Home Blog Page 89

ராஜ்யசபா தேர்தல்: எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு ராஜதந்திரமா, தவறா?

edappadi admk met amit sha - 2026
  • ‘செய்திக்கதிர்’ ஜி.எஸ். பாலமுருகன்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் 10 மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கூட்டணிகள், வியூகங்கள், பிரச்சாரங்கள் – இவை அனைத்தும் வேகமாக முன்னேறி வருகின்றன.

எந்த புதிய கட்சிகளும் சேராத நிலையிலும் வலுவான வெற்றிக் கூட்டணியாக திகழும் திமுக கூட்டணி, தேர்தல் முன்னெடுப்புகளை படுவேகமாக நகர்த்தி கொண்டு சென்று கொண்டிருக்கிறது. ஆனால் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கருதும் எதிர் தரப்பான அதிமுக, பாஜக உடன் மட்டும் கூட்டணியை திடீரென உறுதி செய்து வைத்திருக்கிறது. மற்றபடி கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கின்றன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

கூட்டணி குழப்பம் – தெளிவாக யாரும் இல்லை!

அதிமுகவின் கூட்டணியில் தேமுதிக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறினாலும், தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் பிடிகொடுத்து பேசவில்லை. கூட்டணியில் இருக்கிறோம் என்பதை உறுதி செய்யவில்லை. ஜனவரி 9ஆம் தேதி கடலூர் மாநாட்டில்தான் தெளிவுபடுத்தப்படும் என அதிரடியாக கூறிவிட்டார்.

இதேபோல்தான் பாமக-வும். நாங்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். ஆனால் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இல்லை என்பதை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே தெரிவித்துவிட்டார்.

இதுபோன்ற அரசியல் குழப்பமான சூழ்நிலைகளில் கூட்டணியை திடமாக உறுதி செய்யும் லட்டு போன்ற ஒரு வாய்ப்பு அதிமுகவுக்கு கிடைத்தது. ஆனால் அதனை எடப்பாடி பழனிசாமி கோட்டை விட்டு விட்டாரோ என்று அரசியல் பார்வையாளர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் தன்னுடைய முடிவு ராஜதந்திரமானது என அதிமுக கருதுகிறது. குறிப்பாக, நாம் தான் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுக்கு செக் வைத்திருக்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். ஆனால் உண்மையில் அவருக்கு அவரே செக் வைத்துக் கொண்டதாகவே அரசியல் களத்தில் விவாதிக்கப்படுகிறது.

ராஜ்யசபா தேர்தல் – எடப்பாடி யோசனைகள் யாருக்கு?

தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.க்களாக இருக்கும் வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. அதற்கான தேர்தல் இந்த மாதம் நடைபெறுகிறது. இந்த ஆறு இடங்களில் நான்கு இடங்கள் திமுகவுக்கும் இரண்டு இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும்.

தேர்தல் அறிவிப்பு வெளிவந்த உடனேயே வேட்பாளர்களை அறிவித்துவிட்டது திமுக. கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலுக்கு ஒரு இடம் கொடுத்துவிட்டு மீதமுள்ள மூன்று இடங்களை திமுகவும் எடுத்துக் கொண்டது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு மீண்டும் சீட் வழங்கப்படவில்லை. இது அக்கட்சியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. தேர்தல் நெருங்கும் போது இது வெடிக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் எண்ணுகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் அதிமுகவில் அந்த இரண்டு இடங்களில் யார் போட்டியிடுவார்கள் என்பது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி இரண்டு இடங்களிலும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார். இங்குதான் அவரது நடவடிக்கை குறித்து விமர்சிக்கப்படுகிறது.

தங்களுக்கு ராஜ்யசபா சீட் வேண்டுமென தேமுதிக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் அடுத்த ஆண்டு தருவதாக கூறி கைகழுவி விட்டார் எடப்பாடி பழனிசாமி. அதே நேரத்தில், அதிமுக ஆதரவுடன் முன்பு ராஜ்யசபா சென்றிருந்த அன்புமணி ராமதாஸுக்கு இந்த முறை சீட் வழங்கப்படவில்லை. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி எதுவும் வெளிப்படையாக கூறவில்லை. இந்த இடத்தில்தான் எடப்பாடி பழனிசாமி ராஜதந்திரமாக சில காய்களை நகர்த்தியிருக்க வேண்டும் என அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பாமக-தேமுதிக அதிருப்தி – ஆளும் கட்சிக்கு அனுகூலமா?

பாமகவில் அன்புமணி ராமதாஸ், தேமுதிகவில் சுதீஷ் அல்லது விஜய பிரபாகரனுக்கு ராஜ்யசபா இடங்களை மனமுவந்து கொடுத்திருந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு யோகமாக அமைந்திருக்கும் என்கிறார்கள் அரசியல் தெரிந்தவர்கள். காரணம், கூட்டணி இன்னும் தெளிவுபடுத்தப்படாத நிலையில் ராஜ்யசபா சீட்களின் மூலம் இரு கட்சிகளையும் தங்களது கூட்டணியில் இருப்பதாக அறிவித்து, சட்டப்பேரவை தேர்தல் களத்தை மிகவும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வசதியாக இருந்திருக்கும். ஆனால் செய்ய தவறிவிட்டதன் மூலம் எடப்பாடி பழனிசாமி கோட்டையை பிடிக்கும் கனவை விட்டாரா? என்ற கேள்வியும் இதன் மூலம் எழுகிறது.

அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியின் இந்த வியூகத்தை மற்றொரு கோணத்திலும் பார்க்கலாம். தற்போது ராஜ்யசபா சீட்களை பெற்றுக் கொண்டு, தேர்தல் நேரத்தில் பாமகவும் தேமுதிகவும் கூட்டணி மாறிவிட்டால் என்ன ஆவது என்ற ஒரு கேள்வியும் எடப்பாடி பழனிசாமிக்கு தோன்றியிருக்கலாம். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், எடப்பாடியின் முன்ஜாக்கிரதையான முடிவை தவறு என்று கூறமுடியாது.

திமுக, தவெக வியூகம் – அணி மாறும் கட்சிகள்?

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி இடம் பெற்றிருந்த தேமுதிக 2.59% வாக்குகளை பெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக 4.31% வாக்குகளை பெற்றது. அதிமுக 20.46%, பாஜக 11.24% வாக்குளை பெற்றது. எனவே இக்கூட்டணி ராஜ்யசபா தேர்தல் மூலம் உறுதி செய்யப்பட்டிருந்தால் சட்டப்பேரவை தேர்தல் களம் எடப்பாடி பழனிசாமிக்கு கை கொடுக்கும் சூழல் ஏற்பட்டிருக்கும். இங்குதான் அவர் தவறு செய்துவிட்டாரோ என்று எண்ண தோன்றுகிறது.

இந்த சூழ்நிலையில்தான் பாமகவும் தேமுதிகவும் கூட்டணி வாய்ப்புகளை வேறு இடங்கள் நோக்கி திருப்பி இருக்கின்றன. ராஜ்யசபா சீட் கிடைக்காத அதிருப்தியில் இருக்கும் தேமுதிக, திமுக முகாமை நெருங்கி செல்கிறது. மதுரை திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த்க்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதற்கு பிரேமலதா நன்றி தெரிவித்தார். அப்போது அளித்த பேட்டியில், எடப்பாடி பழனிசாமி தேர்தல் அரசியல் செய்வதால் தேமுதிகவும் அதையே செய்வதாக கூறி, கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பதை தெரிவிக்கவில்லை.

மற்றொரு புறத்தில் எடப்பாடி பழனிசாமியின் முடிவால் அதிருப்தியில் உள்ள பாமகவை வளைத்துப் போட நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான வேலைகளை செய்யுமாறு நிர்வாகிகளை விஜய் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது. அதே சமயம், ராமதாஸ் – அன்புமணி மோதல் போக்கை வைத்து, ராமதாஸ் பாமகவை நம்முடன் வைத்துக் கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதுவெல்லாம் ஆளும் கட்சியான திமுகவுக்கே கைகொடுக்கும் என்றே பார்க்கப்படுகிறது. இதற்கு கடந்த மக்களவைத் தேர்தல் ஒரு முக்கிய உதாரணம். எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறியதால் ஆளும் கட்சி வெற்றி பெற்றது. இப்போதும், இன்னும் காலம் உள்ளது. ராஜ்யசபா தேர்தல் இரண்டு வாரத்தில் நடைபெறவுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது வியூகத்தை மாற்றி அமைத்தாரானால், சட்டப்பேரவைத் தேர்தலில் இது அவருக்கு சாதகமாக அமையும்.

‘அந்த’ வசதி போச்சு; மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில் மீண்டும் அதே சிக்கலில்!

railway news - 2026
#image_title

செங்கோட்டை – மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில் சேவையில் இந்த மாதமும் பராமரிப்புப் பணிகள் காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக மதுரை – செங்கோட்டை மற்றும் திண்டுக்கல் – மயிலாடுதுறை இரு ரயில்களும் இணைக்கப்பட்டு மயிலாடுதுறை – செங்கோட்டை – மயிலாடுதுறை இடையே விரைவு ரயில் என இயக்கப்படும் நாள் முதல் அவ்வப்போது இந்த ரயிலானது பெரும்பாலான நாட்களில் விருதுநகரில் இருந்து மானாமதுரை காரைக்குடி வழித்தடத்திலேயே செல்கிறது. இதனால் பயணிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

பொதுவாக செங்கோட்டை, ராஜபாளையம், தென்காசி, சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் நேரடியாக காலை நேரத்தில் மதுரை, திண்டுக்கல். திருச்சிக்கு செல்ல இந்த ரயில் நேரடி ரயிலாக இருக்கும்போது இந்த ரயில் அடிக்கடி தடம் மாற்றி இயக்கப்படுவது ரயில் பயணங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக வண்டி எண்: 16847/48 மயிலாடுதுறை – செங்கோட்டை – மயிலாடுதுறை இந்த மாதம் நாளை 04.06.2025 முதல் 30.06.2025 வரை சில தினங்களுக்கு மாற்று பாதையில் திருச்சி – காரைக்குடி – மானாமதுரை – விருதுநகர் வழியாக இயங்கும் என்கிறது ரயில்வே அறிவிப்பு.

வண்டி எண் 16847 மயிலாடுதுறையில் காலை 12.10 மணிக்கு புறப்பட்டு -மதுரை வழியாக செங்கோட்டை செல்லும் ரயிலானது வருகிற 4 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை புதன் & ஞாயிறு கிழமைகளில் மட்டும் மாற்று பாதை திருச்சி புதுக்கோட்டை காரைக்குடி மானாமதுரை அருப்புக்கோட்டை வழியாக இயங்கும். இந்த நாட்களில் திண்டுக்கல் மதுரை செல்லாது மற்ற நாட்களில் வழக்கம்போல் திண்டுக்கல் மதுரை வழியாக செல்லும்.

வண்டி எண் 16848 செங்கோட்டையில் காலை 6.55 மணிக்கு புறப்பட்டு – மயிலாடுதுறை செல்லும் விரைவு ரயில் இந்த மாதம் 4 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை வியாழன் & ஞாயிறு கிழமைகள் மதுரை திண்டுக்கல் திருச்சி வழியாகவும் மீதம் உள்ள மற்ற அனைத்து நாட்களும் மாற்று பாதையான மானாமதுரை சிவகங்கை காரைக்குடி புதுக்கோட்டை திருச்சி வழியாக இயங்கும்

திண்டுக்கல் மதுரைக்கு பயணம் மேற்கொள்வோர் முன்கூட்டியே இந்த தகவல்களை தெரிந்து கொண்டு திட்டமிட்டுக் கொள்ளவேண்டும்.

பொதுவாக மதுரை செங்கோட்டை திண்டுக்கல் மயிலாடுதுறை இரு ரயில்களும் இணைக்கப்பட்டு மயிலாடுதுறை செங்கோட்டை மயிலாடுதுறை இடையே விரைவு ரயில் முன்பாக இயக்கப்படும் நாள் முதல் அவ்வப்போது இந்த ரயிலானது பெரும்பாலான நாட்களில் விருதுநகரில் இருந்து மானாமதுரை காரைக்குடி வழித்தடத்திலேயே செல்கிறது. இதனால் பயணிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

செங்கோட்டை ராஜபாளையம் தென்காசி சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள், காலை நேரத்தில் அலுவலகம், வணிக ரீதியில் கடைகளுக்குச் செல்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக மதுரைக்கு இந்த ரயிலில் காலை நேரத்தில் அதிகளவில் பயணித்தனர். இது எக்ஸ்பிரஸாக மாறி, பின்னாளில் பெட்டிகள் குறைக்கப்பட்டு, மதுரை செல்லும் பயணிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர். தொங்கிக் கொண்டு, நிற்கக் கூட இடம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில், மதுரைக்கே இந்த ரயில் போகாது எனும் நிலை அண்மைக் காலமாக நீடித்து வருவதால், மதுரைக்கு ரயில் பயணத்தையே நம்பியிருக்கும் பலர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அரசு இரிடியம் விற்பதாக மர்ம கும்பல் மோசடி

crimes scene - 2026
#image_title

ரிசர்வ் வங்கி வாயிலாக, மத்திய அரசு இரிடியம் விற்கிறது. இதில் முதலீடு செய்தால், பல கோடி ரூபாய் சம்பாதிக்கலாம் எனக்கூறி, மர்ம கும்பல், 4.50 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது’ என, சி.பி.சி.ஐ.டி., தெரிவித்துள்ளது.

சி.பி.சி.ஐ.டி., போலீசார் வெளியிட்ட அறிக்கை:

கடந்த ஆண்டு மே மாதம், மத்திய அரசு, ரிசர்வ் வங்கி வாயிலாக இரிடியம் விற்பதாகக் கூறி, மர்ம நபர்கள் பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் என, ரிசர்வ் வங்கியின் உதவிப் பொது மேலாளர் கென்னடி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இப்புகார் மனு, சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. சேலம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கடந்த மார்ச்சில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த நித்யானந்தம், 44; சந்திரா, 36, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அதன் பின்னர், தர்மபுரி, சேலம் மாவட்டத்தை மூன்று பேர், தெலுங்கானாவின், கிஷாேர்குமார், 45 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பல் பல இடங்களில், 20 பேரிடம், 4.50 கோடி ரூபாய் மோசடி செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.

முதலீட்டாளர்களை நம்ப வைக்க, டில்லி மற்றும் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் கூட்டம் நடத்தி, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல், சிலரை நடிக்க சொல்லி நம்ப வைத்துள்ளனர். போலி ஆவணங்கள் வாயிலாக, வங்கி கணக்கு துவங்கி, இதில் தான் இரிடியம் தொடர்பாக, ரிசர்வ் வங்கி பண வரவு வைக்கிறது எனக் கூறி மோசடி செய்துள்ளனர்.

ஜெனகை மாரியம்மன் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

janagai mariamman temple utsav kodiyetram - 2026

மதுரை, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேரோட்டம் வரும் ஜூன். 17ஆம் தேதி நடைபெறுகிறது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. திருவிழா நடைபெறுவதை ஒட்டி, கோவில் உள் பிரகாரம் வளாகம் கோவிலின் வெளிப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் மின்னொளி அமைக்கப்பட்டு இரவை பகலாக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது . கொடியேற்றத்துக்கு முன்பாக சிறப்பு யாகம் நடைபெற்றது.

அர்ச்சகர் சண்முகம் பூஜைகள் செய்தார். அதனைத் தொடர்ந்து, கொடியேற்றத்திற்கான பூஜை பொருட்களுடன் சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

பின்னர் கோவிலில் உள் பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. கூடியிருந்த பொதுமக்கள் பக்தர்கள் பெண்கள் அருள் வந்து ஆடினர். கொடியேற்றத்தை தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காப்பு கட்ட தொடங்கினர் நேற்று இரவு 12 மணி வரை சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பால்குடம் அக்னிச்சட்டி பூக்குழி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களுக்காக காப்பு கட்டினர் .

திருவிழா நடைபெறும் காலங்களில் சோழவந்தானில் போக்குவரத்தை ஒருவழிப்பதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையம் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழவந்தான் அரசு போக்குவரத்து கழகம் பல வழித்தடங்களில் பஸ்சை இயக்குவதை காரணம் இல்லாமல் நிறுத்தி விடுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மதுரை அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் தனி கவனம் செலுத்தி, சோழவந்தான் அரசு போக்குவரத்து கழக பஸ்களை உரிய நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரியுள்ளனர்.

வருது வருது… விஸ்டாடோம் பெட்டிகள்! பயணிகள் மகிழ்ச்சி!

train - 2026
#image_title

பயணிகளுக்கு மகிழ்ச்சி பொங்க வியக்க வைக்கும் புதுமையான ரயில் பயண அனுபவத்தை தரும் செங்கோட்டை – புனலுார் -கொல்லம் மலை ரயில் பாதையில் விஸ்டாடோம்’ கண்ணாடி கூரை பெட்டிகள் கொண்ட ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பயணிகள் வலியுறுத்தி வரும் இந்த கோரிக்கையை தெற்கு ரயில்வே செங்கோட்டை – -புனலுார் மலை ரயில் பாதையில் ‘விஸ்டாடோம்’ கண்ணாடி கூரை பெட்டிகள் ரயில் இயக்க சில மாதங்களுக்கு முன் ரயில்வே வாரியத்திற்கு தென்னக ரயில்வே பரிந்துரை செய்தது .

இயற்கை எழில் ததும்பும் செங்கோட்டை — புனலுார் மலை ரயில் பாதையில் ‘விஸ்டாடோம்’ கண்ணாடி கூரை பெட்டிகளுடன் ரயில் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழகத்தை கேரள மாநிலத்துடன் இணைக்கும் மூன்று முக்கிய ரயில் வழித்தடங்களில் செங்கோட்டை – -புனலுார் வழித்தடம் பயணிகளுக்கு புதுமையான அனுபவமாக இருக்கும். 1904 முதல் பயன்பாட்டில் உள்ள 49.38 கி.மீ., மொத்த பயண துாரத்தில் மலையை குடைந்து 7 குகைகளும், 23 பெரிய பாலங்களும் அமைந்துள்ளன.

துரைப்பாதையில் செங்கோட்டையில் இருந்து புனலூர் வரையிலும் உயரமான மலைகள் மீதும் இரு மலைகள் இணைத்து கட்டப்பட்ட மிகப்பெரிய பாலங்கள் இதில் ஒன்று 16 கண் புகைப்படம் ஆகும் இந்த பாலங்கள் வழியே உச்சி மலை மீது ரயிலில் செல்லும் போது சுற்றுலா பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை தருகின்றது.

மேலும் பிரசித்தி பெற்ற ஆரியங்காவு கனவாய் தென்மலை குகை உட்பட மலைகளைக் குடைந்து குகைகள் அமைப்பும் இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது உள்ளாடு மட்டுமல்லாது வெளிநாடு சுற்றுலா பயணிகளையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

திருவனந்தபுரம் கோவளம் வர்கலா கடற்கரை பகுதிகளுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இந்த பாதையில் ரயில்களில் பயணிப்பது அதிகம் விரும்புகின்றனர்.

முன்பு கொல்லம் செங்கோட்டை இடையே பயணிகள் ரயில் இயங்கியது. கொல்லம் செங்கோட்டை திருநெல்வேலி இடையில் நேரடி ரயில் இயக்குவது தற்போது அகல பாதையாக அமைக்கப்பட்ட பின்பு இந்த ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டது குறிப்பிடத் தக்கது.

பிரதிஷ்டை தின விழா; சபரிமலை நடை நாளை திறப்பு!

sabarimala panguni uthiram - 2026

சபரிமலையில் பிரதிஷ்டை தின பூஜை ஜூன் 5ஆம் தேதி வைகாசி ஹஸ்தம் நட்சத்திரத்தில் நடைபெறும் விழாவுக்கு ஜூன் 4ம் தேதி மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு மறுநாள் பல்வேறு வகையான அபிஷேகம் பூஜை வழிபாடுகள் நடைபெறும்.

சபரிமலை ஐயப்பன் கோவில் மூல விக்ரகம் ஐயப்பன் சிலை தீ சேதம் ஏற்பட்டது.தற்போதைய சிலை பல ஆண்டுகள் முன்பு வைகாசி மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.இந்த நாளில் வருடம்தோறும் பிரதிஷ்டை தின பூஜைகள் சபரிமலை ஐயப்பனுக்கு நடத்தப் படுகிறது.

பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இவ்வருட பிரதிஷ்டை தினம் ஜூன் 5ம் தேதி ஆகும்.

இதை முன்னிட்டு 4 ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். அன்று ஐயனின் தவ கோலம் களைந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கிறது. வேறு பூஜை வழிபாடுகள் நடைபெறாமல் இரவு நடை அடைக்கப்படும்.

ஜூன் 5 ந் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பிரதிஷ்டை தின பூஜை நெய் அபிஷேகம் உட்பட பல்வேறு பூஜை வழிபாடுகள் தொடங்கி நடைபெறும் .இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.

அதற்கு பின்னர், மீண்டும் ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை ஜூன் 14 ந் தேதி திறக்கப்படும்.

யார் அந்த சார்? மீண்டும் அண்ணாமலை எழுப்பிய கேள்விகள்!

annamalai sattaiyadi - 2026

தான் முன்னர் சாட்டையால் அடித்துக் கொண்ட சம்பவத்துக்கும், தற்போது ‘யார் அந்த சார்?’ கேள்வியே அமுங்கிப் போயிருப்பதற்கும் விளக்கம் சொல்லி, அண்ணாமலை சில கேள்விகளை இன்று சமூகத் தளங்களில் முன்வைத்துள்ளார்.

முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் முறைகேட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய திமுக.,வைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவருக்கு இது தொடர்பில் குற்றவாளி என்று கூறி, 30 வருட சிறைத் தண்டனை அறிவித்தது மகளிர் நீதிமன்றம். மேலும், அது தொடர்பில் பேசிய அரசு வழக்குரைஞர், குற்றவாளி ஞானசேகரன் ஒருவர் மட்டும் தான் என்றும், இனி எவரும் யார் அந்த சார் என்பதைக் கேள்வியாக எழுப்பக் கூடாது என்றும், அவ்வாறு எழுப்பினால் அது நீதிமன்ற அவமதிப்பில் சேரும் என்று ஊடகங்களில் கூறினார். இதுவே பலரது சந்தேகத்தைக் கிளறியது .

இந்நிலையில் பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று சமூகத் தளங்களில் கேள்விகளை எழுப்பி பரபரப்பை ஏறபடுத்தியுள்ளார். அதில் அவர் எழுப்பியுள்ள சில கேள்விகள், இந்த வழக்கின் முக்கியத்துவத்தையும், முறைகேடுகளையும் மீண்டும் மக்கள் மத்தியில் கேள்விகளாக எழுப்பியுள்ளது.

இது தொடர்பில் சிடிஆர் எனப்படும் தொலைபேசி அழைப்பு விவரங்களைக் குறிப்பிட்டு, இந்த வழக்கு சம்பந்தமாக 24.12.2024 அன்று இரவு ஞானசேகரன் காவல்துறையால் விடுவிக்கப்பட்ட பிறகு யார் யாரிடம் எல்லாம் ஞானசேகரன் பேசி இருக்கிறார் என்ற விவரங்களை ஆதாரத்துடன் தெரிவித்து இருக்கிறார்.

24ம் தேதி ஆதாரத்தை அழித்துள்ளார்கள்! கோட்டூர் சண்முகத்தையும், அமைச்சர் மா.சு.வையும் ஏன் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கவில்லை? 24ம் தேதி இரவு 2 காவல்துறை அதிகாரிகள் FIR போடவேண்டாம் என மாணவியிடம் கெஞ்சியுள்ளனர் ஏன்? இது பற்றியெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் வாய் திறக்காதது ஏன்?

அண்ணா பல்கலையில் அதிகாரியாக வேலை பார்க்கும் நடராஜனும், தி.மு.க., வட்டச் செயலாளர் கோட்டூர்புரம் சண்முகமும், யாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த டிச.,23ம் தேதியுடன் தொடங்கும் 4 நாட்களில் மட்டும் 13 முறை பேசியுள்ளனர். டிச.,24ம் தேதி இரவு தான் முக்கியமான தினம். அன்று தான் ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன என்று தனது வீடியோவில் அண்ணாமலை கூறுகிறார்.

மேலும், இந்த விஷயமாக அண்ணாமலை எழுப்பியிருக்கும் கேள்விகள் வழக்கோடு மிகவும் நெருக்கமாக சம்பந்தபட்டு இருக்கிறது என்பதால், எளிதில் கடந்து போக முடியாதபடி பின்னிப் பிணைந்து இருக்கின்றன என்று கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

சம்பவம் நடந்ந 24.12.2024 அன்று இரவு ஞானசேகரனின் மொபைல் போன், ஏரோப்பிளேன் மோடில் இருந்து வெளியே வந்த பிறகு, ஞானசேகரன் பேசியிருக்கும் முதல் போன் ஒரு போலீஸ் அதிகாரியுடன் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று இரவு திமுக வட்டச் செயலாளர் கோட்டூர் ஷண்முகத்தோடு பல முறை பேசி இருக்கிறார். மறுநாள் ஷண்முகம் சுகாதாரத்துறை அமைச்சரோடு பேசி இருக்கிறார்.

இந்த போன் உரையாடல்கள் பலமுறை நடந்த பிறகு 25.12.2024 இரவு அன்று ஞானசேகரன் மீண்டும் கைது செய்யப்படுகிறார். 24.12.2024 அன்று விடுவிக்கப்பட்ட பிறகு மீண்டும் 25.12.2024 வரை கைது செய்யப்படும் வரை இடைப்பட்ட 24 மணி நேரத்தில் நடந்தது என்ன?

வழக்கின் முதுகெலும்பான சம்பவம் நடந்த 24.12.2024 அன்று இரவு நடந்த நிகழ்வுகள் எல்லாம் முறையாக விசாரிக்கப்பட்டதா? ஞானசேகரனோடு சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டார்களா?

இந்த நிகழ்வுகளை எல்லாம் தேதி, நேரம் வாரியாக ஆதாரத்துடன் விரிவாக சொல்லி கேள்விகள் கேட்கிறார் அண்ணாமலை.

மேலும், தான் இந்த வழக்கின் முக்கியத்துவத்தைச் சொல்லியே, அன்றைய நாளில் சாட்டையால் அடித்துக் கொண்டதாகவும், இப்போதும் அந்தக் கேள்விகள் பதிலெதுவும் தரப்படாமல் அப்படியே உள்ளதாகவும் குறிப்பிடும் அண்ணாமலை, மேலும் இரு நாட்கள் நேரம் கொடுப்பதாகவும், அதுவரை இதில் தொடர்புடைய காவல் அதிகாரிகளின் அடையாளங்களை வெளியிடப் போவதில்லை என்றும் குறிப்பிடுகிறார்.

பத்து வருடங்களுக்கு மேல் காவல் உயரதிகாரியாக பணி செய்த அனுபவம் இருப்பதால், ஒரு சாமான்யனின் பார்வையாகப் பார்க்காமல் ஒரு காவல் உயரதிகாரியின் பார்வையாகப் பார்த்து இந்தக் கேள்விகளை முன் வைக்கிறார்.

ஒரு நேர்மையான அரசாக இருந்தால் அண்ணாமலையின் நியாயமான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய தார்மீக கடைமை அரசுக்கு இருக்கிறது என்றும், இது அண்ணாமலையின் கேள்விகள் மட்டும் அல்ல. தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த தமிழ் மக்களின் மனதில் இருக்கும் கேள்விகள் என்றும் சமூகத் தளங்களில் பலரும் பதிவு செய்து வருகிறார்கள்.

அண்ணாமலையின் சமூகத் தளப் பதிவு:

https://twitter.com/annamalai_k/status/1929762481758728514

அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கில், திமுக நிர்வாகி ஞானசேகரனுக்கு, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. #SaveOurGirls_NotYourSir எனினும், இந்த வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள், இன்னமும் எஞ்சியிருக்கின்றன. யாரை காப்பாற்றத் துடிக்கிறது இந்த திமுக அரசு? சில விடைகளும், பல கேள்விகளும்!

https://twitter.com/i/status/1929762481758728514

புளிய மரத்தில் பேய்கள் தாண்டவம் ஆடுமா?

roadside puliyamaram - 2026

— கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்,
ஆசிரியர் கலைமகள்

காஞ்சிபுரம் பக்கத்தில் சாலையில் நடந்து கொண்டு வருகையில் புளிய மரம் ஒன்று கண்ணில் தட்டுப் பட்டது! புளிய மரம் பக்கம் போகாதே!! பேய் இருக்கும் என்றான் எனது நண்பன்.

உலகம் முழுவதும் பேய் பற்றிய ஆராய்ச்சிகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இயற்கையான மரணம் தவிர மற்ற மரணங்கள் மனிதனுக்கு சம்பவிக்கும் பொழுது (விபத்து மற்றும் தற்கொலை) அந்த மனிதனுடைய ஆவி நேரடியாக சொர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோச் செல்லாமல் பூமியிலேயே சுழன்று கொண்டிருக்கும். இதைத்தான் பேய் பிசாசு என்கிறார்கள். இயற்கையான மரண காலம் வரை இந்த நிகழ்வு நடைபெறும் என்பது பொதுவாக மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது!

விஞ்ஞானப் பூர்வமாக இதுவரை பேய் சம்பந்தமாக நடத்தப்பட்ட ஆய்வுகள் பேய் என்கின்ற ஒன்று இல்லை என்று தான் சொல்கின்றன. பாழடைந்த வீடுகளிலோ அல்லது சில வீதிகளிலோ அளவுக்கு அதிகமான காந்த ஈர்ப்பு இருக்கும்பொழுது புதிய ஒலி, ஓசைகளும், நம் மீது ஏதோ ஒன்று தொடுவது போன்ற உணர்வுகளும் ஏற்படுவதுண்டு! இதைக் கூட மக்கள் பேய் என்று எண்ணி இருக்கலாம் என்று மேலைநாட்டு அறிஞர்கள் சொல்கிறார்கள்.

புளிய மரத்தில் பேய்கள் குடி கொண்டிருக்கும் என்பதில் துளி கூட உண்மை இல்லை! புளிய மரத்தின் அடியில் அதிகம் செல்லக்கூடாது என்பதற்கு என்ன காரணம்? என்றால் புளிய மரம் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகமாக இருக்கும். அதன் அடியில் அதிக நேரம் நின்றால் உஷ்ணம் ஏற்படும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அறிவியலும் இதை ஒப்புக்கொள்கிறது!

உண்மையைச் சொல்லப் போனால் புளியமரம் புனிதமானதும் கூட!

தெய்வக் குழந்தை அது! அந்தக் குழந்தை பால் குடிக்காமல் எத்தனை நாள் இருக்கும்? பெற்றோர்களுக்கு கவலை வந்தது. ஆனால் குழந்தை மாறனுக்கோ எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. எப்போதும் கண்ணை மூடிக்கொண்டு பகவத் நாமாவை மனதில் இறுத்திக் கொண்டு அப்படியே வளர்ந்து வந்தது. திருக்குருகூர் கோயிலுக்குக் கொண்டுசெல்ல பெற்றோர்கள் முடிவு செய்தார்கள். அந்தக் குழந்தை அங்கு சென்றது, ஆனால் அங்கு இருக்கக்கூடிய ஒரு புளிய மரத்தடிக்குச் சென்று அங்கேயே பதினாறு ஆண்டுகள் தவம் செய்யத் தொடங்கிவிட்டது!

ஞானம் வளர்ந்தது. தத்துவங்கள், சாத்திரங்கள் என அனைத்தையும் அங்கேயே கற்றுக்கொண்ட மாறனிடமிருந்து வீசிய தெய்வீக ஒளி எல்லோரையும் கவர்ந்தது. ‘இந்தப் பிள்ளையிடம் ஏதோ சிறப்பு இருக்கிறது’ என்று ஊரில் உள்ளோர் வியப்போடுப் பேசிக்கொண்டார்கள்.

அந்த ஞான ஒளியை, அயோத்தியில் ஒருவர் கண்டார். அவர் தான் மதுரகவி ஆழ்வார்! இந்த ஒளியைப் பார்த்ததும் மதுரகவி ஆழ்வார் திகைத்துப்போனார். இது எங்கிருந்து வருகிறது? என்று யோசித்தார். அதைத் தேடிச் செல்லத் தீர்மானித்தார். அயோத்தியிலிருந்து திருக்குருகூருக்கு வந்தார்.

சரயு நதியிலிருந்து தாமிரபரணி நோக்கி அவருடைய புனித பாதங்கள் பயணித்தன! தவத்தில் இருந்த மாறனை, மதுரகவி ஆழ்வார்தான் விழிக்கச் செய்தார். அவரிடம் ஒரு கேள்வி கேட்டார் அவர் “செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால்”

“எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?

தியானத்திலிருந்த அந்த குழந்தை சொன்ன பதில் “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்”.

மதுரகவி ஆழ்வார் ‘செத்தது’ என்று சொல்வது உடம்பைதான். அது அறிவற்ற பொருள் அல்லவா?அந்த உடம்பில் சிறியது, அதாவது உயிர் பிறக்கிறது. அந்த உடலை இயக்குகிறது.உடம்பில் உயிர் சென்று சேர்கிறது என்றால், அது பிறக்கிறது என்று அர்த்தம். அப்போது அது எதை அனுபவித்துக்கொண்டு எங்கே இருக்கும் என்பதுதான் மதுரகவியாரின் கேள்வி.

ஒருவன் ஜனிக்கிறான் என்றால், அதன் காரணம் அவன் செய்த பாவ புண்ணியத்தைப் பொறுத்து அமைகிறது! பூமியில் பிறந்த வினைகள் தீரும் வரை அந்த ஆத்மா அந்த உடலிலேயே கிடக்கவேண்டியதுதான்.

இந்தப் பதிலைக் கேட்டதும் மதுரகவி ஆழ்வார் மகிழ்ந்தார். இப்படி பதில் சொன்ன அந்தக் குழந்தைதான் நம்மாழ்வார்.

நம்மாழ்வாருடைய கூர்மையான சூட்சமமான அறிவையும் பக்தியையும் கண்டு வியந்து, அவரையே தனது குருவாக ஏற்றுக்கொண்டார். புளிய மரத்தடியில் தான் நம்மாழ்வாருக்கு சகலமும் கிட்டியது!!

பாண்டி நாட்டில் தன் கணவர் பரமதத்தன் இருக்கும் இடம் தேடி போனார் காரைக்கால் அம்மையார். ஆனால் கணவரோ அவரைத் தெய்வப் பெண்மணி என எண்ணி தனது இரண்டாவது மனைவியிடம் சொல்லி அவர் பாதம் தொட்டு குழந்தைகளுடன் வணங்கினார்!!

தன் கணவர் நிலை உணர்ந்து தன் உடல் நீக்கி பூத வடிவம் கொண்டு பேய் உருவில் தலைகீழாக நடந்து கைலாயம் புறப்பட்டார் காரைக்கால் அம்மையார். அம்மையின் உருவைப் பார்த்து மனம் இறங்கி சிவபெருமான் “அம்மையே” என அழைத்து அவருக்குத் தன் திருத்தாண்டவம் காட்டி திருவாலங்காட்டிற்கு வரப்பணித்து அங்கு அருளிய இறைவன் தன் திருவடிக் கீழ் என்றும் இருக்க அருளினார்.

பேய் வடிவம் பூத வடிவம் கொண்டும் இறைவனை அடையலாம். பேய் என்னும் பூதம் கண்டு பயப்பட வேண்டாம் என்பதுதான் இக்கதை நமக்குச் சொல்லும் பாடம்! புளிய மரத்தடியில் இருந்தாலும் ஞானம் கிடைக்கும் பேய் பயம் கொள்ள வேண்டாம் என்பதை நமது மகான்களின் வாழ்க்கையும் அறிவுறுத்துகிறது!!

புளியை உணவில் அளவோடு சேர்த்துக் கொள்வது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. உணவுச் செரிமானத்தில் பெரும் பங்காற்றுவது வயிற்றில் உள்ள ஹைட்றோ க்ளோரிக் அமிலம். அமிலத் தன்மை செரித்தலுக்குச் செரிவூட்டுகிறது என்பதை உணர்ந்து அமிலத்தன்மை மிக்க புளியினை உணவில் பயன்படுத்தத் துவங்கியது மனித சமூகம்.

புளியில் உள்ள சைலோ க்ளூக்கன் ஓட்டும் தன்மையற்ற செல்லுலோஸ் மீது படரும் திறன் கொண்டது. எனவே சோற்றுப் பருக்கையில் எளிதில் படர்ந்து ஒட்டிக் கொள்வதால் இதனை உடைத்து பாக்டீரியாக்களால் பருக்கைகளை அணுக இயலாது. இதனால்தான் புளியம் சாதம் நீண்ட நாள் கெடுவதில்லை. புளியோதரை இறைவனுக்கு நேவேத்தியம் ஆகவும் படைக்கப்படுகிறது!

அதே சமயத்தில் புளி கொஞ்சம் அதிகமாக உணவில் சேர்க்கப்பட்டு அதனை நாம் ருசி பார்த்தால் நமது முகம் அஷ்ட கோணலுக்குப் போகும்!! அப்போது நம்மை நாம் கண்ணாடியில் பார்த்தால் “பேய் போல் தான் தெரிவோம்” என்கிறார் என்னுடைய பால்ய நண்பர் டபுள். யு. கே. சுப்பிரமணியம்!

புளியோதரை பிரசாதம் செய்முறை:கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, நிலக் கடலைப்பருப்பு ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும் பின்னர்

கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்க வேண்டும். ஏற்கனவே ஊற வைத்த புளித் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த பருப்பு, தாளிப்பு இவைகளுடன் புளித்தண்ணீர், உப்பு, பெருங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் பொடி சேர்த்து அந்தக் கலவையை

வடித்த சாதத்தின் மீது கொட்டி நல்லெண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும். சாதம் ரொம்ப குழையாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். பகவானுக்கு படைக்கப்படும் இந்த பிரசாதத்தின் பெயரேபுளியோதரை தான்! புளிய மரத்தில் பேய்கள் வாசம் செய்தால் அந்தப் புளியினை நாம் பிரசாதத்தில் சேர்த்துக் கொள்வோமா? எனவே பேய் என்பது நமது மனதில் எழுகிற ஒரு அச்ச உணர்வு தான்!

மலையேற்றம் உயிருக்கு ஆபத்தா? முன்னேற்பாடுகள் என்ன?

sathuragiri - 2026

மலையேற்றம் ஆபத்தானதா?

டாக்டர் B.R.J. கண்ணன், மதுரை

மலையேற்றம் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வு கொடுக்கும் விஷயம்தானே?

கண்டிப்பாக. அதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். நம் முன்னோர்கள் எங்காவது குன்றோ, சிறிய மலையோ இருந்தால் அங்கெல்லாம் கோவிலைக் கட்டி வைத்துள்ளார்கள். கடவுளை வழிபடும் நோக்கத்திலாவது மக்கள் மலை ஏற வேண்டும் என்பதற்காகத்தான் அவ்வாறு செய்தார்கள்.

மலை உச்சிக்குச் செல்லும் போது ஆக்சிஜன் அளவு குறையும் என்கிறார்களே?

இது உண்மையல்ல. நாம் ட்ரெக்கிங் (trekking) செல்லத்தக்க பெரும்பாலான மலைகளின் உச்சி கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டருக்கும் குறைவான உயரத்தில்தான் உள்ளன. உதாரணத்திற்கு, வெள்ளியங்கிரி மலையின் உயரம் 1800 மீட்டர். ஆக்சிஜன் தட்டுப்பாடு ஒரு பிரச்சனை அல்ல.

சமீபத்தில் மலையேற்றம் செய்து பலர் உயிரிழந்திருக்கிறார்களே?

மலையேற்றத்தால் உயிர் இழப்பது என்பது அசாதாரண நிகழ்வு. ஆயிரக்கணக்கானோர் பல வருடங்களாகச் இது போன்ற மலைகளுக்குச் சென்று வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் மனமும் உடலும் மேம்பட்டிருக்கிறது. அவைகள் எல்லாம் செய்திகள் ஆகாது. இதுபோன்ற விதிவிலக்காக நடப்பவைகள் தான் செய்திகளாக வெளி வருகின்றன. அவ்வப்பொழுது நடக்கும் விபத்துகளைக் காரணம் காட்டி பேருந்து பயணமோ இரயில் பயணமோ ஆபத்தானது, தவிர்க்கப்பட வேண்டியவை என்று கூறுவது அபத்தம் அல்லவா?

மலையேற்றம் அல்லது உடற்பயிற்சி விஷயங்களில் மக்கள் செய்யவேண்டியது என்ன?

முதலாவது, நம்மைத் தயார்படுத்திக் கொள்ளுதல். சிறிய மலைகளுக்கு, உதாரணமாக அழகர்மலையில் இருக்கும் பழமுதிர்சோலைக்குச் செல்ல தனியாகப் பயிற்சி எதுவும் தேவையில்லை. அதில் ஏற்றமும் குறைவு, தூரமும் குறைவு. ஆனால் சதுரகிரி, வெள்ளியங்கிரி போன்ற மலைகளுக்குச் செல்லும் முன் நம்மைத் தயார்படுத்திக் கொள்வது அவசியம். குறைந்தது ஒரு மாதமாவது நடைப்பயிற்சி, சிறிய ஓட்ட பயிற்சி போன்றவற்றைச் செய்து இதயத்தையும் கால் தசைநார்களையும் பழக்கப்படுத்த வேண்டும். ஐயப்பனுக்குப் பெரியப்பாதையில் செல்பவர்கள், அதிலும் முதல் முறையாக (கன்னிச் சாமியாக) செல்பவர்கள், ஒரு மண்டலம் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார்கள் அல்லவா?

இரண்டாவது, நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்று அறிந்து செயல்படுதல். மலை ஏறும் பொழுது நிதானமும் சீரும் ( ‘slow and steady’ ) என்பதே மந்திரமாக இருக்க வேண்டும். சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட தூரத்தை பலர் 20 நிமிடங்களில் கடப்பார்களானால் ஒரு சிலருக்கு 30 நிமிடங்கள் தேவை. திடீர் மரணம் என்று பேசப்பட்டாலும், அதற்குப் பல மணி நேரங்கள் முன்பாகவே நம் உடல் தன் இயலாமையைப் பல சமிக்ஞைகள் மூலம் தெரிவிக்கும். அதை உணர்ந்து போதிய ஓய்வு எடுத்து, அதன் பின்னரே பயணத்தைத் தொடர வேண்டியது அவசியம். அந்த உணர்வுகளைப் புறந்தள்ளிவிட்டு நானும் செய்து காண்பிக்கிறேன் பார் என்று உடலை வருத்துபவர்கள்தான் ஆபத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.

மூன்றாவது உணவும் நீரும். நம் உடம்பிற்கு சக்தி தேவைப்படும் என்பதால் தின்பண்டங்களை அவ்வப்பொழுது எடுத்துக் கொள்ளலாம். அதைவிட முக்கியம் நம் உடம்பில் நீர்நிலை குறையாமல் பார்த்துக் கொள்வது. உப்பு கலந்த நீரையோ, மோரையோ, வேறு பழ ரசங்களையோ அவ்வப்பொழுது குடித்துக்கொண்டே செல்வது மிகவும் அவசியம்.

என்னென்ன நோய் உள்ளவர்கள் மலையேற்றத்தைத் தவிர்க்க வேண்டும்?

இதயம், நுரையீரல், நரம்பு மண்டலம், கால்களின் எலும்புகள் தசைகள் என்று எல்லாமும் நலமாக இருந்தால்தான் வெற்றிகரமாக மலையேறித் திரும்ப முடியும். இதில் ஏதேனும் பிரச்சனை இருக்கும் பட்சத்தில் அதற்கான மருத்துவரிடம் முறையாகக் கலந்தாலோசித்து மலையேற்றம் பாதுகாப்பானதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அப்படியானால் எல்லோரும் மருத்துவரிடம் சென்று சான்றிதழ் பெற வேண்டுமோ?

தேவையில்லை. ஒன்றிரண்டு மாதங்கள் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது அல்லவா? அந்தச் சமயத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றால், இளைஞர்கள் (40 வயதுக்குட்பட்டவர்கள்) எந்த ஒரு பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அந்தச் சமயத்தில் ஏதேனும் பிரச்சனை தோன்றும் பட்சத்தில் மருத்துவரைக் கண்டிப்பாக அணுக வேண்டும். நாற்பது வயதிற்கு மேல் முதல் முறையாக உடற்பயிற்சி செய்யத் தொடங்குபவர்கள் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்ற அடிப்படைப் பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும். இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு நாங்கள் இதய ஒலிப்படம் (ECHO), டி எம் டி (TMT) போன்ற பரிசோதனைகளைச் செய்து அறிவுரை வழங்குவோம்.

மலையேற்றத்தில் உங்கள் அனுபவம் என்ன?

மதுரையிலும் அதனைச் சுற்றியுள்ள ஏறக்குறைய எல்லா மலைகளிலும் ஏறி இருக்கிறேன். திருப்பரங்குன்ற மலையில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு ஏறும் பாதை சீனப் பெருஞ்சுவரை விட அருமையாகக் கட்டப்பட்டுள்ளது. கீழக்குயில்குடியில் இருக்கும் சமணர் மலையும் நான் அடிக்கடி சென்று வரும் ஓர் இடம். யானைமலை ஏற்றம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. வால் வழியாக ஏறினால் சிறிய ஏற்றம், பின்னர் மூன்றரை கிலோமீட்டர் ஏற்றமான நடையாக யானையின் தலை உச்சிவரை சென்று திரும்பலாம். தும்பிக்கை வழியாக ஏறினால், யானையின் கண் பகுதிவரை எளிதாகச் செல்லலாம். அதற்குமேல் தலைப் பகுதிக்குச் செல்வது சற்றுக் கடினம், ஆபத்தானது கூட.

மதுரையிலிருந்து 30 கி.மீ தொலைவில் செல்லம்பட்டியில் இருக்கும் திடியன் மலை 215 மீட்டர் உயரம் கொண்டது. வெள்ளியங்கிரி செல்ல நினைப்பவர்கள் இந்த மலையில் நான்கு முறையாவது ஏறி பயிற்சியும் அனுபவமும் பெறலாம். அதேபோல், 610 மீட்டர் உயரம் கொண்ட பிரான்மலையும் நாம் சென்றுவரலாம். இது மதுரையிலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ளது. சதுரகிரிக்குச் சென்று சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசித்துள்ளேன்.

நானும் இன்னும் சில நண்பர்களும் நண்பர் மருத்துவர் கல்யாணசுந்தரம் தலைமையில் கொடைக்கானல், குரங்கணி, கொழுக்குமலை, என்று பல இடங்களுக்கு மலையேறியிருக்கிறோம். தென்னிந்தியாவிலேயே அதிக உயரம்கொண்ட ஆனைமுடியும் (2700 மீட்டர்) இதில் அடங்கும். இரண்டு நாட்கள் நடந்து, இரவில் மின்சார வசதியும் இல்லாத ஒரு மலையில் உறங்கி நாங்கள் சென்றுவந்த மீசப்புலிமலை (2640 மீட்டர்) பயணத்தை என்றென்றும் மறக்க முடியாது.

ஆக, மலை ஏற்றம் மனதிற்கும் உடலுக்கும் ஓர் இதமான அனுபவம். ஏன் நாம் எல்லோரும் இதை அனுபவிக்கக்கூடாது?

IPL 2025: பஞ்சாப் ஷ்ரேயாஸ் ஐயரின் தனிப்பட்ட வெற்றி!

ipl 2025 games - 2026

ஐபிஎல் 2025 – தகுதி ஆட்டம்-2 – 01.06.2025 – அகமதாபாத் – மும்பை vs பஞ்சாப்

ஐயரின் தனிப்பட்ட வெற்றி

— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

மும்பை இந்தியன்ஸ் அணியை (203/6, சூர்யகுமார் யாதவ் 44, திலக் வர்மா 44, ஜானி பெயிர்ஸ்டோ 38, நமன் திர் 37, ஹார்திக் பாண்ட்யா 15, ரோஹித் ஷர்மா 8, அஸ்மத்துல்லா ஒமர்சாய் 2/43, கைல் ஜேமிசன், மார்கஸ் ஸ்டோயினிஸ், விஜயகுமார் வைஷாக், சாஹல் தலா ஒரு விக்கட்) பஞ்சாப் கிங்க்ஸ் அணி (207/5, ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 87, நெஹல் வதேரா 48, ஜோஷ் இங்கிலீஷ் 38, பிரியான்ஷ் ஆர்யா 20, அஷ்வினி குமார் 2/55, போல்ட், ஹார்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கட்) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற பஞ்சாப் கிங்க்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மும்பை அணி முதலில் மட்டையாட வந்தது. ஆட்டம் தொடங்குவதற்கு சற்று நேரம் முன்னதாக அகமதாபாத்தில் மழை பெய்தது. அதனால் ஆட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.

மழை காரணமாக ஆட்டக்களத்தின் தன்மை மாறியிருக்குமோ என்ற அச்சத்தோடு பஞ்சாப் அணி களமிறங்க, மும்பை அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்து பஞ்சாப் அணிக்கு நிம்மதியளித்தார்.

மற்றொரு தொடக்க வீரர் ஜானி பெயர்ஸ்டோ (24 பந்துகளில் 38 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் திலக் வர்மா (29 பந்துகளில் 44 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.

பெயர்ஸ்டோ ஏழாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பின் வந்த சூர்யகுமார் யாதவ் (26 பந்துகளில் 44 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்), ஹார்திக் பாண்ட்யா (13 பந்துகளில் 15 ரன், 1 ஃபோர்), நமன் திர் (18 பந்துகளில் 37 ரன், 7 ஃபோர்) ஆகியோர் மிகச் சிறப்பாக ஆடினர். இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் ஆறு விக்கட் இழப்பிற்கு 203 ரன் எடுத்தது.

          204 ரன் என்ற இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் (6 ரன்) மூன்றாவது ஓவர் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலீஷ் (21 பந்துகளில் 38 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் மற்றொரு தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா (10 பந்துகளில் 20 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர்.

இவர்களுக்குப் பின்னர் வந்த ஷ்ரேயாஸ் ஐயர் (41 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 87 ரன், 5 ஃபோர், 8 சிக்சர்) இன்றைய ஆட்டத்தின் கதாநாயகன். பும்ரா வீசிய மிகச் சிறப்பான யார்க்கர்களைச் சமாளித்து, அவற்றை பவுண்டரிக்கு ஷ்ரேயாஸ் அனுப்பினார். அவருடன் இணைந்து நெஹல் வதேரா (29 பந்துகளில் 48 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்), சிறப்பாக ஆடினார். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 207 ரன் எடுத்து, வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணியின் ஷ்ரேயாஸ் ஐயர்  ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி, பெங்களூரு அணியுடன் நாளை மறுநாள் அகமதாபாத்தில் விளையாடும்.