Home Blog Page 173

முக்கோண அரசியல்! முதற்கோணம் இங்கிருந்து!

putin modi meet - 2026

மீண்டும் டிராகனோடு தில்லி! : உலகமே உற்று நோக்கும் உக்ரைனுக்கு பாரதப் பிரதமர் மோடி விஜயம் செய்து இருக்கிறார். பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சுமார் பத்து மணிநேர பயணமாக ரயிலில் உக்ரைனை அடைய தற்போது என்ன அவசியம். எதனை முன்னிட்டு இந்த பயணம்? யார் நலனுக்காக?

இப்படி பலதரப்பட்ட விவாதத்தை இது எழுப்பி இருக்கிறது என்பதே நிஜம்.

உக்ரைன் ரஷ்யா மோதலில், உக்ரைன் கை ஓங்கி இருக்கிறது என்பது போன்ற ஒரு தோற்றம் கடந்த சில நாட்களாக ஏற்படுத்தப் பட்டிருக்கும் நிலையில், என்ன சமாதானம் பேச, ஜெலஸ்க்கியைப் பார்க்க பிரதமர் நரேந்திர மோடி சென்றிருக்கிறார்?

கொஞ்சம் நுட்பமான அரசியல் சாகசம் இது என்கிறார்கள் உலக அரசியல் பார்வையாளர்கள். எப்படி?

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதத்தில் நடக்க இருக்கிறது என்பது யாவரும் அறிந்ததே! இதில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை பெற்றதாக நம்பப்பட்டு வந்த நிலையில், யாருமே எதிர்பாராத வண்ணம் ஜோபைடன் பின் நகர கமலா ஹாரீஸ் முன்னிலை படுத்தப் பட்டார் அக்கட்சியினரால். அது அவர்கள் எதிர்பார்த்த பலனை தந்திருப்பதாக செய்திகள் உலா வருகின்றன.

எப்படியும் அடுத்த அதிபர் ட்ரம்ப் தான் என்கிற இடத்தில் இருந்து தற்போதைக்கு இருவரும் சம பலத்துடன் இருப்பதாக புள்ளி விவர புலிகள் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்கள். திரைமறைவு வித்தகர்களும் எப்பேர்ப்பட்ட தில்லாலங்கடி வேலைகளைஸ் செய்தாவது கமலாஹாரீஸை ஜெயிக்கவைக்கப் பார்க்கிறார்கள். இதற்காக மில்லியன் கணக்கான டாலர்களை வாரி இறைத்து வருகிறார்கள்.

சோரஸ் போன்ற மிஷனரி கைக்கூலிகள் ஏற்கெனவே தங்கள் கைவரிசை காட்ட ஆரம்பித்து விட்டதாகவும், அதன் ஒரு பகுதியாகத் தான் பங்களாதேஷ் ஆட்சி கவிழ்ப்பு முதற்கொண்டு உக்ரைனில் ஜெலன்ஸ்கியை கொண்டு ரஷ்ய எல்லையில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் அத்தனை வேலைகளையும் செய்து கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்!

ஜோபைடன் கட்சியினருக்கு ஜெலன்ஸ்கியின் வெற்றி மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அது தவிர மத்திய கிழக்கு நாடுகளில் ரஷ்யாவின் கை ஓங்கி விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.

இஸ்ரேல் ஓரண்டை இழுத்து விடும் ஹமாஸ் ஹௌதி மற்றும் ஹூத்தி போராளி குழுக்களின் ஆக்காத்தியங்களை சமாளிக்க முன் எப்போதும் இல்லாத வகையில் தனது கடற்படை கப்பல்கள் தொகுதிகளை மத்திய கடல் பிராந்தியத்தில் கொண்டு வந்து நிறுத்தி வைத்திருக்கிறது அமெரிக்கா. இது ஆஃப்கானிஸ்தானில் செய்த செலவினங்களை காட்டிலும் கூடுதலாக தற்சமயம் செலவு செய்து வருகிறது அமெரிக்கா என்கிறார்கள்.

எல்லாம் இந்த ஆண்டு இறுதி வரையில் தான் என்பது அனைவருக்கும் நன்கு தெரிகிறது; அதிலும் குறிப்பாக ஜெலன்ஸ்கிக்கு! அதைத் தொடர்ந்துதான் கடந்த ஜூன் மாதம் இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவது உறுதியானதும் பம்ம ஆரம்பித்த ஜெலன்ஸ்கி, டிரம்ப் மற்றும் பைடன் நேருக்கு நேர் நின்று விவாதம் நிகழ்ச்சிக்கு பின் நேரிடையாகவே டரம்ப்பிடன் சரண் ஆனார்.

ஆனால் இதனை மேற்கு உலகம் ரசிக்கவில்லை! அவரையும் பின்வாங்க விடவுமில்லை. அப்போது தான், தான் யாருடைய வாலைப் பிடித்துக் கொண்டு இருக்கிறோம் என்பதையே முழுமையாக உணர்ந்து கொண்டு இருக்கிறார் ஜெலன்ஸ்கி!

இதனிடையே கடந்த மாதம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா விஜயம் செய்திருந்தார். இதோ இன்று உக்ரைன் பயணம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களுக்காக அரசியல் சதுரங்கத்தில் சடுகுடு ஆடிக் கொண்டு இருக்க, இந்தியாவும் தன் பங்கிற்கு காய்களை நகர்த்த ஆரம்பித்து விட்டது.

ஒரு பக்கம் சீனா தனது கச்சா எண்ணெய் வர்த்தகத்தை கொஞ்சம் கொஞ்சமாக ரஷ்யாவிடம் இருந்து நகர்த்தி மத்திய கிழக்கு நாடுகளில் நிலை கொள்ள ஆரம்பிக்க, தற்சமயம் முதல் இடத்திற்கு இந்தியா முன்னேற்றம் கண்டு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குகிறது.

அமெரிக்க – உக்ரைன் – ரஷ்யா என உள்ள முக்கோண அரசியல் சித்து விளையாட்டை இந்தியா முடிவுக்கு கொண்டு வரப் பார்க்கிறது. அதேசமயம் சீன ரஷ்யாவின் நீண்ட கால திட்டமிடலில் ஓர் பகுதியாக அமெரிக்காவை ஆசிய பிராந்தியத்தில் கால் வைக்க விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறது. இதில் இந்திய நலனும் இருப்பதை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள் நம்மவர்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவைப் பிடித்தாட்டும் ஜெலன்ஸ்கியை ஏதோவொரு விதத்தில் கட்டுப்படுத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சென்றிருப்பதாகவே மேற்கு உலகம் நம்புகிறது. போதாக்குறைக்கு லண்டன் பற்றி எரியும் இத்தருணத்தில், மோடியை அவர்களால் பெரியதாக முறைத்துக் கொள்ளவும் முடியவில்லை.

சமய சந்தர்ப்பத்தை நன்கு உணர்ந்த நம்மவர்களுக்கும் அடுத்ததாக தேர்ந்தெடுக்கப்படும் அமெரிக்க அதிபர் யார் என்பதை விடவும் அவர்களின் அரசியல் ஆதாரங்களுக்கு நம் இந்திய தேசம் பலிகடா ஆகிவிடக்கூடாது என்பதில் முனைப்புடன் செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.

கடந்த நான்கு ஆண்டுகளாக இல்லாத வகையில் இந்திய சீன உறவில் சில பல ரஸாயன மாற்றங்கள் தென்படத் தொடங்கியிருக்கிறது. கொரனாவிற்கு பின்னான காலத்தில் தடை செய்யப்பட்டுள்ள சீனாவிற்கான நேரடி விமான சேவையை மீண்டும் புதுப்பிக்க ஆயத்தப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்க இருக்கிறார்கள். அது தவிர எல்லை பிரச்னைகளைத் தவிர்த்து மற்ற உறவுகளை ஏற்படுத்தவும், மின்னணுப் பொருட்களை மற்றும் அது சார்ந்த உபகரணங்களை மீண்டும் இறக்குமதி செய்யவும் முடிவு மேற்கொண்டு வருகிறார்கள்.

கடந்த நான்கு வருடங்களாக சுமார் 100 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகம் என இருந்தது, தற்போதைக்கு இந்தக் காலாண்டில் மட்டுமே 75 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகம் என மாறியிருப்பதை கொண்டே பலவற்றை யூகிக்கலாம் என்கிறார்கள் அவர்கள்.

இதனையும் தாண்டி, சீனா தனியாகவும் தைவான் தனியாகவும் இந்திய நிறுவனங்களின் முதலீடு மற்றும் மூலோபாய வர்த்தகப் பங்களிப்பை கொண்ட ஒரே நாடாக நம் இந்திய தேசம் மாறி வருகிறது என்பதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார்கள் உலக வர்த்தக ஆய்வாளர்கள்.

பற்பல முரண்பாடு கொண்டவர்களையும் ஒரே நேரத்தில் கையாளும் பக்குவத்திற்கு நம் இந்திய தேசம் பரிமளித்து வருவதையே இது காட்டுகிறது. இதில் வித்தகர்களாக நம்மவர்கள் மாறி வருகிறார்கள். உதாரணத்திற்கு நம் தமிழக அரசியல் கள நிலவரமும் அதில் ஒன்று தான் போலிருக்கிறது.

என்ன நடக்கிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்!

– ஜெய் ஹிந்த் ‘ஸ்ரீராம்’

15 ஆண்டுகளுக்குப் பின், சங்கரன்கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

sankarankoil kumbabishekam - 2026
#image_title

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோயில் சங்கரநயினார் ஆலயத்தில் இன்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி தென்காசி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் பெருவாரியான பக்தர்கள் கும்பாபிஷேக வைபவத்தில் கலந்து கொண்டு ஸ்வாமியின் அருள் பெற்றார்கள்.

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோயில்களில் ஒன்று, சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி திருக்கோவில். இந்தக் கோவிலில் கடந்த 2008ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் 12 ஆண்டுகளுக்கு பின் 2020-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக நடைபெறவில்லை. இந்நிலையில், தற்போது 15 ஆண்டுகளுக்கு பின் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோவில் குடமுழுக்குத் திருவிழாவை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. ஆறு கால யாக சாலை பூஜைகளிலும் தினமும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.  வெள்ளிக்கிழமை இன்று காலை ஆறாம் கால யாக சாலை பூஜைகளுக்குப் பின்னர், கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவில் உள் பிராகாரத்தில் 66 குண்டங்கள் கொண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. இதன் பூர்வாங்க பூஜைகள் கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. மங்கள வாத்தியம், வேதபாராயணம், திருமுறை பாராயணம் ஆகியவற்றுடன், ஆச்சார்ய விஷேச சந்தி, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம் ஆகியவை நடந்தேறி, 2-ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. பின் மூல மூர்த்திகள் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும், மாலையில் ஆச்சார்ய விஷேச சந்தி விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம் ஆகியவற்றுடன் 3 மற்றும் 4-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

இதன் பின் நேற்று காலை பரிவார யாகசாலையில் மகாபூர்ணாஹுதி, தீபாராதனை முடிந்து கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் பிரதான யாகசாலையில் மஹாபூர்ணாஹுதி, உபச்சாரங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, கும்பாபிஷேக தினமான இன்று 6ஆம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. இன்று காலை 5 மணிக்கு மேல் மங்கள வாத்தியம், 5.30க்கு வேத பாராயணம், காலை 6 மணிக்கு திருமுறை பாராயணம், 6:30 மணி முதல் விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. 

காலை 8 மணிக்கு கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து  9 மணிக்கு கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி, சங்கர நாராயணசாமி விமானம் மற்றும் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகமும், 9.20க்கு கோமதி அம்பிகை, சமேத சங்கரலிங்க சுவாமி மற்றும் சங்கரநாராயணசாமி மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் அதைத் தொடர்ந்து மகா தீபாராதனை ஆகியவை சிறப்பாக நடைபெற்றன.

இந்தக் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் மூர்த்தி, தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், ராணிஸ்ரீ குமார் எம்.பி., ராஜா எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, அ.தி.மு.க. மாநில கொள்கைபரப்பு துணை செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், அல்லி ராணி அய்யாத்துரை பாண்டியன், அறங்காவலர் குழு தலைவர் சண்முகையா, அறங்காவலர்கள் ராமகிருஷ்ணன், முப்பிடாதி, வெள்ளைச்சாமி, முத்துலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்று தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால்,  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சங்கரன்கோவில் நகரம் களைகட்டியுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தென்காசி மாவட்ட எஸ்பி., சீனிவாசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணிகள் ஈடுபட்டிருந்தனர். 

கும்பாபிஷேக தினமான இன்று மாலை 4.30க்கு மகாஅபிஷேகம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்று, பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறும்.

கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நமது பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பானது. நிகழ்ச்சி குறித்த காட்சிப் பதிவுகளைக் காண லிங்க்…

https://fb.watch/u8ypM1MCYm

சுதந்திரத்தை இழிவு செய்வோருக்கு காவல்துறை ஒத்துழைப்பு: இந்து முன்னணி கண்டனம்!

kadeswara subramaniam hindu munnani - 2026

சுதந்திரத்தை இழிவு செய்வோருக்கு காவல்துறை ஒத்துழைப்பு வழங்குவதாகவும், தமிழக காவல்துறையினரின் மாண்பு குறைகிறது என்பதை உணருங்கள் என்றும் கூறி, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

நமது 78 வது சுதந்திர தினத்தை கடந்த 15ம் தேதி நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடினோம்.

ஆனால் சுதந்திர தினத்தை கருப்பு நாளாக அறிவித்து துக்க தினமாக தந்தை பெரியார் திராவிட கழகத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் கோபால ராமகிருஷ்ணன் என்பவர் முகநூலில் சுதந்திர தினத்தை அருவருக்கத்தக்க வகையில் இழிவுபடுத்தியும், தேச ஒற்றுமைக்கு எதிராகவும், பிரிவினைவாதத்தை முன்னிறுத்தியும் பதிவிட்டிருந்தார்.

அந்த கொடுஞ்செயலுக்கு பல தரப்பிலும் எதிர்ப்புகள் வந்த நிலையிலும் காவல் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே மக்கள் மனநிலை அறிந்து இந்து முன்னணி பொறுப்பாளர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தார்கள். அதன்பிறகும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை, வழக்கும் பதியவில்லை. அதுகுறித்து கேட்ட போது “அது அவரின் கருத்து சுதந்திரம்” என்று சொல்கிறார்கள்.

பல்லாயிரம் பேர் ரத்தம் சிந்தி, பல இன்னல்கள் பட்டு போராடிப் பெற்ற சுதந்திரத்தை இழிவுபடுத்துவது எந்த வகையிலும் கருத்து சுதந்திரம் ஆகாது. மேலும் சுதந்திரத்தை இழிவு படுத்த எவருக்கும் கருத்து சுதந்திரம் இல்லை, எனவே மேற்படி த.பெ.தி.க மாவட்ட தலைவர் கோபால ராமகிருஷ்ணன் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணி பேரியக்கம் கடந்த 21/08/2024 அன்று ஆர்பாட்டம் அறிவித்தது.

ஆனால் தமிழக காவல்துறை ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததுடன் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களை ஆர்பாட்டத்திற்கு செல்லும் வழியிலேயே தடுத்து கைது செய்துள்ளது. அந்த வகையில் தமிழக காவல்துறையின் செயல் ஆங்கிலேய கால அடக்குமுறையை நினைவுபடுத்துகிறது. காவல்துறையின் அக்கிரம செயலுக்கு இந்து முன்னணி பேரியக்கம் கடும் கண்டத்தை பதிவு செய்கிறது.

தமிழகத்தின் ஆட்சியில் இருப்பவர்கள் சுதந்திர தினத்தை துக்க நாளாக அனுசரித்தவர்களின் வழி வந்தவர்கள் என்பதால் அவர்களை மனம் குளிர்விக்க வேண்டி தேசியக் கொடியை முன்னிறுத்தி பயிற்சி பெற்று காவல் பணிக்கு வந்துள்ள காவல்துறையினர் சுதந்திரத்தை இழிவு செய்பவர்களை வேடிக்கை பார்ப்பதும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்ப்பதும் சுதந்திரத்தையும் தேசத்தையும் அவமதிக்கும் செயல்.

ஆட்சிக்கு யார் வேண்டுமானாலும் வருவார்கள். ஆனால் தேசமும், தேச ஒற்றுமையும், சுதந்திரத்தை பேணிகாப்பதையும் தலையாய கடமையாக கொண்ட காவல்துறை ஆட்சியாளர்களின் முரண்பாடுகளுக்கெல்லாம் முட்டுகொடுத்து தன் கடமையை புறக்கணிக்கக் கூடாது.

சுதந்திரத்தை இழிவு செய்பவனுக்கு இருக்கும் கருத்து சுதந்திரம், இழிவு செய்வோரை எதிர்த்து போராடவும் நடவடிக்கை எடுக்க கோரவும் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

தேச ஒற்றுமையையும், தேசியத்தையும் பிரதானமாக கருதும் இந்து முன்னணி பேரியக்கம் சுதந்திர தினத்தை இழிவு படுத்துவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இராது.

எனவே சுதந்திர தினத்தை இழிவு செய்த த.பெ.தி,க பிரமுகர் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிந்து கைது செய்யவேண்டும், தவறினால் இந்து முன்னணி பேரியக்கம் தொடர் ஜனநாயக மற்றும் சட்ட போராட்டத்த்தை முன்னெடுக்கும் என்று தெரிவித்துகொள்கிறேன்.

டேக்வாண்டோ போட்டியில் வென்ற மாணவனுக்கு கடையநல்லூர் எம்.எல்.ஏ., பாராட்டு!

DSC 0483 - 2026


செங்கோட்டையில் தேசிய அளவில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் 2ஆம் இடம் பிடித்து வெற்றி பெற்ற மாணவனை கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா  வாழ்த்து தெரிவித்தார்.

 செங்கோட்டை விசுவநாதபுரம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து, கருமாரி தம்பதியினரின் மகன் கவின்ஹரீஷ்குமார் இவர் அந்த பகுதியில் உள்ள எம்எம்.அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் ஆகஸ்ட் மாதம் 17. 18ஆம் தேதிகளில் உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 20224-2025ஆம் ஆண்டிற்கான  14வயதுக்குட்பட்ட  இளையோருக்கான நடந்த டேக்வாண்டோ போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டு தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்தார். மேலும் தமிழக அளவில் நடந்த போட்டியில் மாநிலத்தின் முதல் வகுப்பில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

DSC 0453 - 2026


இது குறித்து தகவல் அறிந்த கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி(எ) குட்டியப்பா வெற்றி மாணவர் மற்றும் கலந்து கொண்ட மாணவர்களை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

DSC 0465 - 2026


நிகழச்சியில் பயிற்சியாளா்கள் நாராயணசர்மா, ராணிசந்திரா சமூக ஆர்வலா் ஜாகீர்உசேன் மாணவ, மாணவியா்களின் பெற்றோர், ஆசிரிய பெருமக்கள், சமூக ஆர்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அதனை தொடா்ந்து மாணவர்களை திறந்த ஜீப்பில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு பள்ளி வளாகத்தில் வைத்து மாணவர்கள், ஆசிரியா்கள், சமூக ஆர்வலா்கள், பொதுமக்கள் உள்பட பலா் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனா்.

 

யோகி பாபு, லக்ஷ்மி மேனன் நடிக்கும் ‘மலை’! செப்டம்பரில் வெளியீடு!

மலை யோகி பாபு லக்ஷ்மி மேனன்
#மலை யோகி பாபு , லக்ஷ்மி மேனன்

புளூ ஸ்டார் வெற்றியை தொடர்ந்து லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் மலை செப்டம்பர் மாதம் வெளியாகிறது.

லெமன் லீப் கிரியேசன்ஸ்  தயாரிப்பாளர் R.கணேஷ்மூர்த்தி, சவுந்தர்யா கணேஷ்மூர்த்தி தயாரித்திருக்கும் படம் மலை. 
யோகிபாபு ,  லக்‌ஷ்மி மேனன்,  காளிவெங்கட் மற்றும் அறிமுக குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி
நடித்திருக்கும் படம் செப்டம்பரில் வெளியாகிறது.
அறிமுக இயக்குனர் IP முருகேஷ் இயக்கியிருக்கிறார்.

மனித வாழ்வானது இயற்கையோடு இணைந்தது , மனிதர்களை போல விலங்குகளும், தாவரங்களும் மலைகளும் , ஆறுகளும் நீர் நிலைகளும்  இந்த பூமியில் அதிமுக்கியமானதாக இருக்கிறது.

அதீத மனித ஆசையால் இயற்கையை மெல்ல மெல்ல மனிதர்கள் தங்கள்  சுயநலத்திற்காக அழித்து வந்துள்ளார்கள்.

மனிதன் முதலில் தன் சுய நலத்துக்காக சுரண்ட ஆரம்பித்தது சக மனிதனிடமிருந்துதான். அப்படி இரக்கமில்லாமல் சுரண்ட ஆரம்பிக்கும் மனிதன் மெல்ல மெல்ல இயற்கை வளங்களை சுரண்ட ஆரம்பிக்கிறான். இதிலிருந்து தப்பிக்க அதிகாரம், அரசியல், மதம், சாதி , இனம் என்று இதற்கு பின்னால் நின்றுகொண்டு சக மனிதர்கள் மீது அன்பை மறந்து எதிர்கால சந்ததியினரின் வாழ்வை குறித்து கவலைப்படாமல் மனித பேராசை இயற்கையை மொத்தமாக இன்று அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

தமிழக மலைக்கிராமம் ஒன்றில் நடக்கும் இந்த கதை மனிதனின் சுய நல கோரப்பசிக்கு இயற்கையின் பதில் என்ன? என்பதைப்பற்றிய ஒரு படைப்பாக வந்திருக்கிறது.

யோகிபாபு லக்‌ஷ்மி மேனன் காளிவெங்கட் முதன்மை கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இமான் இசையமைத்திருக்கிறார்.

செப்டம்பர் மாதம் வெளியாகும் திரைப்படத்தின்  பாடல்கள் இன்னும் சில தினங்களில் வெளியாகிறது.

பாஜக., ஆட்சியில்தான் 7 மடங்கு அதிக நிதி! ஸ்டாலினுக்கு ரயில்வே அமைச்சர் கடிதம்!

ashwini vaishnav - 2026
#image_title

தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் 7 மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று, தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.879 கோடி நிதி ஒதுக்கீடு; பாஜக ஆட்சியில் ரூ.6,362 கோடி நிதி ஒதுக்கீடு; இது 7 மடங்கு அதிகம். நிலம் பெற்றுத்தருவதற்கு தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தால் திட்டங்களை விரைவாக செயல்படுத்த முடியும்.

2,749 ஹெக்டர் நிலம் தேவைப்படும் இடத்தில் 807 ஹெக்டர் மட்டுமே கிடைத்து உள்ளது என்று, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் எழுதியுள்ளார்.

அடுத்து, ரயில்வே திட்டங்களுக்கு குறைந்தபட்ச நிதி (ரூ,1,000) ஒதுக்கப்படுவது வழக்கம்தான் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் முழுமை பெறாமலும் ஒப்புக்கொண்டபடி உரிய அனுமதி அல்லது நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட முன் ஏற்பாடுகள் திட்டத்தில் முழுமை பெறாமல் இருக்கும் நிலையில் அந்தத் திட்டம் கைவிடப்படாமல் இருக்க இதுபோன்று குறைந்தபட்ச நிதி (ரூ.1,000) ஒதுக்கப்படும் நடைமுறை பின்பற்றப்படுகிறது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

நிகழ் நிதியாண்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டதைவிட குறைவான நிதி, பொது நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலினும், சில தமிழக ரயில்வே திட்டங்களுக்கு வெறும் ரூ.1,000 மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோரும் கண்டனங்களை வெளிப்படுத்தினர்.

தமிழக அரசின் இயலாமை

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் நிலம் என்பது மாநிலப் பொருளாகும். மாநில அரசு நிலத்தைக் கையகப்படுத்தி அளிக்கும் நிலையில்தான் திட்டங்களை மத்திய அரசு விரைவாக நிறைவேற்ற முடியும். தமிழக ரயில்வே திட்டங்களுக்கு வெறும் ரூ.1,000 மட்டும் ஒதுக்கப்பட்டதற்கு காரணம், தமிழக அரசின் இயலாமையினால் ஏற்பட்ட விளைவுதான். தமிழக அரசு ஒரு அடி எடுத்து வைத்தால், மத்திய அரசு இரண்டு அடி எடுத்து வைக்கும்’ என உறுதி அளிக்கிறேன்.

தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்த விவரம்:
திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலைக்கான 71.33 கி.மீ. புதிய ரயில் பாதைக்கு ரூ. 1,400 கோடி செலவிட அனுமதிக்கப்பட்டது. 41 கிராமங்களில் 273 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்துவதற்கான முன்மொழிவு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்த ரூ.14.49 கோடி தமிழக அரசின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது. ஆனால், இதுவரை நிலத்தைக் கையகப்படுத்தி தமிழக அரசு ஒப்படைக்கவில்லை. இதனால், இந்தத் திட்டம் முழுமையடையாததால் பெயரளவில் இந்தத் திட்டத்துக்கு ரூ. 1,000 ஒதுக்கப்பட்டுள்ளது.

  1. ஈரோடு-பழனிக்கான 91 கி.மீ. புதிய ரயில் பாதை திட்டம் ரூ. 603 கோடியில் அனுமதிக்கப்பட்டது. இதில் தமிழக அரசிடம் நிலம் இலவசமாக வழங்கவும், திட்டச் செலவில் 50 சதவீதத்தை தமிழக அரசின் பங்காக அளிக்கவும் கோரப்பட்டது. ஆனால், மாநில அரசு நிலத்தை வழங்காததுடன், திட்டத்தின் 50 சதவீத நிலுவைத் தொகையைப் பகிரவில்லை. இதனால், இந்தத் திட்டமும் முழுமையடையாததால் பெயரளவுக்கு ரூ.1,000 ஒதுக்கப்பட்டுள்ளது.
  2. அத்திப்பட்டு-புத்தூர் (88 கி.மீ.) புதிய ரயில் பாதை ரூ.527 கோடியில் அனுமதிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கான செலவில் எண்ணூர் துறைமுக கழகம் (இபிடி) 50 சதவீதத்தைப் பகிர்ந்து கொள்ளும் எனக் கூறப்பட்டதால் அனுமதி வழங்கப்பட்டது. அதன் பின்னர் எண்ணூர் துறைமுக கழகம் கடந்த 2012 டிசம்பரில் திட்டச் செலவைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்புதலைத் திரும்பப் பெற்றது. இந்தத் திட்டம், 50 சதவீத செலவைப் பகிர்ந்துகொள்வதன் தேவையின் அடிப்படையில் நிலுவையில் உள்ளது. எனினும், இந்தத் திட்டத்தை தக்கவைக்க பெயரளவுக்கு 1,000 ஒதுக்கப்பட்டது.
  3. மாமல்லபுரம் வழியாக 179 கி.மீ. சென்னை-கடலூர் புதிய ரயில் பாதை திட்ட மதிப்பீடு ரூ. 2,670 கோடி. இந்தத் திட்டத்தில், தற்போதுள்ள விழுப்புரம்-புதுச்சேரி ரயில் பாதையில் புதுச்சேரி-கடலூர் இடையே உள்ள ரயில் பாதைகளை இரட்டைப் பாதையாக இணைத்து செயல்படுத்த 2015-ஆம் ஆண்டு புதுச்சேரி அரசு கோரிக்கை விடுத்தது. இந்தச் சீரமைப்பை இறுதி செய்வது நிலுவையில் உள்ளதால், இந்தத் திட்டத்துக்கும் பெயரளவுக்கு ரூ. 1,000 ஒதுக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட நான்கு திட்டங்களும் கடந்த 2008-09 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டவை.
  1. ஸ்ரீபெரும்புதூர் வழியாக சுமார் 60 கி.மீ. தொலைவு ஆவடி -கூடுவாஞ்சேரி புதிய வழித்தடம் 2013-14 நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்பட்டது. இது தொடர்புடைய அரசுகளின் அனுமதிகளுக்கு உட்பட்டது.

முக்கியமாக, தமிழக அரசு நிலத்தை இலவசமாக வழங்கவும், திட்ட கட்டுமானச் செலவில் 50 சதவீதம் பங்கீடு செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை தமிழக அரசு இறுதி முடிவு செய்யவேண்டிய நிலையில் நிலுவையில் உள்ளது. இதனால், இந்தத் திட்டத்துக்கும் பெயரளவுக்கு ரூ.1,000 ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

மதிப்பீட்டுத் தொகை தோராயமானது: இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியை வைத்தும் குறைந்தபட்ச தொகை (ரூ.1,000) ஒப்பிடப்படுகிறது. இடைக்கால நிதிநிலை அறிக்கை என்பது, மூன்று மாதங்களுக்குரியது. அந்த மதிப்பீட்டுத் தொகை (அக்ரிகேட்டிவ் நம்பர்) தோராயமானது. முழுமையான நிதிநிலை அறிக்கையோடு ஒப்பிட முடியாது என்றும் அமைச்சர் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெளிவுபடுத்தியுள்ளார்.

பாலமரத்தம்மன் முத்தாலம்மன் கோவில்களில் மஹா கும்பாபிஷேகம்

IMG 20240821 WA0006 - 2026
#image_title

அ.புதுப்பட்டி கிராமத்தில் பாலமரத்தம்மன் முத்தாலம்மன் கோவில்களின் மஹா கும்பாபிஷேக விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ பாலமரத்தம்மன் என்ற சுந்தரவள்ளி அம்மன், முத்தாலம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதில் நான்கு கால யாகபூஜைகளை தொடர்ந்து யாக சாலையில் இருந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி அழகர்கோவில், காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து வானத்தில் கருடன் வட்டமிட புனித நீர் ஊற்றப்பட்டு விமான கலசம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மரியாதைகாரர்கள் கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

குரு பக்தி இல்லை என்றால் வாழ்க்கை வீண்!

sringeri swamigal - 2026

தக்ஷிணாம்னாய சிருங்கேரி சங்கராசார்ய ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள் அருளுரைகள்!

“மனிதனின் ஜீவிதத்திலே எவ்வளவோ முன்னுக்கு வந்தாலும் குருபக்தி என்ற ஒன்று இல்லையென்றால் அவனுடைய வாழ்க்கை வீண்தான்” என்று பகவத்பாதாளே சொன்னார். அதனால் நாம் எவ்வளவு பெரிய மனிதரானாலும் எவ்வளவு பெரிய படித்தவர்களானாலும் எவ்வளவு பணக்காரர்கள் ஆனாலும் குருபக்தி என்பது பரம அவசியம்.

“ஸம்ப்ரதாய பரிபாலன புத்த்யா” என்றபடி சங்கரர் தம்முடைய குருவாகிய கோவிந்தபகவத்பாதாளை அத்யந்த ஸ்ரத்தா பக்திகளோடு சேவித்தார் என்கிறபோது நமக்கும் குருபக்தி பரம அவசியம் என்று தனியாக சொல்ல வேண்டியதே இல்லை.

அந்த குருபக்திதான் நமக்கு எல்லாவிதமான சிரேயஸ்ஸை உண்டாக்கும். பரமேஷ்டி குருநாதர் ஸ்ரீ ந்ருஸிம்ஹ பாரதீ மஹா ஸ்வாமிகள் ஓரிடத்திலே, “குருவினுடைய அனுக்ரஹம் இல்லாவிட்டால் உலகத்திலே யாருக்குத்தான் இஷ்டார்த்தங்கள் கிடைக்கும்? ஆகையினால், எல்லா செளக்கியங்களுக்கும் எல்லா நன்மைகளுக்கும் மற்றும் எல்லா சிரேயஸ்களுக்கும் மூல காரணமான குருபாதத்தை நீ வழிபடு” என்று உபதேசம் பண்ணினார்.

நமக்கு மஹான்கள் எல்லாம் உபதேசம் பண்ணுவது நாம் நன்றாக இங்கு சிரேயஸ்ஸை அடைய வேண்டும் என்பதற்காகத்தான். அவர்களுடைய உபதேசங்களை அனுசரித்து நாம் நம் வாழ்க்கையை நடத்திக்கொண்டு வந்தால் நமக்கு நன்மை விளையும். அப்படி அவற்றைக் கடைப்பிடிக்கவில்லை என்றால் நமக்குத்தான் இழப்பு! அவர்களுக்கு ஒன்றும் இல்லை..


யம் ஹி ரக்ஷிதுமிச்சந்தி புத்த்யா ஸம்யோஜயந்தி தம் II
நாம் நற்காரியங்களில் இயங்குவதற்கான பிரேரணையை இறைவன் கொடுக்கிறான்..

மனிதன் எந்தக் காரியத்தில் இறங்க விரும்பினாலும் அதற்கு முதலில் அவனது மனதில் அக்காரியத்தைப் பற்றிய ஓர் எண்ணம் தோன்ற வேண்டும். பிறகுதான் காரியத்தில் இறங்க முடியும். மனதில் எண்ணங்களைத் தோன்ற வைப்பதே இறைவன் தான்..

ஆகவே, இறைவன் இருக்கிறான் என்ற விஷயத்தில் யாருக்கும் சந்தேகமே தேவையில்லை..

எத்தனையோ மஹான்கள் இறைவனின் தரிசனத்தைப் பெற்றார்கள்.. நமக்கு அவனது தரிசனம் கிடைக்காததற்குக் காரணம், நாம் நம்முடைய முன்னோர்கள் கடைப்பிடித்த வழியை – ஸாதனையை – கடைப்பிடிக்காததேயாகும்.

மத்திய அரசின் என்.பி.சி.ஐ.எல்., நிறுவனத்தில் வேலை!

employment career opportunities - 2026
#image_title

என்.பி.சி.ஐ.எல்., எனும் இந்திய அணுசக்தி கழகம் ஸ்டைபென்டியரி டிரெய்னி (ST/TN) ஆபரேட்டர், பராமரிப்பாளர் (Maintainer) என 279 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விண்ணப்பக்க கடைசி தேதி செம்டம்பர் 11ம் தேதி.

மத்திய அரசின் நிறுவனமாக என்பிசிஐஎல் எனும் இந்திய அணுசக்தி கழகம் (Nuclear Power Corporation Of India) செயல்பட்டு வருகிறது.

இதன் தலைமை அலுவலகம் மும்பையில் அமைந்துள்ளது. மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இதன் கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிறுவனத்தில் ஸ்டைபென்டியரி டிரெய்னி (ST/TN) ஆபரேட்டர், பராமரிப்பாளர் (Maintainer) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி, எலக்ட்ரீசியன், பிட்டர், எலக்ட்ரானிக்ஸ், மெஷினிஸ்ட், டர்னர், வெல்டர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி என்ன?

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் பாடங்களில் 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்.

எலக்ட்ரீசியன், பிட்டர், எலக்ட்ரானிக்ஸ், மெஷினிஸ்ட், டர்னர், வெல்டர் ஆகிய பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு?

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளம் ரூ. 21700. விண்ணப்பக்க கடைசி தேதி செம்டம்பர் 11ம் தேதி.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.npcilcareers.co.in/ இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஏடகநாதர் ஆலயத்தில் ஏடு எதிரேறிய திருவிழா கோலாகலம்!

edakanathar temple function - 2026
#image_title

சோழவந்தான்: மதுரை, திருவேடகம் ஏலவார்க் குழலி அம்மன் சமேத ஏடகநாத சுவாமி கோவிலில் ஏடு எதிரேறிய திருவிழா நடந்தது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, திருவேடகம் ஏலவார் குழலிஅம்மன் சமேத, ஏடகநாதர் சுவாமி கோவில் மிகவும் வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி பவுர்ணமி
அன்று ஏடு எதிரேறிய திருவிழா நடைபெறும்.

7-ம் நூற்றாண்டில் சங்கம் தமிழ் வளர்த்த மதுரையில் சமண சமயத்தவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த சமணர்கள் வசம் அப்போது, மதுரை ஆண்ட கூன்பாண்டியனும் நின்றசீர் நெடுமார பாண்டியனும் சிக்கி அந்த சமயத்தினை பின்பற்ற சைவ சமயம் மீண்டும் தலைத்தோங்குவதர்க்கும் தமிழ்நெறி வளரவும் பாண்டியனின் மனைவியான மங்கையற்கரசியார் எனும் தீவிர சிவ பக்தை சீர்காழியில் இருந்து தெய்வ குழந்தையான திருஞானசம்பந்தரை, மதுரைக்கு அழைத்து வந்து பாண்டிய மன்னனின் மனதை மாற்றியும்
வெப்பு நோயை தீர்த்து வைத்தும் சமணர்களை அனல் வாதத்தில் வென்று புனல் வாதத்தில் திருப்பாசுர ஏட்டினை வைகை ஆற்றில் விட்டு அது வைகை ஆற்றினை எதிர்த்து வந்து வெற்றி பெற்ற இடமான திருஏடகத்தில் அந்த வைபவத்தை நினைவூட்டும் வகையில் நேற்று இரவு ஏடு எதிரேறிய திருவிழா நடந்தது.

இந்த திருவிழாவை முன்னிட்டு, கோவிலில் இருந்து
விநாகர் முன்வர திருஞானசம்பந்தருடன் நின்றசீர் நெடுமார பாண்டியனின் தலைமை அமைச்சரான குலச்சிரை நாயனாருடன் வந்து ஞானசம்பந்தர் திருப்பாசுர ஏடினை எடுத்து செல்லும் வைபவமானது கேடயத்தில் விநாயகர் குதிரை வாகனத்தில் ஏடகநாதர் மற்றும் கேடயத்தில் திரு
ஞானசம்பந்தர் இவருடன் வைகை ஆற்று வாழ்க அந்தணர் என்ற வாசகம் குறித்த கரையில் உள்ள திருஞானசம்பந்தர் செப்பு தகட்டில் உள்ள ஏடு சன்னதியிலிருந்து, வாழ்க அந்தணர் என்ற செப்பு தகட்டில் ஆன ஏடு அலங்காரமாகி வைகையாற்றின் படித்துறைக்கு வந்து சேர்ந்தது.

இங்கு ஓதுவார் ஸ்தலத்திலேயே ,ஏடு எதிரேறிய வரலாறும் பக்தி பாடலுடன் எடுத்துக் கூறினர். நேற்று மாலை கன மழை பெய்த நிலையில் கனமழையிலும் பக்தர்கள் கூட்டத்தில் வைகை ஆற்றில் தண்ணீரில் ஏடு எதிர்கொள்வது போல் காட்சி நடைபெற்றது.

பின்னர், பூஜைகள் நடந்து பிரசாதம் வழங்கினார்கள். கோவில் செயல் அலுவலர் சரவணன், பரம்பரை அறங்காவலர் சேவுகன் செட்டியார், கோவில்
பணியாளர்கள் மற்றும் பிரதோஷம் கமிட்டியினர்,
சிவனடியார் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கொட்டும் மழையிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு  செய்திருந்தனர்.