Home Blog Page 144

சமஸ்க்ருத ந்யாயமும் விளக்கமும்: அக்ஷி பாத்ர நியாய:

samskrita nyaya - 2026

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் – 49  

தெலுங்கில் – பி.எஸ். சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

49. அக்ஷி பாத்ர நியாய: – அக்ஷி பாத்ர – கண் விழி

கடவுளின் படைப்பில் இருக்கும் பல விசித்திரங்களில் மனித உடலும் ஒன்று. நம் உடலில் இருக்கும் ஐந்து புலன்களில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு செயல்பாடு. அவையனைத்திலும் கண்களுக்கு என்று ஒரு தனித்துவம் உண்டு.

‘சர்வேந்த்ரியாணாம் நயனம் பிரதானம்’ என்பது உலக வழக்கு. கண்கள் சூட்சுமமானவை, மென்மையானவை. கண்களுக்கு இருக்கும் தனித்துவம் குறித்து ஆன்றோர் கூறிய இந்த சுலோகம் சிந்திக்கத்தக்கது. 

ஊர்ணாபக்ஷ்ம யதைவ ஹி கரதல சம்ஸ்தம் ந வித்யதே பும்பி |
அக்ஷிகதம் து ததேவ ஹி ஜனயத்வ ரதிம் ச பீடாம் ச ||

பொருள் – சிலந்திப் பூச்சி (ஊர்ணநாபி:) உற்பத்தி செய்த நூல், நம் கை போன்ற உடலுறுப்புகளின் மேல் விழுந்தால் நமக்கு தெரியக் கூட தெரியாது. அதே சிலந்திக் கூட்டின் ஒட்டடை நம் கண்ணில் விழுந்தால் அதிக வலியும், வெறுப்பும் ஏற்படுத்தும்.

உடலுறுப்புகளில் கண்களுக்கு இருக்கும் தனித்துவம் இது. மணலைக் கையில் எடுத்தாலும், தலையில் அல்லது உடலின் வேறு எந்த உறுப்பின் மேல் தூவிக் கொண்டாலும் எதுவும் செய்யாது. காது மூக்கு, நாக்கு இவற்றில் மணல் துகள் புகுந்தாலும் பெரிய கஷ்டம் ஏற்படாது. ஆனால் அதே மணல் துகள் கண்ணில் விழுந்தால் ஒரேயடியாக வலி ஏற்படும். சிறிய தூசு விழுந்தாலும் கண் சகித்துக் கொள்ளது. இதுவே ‘அக்ஷிபாத்ர’ நியாயத்தில் இருக்கும் சிறப்பு.

சிறிய மணல் துகள் கண் விழிக்கு கஷ்டம் ஏற்படுத்துவது போல, சின்னச் சின்ன விஷயகளுக்குக் கூட சிலர் வருத்தப்படுவார்கள். இதுவே இந்த நியாயம் அளிக்கும் செய்தி.

உடலுறுப்புகளில் கண்களைப் போல மென்மையாக இருப்பவர்கள், ஒரு சிறிய வார்த்தையைக் கூட சகித்துக் கொள்ள மாட்டார்கள். சிலர் எத்தனை திட்டினாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்களை கெட்டியான தோல் கொண்டவர்கள் என்கிறோம்.  இந்த இரு தரப்பினரும் நமக்கு எதிர்ப்படுவதுண்டு. விரைவாக பாதிக்கப்படும் மென்மையான மனம் கொண்டவர்கள் சூட்சுமான கண்களைப் போன்றவர்கள். நாம் அவர்களோடு மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறது இந்த அக்ஷிபாத்ர நியாயம்.

மிக மென்மையான மனம் கொண்ட மனிதர்கள், எடுக்கும் தீவிரமான முடிவுகளோடு  தொடர்புடைய இரண்டு உண்மை சம்பவங்களை இந்த நியாயத்திற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

சாப்பிட மாட்டேன் –

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஒரு கிராமத்தில் ஒரு அக்ரஹாரம். அங்கு பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து நவராத்திரி உற்சவம் நடத்திவந்தது ஒரு இளைஞர் குழு. கடைசி நாள் நடக்கப் போகும் அன்னதானத்திற்கு சந்தா வசூல் செய்வதற்காக வீட்டுக்கு வீடு சென்றார்கள். ஒரு புகழ் பெற்ற புரோஹிதரின் வீட்டுக்குச் சென்றார்கள். அவருடைய இல்லாள், அன்னதானத்திற்காக ஒரு அரிசி மூட்டையை  சமர்ப்பித்தாள். அவர்கள் மகிழ்ச்சியோடு கிளம்பிச் சென்றார்களோ இல்லையோ, அவளுடைய புதல்வன் வந்தான். நடந்ததை அறிந்து கோபாவேசமானான்.

அதற்கு முன்பே பணமாக சந்தா கொடுத்திருந்த அந்த புதல்வன், தாயை கோபத்தோடு நிந்தித்தான். கணவர் புரோஹித உத்தியோகத்தில் சம்பாதித்து வாங்கி வந்த அரிசியை, தெய்வ காரியத்திற்கு கொடுப்பதை ஆட்சேபித்து மகன் கூறிய சொற்கள் அந்த தாயின் மென்மையான மனத்தைக் காயப்படுத்தின. பேச்சக்கு பேச்சு வார்த்தை தடித்தது. அவ்வளவுதான். ‘இன்றிலிருந்து நான் ஒரு பருக்கை அன்னம் கூட உண்ணமாட்டேன்’ என்று கடுமையான சபதம் செய்தாள் அந்த இல்லாள். அந்த சம்பவத்திற்குப் பிறகு இருபதாண்டுகள் உயிர் வாழ்ந்தாள். இறுதிவரை அவள் தன் சபதத்தை மீறவில்லை. காய்கறி மட்டுமே உண்டு வாழ்ந்தாள்.

மற்றுமொரு சம்பவம் வெளிநாட்டில் நடந்தது. ஒரு பெரிய மனிதரின் மூன்று மகன்களும் வெளிநாட்டில் இருந்தனர். ஒரு முறை அவர் இந்தியாவிலிருந்து, தன் பிள்ளைகள் இருக்கும் தேசத்திற்குச் சென்றார். ஒரு நாள் புதல்வர்களின் இல்லத்திற்கு அருகில் இருக்கும் ஒரு பூங்காவுக்குச் சென்றார். அங்கு அவர் வயதுள்ள ஒரு மனிதரோடு நட்பு ஏற்பட்டது. அந்தப் புதிய மனிதர், தன் மகனின் வீடு அருகில்தான் இருக்கிறது என்று கூறி இவரை அழைத்துச் சென்றார். வந்த பெரிய மனிதருக்கு காபி தரும்படி மருமகளிடம் கூறினார். நம் நாட்டில் இது போன்ற சம்பவங்கள் சகஜமே.

ஆனால் அங்கு? மருமகள், “இதுபோல் முன் பின் தெரியாதவரை எல்லாம் இனி எப்போதும் வீட்டுக்கு அழைத்து வராதீர்கள்” என்று மாமனாரிடம் கூறினாள். அவருடைய மென்மையான மனம் அந்த நிகழ்ச்சியால் காயமடைந்தது. அவ்வளவுதான். அதற்குப் பிறகு அவர், உயிரோடு இருந்தவரை, வெளிநாட்டில் இருக்கும் தன் மகன் வீட்டுக்குச் செல்ல மாட்டேன் என்று எடுத்த பிரதிக்ஞையை நிறைவேற்றினார். முதிய வயதில் இந்தியாவிலேயே ஒரு முதியோர் இல்லத்தில் சேர்ந்தார். அங்கேயே இறுதி மூச்சை விட்டார் அந்த மென்மனம் கொண்டவர்.


ஒரே சொல். ஆனால் அதற்கு எதிர்விளைவு வேறு வேறாக இருக்கும். ஒரு மணல் துகள். மீதி உடல் உறுப்புகளில் பட்டால் இல்லாத வலி, கண்களில் விழுந்தால் வருகிறது இதுவே இந்த நியாயம் கூறும் நீதி. கவனமாகப் பேச வேண்டும் என்ற எச்சரிக்கையை  இவ்விதம், கண்ணில் விழுந்த மணல் துகள் மூலம் விளக்குகின்றனர் பெரியோர்.

மனிதர்கள் இவ்விதம் ஏன் நடந்து கொள்கிறார்கள்? என்று கேட்டால், அதற்கு என்ன பதில் கூற முடியும்? கண்ணில் விழுந்தால் மட்டுமே ஏன் வலிக்கிறது? என்று கேட்டால் என்ன பதில் சொல்வோம்? அதே போல்தான்.

அதமா தனமிச்சந்தி
தனம் மானம் ச மத்யமா:
உத்தமா மானமிச்சந்தி
மனோஹி மஹதாம் தனம் ||

பொருள் – கடைநிலை மக்கள் செல்வத்தை விரும்புவர்கள். நடுநிலை மனிதர்கள், தனம், மானம் இரண்டையும் விரும்புவர்கள். உத்தமர்கள் மானத்தை விரும்புவர்கள். ஆனால் மஹா புருஷர்கள் தம் மானத்தையே தனமாக எண்ணுவார்கள்.

மேலே குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களும் மென்மையான மனத்தை வெளிப்படுத்தின. அவர்கள், கண்களைப் போலவே மென்மையானவர்கள். அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை வேறாக இருக்க வேண்டும்.


எனக்கு (ஆசிரியருக்கு) ஒரு நண்பர் இருந்தார். வாடா, போடா என்று பேசிக் கொள்வோம். ஒரு முறை போனில் பேசியபோது அவருடைய பெயரோடு அவர்கள் என்று சேர்த்து அழைத்து, விளையாட்டாக, ‘சொல்லுங்கள், சார்’’ என்றேன். உடனே அந்த நண்பர் மிகவும் நொந்துபோனார். ‘நீங்கள் மாறிவிட்டீர்கள். என்னை வெளியாளாக்கி விட்டீர்கள். என்னை சார், அவர்கள் என்றீர்கள்’ என்று வருந்தினார். வேறு ஒருவர், வாடா என்று பேசினால்  தவறாக எடுத்துக் கொண்டு வருந்தலாம். இதுவும் ‘அக்ஷிபாத்ர’ நியாயத்தில் உள்ள விசித்திரம். ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதம். ஒவ்வொரு உடலுறுப்புக்கும்  ஒவ்வொரு மென்மை உணர்வு.

பல ஆண்டுகளுக்கு முன் பிரபல கார்டூனிஸ்ட் ஆர். கே. லக்ஷ்மண் மென்மை குணம் இல்லாத ஒரு மனிதர் பற்றி ஒரு கார்ட்டூன் போட்டார். ஒரு சேல்ஸ்மேன் கீழே விழுந்து கிடப்பார். அவரருகில் அவருடைய பை கிடக்கும். அவர்  இவ்வாறு கூறுவார், ‘இதில் அவமானம் என்ன இருக்கிறது? என் பையை வெளியில் தூக்கி எறிந்து விட்டு என்னை வெளியில் போ என்று விரட்டி விட்டார். அவ்வளவுதான்’ என்றார்.

அவமதிப்பிற்கு அப்பாற்பட்ட மனிதர் அவர். இதற்கு மாறாக சிலர் இருப்பார்கள். ஒரு சிறிய வார்த்தை கூட அவர்களை பாதிக்கும். சமீப காலமாக ‘போன் மார்கெட்டிங்’ அதிகமாகி விட்டது. கிடைத்த நம்பருக்கெல்லாம் போன் செய்து, தங்கள் பொருட்களைப் பற்றிக் கூறுவது அவர்களுடைய தொழில் தர்மம். சிலர் தம் கோபத்தை அவர்கள் மேல் காட்டுவார்கள். அது தவறு என்று இந்த நியாயம் தெரிவிக்கிறது.

‘எல்லா புலன்களும் ஒரே மாதிரி இருக்காது. அதே போல் மனிதர்கள் எல்லோரும் ஒன்று போல் இருக்க மாட்டார்கள். அவர்களின் மனங்கள் வேறு வேறு. ஒவ்வொரு மரத்தின் காயும் ஒவ்வொரு ரகத்தில் இருக்கும். ஒரு கொடியின் மலர்களைப் போல இன்னொரு கொடியின் மலர்கள் இருக்காது. ஒரே தாய்க்குப் பிறந்த பிள்ளைகளின் புத்தி ஏன் ஒவ்வொரு விதமாக இருக்கிறது?’ என்று கேட்டார் ஒரு கவிஞர். அதை அறிந்து நடந்து கொள்ளவேண்டும் என்பது இந்த நியாயம் கூறும் செய்தி.

யாருடன் எவ்வாறு பேசுவது என்று அறிந்து நடந்து கொண்டால் தனி மனிதத் தொடர்புகள் விலகாது. ‘கண் உன்னுடையது. விரலும் உன்னுடையது என்பதால் குத்திக் கொண்டால் ரத்தம் வராதா’ என்றார் ஒரு கவிஞர். ‘அக்ஷி பாத்ர’ நியாயம் மானுட சம்பந்தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் உபாயத்தைக் கூறுகிறது. People never change their jobs, they change their bosses. என்கிறது ஒரு பழமொழி.

தமிழ் பிரசார சபா ஏன் அமையவில்லை?!

kashi tamil sangamam - 2026

ஹிந்தி பிரசார சபா போல்… இவர்களால் தமிழ் பிரசார சபா அமைக்க முடிந்ததா என்று ஒரு கேள்வி எழுப்பப் பட்டிருக்கிறது- சரி நாம் இவர்கள் வழி தமிழ்லயே சொல்வோமே…  தமிழ் பரப்புரை அவை  🙂  – அமைக்க முடிந்ததா?!

நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாற்றைப் படித்தவர்களுக்கு ஒன்று நன்றாகப் புரியும்…! 1857 முதல் சுதந்திரப் போராட்டத்தின் பின், பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரத்தில் இருந்து பிரிட்டிஷ் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இந்தியப் பகுதிகள் வந்த பிறகு, மொழி வழி, கலாசார வழி, மத வழிப் பிரிவினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டது பிரிட்டிஷ் அரசு.

அப்படித்தான், ஹிந்தி ஒரு தரப்பு, அடுத்த தரப்பு உருது, மற்ற தரப்பு ஆங்கிலம் என்று மத வழியே மொழிப் பிரிவினை வெளிப்படுத்தப்பட்டது. நாட்டில் ஹிந்துக்களை மொழி வழியே ஒருங்கிணைக்கத்தான் ஹிந்தி என்று பிரசாரம் பலமானது. உண்மையில், நாடெங்கும் உள்ள மக்களை மொழி வழியே ஒருங்கிணைக்க முன்னெடுக்கப்பட்டது இந்தி மொழி. 

ஆயிரம் ஆண்டு பலமான பாரம்பரியமான இலக்கண, இலக்கியச் செழுமை என்று சொல்ல முடியாதபோதும், தேசத்தின் ஒற்றுமை உணர்வு கருதி அறுநூறு ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கிய மொழி இந்தியை தற்போதைய நாளில் இருந்து சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு  முந்தைய தேசாபிமானிகள் உரைநடை இலக்கியங்கள், கவிதைகள் படைத்து மக்களிடையே பரப்பினார்கள். அதன் முக்கிய நோக்கம் – தேசம் முழுதுமுள்ள மக்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்ப்பது! அப்படித்தான் பின்னாளில் மகாத்மா காந்தி ஹிந்தி பிரசார சபா நிறுவி தேசம் முழுதும் ஹிந்தி பரவலாக்கத்தை வளர்த்தார். அதேநேரம், உருது ஒருபுறம் வலிய வளர்க்கப்பட்டதும், தேசத்தில் மத வழி பிரிவினை ஏற்பட்டதும் வரலாறு. 

சரி, இருக்கட்டும்! தமிழ் பிரசார சபா ஏன் தோற்றுவிக்கப்படவில்லை அல்லது வளரவில்லை!? அத்தகைய எண்ணம் இருந்திருந்தால், ஆங்கிலேயன் மத வழி மொழியான ஆங்கிலத்தை ஓஹோவெனத் தூக்கிப் பிடித்து, தமிழை தங்கத்தட்டில் வைத்த ஏதோ ஒன்றென ஒப்புமை கூறி தரம் தாழ்த்தி இன்றைய செல்வச்செழிப்புச் சீமான்களின் கோல்மால்புரக் கோமான்களின் முன்னோடிகளே செய்திருப்பார்களே! ஏன் செய்யவில்லை? அட… இண்டிய நாடு என்ற அளவில் கொண்டு செல்லாவிட்டாலும், திராவிட நாடு என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள் அல்லவா… அந்தப் பகுதிகளிலாவது தமிழை வளர்க்கவும் பிரசாரம் செய்யவும் செய்திருக்கலாமே!  சுமார் அறுபதாண்டு ஆட்சிக்கட்டிலில் இருந்த  திராவிட இயக்கங்களின் மாநில அரசால் செய்ய முடியாததா? ஏன் செய்யவில்லை? 

பிரதமர் நரேந்திர மோடி வட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும், தமது மேடைப் பேச்சுகளின் வாயிலாகவும், நாடாளுமன்றத்திலும், தன் தொகுதியாக காசி தமிழ்ச் சங்கம் மூலம் உ.பி. யிலும், மேற்கொள்ளப்படும் தமிழ் பிரசார உத்தியைக் கூட, செய்து வரும் செயல்களில் சிறிதளவு கூட தமிழகத்தைக் கடந்து திராவிட அரசுகளால் செய்ய முடியவில்லையே! 

எனவே நம் வழி பாரதியின் வழியாகவே இருக்க வேண்டும்! வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு!

சாம்பியன்ஸ் ட்ராபி: ஆஸி.,யை வீழ்த்தி, இறுதிப் போட்டியில் இந்தியா!

champions trophy - 2026

சாம்பியன்ஸ் ட்ராபி – இந்தியா- ஆஸ்திரேலியா – அரையிறுதி ஆட்டம் – 04.03.2025

இந்திய அணி அபார வெற்றி

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

ஆஸ்திரேலிய அணியை (49.3 ஓவர்களில் 264, ஸ்டீவன் ஸ்மித் 73, அலகஸ் கேரி 61, ட்ராவிஸ் ஹெட் 39, முகமது ஷமி 3/48, வருண் 2/49, ஜதேஜா 2/40, அக்சர் படேல் 1/43) இந்திய அணி (48.1 ஓவர்களில் 267/6, விராட் கோலி 84, ஷ்ரேயாஸ் ஐயர் 45, கே.எல்.ராகுல் 42, அக்சர் படேல் 27, ஹிருதிக் பாண்ட்யா 28, ரோஹித் ஷர்மா 28, நாதன் எல்லிச் 2/49, ஆடம் சாம்பா 2/60, பென் த்வாஷ்யிஸ் 1/39, கூப்பர் கான்னோலி 1/37) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற ஆஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் முதலில் மட்டையாடத் தீர்மானித்தார். அந்த அணியின் தொடக்க வீரர் கூப்பர் கான்னோலி மூன்றாவது ஓவர் முடிவில் ஷமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

அதன் பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ட்ராவிஸ் ஹெட் (33 பந்துகளில் 39 ரன்) மூன்றாவதாகக் களமிறங்கிய அணித்தலைவர் ஸ்மித்துடன் (96 பந்துகளில் 73 ரன்) இணைந்து 50 ரன்கள் சேர்த்து ஒன்பதாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மார்னஸ் லபுசேன் (36 பந்துகளில் 29 ரன்), ஜோஷ் இங்கிலிஷ் (12 பந்துகளில் 11 ரன்) மற்றும் அலக்ஸ் கேரி (57 பந்துகளில் 61 ரன்) ஆகியோர் ஸ்மித்துடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

37ஆவது ஓவரில் ஸ்மித் ஆட்டமிழந்தபிறகு ஆஸ்திரேலிய வீரர்களால் அதிரடியாக ரன் குவிக்க முடியவில்லை. அதனால் 49.3 ஓவர்களில் அந்த அணி 264 ரன்கள் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.

          இந்திய சுழல்பந்து வீச்சாளர்கள் நன்றாகப் பந்து வீசியபோதிலும் அவர்களுக்கு விக்கட் அவ்வளவாக விழவில்லை. ஹார்திக் பாண்ட்யா அதிக ரன் கொடுத்தார்.

          அதன் பின்னர் ஆட வந்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா (29 பந்துகளில் 29 ரன்) மற்றும் ஷுப்மன் கில் (11 பந்துகளில் 8 ரன்) பவர்ப்ளே முடிவதற்குள் ஆட்டமிழந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து விராட் கோலியும் (98 பந்துகளில் 84 ரன்) மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் (62 பந்துகளில் 45 ரன்)நிதானமாக ஆடி ஆட்டத்தை இந்திய அணியின் கட்டுப்பாடிற்குள் கொண்டு வந்தனர். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் மெதுவாக ஆடுவதால் தோல்விக்கான வாய்ப்பு அதிகரித்து வந்தது. இவர்களுக்குப் பின்னர் ஆடவந்த அக்சர் படேல் (30 பந்துகளில் 27 ரன்) கே.எல். ராகுல் (34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 42 ரன்) ஹார்திக் பாண்ட்யா (24 பந்துகளில் 28 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடி இந்திய அணியைக் கரைசேர்த்தனர்.  

46ஆவது ஓவரில் ஹார்திக் பாண்ட்யா அடித்த இரண்டு தொடர் சிக்சர்கள் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியது. 48.1 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஆறு  விக்கட் இழப்பிற்கு 267 ரன் எடுத்து 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.  

          இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டது. இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நியூசிலாந்து தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நாளை, மார்ச்சு ஐந்தாம் தேதி லாகூரில் நடைபெறும்.   

          இன்றைய ஆட்டத்தில் ஆட்டநாயகனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டார்.      

மத்திய அரசின் கொள்கைத் திணிப்பு என்றால், திமுக.,வினர் ஏன் சிபிஎஸ்இ பள்ளிகள் நடத்த வேண்டும்?!

raja hariharan bjp - 2026

தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக திமுக.,வுக்கும், பாஜக.,வுக்கும் இடையே இப்போது கடுமையான வார்த்தை மோதல்கள் ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளும் மாறி மாறி விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன.

இந்நிலையில், கல்வியில் தமிழகம் சிறந்து விளங்கும் நிலையில், சில ஏகாதிபத்திய மனங்களின் வசதிக்காக ஏன் ஏதாவது ஒன்றை திணிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், திமுக.,வினர் சிபிஎஸ்இ பள்ளிகள் நடத்தி அதில் இந்தி மொழி மூன்றாம் மொழியாகக் கற்றுக் கொடுப்பது பற்றி பாஜக., விமர்சனம் செய்து வரும் நிலையில், “தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுக்கப் படுகிறதென்றால் அதற்குக் காரணம், மத்திய அரசின் கல்விக் கொள்கையே தவிர, திமுக.,வினரோ வேறு எந்தக் கட்சியினரோ அல்ல” என்று கூறியுள்ளார் ஸ்டாலின். இதற்கு பாஜக.,வினர் பதில் கொடுத்து வருகின்றனர்.

தமிழக அமைச்சர் தியாகராஜன் அளித்த பேட்டி ஒன்றில், ‘ இரு மொழிக் கொள்கையால், கல்வியில் மிகச்சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. மும்மொழிக் கொள்கை உள்ள மாநிலங்களில் எத்தனை குழந்தைகளுக்கு 3 மொழிகள் தெரியும். இரு மொழிக் கொள்கை அமலில் தமிழகத்தில் உள்ள கல்வி முறையை விட சிறந்தது என மும்மொழிக் கொள்கை அமலில் உள்ள மாநிலங்கள் ஏதாவது ஒன்றை கூற முடியுமா’என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனை பகிர்ந்துள்ள முதல்வர் ஸ்டாலின், தமது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: 

நமது நிலைப்பாட்டை அமைச்சர் தெளிவாக விளக்கி உள்ளார். தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கும்போது, ஒரு சில ஏகாதிபத்திய மனங்களின் வசதிக்காக ஏன் ஏதாவது ஒன்றை திணிக்க வேண்டும்’ என ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்நிலையில், ஸ்டாலினின் கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக., மூத்த தலைவர் ஹெச். ராஜா, மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்கவில்லை என்றால், திமுக.,வினர் ஏன் சிபிஎஸ்இ பள்ளி நடத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவரது சமூகத் தளப் பதிவில் கூறியுள்ளதாவது…

தமிழ்நாட்டில் CBSE பள்ளிகளில் ஹிந்தி கற்றுத்தரப்படுகிறது என்றால் அதற்கு காரணம் மத்திய அரசின் கல்விக் கொள்கையே தவிர திமுகவினரோ வேறு எந்த கட்சியினரோ அல்ல என்கிறார் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்…

மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்காத தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறகு ஏன்? எதற்காக? எப்படி? தனது மகள் திருமதி.செந்தாமரை சபரீசன் அவர்கள் சன்ஷைன் மாண்டசோரி ஸ்கூல் (CBSE) நடத்த அனுமதி அளித்தார்?

உண்மையிலேயே தமிழகத்தில் இருமொழி கல்விக் கொள்கை மட்டுமே அமலில் இருக்க வேண்டும் என்பதில் திமுகவின் முன்னணி தலைவர்கள் உறுதியாக இருந்தால் அவர்கள் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளை திமுக தலைவர் திரு.மு.கருணாநிதி அவர்கள் முன்மொழிந்த சமச்சீர் கல்வி பள்ளிகளாக உருவாக்காமல் மும்மொழி கற்பிக்கும் CBSE பள்ளிகளாக உருவாக்கியது ஏன்?

பதிலளிப்பீர்களா Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்களே?
ஹிந்தி எதிர்ப்பு என்பது திமுகவின் அரசியல் கோஷம்!
தமிழ் பற்று என்பது திமுகவின் அரசியல் வேஷம்!
அரசியலுக்காக மும்மொழி எதிர்ப்பு?
ஆதாயத்திற்காக CBSE பள்ளிகள்!!
இந்த பித்தலாட்டத்திற்கு பெயர்தான் “திராவிட மாடல்”

ஆச்சரியமளிக்கும் ஆதர்சம்!

mahakumbhmela and yogiji - 2026

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

ண்மையில் நடந்து முடிந்த மிகப் பெரும் ஹிந்து நிகழ்வு மகா கும்பமேளா. பிரயாக்ராஜ் க்ஷேத்திரத்தில் நடந்த நாற்பத்தைந்து நாள் மகோத்ஸசவமான மகா கும்பமேளா, உலகின் பார்வையை ஈர்த்தது. உலகிலேயே மிக அதிக அளவில் மக்கள் பங்குகொண்ட ஒரே ஒரு நிகழ்வு. அதிலும், தொடர்ந்து பல நாட்கள் நடந்தது. இந்தத் திருவிழா ஒரு மகத்தான அற்புதமாக நிலைத்து நிற்கிறது.

இந்த மாபெரும் கும்பமேளா தொடர்பான செய்திகள் பல்வேறு சமூக ஊடகங்களின் வழியே பரவாலாகப் பகிரப்பட்டன. இமயம் முதல் குமரி வரை மக்கள் சிரத்தையோடும் பக்தியோடும் பங்குபெற்ற இந்த மகோத்சவம் பண்டைய சாஸ்திரங்களையும், ஜோதிட கணிப்புகளையும் உள்ளடக்கி நடந்தது.

ஆச்சர்யமாக, வெளிநாட்டவர் பலரும் இந்த உற்சவத்தில் பங்குகொண்டு பவித்திர ஸ்நானங்களைக் கடைப்பிடித்தார்கள். வெறும் குதூகல நோக்கத்தோடு அன்றி, தார்மிக சிரத்தையோடு இதனை மேற்கொண்டது கவனிக்கத்தக்கது. அவர்களுள் சிறந்த தத்துவவாதிகளும், மேதைகளும், பெரும் செல்வந்தர்களும் அடங்குவர். பீடாதிபதிகளும், உத்தம ஆன்மீக சாதகர்களும், ஸித்த புருஷர்களும் இந்த பவித்திரமான நன்னாட்களில் அங்கு ஒன்றுகூடி ஸ்நானங்களை மேற்கொண்டு, தார்மீக உற்சாகத்தைத் தூண்டினார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் –

ஒருபுறம் உலகனைத்தும் இது குறித்து அறிந்து, போற்றுகையில், நம் நாட்டு ஹிந்து எதிர்ப்பாளர்களும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் இந்த மகா சம்பவம் குறித்த நேர்மறை கருத்தைத் தெரிவிக்க இயலாமல் போகிறார்கள். அதோடு, எதிர்மறையாக வக்கிர வியாக்கியானங்கள் செய்கிறார்கள். இது நம் நாட்டில் நடந்த ஒரு அற்புதம் என்பது தெளிவாகத் தென்பட்டாலும் அந்த உண்மையை அங்கீகரிக்க இயலாமல் புழுங்குகிறார்கள்.

ஹிந்து எதிர்ப்பு சக்திகள் சிலவும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் இதனைச் சரியாக நடக்கவிடக் கூடாது என்று முயன்றன என்ற செய்திகளும் காதில் விழுகின்றன. அவை உண்மைக்குத் தொலைவில் இல்லை.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகா கும்பமேளாவை சிறப்பாக நடத்திய முறையை நேரடியாகப் பார்த்த, சாமானிய மக்களில் இருந்து, பிரமுகர்கள் வரை அனைவரும் வாயாரப் புகழ்ந்து வருகின்றனர்.

எல்லா இடங்களிலும் தூய்மை, சுகாதாரம், குளிப்பதற்கான சிறந்த ஏற்பாடுகள், வசதிகள், உணவு, விருந்தோம்பல் என்று ஒன்றல்ல. அனைத்தும் அற்புதம். நவீன தொழில்நுட்ப விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி, கோடிக்கணக்கான மக்களுக்கு வேண்டிய வசதிகளையும், சுற்றுச்சூழல் தூய்மையையும், குளிக்கும் துறைகளின் ஏற்பாடுகளையும் அமைத்தளித்த முறை பாராட்டுக்குரியது.

இந்தப் பெருமை ஆளும் கட்சிக்குக் கிடைத்து விடுமே என்ற பொறாமையில் அங்கங்கே, சிலர் சிலச்சில சில்லறை சதித் திட்டங்களை தீட்டினாலும், அவற்றை உடனுக்குடன் களைந்து, கட்டுப்படுத்தி, நிகழ்ச்சியை ஈடிணையில்லாத விதத்தில் தடையின்றி நடத்திய முறை பாராட்டுக்குரியது.

நள்ளிரவு தாண்டியபின் சிலருடைய மோசமான அணுகுமுறையாலோ என்னவோ, தள்ளுமுள்ளு நேர்ந்து சிலர் உயிரிழந்தது வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழப்பு இல்லாவிட்டாலும், தீ விபத்தால் கீதா பிரஸ் போன்ற பெருமைக்குரிய அமைப்பின் நூல்கள் எரிந்து சாம்பலானது வருத்தமளிக்கிறது.

இத்தனை பெரிய நிகழ்ச்சியில் இந்த சம்பவம் அளவில் சிறியதானாலும் வருத்தமளிப்பதால், பொறுப்பானவர்கள் முன்வந்து தகுந்த முன்னெச்சரிக்கையோடு, கட்டுதிட்டமாக, மேலும் விழிப்போடு செயல்படுவது நன்மை பயக்கும்.

பாதுகாப்பு விஷயத்திலும், மத வெறியர்கள், அரசியல் வெறுப்பு சக்திகள் போன்றோரிடமிருந்து ஆபத்து நேரக்கூடும் என்ற குறிப்புகளை கவனித்து, உடனுக்குடன் பாதுகாப்புகளை அதிகப்படுத்தி, அமைதிக்கு பங்கம் நேராமல் காப்பற்றியதை கவனித்து, உலகனைத்தும் வியந்து பாராட்டியது.

பத்தாண்டுகளுக்கு முன்பு, வரை, ‘மகா கும்பமேளா’ என்று இல்லாவிட்டாலும், கும்பமேளா போன்ற திருவிழாக்கள் நடந்துள்ளன. அவை எவற்றிலும் காண இயலாத தனித்துவமான சிரத்தையும், ஏற்பாடும், அமைதிக்கான பாதுகாப்பும் இங்கு நிலைகொண்டிருந்ததைக் காண முடிந்தது.

ஊடகங்களின் விஸ்தாரமான பங்களிப்பால், செய்திகள் வேகமாகப் பரவினாலும், நாக சாதுக்களின் விஷயத்தில் அதிக அளவு உற்சாகத்தைக் காட்டி, ஆச்சர்யத்தோடு, சின்னச் சின்ன சேனல்கள் பரபரப்பை ஏற்படுத்தின. ஆயிரக்கணக்கான நாக சாதுக்களின் கூட்டத்தில் ஒரு சில வேஷதாரிகளும் இருக்கலாம். சில ஊடகத்தினர், அவர்களை மட்டுமே காண்பித்து, நாக சாதுக்களைப் பற்றிய சரியான அபிப்பிராயத்தை ஏற்படுத்த இயலாமல் போனார்கள்.

சிலர் தேவையில்லாத பரபரப்புக்காக அப்படிப்பட்டவர்கள் மீதே கேமராவை மையப்படுததினார்கள். அவர்கள் தம் வேலையைப் பார்த்துக் கொண்டு, புனித மகோத்சவத்தில் ஸ்நானம் செய்துவிட்டுத் திரும்பவும் தம் ஏகாந்த வாசத்திற்குச் செல்கின்றனர். அத்தகைய மகநீயர்களை இவ்விதமாகக் குறிவைப்பது சரியல்ல.

எது எப்படியானாலும், பூகோளத்தில் வேறெங்குமே இல்லாத நாக சாதுக்களின் வருகை மகா அற்புதம். அவர்களுக்கென்று தனிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்த விதம் பெருமைக்குரியது.

இந்த சிறப்புகளோடு கூட மற்றுமொரு முக்கிய விஷயம். பிரயாக்ராஜின் அருகில் சற்று தூரத்தில் இருக்கும் வாராணசி, அயோத்தி, சித்திரகூடம் போன்ற க்ஷேத்திரங்களையும் தீர்த்தங்களையும் யாத்திரிகர்கள் பெரிய அளவில் சென்று தரிசித்தார்கள்.

இவற்றின் மூலம் மத்திய, மாநில அரசுகளின் சுற்றுலாத்துறை வருமானமும் அதிகரித்தன. ஆன்மிகத்தை மட்டுமின்றி, முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு கவனிக்க வேண்டிய அம்சம் இது.

ஹிந்து தீர்த்த க்ஷேத்திரங்கள், வியாபார அமைப்புகள், போக்குவரத்து அமைப்புகள் போன்றவை திடமான பொருளாதாரப் பங்களிப்பை அளித்து, நாட்டு மக்கள் அனைவரின் நலனுக்கும் உதவுகின்றன.

எது எப்படியானாலும், நம் தேசத்தின் மகோனந்தமான நிகழ்வாக, மஹா கும்பமேளாவை வர்ணித்துப் பாராட்டுவதில் பெருமை கொள்வோமாக. புஷ்கரங்களை நடத்தும் மகா நதிளைக் கொண்ட மாநிலங்களும், புகழ் பெற்ற திருத்தலங்களுக்கும், ஆலயங்களுக்கும் இருப்பிடமான மாநிலங்களும் இந்த மகா கும்பமேளா நடந்த வைபவத்தை முழுமையாகப் பயிலவேண்டும்.

மக்கள்தொகை அதிகமாவதால், நதி நீர் மாசடையாமல் எவ்வாறு தூய்மையாகப் பாதுகாப்பது என்பதைக் கற்க வேண்டும். அதிக அளவில் மக்கள் கூட்டம் சேரும் நிகழ்சிகளில் தொழில்நுட்ப வசதிகளோடும், கட்டுப்பாட்டோடும், நேர்மையோடும் மனத் தூய்மையோடும் எவ்விதம் நடந்து கொள்வது என்பதை அறிய வேண்டும்.

ஒரு ஆதர்சமான அற்புத நிகழ்ச்சியாக, இனிமையான ஞாபகமாக இந்த உற்சவத்தை நடத்தி முடித்த தலைவர்களைப் பாராட்டியே தீர வேண்டும்.

(தலையங்கம், ருஷிபீடம் மாத இதழ், மார்ச் 2௦25)

கும்பமேளாவில் எட்டிப் பார்த்த தேச ஒற்றுமை

mahakumbamela 2025 crowd foriegn devotees praised - 2026

— ஆர். வி. ஆர்

பிரயாக்ராஜ் நகரில் 45 நாட்களாக நடந்து முடிந்திருக்கிறது மஹா கும்பமேளா. அந்த தினங்களில் திரிவேணி சங்கமத்திற்கு வந்து புனித நீராடிய பக்தர்கள், 66 கோடிக்கு மேல்.

இந்த மஹா பிரும்மாண்ட ஜனத் திரள் நம் நாட்டிற்குத் தெரிவிக்கும் ஒரு பக்கவாட்டுச் செய்தி இது: பாரதத்தில் ஹிந்து மதம், ஹிந்துத் திருவிழாக்கள், போற்றப் படாவிட்டால், தழைக்காவிட்டால், பாரதம் ஒரு நாடாக இணைந்திருக்க முடியாது.

நினைத்துப் பாருங்கள். ஐரோப்பிய யூனியன், 27 ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு. அந்த நாடுகளின் ஓட்டுமொத்த ஜனத்தொகை, சுமார் 45 கோடி – இந்திய ஜனத்தொகையின் மூன்றில் ஒரு பங்கையும் விடக் குறைவு.

ஐரோப்பிய யூனியனின் ஒரு நாட்டில் வசிப்போர் அந்தக் கூட்டமைப்பின் வேறு எந்த நாட்டிற்கும் தடையில்லாமல் சென்று வரலாம், அந்த மற்ற நாட்டில் வேலை பார்க்கலாம், வசிக்கலாம். அவர்கள் கூடுதல் கட்டணமின்றி ஐரோப்பிய யூனியனின் மற்ற நாடுகளில் தங்கள் மொபைல் போனையும் டெபிட் கார்டையும் உபயோகிக்கலாம். ஒற்றை யூரோ நாணயப் புழக்கம் அவர்களுக்கு உண்டு. அப்படி இருந்தும், அந்த 27 நாடுகளும் ஏன் ஒரே நாடாக இணையவில்லை? குறைந்த பட்சம், அவற்றில் மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த இரண்டு அண்டைக் கிறிஸ்தவ நாடுகள் கூட (உம்: பிரான்ஸ், ஸ்பெயின்) ஒரு நாடாக இணையவில்லையே? என்ன காரணம்?

காரணம் இது: ஐரோப்பிய யூனியனின் அநேக நாடுகளுக்கு வேறு வேறு பிரதான மொழிகள் உண்டு, சில கலாச்சார வேறுபாடுகள் உண்டு. சில சரித்திரக் காரணங்களும் உண்டு. இவற்றை மீறி மதம் அவர்களை இணைக்கும் சக்தியல்ல. பாரதத்தின் கதை வேறு.

பாரதத்தின் பல பிரதேசங்களிலும் பல மொழிகள் பேசப்படுகின்றன. சிற்சில பிரதேச கலாச்சார வேறுபாடுகளும் அவைகளுக்குள் உண்டு. பாரதத்தின் வெவ்வேறு பகுதிகளைப் பழைய நூற்றாண்டுகளில் வெவ்வேறு மன்னர்கள் ஆண்டார்கள். வம்சாவழியாக அப்படி வந்திருக்கும் இந்தியர்கள், தற்காலத்தில் ஏன் மொழிகள் அடிப்படையில் தனித்தனி நாடுகளாகப் போக விரும்புவதில்லை? எது அவர்களை பாரதத்தில் ஒன்றாக இணைந்திருக்க வைக்கிறது? இதற்கான விடை: பாரதத்தில் தொன்று தொட்டுப் பரவியிருக்கும் ஹிந்து மதம்.

பாரத ஜனத்தொகையில் ஹிந்துக்கள் சுமார் 80 சதவிகிதம். அவர்கள் பாரத மண்ணை நேசிப்பதற்குக் காரணம், பாரதத்தின் பிரதான ஹிந்து மதம் மற்றும் அதன் புராண இதிகாசங்கள் தொடர்புடைய நிலங்கள், மலைகள், நதிகள், சமுத்திரக் கரைகள் – அந்த இடங்கள் பாரதத்தின் இன்னொரு மொழிப் பிரதேசத்தில் இருந்தாலும், அங்கு சிற்சில மாறான சமூகக் கலாசாரம் தென்பட்டாலும். ஹிந்து பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களும் பாரத மக்களை ஒன்றுபடுத்துகின்றன.

ஹிந்து மக்களின் மன ஒற்றுமையும் தேசாபிமானமும் சட்டத்தின் எதிர்பார்ப்பால் ஏற்பட்டதல்ல. அவை அவர்களுக்குள் கலந்த ஒரு ஆழமான மத உணர்வு.

இன்று பாரதம் ஒரு தேசமாக இல்லாவிட்டால், தமது மதம் நசியும் என்ற உள்ளுணர்வு ஹிந்துக்களுக்கு இருக்கும். அந்த உள்ளுணர்வு பாரதத்தின் மீதான நேசிப்பை அவர்களுக்கு அதிகப் படுத்தும், உறுதிப் படுத்தும் – அது பற்றி அவர்கள் வெளிப்படையாகப் பேசாவிட்டாலும்.

வெளிநாட்டு மதங்களைச் சேர்ந்த இந்தியர்களுக்கு – குறிப்பாக இந்திய இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு – அவர்களின் மத உணர்வின் நீட்சியாக பாரதத்தின் மீது கூடுதல் அபிமானம் இருக்க முடியாது. இது அவர்களிடம் உள்ள குறை என்பதல்ல. அவர்களின் பின்னணியில் இது மனித இயற்கை.

பாரதத்தின் மிகப் பெருவாரியான ஹிந்துக்களின் மத உணர்வை, பாரத நிலப் பரப்பின் மீது அவர்களுக்கு இருக்கும் மத உணர்வு கலந்த அபிமானத்தை, பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உணரவில்லை. அதை உணராத, உணர்ந்து போற்றாத, அரசியல் தலைவர்கள் தேசத்திற்கு நல்லது செய்யவில்லை, இன்று தேசம் ஒன்றுபட்டிருக்கும் முக்கிய காரணத்தை உதாசீனம் செய்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மஹா கும்பமேளா நடக்கும் போது “கங்கையில் மூழ்கி எழுந்தால் நாட்டில் வறுமை நீங்குமா?” என்று பொது மேடையிலிருந்து, யாரையோ இடிப்பதாக நினைத்துக் கொண்டு, பித்துக்குளித் தனமாகக் கேட்டார். அதற்கும் முன்பு, திமுக-வின் உதயநிதி ஸ்டாலின், “டெங்கு, மலேரியா, கொரோனா போல் சனாதனத்தை முற்றிலும் ஒழிக்கவேண்டும்” என்று பிதற்றினார்.

பாஜக-வை எதிர்க்கும் பிற முக்கிய எதிர்க் கட்சிகளும் ஹிந்து மதம் பற்றி அசிரத்தையாக இருக்கிறார்கள் – அப்படிக் காட்டிக் கொண்டால் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்களுக்குப் பிடிக்கும், அதன் மூலம் சாதாரண இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஓட்டுக்களைக் கொத்தாகப் பெறலாம் என்ற நப்பாசையில்.

எதிர்க் கட்சிகள் ஹிந்துக்களை இகழ்வதையும் உதாசீனம் செய்வதையும் தொடர்ந்து, நாட்டில் போகப் போக ஹிந்துக்களின் எண்ணிக்கை பெரிதும் குறைகிறது, அவர்களின் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களின் பிரபல்யம் தேய்கிறது, என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அனைத்து இந்திய மக்களையும் எது இணைக்கும், எது நாட்டின் மீதான அபிமானத்தை அவர்களிடம் தக்க வைக்கும்? அந்த வேலையை அரசியல் சட்டம் சுளுவாகச் செய்யும் என்று யாரும் அப்பாவியாக நினைக்க வேண்டாம். அப்போது மாநிலங்களில் என்ன நடைபெறலாம்?

அந்த நிலையில் ஸ்டாலின் மாதிரி வேறொருவர் தமிழக முதல்வராக இருந்தால், திராவிட மாடலைக் குப்பையில் தள்ளிவிட்டு, ‘தமிழ்நாடு மாடல்’ அரசு நடத்தித் தனிநாடு பற்றி யோசிப்பார் – அது நடந்தேறும் சாத்தியமும் உண்டு. மம்தா பானர்ஜி மாதிரியான மற்றொரு மேற்கு வங்க முதல்வர், அந்த மாநிலத்தைத் தனி நாடாக்க முயல்வார் – சி. பி. ஐ தொல்லை போகட்டும் என்பதற்காகவே – அவரும் வெற்றி பெறலாம். ஹிந்துக்களின் எண்ணிக்கை நாட்டில் வெகுவாகக் குறைந்தால், அல்லது ஹிந்து மத உணர்வுகளுக்கு வடிகால் தடைப்பட்டு அவை மங்கினால், இவை நிகழும் வாய்ப்புகள் அதிகம். அப்போது சட்டம் ஒதுங்கி நிற்கும் அபாயம் உண்டு.

இந்த சாத்தியங்கள் பாஜக-வை எதிர்க்கும் பல கட்சித் தலைவர்களுக்குத் தெரியாமலா இருக்கும்? தெரிந்திருக்கும். சிறுபான்மை மதத் தலைவர்களைப் பிரீதி செய்தால் மட்டும் போதாது, மாநில ஆட்சிகளில் கட்டற்ற சுதந்திரம் கிடைக்க மற்ற வகையிலும் பார்க்க வேண்டும், அது எப்படியும் நடக்கட்டும், என்று ஓரக் கண்ணில் சிலர் கனவு கண்டால் என்ன செய்வது?

66 கோடி ஜனங்கள் மஹா கும்பமேளாவில் செய்த பிரார்தனை பாரதத்தையும் வளப்படுத்தும், ஒன்றாக வைத்திருக்கும், என்று நாம் நம்பிக்கை கொள்ளலாம். அது வீண் நம்பிக்கை ஆகாது என்று நம்மை ஆறுதல் படுத்த, வீறு கொண்ட ஒரு கட்சி பளிச்சென்று தெரிகிறதே?


Author: R. Veera Raghavan – Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com


சாம்பியன்ஸ் ட்ராபி: நியூஸி.,யை வென்று அரையிறுதியில் ஆஸி.,யை சந்திக்கும் இந்திய அணி!

champions trophy - 2026

சாம்பியன்ஸ் ட்ராபி – இந்தியா- நியூசிலாந்து – 02.03.2025

இந்திய அணி அபார வெற்றி

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இந்திய அணி (249/9 ரன், ஷ்ரேயாஸ் ஐயர் 79, அக்சர் படேல் 49, ஹிருதிக் பாண்ட்யா 45, ஹென்றி 5/42, ஜேமிசன், ரூர்கி, சாண்ட்னர், ரவீந்திரா தலா ஒரு விக்கட்) நியூசிலாந்து அண்யை (45.3 ஓவர்களில் 205, கேன் வில்லியம்சன் 81, மிட்சல் சாண்ட்னர் 28, வில் யங் 22, வருண் சக்ரவர்த்தி 5/42, குல்தீப் யாதவ் 2/56, பாண்ட்யா, அக்சர் படேல், ஜதேஜா தலா ஒரு விக்கட்) 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற நியூசிலாந்து அணியின் அணித்தலைவர் மிட்சல் சாண்ட்னர் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா (17 பந்துகளில் 15 ரன்) மற்றும் ஷுப்மன் கில் (7 பந்துகளில் 2 ரன்) ஆறு ஓவர்கள் முடிவதற்குள் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து விராட் கோலியும் (14 பந்துகளில் 11 ரன்) விரைவில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் (98 பந்துகளில் 79 ரன்) ஆட்டத்தில் அணி எழுச்சி பெற்றது. அவருக்கு அக்சர் படேல் (61 பந்துகளில் 42 ரன்) கே.எல். ராகுல் (29 பந்துகளில் 23 ரன்) துணையிருந்தனர். ஹார்திக் பாண்ட்யா (45 பந்துகளில் 45 ரன்) 48ஆவது ஓவரில் அதிரடியாக இரண்டு ஃபோர், ஒரு சிக்சர் அடித்து அணியின் ஸ்கோர் உயர வழிசெய்தார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி ஒன்பது விக்கட் இழப்பிற்கு 249 ரன் எடுத்தது.  

          வெற்றிக்கு 250 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி ஆடத்தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் மிகச் சுமாரான தொடக்கம் தந்தனர். ரச்சின் ரவீந்திரா (6 ரன்) 4ஆவது ஓவர் முடிவில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான வில் யங் (22 ரன்) 12ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.  கேன் வில்லியம்சன் (81 ரன்) 41 ஓவர்கள் வரை விளையாடி, 81 ரன்கள் எடுத்தார்.

மற்ற வீரர்களான டரில் மிட்சல் (35 பந்துகளில் 17 ரன்), டாம் லேதம் (20 பந்துகளில் 14 ரன்), கிளன் பிலிப்ஸ் (8 பந்துகளில் 12 ரன்), ப்ரேஸ்வெல் (2 ரன்), சாண்ட்னர் (31 பந்துகளில் 28 ரன்), மேட் ஹென்றி (2 ரன்), அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்தியா இன்று நான்கு சுழல் பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. நால்வரும் அருமையாக பந்துவீசினர்.

நியூசிலாந்து அணி வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் தவித்தனர். அவர்களுள் வருண் சக்ரவர்த்தி ஐந்து விக்கட்டுகள் வீழ்த்தி சாதனை புரிந்தார். நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 205 ரன் எடுத்தது. இதனால் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.  

          குரூப் ஏ பிரிவில் இந்தியா அணி மூன்று ஆட்டங்கள் ஆடி மூன்றிலும் வெற்றி பெற்று, ஆறு புள்ளிகளுடன் குரூப்பில் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி இரண்டு ஆட்டங்களில் வென்று 4 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. வங்கதேச அணி மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெறவில்லை.

          குரூப் பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா (5 புள்ளிகள்), மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் (4 புள்ளிகள்) புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை.

          முதல் அரையிறுதி ஆட்டம் மார்ச்சு 4ஆம் தேதி துபாயில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெறும். இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நியூசிலாந்து தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே மார்ச்சு ஐந்தாம் தேதி லாகூரில் நடைபெறும்.   

          இன்றைய ஆட்டத்தில் ஆட்டநாயகனாக வருண் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டார்.      

நிர்வாக சீர்கேட்டை மறைக்கவே, இல்லாத இந்தித் திணிப்பை பேசுகிறார் ஸ்டாலின்! 

annamalai bjp tn leader - 2026

”தமிழகத்தில் தனது ஆட்சியில் நிலவும் நிர்வாக சீர்கேட்டை மடைமாற்றத்தான், இல்லாத ஹிந்தித் திணிப்பை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். இதனை மக்கள் ஏற்கவில்லை” என்று, தமிழக பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூகத் தளப் பக்கங்களில் விவரம் வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கை குறித்து திமுக., மற்றும் பாஜக., இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. 

இந்நிலையில்,  தம் கட்சித் தொண்டர்களுக்கு திமுக., கட்சித் தலைவரும், திமுக., அரசின் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்… 

வட மாநிலங்களில் டீ, பானி பூரி வாங்கவும், கழிப்பறை பயன்படுத்தவும் ஹிந்தியை கற்றுக் கொள்வது அவசியம் என பா.ஜ.,வினர் சொல்கின்றனர். செயற்கை நுண்ணறிவு காலத்தில், பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை திணிப்பது தேவையற்றது. நவீன மொழிபெயர்ப்பு கருவிகள், மொழிப்பிரச்னை என்ற தடையை அகற்றிவிட்டன. கூடுதல் மொழி என்ற சுமையை மாணவர்கள் மீது ஏற்றக்கூடாது. அவர்கள் தாய்மொழியில் புலமை பெறவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற ஆங்கிலம் கட்டாயம். விருப்பப்பட்டால் வேறு எந்த மொழியையும் கற்றுக் கொள்ளலாம். – என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘எக்ஸ் ‘ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: 

https://twitter.com/annamalai_k/status/1895392350744281334

இல்லாத ஹிந்தித் திணிப்பைக் கூறி, தமிழகத்தில் நிலவும் நிர்வாக சீர்கேட்டை மறைக்க தான் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பெயிண்ட் டப்பாவை ஏந்திய சிலரைத் தவிர வேறு யாருக்கும் பிடிக்கவில்லை என்பதை முதல்வர் ஸ்டாலின் இன்னும் உணரவில்லை.

தனது கட்சியின் பொதுச்செயலாளர் பேச்சை ஸ்டாலின் தவற விட்டுவிட்டது போல் தெரிகிறது. அவர்தான் ஹிந்தியை முன்னிறுத்துகிறார். தேசிய கல்விக் கொள்கை மும்மொழிக் கொள்கையைத் தான் வலியுறுத்துகிறது. இதன்படி எந்த இந்திய மொழியையும் மூன்றாவது மொழியாகப் படிக்கலாம்.

எங்களின் கேள்வி எளிதானது. மாநிலத்தில் இரு வேறு விதிகள் ஏன்? தனியார் பள்ளி மாணவர்கள் மூன்றாவது மொழி படிக்க வாய்ப்பு உள்ள போது, அதனை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க மறுப்பது ஏன்? 

இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், திமுக., பொதுச்செயலர் துரைமுருகன் முன்பு கூட்டம் ஒன்றில் பேசிய வீடியோ ஒன்றையும் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில் துரைமுருகன், ” பார்லிமென்டிற்கு போக வேண்டும் என்றால் பேசத் தெரிய வேண்டும். பேச வேண்டும் என்றால், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் கட்டாயம் பேசத் தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம்,” எனக் கூறியுள்ள துரை முருகன், இவ்வாறு இரு மொழியும் தெரியாத எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தில் என்ன விதமான நடத்தையில் இருப்பார்கள் என்றும், அவர்கள் படும் பாடு குறித்தும் துரைமுருகன் நகைச்சுவையுடன் சொல்லியிருப்பார். இந்த வீடியோ முன்பே வைரலானது. இந்த வீடியோவை இப்போது பதிவிட்டுள்ள அண்ணாமலை, இது குறித்து ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலியல் வன்முறையில், மூன்றரை வயது சிறுமியின் பக்கம் தவறாம்: சர்ச்சை கிளப்பிய ஆட்சியர் மாற்றம்!

mayiladurai collector speech - 2026

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி மீது தவறு இருப்பதாக, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்றரை வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய இளவயது நபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பிப்.28 வெள்ளி இன்று நடைபெற்ற போக்சோ தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகா பாரதி பேசியபோது,  கடந்த வாரத்தில் நடந்த சம்பவத்தில் அந்தக் குழந்தையே தப்பா நடந்திருக்கிறது. அது நீங்க கவனிச்சு பார்த்தீங்கன்னா தெரியும். எனக்குக் கிடைச்ச ரிப்போர்ட்படி, காலையில் அந்தப் பையன் முகத்தில் குழந்தை துப்பி இருக்கிறது. அதுதான் காரணம். இரண்டு பக்கமும் பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தடுப்பு தான் முக்கியம். பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – என்று பேசினார்.  

ஆட்சியரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மூன்றரை வயதுக் குழந்தைக்கு என்ன தெரியும் என்று, அக்குழந்தை தவறு செய்திருக்கிறது என்றும், எச்சில் துப்பியதால் பதிலுக்கு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகக் கூறி, குற்றத்தை நியாயப் படுத்தலாமா என்றும் சமூகத் தளங்களில் பலர் கேள்வி எழுப்பினர். மேலும், பாதகம் செய்பவரைக் கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா, மோதி மிதித்து விடு பாப்பா, முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என்று பாப்பா பாட்டு பாடிய பாரதியின் பெயரைப் பாதியாக வைத்துக் கொண்டிருக்கும் ஆட்சியர் மகா பாரதி, இவ்வாறு எச்சில் துப்பியதால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக, அதுவும் ஒரு சிறுகுழந்தையைக் கை காட்டிப் பேசுவது அறிவுக்கு உகந்த செயலா என்று கேள்வி கேட்டு வருகின்றனர். 

இதனிடையே, தனது பேச்சினால் சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து, ‘குழந்தைகளுக்கு பெற்றோர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே தான் அவ்வாறு பேசியதாக’ ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் பேச்சுக்கு தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சீர்காழியில், மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து மயிலாடுதுறை ஆட்சியர்,  அந்தக் குழந்தையின் மீதும் தவறு இருக்கிறது என்று முற்றிலும் பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கிறார். அவருக்கு, தமிழக பாஜக சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெண்களும், பள்ளி மாணவிகளும், குழந்தைகளும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில், முதலமைச்சரும், அமைச்சர்களும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோட்டு, அவர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டதன் தொடர்ச்சியே, மாவட்ட ஆட்சியரின் இந்த முட்டாள்தனமான பேச்சுக்குக் காரணம். 

விளம்பர நாடகங்களை அரங்கேற்றி, தனக்குத்தானே பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கனவுலகில் சஞ்சரிக்கும் முதலமைச்சர் திரு. ஸ்டாலின், எப்போதுதான் இயல்பு நிலைக்கு வருவார் – என்று குறிப்பிட்டார். 

இதை அடுத்து, மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. புதிய ஆட்சியராக ஶ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பில், சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக, சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு எழுந்த நிலையில் ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

பிரதமர் மோடி, அண்ணாமலையை தவறாக சித்திரித்து வீடியோ வெளியிட்டவரை கைது செய்க: பாஜக., ஆர்ப்பாட்டம்!

madurai bjp protest - 2026

பிரதமர் மோடி, அண்ணாமலையை தவறாக சித்திரித்து வீடியோ வெளியிட்ட பசும்பொன் பாண்டியனை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

பிரதமர் மோடி குறித்தும் தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை குறித்தும் தவறாக பேசி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியதை தொடர்ந்து, பாஜகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடியையும் பாஜக தலைவர் அண்ணாமலையும் தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட பசும்பொன் பாண்டியனை, காவல்துறை
இதுவரை கைது செய்யவில்லை. அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மதுரை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சிவலிங்கம் தலைமையில் திருமங்கலம் ராஜாஜி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, பசும்பொன் பாண்டியனை கைது செய்ய வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனைத்
தொடர்ந்து, திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட பசும்பொன் பாண்டியனை உடனடியாக கைது செய்ய வேண்டும் தவறும் பட்சத்தில் பாஜக தொண்டர்கள் அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து, காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மேற்கு மாவட்டத்
தலைவர் சிவலிங்கம் தமிழக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் குறித்துபேசினால் உடனடியாக கைது நடவடிக்கையில் ஈடுபடும் தமிழக காவல்துறை பாரதப் பிரதமரையும் பாஜக தலைவரின் தவறாக சித்தரித்துவீடியோ வெளியிட்டு தொடர்பாக காலையிலேயே புகார் அளித்தும்
இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே, பிரதமர் குறித்து தவறாக வீடியோ வெளியிட்ட அந்த நபரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, திமுகவினரும் திமுக நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகளில் அனைத்து மொழிகளையும் கற்பிக்கிறார்கள் ஆனால் மற்ற யாரும் ஹிந்தி கற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்காக திமுக.,வினர் எதிர்க்கிறார்கள் என, தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், துணைத் தலைவர் சரவணகுமார், மாவட்ட பொதுச்
செயலாளர் பாரதிராஜா, மாவட்டச் செயலாளர்கள் தமிழ்மணி, சின்னச்சாமி, இளையராஜா, நகர தலைவர் சசிகுமார் உடன் இருந்தனர்.