தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பிரிவினைவாதக் கருத்துகளை விமர்சனம் செய்ததற்காக, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவுனர் கே.சி. திருமாறன் கைது செய்யப் பட்டிருக்கிறார். தமிழக அரசின் இந்த பாசிசப் போக்கு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கையில் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
மதுரை அமைச்சர் ப.தியாகராஜன் தூண்டுதலின் பேரில் மதுரை மாவட்ட பாஜக., தகவல் தொழில்நுட்ப நிர்வாகி கண்ணன் கிருஷ்ணன் வீட்டில் காலை 4 மணிக்கு போலீசார் அராஜகத்தில் ஈடுபட்டதாகவும், கண்ணன் கிருஷ்ணன் வீட்டில் இல்லாத காரணத்தால் அவருடைய மைத்துனரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரை கடுமையாக துன்புறுத்தியதாகவும் கூறி, சமூகத் தளங்களில் பலரும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர்.
கண்ணன் கிருஷ்ணன் தினசேவல் எனும் பெயரில் இணைய பத்திரிக்கை மற்றும் யுடியுப் சேனல் நடத்தி வருவதாகவும், அதில் பழனிவேல் தியாகராஜன் குறித்த உண்மைகளைச் சொன்னதற்காக, அவர் கொடுத்த அழுத்தத்தின் பேரில் ஒரு வாரமாக அவரை கைது செய்யும் நோக்கத்தில் காவல் துறை தீவிரமாக செயல்பட்டதாகவும் கூறும் பாஜக.,வினர், அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது குடும்பத்தினரை மிரட்டி அவரது மைத்துனரை காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தக் கைது சம்பவம் குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரது கண்டன அறிக்கையில்…
தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவரும் தமிழகத்தின் காவி படை தளபதியுமான திரு கே சி திருமாறன் அவர்கள் இன்று அதிகாலை மதுரை மாநகர காவல் துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார்.
திமுகவினர் குறித்து அவதூறு பரப்பியதாக அவமரியாதையாக பேசியதாக, தமிழக நிதியமைச்சர் மாண்புமிகு தியாகராஜன் அவர்களின் தூண்டுதல் பேரில் திமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் திருமாறன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
திமுகவின் உடைய ஜனநாயக விரோதப் போக்கு,மாற்றுக்கருத்து உள்ளவர்களை நசுக்கும் பாசிச மனப்பான்மை, பழிவாங்கும் நடவடிக்கை, இதன் காரணமாக திருமாறன் ஜனநாயக விரோதமாக, சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் அவர்கள் தொடர்ந்து மாற்றுக் கட்சியினரை அவமானப்படுத்தும் வகையில் பேசுவதும், ஒருமையில் பேசுவதும் வழக்கமாக கொண்டுள்ளார். இந்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களை மிரட்டும் தொனியில் பேசி வருகிறார்.
சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் குறித்து அவன் இவன் என ஏக வசனத்தில் பேசி வருகிறார். நரேந்திர மோடிக்கு எதிராகவும் இந்து இயக்க தலைவர்களுக்கு எதிராகவும் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி அவதூறு பரப்பி வருகிறார். அவருடைய அவதூறு கருத்துக்கு ஜனநாயக முறையில் தக்க பதிலடி கொடுத்து வருகிறார் கே சி திருமாறன் அவர்கள்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்கள் தனது வீட்டில் வந்து பணம் வாங்கி சென்றதாகவும் தனது வீட்டில் வந்து சாப்பிட்டு விட்டுப் போவார் என்றும் தவறான தகவல்களை பதிவு செய்ய திரு தியாகராஜன் முயற்சி செய்கிறார். வரலாற்றுப் பூர்வமாக தேவர் அய்யாவின் புகழ் காக்கும் நடவடிக்கைகளை திரு திருமாறன் அவர்கள் மேற்கொண்டு வருகிறார்.
இதனால் ஆத்திரமடைந்த நிதி அமைச்சர் தியாகராஜன் போலீசாரை ஏவி விட்டு இன்றைக்கு கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
மாண்புமிகு முதலமைச்சர் இது விஷயத்தில் உடனடியாக தலையிட்டு திருமாறன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். திருமாறன் அவர்களுக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் புகழ் காப்போம் கே சி திருமாறன் அவர்கள் கைதை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டுகிறோம் அவரை விடுதலை செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி அறப் போராட்டங்களில் ஈடுபடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்… என்று குறிப்பிட்டிருக்கிறார்.