Home Blog Page 66

ஜனநாயகத்தைப் பற்றி காங்கிரஸ் பேசலாமா?

emergency period - 2026

சாத்தான் வேதம் ஓதலாமா?

ஷெசாத் பூனாவல்லா

தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்

ஜூன் 25 தேதியை அரசமைப்பு பாதுகாப்பு தினமாக நரேந்திர மோடி அரசு அறிவித்தது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 25 ஆம் தேதியன்று அப்போதைய பிரதமர் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். அது நம் நாட்டின் ஜனநாயக வரலாற்றில் கருப்பு தினமாகும்.

நாடகம்

இந்திரா காந்தி அரசமைப்பு சாசனத்தை அவமதித்தார். எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெறித்தார். சர்வாதிகார இருளில் இந்தியாவை மூழ்கடித்தார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அரசு அமைப்பை அடித்து நொறுக்கிய கட்சி இன்று அரசமைப்பை பாதுகாப்ப போவதாக வேடமிடுகிறது.

தலைச்சுற்றல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் இந்த நாளிதழில் (மேட்ச் பிக்சிங் – மகாராஷ்டிரா . இந்திய எக்ஸ்பிரஸ் , ஜூன் 7 தேதி) எழுதிய கட்டுரையில் இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநில தேர்தலின் போது மேட்ச் பிக்சிங்கில் (தேர்தல் முடிவை முன்கூட்டியே தீர்மானித்தல்) ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். அவரது பிற்போக்குதனம் தலை சுற்ற வைப்பதாக இருக்கிறது.

ஆன்மாவை நசுக்கியவர்கள்

தற்போதுள்ள ஜனநாயக வழிமுறைகளின் மீது எந்தவிதமான ஆதார மும் இன்றி குற்றம் சாட்டும் ராகுல் காந்தி , தன் சொந்த குடும்பம் மற்றும் குடும்பப் கட்சி நெருக்கடி நிலையின் போது ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்து கொன்றதை கருத்தில் கொள்ளாமல் வசதியாக மறந்துவிட்டார்.அரசமைப்பின் அடிப்படை பண்புகளின் மீது நடந்த கொடூர தாக்குதல் நெருக்கடி நிலை அறிவிப்பு. அரசமைப்பு உறுதி கூறும் ஜனநாயக குடியரசு என்பதை இந்திரா காந்தி ஒழித்த கட்டினார். அவரது வார்த்தைகள் சட்டமாகின. அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன.

நீதியின் வாய் பூட்டப் பட்டது

கேசவானந்த பாரதி வழக்கின் மூலம் நீதித்துறை நிலைநாட்டிய அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பு நாடாளுமன்றத் தீர்மானங்கள் மூலம் பொருளற்றுப் போகும்படி செய்யப்பட்டன. இந்திராவின் சொல் சட்டமானது.

42 ஆவது சட்ட திருத்தம் மூலமாக அரசு நிர்வாகம் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை என்றானது. நீதிமன்றத்தின் அதிகாரம் அலட்சியப் படுத்தப்பட்டன. அரசு நிர்வாகம் நீதிமன்றத்துக்கு பதில் அளிக்க தேவையில்லை என்றானது.

ஊடக அடக்குமுறை

356 சட்ட பிரிவை பயன்படுத்தி மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. பணி மூப்பு அடிப்படையில் என்றில்லாமல் தன் துதிபாடுகளை உயர்மட்ட நீதிபதிகளாக நியமித்து நீதித்துறையின் சுதந்திர முடக்கப்பட்டது. ஊடகங்களின் வாய் கட்டப்பட்டது. செய்தித்தாள்கள் அரசின் புகழை பாடும்படி கட்டாயப் படுத்தப்பட்டன. மறுக்கும் செய்தியாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். செய்தி ஊடகங்களின் தணிக்கைக்கு எதிராக ராம்நாத் கோயங்காவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் தலையங்கம் பகுதியை காலியாக விட்டு (வெற்றிடமாக விட்டு) வெற்று தலையங்கத்தின் மூலம் தன் எதிர்ப்பை தெரிவித்தது.

காங்கிரஸ் செய்தது மேட்ச் பிக்சிங் அல்ல கொலை

மேற் சொன்னவை எல்லாம் மேட்ச் பிக்சிங் இல்லை மாறாக ஜனநாயக அமைப்புகளை கொலை செய்வதுதான் என்று ராகுல் காந்தி சொல்வாரா ? இந்திரா ஆட்சியின் வரம்பு மீறல் யாரையும் விட்டு வைக்கவில்லை. கலைஞர்களும் கவிஞர்களும் இலக்கியவாதிகளும் ஒடுக்கப்பட்டார்கள்.பிரபல பாடகர் கிஷோர் குமார் நெருக்கடி நிலையை ஆதரிக்க மறுப்பதற்காக அவரது பாடல்கள் அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனிலும் தடை செய்யப்பட்டன.

வேட்டையாடப்பட்டவர்கள்

சாதாரண மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள், சஞ்சய் காந்தியின் மக்கள் தொகை கட்டுப்பாட்டு இயக்கம் என்ற பெயரின் கட்டாய கருத்தடை செய்யப்பட்டனர் . அரசியல் எதிர்ப்பாளர்கள் வேட்டையாடப்பட்டனர். அரசியல் ஆர்வலர்கள், செய்தியாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் எந்த விசாரணையும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நெருக்கடி காலகட்டத்தில் சிறையில் இருந்த போது தனது தாயாரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள கூட அனுமதி மறுக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார்.

ஜெ பி இயக்கம்

காங்கிரசின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான இயக்கத்தை நடத்திய காந்திய சோஷலிஸ்டான ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற உயர்ந்த தலைவர்கள் குறிவைக்கப் பட்டனர் . ஜே பி இயக்கத்தில் முன்னணி தலைவர்களாக இருந்து காங்கிரஸ் ஆட்சிக்கு , கட்சிக்கு எதிராக செயல்பட்ட முலாயம் சிங் , லாலு பிரசாத் போன்ற சோசியலிஸ்ட் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். *

U டர்ன்

இந்த தலைவர்கள் காங்கிரஸின் சர்வாதிகாரத்துக்கு எதிராக செயல்பட்டார்கள். ஆனால் இன்று அந்த தலைவர்களும் அவர்களது கட்சிகளும் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துக்கொண்டு சொகுசாக இருப்பது ஒரு வரலாற்று சோகம் தான்.

துரோகம்

ஆயிரக்கணக்கானோர் எந்த விசாரணையும் இன்றி மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது நினைவாக லாலு பிரசாத் தன் மகளுக்கு மிசா என்று பெயரிட்டார். இன்று அப்படியே திரும்பி காங்கிரசுடன் கைகோத்திருப்பது தங்களது கொள்கைகளுக்கு மட்டுமல்ல இவர்கள் பேச்சைக் கேட்டு காங்கிரசின் அடக்கு முறையை எதிர்த்து தியாகம் செய்த எண்ணற்ற இந்தியர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

(இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்)

ஜூலையிலும் தடம் மாறும் செங்கோட்டை – மயிலாடுதுறை ரயில்..

மதுரை: மதுரைக் கோட்டத்தில் வாடிப்பட்டி – சோழவந்தான் இடையே நடைபெறும் பொறியியல் பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இன்றும் (ஜூலை 1), நாளையும் கோவை – நாகர்கோவில் ரயில் (16322) திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும்.

ஜூலை 4, 5, 7, 8, 9, 11, 12, 14, 15, 16, 30ல் செங்கோட்டை – மயிலாடுதுறை மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.

பயணிகள் வசதிக்காக புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.

செங்கோட்டையில் இருந்து ராஜபாளையம், விருதுநகர் வழியாக மதுரை வரை சிறப்பாக இயங்கி வந்த ரயில், மயிலாடுதுறை வரை நீட்டிப்பு செய்யப்பட்ட பிறகு இட நெருக்கடியால் பயணிகள் தவிக்கின்றனர். எனவே மயிலாடுதுறை வரை வேண்டாம், மதுரை வரையே போதும் என பயணிகள் கூறுகின்றனர்.

செங்கோட்டை- – விருதுநகர் அகல ரயில் பாதையாக்கப்பட்ட பின் 2004 முதல் இந்த வழித்தடத்தில் தினமும் 3 தடவை பயணிகள் ரயில் மதுரைக்கு இயக்கப்பட்டது. இதனால் திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்கள் பயனடைந்து வந்தனர்.

2022 முதல் மயிலாடுதுறை – -திண்டுக்கல் ரயிலையும், செங்கோட்டை- – மதுரை ரயிலையும் இணைத்து செங்கோட்டை- – மயிலாடுதுறை ரயிலாக இயக்கினர். தென் மாவட்ட மக்கள் திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு ஒரே ரயிலில் செல்வதற்கு வசதியாக இருந்தது.

ஆனால் நீட்டிப்பு செய்யப்பட்ட பிறகு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படாமல் 10 பெட்டிகளாக குறைத்து இயக்கினர். கடும் இட நெருக்கடியில் மக்கள் உயிரை பணயம் வைத்து படிகளில் தொங்கிக் கொண்டு பயணிக்கின்றனர்

சில மாதங்களாக இந்த ரயில் பராமரிப்பு பணி என்ற பெயரில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக அடிக்கடி வழித்தடம் மாற்றி இயக்கப்படுகிறது. தென் மாவட்ட பணிகள் மதுரை வந்து, செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

இதனால் முன்பு போல் தங்களுக்கு மதுரை வரையே பயணிகள் ரயில் போதும், மயிலாடுதுறைக்கு வேண்டாம்.

தற்போது செங்கோட்டையில் மதியம் 12:45 மணிக்கு புறப்பட்டு மாலை 4:00 மணிக்கு மதுரை வரும் ரயிலை மீண்டும் 5:15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு செங்கோட்டை சென்று திரும்பும் வகையில் இயக்க வேண்டும்.

மயிலாடுதுறையில் மதியம் 12:10 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரயிலை, மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டு 7:30 மணிக்கு மதுரை வந்து பின் செங்கோட்டை வரை செல்லும் கூடுதல் ரயிலாக இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரதட்சிணைப் பேய்! மனதை உலுக்கும் ரிதன்யாவின் மரணம்!

write thoughts - 2026
#image_title

💔 மனதை உலுக்கியெடுக்கும் ரிதன்யாவின் வாழ்வும் மரணமும்…

ரிதன்யா என்பது மிக அழகான தனித்துவமான பெயர். விஜய் டிவி ‘புகழின்’ மகள் பெயரும் இது தான் ! இன்று நவீனமாக இருக்கும் பெயரை 27 வருடங்களுக்கு முன்பு 90 களில் ஒரு பெற்றோர் தனது குழந்தைக்கு வைத்துள்ளார்கள் என்பதே அவர்களது பேரன்பிற்கு சான்று.

நல்ல வசதியுடன் வளர்த்த தனது செல்ல மகளை, பெரிய இடத்தில் கட்டித்தர வேண்டும் என்று தான் எந்த தகப்பனும் நினைப்பான். அரசியல் பின்புலமிக்க பாரம்பரிய குடும்பம் ! மாப்பிள்ளைக்கு எந்த வித கெட்ட பழக்கமும் இல்லை, 20 நிமிடப் பயணத்தில் சென்று பார்த்து விடக் கூடிய தூரம். இதை விட என்ன வேண்டும் என்று தான் அவர் நினைத்திருப்பார். ஆகவே தான் சுமார் ஐந்து கோடி செலவில் ஊரே பார்த்து வியக்கும்படி திருமணத்தை நடத்தியுள்ளார் தந்தை ! வால்வோ காரா, தர்றேன் ! மாப்பிள்ளைக்கு பிசினஸ் வைத்து தர வேண்டுமா ! பண்ணிக்கலாம் சாமி ! என அனைத்திற்கும் ஆமோதித்துள்ளார்,

ரிதன்யாவின் திருமண வீடியோவை யூடியூபில் பார்த்தேன் ! இப்போது அது நீக்கப்பட்டிருக்கிறது. கோவிலில் மணமகள் கிளம்புவது முதல் பல இடங்களில் ரிதன்யாவின் கண்கள் தந்தையைத் தான் தேடுகிறது. ஆனால் அப்படியான பாசக்கார மகள் இன்று இல்லை. காரணம் ஒரு பொன் குஞ்சன்.

கொங்குப் பகுதியை பொறுத்த வரை ஆண் குழந்தை அதிகாரம், வாரிசு, உரிமை. — பெண் குழந்தை என்றால் பாசம், கௌரவம். ஆண் வாடையே படாமல் நல்லபடியாக மகளிர் பள்ளியில் படிக்க வைத்து, மகளிர் கல்லூரிக்கு அனுப்பி ஒரு நல்ல குடும்பத்தில் கொடுத்து விட்டால் கடமை முடிந்தது. “மேற்படிப்பு, வெளிநாடெல்லாம் மாப்பிளையோட சேர்ந்து போ கண்ணு” என்பது தான் எழுதப்படாத விதி.

கொங்கு பகுதியில் பல காதல்கள் “எங்க அய்யங்கிட்ட சொல்லிப் போடுவேன் பாத்துக்க ” என்ற ஒற்றை வரியில் முடித்து போகும். அப்படியே தொடர்ந்தாலும், சாதி, குலம், கூட்டம் எல்லாம் சரியாக இருக்கிறதா எனப் பார்த்த பிறகே காதல் மலரும். காரணம், எந்த சூழ்நிலையிலும் தன்னால் தன் தந்தை தலை குனிந்து விடக்கூடாது என யோசிக்கும் அப்பா செல்லங்கள் கொங்கு மகள்கள். சொத்தில் பத்துப் பைசா தரவில்லை எனினும் உரிமை வேண்டாம் என கையெளித்திடுவார்கள். கணவனே என்றாலும் அப்பாவிற்கு பிறகு தான் எவனும் !

ஆனால் ஆண் குழந்தையை ஓரளவிற்கு வசதி உள்ள குடும்பங்கள் கூட பொன் குஞ்சனாய் தான் வளர்ப்பார்கள். தாத்தா, அப்பா சொத்தில் வளர்ந்து, கல்யாணமண்டபம், வட்டிக்கு விடுதல், வாடகை வாங்குதல், விதம் விதமான ஸ்கேம்களில் சிக்கி ஏமாறுதல் தான் இந்த பொன் குஞ்சன்களின் வேலை. ஏழு தலைமுறைக்கு சொத்து இருப்பதால் மறந்தும் வேலைக்கு செல்ல மாட்டார்கள்.

தோல்வி, காதல், சண்டை, சமஉரிமை, ஏமாற்றம், புத்தகம், காத்திருத்தல், விட்டுக்கொடுத்தல் என எந்த அடிப்படை அனுபவமும் இருக்காது. அம்மா திட்டினாலே கோபித்துக் கொள்ளும் அமுல் பேபிகள். அம்மச்சிகளின் சின்ன ஜமீன்கள். வீட்டிலேயே பிரசவம், மூலிகைப் பண்ணை, லில்லிபுட் தேடுதல், பாரம்பரிய உணவு, இயற்கை வைத்தியம், திருமணமான மூன்று மாதத்தில் கருத்தரிக்க வைத்து விட வேண்டும் என இவர்களது எண்ண ஓட்டமே தூர்தர்சன் லெவலில் இருக்கும். 24 மணி நேரமும் வீட்டிலேயே இருக்கும் இவர்களுக்கு சமைத்துப் போடுதல், இல்லறத்தை இன்பமயமாக்குதல் தான் இவர்களுக்கு வாக்கப்படும் பெண்களின் நிலை.

கவினுக்கு மாத வாடகை மட்டும் 20 லட்சம் வருகிறது. திருமணமான மூன்றாவது வாரமே சிக்கல் வருகிறது, ரிதன்யா அப்பா வீட்டிற்கு வந்து, கவினின் அம்மாவை அழைத்துப் பேசியிருக்கிறார். எம்புள்ளையா இப்படி என பொய்யாய் அதிர்ந்து ரிதன்யாவை அழைத்து சென்றிருக்கிருக்கிறார். உன் பாதுகாப்புக்கு தான் என சொல்லி வீட்டின் கேட்டை பூட்டி ரிதன்யாவை உள்ளே அடைத்திருக்கிறார்கள்.

இதில் நாம் கவனிக்க வேண்டியவை.

1) எவ்வளவு வசதி இருந்தாலும் , உங்கள் மகன் மற்றும் மகளை கல்லூரிப் படிப்பு முடிந்ததும் ஒரு சில வருடங்களாவது வெளியூர்களுக்கு வேலைக்கு அனுப்புங்கள். புதிய ஊர், வேலை, நண்பர்கள் என கிடைக்கும் அனுபவம் அவர்கள் மனதை திடமாக்கும், அறிவை விசாலமாக்கும்.

2) வாழ்வின் எந்த சூழ்நிலையிலும், என்ன தவறு செய்திருந்தாலும் நீ எங்களிடம் வரலாம், ‘நாங்கள் இருக்கிறோம்’ என்ற நம்பிக்கையை தொடர்ந்து தாருங்கள்.

3) லட்சத்தில் பீஸ் கட்டினாலும், நீ பெயில் ஆகும் வாய்ப்பு இருக்கிறது, கோடியில் திருமணம் செய்தாலும் அது முறியும் வாய்ப்பும் இருக்கிறது, ஆனால் இது முடிவல்ல ! எதற்கும் ஒரு மாற்று உண்டு என்பதை சொல்லுங்கள்.

4) ஒரு காதல், ஒருவனுக்கு ஒருத்தி, நூறு மார்க், தங்கமான பிள்ளை, ஒழுக்கமான வளர்ப்பு என சம்பிரதாயங்கள் அனைத்தும் போலி, நீயும் உலகத்தில் உனது இருப்பு மட்டுமே நிஜம் ! எதுவும் கடந்து போகும், எல்லாவற்றையும் கடந்தும் நீ வாழலாம் என்ற திடம் தாருங்கள்.

5)மகன் என்றால் உழைப்பின் அருமை நிச்சயம் போதிக்கப்பட வேண்டும் ! பிறரிடம் கை கட்டி நின்று வேலை நுணுக்கம் பழகிட வேண்டும் ! வரிசையில் நின்று வாங்கத் தெரிய வேண்டும். வசதியும் திறமையும் வேறு வேறு ! இந்த உலகில் இருக்கும் ஏதோ ஒரு சிறிய தேவையாவது உனது திறமை சரி செய்ய வேண்டும், அதுவே மனித இருப்பின் அடிப்படைகளில் ஒன்று என்பதை சொல்லுங்கள்.

6) மனைவியே என்றாலும் பெண்ணின் விருப்பம் இன்றி தொடக்கூடாது என்பதை மண்டையில் உரைக்கும் படி சொல்லி வளருங்கள்.

7) திருமணத்திற்கு பிறகு படிப்பு, வேலை, சுயதொழில் என பெண்ணின் விருப்பம் எது என்றாலும் அதை நிறைவேற்றி தருவது தான் ஆணின் கம்பீரம் என சொல்லுங்கள்.

8 ) மகளோ, மனைவியோ பெண்ணை நம்புங்கள், தனியான பயணங்களை அனுமதியுங்கள், பெண்ணிற்கும் சிறகுகள் உண்டு, சார்ந்திருக்கும் வரை அது விரியாது. சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் பொழுது தான் அதன் பயணம் துவங்கும், எங்கு பறந்தாலும் அது கூடு வந்தே சேரும் எனப் போதியுங்கள்.

பிறகு ஒரு முக்கிய விஷயம்,

ஒருவேளை திருமண வயதில், உங்கள் வீட்டில் ஒரு பொன் குஞ்சனை மகனாக வளர்ந்திருந்தால், அவனுக்கு தேவை திருமணம் அல்ல, ஒரு வாழ்நாள் ஆயா ! மீறி திருமணம் செய்து வைத்தால் உங்களையும் சிறைக்கும் அழைத்து செல்லும் அற்புதங்களை நிகழ்த்துவார்கள் இந்த பொன் குஞ்சன்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

  • ஹரிஹரசுதன் தங்கவேலு, எழுத்தாளர்

முதல்வர் சொல்வதற்கும் முதல் தகவல் அறிக்கைக்கும் எத்தனை வேறுபாடு?!

IMG 20250701 WA0035 - 2026

அஜித்குமாருக்கு நீதி வேண்டி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது முதல்வர் சொல்வதற்கும், முதல் தகவல் அறிக்கைக்கும் வேறுபாடுகள் உள்ளது., என ஆர்.பி.உதயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது குறிப்பிட்டார்.

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே பழையூரில் அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு,
100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு பழையூர் கருப்பசாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தார்.

தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
இதனிடையே, திருப்புவனத்தில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்ற அஜித்குமார் என்பவர் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி வேண்டி காவல் நிலையமா? கொலை நிலையமா? என்ற பதாதைகளை ஏந்தி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்:
முதல்வர் விளக்கம் அளித்த போது விசாரணையின் போது மாரடைப்பால் இறந்திருக்கலாம் என சொல்கிறார்.
ஆனால் , முதல் தகவல் அறிக்கையில் ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

அதில், கொடுமை என்னவென்றால் முதல்வர் சொல்வதற்கும், முதல் தகவல் அறிக்கைக்கும் வேறுபாடுகள் உள்ளது.
18 இடங்களில் காயம் இருப்பதாக நீதியரசர் காயம் இருப்பதாக சொல்லுகிறார் .

முதல் தகவல் அறிக்கையில் தப்பி ஓட முயன்ற போது வலிப்பு வந்து கீழே விழுந்து இறந்துவிட்டார் என சொல்கிறார்கள்.

அஜித்குமார் என்ற இளைஞரை அடித்து துன்புறுத்தும் போது அவர் எழுப்பிய அபாய குரலை அங்கு இருக்கும் பொதுமக்களே சொல்கிறார்கள்.
இன்று ஒரு சார்பு ஆய்வாளர் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக வழக்கு பதிவு செய்யப்
பட்டுள்ளது.


வேலியே பயிரை மேய்ந்தது போல அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது.


இது போன்ற அதிர்ச்சி அளிக்கும் செய்தி நான்கு பக்கத்தில் இருந்தும் வருகிறது, முதல்வர் விளம்பரம் தேடுவதிலேயே தான் இருக்கிறாரே தவிர எதும் செய்யவில்லை.


இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக தான் ஜூலை 7 ஆம் தேதி முதல் எழுச்சி பயணம் மேற்கோள்ள உள்ளார் .


எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்றத்தில் நாட்டின் துயரங்களை எடுத்து சொன்னால் நேரலையை துண்டிக்கிறார்கள், மக்கள் மத்தியில் எடுத்து சொன்னால் பேரலையாக வரவேற்பதை முதல்வரால் தடுத்து நிறுத்த முடியாது., நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், கண்துடைப்பாகி விட கூடாது என ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம் என கூறினார்.

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்வு..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்தது.உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறியதுடன் நிதியுதவி அறிவித்துள்ளார்.

1000803005 1 - 2026

“விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (01.07.2025) காலை சுமார் 8.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், மீனம்பட்டியைச் சேர்ந்த மகாலிங்கம் (வயது 55) த/பெ.ராமசாமி. அனுப்பன்குளத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டியன் த/பெ. சின்னையா, மத்தியசேனையைச் சேர்ந்த லட்சுமி க/பெ. கருப்பசாமி, விருதுநகர் வட்டம், ஒ.கோவில்பட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தி (வயது 38) த/பெ. ராம்ராஜ், சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த ராமஜெயம் (வயது 27) த/பெ. கந்தசாமி மற்றும் சூலக்கரையை சேர்ந்த வைரமணி (வயது 32) த/பெ. காந்தி உட்பட 8பேர் உயிரிழந்தனர் .

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லிங்குசாமி (வயது 45), மணிகண்டன் (வயது 40), கருப்பசாமி (வயது 27), முருகலட்சுமி (வயது 48) மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அழகுராஜா (வயது 28) ஆகிய 5 நபர்களுக்கு ிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ள என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் – கும்பாபிஷேக யாகசாலையில் பூஜைகள் துவக்கம்..

1000803081 - 2026


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலையில் பூஜைகள் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த பூஜைகள் இன்று முதல் கும்பாபிஷேக நாள் வரை நடைபெறும்.வரும்ஜூலை 7ஆம் தேதி வேத நாராயண முறைப்படி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ளது.

தமிழ் கடவுள் என்று பக்தர்களால் கோலாலகமாக கொண்டாடப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திருச்செந்தூர் உள்ளது. கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள இந்த அறுபடை வீட்டிற்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்து முருகனை தரிசிப்பது வழக்கம். 

இந்த நிலையில், திருச்செந்தூர் கோயிலில் வரும் 7் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அன்றைய நாள்  6மணி கங்கு துவங்கி காலை 9மணி முதல் காலை 10.30 மணிக்குள் இந்த கும்பாபிஷேக விழா நடக்கிறது. 

குடமுழுக்கு விழா அறிவிப்பு வெளியானது முதலே திருச்செந்தூர் வழக்கத்தை விட கூடுதலாக களைகட்டி காணப்படுகிறது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கும்பாபிஷேகத்திற்கான யாகசாலையில் பூஜைகள் இன்று தொடங்கியது. இந்த பூஜைகள் இன்று முதல் கும்பாபிஷேக நாள் வரை நடைபெறும். யாகசாலை நடக்கும் இடம் முழுவதும் தங்க நிறத்தில் ஜொலிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. யாகசாலை நடக்கும் இடத்தில் 5 தலை நாகம், முனிவர்கள், நந்தி சிலைகள் போன்ற பல்வேறு ஓவியங்களும் இடம்பெற்றுள்ளது. 

இந்த கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக பல  லட்சம் பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோயிலில் நேற்று மூலவரான சுப்ரமணிய சுவாமிக்கு குடமுழுக்கு நடத்துவதற்கான அனுமதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கும்பாபிஷேகத்திற்காக நடத்தப்படும் யாகசாலை பூஜை 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த யாக சாலையில் 76 குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் முருகனை தரிசிப்பதற்கும், அவர்கள் வந்து செல்வதற்கு தோதாகவும் ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் கடற்கரைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் தீவிர கண்காணிப்பு, பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ராஜகோபுரத்தைச் சுற்றி அர்ச்சகர்கள் கலசத்தை மேலே எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக இரும்பு கம்பிகளால் சாரம் அமைக்கப்பட்டு வருகிறது. கும்பாபிஷேக நாளில் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்படும் கும்பம் அதாவது கலசம் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அனைத்து கலசங்களிலும் புனித நீராக ஊற்றப்படும். குறிப்பாக, திருச்செந்தூர் முருகன் கோயிலின் ராஜகோபுரத்தில் இந்த கலசநீர் ஊற்றப்படும் அந்த நிகழ்வை முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் காண லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் காத்துள்ளனர். 

கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பக்தர்கள் வசதிக்காக அவர்கள் அமரும் வகையில் 2 ஆயிரம் சதுர அடி கேலரி அமைக்கப்பட்டுள்ளது. 12 கால யாக பூஜையும் சிறப்பாக நடைபெறுவதற்கு ஏதுவான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்தின்போது கலசத்திற்கு ஊற்றப்படும் புனிதநீர் ல்ட்சக்கணக்கான பக்தர்கள் மீது ட்ரோன்கள் மூலம் தெளிக்கப்பட உள்ளது. 

இந்த கும்பாபிஷேகத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும், அரசு சார்பில் வரும் 4ம் தேதி முதல் 400 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கண்காணித்து வருகின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் கோலாகலம்..

1000802513 - 2026

உலக பிரசித்தி பெற்ற பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் ஆனித்திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர்.நாளை புதன்கிழமை அதிகாலை மகாபிஷேகமும், பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும் நடைபெறுகிறது.

வீதிவலம் வந்த 5 தேர்கள்: ஸ்ரீநடராஜர் கோயிலில் கடந்த ஜூலை.23-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் தொடங்கியது. ஜூலை 1 -ம் தேதி
9-ம் நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்த்திருவிழாவை முன்னிட்டு சித்ரசபையில் உள்ள மூலவர்களான ஸ்ரீமந் நடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி மற்றும் உற்சவர்கள் ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகியோர் தனி தனி தேர்களில் அதிகாலை எழுந்தருளினர். பின்னர் கீழவீதி தேரடி நிலையிலிருந்து 8 மணிக்கு தேர்கள் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். தேர்கள் தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக கீழவீதி தேர்நிலையை அடைந்தன.

உழவாரப்பணி மற்றும் திருமுறை இன்னிசை: தேர்களுக்கு முன்பு வீதிகளில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர், தில்லைத் திருமுறைக்கழகம், அப்பர் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் திரளான பெண்கள் வீதிகளை நீரினால் கழுவி கோலமிட்டு உழவாரப்பணியை மேற்கொண்டனர். தேர்களுக்கு முன்பாக ஓய்வுபெற்ற ஆசிரியர் எம்.பொன்னம்பலம் தலைமையில் சந்திர பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஓதுவார்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்தி சென்றனர். சிவனடியார்கள் சிவவாத்தியங்களை முழங்கி நடனமாடி சென்றனர்.

மீனவ சமுதாயத்தினரின் மண்டகப்படி: மீனவ சமுதாயத்தில் பிறந்த பார்வதிதேவியை, சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார் என்பதால் தாய் வீட்டு சீதனமாக ஒவ்வொரு தேர் திருவிழாவின் போதும் மீனவர் சமுதாயத்தினர் சார்பில் தேரோட்டத்தின் போது சீர் அளிப்பது வழக்கமாக உள்ளது. இதனை முன்னிட்டு முன்னதாக மாலை 4 மணிக்கு மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சியான நடராஜருக்கு, அம்பாளுக்கும் சீர்அளித்து, பட்டு சாத்தி சிறப்பு தீபாராதனை செய்து மரியாதை செலுத்தும் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் இரவு ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் செல்கின்றனர். அங்கு இருவருக்கும் ஏக கால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

ஆனித்திருமஞ்சன தரிசனம்:

ஜூலை.2-ம் தேதி புதன்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் ஆயிரங்கால் மண்டப முகப்பில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் நடைபெறுகிறது. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறுகிறது. அதனையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடணமாடி ஆனித்திருமஞ்சன தரிசன காட்சியளித்து, சித்சபா பிரவேசம் செய்கின்றனர். ஜூலை .3-ம் தேதி வியாழக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலா நடைபெறுகிறது. ஜூலை.4-ம் தேதி வெள்ளிக்கிழமை தெப்போற்சவத்து உற்சவம் முடிவடைகிறது

விழா ஏற்பாடுகளை உற்சவ ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்களின் செயலாளர் த.சிவசுந்தர தீட்சிதர், துணைச்செயலாளர் சிஎஸ்எஸ் வெங்கடேச தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் யு.எஸ்.சிவகைலாஸ் தீட்சிதர் ஆகியோர் செய்திருந்தனர்.

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து-7 பேர் பலி..

1000803005 - 2026

சாத்தூர் அருகே இன்று ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் பலி 5 பேர் படுகாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னக்காமன் பட்டியில் செயல்பட்டு வரும் கோகுலேஸ் பட்டாசு தொழிற்சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்தினால் ஆலையில் உள்ள ஐந்து அறைகள் வெடித்து சிதறி தரைமட்டமானது. இந்த வெடி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலியாகினர். மேலும் படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.

சிவகாசியைச் சேர்ந்த கமல்குமார் என்பவருக்கு சொந்தமான கோகுலேஸ் பட்டாசு தொழிற்சாலை சின்னக்காமன்பட்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது. இது நாக்பூர் உரிமம் பெற்று செயல்பட்டு வரும் இந்த பட்டாசு ஆலையில் சுமார் 20க்கும் மேற்பட்ட அறைகளின் 50க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை வழக்கம்போல் பணி செய்ய தொடங்கிய நிலையில் உராய்வின் காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த வெடிவிபத்தினால் ஐந்து அறைகள் தரைமட்டமாகின இந்த வெடி விபத்தில் சிக்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 5 பேர் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இந்த பட்டாசு வெடி விபத்து மீட்பு பணியில் சாத்தூர் மற்றும் சிவகாசி தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்
மீட்பு பணியின் போது மேலும் சில சடலங்கள் கைப்பற்றிய நிலையில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் பலியாகியதாக தெரியவருகிறது. மேலும் மருத்துவமனைக்குச் சென்ற ஒருவரும் பலியாகிய நிலையில் வலி எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.
இரண்டு பெண்கள் நான்கு ஆண்கள் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் என ஏழு பேர் இந்த வெடி விபத்தில் பலியாகியதாக தெரிவிக்கின்றனர்.

இந்த வெடி விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த பட்டாசு வெடி விபத்து குறித்து சாதாரண நகர் போலீஸார் விசாரணை நடத்திய நிலையில் பட்டாசு ஆலையின் மேலாளர் மற்றும் போர்ன் ஆகிய இருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பட்டாசு ஆலை வெடிவத்தில்

மீனம்பட்டியைச் சேர்ந்த மகாலிங்கம் ராமசாமிபுரத்தைச் சேர்ந்த வைரமணி

சூலக்கரையைச் சேர்ந்த லட்சுமி

  1. அனுப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி மற்றும்
  2. ராமமூர்த்தி
  3. ஓ கோவில்பட்டியைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி மற்றும்
  4. ராமஜெயம் ஆகியோர் பலியாகினர்

நெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழா கொடியேற்றம்..

1000801185 - 2026

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.முக்கிய விழாவான தேரோட்டம் ஜூலை 8ந் தேதி நடைபெறும்.அன்று உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் ஆனித் திருவிழா தொடங்கியிருக்கிறது. ஜூலை 8-ல் நடைபெறும் தேரோட்டத்திற்காக அந்த நாளில் உள்ளூரில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.

பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒனன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலின் 518-வது ஆனிப் பெருந்திருவிழா, இன்று திங்கட்கிழமை காலை கோலாகலமாக வேதபாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

1000801181 - 2026

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, பக்திப் பரவசத்துடன் தொடங்கிய இந்தத் திருவிழா, அடுத்த பத்து நாட்களுக்கு மாநகரையே விழாக்கோலமாக்க உள்ளது.

இன்று அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் ஆனித் திருவிழா நடவடிக்கைகள் தொடங்கின. இதைத் தொடர்ந்து, மகா மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர், பிரதான கொடிமரத்திற்கு அருகில் எழுந்தருளிய சுவாமி-அம்பாளுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன

காலை மேள தாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத, நெல்லையப்பர் கோவிலின் கம்பீரமான கொடிமரத்தில் திருவிழாக் கொடி ஏற்றப்பட்டது. கொடிமரத்திற்கு 16 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அழகிய அலங்காரங்கள் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றது.

விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆணிப் பெரும் திருவிழா தேரோட்டம் வரும் எட்டாம் தேதி நடைபெற உள்ளது.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம்; ஸ்டாலின் அரசுக்கு முற்றும் நெருக்கடி!

annamalai stalin edappadi
அண்ணாமலை – ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம் தொடர்பாக நீதிமன்றம் விசாரிக்கக் கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு, “அவர் என்ன தீவிரவாதியா? தூக்கிச் சென்று அடித்துக் கொலை செய்துள்ளீர்கள்?” என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம்  தொடர்பாக நீதிமன்றம் விசாரிக்கக் கோரி முறையீடு செய்யப்பட்டது. 

இதற்கு, அடித்துக் கொல்லப்பட்டவர் தீவிரவாதியா?, தூக்கிச் சென்று அடித்துக் கொலை செய்துள்ளீர்கள்? சாதாரண வழக்கில் கைதானவரிடம் எந்த ஆயுதமும் இல்லாத போது இதுபோன்று தாக்குதல் நடத்தி உள்ளது ஏன்?  என்று,  எஸ்.எம். சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், 24 லாக் அப் மரணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது; அது பற்றிய விவரம் என்ன? என்று, அரசு குற்றவியல் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியது. இதை ஒரு மனுவாக தாக்கல் செய்தால் விசாரணை நடத்தப்படும் என உயர்நீதிமன்றக் கிளை தெரிவித்தது. இதை அடுத்து, இந்த வழக்கில் நாளை விசாரணை நடைபெறக் கூடும் என்று தெரிகிறது.

முன்னதாக, இந்த விவகாரத்தில் தமிழக எதிர்க்கட்சிகள் காரசார அறிக்கைகளை வெளியிட்டன. முக்கியமாக தமிழக பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை பெரும் கவனம் பெற்றது.

மூடி மறைக்கும் திமுக., : அண்ணாமலை கண்டனம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 29 வயது இளைஞர் அஜித், காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொலையை மூடிமறைக்கும் வேலையில், காவல்துறையினரும், அந்தப் பகுதி திமுகவினரும் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் திமுகவினர், போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் திமுகவினர் யாரும், காவல்துறை விசாரணையின்போது தாக்கப்படுவதில்லை. ராஜமரியாதையுடன் நடத்தப்படுகின்றனர். சிறு சிறு குற்றங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் அப்பாவிகளைக் காவல்துறை விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்குவது, திமுக ஆட்சியில் மிகவும் அதிகரித்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து, 23 பேர் காவல்துறை விசாரணையின்போது மரணமடைந்துள்ளனர். ஆனால், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர், இது குறித்து எந்தக் கவலையுமின்றி இருக்கிறார்.

தமிழகத்தில், ஆளுங்கட்சியினர், அமைச்சர்களின் நண்பர்கள் குற்றம் செய்தால், அவர்களைக் காப்பாற்ற, பாதிக்கப்பட்டவர்களையே மிரட்டும் திமுக அரசு, ஏழை எளிய மக்கள் என்றால், அவர்கள் உயிர் போனாலும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

உடனடியாக, திருப்புவனம் இளைஞர் அஜித், காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகப் போராடும் திருப்புவனம் மக்களோடு நாங்கள் துணை நிற்கிறோம். உயிரிழந்த இளைஞர் அஜித் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் விடப்போவதில்லை. – என்று குறிப்பிட்டார் கு. அண்ணாமலை.

நயினார் நாகேந்திரன் கண்டனத்தில் கிளப்பிய சந்தேகங்கள்!

தமிழக பாஜக., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது…

அருமை ஊடகங்களே, பத்திரிகை நண்பர்களே, பாஜகவின் மாநிலத் தலைவராக அல்ல, பாஜகவின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அல்ல, ஈன்றெடுத்த மகனை இழந்து வாடும் ஒரு தாயின் சார்பாக உங்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அஜித் குமாரின் மரணம் தொடர்பான கீழ்க்காணும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் “காவல்துறை அமைச்சர்” திரு. மு.க. ஸ்டாலின் அவர்களிடம் இருந்து பதில்களை பெற்று தாருங்கள்.

1. காவல்துறையால் கைது செய்யப்பட்ட அஜித்குமார் 24-மணி நேரத்திற்குள் நீதிபதிக்கு முன் ஏன் ஆஜர்படுத்தப்படவில்லை?

2. பல இடங்களில் அஜித்குமாரை வைத்து அடித்து துன்புறுத்திய காவல்துறை மடப்புரம் கோவில் அலுவலகத்தின் பின்புறம் அழைத்து சென்று அவரைத் தாக்கியதாக அஜித்குமாரின் சகோதரர் நவீன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கோவிலில் இருந்து விசாரணை என்ற பெயரில் முறையாக கைது செய்யப்படாத ஒருவரை காவல்துறை அழைத்துச்செல்ல அனுமதி வழங்கியது யார்?

3. விரைந்து தனிப்படை அமைத்து அஜித்குமாரை விசாரிக்கும்படி விசாரித்து “உண்மையை” வரவழைக்க மாவட்ட SP திரு. ஆஷிஷ் ராவத் வாயிலாக, நகையை பறிகொடுத்தவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஒருவர் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறதே. இது உண்மையா? உண்மை எனில், யார் அவர்? அவர் மீது என்ன நடவடிக்கை?

4. இரும்பு கம்பியால் சரமாரியாக அடிக்கப்பட்டு, மிளகாய் பொடி கலந்த தண்ணீரை குடிக்கச் செய்து துன்புறுத்தப்பட்ட அஜித்குமார் மயங்கி விழுந்த பின் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாமல், நான்கு மணி நேரம் போலீஸ் டெம்போ வேனில் பூட்டிவைக்கப்பட்டது ஏன்?

5. எளிய பின்புலம் கொண்ட இந்த இளைஞன் உயிர் வாழ்ந்தால் என்ன, இறந்தால் என்ன என்ற ஏளனமான எண்ணமா? அல்லது, உயிர் பிரிந்து விட்டது என்று தெரிந்து, தடயங்களை அழிக்கவும், கட்டுக்கதைகளை புனையவும் காவல் துறையினருக்கு தேவைப்பட்ட அவகாசம் தான் அந்த 4-மணி நேரமா?

6. நான்கு மணி நேரம் தாமதமாக அழைத்து வந்த காரணத்தினாலும், சந்தேகத்திற்குரிய நிலையில் மரணம் நிகழ்ந்துள்ள காரணத்தினாலும், அஜித்குமாரை பரிசோதிக்க திருப்புவனம் அரசு மருத்துவமனையும், மானாமதுரை அரசு மருத்துவமனையும் மறுத்துவிட்டதால், மதுரை வரை சென்று ஒரு தனியார் மருத்துவமனையில் அஜித் குமாரை சடலமாக காவல்துறையினர் பரிசோதனைக்கு ஒப்படைத்தார்கள் என்பது உண்மையா?

7. அஜித்குமாரின் இறப்புக்கு போலீஸ் துன்புறுத்தல் காரணம் இல்லையென்றால், 6 காவலர்கள் ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்? இது கொலை தான் என்று ஒப்புக்கொண்ட பின்னும், அஜித் குமாரின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது கொலை வழக்கை இப்பொழுது வரையில் ஏன் பதியவில்லை? ஏன் கைது செய்யவில்லை?

8. இவ்வளவு குளறுபடிகள் இருந்தும், போராட்டத்தில் இறங்கிய அஜித் குமாரின் குடும்பத்தாரிடம் சடலத்தை பெற்றுக்கொள்ளவும், பிரச்சனையை பெரிதாக்காமல் இருக்கவும் திமுகவினரை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு, அவர்கள் மசியாமல் இருந்த நிலையில், காவல் துறையின் பாதுகாப்புடன் திமுக கொடிப் பொருந்திய வாகனத்தில் அஜித் குமாரின் தம்பியான நவீனை மறுபடியும் எங்கேயோ அழைத்துச் செல்ல முயற்சித்தது எவ்வித அராஜக செயலாகும்? நீதியை தடுக்கும் பொருட்டு செயல்பட்ட @arivalayam அமைச்சர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது எப்பொழுது வழக்கு பதிவு?

9. இதுவரை திமுக ஆட்சியில் 24-க்கும் மேற்பட்ட காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் முதல்வரின் வேலையா? தமிழகக் காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லையா? தொடர் காவல் மரணங்களுக்கு முதல்வர் கூறப் போகும் பதில் என்ன? இதற்கெல்லாம் முதல்வர் தார்மீகப் பொறுப்பேற்றுக் கொள்வது எப்பொழுது? மக்கள் கேட்கிறார்கள்! – என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட கண்டன அறிக்கை!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிப்பதுடன், மிகுந்த கண்டனத்திற்குரிய செயலுமாகும்.

காவல்துறையின் இந்த அராஜகப் போக்கினால் உயிரிழந்துள்ள திரு.அஜித்குமார், திருப்புவனம் பகுதியில் அமைந்துள்ள மடப்புரம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் தற்காலிக ஊழியராக செயல்பட்டு வந்துள்ளார். விசாரணை என்ற பெயரில் அஜித்குமார் மற்றும் அவரது சகோதரரை அழைத்துச் சென்ற காவல்துறையினர், செல்லும் வழியிலேயே அஜித்குமாரை கடுமையாக தாக்கியதாக அவரது சகோதரர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு பாலியல் புகாரளிக்க வந்த பெண்களை இதே காவல் துறையினர் தாக்கியுள்ளார்கள் என்ற செய்தியையும் அறியமுடிகிறது. எனில், இந்தக் காவல்துறையினர் என்ன மனநிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த அரசு விளக்க வேண்டும். போலி வாக்குறுதிகளும் பொய் புரட்டுகளும் நிரம்பிய இந்த போலி திராவிட மாடல் ஆட்சியில், அதிகாரிகளும், காவல் துறையினரும் அதிகாரத்தை தன்னிச்சையாக கையில் எடுத்துக் கொண்டு அத்துமீறி செயல்படுவது மிகப்பெரிய அவலம். பொம்மை முதல்வர் திரு.

@mkstalin அவர்களோ, தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய காவல்துறையை கண்டுகொள்ளாமல் விட்டிருப்பதன் விளைவு, அப்பாவி பொதுமக்கள் காவல்துறையின் துன்புறுத்தலால் உயிரிழக்கின்றனர். தற்போது நடந்துள்ள இந்த மரணத்திற்கு என்ன சொல்ல போகிறார் என்பது முதல்வருக்கே வெளிச்சம். அதேசமயம், காவல்துறை அதிகாரிகளும் சரி, ஏனைய துறை சார்ந்த அதிகாரிகளும் சரி, தாங்கள் அனைவருமே பொதுமக்களுக்கு சேவை புரிவதற்கு மட்டுமே. தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தையும் செல்வாக்கையும், அப்பாவி பொதுமக்கள் மீது அடக்குமுறையாக செலுத்துவது எவ்வகையிலும் நியாயமாகாது.

பொதுமக்களின் பாதுகாப்பிற்கு காவல்துறை என்ற நிலை தலைகீழாய் மாறி, காவல்நிலையம் சென்றாலே மக்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை தற்போது உருவாகி வருவது வேதனை அளிக்கிறது. மேலும், அப்பாவியான திரு.அஜித்குமார் மரணத்திற்கு தமிழக காவல்துறையும், தமிழக அரசும், தார்மீகப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டுமென்று முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்..!

ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? : எடப்பாடி பழனிசாமி

சிவகங்கையில் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரண விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட கண்டனத்தில், “ஜெய்பீம் படம் பார்த்தேன்; உள்ளம் உலுக்கியது என சினிமா விமர்சனம் எழுதிய முதல்வர் எங்கே இருக்கிறார்?; நேரடி கட்டுப்பட்டில் உள்ள காவல் துறையைக் கூட நிர்வகிக்கத் தெரியாத முதல்வருக்கு கண்டனம். மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    மனசாட்சி இருந்தால் முதல்வர் விலக வேண்டும்! : அன்புமணி

    “திருப்புவனம் காவல் நிலையத்தில் இளைஞர் அடித்துக் கொலை – மனசாட்சி இருந்தால் முதல்வர் விலக வேண்டும்!” என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மனித உரிமைகளை சிறிதும் மதிக்காமல் ஸ்டாலின் காவல்துறை இளைஞரை அடித்தே கொலை செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு வந்த மருத்துவர் ஒருவர், அவரது மகிழுந்தில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகைகளை காணவில்லை என்று அளித்த புகாரின் அடிப்படையில், அவரது மகிழுந்தை நிறுத்துவதற்கு உதவி செய்த கோயிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமார் என்பவரை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரனை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்து விட்டார். அவரது உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும்? என்பதற்கான விதிகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நிலையில், அவற்றை மதிக்காத காவல்துறையினர் அஜித்குமாரை கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்துள்ளனர். தமிழகம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய சாத்தான்குளம் காவல்நிலையப் படுகொலைகள் எவ்வாறு நடந்தனவோ, அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் அஜித்குமார் கொல்லப்பட்டுள்ளார். இதற்காக தமிழக காவல்துறையும், அதற்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரும் தலைகுனிய வேண்டும்.

    தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் படுதோல்வி அடைந்து விட்ட காவல்துறை அப்பாவிகளை விசாரணைக்கு அழைத்துச் சென்று படுகொலை செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 4 ஆண்டுகளில் 28 பேர் காவல்நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ம்ர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இதைவிட கொடுமையான மனித உரிமை மீறல்கள் இருக்க முடியாது.

    சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்ட போது, ’’பேய் ஆட்சி செய்தால் பிணந்திண்ணும் சாத்திரங்கள் என்பதை இந்த படுகொலைகள் நினைவுபடுத்துகின்றன. இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனசாட்சி இருந்தால், 5 ஆண்டுகளுக்கு முன்பு வலியுறுத்தியதைப் போல இப்போது பதவி விலக வேண்டும். – என்று குறிப்பிட்டுள்ளார்.