ஜன சேனாவின் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு எம்எல்ஏ ஒய்எஸார் கட்சியில் சேரப்போகிறாரா? “ராபாக” பதில் சொல்கிறார் இப்படி…!
ஜன சேனா கட்சியிலிருந்து வெற்றி பெற்ற ஒரே ஒரு எம்எல்ஏ “ராபாக வரப் பிரசாத்”. இவர் கட்சி மாறப் போகிறாரா ? இந்தக் கேள்விக்கு அவர் அளித்த பதில் என்ன?
ஆந்திரப் பிரதேச தேர்தல் முடிவுகள் ஜனசேனா தலைமையின் உற்சாகத்தை தொய்வடைய செய்துவிட்டன. இந்தக் கட்சியின் தலைவர் பவன் கல்யாண் பீமாவரம், ‘காஜுவாக்கா’ என்ற இரு இடங்களிலும் தோற்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
கட்சியின் சார்பில் ஒரே ஒரு எம்எல்ஏ தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரே “ராஜோல்” என்ற தொகுதியில் போட்டியிட்டு வென்ற எம்எல்ஏ “ராபாக வரப் பிரசாத்” .
ஜனசேனாவின் ஒற்றை எம்எல்ஏவாக அவர் சட்டசபையில் அடியெடுத்து வைக்கப் போகிறார். அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் சபையில் ஜனசேனாவின் குரல் கேட்க வேண்டும் என்றும் அக்கட்சி தொண்டர்கள் விரும்புகிறார்கள்.
ஆனால் அவர் ஒய்எஸ்ஆர் கட்சியில் சேரப் போவதாக பேச்சு அடிபடுகிறது. 2009இல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்எல்ஏவாக வென்றவர் இவர். ஜெகன் கட்சியில் சேர்ந்தால் ‘எஸ்சி சாமாஜிக வர்க்க” கோட்டாவில் அமைச்சர் பதவி நிச்சயம் என்று பேச்சு காதில் விழுகிறது.
இரண்டு ஆண்டுகளில் அவர் மூன்று கட்சிகள் தாவியவர். அண்மையில் விமான நிலையத்தில் இவரை ஜகன் மோகன் சந்தித்தபோது ஜகன் அவரை அன்போடு விசாரித்தார். இதனால் இந்தப் பேச்சு சூடு பிடித்துள்ளது.
இந்தச் செய்திக்கு “ராபாக வரப்பிரசாத்” பதிலளித்த போது… தான் கட்சி மாறப் போவதில்லை என்றும் ஜனசேனா சார்பில் வென்ற தான் கட்சிக் கொள்கைகளுக்கு கட்டுப்பட்டு உழைக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
ஒருவனாக தொடங்கிய ஜனசேனாவின் வெற்றி முகம், அடுத்து வெற்றியாளர்களை நூற்றுக்கணக்கான பேராக மாற்றுவதற்கு முயற்சி செய்வேன் என்றார் .
ஜனசேனாவுக்கு இருக்கும் இந்த ஒரு சீட்டையும் எடுத்துச் சென்று வேறு ஒரு கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர்.
தன் கட்சி எதிர்காலத்தில் நிச்சயம் ஆட்சியை பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், பிஜேபிக்கு வந்துவிடும்படி தனக்கு அழைப்பு வந்ததாகவும் ஆனால் வரமாட்டேன் என்று சொல்லி விட்டதாகவும் கூறினார்.
ஒய் எஸ் ஆர் கட்சியில் சேருவீர்களா என்று கேட்டதற்கு அவர் எனக்கு பணத்தின் மேல் ஆசை இல்லை! ஒய் எஸ்ஸாரில் சேர்ந்தால் என் நம்பர் 152. ஜனசேனாவிலேயே இருந்தால் நான்தான் நம்பர் ஒன்” என்று… “சும்மா அதிருதில்ல…?” பாணியில் பதில் அளித்தார்.
சமீபத்தில் ஒரு யூடியூப் சேனல் பேட்டியில் ஜெகன் தன்னுடைய ‘ராஜோலு’ தொகுதிக்கு முழுமையாக உதவுவார் என்ற நம்பிக்கை இருப்பதாகக் கூறினார் ராபாக வரப்ரசாத்!