Home Blog Page 97

தவறைத் தவிர வேறெதுவும் செய்யாத அமைச்சரவையின் முதல்வர்!

annamalai in trichy meeting - 2026

— கு. அண்ணாமலை —

சட்டம் ஒழுங்கு சீர்குலைவும், போதைப் பொருள் புழக்கமும், கள்ளச்சாராயமும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறைகளும் பல மடங்கு அதிகரித்துள்ள இந்த மக்கள் விரோத திமுக ஆட்சியை எப்போது வீட்டுக்கு அனுப்பலாம் என்று, தமிழக மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கையில், version 2.0 என்று பொதுமக்களைப் பயமுறுத்தியிருக்கிறார் முதலமைச்சர் திரு முக ஸ்டாலின்.

பாஜக ஆட்சி செய்யும் அசாம் மாநிலத்தில், கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 37 லட்சம் தாய்மார்களுக்கு மாதம் ரூ.830 வழங்கப்படுகிறது. பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில், கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், 1 கோடியே 29 லட்சம் தாய்மார்களுக்கு மாதம் 1250 ரூபாய் வழங்கப்படுகிறது.

ஆட்சிக்கு வந்து 29 மாதங்களுக்குப் பிறகு, தமிழக பாஜக பலமுறை வலியுறுத்திய பிறகே, கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்துதான் தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. அதுவும், தகுதியுடைய என்று கூறி, பல லட்சம் தாய்மார்களுக்கு இன்னும் உதவித்தொகை வழங்கப்படவில்லை.

ஆனால், தமிழக முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்களோ, திமுக அரசுதான் முதன்முதலில் வழங்கியதாகக் கதைகளை அவிழ்த்து விடுகிறார். என்ன இருந்தாலும், ஒரு கதாசிரியரின் மகனல்லவா.

தமிழகத்தில், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பில்லாத அவல நிலை நிலவுகிறது. கனிமவளக் கொள்ளையைத் தடுத்த அரசு அதிகாரிகளை, அவர்கள் அலுவலகத்தில் புகுந்தே தாக்கி, கொலையும் செய்த செய்திகள் இதே திமுக ஆட்சியில்தான் நிகழ்ந்தன.

நாள்தோறும் நடக்கும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் குற்றங்களை எல்லாம், அங்கொன்றும், இங்கொன்றுமான தனிநபர் பழிக்குப் பழி வாங்கும் சம்பவங்கள் என்று எளிதாகக் கடந்து செல்ல, முதலமைச்சருக்குக் கூச்சமாக இல்லையா?

நாகரிகமாக நடந்து கொள்கிறார்களாம். நாகரிகத்தின் எல்லையைக் கடந்தால் நடவடிக்கை எடுப்பார்களாம். இப்படி எல்லாம் பேச உங்களுக்கே சிரிப்பு வரவில்லை முதலமைச்சரே?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை ஜாதியின் பெயரைச் சொல்லி பொது மேடையில் அவமானப்படுத்தியபோதும், இலவசப் பேருந்தில் பயணம் செய்யும் தாய்மார்களை ஓசி என்று அவமானப்படுத்தியபோதும், கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டு இருந்து விட்டு, தற்போது விரைவில் தேர்தல் வரவிருப்பதால், நடவடிக்கை என்ற பெயரில் நீங்கள் நாடகமாடுவது தெரியாதா?

ஒட்டு மொத்த அமைச்சரவையிலும், ஊழல் குற்றச்சாட்டு இல்லாத அமைச்சர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இப்படி இருக்கையில், உச்சநீதிமன்றத்தின் கடுமையான கண்டிப்புக்குப் பிறகு, வேறு வழியின்றி சாராய அமைச்சரைப் பதவி நீக்கம் செய்திருக்கிறீர்கள்.

பதிலுக்கு, ஆவின் பால் கொழுப்பில் கூட ஊழல் செய்யலாம் என்று கண்டுபிடித்தவருக்கு, மீண்டும் பதவி கொடுத்து அழகு பார்க்கிறீர்கள். இதுதான் உங்கள் முன்னோடிகள், உங்களுக்குக் கற்றுத் தந்த பண்பா?

உங்கள் தந்தையார் கலைஞர் கருணாநிதி, உங்களுக்காகவே ஒன்றை எழுதி வைத்துச் சென்றிருக்கிறார்.

“ஓர் அமைச்சரவையில், தவறு செய்த அமைச்சர்களே இத்தனை பேர் என்றால், அந்தக் கட்சியின் செயல்பாடு எத்தகையது? அந்தக் கட்சியை ஆட்சிக்கு வரவிடலாமா?”

தவற்றைத் தவிர வேறொன்றும் செய்யாத ஒட்டு மொத்த அமைச்சரவையின் முதல்வராக இருக்கும் உங்களுக்கு, வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக மக்கள் வழங்கப் போவது, படுதோல்வி மட்டுமே.

செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா: அலகு குத்தி தீச்சட்டி எடுத்து வழிபாடு!

sengottai mupidathi amman temple function - 2026

செங்கோட்டை ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா: பக்தர்கள் அலகு குத்தி தீச்சட்டி எடுத்து வழிபாடு!

செங்கோட்டை ஆரியநல்லூர் தெருவில் உள்ள ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் ஆரியநல்லூா் தெருவில் உள்ள யாதவா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.

முக்கிய விழாவான , குற்றாலத்திலிருந்து புனிதநீா் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் அதனை தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிசேகமும், மாலையில் கோயில் வளாகத்தில் பொங்கலிடுதல் உள்ளிட்டவை நடைபெற்றன.

தொடா்ந்து, விநாயகா் கோயிலிலிருந்து சுப்பிரமணிய தெரு பகுதியைச் சோ்ந்த பக்தா் ராம்தாஸ் என்பவா் நீளமான சூலத்தை வாயில் அலகு குத்தி முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்தாா்.

அப்போது ஏராளமான பெண்கள் தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனா். நேற்று நள்ளிரவில் அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதியுலாவும் இன்று மதியம் மாபெரும் அன்னதானமும் நடைபெற்றது.

விழாவில், செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை யாதவா் சமுதாயத்தினா், இளைஞரணியினா் செயதிருந்தனா்.

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

usilai kumbabishekam - 2026

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது திருவேங்கட பெருமாள் கோவில்., சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் இந்து அறநிலைத்துறை சார்பில் புரனமைப்பு பணிகள் மேற்
கொள்ளப்பட்டு சுமார் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

நேற்று கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் துவங்கி, மூன்று கால பூஜைகள் செய்யப்பட்டு உருவேற்றப்பட்ட கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி பட்டாச்சியர்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

தொடர்ந்து, கருவறையில் உள்ள திருவேங்கட பெருமாள் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்த பின் தீபாராதனை நடைபெற்றது.

உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் மற்றும் உசிலம்பட்டி திமுக நகர செயலாளர் தங்கப்பாண்டியன், வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

varalakshmi vratham - 2026
#image_title

அனைவருக்கும் இனிய அட்சய திருதியை காலை வணக்கங்கள் வாழ்த்துக்கள். அட்சயம் பலமாப்னோதி ஸர்வஸ்ய…அட்சய திருதியை!*

இளம் வயதில் துறவு பூண்ட ஆதிசங்கரர் தமது துறவு நெறிக்கேற்ப நாள்தோறும் இறைவழிபாடு முடிந்து உஞ்சவிருத்தி எடுத்து மற்றவர் இட்டதை உண்டு தம் இறைப்பணியைத் தொடருவார்.

அப்படி ஒரு நாள் ஸ்ரீசங்கரர் சோமதேவர் என்பவருடைய இல்லத்திற்குச் சென்று “பவதி பிஷாந்தேஹி” என மும்முறை உச்சரித்தார். சோமதேவர் அப்போது இல்லத்தில் இல்லை. அவருடைய துணைவியார் தருமசீலை இருந்தார், அவருக்கு வியப்பு மூண்டது.

பாலசங்கரரைப் பார்த்தவுடனே, சிவபெருமானே பிச்சைக்கு வந்துவிட்டாரோ என்று அதிசயித்தார்.

ஆம் ஆதிசங்கரரின் முகத்தில் அப்படியொரு லஷ்மி கடாக்ஷம். ஆனால் அவரிடத்தில் பிச்சை இடுவதற்கான பொருள்கள் ஏதும் இல்லை.

வேதத்தில் தேர்ச்சி பெற்றிருந்த சோம தேவர் வறுமையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவரும் சங்கரரைப் போலவே பிச்சை கேட்க சென்றிருந்தார்.

வீட்டில் ஒன்றும் இல்லை. எனவே, மிகுந்த வருத்தத்துடன் அம்மையார் சங்கரரைப் பார்த்து, “நான் கொடிய பாவம் செய்தவளப்பா. நீங்கள் பிச்சைக்கு வந்திருக்கும் போது, கொடுப்பதற்கு ஒன்றுமில்லையே என ஏங்குகிறேன். என்னை மன்னிக்க வேண்டும்” என இறைஞ்சினார்.

ஆனால் சங்கரரோ, “அன்னையே! அடியேனுக்குக் கொடுக்க ஏதும் இல்லை எனக் கலங்க வேண்டாம். அன்னமிட வழியில்லை என்றால் பரவாயில்லை. அன்னத்திற்குத் துணையாக இருக்கும் உண்ணக் கூடிய எதுவானாலும், சிறிதளவேனும் அன்போடு தாருங்கள்” என வேண்டினார்.

உடனே, வீட்டிற்குள் சென்று பார்த்த அம்மையாருக்கு ஒன்றும் கிடைக்காமல் ஒரு பழைய பாத்திரத்தில் நெடு நாட்களுக்கு முன்பு செய்த நெல்லிக்காய் ஒன்று மீதமிருந்தது.

அந்த நெல்லிக்காயை மிகுந்த மனத் தயக்கத்துடன் மகான் சங்கரரின் பிச்சைப் பாத்திரத்தில் அம்மையார் இட்டார்.

இதனால் மனம் மகிழ்ந்த ஆதிசங்கரர், “தாயே! அன்புடன் தாங்கள் எனக்களித்த இந்த நெல்லிக்காயைவிடச் சிறந்த பொருள் இவ்வுலகில் எதுவும் கிடையாது.

இது என் தாயாருக்கு மிகவும் பிடித்த உணவாகும். அதிதிக்கு அளித்த இந்த உணவால் உங்களைப் பிடித்திருந்த வறுமை இன்றோடு அழிந்துவிட்டது. இனிமேல் உங்கள் கணவர் பிச்சைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை” எனக்கூறி விட்டு, செல்வத்துக்கு அதிதேவதையான ஸ்ரீமஹாலஷ்மி தேவியை மனதால் நினைத்து தியானம் செய்து அங்கம் ஹரே புளக பூஷணே என்று தொடங்கும் இந்த “கனகதாரா” ஸ்தோத்திரத்தைப் பாடி ஸ்ரீலட்சுமி தேவியை வழிபட, அவர் முன் தோன்றிய மகாலட்சுமி, வறுமையில் வாடிய குசேலரும் சுசிலையும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவருளால் குபேர சம்பத்தைப் பெற்றனர்.

வறுமையில் வாடியவர்கள் பெற்ற செல்வத்தால் நியமங்களையும், ஆசார அநுஷ்டானங்களையும் மறந்துவிட்டனர். எனவே, அப்பாவ வினையின் பயனாக, இந்த யுகத்தில் அவர்கள் இங்கு வறுமைப் பிடியில் சிக்கித்தவித்து வாழ்கின்றனர் என்ற உண்மையை ஸ்ரீ சங்கரரிடம் ஸ்ரீமஹாலஷ்மி தேவி கூறினார்.

இருப்பினும் இப்படிபட்ட வறுமையிலும் திடமனதுடன் ஆதி சங்கரருக்காக நெல்லிக்காயைப் பிச்சையாக இட்ட காரணத்தினால், ஸ்ரீலஷ்மி தேவி மனமுருகி அந்த இல்லத்தின் மீது தங்கமயமான நெல்லிக்காய்களை பொழிந்த தினம் தான் “அட்சய திருதியை”. ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறை மூன்றாம் நாளை (திரிதியை) கொண்டாடுகிறோம்.

அட்சயம் என்ற சொல்லுக்கு – அள்ள அள்ளக் குறையாமல் இருக்கும் – என்று பொருள். அட்சய திருதியை நாளில் எந்த நற்செயல் செய்தாலும் அது குறைவில்லாமல் பெருகும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

கோயில்களுக்குச் செல்வது, ஜபதபங்கள் செய்வது போன்ற புண்ணியச் செயல்களுக்கெல்லாம் அன்று வழக்கத்தை விடப் பல மடங்கு பலன் கிட்டும்.

சூதாட்டத்தில் நாட்டை இழந்த பஞ்ச பாண்டவர்கள் துரியோதனன் விதித்த நிபந்தனையின்படி வனவாசம் மேற்கொண்டார்கள். நாட்டைத் துறந்து பாஞ்சாலியோடு வனம் நோக்கி அதன் எல்லையை அடைந்தவுடன் அவர்கள் வயிற்றுப் பசியை உணர்ந்தார்கள். துன்பம் வரும்போதெல்லாம் அவர்களைக் காக்கும் கண்ணனை நினைத்தார்கள், உணவோடு அவர்கள் முன் தோன்றி அவர்களின் பசியைத் தீர்த்து வைத்தான் பரந்தாமன்.

வனவாசத்தில் அவர்கள் வயிற்றுப் பசி போக்கும் வழியையும் எடுத்துச் சொல்லி சூரிய பகவானை உபாசனை செய்து வற்றாமல் உணவளிக்கும் அட்சய பாத்திரத்தை வேண்டிப் பெற்றுக் கொள்ளும், சூரிய உபாசனைக்கான மந்திரத்தையும் பாண்டவர்களுக்கும் பாஞ்சாலிக்கும் அவனே உபதேசித்தான்.

அந்த மந்திரத்தை உச்சரித்து உபாசனை செய்தார்கள் அவர்கள் முன் தோன்றி அவர்கள் வேண்டியபடி அட்சய பாத்திரத்தை அருளினான். வனவாச காலத்தில், அள்ள அள்ளக் குறையாமல் அன்னம் தரும் அட்சய பாத்திரத்தால் வந்த விருந்தினர்க்கெல்லாம் அமுது படைத்து மகிழ்ந்தாள் பாஞ்சாலி என்கிறது மகாபாரதம்.

அட்சய பாத்திரத்தை சூரியனிடம் தர்மபுத்திரர் பெற்றது இதே அட்சய திருதியை நன்னாளில்தான். எனவே அட்சய திருதியை அன்று அன்னதானம் செய்வது சிறப்பு அன்று செய்யும் அன்னதானத்தின் புண்ணிய பலன் பல மடங்கு கிட்டும்.

காயசண்டிகை மணிமேகலைக்கு அமுதசுரபி என்கிற அட்சய பாத்திரம் வழங்கியதும் இந்நாளே என்றும் கூற கேள்விப்பட்டு இருக்கிறேன். அட்சய திருதியை அன்று வழக்கமாக உள்ளதை விட அதிகமாக இறைச் சிந்தனையில் ஈடுபட வேண்டும்.

அட்சய திருதியை போலவே கிரகண காலத்திலும் எது செய்தாலும் அது வளரும் என நம்பப்படுகிறது. இத்தகைய எண்ணற்ற சிறப்புகள் உள்ள நாளில் அதிகமாக மந்திர ஜபம் செய்தும் இறைச் சிந்தனையில் ஈடுபட்டும் நம் மனத்தை மாசில்லாததாக ஆக்கிக் கொள்வோம்…

பின் குறிப்பு : அட்சய திருதியை என்றாலே கடைக்குப் போய் ஏதேனும் சிறிய அளவிலாவது தங்கம் வாங்க வேண்டும் என்பது சமீப காலத்தில் பெருகிப் போய்விட்டது. புத்தியை பிளக்கும் சக்தி விளம்பரத்திற்கு உண்டு. விளம்பரத்தில் வீழும் புத்தி மக்களுக்குண்டு.

எப்படியும் விளம்பரம் செய்து எந்த வகையிலாவது வியாபாரம் செய்ய முனைவோரை தடுக்க வழியே கிடையாது. சிக்கியவன் கூக்குரலிட்ட செய்தி கிடைத்தால் அதை முடிந்த வரை நட்பு சுற்றம் வட்டாரத்திற்கு பகிர்ந்து விட்டு அதே கடையிலே அடைக்கலமாகும் வாடிக்கையாளர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

71st sankaracharya of kanchi - 2026

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார். பின்னர் அவருக்கு சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்று தீக்ஷா நாமம் வழங்கினார் சங்கரவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். தொடர்ந்து, காஞ்சி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய பீடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் இணைந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.

காஞ்சி காமகோடி பீடத்தின் 71 வது இளைய மடாதிபதியாக, ஸ்ரீ துட்டு சத்ய வெங்கடசூர்ய சுப்ரமணிய கணேச சர்மா இன்று பொறுப்பேற்றார். அவருக்கு சன்யாஸ தீட்சை வழங்கப்பட்டபின்னர்  ஸ்ரீஸ்ரீஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற திருநாமம் சூட்டப்பட்டது. இந்த விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உள்பட முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். 

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் ஆலயத்தில் உள்ள பஞ்ச கங்கை தீர்த்தத்தில், அட்சய திருதியை நாளான இன்று காலை 6 மணி முதல் இளைய மடாதிபதியான, ஸ்ரீ சத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மாவுக்கு, ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச ஆசிரம தீட்சை வழங்கினார்.

முன்னதாக, காமாட்சியம்மன் கோவிலில் உள்ள பஞ்ச கங்கை தீர்த்த தெப்பக்குளத்தில் நடந்த விழாவில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கணேச சர்மாவுக்கு தீட்சை வழங்கி காவி வஸ்திரத்தை வழங்கினார். தொடர்ந்து கமண்டலத்தையும், தண்டத்தையும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் இருந்து பெற்றுக் கொண்ட அவர், குருவான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை வணங்கினார். கணேச சர்மாவுக்கு சாளக்கிராமத்தை தலையில் வைத்து சங்கு தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து ஆசி வழங்கினார் விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.

விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி , ஆதீனங்கள், மடாதிபதிகள், சன்னியாசிகள் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.

IPL 2025: போட்டி கொல்கத்தாவின் பக்கம்!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – கொல்கொத்தா vs டெல்லி –டெல்லி – 29.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி (204/9, அங்க்ரிஷ் ரகுவன்ஷி 44, ரிங்கு சிங் 36, சுனில் நரேன் 27, ரஹ்மானுல்லா குர்பாஸ் 26, அஹிங்க்யா ரஹானே 26, மிட்சல் ஸ்டார்க் 3/43, விப்ராஜ் நிகம் 2/41, அக்சர் படேல் 2/27) டெல்லி கேபிடல்ஸ் அணியை (190/9, டியு பிளேசிஸ் 62, அக்சர் படேல் 43, விப்ராஜ் நிகம் 38, சுனில் நரேன் 3/29, வருண் சக்ரவர்த்தி 2/39, அனுகூல் ராய், வைபவ் அரோரா, ரசல் தலா 1 விக்கட்) 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது.

அந்த அணியின் முதல் நான்கு வீரர்கள் ரஹமானுல்லா குர்பாஸ் (12 பந்துகளில் 26 ரன், 5 ஃபோர், 1சிக்சர்), சுனில் நரேன் (16 பந்துகளில் 27 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), அஹிங்க்யா ரஹானே (14 பந்துகளில் 26 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்), அங்க்ரிஷ் ரகுவன்ஷி (32 பந்துகளில் 44 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) ஆகியோர் நல்ல் ரன்ரேட்டுடன் ரன் சேர்க்க உதவினர்.

வெங்கடேஷ் ஐயர் (7 ரன்) இன்றும் சரியாக ஆடவில்லை. அதன் பின்னர் வந்த ரிங்கு சிங் (25 பந்துகளில் 36 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) ஆண்ட்ரூ ரசல் (9 பந்துகளில் 17 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் அதே ரன் ரேட்டைத் தொடர்ந்தனர்.

20ஆவது ஓவரில் மிட்சல் ஸ்டார்க் வீசிய ஓவரில் ரோமன் போவெல் (5 ரன்), அனுகூல் ராய் (பூஜ்யம் ரன்), ரசல் மூவரும் ஆட்டமிழந்தனர். இதனால் கொல்கொத்தா அனி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 205 ரன் எடுத்தது.

205 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் போரல் (4 ரன்) முதல் ஓவரில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டியூ பிளேசிஸ் (45 பந்துகளில் 62 ரன், 7 ஃபோர், 2 சிக்சர்) 15.2ஆவது ஓவர் வரி ஆடினார். இவரைத் தவிர அக்சர் படேல் (23 பந்துகளில் 43 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் விப்ராஜ் நிகம் (19 பந்துகளில் 38 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடினார்கள்.

மற்றா வீரர்களான கே.எல். ராகுல் (7 ரன்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (1 ரன்), அஷுத்தோஷ் ஷர்மா (7 ரன்), மிட்சல் ஸ்டார்க் (பூஜ்யம் ரன்), சமீரா ( 2 ரன்), குல்தீப் யாதவ் 1 ரன்) ஆகியோர் இன்று சரியாக விளையாடவில்லை.

கொல்கொத்தா அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் வருண், சுனில் மற்றும் ரசல் இன்று சிறப்பாக பந்துவீசி மொத்தம் 6 விக்கட்டுகள் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 190 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

அதனால் டெல்லி அணி தோல்வி அடைந்தது.

கொல்கொத்தா அணியின் தொடக்க வீரர் மற்றும் சுழல் பந்துவீச்சாளர் சுனில் நரேன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

madurai chithirai vizha kodiyetram - 2026

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரைத் திருவிழாவுக்கு கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு கொடியேற்றம் வைபவத்தில், மதுரை மேயர் இந்திராணி, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மதுரை நகர் காவல் ஆணையாளர் டாக்டர் லோகநாதன், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் மற்றும் கோயில் இணையர் கிருஷ்ணன் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை வைகை நதியில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறவுள்ளது. இதில் பல லட்சம் வைகை ஆற்றில் திரண்டு கள்ளழகரை தரிசித்து விட்டு செல்வது வழக்கமாக உள்ளது. அன்றைய தினம் மதுரை மாவட்டத்தில் சிறப்பு நகரப் பேரூந்துகள் இயக்கப்படும்.

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா இன்று ஏப் 29 செவ்வாய்க்கிழமை காலை வேத பாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. பல்லாயிரகணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் (ஏப்ரல்-மே) வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த (2025) ஆண்டு சித்திரைத் திருவிழா இன்று (ஏப்ரல் 29) கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இன்று காலை 9:55 முதல் 10:19 மணிக்குள், சுவாமி சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு, மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சிக் திருக்கல்யாணம், அழகரின் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தைக் காண தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அருகில் உள்ள மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் வாழும் இந்துக்கள் உலக சுற்றுலா பிரியர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள், மதுரைக்கு வருகை தருவர்.

சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா இன்று காலை சுவாமி சன்னதி முன்பாக உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக கொடிமரம் முன்பு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் ப்ரியாவிடையுடன் எழுந்தருளினார்.

பூஜைகளுக்கு பின்னர் மங்கள வாத்தியங்கள், வேதமந்திரங்கள் முழங்கிட காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

சித்திரைத் திருவிழா இன்று துவங்கியுள்ள நிலையில் அம்மனும் சுவாமியும் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலாவும், விழாவின் முக்கிய நிகழ்வுகளாக வரும் 6-ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், 8-ம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், 9-ம் தேதி தேரோட்டமும் நடைபெறும்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் 12-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியதால் மதுரை நகர் விழாக்கோலம் பூண்டுள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சங்களாக ஏப்ரல் 29 (செவ்வாய்) இன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

மே 6 (செவ்வாய்): மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேகம், இதில் மீனாட்சி மதுரையின் அரசியாக முடிசூடப்படுகிறார்.

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும். இந்த நாளில் பக்தர்கள் திருமண வைபவத்தைக் காண கூடுவர், மேலும் பல பெண்கள் தங்கள் தாலிக்கயிறு மாற்றிக் கொள்வர்.

மே 9 (வெள்ளி): மீனாட்சி திருத்தேரோட்டம், இதில் மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் தங்கத் தேரில் பவனி வருவர். தேர் சுமார் 14.5 அடி உயரமும், 6.964 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்படும்.

மே 10 (சனி): கள்ளழகர் புறப்பாடு, இதில் அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர் மதுரை நோக்கி பயணம் தொடங்குவார்.

மே 11 (ஞாயிறு): கள்ளழகர் எதிர்சேவை, இதில் கள்ளழகர் மதுரையில் பக்தர்களால் வரவேற்கப்படுவார்.

மே 12 (திங்கள்): கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல், இது திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வாகும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றின் கரையில் கூடுவர்.

இன்று முதல் துவங்கிய மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் முதல் நாளிலேயே அதிக அளவில் வரத்து வாங்கியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது வரும் தெரு கல்யாணத்தன்று மிக முக்கிய நிகழ்வாக பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்குவதற்கு ஏற்பாடுகள் தற்போது நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மே 8 ல் நடக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண அறநிலையத்துறையின் hrce.tn.gov.in இணையதளத்திலும், கோயில் இணையதளத்திலும் maduraimeenakshi.hrce.tn.gov.in இன்று (ஏப்.,29) முதல் மே 2 இரவு 9:00 மணி வரை ரூ.500, ரூ.200 கட்டண சீட்டு பெறமுன்பதிவு செய்யலாம். ரூ.500 கட்டணச்சீட்டு பதிவில் ஒருவர் இரண்டு டிக்கெட் மட்டுமே பதிவு செய்ய முடியும்.ரூ.200 கட்டணச்சீட்டு பதிவில் ஒருவர் மூன்று டிக்கெட் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஒரே நபர் ரூ.500, ரூ.200 கட்டண சீட்டை பதிவு செய்ய முடியாது.

மே 3க்குள் தகவல் தெரிவிப்பு; ஆதார் கார்டு, போட்டோ அடையாள சான்று, அலைபேசி, இ-மெயில் முகவரியுடன் முன்பதிவு செய்ய வேண்டும்.கணினி மூலம் குலுக்கல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு மே 3க்குள் தகவல் தெரிவிக்கப்படும். தகவல் கிடைக்கப் பெற்றவர்கள் மே 4 முதல் 6 வரை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரைமேலசித்திரை வீதியில் உள்ளபிர்லா விஷ்ரம் தங்கும் விடுதி மையத்தில் தங்களுக்கு வந்த தகவலை காண்பித்து பணம் செலுத்தி கட்டணச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம். திருக்கல்யாணத்தன்று அதிகாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை மட்டுமே கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ரூ.500 கட்டண சீட்டு உள்ளவர்கள் வடக்கு கோபுரம் வழியிலும், ரூ.200 கட்டணச்சீட்டு உள்ளவர்கள் வடக்கு – கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகே உள்ள பாதை வழியாக வந்து வடக்கு கோபுரம் வழியாகவும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இத்திருவிழாவின் இணைப்பாக நடைபெறும் அழகர் கோயில் திருவிழா மே 8ம் தேதி தொடங்குகிறது. மே 10ம் தேதி மாலை 6.10 மணிக்கு மேல் 6.25 மணிக்குள் தங்க பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். மே 11ம் தேதி அழகருக்கு மூன்று மாவடியில் எதிர்சேவை நடக்கிறது. மே 12ம் தேதி அதிகாலை 5.45 மணிக்கு மேல் 6.05 மணிக்குள் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் நடக்கிறது. மே 13ம் தேதி தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் கொடுத்தல், இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம், மே 14ம் தேதி அதிகாலை மோகினி அவதாரத்தில் அழகர் காட்சியளித்தல் திருவிளையாடல் நடைபெறும்.

செங்கோட்டை சிவன் கோயிலில் விவேகானந்தா கேந்திரா சார்பில் விளக்கு பூஜை!

senkottai temple villakku poojai - 2026

செங்கோட்டை அறம்வளர்த்தநாயகி உடனுறை குலசேகரநாதசுவாமி திருக்கோவிலில் வைத்து கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை மற்றும் மாதர் மாநாடு நடந்தது.

நிகழ்ச்சிக்கு விவேகானந்தா கேந்திர கிராம முன்னேற்ற திட்ட செயலாளா் ஐயப்பன்  தலைமைதாங்கினார். பிஎல்எம்.போர்ட்ஸ் கிளப் நிறுவனத்தலைவா் பொறியாளா் எல்எம்.முரளி, தொழிலதிபர் மோகன்படேல், முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் மணிமகேஸ்வரன், முன்னாள் இராணுவ வீரர் நடராஜன், ஆகியோர் முன்னிலைவகித்தனா். கேந்திர மாவட்ட பொறுப்பாளா்  கருப்பசாமி அனைரையும் வரவேற்று பேசினார்.

கேந்திர சகோதரி தெய்வானை  இறைவணக்கம் பாடினா். இலஞ்சி விவேகானந்தா கேந்திர பாலா் பள்ளி  மாணவியா்களின் கலைநிகழ்ச்சி தனித்திறன் சமய உரையாற்றினா்.

சாம்பவர்வடகரை சமய வகுப்பு மாணவி வரவேற்பு நடனம் ஆடினார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக குற்றாலம் ஐந்தருவி ஸ்ரீசாரதா ஆஸ்மர நிர்வாகி யதீஸ்வரிஆத்மப்ரியா அம்பாள், ஆசியுரை வழங்கினார். பின்னா்  யதீஸ்வரி ஆத்மப்ரியா அம்பாள், ரமீலாமோகன்படேல், செண்பகவல்லிமாடசாமி, மல்லிகாவேல்சாமி, முத்துமாரிலெட்சுமணன் ஆகியோர் முதல் குத்துவிளக்கினை ஏற்றி பூஜையை துவக்கி வைத்தனா்.

திருவிளக்கு பூஜையினை கேந்திர சகோதரிகள் சந்திரா, சரஸ்வதி, ஆகியோர் நடத்தினர். பூஜையில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சுவாமி, அம்பாள் தரிசனம் பெற்று சென்றனா்.

முன்னதாக சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் மற்றும் நன்கொடையாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சமுதாய பெரியோர்கள், ஆன்மீக அன்பர்கள், சமூக ஆர்வலா்கள் விவேகானந்தா கேந்திர தொண்டர்கள், தன்னார்வலா்கள், ஆயுள்கால உறுப்பினா்கள் தொண்டர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் கேந்திர மருத்துவமனை உதவியாளா் கண்ணன் நன்றி கூறினார். 

சிந்து நதியும் இந்தியாவின் மனிதாபிமானமும்!

write thoughts - 2026
#image_title

பஹல்காம் கொடூரத்திற்கு பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வோம் #IndusWatersTreaty என மத்திய அரசு அறிவித்துள்ளது. தண்ணீர தர மாட்டோம் என்பது இதன் பொருளல்ல.

“நீரை நிறுத்தினால் ரத்த ஆறு ஓடும்: என்கிற பொறுக்கித்தனமான பேச்சுக்குத் தான் “ஒரு சொட்டு நீர் கூடக் கிடையாது” என்கிற வார்த்தை பதிலடி. நம்மிடம் அவ்வளவு நீரைத் தேக்கும் அளவு உள்கட்டமைப்பு இல்லை. ஆனால் முன்பு போல கால இடைவெளியில் முறைப்படி நீர்ப் பகிர்வு நடக்காது. கொள்கை மாற்றம் என்ன என்பது அடுத்த சில வாரங்களில் தெரியும்.

இந்திய அரசுக்கு மனிதாபிமானம் இல்லை என்று வாதிடும் (ஞாபக மறதி) சகாக்களுக்கு….

● கோவிட் தடுப்பூசிகளை உலகம் முழுவதும் உள்ள 45 நாடுகளுக்கு அனுப்பியது நமது அரசு. திட்டத்தின் பெயர் #VaccineMaitri

● முற்போக்கு பேசும் நண்பர்கள் ஆதரவு பெற்ற முன்னாள் அமெரிக்க அதிபர் திரு. ஜோ பைடன் அப்போது என்ன செய்தார் தெரியுமா ? தேவைக்கு அதிகமாக இருந்த தடுப்பூசிகளை யாருக்கும் கொடுக்க மாட்டேன் என்று நிறுத்தி விட்டார்.

● மருத்துவ விசா நீடிக்கவில்லை. நாளை வரை (ஏப்ரல் 29) காலக் கெடு ஏற்கனவே கொடுத்துள்ளார்கள். பாகிஸ்தான் பிரஜைகள் என்றாலும் கருணை கூர்ந்து குறைந்த ஆவணங்களுடன், விரைவாக விசா அனுமதி இதுவரை வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிரண்டு குடும்பங்கள் பாதிக்கப்பட்டாலும் அதனையும் அரசு பரீசிலிக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

● ஒரு வேளை சிகிச்சை தாமதம் ஆனால் பாதிக்கப்பட்ட நபருக்கு வேண்டிய மருத்துவ ஆலோசனைகள், பரிந்துரைகளை டாக்டர்கள் வழங்குவார்கள். ஊடகங்கள் அல்ல.

● இந்தியா தனது 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட 12 வருடம் ஆகும் என்று (இன்று நியாயம் பேசும்) போலி முற்போக்கு ஊடகங்கள் மிகக் கேவலமான பொய்யை எழுதின. இன்று வரை தங்களின் தவறுகளுக்கு அவை மன்னிப்பு கேட்டதேயில்லை. அதனால் இந்த ஊடக அழிச்சாட்டியங்கள் “ஆடு நனைகிறது என்று ஓநாய் அழும் கதை”. கண்டு கொள்ள அவசியம் இல்லை.

● காஷ்மீர் மாநில மக்களுக்கு மட்டும் ஹூரியத் மாநாடு கட்சித் தலைவர்கள் பரிந்துரையில் பாகிஸ்தானில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு சிறப்பு அனுமதி, கட்டணச் சலுகை போன்றவை விஷம் தோய்ந்த கத்திகள்.

● இந்தியாவில் ரூ.80 இலட்சம் செலவாகும் மருத்துவப் படிப்பு, வங்கதேசத்தில் ரூ.40 இலட்சம். பாக்.கில் ரூ.20 இலட்சத்திற்கு வழங்கப்பட்டது. அத்தனையும் மோசடி. தரமான கல்வியும், மருத்துவ வசதியும் இல்லாத நாடும், நாட்டு மக்களும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் நாட்டின் மீது துரோகம் செய்யத் துணியக் கூடாது.

● 2019 சட்டப்பிரிவு நீக்கத்திற்குப் பின் இவை அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. இதில் உள்ள முறைகேடுகள், கல்விக்கான பணம் பயங்கரவாதிகள் பயிற்சிக்கு உதவியது என்று பல கோணங்கள் உள்ளன. தேடிப் படியுங்கள்.

● இது தான் சாக்கு என்று “ராம்” படத்தில் கஞ்சா கருப்பு மேல் பாவாடை காணாமல் போன கேஸ் போடுவது போல வேறு சில அதிமேதாவிகள் “மணிப்பூர் வன்முறை”, “கோவிட் மரணங்கள்”, “சிறப்பு அந்தஸ்து நீக்கம் தோல்வி” என்று அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள்.

● #AFSPA குறித்து இவர்கள் விவாதிப்பார்களா ? யார் ஆட்சியில் ஆயுதப்படை சிறப்புச் சட்டம் விரிவுபடுத்தப்பட்டது என்ற வரலாறு அறிவார்களா ? காஷ்மீர், பஞ்சாப், அசாம், மேகாலயா, மிசோரம், நாகாலந்து என்று பறந்து விரிந்து கிடந்த சிறப்பு ஆயுதச் சட்டத்தின் இன்றைய நிலை என்ன ? வட கிழக்கில் இப்போது நிலவும் அமைதிக்கான காரணம் யார் ?

● 2013 இல் திரு.சந்தோஷ் ஹெக்டே தலைமையிலான ஆணையம் மணிப்பூர் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டது நினைவில் உள்ளதா ? அப்போது முதல் பாஜக தான் ஆட்சியில் உள்ளதா ?

● நாகலாந்து மக்கள் தனி நாடு கேட்ட போது இராணுவம் ஏன் வந்தது ? அமைதிப் பேச்சுவார்த்தை ஏன் வெற்றி பெறவில்லை ? மேற்கு வங்க மாரீச்சபி படுகொலைகள் நடந்ததற்கு யார் பொறுப்பு ? சந்தோஷ் காளி, முர்ஷிதாபாத் கலவரங்களையும் சேர்த்து எழுதுவது தானே…. கொடுமை.

  • சக்கரவர்த்தி மாரியப்பன்

IPL 2025: எப்படி சாத்தியம்… ரசிகர்களை கவர்ந்திழுத்த சூர்யவன்ஷியின் பேட்டிங்!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – குஜராத் vs ராஜஸ்தான் –ஜெய்பூர் – 28.04.2025 –

வைபவ் சூர்யவன்ஷியின் தாம்தூம் ஆட்டம்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

குஜராத் டைடன்ஸ் அணியை (209/4, ஷுப்மன் கில் 84, ஜாஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 50, சாய் சுதர்ஷன் 39, தீக்ஷணா 2/35, ஆர்ச்சர் 1/49, சந்தீப் ஷர்மா 1/33) ராஜஸ்தான் ராயல்ஸ் அணி (15.5 ஓவர்களில் 212/2, வைபவ் சூர்யவன்ஷி 101, ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 70, ரியன் பராக் 32, பிரசித் கிருஷ்ணா 1/47, ரஷீத் கான் 1/24) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் குஜராத் அணி முதலில் மட்டையாட வந்தது. அதன் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் (30 பந்துகளில் 39 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் ஷுப்மன் கில் (50 பந்துகளில் 84 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) இருவரும் அணிக்கு நல்ல தொடக்கம் தந்தனர். சாய் சுதர்ஷன் 11ஆவது ஓவரில் ஆட்டமிழந்தபோது ஆடவந்த ஜாஸ் பட்லரும் (26 பந்துகளில் 50 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) அதிரடியாக ஆடினார். இதனால் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கட் இழப்பிற்கு 209 ரன் எடுத்தது.

          210 என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர், இள வயதுடைய வைபவ் சூர்யவன்ஷி (38 பந்துகளில் 101 ரன், 7 ஃபோர், 11 சிக்சர்) மற்றும் யசஶ்வீ ஜெய்ஸ்வால் 940 பந்துகளில் 70 ரன், 9 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் குஜராத் பந்துவீச்சாளர்களின் பந்துகளை துவைத்து எடுத்தனர்.

வைபவ் சூர்யவன்ஷி 12ஆவது ஓவரில் ஆட்டமிழக்கும்போது ராஜஸ்தான் அணியின் வெற்றி உறுதியாகிவிட்டது. மீதம் பெறவேண்டிய ரன்களை ஜெய்ஸ்வாலுடன் இணைந்து ரியன் பராக் (15 பந்துகளில் 32 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) பெற்றார். இதனால் 15.5 ஓவர்களில் 2 விக்கட் இழப்பிற்கு 212 ரன் எடுத்து ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது.

          ராஜஸ்தான் அணியின் வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அவர் இன்று 17 பந்துகளில் 50 ரன்னும் அடுத்த 18 பந்துகளில் சதமும் அடித்தார். இது டி20 ஆட்டத்தில் அடிக்கப்பட்ட இரண்டாவது வேகமான சதமாகும்.

முதலிடத்தில் இருப்பவர் 30 பந்துகளில் சதமடித்த கிறிஸ் கெயில் ஆகும். டி20 ஆட்டங்களில் மிகவும் இளவயதில் சதிமடித்தவர் என்ற சாதனையையும் வைபவ் சூர்யவன்ஷி செய்தார்.