Home Blog Page 5627

ஓட்டல் மூடலில் திருட்டுத்தனம்

gst - 2026

ஓட்டல்கள் உணவு கடைகள் அடைப்பு…

அவங்க கூறும் காரணம் விலை ஏறிவிடுமாம்….பாமர மக்களுக்கு…

இந்திய….குறிப்பாக தமிழக ஓட்டல்களில் விலைப்பட்டியல்….பங்கு சந்தைபோல மணிக்கணக்கில் நமக்கே தெரியாமல் ஏற்றமாகவே இருக்கும். (இறங்கவே இறங்காது…அதான் இந்த பதிவு)

சிறிய உணவகங்களில் 5% வரி…

₹40/- ரூபாய்க்கு ஒரு மத்திய தர ஓட்டலில் தோசை சாப்பிட்டா….₹2/- வரி… (பெரிய ஓட்டல் விசயமே பேசவில்லை…45 பைசா பெறுமான மாவை தோசையாக்கி…₹125/-க்கு சாப்பிடுகிற ஆளுகளுங்க தகரியமா போகிற இடத்தில் 18% பெரிய விசயமில்லை)

இவர்கள் போராடுவது நான் கீழே போட்டிருக்கும் படத்தில் உள்ளமாதிரி….வெங்காயம் விலை குறையும் போது எங்கேயாவது விலை குறைச்சு குடுத்து பார்த்திருக்கீர்களா???

இந்த வரி விதிப்பை இவர்கள் கட்ட போவதில்லை …

நாம்தாம் …₹70/- இரண்டு இட்லியை அமைதியாக கேள்வி கேட்காமல் சாப்பிடுகிற நாம்தாம் குடுக்க போகிறோம்…

அது எல்லா உணவக முதலாளிக்கும் தெரியும்

அவர்களின் பயம்….

இவர்களின் கணக்குகள் GST வரி கட்டினால்…. வருமானவரித்துறைக்கு தெரியவரும்…

பஸ்ஸலும், ரயிலிலும் காலையில் ….நசுங்கிட்டும் ……டூவிலரில் உயிரை பணயம் வைத்து ஆபிஸில் வேலை பார்த்து வாழும் நடுத்தர வர்கத்தினர் ….

மார்ச்சு மாசம் சம்பளம் முழுசும் வருமானவரி பிடித்தமாகி நாட்டை காக்க வேண்டும்…

இந்த ஓட்டல் துறை…வரைமுறை இல்லாத விலை வைப்பார்களாம்…ஆனால் வரி என்று வந்தால் மக்கள் பாவமாம்..

அருமையான ஞாயம்…

மறந்து விட்டேன்…

மோடி ஒலிக….

விஜயராகவன் கிருஷ்ணன்..

இணையத்தில் விற்பனைக்கு எதிர்ப்பு: மருந்து விற்பனையாளர்கள் வேலை நிறுத்தம்

medical shop sales - 2026
சென்னை:
இணையதள மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 8 லட்சம் மருந்து விற்பனையாளர்கள் செவ்வாய்க்கிழமை இன்று (மே 30) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.  தமிழகத்தில் மட்டும் சுமார் 20,000 மருந்து விற்பனையாளர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இணையதளத்தில் மருந்துகளை விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்க மத்திய அரசு முயற்சி வருகிறது. இணையதளத்தில் மருந்துகள் விற்பனை செய்தால் சில்லறை விற்பனையாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவர்; மருத்துவர் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் எளிதில் மருந்துகள் கிடைக்கும்; போதை மருந்துகள், மயக்க மருந்துகள், கருக்கலைப்பு மாத்திரைகள் உள்ளிட்டவை எளிதில் கிடைக்கும்; கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை பாதிக்கப்படும் என்று புகார்கள் தெரிவித்து, மருந்து விற்பனையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மேலும், தங்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி, நாடு முழுவதும் 8 லட்சம் மருந்து விற்பனையாளர்கள் செவ்வாய்க்கிழமை (மே 30) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டிருக்கும்.
இதற்காக, பொதுமக்களின் உதவிக்கு என தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்று வலியுறுத்தி மருந்து விற்பனையாளர்களிடம் அரசுத் தரப்பில் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து மாவட்டந்தோறும் உள்ள முக்கிய மருந்துக் கடைகளின் தொலைபேசி எண்கள் மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்துக்கு மருந்து விற்பனையாளர்கள் அளித்துள்ளனர்.
மருந்துகளுக்கான அவசரத் தேவை ஏற்படும் பொதுமக்கள் மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்துக்கு 044-24321830 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால், அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மருந்துக் கடை உரிமையாளரின் தொலைபேசி எண் வழங்கப்படும். குறிப்பிட்ட நபரைத் தொடர்பு கொண்டு, தேவையான மருந்துகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
இதுதவிர 044-28191522 என்ற தொலைபேசி எண்ணையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையும் தொடர்பு கொண்டு மருந்துகளை வாங்குவதற்குத் தேவையான உதவியைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள் வழக்கம்போல் இயங்கும். தனியார் மருத்துவமனை வளாகங்களில் உள்ள மருந்தகங்களிலும் விற்பனை நடைபெறும். மேலும் பொதுமக்களின் அவசரத் தேவைக்கும் மருந்துகளை விநியோகிப்பதற்கு அந்தந்த மாவட்டங்களில் போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்கலில் 10 ஆயிரம் மருந்துக் கடைகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் மருந்துக் கடைகள் செவ்வாய்க்கிழமை (மே 30) இயங்கும் என்று சென்னை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் டபிள்யு. எஸ்.மோகன் குமார் கூறினார். இதுதொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியபோது,
சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மருந்து கட்டுப்பாட்டுத் துறையினரிடம், மாநில அரசின் சார்பில் இணையதள மருந்து விற்பனைக்கு ஆட்சேபம் தெரிவித்து குறிப்பாணை அனுப்புமாறு அவர் அறிவுறுத்தினார். இதையடுத்து சென்னை, மதுரை, கரூர் ஆகிய 3 மாவட்டங்களின் உறுப்பினர்கள் இந்தக் கடையடைப்பில் பங்கேற்பதில்லை என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேசமயம், கருப்புப் பட்டை அணிந்து மருந்து விற்பனையில் ஈடுபட உள்ளோம். அந்த வகையில் குறிப்பிட்ட 3 மாவட்டங்களிலும் 10 ஆயிரம் கடைகள் திறந்திருக்கும்.. என்றார்.

ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஹோட்டல்கள் வேலைநிறுத்தம்!

gst - 2026
சென்னை:
ஒரு லட்சம் ஹோட்டல்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் தனியார் உணவக உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஹோட்டல்கள் பங்கேற்க உள்ளன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஹோட்டல்கள் மூடப்பட்டிருக்கும். குளிர்சாதன வசதி உள்ள ஹோட்டல்களுக்கு 8 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு உணவக உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கூடுதல் வரி விதிப்பதன் மூலம் உணவுப் பொருள்கள் விலை உயரும். இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவர்.
எனவே, உணவகங்கள் மீதான வரி விதிப்பைக் குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செவ்வாய்க்கிழமை (மே 30) நடைபெறும் என தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

சேக்கிழார் குருபூஜை:30-5-17

sekkizar - 2026

”தந்தானை துதிப்போமே”….”சேக்கிழார் குருபூஜை”:30-5-17.,’

‘சென்னை குன்றத்தூர் வடதிருநாகேஸ்வரம் காமாட்சி அம்மன் உடனுறை நாகேஸ்வரசுவாமி
திருக்கோயில்”

நாகேஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னதியில் சேக்கிழார் உள்ளார்.பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரின் குருபூஜை ஆண்டுதோறும் வைகாசி பூச நட்சத்திரத்தில் இங்கு நடைபெறுவது வழக்கம்.ஆலயத்தின் அருகிலேயே சேக்கிழார் பிறந்த வீடு உள்ளது…

இப்போது அது சேக்கிழார் ஆலயமாக விளங்குகிறது.30-5-17அன்று , காலையில் சேக்கிழார் கருவறைக்குள் சென்று நாகேஸ்வரரை தரிசிக்கும் வைபவம் நடக்கும் .அன்று இரவு முழுவதும்
விடிய விடிய திருமுறைகள் பாடி,பெரியபுராணம் பாடி திருவீதி உலா நடைபெறும்.சேக்கிழார் உலா சென்று, மறுநாள் காலையில் கோயிலுக்குத் திரும்புவார். இதனால் இரவு முழுதும் கோயில் திறந்தே இருக்கும்.

“தொகையா நாவலூராளி தொடுத்த திருத்தொண்டப் பெருமை வகையால் விளங்க உயர் நம்பியாண்டார் வகுப்ப மற்றதனைத் தகையா அன்பின் விரித்துலகோர் தம்மை அடிமைத் திறப்பாட்டின் உகையா நின்ற சேக்கிழான் ஒளிபொற் கமலத்தாள் பணிவாம்.”[ கச்சியப்ப முனிவர் ]…..

நம்பியாரூரரான சுந்தரர் தமது திருத்தொண்டத் தொகையில் அடியவர் பெருமையை கூறுகிறார். இதனைச் சிறிது விரித்து நம்பியாண்டார் நம்பி தமது திருத்தொண்டர் திருவந்தாதியில் கூறுகிறார். இவைகளின் அடிபற்றி விரிவாக நாம் அறிந்து கொள்ள ஏதுவாக,சிதம்பரம் நடராஜபெருமான் சேக்கிழார்க்கு ”உலகெலாம்” என்று அடியெடுத்துக் கொடுக்க,அதன் படியே அடியவர்கள் பெருமையை விரித்து உரைத்து ”உலகெலாம்”என்றே பாடி தமது ”திருத்தொண்டர் புராணம் நூலை நிறைவு செய்து அன்னை தமிழுக்கும், நம் அப்பன் ஈசனுக்கும் ,நம் போன்ற அன்பின் ஈசன் அடியவர்களுக்காகவும் சமர்பித்தார் சேக்கிழார்.

பின்பு இந்நூலின் பெருமை கருதி ”பெரிய புராணம்” என்று வழங்கலாயிற்று.சேக்கிழாரின் தெய்வீக தன்மையை உணர்ந்து “தொண்டர்சீர் பரவுவார்” என்ற பட்டமளித்து பெருமை பாராட்டி மகிழ்ந்தான் அநபாய சோழன்.

இவரது வேண்டுகோள்படி தான் சேக்கிழார் ”பெரிய புராணம்”சமைத்தார் .. இந்நூல் தில்லையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. நிறைவில் அநபாய சோழன் சேக்கிழாரையும், பெரியபுராண த்தையும் யானை மீது ஏற்றி, தானும் பின் இருந்து கவரி வீசி நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக அழைத்துச் சென்று பெருமை சேர்த்தான்.

”தில்லைவா ழந்தணரே முதலாகச் சீர்படைத்த தொல்லையதாம் திருத்தொண்டர்த் தொகையடியார் பதம் போற்றி ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழாரடி போற்றி”…..

“உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர் மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.”…

“என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்றுளார் அடியார் அவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்.”….

சைவத்திருமுறைகள் பன்னிரண்டில் நிறைவாக அமைந்திருப்பது பெரியபுராணம்.”சென்னை குன்றத்தூர் வடதிருநாகேஸ்வரம் காமாட்சி அம்மன் உடனுறை நாகேஸ்வரசுவாமி திருக்கோயில்”.

இங்கு பரவை நாச்சியார் சுந்தரர் சந்நிதி,அருணாசலேஸ்வரர் சந்நிதி சிறப்பு.இங்கு உள்ள மூலவர் நாகேஸ்வரர் சேக்கிழாரால் பிரதிஷ்டை ஆனவர்..இக்கோயில் வடிவமைப்பு அனைத்தும் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் திருக்கோயில் சார்ந்தே இருக்கும்.சேக்கிழார் மிகவும் விரும்பி வழிபட்ட தலம் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம்
திருக்கோயில் ஆகும்..சேக்கிழார் அதுபோன்றே ஈசனுக்கு தமது அவதார தலத்தில்
ஆலயம் எழுப்ப ஆசை கொண்டு,சேக்கிழார் எழுப்பிய ஆலயமே இன்று நாம் காணும்
இந்த வட திருநாகேஸ்வரம்.

இங்கு வழிபட சகல நாக தோசங்களும் அகலும்…சென்னை பல்லாவரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலும்,போரூரில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலும் குன்றத்தூர் வடதிருநாகேஸ்வரம் அமைந்து உள்ளது…இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயம் மலையில் உள்ளது…அருகில் உள்ள கோவூரில் மீனாட்சி அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர்
ஆலயம் உள்ளது.”தந்தானை துதிப்போமே”….ஆம்!நம் போன்ற நாயினும் கடையர்கள் கடைத்தேற,ஈசன்,சுந்தரர்,நம்பியாண்டார் நம்பி ஆசிகள் மூலம் நம் நாயன்மார்களின் வரலாறை நாம் படித்து ,நம் வாழ்வில் உய்ய அருளிய பெரிய புராணம் தந்த அந்த தந்தானை அதாவது சேக்கிழாரை நாம் துதிப்போமே..

கட்டுரையாக்கம்:

அன்பன்.

ப்ரியமுடன்:சிவ.அ.விஜய் பெரியசுவாமி,

கல்பாக்கம்,9787443462…

வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானனா

nami nandi adigal nayanar guru pooja - 2026

“வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானனா”…..

“நமிநந்தியடிகள் குருபூஜை” & “பேரொளி வழிபாடு” :30-5-17…”ராசிபுரம் அறம்வளர்த்தநாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில்”..

சேலத்தில் இருந்து 25 கிமீ…ஆலய தொடர்புக்கு:9443515036..

திருவாரூர் திருக்கோயிலில் நமிநந்தியடிகள் என்பவர் நாள்தோறும்நெய்விளக்குகள் ஏற்றி வைக்கின்ற தொண்டினைச் செய்து வந்தார்.[நமிநந்தியடிகள் பிறந்த ஊர்  திருஏமப்பேரூர்[திருநெய்பேர்].]..ஒருநாள் வீட்டிற்குச் சென்று நெய் கொண்டு வந்து விளக்கேற்ற நேரம் இல்லாது போயிற்று. உடனே அவர் கோயிலுக்கு அருகில் குடியிருந்த சமணர்களிடம்
நெய் தந்திடக்கோரி வேண்டினார். மறுத்து விட்டனர் சமணர்கள்..

“அக்னியையே கையில் ஏந்தியிருக்கிறாரே உங்கள் சிவபெருமான், அவருக்கு நெய்விளக்கு
எதற்கு?” என்று கேலி பேசினார்கள்.அப்போது சிவபெருமான், “கமலாலயக்குளத்து
நீரை இட்டு விளக்கு ஏற்றுக” என்று அசரீரியாக ஆணையிட்டார்.

உடனே நமிநந்தி அடிகளும் திருவாரூர் கமலாலயக் குளத்து நீரைக் கொண்டு கோயிலுக்குள்ளே
விளக்குகளில் விட்டு அவற்றை எரிய வைத்தார்.இதனைக்கண்ட சமணர்கள் சைவ
சமயத்தின் பெருமை உணர்ந்து சைவத்தை தழுவினர்..

ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் ,”நமிநந்தி அடிகள் தினசரி தீபத் திருப்பணி சிவனடியார்
திருக்கூட்டம்”சார்பில், நீரால் விளக்கேற்றிய நமிநந்தி அடிகள், பெரிய
புராணம் பாடிய தெய்வச் சேக்கிழார் குரு பூஜை மற்றும் நமிநந்தி அடிகள் தீபப்பேரொளி விழா,
30-5-17அன்று நடக்கிறது.

அன்று அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை, விநாயகர் மற்றும் கலச பூஜையும், உலக நன்மைக்காக யாக வேள்வியும் நடக்கிறது. தொடர்ந்து, விநாயகர், கைலாசநாதர், அறம் வளர்த்த
நாயகி,சுப்ரமணியர், நந்தியம்பெருமாள், அறுபத்து மூன்று நாயன்மார்கள்,
மூலவர்,நமிநந்தி அடிகள், தெய்வச் சேக்கிழார், சோமஸ்கந்தர் ஆகியோருக்கு
திருமஞ்சனஅபிஷேகம் நடக்கிறது.

காலை 11 மணிக்கு, பேரொளி வழிபாடும், பகல் 1 மணிக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. அதை தொடர்ந்து, மாலை 4 மணிக்கு பக்தர்கள் கோவில் முழுவதும் அனைத்து சன்னதிகளிலும் திருவிளக்கு ஏற்றி வழிபடுகின்றனர்.

மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள், நமிநந்தி அடிகள்,தெய்வச்சேக்கிழார் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்..

“வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானனா”..ஆம்!திருக்கோயில்களில் விளக்கு ஏற்றி வைத்து ஜோதி வடிவான நம் ஈசனை அன்பெனும் பிடிக்குள் சிக்கெனப்பிடித்து நம் மனதுக்குள் தந்தானன
தருவானை நாம் கேட்டு பெறு ஓம்.

ஆம்! தந்தானை துதிப்போம்..

கட்டுரையாக்கம்:அன்பன்.ப்ரியமுடன்:

சிவ.அ.விஜய் பெரியசுவாமி, கல்பாக்கம், 9787443462.

நமிநந்தியடிகள் குருபூஜை; பேரொளி வழிபாடு

nami nandi adigal nayanar guru pooja - 2026

“வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானனா”…..”நமிநந்தியடிகள் குருபூஜை” &
“பேரொளி வழிபாடு” :30-5-17…”ராசிபுரம் அறம்வளர்த்தநாயகி உடனுறை
கைலாசநாதர் திருக்கோயில்”..

சேலத்தில் இருந்து 25 கிமீ…ஆலய  தொடர்புக்கு:9443515036..திருவாரூர் திருக்கோயிலில் நமிநந்தியடிகள் என்பவர் நாள்தோறும்நெய்விளக்குகள் ஏற்றி வைக்கின்ற தொண்டினைச் செய்து வந்தார்.[நமிநந்தியடிகள் பிறந்த ஊர் திருஏமப்பேரூர்[திருநெய்பேர்].]..

ஒருநாள் வீட்டிற்குச் சென்று நெய் கொண்டு வந்து விளக்கேற்ற நேரம் இல்லாது போயிற்று. உடனே அவர் கோயிலுக்கு அருகில் குடியிருந்த சமணர்களிடம் நெய் தந்திடக்கோரி வேண்டினார். மறுத்து விட்டனர் சமணர்கள்..”அக்னியையே கையில் ஏந்தியிருக்கிறாரே உங்கள் சிவபெருமான், அவருக்கு நெய்விளக்கு எதற்கு?” என்று கேலி பேசினார்கள்.

அப்போது சிவபெருமான், “கமலாலயக்குளத்து நீரை இட்டு விளக்கு ஏற்றுக” என்று அசரீரியாக ஆணையிட்டார். உடனே நமிநந்தி அடிகளும் திருவாரூர் கமலாலயக் குளத்து நீரைக் கொண்டு கோயிலுக்குள்ளே விளக்குகளில் விட்டு அவற்றை எரிய வைத்தார்.இதனைக்கண்ட சமணர்கள் சைவ சமயத்தின் பெருமை உணர்ந்து சைவத்தை தழுவினர்..

ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் ,”நமிநந்தி அடிகள் தினசரி தீபத் திருப்பணி சிவனடியார்
திருக்கூட்டம்”சார்பில், நீரால் விளக்கேற்றிய நமிநந்தி அடிகள், பெரிய புராணம் பாடிய தெய்வச் சேக்கிழார் குரு பூஜை மற்றும் நமிநந்தி அடிகள் தீபப்பேரொளி விழா, 30-5-17அன்று நடக்கிறது.

அன்று அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை, விநாயகர்  மற்றும் கலச பூஜையும், உலக நன்மைக்காக யாக வேள்வியும் நடக்கிறது. தொடர்ந்து, விநாயகர், கைலாசநாதர், அறம் வளர்த்த நாயகி,சுப்ரமணியர், நந்தியம்பெருமாள், அறுபத்து மூன்று நாயன்மார்கள்,
மூலவர், நமிநந்தி அடிகள், தெய்வச் சேக்கிழார், சோமஸ்கந்தர் ஆகியோருக்கு
திருமஞ்சன அபிஷேகம் நடக்கிறது.

காலை 11 மணிக்கு, பேரொளி வழிபாடும், பகல் 1 மணிக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. அதை தொடர்ந்து, மாலை 4 மணிக்கு பக்தர்கள் கோவில் முழுவதும் அனைத்து சன்னதிகளிலும் திருவிளக்கு ஏற்றி வழிபடுகின்றனர்.

மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள், நமிநந்தி அடிகள்,தெய்வச்சேக்கிழார் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்..

“வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானனா”..

ஆம்!

திருக்கோயில்களில் விளக்கு ஏற்றி வைத்து ஜோதி வடிவான நம் ஈசனை அன்பெனும் பிடிக்குள் சிக்கெனப்பிடித்து நம் மனதுக்குள் தந்தானன தருவானை நாம் கேட்டு பெறுஓம்.ஆம்!

தந்தானை துதிப்போம்..

கட்டுரையாக்கம்:அன்பன்.

ப்ரியமுடன்:சிவ.அ.விஜய் பெரியசுவாமி,

கல்பாக்கம்,9787443462.

“புதைஞ்சு கிடைந்த சிவாலயத்தை கண்டுபிடித்த மகா பெரியவா-மெய்சிலிர்க்கும் சம்பவம்”

113 - 2026

“புதைஞ்சு கிடைந்த சிவாலயத்தை கண்டுபிடித்த மகா பெரியவா-மெய்சிலிர்க்கும்
சம்பவம்”
(காஞ்சிபுரத்துல உள்ள நூத்தியெட்டு சிவாலயங்கள்ல
ஒண்ணான அனந்தபத்மனாப ஈஸ்வரர் கோயில்
ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சமீபமா இருக்கிற லிங்கப்பன் தெருவுல இருக்கு)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-14-01–2016தேதியிட்ட குமுதம் பக்தி
(பெரிய கட்டுரை -ஒரு பகுதி-சுருக்கப்பட்டது)

ஒரு சமயம் மடத்துல இருக்கறவாளோட பேசிண்டு
இருக்கறச்சே, “இங்கே காஞ்சிபுரத்துல ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குப் பக்கத்துல
சிவாவிஷ்ணு ஆலயம் ஒண்ணு
இருந்ததாமே.உங்கள்ள யாராவது கேள்விப்பட்டிருக்கேளா? எங்கே இருந்தது, இப்போ
எப்படி இருக்குனு யாருக்காவது தெரியுமா? அப்படின்னு கேட்டார் பெரியவா.

எல்லாருமே தெரியாதுன்னு சொன்னதும் பரமாசார்யா ஒரு தீர்மானத்துக்கு வந்தார்.
மறுநாள் காலம்பறவே புறப்பட்டு குறிப்புகள்ல இருக்கிற அந்த இடத்தைத்
தேடிண்டுபோய்
பார்க்க முடிவு பண்ணினார்.

அடுத்த நாள் பெரியவாளோடு சுமார் முப்பதுபேர் கிளம்பினா மடத்துக்குறிப்புகள்ல
இருந்த இடத்தைக் கண்டுபிடிச்சு கோயிலை எதிர்பார்த்துப்போய் நின்னவாளுக்கு
அதிர்ச்சிதான் காத்திருந்தது.

ஏன்னா, ஆண்டவன் குடியிருக்கற கோயில் இருக்கும்னு நினைச்சுப் போன இடத்துல
ஆட்கள் குடி இருக்கிற வீடுதான் இருந்தது! பெரியவா அங்கே வந்திருக்காங்கற
விஷயம் தெரிஞ்சதும் தெருவே அங்கே கூடிடுத்து.

“அந்த வீட்டுக்கு சொந்தக்காரா யாருன்னு விசாரிங்கோ?” தனக்குப் பக்கத்துல
நின்னவா கிட்டே சொன்னார் பெரியவா.

கொஞ்சநாழி கழிச்சு,ஒரு நடுத்தர வயதுக்காரர் பவ்யமாக பெரியவாள் முன்
நின்றார்.என்ன விஷயம்னு கேட்டார்.

“இந்த வீட்டை மடத்துக்குத் தரியா?” நெத்தியில அடிச்சாப்புல ரத்ன சுருக்கமா
கேட்டார் ஆசார்யா.

கொஞ்ச நேரம் அமைதியா இருந்த அந்த நபர், “பெரியவா மன்னிச்சுக்கணும். இது எனக்கு
ப்ராசீனமா வந்த வீடு..எனக்குன்னு இருக்கிறது இந்த சொத்து மட்டும்தான்..
அதானால…!” தயங்கித் தயங்கி இழுத்தார்.

அங்குள்ள ஜனங்களுக்கு ஒரே வியப்பு! “பெரியவா கேட்டு ஒருத்தர் இல்லைன்னு
சொல்றதா என்ன மனுஷன் இவர்?

ஆனா,பெரியவா கொஞ்சம்கூட முகம் மாறலை.
“சரி…அதனால ஒண்ணும் இல்லை.உனக்கு எப்பதாவது
தோணித்துன்னா,அப்போ குடுத்தா போதும்!” அப்படின்னு சொல்லிட்டு மளமளன்னு நடந்து
மடத்துக்கு வந்துட்டார்.

இந்த சம்பவம் நடந்து கொஞ்சநாளைக்கு அப்புறம்,
அந்த வீட்டோட சொந்தக்காரர் பெரியவாளை தரிசனம் பண்ண மடத்துக்கு வந்தார்.”
பெரியவா, என்னோட
பிள்ளைக்கு ஒடம்புக்கு முடியலை. வைத்தியத்துக்கு
நிறைய செலவாகும்கறா.அதனால வீட்டை வித்துடலாம்னு தோணித்து. ஆனாலும் நீங்க
கேட்டதால உங்களுக்கே தந்துட்டு, ஊரோட போய் இருந்துடலாம்.அங்கேயே ஏதாவது
வைத்தியம் பார்த்துக்கலாம்னு தீர்மானிச்சிருக்கேன்
அதான்…!” தயக்கமாகச் சொன்னார்.

“ஒம் புள்ளையாண்டானுக்கு ஒண்ணும் ஆகாது.அவன்
தீர்ர்க்காயுசா,ஆரோக்யமா இருப்பான். அவனுக்கு வைத்தியத்துக்கு நானே
டாக்டர்கிட்டே சொல்றேன். அதோட உன்னோட கிருஹத்துக்கு பர்த்தியா (நீ தரும்
வீட்டுக்கு பதிலா)
உனக்கு ஒரு வீட்டைக் கட்டித்தரச் சொல்றேன்.

சொன்ன ஆசார்யா, ஆசிர்வாதம் பண்ணி அனுப்பினார்.
அதுக்கப்புறம் பத்துப் பதினைஞ்சு நாள்ல அந்த வீடு மடத்துக்கு
வந்தது.அந்த நபரோட புள்ளைக்கும் மருத்துவ சிகிச்சைல
பூரண குணமாயிடுத்து.மடத்து சார்பாவே ஒரு கிரஹத்தைக்
கட்டி அதை அந்த நபருக்குக் கிடைக்கப் பண்ணினார் பெரியவா.

அதுக்கப்புறம் ஒரு நாள். பிரபலமான ஸ்தபதி ஒருத்தரை வரச்சொன்ன பெரியவா தான்
கேட்டு வாங்கின வீட்டோட குறிப்பிட்ட திசையில ஒரு இடத்தை முதல்ல தோண்டச்
சொன்னார்.சொன்ன திசையில் இருந்த அறை ஒரு கழிப்பறை.
பெரியவா உத்தரவை மீற முடியாமல்.அதை இடிச்சுட்டு ஆறு ஏழு அடி
தோண்டினதுக்கப்புறம் லேசா லிங்கம் மாதிரி ஏதோ தெரிஞ்சுது.அதை வெளீல எடுக்க
முயற்சி செஞ்சார். ஊஹூம்! எவ்வளவோ முயற்சி செஞ்சும் முடியலை. ஏகாம்பரேஸ்வரர்
கோயிலோட யானையைக் கூட்டிண்டு வந்து இழுக்க வைச்சுப் பார்த்தா.பிரயோஜனமே இல்லை.
லிங்கம் அசையைக்கூட இல்லை.

விஷயம் தெரிந்த பெரியவா,அந்த இடத்துக்குப்போய்
கொஞ்சம் கங்காஜலத்தால் லிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணி வில்வபத்ரத்தைப்
போட்டுட்டு கற்பூர ஆரத்தி காட்டினார்.
“இப்போ எடுங்கோ வரும்” என்று பெரியவா சொன்னதும்
அடுத்த முயற்சியில் தாய்ப் பசுவைப் பார்க்க தாவிண்டு வர்ற
கன்னுக்குட்டி மாதிரி சட்டுன்னு வெளீல வந்தது சிவலிங்கம்.

அமைதியா ஒரு புன்னகையைத் தவழவிட்ட ஆசார்யா, “இதோட போதும்னு நிறுத்திட
வேண்டாம்.இன்னும் கொஞ்சம் தோண்டுங்கோ!” அப்படின்னார்.

அப்படித் தோண்டும்போது ‘டங்குனு’ ஒரு சத்தம். அங்கே அனந்த சயனத்துல இருக்கிற
ரங்கநாதரோட திருமேனி இருக்கிறது தெரிஞ்சது. அவ்வளவுதான் ஸ்தபதிக்கு கண்ணுல
இருந்து ஜலமா பெருகி வழிந்தது.

“பெரியவா இந்த இடத்தைப் போய் தோண்டச் சொல்றேளே இப்படிப்பட்ட இடத்துக்கெல்லாம்
வரவேண்டி இருக்கேன்னு மனசுக்குள் நினைச்சேன்.ஆனா சாட்சாத் பரமேஸ்வரனும்,
பெருமாளுமே எல்லாத்தையும் சகிச்சுண்டு இத்தனை காலம் இங்கே புதைஞ்சு
கிடந்திருக்கான்னா, நாமெல்லாம்
எம்மாத்திரம்னு இப்போ புரியறது”தழுதழுத்தார் ஸ்தபதி.

அப்புறம் சின்னதா ஒரு கோயிலமைச்சு அந்த சிவலிங்கத்
திருமேனியையும்,ரங்கநாதரையும் அங்கே பிரதிஷ்டை செய்யச் சொன்னார்.
ஹரியும்,ஹரனும் சேர்ந்து
கிடைச்சதால ரெண்டுபேரோட திருநாமத்தையும் இணைச்சு
‘ஸ்ரீ அனந்தபத்மநாபேஸ்வரர்’னு திருப்பெயர் சூட்டினார்
மகாபெரியவா.

காஞ்சிபுரத்துல உள்ள நூத்தியெட்டு சிவாலயங்கள்ல
ஒண்ணான அனந்தபத்மனாப ஈஸ்வரர் கோயில்
ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சமீபமா இருக்கிற லிங்கப்பன் தெருவுல இருக்கு.

ஆக்கபூர்வ விமர்சனம் ஜனநாயகத்தை வலுப்படுத்தும்: மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி

Modi mann ki baat - 2026

சென்னை:

வானொலியில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றும் மனதின் குரல் நிகழ்ச்சியில், ஆரோக்கியமான விமர்சனம் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்று கூறினார்.

அவர் ஆற்றிய உரையின் முழு வடிவம் : (மனதின் குரல் – 28.5.17)

எனதருமை நாட்டு மக்களே, வணக்கம்.

இந்த ஆண்டு கோடையின் வெப்பம் மறக்க முடியாத அனுபவமாக அமைந்திருக்கிறது. அதே வேளையில் நாம் மழையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நான் இன்று உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் வேளையிலே, ரமலான் புனித மாதம் தொடங்கி விட்டது. ரமலானின் புனிதமான மாதம் பிறந்திருக்கும் இந்த வேளையில், நான் பாரதத்திலும் உலகெங்கிலும் வாழும் மக்களுக்கு, குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு, என் மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரமலான் மாதத்தில் பிரார்த்தனை, ஆன்மீகம், அறப்பணி ஆகியவற்றிற்கு கணிசமான மகத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. உலகில் உள்ள அனைத்து சமயங்களும் பாரத நாட்டில் இருக்கின்றன என்பது நமது நாட்டின் 125 கோடி மக்களும் பெருமிதம் கொள்ள வேண்டிய விஷயம்; இந்த மகத்தான பாரம்பரியத்தை நமக்கு நமது முன்னோர்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை நாம் நமது பாக்கியமாகக் கருத வேண்டும்.

இறைவனை நம்புபவர்களும் இருக்கிறார்கள், இந்த தேசத்தில் இறைவனை மறுப்பவர்களும் இருக்கிறார்கள், விக்ரஹ ஆராதனை செய்பவர்களும் உண்டு, விக்ரஹ ஆராதனையை எதிர்ப்பவர்களும் உண்டு – இப்படி பலவகைப் பட்டவர்கள் நிறைந்திருப்பது நம் தேசம். பலவகையான எண்ணப்பாடுகள், பலவகையான வழிபாட்டு முறைகள், பலவகையான பாரம்பரியங்கள் என ஒன்றிணைந்து வாழும் கலை நம் உணர்வோடு கலந்து விட்டது. சமயங்கள் ஆகட்டும், வழிமுறைகள் ஆகட்டும், தத்துவங்கள் ஆகட்டும், பாரம்பரியங்கள் ஆகட்டும் – இவை அனைத்தும் நமக்கு அளிக்கும் ஒரே செய்தி – அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம், என்பவை தாம். இந்த புனிதமான ரமலான் மாதம் அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் என்ற பாதையில் நாம் முன்னேறிச் செல்ல நமக்கு துணை இருக்கும்.

நான் மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த முறை நான் மனதின் குரலை வெளிப்படுத்திய போது, நான் ஒரு சொல்லைப் பயன்படுத்தி இருந்தேன், இதைக் குறிப்பாக இளைஞர்கள் குறித்து கையாண்டிருந்தேன்; ஏதாவது ஒன்றைப் புதிதாகச் செய்யுங்கள், comfort zone என்ற சொகுசு வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள், புதிய அனுபவங்களைப் பெறுங்கள், இந்த வயதில் தான் உங்களால் வாழ்க்கையை இப்படி வாழ முடியும், சற்று அபாயங்களை எதிர்கொள்ளுங்கள், இடர்ப்பாடுகளை சந்தியுங்கள் என்று கூறியிருந்தேன். ஏராளமானவர்கள் தங்கள் பின்னூட்டங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

தனிப்பட்ட முறையில் தங்கள் அனுபவங்களைப் பற்றி என்னிடம் உற்சாகத்தோடு பகிர்ந்து கொள்ள அனைவருமே விரும்பியிருக்கிறார்கள். என்னால் ஒவ்வொரு விஷயத்தையும் படிக்க முடியவில்லை, ஒவ்வொருவர் அனுப்பியிருக்கும் செய்தியையும் என்னால் கேட்க முடியவில்லை, ஏனென்றால் அந்த அளவுக்கு வந்து குவிந்திருக்கிறன. ஆனால் தோராயமாக நோக்கும் போது, சிலர் சங்கீதம் பயில முயன்றிருக்கிறார்கள், சிலர் புதியதொரு வாத்தியத்தைக் கற்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள், சிலர் யூ ட்யூபைப் பயன்படுத்தி புதிய விஷயம் ஒன்றைக் கற்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள், புதிய மொழியைக் கற்றுக் கொள்ளும் முயற்சி செய்திருக்கிறார்கள், சிலர் சமையல் கலையில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள், சிலர் நாடகத்தில், சிலர் கவிதை இயற்றுவதில் என பலவகையான முயற்சிகளில் இவர்கள் ஆக்கபூர்வமாக ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அவரவர் இயல்புகளை அறிந்து கொள்வது, வாழ்வது, புரிந்து கொள்வது என்ற முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தொலைபேசி அழைப்பில் ஒலித்த உணர்வை நீங்கள் கேட்டே ஆக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

தீக்ஷா காத்யால் பேசுகிறேன். படிக்கும் பழக்கம் என்பது கிட்டத்தட்ட என்னிடமிருந்து விடுபட்டுவிட்ட நிலையில் நான் விடுமுறை நாட்களில் படிக்க முடிவெடுத்தேன். விடுதலைப் போராட்டம் பற்றி நான் படிக்கத் தொடங்கிய போது, பாரதம் சுதந்திரம் பெற எத்தனை தியாகங்களையும் போராட்டங்களையும் செயல்படுத்த வேண்டியிருந்தது, எத்தனை போராட்டத் தியாகிகள் சிறைக் கொடுமைகளை அனுபவித்தார்கள் என்பதை உணர்ந்தேன். மிகச் சிறிய வயதிலேயே மிகப் பெரிய சாதனை நிகழ்த்திக் காட்டிய பகத் சிங் அவர்களின் வாழ்க்கை எனக்கு உத்வேகம் அளித்தது, ஆகையால் இந்த விஷயம் குறித்து நீங்கள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு செய்தி விடுக்க வேண்டும் என்று நான் உங்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

இளைய சமுதாயம் நமது வரலாறு பற்றி, நமது சுதந்திரப் போராட்ட மாவீரர்கள் பற்றி, இந்த தேசத்துக்காக உடல், பொருள், ஆவி துறந்த தியாகிகள் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது எனக்கு ஆனந்தம் அளிக்கிறது. எண்ணற்ற மாமனிதர்கள் தங்கள் இளமையைச் சிறைகளில் இழந்திருக்கிறார்கள். பல இளைஞர்கள் தூக்குக் கயிறுகளை இன்முகத்தோடு முத்தமிட்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்லொண்ணாத் துயரத்தை எல்லாம் அனுபவித்ததால் தான், நம்மால் இன்று சுதந்திர இந்தியாவின் சுவாஸக் காற்றை சுவாசிக்க முடிகிறது. விடுதலைப் போரில் எந்த மாமனிதர்கள் எல்லாம் காலம் கழித்தார்களோ, அவர்கள் எல்லாம் புத்தகம் எழுதினார்கள், படித்தார்கள், மிகப்பெரிய பணிகள் எல்லாம் புரிந்தார்கள், அவர்களின் எழுத்தும் கூட பாரதத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தருவதில் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறது.

பல ஆண்டுகள் முன்பாக நான் அந்தமான் நிக்கோபாரில் இருக்கும் செல்லுலர் சிறைச்சாலையைக் காணச் சென்றிருந்தேன்.. இன்று வீர சாவர்கர் அவர்களின் பிறந்த நாள். வீர சாவர்க்கர் அவர்கள் சிறையில் மாஜீ ஜன்மடே – माज़ी जन्मठे என்ற புத்தகத்தை எழுதினார்கள். சிறைச் சுவர்களில் அவர் கவிதைகளை எழுதினார். ஒரு சின்ன அறையில் அவரை அடைத்து வைத்திருந்தார்கள். விடுதலைப்பற்று மிக்கவர்கள் என்னென்ன கொடுமைகளை எல்லாம் தாங்கினார்கள் தெரியுமா? சாவர்க்கர் அவர்கள் எழுதிய மாஜீ ஜன்மடே – माज़ी जन्मठे புத்தகத்தை நான் படிக்க நேர்ந்த பிறகு தான், செல்லுலர் சிறைச்சாலையைக் காண வேண்டும் என்ற ஆவல் எனக்குள் எழுந்தது. அங்கே ஒரு ஒலி-ஒளிக் காட்சிக்கு ஏற்பாடு செய்கிறார்கள், அது மிகவும் உத்வேகம் அளிப்பதாய் இருக்கிறது. காலாபானி என்று அழைக்கப்படும் இந்த அந்தமான் நிக்கோபார் தனிமைச் சிறைச்சாலையில் தங்கள் இளமையை தியாகம் செய்தவர்களில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், பாரதத்தின் அனைத்து மொழி பேசுபவர்கள் இருந்தார்கள், பல துயரங்களைச் சந்தித்தார்கள்.

இன்று வீர சாவர்க்கர் அவர்களின் பிறந்த நாள். நான் தேசத்தின் இளைய சமுதாயத்தினரிடம் கூறுவது என்னவென்றால், நமக்கு கிடைத்திருக்கும் சுதந்திரத்தின் பொருட்டு என்னவெல்லாம் கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்திருக்கிறது, எத்தனை வலிகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டியிருந்தது என்பதையெல்லாம் நீங்கள் தனிமை சிறைச்சாலைக்குச் சென்று பாருங்கள், அதை ஏன் கொடுஞ்சிறை என்று அழைக்கிறார்கள் என்பது உங்களுக்கு அங்கே சென்ற பிறகு விளங்கும். உங்களுக்கும் வாய்ப்பு எப்போதாவது கிடைத்தால், கண்டிப்பாகச் சென்று வாருங்கள், அது ஒருவகையில் சுதந்திரப் போராட்டத்தின் புனிதத் தலம்.

குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்: கேன்களின் விலை அதிரடி உயர்வு

water can business in chennai - 2026

சென்னை:
சென்னை உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் கேன்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் 18% விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்று தொடங்கினர். இதனால் பல இடங்களில் கேன் குடிநீர் விலை அதிரடியாக விலை உயர்ந்துள்ளது.

சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகத் திகழ்வது குடிநீர் கேன்களே. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு போனதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும், கேன் தண்ணீருக்கு சென்னை மக்கள் அடிமையாகி விட்டனர். இந்நிலையில் குடிநீர்கேன் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பது பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளது.

குடிநீர் கேன் உற்பத்தி மீது 18% வரி ஜிஎஸ்டியில் போடப்பட்டுள்ளது. இதற்கு எதிராக தனியார் கேன் உற்பத்தியாளர் சங்கங்கள் நேற்று மாலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஏற்கெனவே ஸ்டாக் வைத்திருந்த தண்ணீர் கேன்களே பொதுமக்களுக்கு விநியோகிக்கப் படுகிறது. அதுவும், ரூ.100க்கு மேல் விற்கப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 370 தண்ணீர் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இவை மூலம் தினந்தோறும் 10 லட்சம் கேன்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த வேலை நிறுத்தத்தால், 200க்கும் மேற்பட்ட கேன் நிறுவனங்கள், தண்ணீர் விநியோகத்தை நிறுத்தியுள்ளதால், தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. சாதாரண நாட்களில் ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த குடிநீர் கேன்கள், இன்று காலை ரூ.80 முதல் ரூ.100 என விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

 

பைக் ரேஸ்க்கு பெண் பலி! சென்னையில் சோகம்

roadside bike ride in chennai - 2026

சென்னை:

சென்னை மயிலாப்பூர் பகுதியில் பைக் ரேஸ்க்கு பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் 6 இளைஞர்கள் பைக்கில் போட்டி போட்டு பைக் ரேஸ் சென்றுள்ளனர். அப்போது சாலையைக் கடக்க முயன்ற இரண்டு பெண்கள் மீது பைக் பலமாக மோதியதாம். இதில் தூக்கி வீசப்பட்ட இரு பெண்களில் ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. மற்றொரு பெண் மீரா (55) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கால் முறிவு ஏற்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிவேகமாக பைக் ஓட்டி, பைக் ரேஸில் ஈடுபட்ட பிரபு, முகமது இஸ்மாயில் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் அடையாறு போக்குவரத்து போலீஸார் விசாரணை நடத்தினர். போலீசார் பைக் ரேஸ் குறித்து தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகின்றனர். அதையும் மீறி இளைஞர்கள் பைக் ரேஸ்களில் தொடர்ந்து ஈடுபடுவதாக மெரினா கடற்கரைச் சாலையில் நடைப்பயிற்சி செய்வோர், அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர். கடுமையான சட்டம் வந்தால் மட்டுமே இது நிறுத்தப் படும் என்று அவர்கள் கூறினர்.