எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்
துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்
துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
கேரளத்தில் பூர்ணா நதியின் கரையில் உள்ள காலடியில் சிவகுரு – ஆர்யாம்பாள் தம்பதிக்கு ஒரே புதல்வனாக ஸ்ரீ சங்கரர் பிறந்தார். இவர் பொ.ஆ. 788ல் பிறந்தார் என்பது சில ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இவர் இளமையிலேயே குருகுலத்திற்குச் சென்று வேத – வேதாந்தங்களை முற்றும் கற்றார்.
தனது 7-வது வயதில் நதியில் முதலையால் பிடிபட்டபோது, தன்னுடைய தாயாரின் அனுமதி பேரில் சந்யாஸம் மேற்கொண்டு, துறவியாக வெளியே புறப்பட்டார். நர்மதை நதியின் கரையில் தவம் செய்து கொண்டிருந்த ஸ்ரீகோவிந்த பகவத்பாதரை குருவாக ஏற்றுக்கொண்டு அவரிடம் உபதேசம் பெற்றார். ஸ்ரீகுருவின் உத்தரவின்படி ஸ்ரீசங்கரர் காசி க்ஷேத்திரத்திற்குச் சென்று அத்வைத சித்தாந்தத்தை விளக்கும் பாஷ்யங்களை இயற்றினார்.
பாரதத்தில் உள்ள பல க்ஷேத்திரங்களுக்குச் சென்று பிற சமய வாதிகளிடம் வாதம் செய்து அத்வைத சித்தாந்தத்தை நிலை நிறுத்தினார். பல முக்யமான இடங்களில் மடங்களை ஸ்தாபித்து தம் சிஷ்யர்களை அமர்த்தி ஸனாதன தர்மத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்தார். பல கோவில்களுக்குச் சென்று, வழிபாடு முறைகளை சீரமைத்து, அந்தந்த தெய்வங்களின் மீது ஸ்தோத்ரப் பாடல்கள் இயற்றினார்.
இவருடைய பரம குருவான கௌடபாதரும், வியாஸரும் தனித்தனியே தர்சனம் அளித்து இவருக்கு அருள் வழங்கினர். முப்பத்திரண்டாவது வயதிலேயே, எல்லாப் பணிகளையும் பூர்த்தியாகச் செய்து பூதவுடல் களைந்து ப்ரஹ்மத்தோடு ஒன்றினார்.
ஸ்ரீ சங்கர ஜனனம்!
ஆதி சங்கரரின் சரிதத்தையும், மஹிமையையும் விளக்கி சங்கர விஜயம் என்ற தலைப்பில் நூல்கள் பல வெவ்வேறு காலகட்டத்தில் வெளியாகியுள்ளன. காலடி எனும் கிராமத்தில் சிவகுரு – ஆர்யாம்பாள் தம்பதிக்குப் பிறந்தார் சங்கரர் என்பது பொதுப்படையான கருத்து, சங்கரரின் ஜனன காலத்தில் இயற்கையே அந்தச் சம்பவத்தை எவ்வாறு கொண்டாடியது என மாதவ – வித்யாரண்யர் தனது சங்கர விஜயத்தில் விவரிக்கிறார்.
சுபகிரகத்துடன் கூடியதும், சுபனுடைய திருஷ்டியிலுள்ளதுமாகிய சுப லக்னத்தில் சிவகுருவின் மனைவியான ஆரியாம்பாள் என்ற பதிவிருதா ரத்தினம், ஸ்ரீ பார்வதிதேவி சுப்ரமணியனைப் பெற்றதுபோல் சுகமாகப் புதல்வனைப் பெற்றாள். ஆயினும், முறைப்படி நதியில் ஸ்நானம் செய்து ஜாதகர்மத்திற்கு அங்கமாக அந்தணர்களுக்கு ஏராளமான செல்வத்தையும், பூமியையும், பசுக்களையும் தானம் வழங்கினார். அன்றைய தினத்தில், சுபாவமாகவே பகைமையுள்ள மிருகங்கள் விரோதத்தை விலக்கி சந்தோஷத்துடன் சஞ்சாரம் செய்ததுமன்றி ஒன்றுக்கொன்று உதவி செய்துகொண்டன.
மரங்களும் கொடிகளும், மலர்களையும் பழங்களையும் பொழிந்தன. நதிகளில் சுத்தமான தண்ணீர் ஓடியது. மேகமும் ஜலத்தைப் பொழிந்தது. மலைகளிலிருந்து தண்ணீர் திடீரென பெருக்கெடுத்தது.
அத்வைத மதத்திற்கு விரோதமான மதத்தைப் பின்பற்றியவர்களின் கையிலிருந்து புஸ்தகம் கீழே விழுந்தது. வேதங்களுடைய சிரஸ்ஸுகளான உபநிஷத்துக்கள் சந்தோஷமடைந்தன. ஸ்ரீ வேத வியாசருடைய இருதய கமலம் மலர்ச்சியடைந்தது. திசைகள் யாவும் மகிழ்ந்தன. பரிமள வாசனைகளுடன் காற்று ஆனந்தம் அளித்துக்கொண்டு அடித்தது. வலமாகச் சுற்றும் சுடருடன் ஜ்வலித்தன. எல்லா இடங்களிலும் அக்னிகள் அச்சமயத்தில் ஆச்சரியமாக மலர்மாரி பொழிந்தது. அது மிகவும் பரிமள வாசனையுடையதாக இருந்தது. சாதுக்களுடைய சுத்தமான மனம் போல் மங்களத்தைச் செய்கின்றதாகவும் இருந்தது. மனங்களின் நல்ல செயல்கள் அர்ப்பணம் செய்யப்பட்டன.
உலகங்களுக்கெல்லாம் கண்ணாகிய சூரியனால் மூன்று உலகங்கள் விளங்குவது போலவும், சிறந்த மேரு மலையினால் பூமி விளங்குவது போலவும், அடக்கத்தினால் கல்வி விளங்குவது போலவும், உலகில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராமர் முதலிய அரசர்களுடைய தேஜஸ்ஸு அமைந்த அந்தப் புதல்வனால் ஆரியாம்பாள் விசேஷமாக விளங்கினாள்.
விசேஷமாக உபசாரம் செய்து ஜோதிடர்களை வினவியபொழுது அவர்களும் அந்தப் புதல்வனுடைய பிறவிக் காலத்துக் குணங்களை கூறினர். “இவன் ‘ஸர்வக்ஞன்’ (முற்றும் அறிந்தவன்) ஆக விளங்குவான். தனிப்பட்ட சிறந்த நூலை இயற்றுவான். பேசும் திறமை நிறைந்தவர்களை வெல்வான். இந்த உலகம் உள்ள வரையில் தன் கீர்த்தி நிலைக்கும்படியான செயலைச்செய்வான்” என்றும் கூறினர். *
ஏரார் முயல் விட்டுக் காக்கைப்பின் போவதே… – என்று நண்பர் ஒருவர் ஒரு கருத்தை இட்டு, தேடத் தூண்டிவிட்டார்.
அதாவது… அழகான முயல் குட்டி கண் முன்னே விளையாடிக் களிப்பூட்டும் நிலை இருக்க… காகத்தின் பின்னே துரத்திச் செல்லும் பித்தரும் உண்டோ? என்பது பொருள்!
அழகா வெள்ளை வெளேர்னு முயல்குட்டி இருக்கும் போது, கருப்பா இருக்கற காகத்தை யாராச்சும் துரத்திப் பின்னாடி போவாங்களா? அப்டின்னும் பொருள் கொள்ளலாம்.
இருந்தாலும் நம்ம இளம்பருவ நெஞ்சுக்குச் சொல்லும்படியாய் அமைவதென்றால்… கலர்புல்லா ஒண்ணு கண்ணுக்கழகா பக்கத்துல உக்காந்திட்டிருக்கும்போது, எங்கோ போகிற ஒரு கன்னங்கரேல் பின்னே கண்ணு போவலாமாங்கிறதுன்னு வெச்சிக்கலாம்!
சரி.. சரி… கொஞ்சம் இலக்கிய நுகர்ச்சிக்குப் போவோம்.!
தக்காரோடு ஒன்றித் தமராய் ஒழுகினார் மிக்காராம் என்று சிறியாரைத் தாம் தேறார்; கொக்கார் வளவயல் ஊர தினலாமோ அக்காரம் சேர்ந்த மணல் – என்று பழமொழி காட்டி பழந்தமிழை ஊட்டிய பெருமை நம் முன்னோர்க்கு உண்டு.
இப்படிப் பழமொழிகள் காட்டி எத்தனை எத்தனை அறிவுரைகளை நமக்குச் சொல்லியிருக்கிறார்கள்.!
” ஏரார் முயல்விட்டு காக்கைப்பின் போவதே” என்பது, திருமங்கை ஆழ்வாரின் சிறிய திருமடல் வாசகம்!
“முயல் விட்டு காக்கைப்பின் போனவாறே” என்பது, அப்பரடிகளின் தேவாரத்திலும் உள்ளது. அவரது நான்காம் திருமுறையில். திருவாரூர் தலம் குறித்த பாடலிது!
என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட் டு என்னை ஓர் உருவமாக்கி இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட்டு என்னுள்ளங் கோயிலாக்கி அன்பிருத்தி அடியேனைக் கூழாட்கொண்டு அருள்செய்த ஆரூரர்தம் முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக் காக்கைப்பின் போனவாறே – என்று பாடுவர்.
இந்தத் திருவாரூர்ப் பதிகத்தில் உள்ள சிறப்பு, இது போலே 10 பாடல்களிலும், இறுதியில் பழமொழி வந்து கண்காட்டுவது ரசிக்கத்தக்கது!
அழகிய முயலைவிட்டு (உபயோகமற்ற) காக்கை யின் பின்னே தொடர்ந்து போவாருமுண்டோ? என்ற இதன் பின்னணி என்ன என்பதை ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரையில் காணுவோம்…
***- இனி, இம்மூன்று புருஷார்த்தங்களான காமபுருஷார்த்தமே சிறந்ததென்னும் தமது திருவுள்ளத்தை வ்யங்க்யமாக வெளியிடுகிறார், – (இவற்றினிடை அதனை
யெய்துவார் ஆரார், (அவர்) சீராரிருகலையுமெய்துவர்) அதனை என்று தமக்கு உத்தேச்யமான காமபுருஷார்த்தத்தைக் சுட்டினபடி. காம புருஷார்த்தம் எவர்கட்குக் கைவந்ததோ, அவர்கட்கு அறம் பொருள்களும் கைவந்தனவேயாம் என்றபடி. இதன் உட்கருத்து யாதெனில், காம்மேஸாதயம், அதாவது பலன், அதனைப் பெறுதற்கு அறமும் பொருளும் ஸாதநம் (உபாயம்) என்பது இவர் திருவுள்ளம்.
எவர்கட்குப் பலன் கைபுகுந்த்தோ, அவர்கள் அதற்கு வேண்டிய ஸாதநங்களையும் அநுஷடித்தவர்களாக ஆகக்கடவர்களாதலால், காமம் கைவந்தவர்கட்கு அறமும் பொருளும் கைவந்தவேயாமென்பது அர்த்தாத் ஸித்தமாயிற்றென்க. அறம் பொருள்களை இருகலை என்றது –நாம்மே ப்ரதாந அங்கியாய், அவை அதன் கலாமாத்திரமாய் இருத்தல் பற்றியக் கலையாவது ஏகதேசம்.
சிலர், “ஆரார் இவற்றின் இடையதளை எய்துவார்“ என்று பிரித்து –தர்மார்த்த காமங்களுள் நடுப்பட்டதாகிய பொருள் கைவந்தவர்களுக்கு, முன்னும் பின்னுமுள்ள மற்றைப் புருஷார்த்தங்களிரண்டும் கைவந்தனவாம் என்பதாக ஆபாத ப்ரதீதிகொண்டு பொருள் சொல்லக்கூடும். அது ப்ரகரணத்தோடு பொருந்தாது, ஆழ்வார் திருவுள்ளத்துக்கும் சேராது. காமத்தைக் கடைப்பிடித்துச் சிறப்பித்துப் பேசுகிற ப்ரகரணமிறே இது. ஆழ்வார்க்குக் காமத்திலேயிறே இப்போது நோக்கு, காமம் நிஷித்தமன்றோ, அதனை ஆழ்வார் கடைப்பிடிக்கலாமோ?
எனின், விஷயாந்தர காமமென்றும், பகவத் விஷய காமம் என்றும் காமம் இருவகைப்படும், பகவத் விஷயகாமம் வேதாந்தங்களிலும் விதிக்கப்பட்டுள்ளது. அதனையே இங்கு ஆழ்வார் கடைப்பிடித்தாராதலால் குற்றமொன்று மில்லையென்க.
இனி நான்காவதாக மோக்ஷபுருஷார்த்தமென்று ஒன்று உண்டென்பாருடைய ஸித்தாந்தத்தை தூஷிக்கிறார். இதுவென்? ஆழ்வார் நாஸ்திகரன்றே, ஆஸ்திகராயிருந்துவைத்து மோக்ஷத்தை இல்லைசெய்யலாமோ எனின், உட்கருத்து
அறிகின்றிலீரகள். “நீள்விசும்பருளும்“ என்றும் “இறந்தால் தங்குமுர் அண்டமே கண்டுகொண்மின்“ என்றும் தமது பலபல திவ்ய ஸூக்திகளாலே பலச்ருதிகளிலே மோக்ஷத்தை அருளிச்செய்கிற இவ்வாழ்வார் மோக்ஷதூஷகராக எங்ஙனேயாவர்? பின்னே இதுதன்னில் மோக்ஷத்தை இல்லைசெய்வானேன்? என்னில், இங்கு நஹிநிந்தா நியாயம் அநுஸந்திக்கத்தக்கது, மோக்ஷதூஷணம் இங்கு விளங்க நின்றாலும் அர்ச்சாவதார ப்ராவண்யத்தைச் சிறப்பித்துச் சொல்லுவதில் ஆழ்வார்க்கு முக்கிய நோக்கமென்று கொள்ள வேணுமேயல்லது மோக்ஷதூஷணத்தில் நோக்காகக் கொள்ளக்கூடாது. நஹிநிந்தா நியாயத்தின் கருத்து இதுவேயாம்.
மோக்ஷமுண்டென்பது அவிவேகிகள் சொல்லும்சொல் என்றதை நிரூபிக்கிறார் காரார் புரவியேழ் என்று தொடங்கி. மேகமண்டலத்திலே சஞ்சரிக்கின்ற ஏழுகுதிரைகள் பூட்டின ஒற்றைச்சக்கரமுடைய தேரிலே கதிராயிரமுடையனாய் விளங்குகின்ற ஸூர்யனுடைய மண்டலத்தைப் பிளந்துகொண்டு அவ்வழியே போய் ஒரு பரமபதமென்னும் தேசத்தை அடைவதாகவும் அங்கே ஆராவமுதத்தை அநுபவிப்பதாகவும் அவ்விடத்தை விட்டு ஒருநாளும் திரும்பி வருவதில்லையாகவும் இப்படிப்பட்ட கட்டுக்கதைகளைக் கூறுகின்றார்களே விவேகிகள் இப்படி அஸம்பத்தப்ரலாபம் பண்ணுவர்களா வென்று நீங்கள் ஆராயமாட்டீர்களோ வென்கிறார், மேகமண்டலத்தில் அஸம்பாவிதம், அந்தத் தேரை ஏழுகுதிரைகள் இழுக்கவேண்டியதும் அப்ரஸக்தம், நெடுந்தூரத்தினின்றும் கண்ணைச் செம்பளித்துப் பார்க்கவும் முடியாத ஸூர்யணைப் பிளந்துகொண்டு போவதென்பது ஸர்வாத்மநா அஸம்பாவிதம் இந்நிலத்திலே ஆராவமுதமிருப்பதாகச் சொல்லுவதும், அதனை யனுபவிப்பவர் எஞ்ஞான்றும் அந்வாருஹ்யவாதம் பண்ணினாராயிற்று. (அந்வாருஹ்யவாதமாவது – உண்மையில் தமக்கு அபிமதமல்லாத பொருளை ஒரு கார்யார்த்தமாக ஏற்றுக்கொண்டு சொல்லுகை, ஜைமிநிமஹர்ஷி பூர்வமீமாம்ஸையில் நிரீச்வரவாதம் பண்ணிருப்பதை இதற்கு த்ருஷ்டாந்தமாகக் கூறலாம்).
மோக்ஷமுண்டென்றே கொண்டாலும் அர்ச்சாவதாரத்திற் காட்டிலும் அது மிகவும் அஸாரம் என்கிறார் (ஏரார் முயல்விட்டு) என்பதனால், நிலத்திலே ஓடுவது முயல், மரங்களின் மேலே பறந்து திரிவது காக்கை, மாம்ஸம் வேண்டியவன் கைப்பட்ட முயலைவிட்டுக் கைப்பட அரியதும் கைப்பட்டாலும் உபயோகப்படாத்துமான காக்கையைப் பின்பற்றித்திரிதல் எப்படி அவிவேகிக்ருத்யமோ, அப்படியே எளிதாயும் ரஸவத்தரமாயுமுள்ள அர்ச்சாவதார போகத்தைவிட்டு அரிதாயும்
அஸாரமாயுமுள்ள மோக்ஷபோகத்தைப்பெற விரும்புகையும் பேதைமையின் பணி என்றாராயிற்று.
ஆக இதுவரையில் ஆழ்வார் தரமான தன்மையிலே நின்று பேசினதென்றும் மேலுள்ளதெல்லாம் தலைமகள் நிலைமை யெய்திப் பேசுவதென்றும் ர்வஹிப்பதுண்டு. அன்றி ஆதி முதலாகவே முற்றும் நாயகி ஸமாதியாலே பேசுகிற பாசுரமென்றும் யோஜிப்பதுண்டு. இதுவே பெரிய வாச்சான் பிள்ளை திருவுள மென்னத்தகும். இரண்டு படியும் ஏற்றதேயாம்.
தொன்மயிலை கானமர்சோலை கபாலீச்சரம் கற்பகவல்லி அன்னை மீது ஒரு பிள்ளைத்தமிழ்! (புத்தக வெளியீட்டு விழா!).
மயிலாப்பூரில் கானமர்சோலை கபாலீஸ்வரம் என்று கொண்டாடப்படும் திரு கபாலீஸ்வரர் கோயிலில் வீற்றிருந்து அருளும் கற்பகவல்லி அன்னையின்மீது முனைவர் திருமதி. மீனாட்சி பாலகணேஷ் அவர்கள் இயற்றியுள்ள தெய்வீகச் சுவை நிறைந்த “திருமயிலைக் கற்பகவல்லி பிள்ளைத்தமிழ்” என்ற நூலின் வெளியீட்டு விழா வியாழக்கிழமை மாலை (1-5-2025) மயிலாப்பூர் கோகலே ஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
திருமதி காயத்ரி வெங்கட்ராகவன் அவர்களுடைய இறைவணக்கத்துடன் தொடங்கியது நிகழ்ச்சி! சிவத்திரு பூசை ச.ஆட்சிலிங்கம் (சிவசுந்தரி இதழ் பதிப்பாளர்) அவர்கள் விழாவினைச் சிறப்பாக வடிவமைத்து தொகுத்தளித்தார்கள். பேராசிரியர் முனைவர் திரு வ.வே.சு. அவர்கள் தலைமை தாங்கி, நூலை வெளியிட, கலைமகள் ஆசிரியர் கலைமாமணி கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். திருமதி சீதாரவி (மேனாள் கல்கி ஆசிரியர்), தமிழவேள், சிவாலயம் ஜெ.மோகன் (ஆன்மீக இதழ்களின் பதிப்பாளர்), ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.
முதலில் பேசிய சிவாலயம் மோகன் அவர்கள், இம்மாதிரி புத்தகங்கள் அவசியம் வரவேற்கப்பட வேண்டியவை என்றார். மேலும் இந்த பிள்ளைத் தமிழிலிருந்து நான்கு பாடல்களை இசையமைத்துப் பாடிய திருமதி காயத்ரி வெங்கட்ராகவன் அவர்களை மிகவும் பாராட்டினார். இந்த புத்தகத்தில் உள்ள பாடல்கள் அனைத்தையும் காயத்ரி அவர்கள் இசையமைத்துப் பாடி, ஒலி வடிவில் கொண்டு வந்து சேர்க்க வேண்டியதின் அவசியத்தையும் கூறினார்.
திரு கீழாம்பூர், இந்தப் புத்தகத்தில் எடுத்தாளப்பட்டுள்ள சொல் நயங்களை சிலாகித்தார். நதிகளே இல்லாத மயிலையில் கங்கை, யமுனை, நர்மதா, சரஸ்வதி, சிந்து மற்றும் காவிரி போன்ற நதிகளைக் ‘கற்பகவல்லி பிள்ளைத் தமிழில்’ இணைத்துப் பாடியிருப்பதை வெகுவாகப் பாராட்டினார். கற்பகாம்பாள் அருளின்றி இந்தப் புத்தகம் வெளி வந்திருக்க முடியாது என்பதற்குச் சான்றாக, அறுபத்து மூவர் விழாவின் பொழுது இந்த புத்தகத்தின் பி டி எப் பைல் அடங்கிய பென் டிரைவ் காணாமல் போய் எப்படி தெய்வாதீனமாகக் கிடைத்தது என்பதை விவரித்தார். குமரகுருபரரின் மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
திருமதி சீதாரவி பேசும் பொழுது, மீனாட்சி பாலகணேஷ் அவர்களுடனான 25 வருட நட்பினைப் பற்றியும், மீனாட்சி, பிள்ளைத்தமிழ்ப் பாடல்களைக் கேட்கும் பொழுதும், பொதுவாகவே அம்மன் பாடல்களைக் கேட்கும் பொழுதும் எப்படி நெகிழ்ந்து, கண்ணீர் விடுவார் என்பதையும் கூறினார். புத்தகத்திலிருந்து சில பாடல் வரிகளை எடுத்துரைத்து, சிலாகித்தார். மீனாட்சி அவர்களுக்கும், பாடிய காயத்ரி வெங்கட்ராகவன் அவர்களுக்கும் மலர் மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.
நிறைவாகப் பேசிய பேராசிரியர் வ.வே.சு. அவர்கள், மீனாட்சியின் இந்தப் புத்தகத்தை, சிற்றிலக்கியத்திற்கு அவர் செய்திருக்கும் பெரிய தொண்டு என்று பாராட்டினார். தன்னுடைய வழக்கமான நகைச்சுவையுடன், இந்தப் புத்தகத்தில் இருந்து சில பாடல் வரிகளை எடுத்துக் கூறி, அவற்றில் இருக்கும் இலக்கிய நயத்தை மிகவும் பாராட்டிப் பேசினார். காப்பு பருவத்தில், “தலைமகன் தந்திமுகன் தம்பியாம் முருகனுடன்// துணை நின்று தாயினைப் பரிந்தே காப்பான் என்ற அடிகளைக் குறிப்பிட்டு, மூப்படைந்த பெற்றோரைப் பிள்ளைகள் பரிந்து காக்க வேண்டும் என்ற அறிவுரையும் அடங்கியுள்ளது என்றார்.
விழாவினைத் தொகுத்தளித்த புலவர் பூசை ச.ஆட்சிலிங்கம் தன்னுடைய இணைப்புரையில் மயிலாப்பூரின் பெருமைகளையும், பிள்ளைத் தமிழ்ப் பாடல்களைக் குறித்தும் சிறப்பான தகவல்களை அளித்த வண்ணம் இருந்தார்.
ஏற்புரையில் திருமதி மீனாட்சி பாலகணேஷ், திருமயிலைக் கற்பகவல்லி பிள்ளைத்தமிழ் நூலினை எவ்வாறு மிகத் தயக்கத்துடன், மிகவும் யோசித்து, சிறிது சிறிதாக, ஒரு வருடத்தில் எழுதினார் என்பதை அழகாகச் சொன்னார். பிள்ளைத்தமிழ் பத்து அதிகாரங்கள் மேலும் வளையல் போடுதல் கோலம் வரைதல் மருதாணி ஏற்றுக்கொள்ளுதல் பூச்சூடுதல் போன்ற புதிய அதிகாரங்களையும் சேர்த்து எழுதியிருப்பதைப் பற்றிக் குறிப்பிட்டார். புத்தக உருவாக்கத்தில் உதவிய அனைவருக்கும் நன்றி கூறினார்
விழாவின் சிறப்பு நிகழ்வாக மீனாட்சி பாலகணேஷ் அவர்களுக்கும் அவருடைய கணவர் பாலகணேஷ் அவர்களுக்கும் தலையிலே பட்டு கிரீடமும் தோளில் அழகிய மாலையும் சார்த்தி, வந்திருந்த அனைவரும் அவர்களை வாழ்த்தியது வித்தியாசமாகவும் பாராட்ட தகுந்ததாகவும் இருந்தது.
விழா முடிவில் அனைவருக்கும் இனிப்புடன்( பாதுஷா, ஜாங்கிரி) வெண் பொங்கல், புளியோதரை, சுண்டல், மெதுவடை தயிர் சாதம் என இரவு உணவு வழங்கப்பட்டது.
பக்தியுடன் இலக்கியம் கலந்த மிகச் சிறந்த விழாவாக இது அமைந்தது! விருட்சம் இசை புதிது குழுவினரும், எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்களும் கலந்து கொண்டது மனதுக்கு நிறைவாக இருந்தது.
பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் திறனாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் நூலாசிரியர் மீனாட்சி பாலகணேஷ்!
பிள்ளைத் தமிழ் பற்றி சில வரிகள்…..
தமிழ் இலக்கியங்களில் “பிள்ளைப்பாட்டு” எனவும் “பிள்ளைக்கவி” என்றும் அழைக்கப்படும் ‘பிள்ளைத்தமிழ்’ இலக்கியம் குறிப்பிடத்தகுந்தது. இம்மாதிரி சிற்றிலக்கியங்களில் ஏறத்தாழ 196 இலக்கிய வகைகள் உள்ளதாகத் தெரிகிறது.
பெரியாழ்வார் கண்ணனைத் தாலாட்டி, செங்கீரையாட்டி, சப்பாணி கொட்டி, தளர்நடை போடுவதை மிக அழகாகப் பாடியுள்ளார்; அதுவே பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாகக் கொள்ளலாம். ஒட்டக்கூத்தர் இயற்றிய “இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் ” முதல் பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும்.
இறைவனையோ மனிதர்களையோ குழந்தையாக எண்ணிப் பாடப்படுவதே பிள்ளைத்தமிழாகும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரண்டு பால்களிலும் பாடப்படுவதுண்டு. மூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கைக் காலத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்து, ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் என அமைத்துப் பாடப்படுவது வழக்கமாகும்.
ஆண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது. பெண்பாற் பிள்ளைத்தமிழில் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, நீராடல், அம்மானை, ஊஞ்சல் எனும் பருவங்களைக் கொண்டது.
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் (குமரகுருபரர்), சேக்கிழார் பிள்ளைத்தமிழ் (திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை) போன்ற பிள்ளைத்தமிழ் நூல்கள் சிறப்பானவை.
பூவாதலையா வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது. இன்று மும்பை அணி தொட்டதெல்லாம் பொன்.
அதன் தொடக்க வீரர்கள் ரியன் ரிக்கிள்டன் (38 பந்துகளில் 61 ரன், 7 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ரோஹித் ஷர்மா (36 பந்துகளில் 53 ரன், 9 ஃபோர்) சிறப்பான தொடக்கம் தந்தனர்.
அவர்கள் ஆட்டமிழந்த பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் (23 பந்துகளில் 48 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ஹார்திக் பாண்ட்யா (23 பந்துகளில் 48 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் மிக அருமையாக ஆடினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி இரண்டு விக்கட் இழப்பிற்கு 217 ரன் எடுத்தது.
218 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு மட்டையாளர்கூட இன்று சரியாக ஆடவில்லை.
எட்டாவது இடத்தில் இறங்கிய ஜோஃப்ரா ஆர்ச்சர் (27 பந்துகளில் 30 ரன்) தவிர மற்ற வீரர்களான யசஸ்வீ ஜெய்ஸ்வால் (6 பந்துகளில் 13 ரன்), வைபவ் சூர்ய வன்ஷி (பூஜ்யம் ரன்), நிதீஷ் ராணா (9 ரன்), ரியன் பராக் (16 ரன்), துருவ் ஜுரல் (11 ரன்), ஷிம்ரோன் ஹெட்மயர் (பூஜ்யம் ரன்), சுபம் துபே (15 ரன்), தீக்ஷணா (2 ரன்), குமார் கார்த்திகேயா சிங் (4 ரன்) என அனைத்து மட்டையாளர்களும் இன்று மும்பை அணியின் பந்துவீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் திணறினார்கள்.
போல்ட், பும்ரா, கர்ண் ஷர்மா, பாண்ட்யா, தீபக் சாஹார் என அனைத்து பந்துவீச்சாளர்களும் துல்லியமாக பந்துவீசினார்கள்; விக்கட் எடுத்தார்கள்.
மும்பை அணி ஆட்டத்தின் அனைத்து துறைகளிலும் இன்று சிறப்பாகச் செயல் பட்டது.
மும்பை அணியின் தொடக்க வீரர் ரியன் ரிக்கிள்டன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
போகிற போக்கைப் பார்த்தால் இந்த செங்கோட்டை – மயிலாடுதுறை செங்கோட்டை ரயிலுக்கு நாளுக்கு நாள் பெட்டிகள் எண்ணிக்கையைக் குறைத்து தற்போது வெறும் பத்து பெட்டிகளுடன் இயங்கும் ரயில் நாளடைவில் வெறும் இன்ஜின் மட்டும் இயங்குமோ என்ற அச்சம் பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
எப்போது இந்த ரயிலுக்கு விடிவுகாலம் வருமோ என பயணிகள் ஏக்கத்தில் உள்ளனர். 16 பெட்டிகளுடன் விழாக் காலங்களில் கூடுதல் இரண்டு பெட்டிகளும் கொண்டு இயங்கிய மதுரை செங்கோட்டை பயணிகள் ரயில் மற்றும் 16 பெட்டிகளுடன் இயங்கிய திண்டுக்கல் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் இரண்டையும் இணைத்து 2022 அக்டோபர் முதல் வெறும் 12 சில நேரங்களில் 10 பெட்டிகளுடன் மட்டும் இயங்கும் செங்கோட்டை – மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில் குறைந்தபட்சம் 18 பெட்டிகளாக்கி இரண்டு ரிசர்வேஷன் கோச்சுக்களும் ஏற்படுத்தி தர பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து 80 கிலோ மீட்டர் தூரமுள்ள செங்கோட்டைக்கு 12 பெட்டிகளுடன் இயங்கும் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகளை சேர்த்து 16 பெட்டிகளுடன் இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது..ஆனால் விட்ட நாள் முதல் பயணிகளின் குமுறலாக உள்ள செங்கோட்டை மயிலாடுதுறை செங்கோட்டை விரைவு ரயிலில் எப்போது பெட்டிகள் எண்ணிக்கை அதிகரித்து இயக்கப்படும் என தென்காசி கொல்லம் திருவனந்தபுரம் விருதுநகர் மதுரை மாவட்ட பயணிகள் பெரும் ஏக்கத்துடன் உள்ளனர்.
செங்கோட்டையிலிருந்து மதுரை சென்ற பயணிகள் ரயில் திண்டுக்கல் மயிலாடுதுறை பயணிகள் ரயிலை இணைத்து 450 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் செங்கோட்டை மயிலாடுதுறை செங்கோட்டை ரயிலில், 10 பெட்டிகள் மட்டும் உள்ள நிலையில் மக்கள் சிரமப்பட்டு பயணிக்கின்றனர்.
மதுரை- – செங்கோட்டை வழித்தடத்தில் தினமும் 3 நேரம், 16முதல்18 பெட்டிகளுடன் பயணிகள் ரயில் இயங்கி வந்தது. இதனால் தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்ட மக்கள் பயணித்து வந்தனர். மதுரையில் இருந்து மயிலாடுதுறை/ஈரோடுக்கு தினமும் ஒரு ரயில் இயங்கியது.
திண்டுக்கல்லில் இந்த ரயில் இரண்டாக பிரிக்கப்பட்டு ஒரு பாதி ஈரோடுக்கும், மற்றொரு பாதி மயிலாடுதுறைக்கும் செல்லும். இந்நிலையில் மயிலாடுதுறை– திண்டுக்கல், மதுரை- – செங்கோட்டை இரு ரயில்களையும் இணைத்து செங்கோட்டை– மயிலாடுதுறை ரயிலாக தற்போது இயங்கி வருகிறது.
16பெட்டிகளுடன் இயங்கிய மதுரை – செங்கோட்டை ரயில் மயிலாடுதுறை வரை நீட்டிக்கப்பட்ட பிறகு 10 பெட்டிகளாக குறைக்கப்பட்டது. இந்த ரயிலில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. மக்கள் உயிரை பணயம் வைத்து படியில் தொங்கிக்கொண்டு பயணித்து வருகின்றனர்.
கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 18 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரிவருகின்றனர்.
இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து 80 கிலோமீட்டர் தூரமுள்ள செங்கோட்டைக்கு 12 பெட்டிகளுடன் இயங்கிய பயணிகள் ரயிலில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் ஏப். 24ல் மதுரையில் நடந்த எம்.பிக்கள் ஆலோசனை கூட்டத்தில் திருநெல்வேலி காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் ப்ரூஸ் விடுத்த கோரிக்கையை ஏற்று மறுநாளே கூடுதலாக 4 பெட்டிகளை சேர்த்து இயக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
ஆனால், செங்கோட்டையில் இருந்து 450 கிலோமீட்டர் தூரம் உள்ள மயிலாடுதுறைக்கு இயங்கும் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பதற்கு பதிலாக, இருந்ததையும் குறைத்து இந்த ரயில் இயங்குவதால் மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட மக்கள் சாதாரண நாட்களில் கூட உட்கார இடம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
இது குறித்து ரயில் பயணிகள் சங்கங்கள், மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
எனவே, திருநெல்வேலி எம்.பி.யைபோல் தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, மயிலாடுதுறை தொகுதி எம்.பி.க்களும் ரயில்வே உயர் அதிகாரிகளை அழைத்து வந்து மக்களுடன் ரயிலில் பயணித்து அவர்களின் சிரமங்களை உணரச் செய்து, கூடுதலாக 6 பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி மூலநாத சாமி கோவில் சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் அமைந்துள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் உடனுறை திரு மூலநாத சுவாமி திருக்கோவில் சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கொடி மரத்திற்கு பால் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து சாமி திருவீதி உலா வரும் சப்பர தேருக்கும் அபிஷேகம் நடைபெற்றது
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகின்ற 8ம் தேதியும் திருத்தேர் ஊர்வலம் 9ஆம் தேதியும் அதனைத் தொடர்ந்து 10ஆம் தேதி தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறும். ஏற்பாடுகளை செயல் அலுவலர் கார்த்திகை செல்வி மற்றும் தென்கரை கிராமத்தினர் செய்து வருகின்றனர்.
சோழவந்தான் திரௌபதை அம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
சோழவந்தான் திரவுபதிஅம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மேளதாளத்துடன் வடக்கு ரத வீதி வெள்ளாளர் உறவின் முறை சங்க தலைவர் சுகுமாரன் தலைமையில், நிர்வாகிகள் முன்னிலையில் பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். திரௌபதை அம்மன் அர்ச்சுனன் அலங்கரித்து கோவில் வளாகத்தில் சுற்றி வந்தனர்.
திருமண மேடையில் வந்து திருமண கோலத்தில்அலங்காரம் செய்தனர். இதை தொடர்ந்துபிரசாந்த் சர்மா தலைமையில் திருக்கல்யாண யாகபூஜை நடந்தது. பரம்பரையை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி,ஜவஹர்லால்,குப்புசாமி ஆகியோர் மாப்பிள்ளை விட்டார், பெண்வீட்டாராக இருந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்துதிருமணத்தை நடத்தி வைத்தனர்.
அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசாதம், முன்னாள் நிர்வாக பரம்பரை அறங்காவலர் ஆதிமூலம்பிள்ளை குடும்பத்தினர் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.,
பேரூராட்சி தலைவர் ஜெயராமன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் எம்.கே.முருகேசன்,மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல் சத்தியபிரகாஷ், வார்டு கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன், செல்வராணிஜெயராமச்சந்திரன், நிஷா கௌதமன், கோவில் பணியாளர் கவிதா, மற்றும் கோவிலைச் சேர்ந்தவர்கள் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இரவு அம்மனும் சுவாமியும் யானை வாகனத்தில் எழுந்தருளி கண்ணப்பர் ஒயிலாட்ட குழுவினருடன் வீதிஉலா நடந்தது. உபயதார் சிவஞானம் பிள்ளை குமாரர் அய்யப்பன் பிரசாதம் வழங்கினார்.
இன்று மாலை சக்கர வியூககோட்டை சைந்தவன் வதம், நாளை வெள்ளிக்கிழமை கருப்பட்டியில் பீமன் கீசகன், வருகிற சனிக்கிழமை சோழவந்தானில் பீமன் கீசகன் வதம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
மதுரை விக்கிரமங்கலத்தில் காவல் நிலையம் அருகே பெட்டிக்கடையில் கள்ளத்தனமாக மது விற்பனையால் பொதுமக்கள் வேதனை
மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் பகுதியில் காவல் நிலையம் அருகில் பெட்டிக்கடையில் கள்ளத்தனமாக மது விற்கும் அவலம் அரங்கேறி வருகிறது. மது விற்பனை காவல் துறையினருக்கு தெரிந்தே, நடைபெறுகிறதா அல்லது டாஸ்மாக் பணியாளர்கள் பெட்டிக்கடையில் வைத்து மதுபானங்களை கள்ளத்தனமாக விற்கிறார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் கீழப்பட்டி ரோட்டில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் விக்கிரமங்கலம் பேருந்து நிலையம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் விக்கிரமங்கலம் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது இந்த காவல் நிலையத்திற்கு எதிர்ப்புறம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகிலேயே பெட்டிக்கடையில் வைத்து கள்ளத்தனமாக மது விற்பனை ஜருராக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், இதன் அருகிலேயே விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். விக்கிரமங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதியில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் பேருந்து நிலையத்தில் இறங்கி பள்ளிக்கு செல்லும் வழியிலேயே இந்த பெட்டிக்கடையும் உள்ளது என வேதனை தெரிவிக்கின்றனர்
பகல் 12 மணிக்கு டாஸ்மாக் திறக்கும் நிலையில், அதிகாலை முதல் பெட்டிக்கடையில் வைத்து கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவது இங்குள்ள காவல் துறையினருக்கு தெரிந்தே விற்கப்படுகிறதா, அல்லது அருகில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு டாஸ்மாக்கில் பணிபுரியும் பணியாளர்கள் மதுபானங்களை மொத்தமாக பெட்டிக் கடையில் வைத்து விற்பனை செய்கிறார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மாவட்ட நிர்வாகம், விக்கிரமங்கலம் பகுதியில் ஆய்வு செய்து கள்ளத்தனமாக மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
‘சாரா கலைக்கூடம்’ நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ ராஜா இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஆகக்கடவன’.
இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் அரசு திரைப்படக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவரான தர்மா.
புதுமுகமான ஆதிரன் சுரேஷ் கதை நாயகனாக நடித்துள்ளார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் வின்சென்ட், சி ஆர் ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், தட்சணா மற்றும் நிவாஸ் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
நெடுஞ்சாலையில், பஞ்சரான பைக்கோடு, தன் நண்பனுடன் காத்திருக்கும் ஹீரோவிற்கு, அடுத்தடுத்து அங்கு நடக்கும் சம்பவங்கள், அவன் வாழ்க்கையையே ஆபத்தில் கொண்டு சேர்க்கிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லராக சொல்வதுதான் “ஆகக் கடவன” திரைப்படம்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் லியோ வெ ராஜா. நெடுஞ்சாலைகளிலும், முள் காடுகளிலும், பாக்கு தோப்பிலும் பயணிக்கும் இவரது கேமரா கோணங்கள் கதையின் ஓட்டத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
சுமார் 2000 குறும்படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் புதுச்சேரியை சேர்ந்த சாந்தன் அன்பழகன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பின்னணி இசைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்திற்கு மிகச் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். அவர் பின்னணி இசை கன்டிப்பாக அனைவராலும் பேசப்படும்.
படத்தொகுப்பை சுமித் பாண்டியன் மற்றும் புமேஷ் தாஸ் இணைந்து சிறப்பாக செய்துள்ளனர்.
படத்தைப்பற்றி இயக்குனர் கூறுகையில்,
“நாம பேசுற வார்த்தைகள் நம் வாழ்க்கையில் மட்டுமில்லாமல், நம்மை சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையிலும் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை கூறும் படமிது.
அதேநேரம் இதனை வெறும் கருத்து கூறும் படமாக மட்டுமில்லால் சுவாரஸ்யமான திரைக்கதையோடு, சஸ்பென்ஸ் திரில்லராக சொல்லியிருக்கிறோம்.
இக்கதை நடைபெறும் இடங்கள், இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்திடாத இடங்கள். ஆதலால், படம் பார்க்கும் பார்வையாளர்கள் கன்டிப்பாக சர்ப்ரைஸ் ஆவார்கள்.
மேலும், இது பார்வையாளர்களை சீட்டின் நுனியில் அமர்ந்து படம் பார்க்கும்படி காட்சிக்கு காட்சி பரபரப்பாக நகர்ந்து கொண்டே இருக்கும். மே மாதம் திரைக்கு வருகிறோம்.” என்றார்.
ஐ.பி.எல் 2025 – சென்னை vs பஞ்சாப் – சென்னை – 30.04.2025
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை (19.2 ஓவர்களில் 190, சாம் கரன் 88, டிவால் பிரிவிஸ் 32, யஸ்வேந்திர சாஹல் 4/32, அர்ஷதீப் சிங் 2/25, மார்கோ ஜேன்சன் 2/30, உமர்சராய் 1/39, ஹர்பிரீத் ப்ரார் 1/21) பஞ்சாப் கிங்க்ஸ் அணி (19.4 ஓவர்களில் 194/6, ஷ்ரேயாஸ் ஐயர் 72, பிரப்சிம்ரன் சிங் 54, பிரியான்ஸ் ஆர்யா 23, ஷஷாங்க் சிங் 23, கலீல் அகமது 2/28, பதிரனா 2/45, ஜதேஜா 1/32, நூர் அகமது 1/39) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற பஞ்சாப் கிங்க்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஷேக் ரஷீத் (12 பந்துகளில் 11 ரன்) மாற்றும் ஆயுஷ் மஹத்ரே (6 பந்துகளில் 7 ரன்) இருவரும் இன்று சரியாக ஆடவில்லை.
ஆனால் மூன்றவதாகக் களமிறங்கிய சாம் கரண் (47 பந்துகளில் 88 ரன், 9 ஃபோர், 4 சிக்சர்), ரவீந்திர ஜதேஜா (12 பந்துகளில் 17 ரன்) மற்றும் டிவால்ட் ப்ரிவிஸ் (26 பந்துகளில் 32 ரன்) இருவருடனும் இணைந்து அணியின் ஸ்கோரை நிலைப்படுத்தினார்.
அவரது அதிரடி ஆட்டத்தால் அணி 220 ரன் வரை போகும் எனக் கணக்கிட்டிருந்த நிலையில் ஷிவம் துபே (6 ரன்), தோனி (11 ரன்), தீபக் ஹூடா (2 ரன்), அன்ஷுல் காம்போஜ் (பூஜ்யம் ரன்), நூர் அகமது (பூஜ்யம் ரன்), கலீல் அகமது (ஆஅட்டமிழக்காமல் பூஜ்யம் ரன்) ஆகியோர் அதற்கு மேல் ரன் சேர்க்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.
குறிப்பாக யசுவேந்திர சாஹல் வீசிய 19ஆவது ஓவரைக் குறிப்பிட வேண்டும். அதில் அவர் நான்கு விக்கட்டுகள் எடுத்தார்; அதில் ஒரு ஹாட்ரிக்கும் அடங்கும். இதனால் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து சென்னை அணி 190 ரன் எடுத்தது.
இந்த ஐபிஎல்லில் சென்னை அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இது.
191 ரன் எடுத்தால் வெற்றி என்ற வெற்றி இலக்கோடு இரண்டாவதாகக் கள்மிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் பிரியான்ஷ் ஆர்யா (15 பந்துகளில் 23 ரன், 5 ஃபோர்) மற்றும் பிரப்சிம்ரன் சிங் (36 பந்துகளில் 54 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) நல்ல தொடக்கம் தந்தனர்.
அதன் பின்னர் பஞ்சாப் அணியின் அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் (41 பந்துகளில் 72 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) அணியை வெற்றிப்பாதையில் இட்டுச் சென்றார். அவருக்குத் துணையாக ஷஷாங்க் சிங் (12 பந்துகளில் 23 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) விளையாடினார். நெஹல் வதேரா (5 ரன்) இன்று சரியாக விளையாடவில்லை.
அணியின் ஸ்கோர் 188ஆக இருக்கும்போது ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 2 ரன் எடுக்கவேண்டிய கட்டம். அந்த ஓவரிலும் ஷெட்கே ஆட்டமிழக்க, அவருக்குப் பின்னால் வந்த மார்கோ ஜேன்சன் ஒரு நாலு அடித்து வெற்றியை உறுதி செய்தார்.