Home Blog Page 5992

வங்கியில் சிக்கிய கள்ளநோட்டுகள்: காவல் துறை அ.தி.மு.க. கவுன்சிலரிடம் விசாரணை நடத்த திட்டம்

 

திருச்சி மாவட்டம் பாலக்கரை துரை சாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 35). இவர் நேற்று காலை திருச்சி கண்டோன்மெண்ட் பகுதி பாரதியார் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு சென்றார்.

அப்போது அவர் வங்கியில் திருச்சி மாநகராட்சியை சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவரின் கணக்கில் ரூ.2 லட்சத்தை செலுத்தினார். கோபிநாத் கொடுத்த பணத்தை வாங்கிய, வங்கி ஊழியர் சந்தேகத்தின் பேரில் கள்ள நோட்டுக்களை கண்டு பிடிக்கும் கருவியில் அதனை வைத்து சோதனை செய்தார். அப்போது கோபிநாத் கொடுத்த ரூ.2 லட்சத்தில் 132 கள்ள 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து வங்கி நிர்வாகம் சார்பில் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் கண்டோன்மெண்ட் போலீசார் உடனடியாக அந்த வங்கிக்கு சென்று கோபிநாத்தை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. கவுன்சிலரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கள்ள நோட்டுகள் கோபிநாத்துக்கு கிடைத்தது எப்படி, அதனை புழக்கத்தில் விட்டது யார்? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் பரபரப்பு தகவல் வெளியாகும் என தெரிகிறது.

 

திருமணத்துக்கு வராத உறவினருக்கு உணவு பில் அனுப்பிய மணமகள்

தனது திருமணத்துக்கு உறவினர்கள் வராமல் போனதால், அவர்களுக்கான உணவு வீணாய்ப்போனது என்பதைப் புரிய வைக்க எண்ணிய ஒரு மணமகள், அவர்கள் உண்ணாமல் போன உணவுக்கு பில்லை அனுப்பியுள்ள விவகாரம் பேஸ்புக்கில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அமெரிக்காவில், சிறு குழந்தையுள்ள ஒரு பெற்றோர் உறவினரின் திருமண நாளின்போது தமது குழந்தையை பார்த்துக்கொள்ள வேலையாள் வராதுபோனதால், குறிப்பிட்ட திருமணத்தில் கலந்துகொள்ள முடியாமல் போனது.

பொதுவாக திருமணம் செய்ய முடிவெடுக்கும் தம்பதி, யார்? யார்? தனது திருமணத்துக்கு வரவேண்டும் என முன்கூட்டியே தீர்மானித்து அதற்கேற்றாற்போல ஆளுக்கு ஏற்ப உணவுவகைகளை ஆர்டர் செய்வர். அவர்களது இருக்கை எங்கேயிருக்க வேண்டும் என்பது வரை திருமணத்துக்கு நாள் பார்க்கும்போதே முடிவு செய்துகொள்வர்.

இருநூறு அல்லது முந்நூறு பேர் மட்டுமே பங்கேற்கும் இதுபோன்ற திருமணங்களின் செலவு குறைந்தது இருபது லட்சங்களைத் தாண்டும். இதுபோன்ற ஒரு திருமணத்தில், வராமல்போன உறவினர்கள் மீதான தனது வெறுப்பை காண்பிக்க எண்ணிய அந்த மணமகள் வரியுடன் சேர்த்து 75 அமெரிக்க டாலருக்கான பில்லை தனது உறவினருக்கு அனுப்பியுள்ளார்.

இந்தப் பில்லுக்கு பணம் செலுத்தினால் பிரச்சனை முடியுமா? அல்லது இதற்கு பதிலாக என்ன செய்ய வேண்டும்? என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த பெண்மணிக்கு, ஆயிரக்கணக்கானோர் ஆலோசனை கூறி வருகின்றனர்.

 

 

இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்காவின் வரைவு தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேற்றம் : இந்தியா ஆதரவு

இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்காவின் வரைவு அறிக்கை ஐ.நா. சபையில் தாக்கல் செய்யப்பட்டு, அது மனித உரிமை ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்கா தாக்கல் செய்துள்ள வரைவு தீர்மானத்தில், “இலங்கை இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனித உரிமை மீறல் பற்றி காமன்வெல்த் நாடுகள் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்த விசாரணை இலங்கை அரசுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் பற்றி யாரும் வாக்கெடுப்புக்கு கோராததால் தீர்மனம் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்துள்ளது. தீர்மானத்தில் மாற்றம் செய்வதற்கு வாய்ப்பு இருந்தும் இந்தியா அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்த தீர்மானம் பற்றி யாரும் வாக்கெடுப்புக்கு கோராததால் தீர்மானம் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் பற்றி ஐ.நா.-வின் உறுப்பு நாடுகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றன. இது பற்றி இங்கிலாந்து பிரதிநிதி கூறுகையில், “இலங்கையின் முன் மீள் குடியேற்றம் உட்பட பல சவாலான பணிகள் உள்ளன. அவற்றை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்” என்றார்.

அரசுக்கு எதிராக செயல்படாதீர்கள் : அமைச்சர் எச்சரிக்கை

 அரசுக்கு எதிராக செயல்படாதீர்கள் என தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் ‘கீரின் பீஸ் இந்தியா’ என்ற தன்னார்வ தொண்டு நிறுனத்துக்கு தடை விதித்து, அதன் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது அரசு. ‘கீரின் பீஸ் இந்தியா’ அமைப்பு அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் போராடி வருகிறது. இதேபோல் போர்ட் பவுண்டேஷேன் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளது மத்திய அரசு.

இந்நிலையில் ‘‘சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசு அல்லது குறிப்பிட்ட கட்சிக்கு எதிராக செயப்படுவதையே நோக்கமாக கொண்டிருக்கின்றன. அதன்மூலம் வெளிநாடுகளிடமிருந்து பணம் பெறமுடியும் என்று நினைத்து செயல்படுகின்றன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு காரணம், அவர்கள் சட்டவிதிகளை மீறி செயல்பட்டதுதான். எனவே தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு எதிராக செயல்படக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள கீரின் பீஸ் இந்தியாவின் தற்காலிக தலைவர் கோபால் “அரசு தனக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அனைவரின் குரல்களையும் நசுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

 

 

 

எம்.எல்.ஏ.சோம்நாத் பாரதிக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு : சமரசம் பேசி வழக்கை முடிக்க நீதிபதிகள் அறிவுரை

டெல்லி மாநில ஆம் அத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதி. இவர் டெல்லியின் முன்னாள் சட்ட அமைச்சராகவும் இருந்தார். கடந்த ஜூன் மாதம், சோம்நாத் பாரதி மீது அவரது மனைவி லிபிகா மித்ரா மகளிர் ஆணையத்தில் புகார் ஒன்றினை அளித்தார். அதில், திருமணமானது முதல் தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்தி வருவதாகவும், கொலை செய்யவும் முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த விவகாரத்தில் சோம்நாத் பாரதி மீது கடந்த மாதம் 10-ம் தேதி வழக்கு பதிவு செய்த டெல்லி போலீசார் உடனடியாக அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் அவர் முன் ஜாமீன் பெற்றார். ஆனால், போலீசில் ஆஜராகாமல் சோம்நாத் பாரதி தலைமறைவாக இருந்ததால், அவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி ஆனது.

இதனையடுத்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, டெல்லி துவாரகா காவல் நிலையத்தில் சோம்நாத் பாரதி சரணடைந்தார். பின்னர் 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இரண்டு நாட்களாக சோம்நாத் பாரதியிடம் அவரது மனைவி முன்னிலையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதனிடையே, இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சோம்நாத் பாரதியின் மனுவை ஏற்று இடைக்கால ஜாமின் வழங்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். மேலும் வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு (அக்.5) ஒத்திவைத்த நீதிபதிகள், லிபிகா மித்ரா அன்றைக்கே தனது கருத்தினை தெரிவிக்கலாம் என்று கூறினர்.

மேலும், சோம்நாத் பாரதியின் மனைவி லிபிகா மித்ரா விரும்பினால், இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே சமரசமான முறையில் பேசி தீர்வு காணலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

தேர்தல் நேரத்தில் பைக்கில் கொண்டு செல்லப்பட்ட 10 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்

பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடிபிடித்து வரும் நிலையில் பைக்கில் சென்றவர்களிடமிருந்து 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது அம்மாநிலத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னாவிலிருந்து 280 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதிபுரா என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது பைக்கில் வந்த இரு ஆண்களிடம் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் (6.5 கோடி) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் புர்னியா மாவட்டத்தை சேர்ந்த நந்த கிஷோர்(35), மற்றொருவர் மாதேபுரா மாவட்டத்தை சேர்ந்த மனிஷ் குமார் (40) என தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒரு சிட்பண்ட் நிறுவனத்துக்கு சொந்தமானது என்றும், அவற்றை இந்திய ரூபாயாக மாற்ற சென்றுக்கொண்டிருந்ததாகவும் இருவரும் தெரிவித்தனர். இது பற்றி போலீசார் தீவிர விசாரனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

‘புலி’யை காண ரகளை செய்த விஜய் ரசிகர்கள் : தடியடி அடி கொடுத்து கட்டுப்படுத்திய காவல் துறையினர்

தமிழ்நாட்டில் திட்டமிட்டப்படி புலி’  திரையிடப்படு வெளியாகுமா என்று திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பல நாட்களாக அச்சம் நிலவியது.நடிகர் விஜய் நடித்துள்ள ‘புலி’ படம் இன்று (அக்.1) தமிழகம் முழுவதும் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே, விஜய் வீட்டில் வருவான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இதனால் ‘புலி’ படம் திட்டமிட்ட நேரத்தில் திரையரங்குகளில் வெளியிடப்படுவதிலும் சிக்கல் நீடித்தது.

 திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்கான க்யூப் (QUBE) உள்ளிட்ட பல நடவடிக்கைகளை முறையாகச் செய்வதி மேலும் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் இப்படம் நேற்றிரவுக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.இந்தநிலையில், சென்னையில் உள்ள ஜெமினி லேப்-பில் ‘புலி’ படக்குழுவினர் மற்றும் திரையுலகினர் சிலர் பேச்சுவார்த்தை நடத்தினர். க்யூபுக்கு செலுத்த வேண்டிய பணம் அதிகமாக இருப்பதால், 10 மணிக்கு வங்கிகள் திறந்ததும் தான் தொகையை செலுத்த முடியும் என்பதால், அதற்குப் பிறகே படம் வெளியாக வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரியவந்தது.

 இதனிடையே, திடீரென 10 மணி காட்சியும் ரத்து செய்யப்படுவதாகவும், டிக்கெட் பணம் திரும்ப தரப்படும் என்று திரையரங்கு நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள், ரகளையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அந்த பகுதியே களேபரம் ஆனது.இதனிடையே, படத்தை ரிலீஸ் செய்வதில் இருந்த சிக்கல்கள் நீங்கியதாகவும், படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்றும் ‘புலி’ தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்தது.

 இன்று அதிகாலைத் தொடங்கி சிறப்புக் காட்சிகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டதே தவிர, வழக்கமான காலைக் காட்சிகள் தொடங்கி படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்றும் அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்தனர். அதன்படி, காலை 10 மணிக்கு அனைத்து திரையரங்குகளிலும் ‘புலி’ படம் திரையிடப்பட்டது.இந்நிலையில், மதுரையில் உள்ள சினிப்பிரியா திரையரங்கில் ரசிகர்களுக்கு காலை 5 மணிக்கு பிரத்யேக காட்சி போட முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து திரையரங்கு முன்பு ரசிகர்கள் குவிந்தனர். இதனிடையே, சினிமா காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து 10 மணிக்கு சினிமா திரையிடப்படும் என்று திரையரங்கு நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. 

மதுரையில் படக்காட்சி ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரம் அடைந்த நடிகர் விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

 

 

 

 

 

 

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரிக்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் : உயர் நீதிமன்றம் உத்தரவு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி. சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்களால் சுதந்திரமான விசாரணை நடத்த வாய்ப்பில்லை. எனவே சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என சமூக சமத்துவ படை நிறுவனர் சிவகாமி வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையிலும் அவர் மனு தாக்கல் செய்தார். அதில் விஷ்ணுபிரியா தற்கொலையில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. மாநில போலீசார் மீது புகார்கள் எழுந்துள்ளதால் அவர்களை விசாரிப்பது ஏற்புடையதல்ல. எனவே அவர்களது விசாரணைக்கு தடை விதித்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுதாகர், வேலுமணி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர்கள், சி.பி.ஐ. விசாரணை தொடர்பாக, டி.ஜி.பி. மற்றும் உள்துறை செயலாளர் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

காளிக்கு சிறுவனை நரபலி கொடுத்து ரத்த அபிஷேகம் செய்த மந்திரவாதியை தீ வைத்து எரித்த கிராம பொது மக்கள்

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் போகுரு. இங்கு வசிக்கும் மகேந்திரா – ஆதிலட்சுமி தம்பதியின் இளைய மகன் மனுசாகர். 4 வயது சிறுவனான இவன் அங்கன்வாடி பள்ளியில் படித்து வந்தான்.

சம்பவத்தன்று அங்கன்வாடிக்கு சென்றவன் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர் அங்கன்வாடி சென்று விசாரித்தனர். அவன் ஏற்கனவே வீட்டுக்கு சென்று விட்டான் என்று தெரிவித்தனர். ஆனால் வீட்டில் இல்லாததால் சிறுவனை தேடினார்கள்.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த மந்திரவாதி திருமலா ராவ் (35) மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது வீட்டுக்குச் சென்றபோது வீட்டின் முன் மாயமான சிறுவனின் செருப்பு கிடந்தது. சிறுவன் எங்கே என்று கேட்டபோது முதலில் மந்திரவாதி தனக்கு ஒன்றும் தெரியாது என்றார்.

உடனே பெற்றோர் அதிரடியாக மந்திரவாதி வீட்டிற்குள் புகுந்து பார்த்தபோது அவர்கள் கண்ட காட்சியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பூஜை அறையில் காளியின் படத்தின் முன் சிறுவன் மனுசாகர் தலை துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தது. உடல் அருகே ரத்ததால் அபிஷேகம் செய்தது போல் காணப்பட்டது.

உடனே பெற்றோர் அலறி துடித்தனர். அங்கு கிராம மக்கள் கூடி விட்டனர். அவர்கள் மந்திரவாதியை பிடித்து தர்ம அடி கொடுத்து விசாரித்தனர். அப்போது சிறுவனை கோடாரியால் தலையை துண்டித்து நரபலி கொடுத்ததை ஒப்புக் கொண்டார். தனக்கு அதிக சக்தி கிடைப்பதற்கும் செல்வம் கொழிக்கவும் சிறுவனை நரபலி கொடுத்தாக தெரிவித்தார்.

இதனால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள் மந்திரவாதியை அங்குள்ள மின்சார கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். இதில் மயங்கி விழுந்த அவரை ஏரிக்கரைக்கு தரதரவென்று இழுத்துச் சென்று தீ வைத்தனர்.இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று மந்திரவாதியை மீட்டு ஓங்கோல் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். .

 

அட்டாக் பாண்டி இன்று மாலை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 2 நாட்கள் போலீஸ் விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்

 

தி.மு.க. பிரமுகர் ‘பொட்டு’ சுரேஷ் கொலை வழக்கில் கைதான ‘அட்டாக்’ பாண்டியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். ஆனால் முழுமையாக விசாரிக்கவில்லை. எனவே மேலும் அவகாசம் வேண்டும் என போலீசார் தரப்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து மேலும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தர விடப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ‘அட்டாக்’ பாண்டியை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஒரு இடத்தில் வைத்து விசாரணை அதிகாரிகள் கிடிக்கிபிடி விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் ‘பொட்டு’ சுரேசுக்கும், தனக்கும் எப்போது இருந்து விரோதம் ஏற்பட்டது. தனது அரசியல் வளர்ச்சிக்கு எந்த வகையில் அவர் தடங்களாக இருந்தார். ‘பொட்டு’ சுரேஷ் கொலைக்கு பிறகு தன்னை போலீசார் தேடி வந்ததால் யார்–யாரை சந்தித்து உதவிகள் கேட்டேன். பண உதவிகள் செய்தது யார்–யார்? என்ற விவரத்தை கூறியதாக தெரிகிறது.

ஆனால் ‘பொட்டு’ சுரேஷ் கொலைக்கும், ‘அட்டாக்’ பாண்டிக்கும் உள்ள தொடர்பு பற்றியும், உதவிய அரசியல்வாதிகள் பற்றியும் கூற மறுத்ததாகவும் தெரிகிறது. நேற்று விடிய, விடிய விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று மதியம் வரை இந்த விசாரணை நீடித்தது.

‘அட்டாக்’ பாண்டியிடம் 2 நாட்கள் விசாரித்து விட்டு 1–ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்ததால் இன்று மாலை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் ‘அட்டாக்’ பாண்டி ஆஜர்படுத்தப்படுகிறார்.