்களை நியமிக்க புதிய நடைமுறைகள். அரசியல் புலம்பெயர்வை குறைத்து சீரான நிர்வாகத்தை உறுதி செய்யும் வாய்ப்பு.

6. தான தர்ம நோக்கங்களை பாதுகாத்தல்

தானம் செய்த நபர்களின் நோக்கத்திற்கு ஏற்ப சொத்துக்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வாரியத்தின் பொறுப்பை வலுப்படுத்துகிறது. இது வக்ப்பின் மத மற்றும் சமூக நம்பிக்கையை பாதுகாக்க உதவுகிறது.

தமிழகத்துக்கு மத்திய அரசு அளித்த நிதிகள்: பாம்பன் பாலத் திறப்பு விழாவில் புட்டுப்புட்டு வைத்த மோடி!

pm modi in rameswaram meeting - 2026

பாம்பன் பாலத்தைத் திறந்து வைத்து பாரதப் பிரதமர் நரேந்திர மோதி ஆற்றிய உரை

தமிழாக்கம்: ராமஸ்வாமி சுதர்ஸன்

வணக்கம். என் அன்பு தமிழ்ச் சொந்தங்களே!!
தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர். என். இரவி அவர்களே,
மத்திய அமைச்சரவையின் என்ன சகாக்களான அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, டாக்டர். எல். முருகன் அவர்களே,
தமிழ்நாடு அரசின் அமைச்சர் பெருமக்களே.
நாடாளுமன்ற பெரியோர்களே, உறுப்பினர்களே, சான்றோர்களே – என் நெஞ்சுக்கினிய அன்பு சகோதர சகோதரிகளே!

வணக்கம்!! நண்பர்களே, இன்று புனிதமான ஸ்ரீ இராமநவமி நன்னாள். சில காலம் முன்பாகத் தான், அயோத்தியிலே பிரும்மாண்டமான ராமர் ஆலயத்திலே.ராம்லலாவுடைய திருவதனத்தின் மீது சூரியனின் கதிர்கள், அற்புதமான திலகத்தைப் பொழிந்தன. பகவான் ஸ்ரீ இராமனின் வாழ்க்கை, அவருடைய ஆட்சியிலிருந்து கிடைக்கக்கூடிய நல்லாளுகை குறித்த உத்வேகம் ஆகியன, தேசத்தை நிர்மாணிப்பதில் பெரிய ஆதாரமாக இருக்கின்றன

தமிழ்நாட்டின் சங்ககால இலக்கியத்திலும் கூட இராமனைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. நான் இராமேஸ்வரத்தின் இந்த பவித்திரமான பூமியிலே. நாட்டுமக்கள் அனைவருக்கும் ஸ்ரீ இராமநவமியை ஒட்டி, என் இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

நண்பர்களே, இராமநாதஸ்வாமி ஆலயத்தில் இன்று வழிபட்ட போது, ஆசிகள் நிரம்பப் பெற்றவனாய் நான் உணர்ந்தேன். இந்த விசேஷமான நாளன்று. 8,300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை அர்ப்பணிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த இரயில் மற்றும் சாலைத் திட்டங்கள் தமிழ்நாட்டிலே இணைப்புத்திறனை வலுப்படுத்தும். இந்தத் திட்டங்களின் பொருட்டு தமிழ்நாட்டின் என் சகோதர சகோதரிகளுக்கு நான் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே. இது பாரத ரத்னா டாக்டர் கலாம் அவர்களின் பூமி. அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றையொன்று நிறைவு செய்பவை என்பதை அவருடைய வாழ்வு நமக்குக் காட்டுகிறது. அதே போல, இராமேஸ்வரத்திற்கான இந்தப் புதிய பாம்பன் பாலமும் கூட, தொழில்நுட்பத்தையும் பாரம்பரியத்தையும் ஒன்று சேர்க்கிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு நகரம் 21ஆம் நூற்றாண்டின் ஒரு பொறியியல் அற்புதத்தால் இணைக்கப்படுகிறது. தங்களுடைய தீவிரமான உழைப்பிற்காக நான் நமது பொறியாளர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

இந்தப் பாலம் தான் இந்தியாவின் முதல் செங்குத்தான உயர்த்தல் ரயில்வழி கடல் பாலம். இதற்கடியிலே பெரிய கப்பல்களாலும் பயணம் மேற்கொள்ள முடியும். ரயில்கள் இதன் மீது விரைவாகப் பயணிக்க இயலும். நான் சற்று நேரம் முன்னதாகத் தான் ஒரு புதிய ரயில் சேவையையும், ஒரு கப்பல் பயணத்தையும் துவக்கி வைத்தேன். இந்தத் திட்டத்தின் பொருட்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு நான் மீண்டும் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

நண்பர்களே, இந்தப் பாலத்திற்கான பத்தாண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. தேவை 2 உங்கள் நல்லாசிகளோடு இந்தப் பணியை நிறைவு செய்யும் நற்பேறு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது.

பாம்பன் பாலம், சுலபமாக வியாபாரம் செய்தல் மற்றும் சுலபமாகப் பயணம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்கு ஆதரவாக இருக்கிறது. பல இலட்சக் கணக்கான மனிதர்களின் வாழ்விலே இது ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும். இராமேஸ்வரம் தொடங்கி சென்னை வரையும், நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையிலான இணைப்பினை. இந்தப் புதிய ரயில் சேவை மேம்படுத்தும்.

தமிழ்நாட்டின் சுற்றுலா மற்றும் வணிகத்திற்கு இது ஆதாயங்களை அளிக்கும். இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் சந்தர்ப்பங்களையும் இது உருவாக்கும்.

நண்பர்களே, கடந்த பத்தாண்டுகளில் பாரதம் தனது பொருளாதாரத்தின் அளவினை இரட்டிப்பாக்கி இருக்கிறது. இத்தனை விரைவான வளர்ச்சிக்கான ஒரு பெரிய காரணம் என்றால், நமது அருமையான நவீன கட்டமைப்பும் அதில் அடங்கும்.

கடந்த பத்தாண்டுகளில் நாம் ரயில், சாலை, விமானநிலையம் துறைமுகங்கள், மின்னாற்றல், நீர், எரிவாயுக் குழாய்கள் போன்ற கட்டமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீட்டை 6 மடங்கு உயர்த்தியிருக்கிறோம். இன்று தேசத்தின் மிக விரைவாக மெகா திட்டங்கள் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. வடக்கிலே நீங்கள் பார்த்தீர்களென்றால், ஜம்மு கஷ்மீரத்திலே உலகின் மிக உயரமான ரயில் பாலங்களில் ஒன்றான சினாப் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது.

மேற்கிலே பார்த்தீர்களென்றால், மும்பயிலே தேசத்தின் மிக நீளமான கடல் உருவாக்கப்பட்டிருக்கிறது. பாலமான அடல் பாலம் கிழக்கிலே கவனித்தோமென்றால், அஸாமின் போகீபீல் பாலத்தை நீங்கள் பார்க்கலாம்.

மேலும் தெற்கு நோக்கிப் பயணித்தால், உலகின் வெகு குறைவான செங்குத்து உயர்த்தல் கொண்ட பாலங்களில் ஒன்றான பாம்பன் நிறைவடைந்திருக்கிறது. பாலத்தின் நிர்மாணம் இதைப் போலவே, கிழக்கு மற்றும் மேற்கு பிரத்யேகமான சரக்குப் போக்குவரத்து இடைவழியும் கூட அமைக்கப்பட்டு வருகிறது. தேசத்தின் முதல் புல்லட் ரயில் தொடர்பான பணிகளும் விரைவாக நடந்தேறி வருகின்றன. வந்தே பாரத், அம்ருத் பாரத் மற்றும் நமோ பாரத் போன்ற நவீன ரயில்களும், ரயில் வலைப்பின்னலை மேலும் நவீனமாக்கி வருகின்றன.

நண்பர்களே, பாரதத்தின் அனைத்துப் பகுதிகளும், பரஸ்பர இணைப்புகள் உடையவையாக ஆகும் போது, வளர்ந்த தேசமாக ஆகும் பாதை மேலும் வலுவடைகிறது.

உலகின் அனைத்து வளர்ச்சியடைந்த நாடுகளின் வளர்ச்சிக்கான காரணமும் இது தான். இன்று பாரதத்தின் அனைத்து மாநிலங்களும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படும் போது, தேசத்தின் ஒட்டுமொத்த சாத்தியக்கூறுகளும் வெளிப்படுத்தப்படுகின்றன.  இவற்றின் ஆதாயங்களும் கூட தேசத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் கிடைக்கின்றன. நமது தமிழ்நாட்டிற்கும் கிடைத்து வருகிறது.

நண்பர்களே, வளர்ச்சியடைந்த பாரதம் நோக்கிய பயணத்தில் தமிழ்நாட்டிற்கென மிகப்பெரிய பங்கு இருக்கிறது. தமிழ்நாட்டின் வல்லமை எத்தனை அதிகம் உயர்கிறதோ. பாரதத்தின் வளர்ச்சியும் அந்த அளவுக்கு விரைவாகும் என்று நான் கருதுகிறேன்.

கடந்த பத்தாண்டிலே. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக, 2014ஆம் ஆண்டிற்கு முந்தைய காலகட்டத்தோடு ஒப்பு நோக்கும் போது. மூன்று மடங்கு அதிக நிதியை மத்திய அரசு அளித்திருக்கிறது. தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு இது அதிக அளவு உதவியிருக்கிறது.

நண்பர்களே, தமிழ்நாட்டின் கட்டமைப்பு தான் பாரத அரசின் முதன்மை கடந்த பத்தாண்டிலே, தமிழ்நாட்டின் ரயில்துறை பட்ஜட்டிலே. ஏழு மடங்கிற்கும் அதிகமான அதிகரிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

2014 ஆண்டிற்கு முன்புவரை ரயில்துறைத் திட்டங்களுக்காக ஒவ்வோர் ஆண்டும் வெறும் 900 தொள்ளாயிரம் கோடி ரூபாய் மட்டுமே கிடைத்து வந்தது. இந்த ஆண்டு, தமிழ்நாட்டின் ரயில் பட்ஜட் 6000 கோடி ரூபாயுக்கும் அதிகம். பாரத் அரசு, தமிழ்நாட்டில் இருக்கும் 77 ரயில் நிலையங்களையும் நவீனமயமாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதிலே இராமேஸ்வரம் ரயில் நிலையமும் இடம் பெற்றிருக்கிறது.

நண்பர்களே, கடந்த பத்தாண்டுகளிலே, கிராமப்புறச் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறையிலே கூட ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

2014ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழ்நாட்டில், மத்திய அரசின் உதவியோடு. 4000 கி.மீட்டர் அளவுக்கு சாலைகள் போடப்பட்டிருக்கின்றன. சென்னை துறைமுகத்தை இணைக்கவல்ல உயர்த்தப்பட்ட இடைவழி. அருமையான கட்டமைப்பிற்கான மேலும் ஒரு எடுத்துக்காட்டு.

இன்றும் கூட சுமார் 8000 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, நாட்டிற்கு அர்ப்பணிக்கப் பட்டிருக்கிறது. இந்தத் திட்டங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களோடு மட்டுமல்லாமல், ஆந்திர பிரதேசத்துடனான இணைப்பையும் மேம்படுத்தும்.

நண்பர்களே, சென்னை மெட்ரோ போன்ற நவீன பொதுமக்கள் போக்குவரத்து வசதியும் கூட தமிழ்நாட்டிலே சுலபமான பயணம் மேற்கொள்ளுதலை மேம்படுத்துகிறது. இத்தனை பெரிய அளவில் கட்டமைப்புக்கள் தொடர்பான பணிகள் நடைபெற்று வரும் வேளையில், இவற்றின் அனைத்துத் துறைகளிலும் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மறந்து விடக்கூடாது.

நண்பர்களே, கடந்த பத்தாண்டிலே பாரதம், சமூகக் கட்டமைப்பிலும் கூட சாதனை காணும் அளவுக்கு முதலீடுகளைச் செய்திருக்கிறது. தமிழ்நாட்டின் கோடானுகோடி குடும்பங்களுக்கும் இவற்றால் ஆதாயங்கள் கிடைத்து வருவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.

கடந்த பத்தாண்டிலே, 4 கோடிக்கும் அதிகமானோருக்கு. கான்கிரீட் வீடுகள், தேசமெங்குக் இருக்கும் ஏழைக் குடும்பங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இவற்றிலே, பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின்படி 12 இலட்சத்திற்கும் மேற்பட்ட கான்கிரீட் வீடுகள் இங்கே தமிழ்நாட்டிலே கட்டப்பட்டு விட்டன.

கடந்த பத்தாண்டுகளிலே, கிராமங்களில் 12 கோடிக் குடும்பங்களுக்கு. முதன்முறையாக குழாய்வழி குடிநீர் கொண்டு சேர்க்கப் பட்டிருக்கிறது. இவற்றிலே ஒரு கோடி பதினோரு இலட்சம் குடும்பங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. இவர்களுடைய இல்லங்களிலே முதன்முறையாக குழாய்வழி குடிநீர் சென்றடைந்திருக்கிறது. இதனால் மிகப்பெரிய ஆதாயம் அடைந்தவர்கள் நம்முடைய தாய்மார்கள்-சகோதரிகள் தாம்.

நண்பர்களே, நாட்டுமக்களுக்கு தரமான மற்றும் விலைமலிவான சிகிச்சை அளிக்கும் விஷயத்தில் நமது அரசாங்கம் அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறது. நீங்களே பாருங்கள். ஆயுஷ்மான் பாரதம் திட்டத்தின்படில் தமிழ்நாட்டிலே ஒரு கோடிக்கும் மேற்பட்ட சிகிச்சைகள் நடைபெற்றாகி விட்டது. இவற்றிலே தமிழ்நாட்டின் இந்தக் குடும்பங்கள் 8000 கோடி ரூபாய் செலவிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் 1400க்கும் அதிகமான மக்கள் மருந்தகங்கள் இருக்கின்றன. இங்கே 80 சதவீதம் வரையிலான தள்ளுபடி விலையில் மருந்துகள் கிடைக்கின்றன. இந்த மலிவுவிலை மருந்துகளாலும் கூட மக்களுக்கு 700 கோடி ரூபாய் சேமிப்பு ஏற்பட்டிருக்கிறது.

நண்பர்களே. நாட்டின் இளைஞர்கள் மருத்துவப் படிப்பு படிக்க, அயல்நாடுகளுக்குச் செல்லக்கூடிய கட்டாயம் ஏற்படக்கூடாது என்பதே எங்களுடைய முயற்சி. கடந்த ஆண்டுகளிலே, தமிழ்நாட்டிற்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடைத்திருக்கின்றன.

நண்பர்களே, வரிசெலுத்துபவர்கள் செலுத்தும் பணம், மிகவும் ஏழ்மையில் வாடும் மக்களுக்குத் துணைவர வேண்டும். இது தான் நல்லாளுகை. தமிழ்நாட்டின் இலட்சக்கணக்கான சிறு விவசாயிகளுக்கு பிரதம மந்திரி விவசாயிகளுக்கான வருமான ஆதரவுத் திட்டத்தின்படி சுமார் 12,000 கோடி ரூபாய் அளிக்கப் பட்டிருக்கிறது. தமிழ்நாடின் விவசாயிகளுக்கு பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், 14,800 கோடி ரூபாய் காப்புறுதிப் பணம் கோரல் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

நண்பர்களே. பாரதத்தின் வளர்ச்சியில் நமது நீலப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்கு அமைய இருக்கிறது. இதிலே தமிழ்நாட்டின் பலத்தை உலகமே பார்த்து வியக்கும். 

தமிழ்நாட்டின் நம்முடைய மீனவ சமூகம் மிகவும் கடினமாக உழைக்கக்கூடிய ஒரு சமூகமாகும். தமிழ்நாட்டின் மீன்வளத்துறை கட்டமைப்பினை வலுப்படுத்த வேண்டி. மாநிலத்திற்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு அளித்து வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில், பிரதம மந்திரி மீன்வளத் திட்டங்களின்படி, தமிழ்நாட்டிற்குக் கோடிக்கணக்கான ரூபாய் நிதியாக வழங்கப்பட்டிருக்கிறது. 

அதிகபட்ச நவீன வசதிகள் நமது மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே நம்முடைய முயற்சியாக இருக்கிறது. அது கடற்பாசிப் பூங்காவாகட்டும். மீன்பிடித் துறைமுகமாகட்டும். படகுத்துறையாகட்டும். மத்திய அரசு இங்கே பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாயை முதலீடு செய்து வருகிறது.

நமது பாதுகாப்புத் தொடர்பான அக்கறையும் நமக்கு இருக்கிறது. பாரத அரசு, மீனவர்களின் அனைத்துச் சங்கட காலங்களிலும் அவர்களுக்குத் தோளோடு தோள் கொடுத்து வருகிறது. 

பாரத அரசின் முயற்சிகள் காரணமாக, கடந்த பத்தாண்டுகளில் 3700க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கையிலிருந்து மீட்டுக் கொண்டு வரப் பட்டிருக்கிறார்கள். இவர்களில் 600க்கும் அதிகமான மீனவர்கள் மட்டும் கடந்த ஓராண்டில் மீட்டுக் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள்.

நண்பர்களே, இன்று உலகில் பாரதம் அனைவரையும் ஈர்க்கும் மையமாக ஆகியிருக்கிறது. மக்கள் பாரதம் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள், புரிந்து கொள்ள விழைகிறார்கள். இதிலே பாரதத்தின் கலாச்சாரம், நம்முடைய மென்சக்திக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது.

தமிழ் மொழி மற்றும் மரபு, உலகின் அனைத்து இடங்களுக்குக் சென்று சேர வேண்டும். இதற்காக அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த 21ஆம் நூற்றாண்டில் நாம் இந்த மகத்தான பாரம்பரியத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே என் உறுதியான கருத்து.

ராமேஸ்வரம் மற்றும் தமிழ்நாட்டின் இந்த மண்……. இன்று போல என்றும் தொடர்ந்து புதியசக்தியை அளித்துவரும் புதிய உள்ளெழுச்சியை அளித்துவரும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. 

நண்பர்களே, இன்று பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன நாளும் கூட. சக்திப்படைத்த, தன்னிறைவு கொண்ட வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலட்சியத்தை மனதிலே தாங்கி, நாம் பயணித்து வருகிறோம். இதிலே பாரதிய ஜனதா கட்சியின் அனைத்துத் தொண்டர்களின் கடினமான உழைப்பும் அடங்கியிருக்கிறது. இன்று நாட்டுமக்களனைவரும். பாரதிய ஜனதா கட்சியின் நல்லாளுகையை கவனித்து வருகிறார்கள். தேசத்தின் நலன்களின் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் தீர்மானங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தேசத்தின் அனைத்து மாநிலங்கள். அனைத்து மூலைகளிலும், பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் கள அளவில் மக்களோடு இணைந்து, ஏழைகளுக்குச் சேவையாற்றி வருகிறார்கள் என்பதைப் பார்த்து எனக்குப் பெருமிதமாக இருக்கிறது.

நான் பாரதிய ஜனதா கட்சியின் கோடிக்கணக்கான தொண்டர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். அவர்களுக்கு எல்லாம் என்னுடைய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

மீண்டுமொருமுறை, உங்களனைவருக்கும். தமிழ்நாட்டின் இந்த அனைத்து வளர்சித் திட்டங்களுக்கான வாழ்த்துக்கள். நன்றி வணக்கம், மீண்டும் சந்திப்போம்.

மீண்டும் ஹிந்து மன்னராட்சி: நேபாளத்தில் புதிய புரட்சி

nepal king - 2026

– பத்மன்

மன்னராட்சியை அகற்றிவிட்டு மக்களாட்சியைக் கொண்டுவருவதற்கான புரட்சி பழைய விஷயம். தற்போது வரலாறு திரும்புகிறது.

நேபாளத்தில் மக்களாட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து மன்னராட்சியை மீண்டும் கொணர்வதற்கான புரட்சி வலுத்துள்ளது. நேபாளம் பழையபடி ஹிந்து ராஷ்ட்ரம் ஆக அதாவது ஹிந்து நாடாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதும் இப்புரட்சியின் அடிநாதம்.

இந்த இரண்டு கோரிக்கைகளுக்காக, மக்கள் கூட்டு நடவடிக்கைக் குழு என்ற அமைப்பால் கடந்த மார்ச் மாதம் 28-ஆம் தேதி தலைநகர் காத்மாண்டில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்க்கணக்கானோர் பங்கேற்றனர். இந்தப் புரட்சியாளர்களை “கவனிக்க” நேபாள கம்யூனிஸ்ட் அரசால் 5,000 பாதுகாப்புப்படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணி செல்ல முயன்றபோது போலீஸார் நடத்திய கண்ணீர் புகை குண்டுவீச்சு, தடியடி, அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை ஆகியவற்றில் 2 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

ஜனநாயகத்துக்குத் தலைமுழுக்குப் போட வேண்டும் என ஜனங்களே இவ்விதம் போராடத் தொடங்கியிருப்பதற்கு என்ன காரணம்? நேபாளத்தில் புறவாசல் வழியாகப் புகுத்தப்பட்ட மக்களாட்சி என்ற பெயரிலான அரசியல் விளையாட்டே இதற்கு மூல காரணம்.

இந்த அரசியல் விளையாட்டால் அமைதியான நாடாகவும், உலகின் ஒரே ஹிந்து நாடாகவும் இருந்த நேபாளம், தற்போது ஸ்திரமற்றதன்மையாலும், பொருளாதார நெருக்கடியாலும், பண்பாட்டுச் சீரழிவினாலும் அல்லல்படுவதோடு சீனாவின் ஆதிக்கம், இஸ்லாமிய பயங்கரவாதம், கிறிஸ்தவ மிஷனரிகளின் மதமாற்ற வெறியாட்டம் ஆகியவற்றாலும் அலங்கோலப்படுகிறது.

இந்தச் சீரழிவுக்கெல்லாம் மூல காரணம் ஒற்றை நபர். அவர்தான் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி.

கடந்த 1988-ஆம் ஆண்டில் அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, தனது மனைவி சோனியா காந்தியுடன் நேபாளம் சென்றிருந்தார். அப்போது புராதனப் பெருமை வாய்ந்த பசுபதிநாத் கோவிலுக்குள் ராஜீவ் செல்லலாம், ஆனால் கிறிஸ்தவரான சோனியா செல்ல முடியாது என பூசாரிகள் அனுமதி மறுத்தனர். விஷயம் நேபாள மன்னர் பீ(வீ)ரேந்திராவிடம் சென்றபோது, மத விவகாரத்தில் மன்னர் தலையிடுவது பாரம்பரியம் அல்ல என அவர் மறுத்துவிட்டார்.

இதன் விளைவு, நேபாள அரசுக்கும் அதன் பாரம்பரியத்துக்கும் இந்தியாவின் ராஜீவ் அரசால் கிடைத்த பேரிடி. தொப்புள்கொடி உறவான இந்தியாவில் இருந்து உணவுப் பொருட்கள், மண்ணெண்ணெய், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நேபாளம் செல்வதற்கு 1989-இல் ராஜீவ் அரசு தடை விதித்தது.

21 வழித்தட்களில் 19 வழித்தடங்கள் அடைக்கப்பட்டன. இதற்குச் சொல்லப்பட்ட காரணம் இந்தியாவின் பாதுகாப்புக்காக. இத்தனைக்கும் அந்தக் காலகட்டத்தில் நிலநடுக்கத்தால் நேபாளம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

ஓராண்டுக்கும் மேலான இந்தப் பொருளாதாரத் தடை காரணமாக நேபாளத்தில் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தால் மன்னர் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. கூடவே, ராஜீவின் உத்தரவுப்படி நேபாளத்தில் மன்னருக்கு எதிரான அரசியல் ஆர்ப்பாட்டங்களை இந்திய உளவு அமைப்பான “ரா” தூண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறான நெருக்கடியால் 1990-இல் மன்னர் பீரேந்திரா, நேபாளத்தில் நாடாளுமன்ற ஜனநாயகத்துடன் கூடிய மன்னராட்சிக்கு (கான்ஸ்டிடியூஷனல் மொனார்கி) ஒப்புக்கொண்டார். முதலில் நேபாள காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இருந்நது.

ஆனால் ஜனநாயகப் பேராளிகளான காம்ரேட்டுகள் சும்மா இருப்பார்களா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி நேபாளத்துக்குப் பயணப்பட்டார். இதனால் நேபாளத்தில் பிற அரசியல் கட்சிகளுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையே 2006-இல் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த யெச்சூரி ஃபார்முலாவின் விளைவாக 2008-இல் நேபாளத்தில் மன்னராட்சிக்கு முழுமையாக விடை கொடுக்கப்பட்டது. உலகின் ஒரே ஹிந்து நாடான நேபாளம், செக்யூலர் நாடாக அறிவிக்கப்பட்டது.

ஆஹா புரட்சி என்று புளகாங்கிதம் அடைய வேண்டாம். இந்த ஜனநாயகப் புரட்சியால் ஜனங்களின் நிம்மதி தொலைந்தது. மதச்சார்பின்மை என்ற பெயரில் மண்ணின் அடையாளத்தை அழிப்பதற்கான சதிவேலைகள் அதிகரித்தன. பொருளாதாரம் வளரவில்லை, ஆனால் ஸ்திரமற்ற நிலை பீடித்துக் கொண்டது.

ஒருபுறம் உதவிக்கரம் என்ற பெயரில் நுழைந்த சீனாவின் கடன் வலையில் சிக்கி, அதன் தலையீடு அதிகரிப்பால் என்று அது நாட்டை முழுங்குமோ என்ற அச்சம் பிடித்து வாட்டுகிறது.

நேபாள கம்யூனிஸப் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, சீனப் பெண் தூதுவரின் காம வலையில் சிக்கி அவளது கைப்பம்பரமாகச் சுற்றியது 2020-இல் வெட்ட வெளிச்சமாகியது. சீனாவின் ஆதிக்கத்துக்கும், இந்திய எதிர்ப்புக்கும் நேபாள கம்யூனிஸ்ட்டுகள் இடும் தூபம், நேபாளத்தின் கண்களை மறைத்து அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது.

மறுபுறத்தில் இந்திய எதிர்ப்பு என்ற பெயரில் பாகிஸ்தான் ஜிஹாதிகளுக்கு அடைக்கலம் தந்ததால், நேபாளத்தின் சில பகுதிகள், குறிப்பாக எல்லைப் பகுதிகள் பயங்கரவாதிகளின் சொர்க்கபுரிகளாக மாறிவிட்டன.

நேபாளத்தில் இருந்து இந்திய கள்ள நோட்டுகளை அச்சடித்துப் புழக்கத்தில் விடும் அளவுக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் கரம் ஓங்கியது. சொந்த நாட்டு மக்களுக்கு கிடைக்காத வசதிகள் மியான்மரில் இருந்து இடம் பெயர்ந்த, ஊடுருவிய ரோஹிங்கியா முஸ்லிம்களுக்குக் கிடைத்தது.

மதம் ஒரு அபின் என்று ஹிந்துக்களிடம் காம்ரேட்டுகள் செய்த தொடர் பிரசாரம், கிறிஸ்தவ மிஷினரிகளின் மத வியாபாரத்துக்கு மகத்தான துணை புரிந்தது. காம்ரேட்டுகளும் அவர்களது நேபாள அரசுகளும் ஏழ்மையைக் காப்பாற்றியதால் மிஷினரிகள் பொருளாசை காட்டி ஹிந்துக்களை மதம் மாற்றினர். 1951-இல் ஒரு கிறிஸ்தவர் கூட இல்லாத நேபாளத்தில் 2001-இல் ஒரு லட்சம் கிறிஸ்தவர்கள் உருவாகினர்.

இந்த எண்ணிக்கை 2011-இல் 3.76 லட்சமாகவும், 2021-இல் 5.50 லட்சமாகவும் அதிகரித்துள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த 20 ஆயிரம் மெஷினரிகள் நேபாளத்தில் இயேசு ராஜ்ஜியத்தை ஸ்தாபிக்கக் கடுமையாகப் பாடுபடுகின்றனர்.

இவ்விதம் நேபாளத்தின் இறையாண்மையையும், இறையுணர்வையும் கூறுபோட்டு அதனை ஆட்டிப்படைக்க சீன ஆதரவு கம்யூனிஸம், பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாதம், மிஷினரிகளின் கிறிஸ்தவ மத வெறியாட்டம் ஆகியவை போட்டிப் போட்டுக்கொண்டு களத்தில் வேலை செய்கின்றன.

இவற்றுக்கு மாற்றாக எழுந்துள்ள சொரணையுள்ள மண்ணின் மைந்தர்கள் முன்னெடுத்துள்ள போராட்டமே, மீண்டும் ஹிந்து மன்னராட்சி. அதேநேரத்தில் மன்னர் தலைமையின் கீழான நாடாளுமன்ற ஜனநாயகத்துடன் கூடிய மன்னராட்சியையே அவர்கள் விரும்புகிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது.

நேபாளம் நமது அண்டை நாடு மட்டுமல்ல, அகண்ட பாரதத்தின் ஓர் அங்கம் என்பதால் அங்கே நன்மாற்றம் ஏற்படுவதற்கு இன்றைய பாரத அரசு இயன்ற அளவு உறுதுணை புரிய வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் எள் முனையளவும் தவறில்லை. 

(கட்டுரையாளர் – மூத்த பத்திரிகையாளர்)

வண்ணத்தில் மின்னும் பாம்பன் பாலம்! நாளை திறப்பு!

pamban bridge lights - 2026
திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள பாம்பன் பாலம், மின்னொளியில் ஜொலிக்கிறது

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா நாளை பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ள நிலையில் புதிய பாம்பன் பாலம் வண்ண மின் அலங்காரம் செய்யப்பட்டு இரவு கடல் அலைகளோடு ஜொலிப்பதை காண கண் கோடி வேண்டும்.

இந்த நிலையில் நாளை மண்டபம் வந்து புதிய பாலத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடி நாளை மண்டபம் வருகிறார். இதையொட்டி ராமேசுவரத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாம்பன் பழைய ரயில் பாலம் பழுதடைந்ததைத் தொடர்ந்து புதிய ரயில் தூக்குப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி அனுராதபுரத்திலிருந்து நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10.40 மணிக்கு இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, பகல் 11.45 மணியளவில் மண்டபம் ஹெலிபேட் தளத்துக்கு வருகிறார்.

பின்னர், கார் மூலம் பாம்பன் சாலைப் பாலத்துக்கு வந்து பகல் 12 மணி அளவில் பாம்பன் புதிய ரயில் தூக்குப் பாலத்தை திறந்து வைப்பதுடன், புதிய `பாம்பன் எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

அங்கிருந்து பிற்பகல் 12.30 மணியளவில் புறப்பட்டு ராமேஸ்வரம் கோயிலுக்குச் செல்லும் பிரதமர் அங்கு சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர் ரயில்வே சார்பில் நடைபெறும் பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்றுப் பேசுகிறார்.

அப்போது, வாலாஜாபேட்டை-ராணிப்பேட்டை, விழுப்புரம்-புதுச்சேரி, பூண்டியன்குப்பம் – சட்டநாதபுரம், சோழபுரம்-தஞ்சாவூர் பகுதிகளுக்கான நான்கு வழிச் சாலை திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சர் முருகன், மாநில அமைச்சர்கள் எம்.பி.க்கள் கலந்துகொள்கின்றனர். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிற்பகல் 2.35 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுரை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து விமானத்தில் டெல்லி செல்கிறார்.மதுரை விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் வருகையையொட்டி ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும், பிரதமர் வருகையையொட்டி ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் ஆகிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.

பிரதமர் வருகை தரும் பாம்பன் பாலம், ராமேசுவரம் கோயில் வளாகம் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனையிட்டு வரும் போலீஸார், சந்தேக நபர்கள் தங்கியுள்ளனரா என்று விசாரித்து வருகின்றனர். முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சோழவந்தான் உச்சி மாகாளியம்மன் கோவில் பங்குனித் திருவிழா விளக்கு பூஜை!

vilakku poojai in madurai - 2026

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கோவில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருவிளக்கு பூஜை நேற்று இரவு கோவில் வளாகத்தில் நடைபெற்றதுபூமேட்டு தெரு கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர் அனைவருக்கும் எண்ணெய் திரி தாம்பூல.பை மற்றும்பட்டு துணி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.

பின்னர் உச்சி மாகாளியம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை தீபாராதனை நடைபெற்றது திருவிளக்கு பூஜையில் மதுரை ஜே பி குழுவினரின் ஆன்மீக நிகழ்ச்சி சொற்பொழிவு நடைபெற்றது தொடர்ந்து சிறப்பு அபிஷேக அர்ச்சனைகள் நடைபெற்றது அடுத்த வாரம் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை எம் வி எம் குழும சேர்மன் மணி முத்தையா, கலைவாணி பள்ளி தாளாளரும் தொழிலதிபருமான டாக்டர் மருதுபாண்டியன், பள்ளி நிர்வாகி வள்ளிமயில் மற்றும் பூமேட்டு தெரு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்