Home Blog Page 171

மதுரை: மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழா!

madurai magichi school gokulashtami - 2026
#image_title

மதுரை அச்சம்பத்து பகுதியில் உள்ள எஸ்.வி.கே நகரில், மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக, சிறப்பாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. நிகழ்வில் செல்வி பிரீத்தி ஜெனிபர் வரவேற்றார். பள்ளி நிறுவனர் சார்லஸ் ராஜ்குமார் தலைமை வகித்தார். தாளாளர் நித்யா தேவி முன்னிலை வகித்தார்.

பள்ளி மழலை குழந்தைகள் கிருஷ்ணர், ராதை மற்றும் கிருஷ்ணன் என மாறு வேடங்கள் அணிந்து காட்சியளித்தனர். கண்ணனுக்கு படையல் வைத்து பூஜைகள் செய்து விழாவைக் கொண்டாடினா். விழாவில், ராதை, கிருஷ்ணா் வேடங்களில் வந்திருந்த திரளான குழந்தைகள் நடனமாடியும், பஜனைகள் பாடியும் விழாவை சிறப்பித்தனா். கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறுகளை குழந்தைகளுக்கு ஒலி ஒளி காட்சிகள் மூலமாக தாளாளர் நித்யா தேவி கதைகளாக கூறினார்.

மழலையர்களுக்கு இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாட்டினை ஜெயலட்சுமி, சுபா மற்றும் ப்ரீத்தி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் கெவின் குமார் நன்றி கூறினார்.

‘ஒரு பிடி அவல்’ எனும் குறியீடு!

srikrishna sudhama - 2026
#image_title

ஒரு பிடி அவல் கொடுத்த குசேலருக்கு கிருஷ்ணர் என்ன கொடுத்தார் தெரியுமா?

கிருஷ்ணன் நட்புக்கு மதிப்பளிப்பவன். நண்பர்களுக்காக எல்லாம் செய்வான். கேட்காமலேயே கொடுப்பான். நண்பர் குசேலரின் ஏழ்மையைப் போக்க அவர் பெற்றது என்னவோ ஒரு பிடி அவல் தான்!

கிருஷ்ண ஜயந்தி நாளில் குழந்தைக் கண்ணனுக்குப் பிடித்தமான அவலும் வெண்ணெயும் கொடுத்து வணங்கினால் போதும் கேட்காமலேயே எண்ணற்ற செல்வங்களைத் தருவார் கிருஷ்ணர் எனும் வாக்கியம் மெய்யாகக் காரணமாக இருந்தவர் சுதாமா எனும் குசேலர்!

கோகுலத்தில் சிறுவயதில் கிருஷ்ணன் எத்தனையோ லீலைகளைச் செய்தாலும் துவாரகை மன்னராக அரசாட்சி செய்தபோது நடத்திய லீலை அற்புதமானது. அதுவே குசேலோபாக்கியானம் எனும் சரிதம் வரும் குசேலரின் சரிதத்தில் சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

அதென்ன மன்னனாக லீலை! இந்த லீலையில் முக்கியமானது, மன்னராக இருந்த போது, தன் பால்ய சிநேகிதர் குசேலருக்கு கேட்காமலேயே செல்வத்தை அள்ளிக் கொடுத்து அவரின் வறுமையைப் போக்கியது! அதற்கு அன்பாக குசேலர் கொடுத்த அந்த ஒரு பிடி அவலே போதும் என்று காட்டியது!. அதன் மூலம் போதும் போதும் என்று சொல்லுமளவிற்கு ஏழைக் குசேலருக்கு செல்வத்தை அள்ளிக்கொடுத்தான் கண்ணன்!

கிருஷ்ணருக்கு விளையாட்டுப் பருவத்தில் நிறைய நண்பர்கள் இருந்தாலும் அவருடைய பால்ய நண்பர்களில் சுதாமா எனப்படும் குசேலர் குறிப்பிடத் தக்க ஒருவர். இருவரும் ஒன்றாக சாந்தீபினி மகரிஷியின் குருகுலத்தில் ஒன்றாக இருந்து கல்வி கற்றார்கள். குருகுல வாசம் முடிந்த பிறகு, இருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்று அவரவர் தொழிலில் ஈடுபட்டார்கள்.

சுதாமாவும் திருமணம் செய்துகொண்டு நிறையக் குழந்தைகளையும் பெற்றார். அவருக்கு பிள்ளைச் செல்வம் அதிகம் ஆனதால், அவர்களை வளர்க்க வேண்டிய அளவுக்கு பொருள் செல்வம் கிட்டவில்லை. அதனால் வறுமையில் வாடினார். கட்டிய வேட்டியும் கிழிந்து தொங்கி அதை தையல் போட்டே காலம் ஓட்டினார். இப்படி தையல் போட்ட ஓட்டை வேடியைக் கட்டிக் கொண்டிருந்ததால் இவருக்கு குசேலர் என்று பெயர் சொல்லி அழைத்தனர் உள்ளூர்வாசிகள். குசேலரின் மனைவியோ, எப்படியாவது இந்த வறுமை நீங்கி வசதியோட வாழ வேண்டுமென ஆசைப்பட்டாள்.

சுதாமாவும் தன் மனைவியிடம் குரு குலவாசத்தில் இருந்த போது ஸ்ரீ கிருஷ்ணனிடம் கொண்டிருந்த நட்பையும் அப்போதைய விளையாடல்களையும் சொல்லி மகிழ்வார். அந்நேரம் ஸ்ரீ கிருஷ்ணர் அரசனாக இருந்ததால் சுதா அம்மாவின் மனைவிக்கு ஒரு எண்ணம் தோன்றியது. உங்கள் பால்ய சிநேகிதரான நம் மன்னர் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து உங்கள் வறுமையை போக்க ஏதாவது உதவி கேட்டு வரக்கூடாதா என்று சுதாமாவை நச்சரிக்கத் தொடங்கினாள்!

தனது பால்ய நண்பரிடம் போய் எப்படி தான் வறுமையில் வாடுவதாக சொல்லி உதவி கேட்டு நிற்பது என்று பெரும் தயக்கம் சுதாமாவுக்கு ஏற்பட்டது. அப்படியே மனைவி சொல்லைக் கேட்டு அவரிடம் போய் நின்றாலும் அவருக்கென்று கொடுப்பதற்கு ஏதாவது வேண்டுமல்லவா? ஒரு மன்னரை பார்க்கச் செல்லும் பொழுது நன்றாக உடை உடுத்தி செல்ல வேண்டும் அல்லவா? இந்த கந்தல் உடையுடன் சென்றால் வாயில் காப்போன் கூட விரட்டி விடுவானே! கிருஷ்ணரைப் பார்ப்பதற்குக் கூட வாய்ப்பில்லாமல் போய்விடுமே என்று பெரிதும் தயங்கினார் சுதாமா.

அவரது தயக்கத்தை போக்கிய அந்தப் பெண்மணி நிச்சயம் கிருஷ்ணர் உதவுவார் என்ற நம்பிக்கை அளித்து வீட்டில் வேறொன்றும் இல்லாததால் ஏதோ சிறிது வைத்திருந்த அவலை எடுத்து ஒரு கந்தல் துணியில் கட்டி அதை கிருஷ்ணருக்கு அளிக்குமாறு சொல்லி சுதாமாவை அனுப்பி வைத்தாள்!

குசேலரும் துவாரகைக்குச் சென்று சேர்ந்தார். அரண்மனையில் வாயில் காப்போனிடம் தான் ஸ்ரீ கிருஷ்ணரின் பால்ய சினேகிதர் என்று சொல்லி, அவன் தயவில் அரண்மனைக்குள் புகுந்தார். கந்தல் மூட்டையுடன் நின்ற இளவயது நண்பனைக் கண்ட கிருஷ்ணரும் அன்போடு வந்து வரவேற்றார். அவரை உள்ளே அழைத்துச் சென்று, உயர்ந்த ஆசனத்தில் அமரவைத்தார் கிருஷ்ணர். தனது மனைவி ருக்மிணியை அழைத்து வந்து, குசேலரை அறிமுகமும் செய்து வைத்தார்.

உணவு உபசாரங்கள் எல்லாம் முடிந்த பின் பழைய கதைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போதும் கூட குசேலர் தாம் வந்த காரணத்தைச் சொல்லவில்லை. அவரால் அதைச் சொல்லவும் முடியவில்லை. அந்நேரம், அவருக்காக பிடிக்குமே என்று அவல் கொண்டு வந்திருப்பதையும் தெரிவிக்க முடியவில்லை. தம்மை இவ்வளவு உயர்வாக உபசரித்த கிருஷ்ணருக்கு கேவலம் இந்தக் கந்தல் துணியில் கட்டி வைத்திருக்கும் அவலையா உண்ணக் கொடுப்பது என்று நினைத்தார் குசேலர்.

கிருஷ்ணரோ ஒன்றும் தெரியாதவர் போல, குசேலரைப் பார்த்து நீங்கள் வரும் போது உங்கள் மனைவியார் எனக்காக ஒன்றும் கொடுத்து அனுப்பவில்லையா? அவர் நலம்தானே? என்றெல்லாம் விசாரித்தார். பின்னர் அவராகவே குசேலர் தமது துணியில் முடிந்து வைத்திருந்த மூட்டையைப் பார்த்து, இது என்ன என்று கேட்டவாறே அதை வெடுக்கென்று பிடுங்கிப் பார்த்தார். பின்னர் சிரித்துக் கொண்டே சுதாமா, எனக்குப் பிடித்தமான அவலைக் கொண்டு வந்துள்ளீரே என அதில் ஒரு வாய் அள்ளிப் போட்டு சுவைத்தார். அடுத்து ஒரு பிடி அவலை எடுக்கும் போது ருக்மிணி அதை அவரிடம் இருந்து தட்டிப் பறித்து, தமது வாயில் போட்டு சுவைத்தார்.

ஆனால், இப்படிப்பட்ட மகாராணி, ராஜாவிடம் போய் கேவலம் இந்த அவலையா கொடுத்தோம் என கூனிக் குறுகியவாறே, குசேலரும் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு, தமது ஊருக்குக் கிளம்ப ஆயத்தமானார். மனத்துக்குள், தாம் கேட்க வந்ததை விட பெரும் பாக்கியமான அந்தப் பரந்தாமனின் அருகில் சிறிது நேரம் கழிக்க முடிந்ததே தமக்குப் போதும் என தம்மை சமாதானப்படுத்திக் கொண்டார்.

அதன் பின் ஒருவாறு மனம் சமாதானமடைந்து, வீடு திரும்பிய குசேலருக்கு அவரது வீட்டை அடையாளம் காண முடியவில்லை. தன் வீடு இருந்த இடத்தில் ஏதோ ஒரு மாளிகை இருந்தது. அடையாளமே தெரியாத அளவிற்கு அந்த வீடு மாறியிருந்தது. செல்வச் செழிப்போடு திகழ்ந்ததை கண்டு தான் இடம் மாறி வந்து விட்டோமோ என்று. அவருக்கு ஒரு கணம் திகைப்பு ஏற்பட்டது. ஆனால் தன் குழந்தைகளும் மனைவியும் வெளியில் வந்து பார்த்த போது தான் அது தம் வீடு என்பதை உணர்ந்தார் சுதாமா. தாம் கேட்காமலேயே தமது வறுமையைத் தீர்த்து வைத்த கண்ணனை மனதார நினைத்து வாழ்த்தினார். அதன் பிறகு தமது வாழ்க்கையில் வறுமை என்பதே இல்லாமல், பகவானின் அனுக்கிரகத்தால் தமது மனைவியோடும் குழந்தைகளோடும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்.

இதுவே குசேலோபாக்கியம் எனும் சரித்திரமாக ஸ்ரீமத் பாகவதத்தில் சிறப்புடன் போற்றப்படுகிறது. கண்ணன் எளிமையானவன். எளிமையான தூய அன்புடன் அமைந்த நிவேதனமும் பிரார்த்தனையும் அவருக்கு போதுமானது என்பதை விளக்கும் அருமையான சரித்திரமாக இது அமைந்திருக்கிறது. நட்புக்கு மரியாததை கொடுக்கும் பகவான் கிருஷ்ணர் கேட்டவர்களுக்கு மட்டுமல்ல கேட்காதவர்களுக்கும் வரமளிப்பவன் என்பதை இந்த சரித்திரம் உணர்த்துகிறது!

இங்கே ஒரு பிடி அவல் என்பது ஒரு குறியீடு தான். ஒன்றைக் கொடுத்து ஒன்றை பெறுதல் எனும் வணிக நோக்கிலான பக்தி பகவானிடம் செல்லாது. தூய அன்புடன் அர்ப்பணிப்பு மனோபாவத்துடன் பெருமானுக்கான சமர்ப்பணம் என்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிடிக்குமே என்ற எண்ணத்தில் தன்னிடம் இருந்த அந்தக் கொஞ்சம் அவலையும் மூட்டை கட்டி எடுத்து வந்த குசேலர், இதன் பின்னுள்ள தத்துவ ரகசியத்தை வெளி காட்டினார். அதனால் தான் ஸ்ரீ கிருஷ்ணர் பின்னாளில் பகவத் கீதையில் பத்ரம் புஷ்பம் பலம் தோயம் எனும் ஸ்லோகத்தில், ஒருவன் பக்தியுடன் எனக்கு இளையோ பூவோ பழமோ நீரோ எதை அர்ப்பணம் செய்தாலும் அவன் தரும் பொருளை நான் பார்ப்பதில்லை அவனது அன்பான தூய மனதைத்தான் பார்க்கிறேன் என்று உரைத்தார்.

எல்லாம் நிறைந்திருக்கும் பகவானிடம் நாம் எதைக் கொடுத்து அவரை திருப்தி செய்ய முடியும்? அவருக்கு உடைமையான இந்த உள்ளத்தை அவரிடம் சமர்ப்பித்தே அவர் அருளைப் பெற முடியும் என்பதை உணர்த்தியது தான் ஒரு பிடி அவல் எனும் இந்த சுதாமாவின் சரித்திர தத்துவம்!

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்!

ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி சிறப்புத் தகவல்கள்!

narayana patathri guruvayur krishnan - 2026
#image_title

துவாபர யுகம் தொடங்கும் முன்பாக பூமியில் அசுரர்களின் அட்டகாசம் அதிகரித்தது. பூமியில் பாரம் தாங்க முடியாத பூமா தேவி இறைவன் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட தானும், ஆதிசேசனும் அவதரிப்போம் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.

துவாபர யுகத்தில் ஆதிசேசன் பலராமனாகவும், மகாவிஷ்ணு கிருஷ்ணராகவும் அவதரித்தனர். பூவுலகில் எப்போதெல்லாம் அதர்மம் தலை எடுக்கிறதோ அப்போதெல்லாம் தர்மத்தை காக்கவும் அதர்மத்தை அழிக்கவும் இறைவன் யுகங்கள் தோறும் அவதரிக்கிறார்.

ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திர நாளில் பகவான் கிருஷ்ணர் அவதரித்தார். இந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி கிருஷ்ண ஜயந்தி கொண்டாடப்படுகிறது.

பகவான் மகாவிஷ்ணு 10 அவதாரங்கள் மூலம் உயிரினங்களை காக்கும் முக்கியப் பணியைச் செய்துள்ளார். தன்னுடைய 9வது அவதாரமான கிருஷ்ண அவதாரத்தை தான், கிருஷ்ண ஜெயந்தியாக நாம் கொண்டாடுகின்றோம்.

10வது அவதாரம் கலியுகம் முற்றும் போது கல்கி அவதாரமாக எடுப்பார் என புராணங்கள் தெரிவிக்கின்றன. அப்படிப்பட்ட முக்கிய காக்கும் தொழிலை செய்ய அவதரித்த கிருஷ்ணரை வரவேற்கும் விதமாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ணர் அவதாரம்:

அஷ்டமி திதியானது ஆகஸ்ட் 26 ஆம் தேதி காலை 9:13 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 27ஆம் தேதி காலை 7:30 வரை உள்ளது. அதே சமயம் ரோகிணி நட்சத்திரமானது, ஆகஸ்ட் 26 ஆம் தேதி இரவு மாலையில் தொடங்கி, ஆகஸ்ட் 27 ஆம் தேதி மாலை வரைக்கும் ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. அஷ்டமி திதியும் இணைந்து வரும் நேரம் இரவு நேரம் என்பதால், அது கிருஷ்ணன் அவதரித்த நாளாக கருதப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் 26 ஆம் தேதி நள்ளிரவில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு செய்வதற்கு உகந்த நேரமாக கருதப்படுகிறது.

கிருஷ்ண ஜயந்தி விரதம் :

இந்த நாளில் நாம் கிருஷ்ணரை முழு மனதுடன் விரதம் இருந்து வேண்டினால், நம்மை காத்து அருளுவார். கிருஷ்ணரின் மிக தீவிர பக்தர்கள் உணவு, நீர் இல்லா விரதம் மேற்கொள்கின்றனர். கிருஷ்ண ஜெயந்தி அன்று காலை முதல் உணவு, நீர் என எந்த ஒரு வகையான உணவையும் எடுத்து கொள்ளாமல் விரதம் இருப்பது வழக்கம். சரியாக அஷ்டமி திதி நடக்கும் நாளின் இரவு 12 மணிக்கு கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை, பிரசாதங்கள் படைத்த பின்னர் தன் விரதத்தை முடிப்பது வழக்கம்.

கிருஷ்ணருக்கு நிவேதனம் :

வீட்டின் நுழைவாயிலில் குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை அரிசி மாவால் பதியச் செய்ய வேண்டும். கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அதில் துளசி இருந்தால் இன்னும் சிறப்பு. பிறகு கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணை, அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும். சீடை, முருக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவுகளை வைக்க வேண்டும். கிருஷ்ணர் பிறந்தது நள்ளிரவு என்பதால் பூஜையை மாலையில் செய்ய வேண்டும். பாத கோலம் போட்டு அலங்கரித்தால் குட்டிக்கண்ணன் நம் வீடு தேடி வருவான் என்பது நம்பிக்கை.

எப்படி விரதம் இருப்பது :

கிருஷ்ண ஜெயந்தி நாளில் விரதம் இருப்பவர்கள் உணவு ஏதும் சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல் விரதம் இருக்கலாம். வயதானவர்கள் மருந்து எடுத்துக் கொள்பவராக இருந்தால் பழங்களை மட்டும் சாப்பிடலாம். அதுபோல அரிசியில் சமைத்து உணவை தவிர ஜவ்வரிசி கஞ்சி சப்பாத்தி போன்றவற்றை சாப்பிடலாம். அதுமட்டுமின்றி, அந்நாளில் விரதம் இருப்பவர்கள் தேவைப்படுபவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை தானமாக செய்வது மிகவும் நல்லது என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

இப்படி செய்தால் வாழ்க்கையில் சந்தோஷம் நிலைத்திருக்குமாம். அந்நாளில் பசுக்களுக்கு உணவு அளிப்பது புண்ணியமாக கருதப்படுகிறது.விரதம் இருப்பவர்கள் நாள் முழுவதும் சோர்வாக இல்லாமல் முழு ஆற்றலுடன் இருக்க பழங்கள் மற்றும் உலர் பழங்களை சாப்பிடலாம்.

  • என்ன சாப்பிடக்கூடாது :

கிருஷ்ண ஜெயந்தி நாளில் விரதம் இருப்பவர்கள் டீ மற்றும் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். வீட்டில் சமைப்பவர்கள் வெங்காயம், பூண்டு பயன்படுத்தவே கூடாது. வெங்காயம், பூண்டு சேர்க்கப்படாத உணவை தான் வீட்டில் சமைக்க வெங்காயம். அதுபோல இறைச்சி மற்றும் அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது.

விரதம் இருப்பவர்கள் முடிந்த அளவிற்கு எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பழங்கள், பால், பழ ஜூஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

  • பாண்டவர்களுக்கு உதவியவர்:

பாரதப் போரில் பாண்டவர்களுக்கு உறுதுணையாக இருந்து, போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு தேரோட்டியாக வந்தவரும் கண்ணன்தான். தேரோட்டியாக வந்த கண்ணன்தான் பார்த்தசாரதி என்று அழைக்கப்படுகிறார். தேரோட்டியாக வந்த கண்ணன், அர்ஜூனனுக்கு உபதேசித்த அறிவுரைகள்தான் இந்து மக்களின் புனித நூலான பகவத் கீதையாக போற்றப்படுகிறது. தன்னுடைய கடைசிக் காலத்தில் வேடன் ஒருவன் எய்த அம்பு காலில் தைக்க பூலோகத்தில் கண்ணன் அவதாரத்தை முடித்து மீண்டும் வைகுண்டம் சென்றார் என்று கூறப்படுவது உண்டு.

  • பூந்தானத்துக்கு அருளிய குருவாயூரப்பன்

பூந்தானம் நம்பூதிரி என்பவர் சிறந்த பக்தர். அவர் தினமும் தனது ஊரிலிருந்து காட்டு வழியே தொலைதூரம் நடந்து குருவாயூருக்குச் சென்று அப்பனைத் தரிசனம் செய்வார். அவ்வாறு செல்கையில் ஒரு நாள் வழியில் சில கொள்ளைக்காரர்கள் அவரைத் தடுத்துத் தாக்கினர். அவரிடம் என்ன பொருள் இருக்கிறது என்று ஆராயத் தொடங்கினார்கள். அவர் மனமோ, தன் விரல்களில் உள்ள மோதிரத்தை அவர்கள் பார்த்துவிடக் கூடாது என்று பயந்தது. ஆபத்தினை உணர்ந்த அவர், கண்களை மூடி “குருவாயூரப்பா குருவாயூரப்பா,” என்று உரத்துக் கூறினார்.

சிறிது நேரத்தில் புதியதான மலரின் மணம் காற்றில் வீசியது. கண் திறந்து பார்த்தபொழுது மாங்காட்டச்சன் என்ற திவான் குதிரைமேல் வேகமாக வாளைச் சுழற்றிக் கொண்டு வந்தார்.

அவரைக் கண்டதும் கொள்ளையர்கள் வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். மனம் நெகிழ்ந்த பூந்தானம் உமக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் என்று வினவ, அவரும் உன்னுடைய கையில் இருக்கும் மோதிரத்தை எனக்குக் கொடு என்று கூறினார். மோதிரம் களவு போய்விடக் கூடாது என்று பயந்த பூந்தானம் இப்போது தயங்கி, திகைத்து, செய்வதறியாது அந்த மோதிரத்தை திவானுக்குப் பரிசாக அளித்தார். திவான் அவரைத் தன் குதிரையில் ஏற்றிக் கொண்டு குருவாயூர் எல்லையில் விட்டுவிட்டுச் சென்றார்.

அதே நேரம் கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அப்பன், “அர்ச்சகரே! என் கையில் ஒரு மோதிரம் இருக்கும், அதைப் பூந்தானத்திடம் கொடுத்துவிடுங்கள், கொள்ளையர்களிடம் இருந்து அவரைக் காப்பாற்ற மாங்காட்டச்சன் உருவில் சென்று அவரிடம் இருந்து விளையாட்டாக மோதிரத்தைப் பெற்றேன்” என்று கூறினார்.

பூந்தானம் குருவாயூர்க் கோயிலை நெருங்கும்போது, அர்ச்சகர் ஓடி வந்து பூந்தானத்தின் காலில் விழுந்தார். தன் கனவில் அப்பன் சொன்னதைக் கூறி மோதிரத்தை அவரிடம் கொடுத்தார். மோதிரத்தைப் பார்த்த பூந்தானத்திற்குப் புல்லரித்தது. முந்தைய இரவு மாங்காட்டச்சனிடம் கொடுத்த அதே மோதிரம்தான் அது!! தன்னைக் காப்பாற்ற குருவாயூரப்பனே மாங்காட்டச்சனாக வந்ததை எண்ணி ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்🐚

கோகுலாஷ்டமியும் கிருஷ்ண ஜயந்தியும்!

srikrishna sengottai - 2026
#image_title

கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன? இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பது குறித்து அறிவோம்

கோகுலாஷ்டமி – கிருஷ்ண ஜெயந்தி இரண்டுக்குமான வேறுபாடுகள் என்ன?

கோகுலாஷ்டமி, கிருஷ்ணருடைய பிறந்தநாள். உலகம் முழுவதும் இருக்கக் கூடிய பக்தர்கள் கிருஷ்ணருடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். இதில் இரண்டு விதமான விஷயங்களை முதலில் நாம் பார்த்துவிடலாம்.

கோகுலாஷ்டமி-கிருஷ்ண ஜெயந்தி : வித்தியாசம்

ஆவணி மாதம் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி இரவு தங்கி இருந்தால் அது கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. இன்னொன்று அதே தேய்பிறை அஷ்டமியும் ரோகிணி நட்சத்திரமும் ரிஷப லக்னமும் சேர்ந்து வருவது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஆகும். சிவன் சம்பந்தமான வழிபாட்டை பிரதானமாக கொண்டவர்கள் கோகுலாஷ்டமி என்றும் – பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்கள் கிருஷ்ண ஜெயந்தி என்றும் கிருஷ்ணருடைய பிறந்த நாளை கொண்டாடுவார்கள்.

2 விதமான ஆகமங்கள் : இதிலும் பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்களுக்கு 2 ஆகமங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்று வைகானச ஆகமம், இன்னொன்று பாஞ்சராத்ர ஆகமம். வைகானஸ ஆகமத்திற்கு அஷ்டமி பிரதானமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பாஞ்சராத்ர ஆகமம் அஷ்டமியினுடைய மிச்சமும் ரோகினி நக்ஷத்ரத்தினுடைய மிச்சமும் – முக்கியமாக சூரிய உதயம் கழிந்து 2 நாழிகைகள் மேற்சொன்ன அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரமும் இருந்தால் அதை பாஞ்சராத்திர ஆகம கிருஷ்ண ஜெயந்தியாக எடுத்துக் கொள்வார்கள். ஸ்ரீவைஷ்ணவ ஜெயந்தி அதாவது வைஷ்ணவ கிருஷ்ண ஜெயந்தி என்று சொல்லப்படுவதும் பாஞ்சராத்திர ஜெயந்தி தான்.

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கொண்டாடும் இடங்கள்
கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை பிருந்தாவனம், மதுரா, கோகுலம், துவாரகை, குருவாயூர், உடுப்பி, பூரி ஜெகன்நாத், பண்டரிபுரம் மற்றும் ஏனைய பெருமாள் ஆலயங்களில் மிகவும் விசேஷமாக விண்ணும் மண்ணும் வியக்கும் வண்ணம் கொண்டாடி வருகிறார்கள்.

கிருஷ்ணருடைய விளையாட்டுகள் : இந்த கிருஷ்ண ஜெயந்தியில் வழுக்குமரம் ஏறுவதையும் உறியடி திருநாளாக உறியடி அடிப்பதையும் மக்கள் கிருஷ்ணருடைய விளையாட்டாகக் கொண்டு விளையாடுகிறார்கள். இந்த கண்ணன் பிறந்தநாள் வீடுகளில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை. அன்றைய தினம் வீட்டினை சுத்தமாக்கி மலர்களினால் அலங்கரித்து, கோலமிட்டு, கையில் வெண்ணெயுடன் தவழும் குழந்தை கண்ணனுடைய படத்தை வைத்து அலங்கரித்து, வாசல் முதல் சுவாமி வரை உள்ள இடம் வரை சிறுசிறு பாதங்கள் வரைவது வழக்கம்.

அரிசி மாவினால் பாதம் போடுவது வழக்கம். அதற்கு காரணம் உண்டு. கோகுலத்தில் கண்ணன் தோழர்களுடன் கோபியர் வீடுகளில் வெண்ணை திருடும் போது அவசரத்தில் கீழே சிதறிய வெண்ணையில் கண்ணனின் மலர் பாதங்கள் வீடு முழுவதும் வெண்ணெய் ஆனது. அதனால் தான் அந்த காலத்தில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் மக்கள் வெண்ணெயினால் பாதங்கள் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அந்த காரணத்தினாலேயே பின்னாட்களில் அரிசி மாவினால் கோலம் அதாவது பாதம் போடுவதை வழக்கமாக்கி இருக்கிறார்கள்.

இன்று பஜனை பாடல்கள் பாடுவது மிகச்சிறப்பு. ஒவ்வொருவர் வீட்டிலும் கண்ணன் பிறந்ததாகவே தோன்றும் வண்ணம் தோற்றமளிக்கும் படி சிறப்பாக கொண்டாடப்படுவதை நாம் காணலாம். இந்த கிருஷ்ண ஜென்மாஷ்டமி (கிருஷ்ண ஜெயந்தி) அன்று கிருஷ்ணர் அஷ்டோத்திரம் – விஷ்ணுசஹஸ்ரநாமம் இதையெல்லாம் பாராயணம் செய்வது நன்மை தரும். பஜனை பாட்டு என்று வாத்தியங்களுடன் இன்னிசை பாடல்கள் பாடுவதும் மிகச்சிறப்பு. சிறு குழந்தைகளுக்கு பிரசாதம் கொடுப்பதும் வந்திருக்கக்கூடிய விருந்தினர்களுக்கு தாம்பூலம் கொடுப்பது மிக விசேஷமானதாகும்.

கோகுலாஷ்டமி பற்றி புராணக் கதை: இப்போது நாம் கோகுலாஷ்டமி பற்றி புராணக் கதைகளை பார்க்கலாம். ஒருமுறை நாரத முனிவர் உலக நன்மைக்காக சத்தியலோகம் சென்று பிரம்மதேவரிடம், ”பிரம்ம பிதாவே ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி அன்று விரதம் அனுசரிக்கும் முறையையும் விரதத்தை ஏற்றி செய்தவர்களின் பலன்களையும் விரத மகிமையையும் மகத்துவத்தையும் பற்றி நான் அறிய விரும்புகிறேன். தயவுகூர்ந்து இதைத் தாங்கள் சொல்ல வேண்டும்” என்றார்.

அதற்கு பிரம்மதேவர் தன் குழந்தையாகிய நாரதரிடம் இந்த பூஜையை பற்றி சொல்ல ஆரம்பித்தார். இந்த பூஜையானது சிவ-விஷ்ணு பக்தர்களும், பெண்களும், ராஜாக்களும் ஜாதி மத பேதமின்றி அனுஷ்டித்து பகவானுடைய அருளுக்கு பாத்திரமாக தோடு பாவங்கள் விலகி முடிவில் வைகுண்ட பதவியை அடைவார்கள் என்பதாகும். இந்த விரதம் கலியுகத்தில் ஜனங்களுக்கு நேரடியான எல்லா பாவங்களையும் அழிக்கக்கூடியது. நன்மைகளையும் கொடுக்கக்கூடியது.

கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை நினைத்த அளவில் 7 ஜென்மங்களில் செய்த பாவங்கள் நாசமடையும். ஜெயந்தி தினத்தில் விரதம் ஏற்று உபவாசமிருந்து பூஜை செய்தபின் மகா பாவங்கள் நீங்குவதோடு அஸ்வமேத யாகமும் கீர்த்தனங்கள் செய்த பலனும் ஆயிரம் காராம் பசுக்கள் ஆயிரக்கணக்கான குதிரைகள் யானைகள் செய்த தானங்களை செய்த பலனும் அளவற்ற ஆபரணங்கள் குருஷேத்திரத்தில் தானம் கொடுத்த பலனும் கோடி கோதானம் தன் எஜமானனுக்கு சந்தேகத்தால் செய்த தொண்டுகள் ஏற்படும் .

பவுர்ணமி அமாவாசை தினங்களில் பெரியவர்களை உத்தேசித்து செய்த புண்ணிய நதியில் நீராடியது மற்றும் தர்ப்பணங்கள் செய்த புண்ணியம் கிடைக்கும். இந்த விரதத்தின் மூலமாக நமது எல்லா கோரிக்கைகளும் நிறைவேறும். ஆகையால் கிருஷ்ண பெருமான் முன் பக்தியோடு மூன்றே முக்கால் நாழிகை பூஜை செய்ய அவர்களுடைய பாவங்களெல்லாம் விலகும்.

அதிலும் ஆவணி மாதம் அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திரத்தில் இந்த விரதத்தை ஏற்றுச் செய்தால் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலகி போகும். மேலும் தர்ம அர்த்த காம மோக்ஷம் எனும் நான்கு வித புருஷார்த்த பலன்கள் நமக்கு கைகூடிவரும்” என்று பிரம்ம பிரான் கூறுகிறார்.

கிருஷ்ண ஜன்மாஷ்டமி பூஜையை எப்படி செய்யலாம்?

இனி நாம் இந்த பூஜையை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். கிருஷ்ண ஜன்மாஷ்டமி அன்று காலை வீட்டினை தூய நீரினால் அலம்பி விட வேண்டும். சுத்தம் செய்தபின் வீட்டில் வண்ண கோலங்கள் இட்டு நம்மால் முடிந்த கிருஷ்ணருடைய சிலை தங்கம் அல்லது வெள்ளி அல்லது பஞ்சலோகத்தால் ஆன கிருஷ்ணர் விக்ரகத்தை வைத்து அல்லது கிருஷ்ணனுடைய படத்தை வைத்து அதற்கு அலங்காரம் செய்து ஆவாகனம் செய்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

குழந்தையில்லாதவர்கள் இந்த பூஜை செய்தால் கிருஷ்ணரே பிறப்பார் என்பது நம்பிக்கை.

பலவிதமான பக்ஷணங்கள் – வெண்ணை அனைத்து விதமான பழங்கள் இவையெல்லாம் நிவேதனம் செய்து இரவு பஜனை பாட்டு வாத்தியங்களுடன் நாம் பூஜிக்கவேண்டும். மறுநாள் காலையில் சுத்தமாக நீராடி அந்த பூஜையை நாம் முடித்து விட்டு நம்மால் முடிந்த பிரசாதங்களை அருகில் இருக்கக்கூடிய சிறுவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டும். இந்த கிருஷ்ண ஜெயந்தியை பொறுத்தவரை சந்தான கோபால ஹோமம் செய்வது ரொம்ப ரொம்ப விசேஷம். அதுவும் முக்கியமாக குழந்தையில்லாதவர்கள் இந்த ஹோமத்தை செய்தால் கண்டிப்பாக கிருஷ்ணரே வந்து பிறப்பார் என்பது ஒரு நம்பிக்கை.

பூஜைக்காக பயன்படுத்தப்படும் மலர்கள் என்னென்ன?

இந்த பூஜையில் முக்கியமாக பாரிஜாதம் நந்தியாவட்டம் தாமரை ஆகிய புஷ்பங்களால் அர்ச்சனை செய்வது விசேஷம். அதுபோல துளசி இலைகளால் அர்ச்சனை செய்வதும் நமக்கு புண்ணியத்தைக் கொடுக்கும். பாகவதம் படிப்பது விசேஷம். அதிலும் அந்த பாகவதத்தில் இருக்கக்கூடிய கிருஷ்ண ஜனனம் பாராயணம் செய்வது மிகவும் விஷேசம். இந்த கிருஷ்ண ஜன்மாஷ்டமி கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்து நம் வாழ்வில் முன்னேறுவோம்.

இன்றைய நாள் இனியதாக ஆனந்தமாக ஆரோக்கியமாக அமைதியாக அமோகமாக அமைய வாழ்த்துகள்.

– Aparna Sankaranarayanan..

சிவகாசி அருகே அகழாய்வில் காளை உருவம் கண்டெடுப்பு!

excavation work in aruppukottai - 2026
#image_title

சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் ஆன திமிலுடைய காளையின் உருவம் கண்டெடுக்கப் பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல் குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி அகழாய்வுப் பணியில் கீழடி, முசிறிக்கு அடுத்தபடியாக முதல்முறையாக சூது பவள மணியில் சீரும் திமிலுள்ள காளையின் பதக்கம் கண்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு பணியில் சுடுமண்ணால் ஆன திமிலுடைய காளையின் உருவம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட அகழ்வாய்வில் சுடுமண் உருவ பொம்மை,சதுரங்க ஆட்ட ஆட்ட காய்கள், உள்ளிட்ட 1550க்கு மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அகழாய்வில் முன்னோர்கள் தொழிற்கூடங்கள் நடத்திருக்கான சான்றுகள் பொழுதுபோக்கில் ஈடுபட்டதற்கான சான்றுகளும் கிடைத்து வருகின்றன.சுடு மண்ணால் ஆன காளியின் உருவம் கிடைத்ததன் மூலம் அந்தக் காலத்திலேயே வீர விளையாட்டுக்களில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் என்பது தெரிய வருகிறது என தொல்லியல் அகழாய்வு இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

பள்ளியில் கிருஷ்ணர் ராதை வேடமிட்டு கோகுலாஷ்டமி கொண்டாட்டம்!

virudhunagar krishna jayanthi festiv - 2026
#image_title

விசுவ ஹிந்து பரிஷத், விருதுநகர் சார்பாக ஆக.24 சனிக்கிழமை அன்று, தனியார் பள்ளியில் நடந்த ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி நிகழ்ச்சியில் குழந்தைகள் ஸ்ரீ க்ருஷ்ணர், ஸ்ரீ ராதை வேடம் அணிந்து கண்ணனின் பாடல்களை மழலை குரல்களில் பாடி அசத்தினார்கள்.

பள்ளிக்கூடத்தின் ஆசிரியைகள் கண்ணனை சிறப்பாக அலங்கரித்து திருவடிகளைக் கோலமிட்டு வரைந்து கண்ணனுக்கு சீடை, மைசூர் பாகு, முருக்கு, அதிரசம், லட்டு ஆகியவற்றை படைத்து அனைத்து குழந்தைகளுக்கும் பிரசாதமாக வழங்கினார்கள்.

குழந்தைகள் அனைவருக்கும் விசுவ ஹிந்து பரிஷத் சார்பிலே சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறப்பாக பாட்டு பாடி, வேடம் அணிந்த குழந்தைகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், கிறிஸ்துவ, இசுலாமிய குழந்தைகளும் ராதை வேடம் கண்ணன் வேடம் அணிந்து அந்தந்த பாடல்களும் பாடி அசத்தினர். இந்த நிகழ்ச்சி பலரையும் கவர்ந்திருந்தது.

நிகழ்ச்சியை அருமையாக ஏற்பாடு செய்திருந்த பள்ளி ஆசிரியைகளுக்கும், நடுவர்களுக்கும், விசுவ ஹிந்து பரிஷத் நிர்வாகிகளின் சார்பில் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

மதுரையில் கிருஷ்ணர் – ராதை வேடமணிந்த சிறுவர் சிறுமியருக்கு பரிசு‌ வழங்கல்!

krishna vesham anusham madurai - 2026
#image_title

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் கிருஷ்ணர்- ராதை வேடமணிந்த சிறுவர் சிறுமியருக்கு பரிசு‌ வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மதுரையில் அனுஷத்தின் அணுக்கிரகம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாட்டில், எஸ்.எஸ். காலனியில், உள்ள காஞ்சி மகா பெரியவா கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப் பட்டது.

இதை முன்னிட்டு, மதுரையின் பல்வேறு பகுதியில் இருந்து சிறுவர், சிறுமியர்கள் கிருஷ்ணர்-ராதை வேடம் அணிந்து வந்திருந்தனர். கோவிலுக்கு வந்த அத்தனை கிருஷ்ணர் ராதைகளுக்கு, ஆடிட்டர் சேதுமாதவா பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

இதை தொடர்ந்து, எஸ். எஸ். காலனியில் உள்ள ஸ்ரீ மகா பெரியவா கோவிலில், கிருஷ்ணர் ராதை சிலை மற்றும் ஸ்ரீ மகா பெரியவர் சிலை வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு , ஏராளமான பொதுமக்கள் குட்டி கிருஷ்ணர் ராதைகளின் சேட்டைகளை பார்த்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை, மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவன நெல்லை பாலு செய்திருந்தார்.

கோமதி அஷ்டகமும் ஸ்ரீ சிருங்கேரி மஹாஸ்வாமிகளும்!

sringeri swamigal - 2026

— சேகர வாத்யார், நெல்லை —

சங்கரன்கோயில் சங்கரநாராயண ஸ்வாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் சார்பில் சங்கரலிங்க ஸ்வாமி, கோமதி அம்பாள், சங்கரநாராயண ஸ்வாமிக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜைக்கான வஸ்துக்களை கிருஷ்ண பட்டர் வழங்கினார் என்பது செய்தி.

சங்கரன்கோவிலுக்கும் சிருங்கேரி சங்கராசார்ய ஸ்ரீமடத்துக்கும் பல விதத்தில் சம்பந்தம் உண்டு. ஸ்ரீ ந்ருஸிம்ஹபாரதீ ஸ்வாமி காலத்தில் இங்கே விஜயம் செய்து ஸ்ரீசங்கரநாராயண ஸ்வாமி ஸந்நிதியில் ஸ்ரீ சந்த்ரமெளலீஷ்வரரை வழங்கி தினமும் பூஜை செய்ய வைத்தார்கள்.

sringeri sachithananda sivanibava swami and nrusimha bharathi swamigal - 2026
#image_title

ஸ்ரீசச்சிதானந்தசிவாபினவ ந்ருஸிம்ஹ பாரதீ ஸ்வாமிகள் இந்த ஆலயத்தில் பூகைலாசே எனத் தொடங்கும் ஆதிசங்கரபகவத் பாதாளின் ஸ்ரீ கோமதி அம்பாள் அஷ்டகம் பாடி பூஜை செய்துள்ளார்கள்.

இப்படியாக இந்த ஆலயத்திற்கு சிருங்கேரி ஆசார்யாளுடைய விஜயம் எப்போதும் இருக்கும். இப்பவும் ஸ்ரீ மடத்து பண்டிதர்களை கும்பாபிஷேத்திற்கு அனுப்பி ஸ்வாமி அம்பாளுக்கு உண்டான மரியாதைகளை செய்துள்ளார்கள்!

அந்த கோமதி அம்பாளுக்கு உரிய அஷ்டகத்தை நாமும் படித்து அம்பாளை வணங்குவோமே!

நமோ நம:ஶங்கர கோமதீப்யாம்!

பூ கைலாசே மனோக்ஞே புவனவன வ்ருதே நாகதீர்த்தோப கண்டே
ரத்ன ப்ரஹாரா மத்யே ரவிசதுர்ச மஹா யோகபீடே நிஷண்னம்
ஸம்சாரா வியாதி வைத்யம் ஸகல ஜனனுதும் சங்க பத்மார்ச்சி தாங்க்ரிம்
ஸ்ரீ கோமதிஅம்பா சமேதம் ஹரிஹர வபுஷம் ஸ்ரீ சங்கரேசம் நமாமி

ஸ்ரீ கோமதீ அஷ்டகம்

லக்ஷ்மிவாணி நிஷேவிதா புஜபதாம் லாவண்ய ஷோபாம்சிவாம்
லக்ஷ்மிவல்லப பத்மஸம்பவநுதாம் லம்போதர உல்லாஸினீம்
நித்யம் கௌசிகவந்தய மானசரணாம் ஹ்ரீங்காரா மந்த்ரோஜ்வாலாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய மஹிஷீம் த்யாயேத் ஸதா கோமதீம் (1)

தேவீம் தானவராஜ தர்பஹரிணீம் தேவேந்த்ர சம்பத்பரதாம்
கந்தர்வவோரக யக்ஷசேவித பதாம் ஸ்ரீ சைலமத்தியஸ் ஸ்திதாம்
ஜாதிசம்பக மல்லிகாதி குஸுமை சம்சோபிதாங்கிரி த்வஜாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய மஹிஷீம் த்யாயேத் ஸதா கோமதீம் (2)

உத்யத் கோடி விகர்ததனத்யுதி நிபாம் ஒளர்வீம் பவாம்போநிதே
உத்யத் தாரகநாதிதுல்ய வதனாம்உத்யோதயந்தீம் ஜகத்
ஹஸ்தந்யஸ்த சுகப்பிரணாள ஸஹிதாம் ஹர்ஷப்பிரதாம் அம்பிகாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய மஹிஷீம் த்யாயேத் ஸதா கோமதீம் (3)

கல்யாணீம் கமிநீய மூர்த்தி ஸகிதாம் கற்பூர தீபோஜ்வலாம் கர்ணாந்தாயத லோசனாம் களரவாம் காமேஸ்வரி சங்கரிம்
கஸ்தூரீ திலகோஜ்வலாம் ஸகருணாம் கைவல்ய் சௌக்யப்ரதாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய மஹிஷீம் த்யாயேத் ஸதா கோமதீம் (4)

வைடூர்யாதி சமஸ்தரத்னகசிதே கல்யாண ஸிம்ஹாஸனே
ஸ்தித்வா சேஷஜனஸ்ய பாலனகரீம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரிம்
பக்தாபீஷ்ட பலப்ரதாம் பயஹராம் பண்டஸ்.ய யுத்தோத்ஸுகாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய மஹிஷீம் த்யாயேத் ஸதா கோமதீம் (5)

சைலாதீச ஸுதாம் ஸரோஜநயனாம் ஸர்வாக வித்வம்ஸினீம்
சன்மார்க்க ஸ்தித லோகரக்ஷ ஜனனிம் சர்வேச்வரீம் சாம்பவீம்
நித்யம் நாரததும்புரு பரப்ரூதிபி வீணா வினோதஸ்திதாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய மஹிஷீம் த்யாயேத் ஸதா கோமதீம் (6)

பாபாராண்ய தவானலாம் பிரபஜதாம் பாக்யபிரதாம் பக்திதாம்
பக்தாபத் குலசைல பேதனபவிம் ப்ரத்யக்ஷமூர்த்திம் பராம் மார்க்கண்டேய பராசராதி முனிபி ஸமஸ்தூயமானாமுமாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய மஹிஷீம் த்யாயேத் ஸதா கோமதீம் (7)

சோராரண்யநிவாஸினாம் பிரதிதினம் ஸ்தோத்ரேண பூர்ணாநநாம் த்வத்பாதாம்புஜஸக்த பூர்ணமனஸாம் ஸ்தோகேதரேஷ்ட பிரதாம்
நாநா வாத்ய விபவை சோபிதபதாம் நாராயணஸ்யானுஜாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய மஹிஷீம் த்யாயேத் ஸதா கோமதீம் (8)

(இந்த கோமதி அஷ்டகத்தை ஆதி சங்கரர் இயற்றியதாகவும் ஒரு குறிப்பு உண்டு)

அரசியலில் இளைஞர்களுக்கு ஆர்வம்! விண்வெளித் துறையில் புதிய ஸ்டார்ட் அப்கள்!

manadhinkural - 2026
#image_title

மனதின் குரல், 113ஆவது பகுதி
ஒலிபரப்பு நாள்:  25.08.2024
தமிழ் ஒலிபரப்பு: சென்னை வானொலி நிலையம்
தமிழாக்கம்/குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்

எனதருமை நாட்டு மக்களே, வணக்கம்.  மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இன்று மீண்டும் ஒருமுறை தேசத்தின் சாதனைகள், நாட்டுமக்களின் கூட்டு முயற்சிகள் ஆகியவை பற்றிய உரையாடல்களே.  21ஆம் நூற்றாண்டு பாரதத்திலே ஏராளமான விஷயங்கள் வளர்ச்சியடைந்த பாரதத்தின் அஸ்திவாரத்திற்கு உரம் சேர்த்து வருகின்றன.  எடுத்துக்காட்டாக, இந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதியன்று, நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் நமது முதல் தேசிய விண்வெளி தினத்தைக் கொண்டாடினோம்.  நீங்களும் இதைக் கொண்டாடியிருப்பீர்கள். மீண்டும் ஒருமுறை சந்திரயான் – 3இன் வெற்றியை நினைந்து களித்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.  கடந்த ஆண்டு இதே நாளில் தான் சந்திரயான் -3, நிலவின் தென்பாகத்தில், சிவசக்திப் புள்ளியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.  பாரதம் இந்த கௌரவம் மிக்க சாதனையைப் படைத்த முதல் தேசமானது.

          நண்பர்களே, தேசத்தின் இளைஞர்களுக்கு விண்வெளித் துறை சீர்திருத்தங்களாலும் கணிசமான ஆதாயங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதால், நாம் ஏன் இன்று மனதின் குரலில் விண்வெளித் துறையோடு தொடர்புடைய நமது இளைய நண்பர்களோடு உரையாடி மகிழக் கூடாது என்று எனக்குத் தோன்றியது.  ஸ்பேஸ்டெக் ஸ்டார்ட் அப்பான, கேலக்ஸி ஐயின் குழுவினர் என்னுடன் இணைந்திருக்கிறார்கள்.  இந்த ஸ்டார்ட் அப்பினை ஐஐடி மதராஸின் முன்னாள் மாணவர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.  இந்த இளைஞர்கள் அனைவரும் இன்று நம்மோடு தொலைபேசி-வழித் தொடர்பில் இணைந்திருக்கிறார்கள் – சூயஷ், டேனில், ரக்ஷித், கிஷன், பிரணீத் ஆகியோர்.  வாருங்கள் இந்த இளைஞர்களின் அனுபவங்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

பிரதமர் – ஹெலோ

அனைத்து இளைஞர்களும் – ஹெலோ

பிரதமர் – வணக்கம்ங்க

அனைத்து இளைஞர்களும் – வணக்கம் சார்

பிரதமர் – நல்லது நண்பர்களே, ஐஐடி மதராஸில ஏற்பட்ட உங்களுடைய நட்பு, இன்றைக்கும் கூட பலமானதா இருக்கறத பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.  இதனால தான் நீங்க எல்லாருமா இணைஞ்சு GalaxEyeஐ ஆரம்பிக்க முடிவு செஞ்சீங்க. இன்னைக்கு நான் மேலும் இதுபத்தி தெரிஞ்சுக்க விரும்பறேன்.  கூடவே உங்க தொழில்நுட்பத்தால தேசத்துக்கு எந்த அளவுக்கு நன்மை ஏற்பட இருக்குன்னும் சொல்லுங்க.

சூயஷ் – ஐயா என் பேரு சூயஷ்.  நீங்க சொன்னா மாதிரி, ஐஐடி மதராஸில சந்திச்சோம், அங்க நாங்க எல்லாரும் எங்க படிப்பை முடிச்சோம், ஆனா வேறவேற வருஷங்கள்ல எங்க பொறியியல் படிப்பை நிறைவு செஞ்சோம்.  அப்பத்தான் நாங்க என்ன நினைச்சோம்னா, ஹைப்பர்லூப்னு ஒரு ப்ராஜக்ட் இருக்கு, இதை நாம ஒண்ணா சேர்ந்து செய்யலாமேன்னு தோணிச்சு.  இதன்படி நாங்க ஆவிஷ்கார் ஹைப்பர்லூப்னு ஒரு குழுவை உருவாக்கினோம், இது தொடர்பா நாங்க அமெரிக்காவுக்கும் பயணிச்சோம்.   அந்த ஆண்டு அமெரிக்காவுல போட்டியில பங்கெடுக்கப் போன ஒரே ஆசிய அணி நாங்க தான். அங்க நம்ம நாட்டோட கொடியை நாட்டினோம். உலகத்தில சுமார் 1500 அணிகள்ல நாங்க தலைசிறந்த 20 அணிகள்ல ஒண்ணா இருந்தோம்.

பிரதமர் – சரி, நீங்க மேல தொடர்றதுக்கு முன்னால நான் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கறேன்.

சூயஷ் – ரொம்ப ரொம்ப நன்றிங்க.  இந்த சாதனைக்குப் பிறகு எங்களோட நட்பு மேலும் ஆழமாச்சு, இந்த மாதிரியான கடினமான, சிரமங்கள் நிறைஞ்ச திட்டங்களை செய்யத் தேவையான தன்னம்பிக்கை ஏற்பட்டுச்சு.  மேலும் இந்த வேளையில தான் ஸ்பேஸ் எக்ஸை பார்த்தோம். விண்வெளித் துறையை அப்ப நீங்க திறாந்து விட்டீங்க. அதில தனியார் பங்களிப்பை உறுதி செய்யற வகையில 2020ல நீங்க ஒரு திருப்புமுனையான தீர்மானத்தை மேற்கொண்டீங்க.  இது எங்களுக்கு ரொம்ப ஆர்வத்தை ஏற்படுத்திச்சு.  இப்ப நாங்க என்ன உருவாக்கிட்டு இருக்கோங்கறதையும், அதனால என்ன பயன் அப்படீங்கறது பத்தியும் பகிர்ந்துக்க ரக்ஷித்தை உங்ககூட உரையாட அழைக்க விரும்பறேன்.

ரக்ஷித் – ஐயா, என் பேரு ரக்ஷித்.  இந்தத் தொழில்நுட்பத்தால நமக்கு எப்படி ஆதாயங்கள் கிடைக்கும்ங்கறது பத்தி நான் பதில் சொல்றேன்.

பிரதமர் – ரக்ஷித், நீங்க உத்தராகண்டில எங்கிருந்து வர்றீங்க?

ரக்ஷித் – சார் நான் அல்மோடாவிலேர்ந்து வர்றேன்.

பிரதமர் – ம்ம், அப்ப நீங்க பால் இனிப்புக்காரங்கன்னு சொல்லுங்க.

ரக்ஷித் – ஆமா சார், ஆமா சார்.  பால் இனிப்புத் தான் எங்களுக்கு ரொம்ப பிடிச்சமானது.

பிரதமர் – நம்ம லக்ஷ்ய சேன் இருக்காருல்ல, அவரு தான் அப்பப்ப எனக்கு பால் இனிப்பைத் தருவாரு.  சரி ரக்ஷித் சொல்லுங்க.

ரக்ஷித் – எங்களோட தொழில்நுட்பத்தால, விண்வெளியிலிருந்து, மேகங்களைத் தாண்டிப் பார்க்க முடியும், இரவிலயும் கூட இதால பார்க்க முடியும்.  இதனால தேசத்தின் எந்த ஒரு மூலையா இருந்தாலும், அது மேலிருந்து ஒரு தெளிவான படத்தை எடுக்க முடியும்.  மேலும் இப்படி கிடைக்கக்கூடிய இந்தத் தரவுகளை வெச்சு, இரண்டு துறைகள்ல மேம்பாட்டை ஏற்படுத்த முடியும்.  முதலாவதா, பாரதத்தோட பாதுகாப்பை உறுதி செய்யறதுல.  நம்மளோட எல்லைப் பகுதிகள், நம்மோட கடல்பகுதிகள், இவை மேல நம்மால கண்காணிப்பை ஏற்படுத்த முடியும்.  மேலும் எதிரிகளோட செயல்பாடுகளைக் கண்காணிக்கலாம், நம்ம இராணுவத்துக்குத் துப்புகளைக் கொடுக்கலாம். இரண்டாவதா, பாரதநாட்டு விவசாயிகளை மேலும் சக்தி படைத்தவர்களா ஆக்கலாம்.  ஏற்கெனவே நாங்க உருவாக்கியிருக்கற ஒரு பொருளைக் கொண்டு, விண்வெளியிலிருந்து, இரால் வளர்ப்புல ஈடுபட்டிருக்கற விவசாயிகளோட குளங்கள்ல இருக்கற நீரோட தரத்தை, தற்போது இதுக்கு ஆகற செலவுல பத்துல ஒரு பங்கு செலவுல கணக்கிட முடியும். மேலும் நாங்க என்ன விரும்பறோம்னா, உலகத்துக்குச் சிறந்த தரமான செயற்கைக்கோள் படங்களைப் பிடிச்சு, உலகளாவிய பிரச்சனைகளான உலக வெப்பமயமாக்கம் போன்ற சிக்கல்களோட போராடத் தேவையான சிறந்த தரம்வாய்ந்த செயற்கைக்கோள் தரவுகளை அளிக்க விரும்பறோம்.

பிரதமர் – அப்படீன்னா உங்க குழு ஜவானுக்கும் ஜய் போடுவீங்க, கிஸானுக்கும் ஜய் போடுவீங்க இல்லையா?

ரக்ஷித் – ஆமாம் சார், கண்டிப்பா.

பிரதமர் – நண்பர்களே, நீங்க இத்தனை பணிகளை செஞ்சிக்கிட்டு இருக்கீங்களே, உங்களோட இந்தத் தொழில்நுட்பத்தோட துல்லியம் எந்த அளவுன்னு சொல்றீங்களா?

ரக்ஷித் – சார், நாங்க 50 செ.மீ. resolution அதாவது பிரிதிறன் வரைபடங்கள் இருக்கும்.   மேலும் ஒரேஒரு முறையில எங்களால சுமார் 300 சதுர கி.மீ. பகுதியோட படத்தைப் பிடிச்சுட முடியும்.

பிரதமர் – நீங்க சொல்றதை எல்லாம் நம்ம நாட்டுமக்கள் கேட்கும் போது அவங்க எவ்வளவு பெருமிதப்படுவாங்கன்னு நினைச்சு நான் சந்தோஷப்படுறேன்.   சரி இப்ப நான் மேலும் ஒரு கேள்வியைக் கேட்க விரும்பறேன்.

ரக்ஷித் – சொல்லுங்க சார்.

பிரதமர் – விண்வெளி சூழலமைப்புங்கறது ரொம்பவே துடிப்பானதா ஆயிட்டு வருது.  இப்ப உங்களோட குழு, இதில என்ன மாற்றங்களைப் பார்க்கறீங்க?

கிஷன் – என் பேரு கிஷன் சார், நாங்க இந்த GalaxEyeஐ தொடங்கின பிறகுல இருந்தே நாங்க  IN-SPACe வர்றதை பார்த்தோம், நிறைய கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படுறதைப் பார்த்தோம். எடுத்துக்காட்டா ஜியோ ஸ்பேஷியல் டேடா பாலிஸி, அதாவது புவியியல் சார்ந்த தரவுக் கொள்கை,  இந்திய விண்வெளிக் கொள்கை.  மேலும் நாங்க கடந்த மூன்றாண்டுகள்ல நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதைப் பார்த்தோம், நிறைய செயல்முறை மாற்றங்கள், நிறைய கட்டமைப்பு மாற்றங்கள், நிறைய வசதிகள், இஸ்ரோவால இவையெல்லாம் நல்ல முறையில செய்யப்பட்டிருக்கு. இப்ப நாங்க இஸ்ரோவுக்குப் போயி எங்க வன்பொருளை ரொம்ப சுலபமா பரிசோதனை செய்ய முடியுது.  மூணு வருஷங்களுக்கு முன்னால இந்தச் செயல்முறைகள்லாம் இந்த அளவுக்கு இருக்கல. இதெல்லாம் எங்களுக்கு மட்டுமில்லை, மேலும் பல ஸ்டார்ட் அப்புகளுக்கு ரொம்பவே உதவிகரமா இருக்கு.  மேலும், அண்மைக்கால அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைகள் காரணமா, இந்த வசதிகள் கிடைக்கறது காரணமா, நிறைய ஸ்டார்ட் அப்புகள் உருவாகவும் ஊக்கமா இருக்கு, இப்படிப்பட்ட ஸ்டார்ட் அப்புகள் வந்து ரொம்ப சுலபமா, பொதுவா மேம்பாட்டை ஏற்படுத்தறதுக்கு அதிக செலவும் நேரமும் ஆகற துறைகள்ல கூட நல்ல மேம்பாடு ஏற்படுத்த முடியும். ஆனா தற்போதைய கொள்கைகள் காரணமாவும், IN-SPACe வந்ததுக்குப் பிறகும், ஸ்டார்ட் அப்புகளுக்கு நிறைய விஷயங்களைச் செய்யறது சுலபமாகியிருக்கு.  என் நண்பன் டேனில் சாவ்டாவும் கூட இது தொடர்பா பகிர்ந்துக்க விரும்பறாரு.

பிரதமர் – டேனில் சொல்லுங்க.

டேனில் – சார், நாங்க ஒரு விஷயத்தை கவனிச்சோம், அது என்னென்னா, பொறியியல் படிக்கற மாணவர்களோட சிந்தனைக் கண்ணோட்டத்தில ஒரு மாற்றத்தை கவனிச்சோம்.  முன்ன எல்லாம் அவங்க வெளிநாட்டுக்குப் போயி விண்வெளித் துறையில மேற்படிப்பை படிக்க விரும்புவாங்க, அங்க வேலை பார்க்க விரும்புவாங்க, ஆனா இப்ப இந்தியாவுலேயே ஒரு விண்வெளி சூழலமைப்பு ரொம்ப நல்லமுறையில வளர்ந்திட்டு இருக்கற நிலையில அவங்க எல்லாம் திரும்ப வந்து இந்தச் சூழலமைப்போட ஒரு அங்கமா ஆக விரும்பறாங்க.  இது ஒரு நல்ல பின்னூட்டம் நமக்குக் கிடைக்குது, எங்க கம்பெனியிலேயே கூட, இந்தக் காரணத்தாலேயே சிலர் திரும்ப வந்து வேலை பார்த்திட்டு இருக்காங்க.

பிரதமர் – நீங்க ரெண்டு பேரும் சொன்ன கண்ணோட்டங்கள், அதாவது கிஷனும் சரி, டேனிலும் சரி சொன்ன கருத்துக்கள் மேல பலரோட கவனமும் ஈர்க்கப்பட்டிருக்கும் அப்படீன்னு நான் கண்டிப்பா நம்பறேன்.  மேலும் ஒரு துறையில சீர்திருத்தம் செய்யப்படும் போது, சீர்திருத்தம் காரணமா எத்தனை வகையான பலன்கள் ஏற்படுது, எத்தனை பேர் ஆதாயம் அடையறாங்க அப்படீங்கறது பத்தி எல்லாம் நீங்க விவரமா எடுத்துச் சொன்னீங்க.  ஏன்னு சொன்னா நீங்க அந்தத் துறையிலேயே இருக்கீங்க, அதை உன்னிப்பா கவனிச்சிருப்பீங்க, இதோட கூட நம்ம நாட்டோட இளைஞர்களும் இப்ப இந்தத் துறையில, நம்ம நாட்டிலேயே தங்களோட எதிர்காலத்தை அமைச்சுக்கறாங்க. தங்களோட திறமைகளை இங்க பயன்படுத்த விரும்பறாங்கன்னும் சொல்லி இருக்கீங்க. இது ரொம்ப அருமையான ஒரு கவனிப்பு.  இப்ப நான் மேலும் ஒரு கேள்வி கேட்க விரும்பறேன். இப்ப ஸ்டார்ட் அப்புகள் மற்றும் விண்வெளித் துறையில வெற்றியடைய விரும்பற இளைஞர்களுக்கு நீங்க தெரிவிக்க வேண்டிய செய்தி என்னவா இருக்கும்?

பிரணித் – நான் பிரணித் பேசறேன், இதுக்கான விடையை நான் அளிக்கறேன்.

பிரதமர் – சொல்லுங்க பிரணித்.

பிரணித் – சார், என்னோட சில ஆண்டுக்கால அனுபவத்திலிருந்து நான் ரெண்டு விஷயங்களைத் தெரிவிச்சுக்க விரும்பறேன்.  முதலாவதா, யாராவது ஸ்டார்ட் அப்பை தொடங்க நினைச்சாங்கன்னா, அதுக்கான நேரம் இது தான்.  ஏன்னா, உலகம் முழுவதிலயும், இந்தியா தான் மிகவும் வேகமாக வளர்ந்திட்டு வர்ற பொருளாதாரம். இதோட அர்த்தம் என்னன்னா, உங்க கிட்ட ஏராளமான வாய்ப்பு இருக்குங்கறது தான்.  அடுத்த வருஷம் எங்களோட ஒரு செயற்கைக்கோள் ஏவப்படும்னு நினைச்சு எப்படி நான் 24 வயசுல பெருமைப்படுறேன் இல்லையா, அந்த மாதிரி.  இந்த அடிப்படையில நம்ம அரசாங்கம் சில முக்கியமான தீர்மானங்களை எடுக்கும். அதில எங்களோட ரொம்ப சின்ன பங்களிப்பும் ஒண்ணா இருக்கும்.  இப்படி தேசிய அளவுல தாக்கம் ஏற்படுத்தும் சில திட்டங்களோட இணைஞ்சு பணியாற்றக்கூடிய வாய்ப்பு கிடைச்சுது.   இது எப்படிப்பட்ட துறை, என்ன மாதிரியான நேரம் இது அப்படீன்னு பார்க்கும் போது, இது இன்னைக்கு, இப்பக்கூட துவங்கிட்டு இருக்குன்னு சொல்லலாம்.  நான் என்னோட இளைய நண்பர்கள் கிட்ட சொல்ல விரும்பறதெல்லாம், இந்த வாய்ப்பு தாக்கம் தொடர்பானது மட்டுமில்லை, அவங்களோட தனிப்பட்ட நிதி வளர்ச்சி பத்தினது. உலக அளவிலான ஒரு பிரச்சனைக்கான தீர்வை ஏற்படுத்துவது பத்தினது. நாங்க பரஸ்பரம் என்ன பேசிக்குவோம்னா, சின்ன வயசுல எல்லாம் என்ன ஆகணும்னு நினைக்கும் போது, பெரிய நடிகராகணும், விளையாட்டு வீரரா ஆகணும், இப்படி ஏதாவது நினைப்போம் இல்லையா?  ஆனா இன்னைக்கு யாராவது வளர்ந்த பிறகு விண்வெளித் துறையில வேலை பார்க்க விரும்பறேன், பெரிய தொழில்முனைவோரா ஆக விரும்பறேன்னு சொன்னா, அது தான் எங்களுக்குப் பெருமையான தருணம். இந்த மொத்த முழு மாற்றத்தில ஒரு சின்ன அங்கமா நாங்க இருக்கோம்.

பிரதமர் – நண்பர்களே, ஒரு வகையில பிரணித், கிஷன், டேனில், ரக்ஷித், சுயஷ் உங்களோட நட்பு எந்த அளவுக்கு ஆழமானதோ, அதே அளவுக்கு உங்க ஸ்டார்ட் அப்பும் ஆழமானது.  இதனால தான உங்களால இத்தனை அருமையா பணியாற்ற முடிஞ்சிருக்கு!  சில ஆண்டுகள் முன்னால ஐஐடி மதராஸ் போகக்கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைச்சுது. அந்த அமைப்போட சிறப்புத்தன்மையை நானே அனுபவிச்சிருக்கேன்.  மேலும் ஐஐடி தொடர்பா உலகம் முழுவதிலயுமே கூட ஒரு மரியாதை கலந்த உணர்வு இருக்கு.  அங்கிருந்து படிச்சுட்டு வெளியேறும் மாணவர்கள், பாரதத்திற்காக பணியாற்றும் போது கண்டிப்பா நல்லதொரு பங்களிப்பை அளிக்கறாங்க.  நீங்க எல்லாருக்கும் சரி, விண்வெளித் துறையில பணியாற்றக்கூடிய எல்லா ஸ்டார்ட் அப்புகளுக்கும் சரி என்னோட பலப்பல நல்வாழ்த்துக்களை நான் தெரிவிச்சுக்கறேன். நீங்க ஐந்து நண்பர்களோடயும் பேசினது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்திச்சு.  பலப்பல நன்றிகள் நண்பர்களே!!

சுயஷ் – தேங்க்யூ சோ மச்.

          எனதருமை நாட்டு மக்களே, அரசியல் பின்புலம் ஏதும் இல்லாத ஒரு இலட்சம் இளைஞர்களை, அரசியலமைப்போடு இணைப்பது குறித்த விஷயமாக, இந்த ஆண்டு செங்கோட்டையிலிருந்து நான் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தேன். என்னுடைய இந்த விஷயம் குறித்து நிச்சயம் எதிர்வினை ஏற்பட்டிருப்பதை அறிகிறேன்.  இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் அரசியலில் பிரவேசிக்க விரும்புகிறார்கள் என்பதுதான்.  அவர்கள் அதற்காக சரியான நேரத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயம் தொடர்பாக நாடெங்கிலுமிருந்து இளைஞர்கள் கடிதங்களை எழுதியிருக்கிறார்கள்.  சமூக ஊடகங்களில் பலமான பதிலுரைகள் கிடைத்திருக்கின்றன.  பலவகையான ஆலோசனைகளை மக்கள் எனக்கு அளித்திருக்கிறார்கள்.  தங்களால் இதைக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்றும் சில இளைஞர்கள் எழுதியிருக்கிறார்கள்.  தாத்தா அல்லது தாய்-தந்தை என எந்த உறவும் இல்லாத காரணத்தால், விரும்பியும் கூட அவர்களால் அரசியலுக்கு வர இயலவில்லை.  கள அளவில் பணியாற்றிய நல்ல அனுபவம் தங்களிடம் இருப்பதால், பிரச்சனைகளுக்கான தீர்வைக் காண்பதில் உதவிகரமாக இருக்க முடியும் என்று இளைஞர்கள் சிலர் எழுதியிருக்கிறார்கள்.  குடும்ப அரசியல் என்பது புதிய திறமைகளை அழித்து விடுகிறது என்று சில இளைஞர்கள் எழுதியிருக்கிறார்கள்.  இதுபோன்ற முயற்சிகளால் நமது ஜனநாயகம் மேலும் பலமடையும் என்றும் சிலர் கருத்து  தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக தங்கள் ஆலோசனைகளை அளித்த அனைவருக்கும் நான் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இப்போது நமது சமூக அளவிலான முயற்சிகளால், எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாத இத்தகைய இளைஞர்கள் அரசிலுக்குள் பிரவேசிப்பார்கள், அவர்களுடைய அனுபவம், அவர்களுடைய உற்சாகம் ஆகியன தேசத்திற்குப் பயன்படும்.

          நண்பர்களே, சுதந்திரப் போரின் போது சமூகத்தின் அனைத்துத் துறைகளிலிருந்தும் பலர் முன்வந்து பங்கேற்றார்கள், இவர்களுக்கு எந்த விதமான அரசியல் பின்புலமும் இருக்கவில்லை.  இவர்கள் தாங்களே முன்வந்து பாரதத்தின் சுதந்திரத்திற்காகத் தங்களை அர்ப்பணித்தார்கள்.  இன்றும் கூட வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய, மீண்டும் ஒருமுறை இதே உணர்வு தேவைப்படுகிறது.  நீங்கள் இந்த இயக்கத்தில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் என்னுடைய அனைத்து இளைய நண்பர்களிடமும் வேண்டிக் கொள்கிறேன்.  உங்களுடைய இந்த அடியெடுப்பு, உங்கள் மற்றும் தேசத்தின் எதிர்காலத்தை மாற்ற வல்லது. 

          எனக்குப் பிரியமான நாட்டு மக்களே, இல்லந்தோறும் மூவண்ணக்கொடி – இந்த இயக்கம் இந்த முறை முழுவீச்சில் நடந்தேறியது.  தேசத்தின் அனைத்து இடங்களில் இருந்தும் இந்த இயக்கத்தோடு தொடர்புடைய அற்புதமான படங்கள் வந்திருக்கின்றன. நமது வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்து இடங்களிலும் மூவண்ணக்கொடி!  மக்கள் தங்கள் கடைகளில், அலுவலகங்களில் மூவண்ணக் கொடியைப் பறக்க விட்டார்கள்.   தங்கள் கணிப்பொறிகளில், செல்பேசிகளில், வண்டிகளில் மூவண்ணக் கொடியைப் பறக்கச் செய்தார்கள்.  மக்கள் அனைவருமாக இணைந்து இப்படிப்பட்ட உணர்வினை எப்போது வெளிப்படுத்துகிறார்களோ, அப்போது அது அந்த இயக்கத்திற்கு மகுடம் சூட்டி விடுகிறது.  இப்போது நீங்கள் உங்கள் டிவி திரையில் காணும் படங்கள், இவை ஜம்மு-கஷ்மீரத்தைச் சேர்ந்தது.  இங்கே 750 மீட்டர் நீளம் கொண்ட மூவண்ணக் கொடியோடு கூடிய ஒரு மூவண்ணப் பேரணி நடத்தப்பட்டது, மேலும் இது உலகின் மிகவும் உயரமான சினாப் ரயில்பாலத்தின் மீது நடந்தது.  யாரெல்லாம் இந்தப் படங்களைப் பார்த்தார்களோ, அவர்களுடைய மனங்கள் எல்லாம் மகிழ்ச்சியில் நிரம்பின.  ஸ்ரீநகரின் டல் ஏரியிலும் கூட மூவண்ணக்கொடி யாத்திரையின் மனதைக் கொள்ளை கொள்ளும் படங்களை நாம் அனைவரும் கண்டோம்.  அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு காமேங்க் மாவட்டத்திலும் கூட 600 அடி நீளமான மூவண்ணக் கொடியோடு யாத்திரை மேற்கொள்ளப்பட்டது.  தேசத்தின் பிற மாநிலங்களிலும் கூட இதைப் போலவே, அனைத்து வயதினரும், இப்படிப்பட்ட மூவண்ணக்கொடிப் பேரணிகளில் பங்கெடுத்துக் கொண்டார்கள்.  சுதந்திரத் திருநாள் இப்போது ஒரு சமூகத் திருநாளெனவே ஆகி வருகிறது. இதனை நீங்களுமே கூட உணர்ந்திருப்பீர்கள். மக்கள் தங்களுடைய இல்லங்களையும் கூட மூவண்ண மாலைகளால் அலங்கரிக்கின்றார்கள்.  சுய உதவிக் குழுக்களோடு இணைந்த பெண்கள், இலட்சக்கணக்கான கொடிகளைத் தயார் செய்கின்றார்கள்.   இணையவழி வர்த்தகத் தளங்களில் மூவண்ணம் நிரம்பிய பொருட்களின் விற்பனை அதிகரிக்கின்றன.  சுதந்திரத் திருநாளின் போது தேசத்தின் நீர்-நிலம்-வானம் என அனைத்து இடங்களிலும் நமது கொடியின் மூன்று நிறங்கள் பளிச்சிட்டன.  இல்லந்தோறும் மூவண்ணம் இணையதளத்தில் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் தங்கள் படத்தையும் தரவேற்றம் செய்திருந்தார்கள்.  இந்த இயக்கமானது தேசம் முழுவதையும் ஓரிழையில் இணைத்தது! இது தானே ஒரே பாரதம், உன்னத பாரதம்!!

          என் மனம்நிறை நாட்டு மக்களே, மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான அன்பு பற்றி எத்தனையோ திரைப்படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்!!  ஆனால் ஒரு நிஜக் கதை இப்போது அசாமிலே நடந்து வருகிறது.  அசாமின் தின்சுகியா மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமமான போர்குரியில், மோரான் சமூகத்தவர் வசிக்கிறார்கள். இதே கிராமத்தில் தான் ஹோலோ பந்தர் என்று இங்கே அழைக்கப்படும் ஹூலாக் கிபன் வசிக்கிறது.  இந்த கிராமத்தவருக்கும் ஹூலாக் கிபனுக்கும் இடையே ஆழமான தொடர்பு இருக்கிறது என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். கிராமவாசிகள் இன்றும் கூட, தங்களுடைய பாரம்பரியமான நற்பண்புகளைப் பின்பற்றி வருகிறார்கள்.  ஆகையால் இந்த கிப்பன் குரங்குகளோடு இருக்கும் உறவுகள் மேலும் பலப்படும் வகையில் அனைத்துச் செயல்களையும் செய்திருக்கிறார்கள். இந்த கிப்பன்ஸ் குரங்குகளுக்கு வாழைப்பழங்கள் பிடிக்கும் என்று உணர்ந்த போது, உடனடியாக வாழை சாகுபடியை ஆரம்பித்தார்கள்.  இதைத் தவிர, எப்படி தங்களைச் சேர்ந்தவர்களுக்குச் செய்வார்களோ, அதைப் போலவே கிப்பன்ஸ் குரங்குகளின் பிறப்பு-இறப்போடு தொடர்புடைய அனைத்துச் சடங்குகளையும் செய்தார்கள்.   இவர்கள் கிப்பன்ஸ் குரங்குகளுக்குப் பெயர்களையும் சூட்டியிருக்கிறார்கள்.  தற்போது மின்கம்பிகளால் இவற்றுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன என்பதறிந்து இதை அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்கள், விரைவாக இதற்கான தீர்வும் காணப்பட்டது.  இப்போதெல்லாம் படங்களெடுத்தால் அவற்றுக்கு ஏற்ப இந்த கிப்பன்ஸ் குரங்குகள் போஸ் கொடுக்கின்றன என்று எனக்குச் சொன்னார்கள். 

          நண்பர்களே, விலங்குகளிடம் நேசத்தோடு இருப்பதிலே நமது அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை.  அருணாச்சலைச் சேர்ந்த நமது சில இளைய நண்பர்கள், 3 டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.  ஏன் தெரியுமா?  ஏனென்றால், கொம்புகளுக்காகவும், பற்களுக்காகவும் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை இவர்கள் தடுத்து அவற்றைக் காக்க விரும்புகிறார்கள்.  நாபம் பாபு, லிகா நானா ஆகியோரின் தலைமையின் கீழ் இந்தக் குழுவானது, விலங்குகளின் பல்வேறு பாகங்களை 3டி பிரிண்டிங் செய்கிறது. விலங்குகளின் கொம்புகளாகட்டும், அவற்றின் பற்களாகட்டும், இவையனைத்தும் 3 டி பிரிண்டிங்கால் தயார் செய்யப்படுகின்றன.  இவற்றைக் கொண்டு மீண்டும் உடைகள் மற்றும் தொப்பி போன்ற பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.  இந்த வித்தியாசமான மாற்றுக்களைத் தயாரிப்பதில் மக்கும் தன்மையுடைய பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.  இப்படிப்பட்ட அற்புதமான முயற்சிகளுக்கு எத்தனை ஆதரவளிக்க முடியுமோ அத்தனையும் அளிக்க வேண்டும்.  அதிக அளவிலான ஸ்டார்ட் அப்புகள் இந்தத் துறையிலே முன்வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன், இதனால் நமது விலங்கினங்கள் பாதுகாக்கப்படும், நமது பாரம்பரியமும் வளப்படும்.

          என் உளம்நிறை நாட்டு மக்களே, மத்தியப் பிரதேசத்தின் ஜாபுவாவிலே மிக அருமையான ஒரு விஷயம் நடந்து வருகிறது, இதை நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.  அங்கே நமது துப்புரவுப் பணியாள சகோதர சகோதரிகள் ஓர் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.  இந்த சகோதர சகோதரிகள், கழிவுப் பொருட்களிலிருந்து செல்வம் ஈட்டுதல் என்ற விஷயத்தை நிஜமாக்கிக் காட்டியிருக்கிறார்கள்.  இந்தக் குழுவானது ஜாபுவாவின் ஒரு பூங்காவில் சேரும் குப்பைகளைக் கொண்டு, அற்புதமான கலைப்படைப்புக்களை உருவாக்கியிருக்கின்றது.  தங்களுடைய இந்தப் பணிக்கான அக்கம்பக்கத்திலிருந்து நெகிழிக் கழிவுகள், பயன்படுத்தப்பட்ட பாட்டில்கள், டயர்கள், குழாய்கள் ஆகியவற்றைத் திரட்டியிருக்கிறார்கள். இந்தக் கலைப்படைப்புக்களில் ஹெலிகாப்டர்கள், கார்கள், பீரங்கிகள் போன்றவை அடங்கும்.  அழகான தொங்கும் பூஞ்சட்டிகளையும் உருவாக்கியிருக்கிறார்கள்.  இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் டயர்கள், ஓய்வெடுக்கும் இருக்கைகளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  துப்புரவுப் பணியாளர்களின் இந்தக் குழு, Reduce, Reuse, Recycle, அதாவது குறைவாய் பயன்படுத்தி, மீள்பயன்படுத்தி, மறுசுழற்சி செய்தல் என்ற மந்திரத்தை தனதாக்கிக் கொண்டிருக்கிறது.  இவர்களுடைய முயற்சிகளால் பூங்கா மிகவும் நேர்த்தியாகக் காட்சியளிக்கிறது.  இதைக் காண வட்டார மக்களோடு சேர்ந்து அக்கம்பக்க மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள்.

          நண்பர்களே, நமது தேசத்தின் பல ஸ்டார்ட் அப் குழுக்களும் கூட சுற்றுச்சூழலுக்கு ஊக்கமளிக்கும் வகையிலான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் என்பது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது.   e -Conscious என்ற பெயருடைய ஒரு குழுவானது, நெகிழிக் கழிவுகளைப் பயன்படுத்தி, சூழலுக்கு நேசமான பொருட்களைத் தயாரித்து வருகிறது.  நமது சுற்றுலாத் தலங்கள், குறிப்பாக மலைப் பகுதிகளில் பரவியிருக்கும் குப்பைக்கூளங்களைப் பார்த்த பிறகுதான் இப்படிச் செய்வதற்கான எண்ணமே இவர்களுக்கு வந்ததாம்.  இப்படிப்பட்ட மனிதர்களின் மேலும் ஒரு குழுவானது, Ecokaari என்ற பெயருடைய ஒரு ஸ்டார்ட் அப்பைத் தொடங்கியிருக்கிறது.  இந்த நெகிழிக் கழிவுகளைக் கொண்டு பலவகையான அழகான பொருட்களைத் தயாரிக்கின்றார்கள். 

          நண்பர்களே, பொம்மைகளை மறுசுழற்சி செய்வதும் கூட, நாமனைவரும் இணைந்து பணியாற்றக்கூடிய ஒரு துறை தான்.  குழந்தைகள் பலர் விரைவாகவே பொம்மைகளிடம் சலித்துப் போய் விடுகின்றனர். அதே நேரத்தில், பொம்மைகளோடு விளையாட மாட்டோமா என்ற ஏக்கக் கனவுகளைக் காணும் குழந்தைகளும் இருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். எந்தப் பொம்மைகளோடு உங்கள் குழந்தைகள் விளையாடுவதில்லையோ, அவை எங்கே பயனாகுமோ அத்தகைய இடங்களில் நீங்கள் அளிக்கலாமே!!  இதுவுமே கூட சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒரு நல்ல வழியாகும்.  நாமனைவரும் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டால் தான் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும், தேசத்தை முன்னேற்றவும் முடியும்.

          எனக்குப் பிரியமான நாட்டு மக்களே, சில நாட்கள் முன்பாக, நாம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று ரக்ஷாபந்தன் நன்னாளைக் கொண்டாடினோம். அந்த நாளன்று உலகம் முழுவதும் உலக சம்ஸ்கிருத தினமும் கொண்டாடப்பட்டது.  இன்றும் கூட நாட்டிலும் சரி, அயல்நாடுகளிலும் சரி, சம்ஸ்கிருதத்தின்பால், மக்களுக்கு சிறப்பானதொரு ஈர்ப்பு தென்படுகிறது.  உலகின் பல நாடுகளில் சம்ஸ்கிருத மொழி தொடர்பாக பல வகையான ஆய்வுகளும், சோதனைகளும் செய்யப்பட்டு வருகின்றன.  மேலும் நாம் தொடர்வதற்கு முன்பாக உங்களுக்காக நான் ஒரு சிறிய ஒலிக்குறிப்பை இசைக்க விரும்புகிறேன்.

  • ஒலிக்குறிப்பு –

         நண்பர்களே, இந்த ஒலிக்குறிப்பு ஐரோப்பாவின் ஒரு நாடான லிதுவேனியாவோடு தொடர்புடையது.  அங்கே வைடிஸ் விடூனஸ் என்ற ஒரு பேராசிரியர், வித்தியாசமானதொரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார், இதன் பெயர் “சம்ஸ்கிருதம் ஆன் தி ரிவர்ஸ்” என்பதாகும்.  சிலர் அடங்கிய ஒரு குழுவானது அங்கே ஓடும் நேரிஸ் ஆற்றின் கரையிலே கூடி, அங்கே வேதங்கள் மற்றும் கீதையை ஓதினார்கள்.  இப்படிப்பட்டதொரு முயற்சி கடந்த சில ஆண்டுகளாக அங்கே நடந்து வருகிறது.  நீங்களும் கூட சம்ஸ்கிருதத்தைப் பெருக்கும் இப்படிப்பட்ட முயற்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டி வாருங்கள். 

         எனதருமை நாட்டு மக்களே, நம்மனைவரின் வாழ்க்கையிலே உடலுறுதி என்பதற்கு மிகவும் மகத்துவம் உண்டு.  உடலுறுதியோடு இருக்க நாம் நமது உணவு, வாழ்க்கைமுறை ஆகியவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டும்.  உடலுறுதியின்பால் விழிப்புணர்வை  மக்களிடம் ஏற்படுத்த, ஃபிட் இண்டியா இயக்கம் தொடங்கப்பட்டது.  ஆரோக்கியமாக இருப்பதற்காக இன்று அனைத்து வயது, அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும், யோகக்கலையைப் பயின்று வருகிறார்கள்.  மக்கள் தங்களுடைய உணவுத் தட்டுக்களில் இப்போதெல்லாம் அருமையான உணவான சிறுதானியங்கள், அதாவது ஸ்ரீ அன்னத்திற்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.  இந்த அனைத்து முயற்சிகளின் நோக்கம் என்னவென்றால், அனைத்துக் குடும்பங்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது தான்.

       நண்பர்களே, நம்முடைய குடும்பங்கள், நமது சமூகம், நமது தேசம், இவை அனைத்தின் எதிர்காலமும் நமது குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தைச் சார்ந்தே இருக்கின்றன; குழந்தைகளின் நல்ல உடல் ஆரோக்கியத்தின் அடித்தளம் அவர்களுக்கு சரியான வகையிலான ஊட்டச்சத்து கிடைப்பது தான்.  குழந்தைகளின் ஊட்டச்சத்து தான் தேசத்தின் முதன்மை. அவர்களின் ஊட்டச்சத்துத் தேவைகளின் மீது ஆண்டு முழுவதும் நமது கவனம் இருக்கிறது என்றாலும், ஒரு மாதம், தேசமானது இதன் மீது விசேஷ கவனத்தைச் செலுத்துகிறது.  இதன் பொருட்டு ஒவ்வோர் ஆண்டும், செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்கு இடையே ஊட்டச்சத்து மாதத்தைக் கொண்டாடுகிறது.  ஊட்டச்சத்து தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஊட்டச்சத்து விழாக்கள், ரத்த சோகை தொடர்பான முகாம்கள், சிசுக்களின் வீடுகளுக்குச் சென்று பார்வையிடுதல், கருத்தரங்குகள், இணையவழி கருத்துப் பரிமாற்றங்கள் போன்ற பல வழிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  பல இடங்களில் ஆங்கன்வாடிகள் மூலமாக தாய்-சேய் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.  இந்தக் குழுவானது ஊட்டச்சத்துக் குறைபாடு உடைய குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிசுக்களின் அன்னையரைக் கண்காணிக்கின்றது. தொடர்ந்து கவனிக்கின்றது. அவர்களுடைய ஊட்டச்சத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.  கடந்த ஆண்டு ஊட்டச்சத்து இயக்கம், புதிய கல்வித் திட்டத்தோடு இணைக்கப்பட்டு விட்டது.  ஊட்டச்சத்தோடு சேர்ந்த படிப்பு என்ற இயக்கம் வாயிலாக, குழந்தைகளின் சமச்சீரான வளர்ச்சி மீது கவனம் செலுத்தப்படுகிறது.  நீங்களும் கூட உங்கள் பகுதியிலே ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு இயக்கங்களோடு இணைய வேண்டும்.  உங்களுடைய ஒரு சிறிய முயற்சியால், ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் அதிக சக்தி கிடைக்கும்.

       எனதருமை நாட்டுமக்களே, இந்த முறை மனதின் குரலில் இவ்வளவே! மனதின் குரலில் உங்களோடு உரையாடியது எனக்கு எப்போதும் போலவே நன்றாக இருந்தது.  ஏதோ நான் எனது குடும்ப உறுப்பினர்களோடு அமர்ந்து, மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தது போன்றதொரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது.  நான் என்றுமே உங்கள் மனங்களோடு தொடர்புடையவனாக இருந்திருக்கிறேன்.  உங்களுடைய பின்னூட்டங்கள், உங்களுடைய ஆலோசனைகள் ஆகியன எனக்கு மிகவும் மதிப்பானவை. அடுத்த சில நாட்களில் பண்டிகைகள் பல வரவிருக்கின்றன.  நான் உங்கள் அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.  ஜன்மாஷ்டமி பண்டிகையும் வரவிருக்கிறது.  அடுத்த மாதத் தொடக்கத்தில் பிள்ளையார் சதுர்த்தியும் வரவிருக்கிறது.  ஓணம் பண்டிகையும் சில நாட்களில் வந்து விடும். மிலாத் உன் நபிக்கும் நான் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

         நண்பர்களே, இந்த மாதம் 29ஆம் தேதியன்று தெலுகு பாஷா தினம் வரவிருக்கிறது.  இது உண்மையிலேயே மிகவும் அற்புதமானதொரு மொழி. உலகெங்கிலும் இருக்கும் அனைத்துத் தெலுகு மொழி பேசுவோருக்கும், தெலுகு பாஷா தினத்திற்கான நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

பிரபஞ்ச வியாப்தங்கா உன்ன,

தெலுகு வாரிகி,

தெலுகு பாஷா தினோத்ஸவ ஷுபாகாங்க்ஷலு.

         நண்பர்களே, நீங்களனைவரும் மழைக்காலத்தில் கவனமாக இருங்கள், மழைநீரைச் சேகரிக்கும் இயக்கத்தில் பங்கெடுக்கவும் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.  ஒரு மரம், தாயின் பெயரில் இயக்கம் பற்றி உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.  அதிக அளவிலான மரங்களை நடுங்கள், மற்றவர்களையும் நட ஊக்கப்படுத்துங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன்.   வரவிருக்கும் நாட்களில் பேரிஸ் நகரிலே, பேராலிம்பிக்ஸ் தொடங்க இருக்கிறது.  நமது மாற்றுத் திறனாளி சகோதர சகோதரிகள் அங்கே செல்லவிருக்கிறார்கள்.  140 கோடி பாரதீயர்கள், தங்களுடைய விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கக்குரல் கொடுப்போம்.  நீங்களும் கூட #cheer4bharat என்பதோடு இணைந்து, நமது விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளியுங்கள்.  அடுத்த மாதம் நாம் மீண்டும் ஒருமுறை இணைவோம், பல விஷயங்கள் குறித்து உரையாடி மகிழ்வோம்.  அதுவரை, எனக்கு விடை தாருங்கள்.  பலப்பல நன்றிகள், வணக்கம்.

முதல் முறையாக செங்கோட்டையில் இருந்து மைசூருக்கு சிறப்பு ரயில்!

railway news - 2026
#image_title

செப்டம்பர் 4, 5, 7, 8 ஆகிய தேதிகளில் செங்கோட்டையிலிருந்து அருப்புக்கோட்டை மானாமதுரை, காரைக்குடி, பெங்களூர் வழியாக மைசூர் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மைசூரில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 4.50 மணிக்கு செங்கோட்டையைச் சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரவு 7:45க்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.20 மணிக்கு மைசூரை சென்றடைகிறது.

பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு ரயில்கள் மிகவும் குறைவு. பல லட்சம் பேர் ரயில்களில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் போதிய ரயில் வசதிகள் இல்லை. இதனால் முக்கியமான நாட்களில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும்.

அந்த வகையில்., விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினங்கள், விடுமுறை தினங்கள் மொத்தமாக வருவதால் மைசூருல் இருந்து பெங்களூர் வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், செப்டம்பர் 4, 5, 7, 8 ஆகிய தேதிகளில் செங்கோட்டையிலிருந்து மானாமதுரை, காரைக்குடி, பெங்களூர் வழியாக மைசூர் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இதன்படி செப்டம்பர் 4ம் தேதியான புதன்கிழமை மற்றும் செப்டம்பர் 8ம் தேதியான சனிக்கிழமை ஆகிய நாட்களில் மைசூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்திற்கு இரவு ஒரு மணிக்கு வருகிறது. அதன் பிறகு பாங்கருபேட் குப்பம் வழியாக தமிழ்நாட்டிற்குள் வந்து சேலம், கரூர் திருச்சி வழியாக கரைக்குடி சென்று அதன்பிறகு மானாமதுரை, அருப்புக்கோட்டை, ராஜபாளையம், தென்காசி வழியாக வழியாக செங்கோட்டைக்கு வியாழக்கிழமை மற்றும் ஞாயிறு அன்று மாலை 4.50க்கு செல்கிறது.

இதேபோல் மறுமார்க்கமாக செங்கோட்டையிலிருந்து 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரவு 7:45க்கு புறப்பட்டு செல்லும் ரயில தென்காசி, சிவகாசி, ராஜபாளையம், மானமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், சேலம், குப்பம், பெங்களுர் வழியாக மைசூருக்கு வெள்ளிக்கிழமை மற்றும் திங்கள்கிழமை பிற்பகல் 2.20க்கு சென்றடைகிறது” இவ்வாறு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

செங்கோட்டைக்கு பெங்களூர் மார்க்கமாக மைசூரில் இருந்து இரு மார்கங்களிலும் சிறப்பு ரயில் இயக்கம் என்பது மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தி. ஆனால் இதில் இரண்டு குறைகள் உள்ளன. முதலாவது திருச்சி புதுக்கோட்டை வழியாகச் செல்வதால் பயண நேரம் மிகவும் அதிகமாக உள்ளது. இரண்டாவது இரு மார்க்கங்களிலும் பெங்களூரைக் கடப்பது நேரம் கெட்ட நேரத்தில். எனவே இது பயணிகளுக்கு சிரமத்தைத் தருவதே என்று கூறுகின்றனர் பயணிகள் சங்கத்தினர் சிலர். எனினும் இந்த ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு விறுவிறுவென நடந்து வருகிறது.