Home Blog Page 103

திருவிழா சீரியல் லைட் அமைத்த போது மின்சாரம் பாய்ந்து மூவர் உயிரிழப்பு!

crime

விருதுநகர் அருகே கோவில் திருவிழாவிற்கு சீரியல் லைட் அமைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி 7 மாத கர்ப்பிணி தம்பதி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

விருதுநகர் அருகே காரிசேரி மாரியம்மன் கோவிலில் கடந்த 45 நாட்களுக்கு முன்னர் கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. இதையடுத்து இன்று 45வது நாள் மண்டல பூஜைக்காக கிராமத்தில் மைக் செட் மற்றும் சீரியல் லைட் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது.

மைக் செட் அமைக்கும் பணியில் அதே ஊரை சேர்ந்த திருப்பதி ஈடுபட்டிருந்தார். சீரியல் லைட் அமைத்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின் கம்பி மீது சீரியல் லைட் வயர் உரசி அதிலிருந்து ஏற்பட்ட மின் கசிவினால் மைக்செட் உரிமையாளர் திருப்பதி(28) மீது மின்சாரம் பாய்ந்தது.

0இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி லலிதா (25) திருப்பதியின் பாட்டி பாக்கியம்(65) உள்ளிட்ட 5 பேர் அவரை காப்பாற்ற முயன்றனர். அப்போது 5 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் திருப்பதி, அவரது மனைவி லலிதா,மற்றும் பாக்கியம் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் உயிரிழந்த தம்பதிக்கு 2 1/2 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் லலிதா தற்போது 7 மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது.

மேலும் திருப்பதியை காப்பாற்ற முயன்ற அவரது உடன் பிறந்த சகோதரர் தர்மர் 20, மற்றும் உறவினர் கவின்குமார் 17 ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் இச்சம்பவம் குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சபரிமலையில் விஷு பண்டிகை: கனி கண்ட பக்தர்களுக்கு கைநீட்டம் பிரசாதம்!

sabarimalai kanikandal - 2026

கேரளா சபரிமலையில் விஷு பண்டிகை: கனி கண்ட பக்தர்களுக்கு கைநீட்டம் பிரசாதம்..

உலகப் பிரசித்தி பெற்ற, சபரிமலை ஐயப்பன் கோவில் கார்த்திகை மாதம் தவிர்த்து ஒரு மாதத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே நடை திறக்கப்படும். ஆனால் ஒரு சில மாதங்களில் வரக்கூடிய பண்டிகைகளை முன்னிட்டு கோவில் நடை மற்றும் பக்தர்களுக்கு தரிசனத்திற்காக, உற்சவங்கள் நடைபெறுவதற்காக 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை கோவில் நடை திறந்திருக்கும்.

கேரளாவில் இருக்கும் உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் விஷு பண்டிகை அதாவது மலையாள வருட பிறப்பை முன்னிட்டு இன்று விஷூ கணி தரிசனம் பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். விஷு பண்டிகையின் சிறப்பை கனி காணல் என்பதாகும்.

பழங்கள், இனிப்புகள், ரூபாய் நோட்டு, ஆபரணம் மற்றும் கொன்றைபூ ஆகியவை வைத்து, விஷு பண்டிகை அன்று காலையில் அதை பார்ப்பது ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. இதன் பெயர்தான் கனி காணல் என்பதாகும்.

கேரள மக்கள் விமர்சியாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று விஷு பண்டிகை மற்றும் இதில் முக்கியமான அம்சம் விஷுக்கனி பார்ப்பதாகும்.

விஷு பண்டிகை : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த கனி காணல் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் கேரளா புத்தாண்டு அன்று விசேஷமாக மேற்கொள்ளப்படும். கோவிலில் விஷுக் கனி பார்க்கும் நிகழ்வில் கலந்து கொண்டு, தரிசனம் பெறுவதற்காகவே இலட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு செல்வார்கள். அந்த வகையில் இன்று ஏப்ரல் 14, 2025 சபரிமலையில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

உலகப் பிரசித்தி பெற்ற, சபரிமலை ஐயப்பன் கோவில் கார்த்திகை மாதம் தவிர்த்து ஒரு மாதத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே நடை திறக்கப்படும். ஆனால் ஒரு சில மாதங்களில் வரக்கூடிய பண்டிகைகளை முன்னிட்டு கோவில் நடை மற்றும் பக்தர்களுக்கு தரிசனத்திற்காக, உற்சவங்கள் நடைபெறுவதற்காக 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை கோவில் நடை திறந்திருக்கும்.

விஷு பண்டிகை 2025 : ஏப்ரல் மாதத்தில், சித்திரை 1 ஆம் தேதி, சூரியன் பெயர்ச்சி அடிப்படையில், கேரளா புத்தாண்டு கொண்டாடப்படும். மலையாள பஞ்சாங்கத்தின் அடிப்படையில் வரும் இந்த புத்தாண்டு விஷு என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும், பஞ்சாங்கத்தின் மாத பிறப்பின் அடிப்படையில் கோவில் சபரி மலை கோவில் நடை திறக்கப்பட்டு, முதல் ஐந்து நாட்களுக்கு பூஜைகள் செய்யப்படும். இதை தவிர கேரளாவின் பிரத்யேகமான பண்டிகைகளான ஓணம், விஷுப் பண்டிகை உள்ளிட்ட விசேஷ நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்.

அந்த வகையில் பங்குனி ஆராட்டு விழாவிற்காகவும் சித்திரை மாதம் வரும் விஷு பண்டிகைக்காகவும் கோவில் நடை கடந்த சில நாட்களாகவே திறந்து உள்ளது.

விஷுக்கனி பார்ப்பதற்காக இன்று அதிகாலை 4 மணி முதல் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறந்து கணி தரிசனம் காலை 7மணி வரை நீடித்தது.

ஐயப்பனை தரிசிக்க வந்த பக்தர்கள் காலை நான்கு மணி முதல் ஏழு மணி வரை கோவிலில் விஷுக்கனி தரிசனத்தையும் செய்தார்கள். இன்று புத்தாண்டு இரவு 10 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். மற்றும் இன்னும் ஐந்து நாட்களுக்கு கோவில் நடை திறந்திருக்கும்.

ஏப்ரல் 18 அன்று வழக்கமான பூஜைகள் செய்யப்பட்டு கோவில் நடை சாற்றப்படும். இதற்கு அடுத்ததாக வைகாசி மாதம் புறப்பட்டு மீண்டும் ஐந்து நாட்கள் கோவில் நடை திறக்கும் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

விசுவாவசு – தமிழ்ப் புத்தாண்டு; தலைவர்கள் வாழ்த்து

visuvavasu new year greetings copy - 2026

இன்று சூரிய நகர்வின் அடிப்படையில் நாள்காட்டியை நிர்ணயிக்கும் காலக்கணக்கீட்டைக் கடைப்பிடிக்கும் மக்கள் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடி வருகின்றன. அவற்றில் தமிழ்ப் புத்தாண்டும் ஒன்று. இன்றைய நாளை விஷு புத்தாண்டு என்று தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளத்திலும் கொண்டாடுகின்றார்கள். அதன்படி, தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

மகிழ்ச்சியான புத்தாண்டு தினத்தையொட்டி அன்பான வாழ்த்துகள்! இந்தப் புத்தாண்டு வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும். அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிக்கப்படட்டும் –  என்று எக்ஸ் தள பதிவில் தமிழில் குறிப்பிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

புத்தாண்டு திருநாளில் தமிழ்நாட்டிலுள்ள சகோதர, சகோதரிகளுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புனிதமான சடங்குகளுடன் ஒரு நம்பிக்கையோடு புத்தாண்டை நாம் வரவேற்கும் போது, இந்த நாள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புக்கான அனைத்து நன்மைகளையும் அளிக்கட்டும். – என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழில் பதிவிட்டுள்ளார்.

“தமிழ் புத்தாண்டின் விசேஷமிக்க தருணத்தில் அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கிலும் உள்ள எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாள் நமது பெருமைமிக்க பண்டைய மற்றும் வளமான தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியம், துடிப்பான நிகழ்காலம் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தின் கொண்டாட்டமாகும். புத்தாண்டு அனைவருக்கும் வளம், நல்ல ஆரோக்கியம், புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டுவரட்டும். #அமிர்தகாலத்தில் #வளர்ச்சியடைந்தபாரதம்2047 -க்கான வளர்ந்த தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான நமது கூட்டுறுதியை இது மேலும் வலுப்படுத்தட்டும்.” – என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தரணியெங்கும் வாழும் தமிழ் சொந்தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமும், அன்பும் நிரம்ப, இனிமை தரும் உறவுகள் மலர, வாழ்க்கை நம்பிக்கையோடு ஒளிர, இந்த விசுவாவசு வருடத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல தொடக்கமாக அமைய இறைவனை பிரார்த்திப்போம்! – என தமிழக பாஜக., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புத்தாண்டு, அனைவருக்கும் நல் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், அளிக்கும் ஆண்டாகவும், அனைவரின் வாழ்விலும், அன்பும், அமைதியும் பெருகும் ஆண்டாகவும், புதிய தொடக்கத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும் ஆண்டாகவும் அமையட்டும். இனிய விசுவாவசு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். – என்று தமிழக பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் வாழும் சனாதன உறவுகள் அனைவருக்கும் இனிய விசுவாவசு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!! அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், நிம்மதியும் நீக்கமற நிறைந்திருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய பிரார்த்திக்கிறேன்..!! – என பாஜக., மூத்த தலைவர் ஹெச். ராஜா குறிப்பிட்டுள்ளார்.

IPL 2025: பெங்களூர், மும்பை அணிகளின் கம்பேக் வெற்றிகள்!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் – 13.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ராஜஸ்தான் vs பெங்களூர்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை (173/4, ஜெய்ஸ்வால் 75, துருவ் ஜுரல் 35, ரியன் பராக் 30, சஞ்சு சாம்சன் 15, புவனேஷ் குமார், யஷ் தயாள், ஹேசல்வுட், க்ருணால் பாண்ட்யா தலா ஒரு விக்கட்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி  (17.3 ஓவர்களில் 175/1, பில் சால்ட் 65, விராட் கோலி ஆட்டமிழக்காமல் 62, தேவதத் படிக்கல் ஆட்டமிழக்காமல் 40, குமார் கர்திகெய சிங் 1/25) 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் யசஷ்வீ ஜெய்ஸ்வால் (47 பந்துகளில் 75 ரன், 10 ஃபோர், 2 சிக்சர்), மற்றும் சஞ்சு சாம்சன் (19 பந்துகளில் 15 ரன், 1 ஃபோர்) இருவரும் நல்ல தொடக்கம் தந்தனர்.

அதன் பின்னர் ஆட வந்த ரியன் பராக் (22 பந்துகளில் 30 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் துருவ் ஜுரல் (23 பந்துகளில் 35 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி நான்கு விக்கட் இழப்பிற்கு 173 ரன் எடுத்தது.

          174 ரன் என்ற வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் பில் சால்ட் (33 பந்துகளில் 65 ரன், 5 ஃபோர், 6 சிக்சர்) மற்றும் விராட் கோலி (45 பந்துகளில் 62 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) சிறப்பான தொடக்கம் தந்தனர். 

பில் சால்ட் 8.4ஆவது ஓவரில் ஆட்டமிழக்க, அதன் பின்னர் ஆடவந்த தேவதத் படிக்கல் (28 பந்துகளில் 40 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) கோலியுடன் இணைந்து ஆடி 17.3 ஓவர்களில் 175 ரன் எடுத்து பெங்களூரு அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.

          பெங்களூரு அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 

மும்பை vs டெல்லி

மும்பை இந்தியன்ஸ் அணி (205/5, ரியன் ரிக்கிள்டன் 41, சூர்யகுமார் யாதவ் 40, திலக் வர்மா 38, ரோஹித் ஷர்மா 18, விப்ராஜ் நிகம் 2/41, குல்தீப் யாதவ் 2/15) டெல்லி கேபிடல்ஸ் அணியை  (19 ஓவர்களில் 193, கருண் நாயர் 89, அபிஷேக் போரல் 33, கே.எல். ராகுல் 15, அஷுதோஷ் ஷர்மா 17, விப்ராஜ் நிகம் 14,  கர்ண் ஷர்மா 3/36, மிட்சல் சாண்ட்னர் 2/43, பும்ரா 1/44, ) 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா (12 பந்துகளில் 18 ரன்) ஐந்தாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ரியன் ரிக்கிள்டன் (25 பந்துகளில் 41 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்), சூர்யகுமார் யாதவ் (28 பந்துகளில் 40 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்), திலக் வர்மா (33 பந்துகளில் 59 ரன், 6 ஃபோர், 3 சிக்சர்), நமன் திர் (17 பந்துகளில் 38 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) என அனைவருமே சிறப்பாக ஆடினர்.

அதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 205 ரன் எடுத்தது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் மும்பை அணியின் ஒரு நல்ல பேட்டிங் பர்ஃபார்மன்ஸ்.

          206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவதாக விளையாட வந்த டெல்லி அணியின் தொடக்க வீரர் ஜேக் மெகர்க் இன்னிங்க்சின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் போரல் (25 பந்துகளில் 33 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) கருண் நாயர் (40 பந்துகளில் 89 ரன், 12 ஃபோர், 5 சிக்சர்) உடன் இணைந்து விளையாடி இரண்டாவது விக்கட்டுக்கு 119 ரன் சேர்த்தார். 

அதன் பிறகு விக்கட்டுகள் மள மல என விழத் தொடங்கின. கே.ஏல். ராகுல் (15 ரன்), அக்சர் படேல் (9 ரன்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (1 ரன்), விப்ராஜ் நிகம் (14 ரன்), குல்தீப் யாதவ் (1 ரன்), மோஹித் ஷர்மா (பூஜ்யம் ரன்), மிட்சல் ஸ்டார்க் ஆட்டமிழக்காமல் 1 ரன் என டெல்லி அணி வீரர்கள் மும்பை அணி வீரர்களின் பந்து வீச்சையும் ஃபீல்டிங்கையும் சமாளிக்க முடியாமல் 19 ஓவர் முடிவில் 193 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவினர்.

          மும்பை அணியின் சுழல்பந்துவீச்சாளர் கர்ண் ஷர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.  

image - 2026

13.04.2025 இரவு வரை நடந்த ஆட்டங்களுக்குப்பின்னர் புள்ளிகள் பட்டியல்

அணிமேட்ச்வெற்றிதோல்விபுள்ளிநெட் ரன் ரேட்
குஜராத்64281.081
டெல்லி54180.899
பெங்களூரு64280672
லக்னோ64280.162
கொல்கொத்தா63360.803
பஞ்சாப்53260.065
மும்பை62440.104
ராஜஸ்தான்6244-0.838
ஹைதராபாத்6244-1.245
சென்னை6152-1.554

தமிழகத்தில் பாஜக., வலிமை… இனி என்ன ஆகும்!

annamalai welcome amit sha in combatore - 2026

அண்ணாமலை தமிழக பாஜக-வின் மாநிலத் தலைவராக நீடிக்கவில்லை. அதன் வலிமை குறையுமா?

— ஆர். வி. ஆர்

தமிழக பாஜக-வில் தற்போது நடந்த மாநிலத் தலைவர் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை. போட்டியிட்ட ஒரே வேட்பாளரான நயினார் நாகேந்திரன் ஏக மனதாக அக் கட்சியின் புதிய மாநிலத் தலைவர் ஆகியிருக்கிறார்.

அண்ணாமலை மாநிலத் தலைவராக இல்லாத தமிழக பாஜக-வின் வலிமை குறையுமா? இந்தக் கேள்வி பல சாதாரண பாஜக ஆதரவாளர்களிடம் இருப்பது வியப்பல்ல. அதற்குக் காரணம் இருக்கிறது.

தமிழகத்தில் ஓட்டு வாங்கும் சக்தியை வைத்துப் பார்த்தால், திமுக மற்றும் அதிமுக பெரிய கட்சிகள். அவற்றுக்கு அடுத்த நிலைக்குத் தனது இளம் வயதில், மூன்றே முக்கால் வருடங்களில், பாஜக உயரப் பெரும் பங்களிப்பு செய்தது, கட்சியின் முந்தைய மாநிலத் தலைவர் அண்ணாமலை.

திமுக எப்படியான கட்சி? அராஜகம், அடாவடி, ஆட்சியில் முறைகேடுகள், ஹிந்து மத துவேஷம், இலைமறை காயாக இருக்கும் பிரிவினைப் போக்கு, ஆகியவை திமுக-வின் பல முகங்கள்.

தமிழகத்தில் மாறி மாறி வரும் ஆட்சிகளின் அவலங்களிலிருந்து தங்களை மீட்கும் ஒரு நம்பிக்கை முகத்தைத் தமிழக மக்கள் ஐம்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் உலகில் பார்க்க முடியவில்லை – ஒரு சில தலைவர்களிடம் அவர்கள் முன்பு பற்று வைத்தாலும். இந்தச் சூழ்நிலையில், அத்தகைய புதிய நம்பிக்கை முகமாகப் பலருக்கும் அண்ணாமலை தெரிய ஆரம்பித்தார். அதுதான் குறுகிய காலத்தில் தமிழக பாஜக-வை சாதாரண மக்களிடையே பெரிய அளவில் பிரபலப் படுத்தியது.

இத்தகைய அண்ணாமலை மீண்டும் தமிழக பாஜக-வின் மாநிலத் தலைவராக வரவில்லை என்றால், அவரால் ஈர்க்கப் பட்ட மக்கள் பலரும் பாஜக மீது சற்று அதிருப்தி கொள்வது இயற்கை. ஆனால் உண்மையில் அண்ணாமலையின் அபிமானிகளுக்கு இருக்கும் அச்சமும் கவலையும் தேவையற்றது – இது நாளுக்கு நாள் தெளிவாகிறது.

சமீபத்தில் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அண்ணாமலை பாஜக-விற்கு அளித்த மகத்தான பங்களிப்பை எழுத்து மூலம் வெளிப்படுத்தினார். தனது முதல் பதவிக் காலம் முடிந்தவுடன் ஒரு மாநிலத் தலைவர் – அதுவும் திமுக கோலோச்சும் தமிழ்நாட்டு மாநிலத் தலைவர் – பாஜக-வின் தேசியத் தலைமையிடமிருந்து தனது இளம் வயதில் இத்தகைய பாராட்டைப் பெறுவது நினைத்துப் பார்க்க முடியாதது. பாஜக-வில் அண்ணாமலைக்கான முக்கியத்துவம் இன்னும் குறையவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.

அண்ணாமலை இனி மாநிலத் தலைவராக இல்லாவிட்டாலும் அவர் முன்பு போல் மக்களிடம் நேரடியாகப் பேச முடியும், திமுக-வின் பிரதான எதிர்ப்பாளராகத் தமிழக பாஜக-வில் தொடர முடியும், அதில் சந்தேகம் வேண்டாம், என்கிற செய்தி நயினார் நாகேந்திரனின் வார்த்தைகளிலும் உடல் மொழியிலும் தெரிகிறது. பாஜக-வின் தேசியத் தலைமையும் அதே சமிக்ஞையைக் காண்பிக்கிறது. இவை அனைத்தும் அண்ணாமலை அபிமானிகளுக்கு இருக்கக் கூடிய சந்தேகத்தை முற்றிலும் போக்க வல்லவை.

இப்போது அமித் ஷா முன்னிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மீண்டும் இணைந்திருக்கிறது. 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் அந்த இரண்டு கட்சிகளும் அதிமுக தலைமையில் ஒரே கூட்டணியாகப் போட்டியிடப் போகின்றன. இந்த நேரத்தில், பாஜக-வின் தமிழக மாநிலத் தலைவர் பதவியில் அண்ணாமலையை அடுத்து நயினார் நாகேந்திரன் தேர்வாகி இருக்கிறார்.

அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று அண்ணாமலை மீண்டும் தமிழக பாஜக-வின் மாநிலத் தலைவராகத் தொடராமல் வேறு ஒருவர் அப்பதவிக்கு வந்திருக்கலாமோ என்ற சந்தேகம், அண்ணாமலை ஆதரவாளர்கள் பலருக்கு வரலாம். இந்த விஷயத்தை நாம் இப்படிப் புரிந்து கொள்வது சரியாக இருக்கும்.

அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே முன்பு வார்த்தைப் போர்கள் இருந்தன. அவரவர் கட்சி நலன் என்று கருதி அவர்கள் அப்படிப் பேசி இருப்பார்கள். ஆனால் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்து ஆட்சிக்கு வராமல், மக்கள் நலனுக்குப் பெரிதாக இரண்டு கட்சிகளும் ஒன்றும் செய்யமுடியாது, அவைகள் வளரவும் முடியாது. 2026 தேர்தல் மூலம் இன்னும் வளர வேண்டியது தமிழக பாஜக-வுக்கு மிக அவசியம்.

தேர்தல் விளையாட்டும் தேர்தல் கணக்குகளும் தனியானவை. ஒரு கிரிக்கெட் உதாரணத்தை வைத்து – அதாவது, கற்பனையான ஒரு ‘தேர்தல் கிரிக்கெட்’ உதாரணத்தின் மூலமாக – இதை விளக்கலாம்.

திமுக-வின் தேர்தல் கிரிக்கெட் அணியில் பல கட்சிகளைச் சேர்ந்த பதினோரு வீரர்கள் கூட்டாக, ஒரு கூட்டணியாக, இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். திமுக அணியில் சேராத மற்ற வீரர்கள், ஆறு பேர் மற்றும் ஐந்து பேர் ஒன்றாக ஒரே எதிர் அணியில் கூட மறுக்கிறார்கள். இருந்தாலும் தேர்தல் கிரிக்கெட் விதிகள் படி, அந்த ஆறு மற்றும் ஐந்து வீரர்கள் தனித்தனி அணிகளாக, களத்திற்கு வந்து திமுக கூட்டணியை எதிர்த்து தேர்தல் கிரிக்கெட் விளையாடலாம், அவர்கள் அப்படி ஆடுகிறார்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள்.

திமுக அணி பேட்டிங் செய்கிறது. எதிர்ப்புறம் இரண்டு பிரிவு வீரர்களும் பந்து வீசுகிறார்கள். திமுக அணியின் பதினோரு வீரர்கள் கூட்டாக 250 ரன்கள் எடுக்கிறார்கள். அந்த 250 ரன்களும் திமுக அணியின் கணக்கில் சேர்கிறது. எதிர் அணியில் உள்ள ஆறு வீரர் பிரிவு 150 ரன்கள் எடுக்க, ஐந்து வீரர் பிரிவு 125 ரன்கள் எடுக்கிறார்கள். அவர்கள் ஒற்றை அணியாக, ஒரு கூட்டணியாக, விளையாடி இருந்தால் அவர்கள் கணக்கிற்கு மொத்தமாக 275 ரன்கள் சேர்ந்து, அந்த எதிர் அணியின் பதினோரு வீரர்களும் ஜெயித்த அணியாக விளங்குவார்கள், திமுக அணி தோற்கும்.

திமுக அணியை எதிர்த்த வீரர்கள் இரண்டு பிரிவாக ஆடியதால், அந்த இரு பிரிவுகள் அவரவர் கணக்கிற்கு எடுத்த ரன்கள் (150 மற்றும் 125) தனித் தனியாக திமுக அணியின் 250-ஐ விடக் குறைவு என்பதால், அந்த இரு பிரிவினரும் தோற்றார்கள், திமுக அணி ஜெயித்தது என்றாகும். இதுதான் தேர்தல் கிரிக்கெட் விதிகள். இப்படித்தான் தேர்தல் கிரிக்கெட் வீரர்கள் இந்த ஆட்டத்தை ஆட முடியும். இதனால் தான் அதிமுக மற்றும் பாஜக ஒரு கூட்டணியாகச் சேர்ந்து, இன்னும் சில கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு, திமுக கூட்டணியை வலுவாகத் தேர்தலில் எதிர்கொள்ள வேண்டும்.

அண்ணாமலை ஆதரவாளர்கள் புரிந்துகொள்ள வேண்டிய இன்னும் ஒன்று இருக்கிறது.

அண்ணாமலை பாஜக-வின் மாநிலத் தலைவராக இல்லாமல் போவதை அதிமுக தலைவர் பழனிசாமி விரும்புகிறார் என்றே இருக்கட்டும். அது பாஜக-வுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் இப்போது பொருட்டல்ல. எது முக்கியம் என்றால், அண்ணாமலை நினைப்பதைத் தேர்தல் கிரிக்கெட்டில் திமுக அணிக்கு எதிராக முயன்று பார்க்க முடியும் – கேப்டனாக இல்லாவிட்டாலும் சச்சின் டெண்டுல்கர் அடித்து ஆடி இந்திய அணிக்கு ரன்கள் சேர்த்த மாதிரி. கூட்டணி சேர்ந்ததால் அதிமுக-வோடு பாஜக-வும் வெற்றி பெறும் வாய்ப்பு உண்டு. மற்ற அனைத்தும் இப்போது இரண்டாம் பட்சம். அது அதற்குக் காலம் உண்டு.

என்ன ஆனாலும் அதிமுக-பாஜக கூட்டணியால் 2026 தேர்தலுக்குப் பின் தமிழக பாஜக-வுக்கு அதிக எம்.எல்.ஏ-க்கள் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசம், அரசியலில் அதிக வெளிச்சமும் கிடைக்கும். அண்ணாமலையின் சக்தியும் அதிகரிக்கும்.

கட்சித் தலைவர் என்ற பதவியில் இல்லாமல் எப்படி மோடிக்கும் அமித் ஷாவுக்கும் தேசிய அளவில் மதிப்பும் மரியாதையும் உள்ளதோ, அதேபோல் அண்ணாமலைக்கும் தமிழக அளவில் தனி மதிப்புக் கூடி வருகிறது. வரும் வருடங்களில் அது பலப்படும். இதில் அவருக்குத் துணையாக பாஜக-வின் தேசியத் தலைமையும் இருக்கிறது.

அண்ணாமலை முன்பு முன்னிருந்து செய்ததை, இப்போது பக்கவாட்டிலிருந்து செய்யப் போகிறார். அதை முற்றிலும் உணர்ந்துதான், அவரே புதிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாகப் பேசி இருக்கிறார். நயினார் நாகேந்திரனை வாழ்த்தி, அண்ணாமலையின் அபிமானிகள் தொடர்ந்து பாஜக-வுக்கு ஆதரவு தரவேண்டும். பாஜக மூலமாகத் தமிழ்நாட்டுக்கு விடிவு பிறக்கும் நேரம் வந்து கொண்டிருக்கிறது. வேறென்ன வேண்டும்?

Author: R. Veera Raghavan Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com

நெல்லை மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் தேதி நீட்டிப்பு!

railway news - 2026
#image_title

தென்காசி, ராஜபாளையம் விருதுநகர் மதுரை வழி திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு வண்டி ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சில வாரங்களாக நிறுத்தப்பட்ட பலரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்ற திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் கோடைக்கால வாராந்திர சிறப்பு இரயிலாக சேவை(06029/06030) வழி தென்காசி ராஜபாளையம் விருதுநகர் மதுரை வழியாக ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை களில் இயங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தடம் எண் 06030 திருநெல்வேலி மேட்டுப்பாளையம்
13.04.25 முதல் 04.05.25 வரையும்
தடம் எண் 06029 மேட்டுப்பாளையம் திருநெல்வேலி
14.04.25 முதல் 05.05.25 வரையும் இயங்கும்.என அறிவிக்கப்பட்டு
முன்பதிவு (10.04.25) காலை 08.00 மணிக்குத் துவங்கியுள்ளது.

இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க நெல்லை தென்காசி விருதுநகர் மாவட்ட பயணிகள் வர்த்தகர்கள் மாணவர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வண்டி ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் திருமஞ்சனம்!

srivilliputhur andal thirumanjanam - 2026

ஶ்ரீ ஆண்டாள் ஶ்ரீ ரெங்கமன்னார் பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவத் திருவிழாவின் 11 – ம் திருநாள் நிகழ்வாக இன்று ஞாயிறுகிழமை பங்குனி 30 வாழைக்குள தெருவில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரெங்கமன்னார் திருமஞ்சனம் சேவை நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்து பிரசாதம் பெற்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ திருத்தலம் ஆகும். இங்கு கோயில் கொண்டு அருள் பாலிக்கும் ஆண்டாளுக்கும் ரங்கமன்னார்க்கும் பங்குனி மாதம் உத்திர நன்னாள் அன்று திருக்கல்யாணம் நடைபெற்றது என்பது ஐதீகம்.

இந்த திருக்கல்யாணம் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு திருக்கல்யாண திருவிழா கடந்த 3ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து காலை இரவு வேளைகளில் ஆண்டாள் ரங்கமன்னார் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆண்டாள் திருக்கல்யாண திருவிழா 11ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது.

காலை 6 மணிக்கு ஆண்டாளும் ரங்க மன்னரும் திருத்தேர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து கோபாலா கோவிந்தா என கோஷம் முழுங்கியவாறு ரதத்தினை நான்கு ரத வீதிகள் வழியே இழுத்து வந்து நிலையம் சேர்த்தனர்.

பின்னர் மாலை 3 மணிக்கு ஆண்டாள் அங்க மணிகளுடன் புறப்படுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.மாலை 5:30 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் கன்னியா லக்னத்தில் ஆண்டாள் ரங்க மன்னார் திருக்கல்யாண திருவிழா கோவில் சன்னதி முன்பு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான அலங்கார பந்தலில் வைத்து சிறப்பாக நடைபெற்றது‌.

கோயில் அர்ச்சகர் பிரபு என்ற வெங்கட்ராம பட்டாச்சாரியார் திருக் கல்யாணத்தை நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கல்யாணம் முடிவில் பக்தர்களுக்கு மாங்கல்ய பிரசாத பாக்கெட் அன்னதானம் வழங்கப்பட்டது.

பல்வேறு இடங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. திருக்கல்யாணம் முடிவில் ஆண்டாள் ரங்கம்மன்னார்க்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனை காட்டப்பட்டது. இதனை முன்னிட்டு ஆண்டாள் ரங்க மன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் அலங்காரம் தீபாரதனை காட்டப்பட்டது.

ஶ்ரீ ஆண்டாள் ஶ்ரீ ரெங்கமன்னார் பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவத் திருவிழாவின் 11 – ம் திருநாள் இறுதி நிகழ்ச்சியாக இன்று ஞாயிறுகிழமை பங்குனி 30 வாழைக்குள தெருவில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரெங்கமன்னார் திருமஞ்சனம் சேவை நடைபெற்றது.திரளான பக்தர்கள் தரிசனம் செய்து பிரசாதம் பெற்றனர்.

IPL 2025: அதிரடி காட்டி ரசிகர்களுக்கு விருந்தளித்த அபிஷேக் சர்மா!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் – 12.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

லக்னோ vs குஜராத்

குஜராத் அணியை (180/6, ஷுப்மன் கில் 60, சாய் சுதர்ஷன் 56, ரூத்ர்ஃபோர்ட் 22, ஜாஸ் பட்லர் 16, ஷாருக் கான் ஆட்டமிழக்காமல் 11, ஷர்துல் தாகூர் 2/34, ரவி பிஷ்னோய் 2/36, திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான் தலா ஒரு விக்கட்) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி  (19.3 ஓவர்களில் 186/4, நிக்கோலஸ் பூரன் 61, எய்டன் மர்க்ரம் 58, ஆயுஷ் பதோனி ஆட்டமிழக்காமல் 28, ரிஷப் பந்த் 21, பிரசித் கிருஷ்ணா 2/26, ரஷீத் கான், வாஷிங்க்டன் சுந்தர் தலா ஒரு விக்கட்) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த குஜராத் டைடன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் (37 பந்துகளில் 56 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் ஷுப்மன் கில் (38 பந்துகளில் 60 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) சிறப்பாக ஆடினர்.

முதலில் ஷுப்மன் கில் 13ஆவது ஓவரில் ஆட்டமிழக்க, அதன் பின்னர் 14ஆவது ஓவரில் சாய் சுதர்ஷன் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 122/2. மீதமிருந்த 6 ஓவர் 5 பந்துகளில் 58 ரன்னுக்கு நான்கு விக்கட்டுகளை குஜராத் அணி இழந்தது மாபெரும் சோகம். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 6 விக்கட் இழப்பிற்கு 180 ரன் எடுத்தது.

          181 என்ற இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய லக்ணோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இன்று மிட்சல் மார்ஷ் ஆடாததால் ரிஷ்ப் பந்த் (18 பந்துகளில் 21 ரன், 4 ஃபோர்) தொடக்க வீரராக இறங்கினார். அவரொடு களமிறங்கிய எய்டன் மர்க்ரம் (31 பந்துகளில் 58 ரன், 9 ஃபோர், 1 சிக்சர்) சிறப்பாக ஆடினார்.

ரிஷப் ஆட்டமிழந்த பின்னர் ஆடவந்த நிக்கோலஸ் பூரன் (34 பந்துகளில் 61 ரன், 1 ஃபோர், 7 சிக்சர்) வழக்கம்போல் சிறப்பாக ஆடினார். அதன் பின்னர் ஆயுஷ் பதோனி (20 பந்துகளில் 28 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), டேவிட் மில்லர் (11 பந்துகளில் 7 ரன்), அப்துல் சமத் (3 பந்துகளில் 3 ரன்) ஆகியோர் ஆட்டத்தை வெற்றியோடு முடித்தனர். 19.3 ஓவர்களில் லக்னோ அணி 186 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

          ஆட்ட நாயகனாக லக்னோ அணியின் மட்டையாளர் எய்டன் மர்க்ரம் அறிவிக்கப்பட்டார்.    

பஞ்சாப் vs ஹைதராபாத்

பஞ்சாப் கிங்க்ஸ் அணியை (245/6, பிரியான்ஷ் ஆர்யா 36, பிரப்சிம்ரன் சிங் 42, ஷ்ரேயாஸ் ஐயர் 82, நேஹல் வதேரா 27, மார்குச் ஸ்டோயினிஸ் ஆட்டமிழக்காமல் 34, ஹர்ஷல் படேல் 4/42, ஈசன் மலிங்கா 2/45) சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி (18.3 ஓவர்களில் 247/2, ட்ராவிஸ் ஹெட் 66, அபிஷேக் ஷர்மா 141, ஹென்றி கிளாசன் ஆட்டமிழக்காமல் 21, இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 9, அர்ஷதீப் சிங், சாஹல் தலா ஒரு விக்கட்) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. தொடக்க் வீரர்கள்  பிரப்சிம்ரன் சிங் (23 பந்துகளில் 42 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்), மற்றும் பிரியான்ஷ் ஆர்யா (13 பந்துகளில் 36 ரன், 2 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பான தொடக்கம் தந்தனர்.

அதன் பின்னர் ஆட வந்த ஷ்ரேயாஸ் ஐயர் (36 பந்துகளில் 82 ரன், 6 ஃபோர், 6 சிக்சர்), நெஹல் வதேரா (22 பந்துகளில் 27 ரன், 2 ஃரன் சேர்க்கையைத் துரிதப்படுத்தினர். அவருக்குப் பின்னர் ஆட வந்த ஷஷாங்க் சிங் (2 ரன்), கிளன் மேக்ஸ்வெல் (3 ரன்) இருவரும் இன்று சரியாக ஆடவில்லை.

18ஆவது ஓவரில் மேக்ஸ்வெல், ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் ஆட்டமிழக்க மார்கஸ் ஸ்டோயினிஸ் மற்றும் மார்கோ ஜேன்சன் இருவரும் ஆடவந்தனர். 20ஆவது ஓவரில் கடைசி நான்கு பந்துகளையும் ஸ்டோயினிஸ் சிக்சர் அடித்தார்.

இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளரான முகமது ஷமி தனது நான் கு ஓவர்களில் 75 ரன் கொடுத்தார். மிக மோசமான பந்துவீச்சு. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது. ளில் 219/6 என உயர்த்தினர்.   

          20 ஓவர்களில் 246 ரன் என்ற கடினமான வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆட வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் (37 பந்துகளில் 66 ரன், 9 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் அபிஷேக் ஷர்மா (55 பந்துகளில் 141 ரன், 14 ஃபோர், 10 சிக்சர்) இருவரும் தடாலடியான தொடக்கம் தந்தனர்.

ட்ராவிஸ் ஹெட் 13ஆவது ஓவரிலும் அபிஷே ஷர்மா 17ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். அபிஷேக் ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர் 222/2. அடுத்த 13 பந்துகளில் வெற்றிக்குத் தேவையான 24 ரன்களை எடுத்து ஹதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. 

          ஆட்ட நாயகனாக ஹைதராபாத் அணியின் மட்டையாளர் அபிஷேக் ஷர்மா அறிவிக்கப்பட்டார்.

பாஜக., மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்பு!

nainar nagendran as bjp leader - 2026

தமிழ்நாட்டில் பாஜக.,வின் உட்கட்சித் தேர்தல் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது. கிளைகள், மண்டல், மாவட்டம் என்று கட்சியின் பல்வேறு மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.  இறுதியாக மாநிலத் தலைவர், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில், தமிழகத்தில் திமுக.,வை வீழ்த்தி, தேஜ., கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்ற கருத்தில் மத்திய பாஜக. தலைமை காய் நகர்த்தியது. 

அப்போது, தமிழக பாஜக., தலைவராக இருந்த அண்ணாமலை, ஏற்கெனவே தனது பிரசாரங்களிலும் கடந்த தேர்தல் நேரத்திலும் எடப்பாடி தலைமையிலான அதிமுக.,வுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்தால், நான் பாஜக., தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிவிடுவேன் என்று கூறியிருந்தார். தனது கொள்கையில் தீவிரத்துடன் சமரசமின்றி இருந்த கே.அண்ணாமலையிடம் அதிமுக., கூட்டணி குறித்து பாஜக., மேலிடம் பேசியது. அப்போது அண்ணாமலையின் கருத்தை அறிந்த மேலிடம், வேறு புதிய தலைவரைத் தேர்வு செய்யும் கட்டாயத்துக்கு உள்ளானது. 

அதன்படி, தமிழக பாஜக.,வுக்கு புதிய மாநிலத் தலைவரைத் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கின. இந்நிலையில், வியாழன் அன்று சென்னைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமீத் ஷா, பரபரவென்று சில அரசியல் நகர்வுகளில் ஈடுபட்டார். முதலில் தமிழிசை சௌந்தர்ராஜன் வீட்டுக்குச் சென்று அவரது தந்தை குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விட்டு, பின்னர் எஸ்.குருமூர்த்தி இல்லத்துக்குச் சென்று பாஜக., உட்கட்சி விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தி விட்டு, அதிமுக., உடன் கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அண்ணாமலையையும் உடன் வைத்துக் கொண்டு அறிவித்தார். 

பின்னர் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்றது. மதியம் 2 மணி முதல் மாலை 4 மணிவரை தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் மனுதாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதில், தற்போதைய பாஜக., சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு அளித்திருந்தார். இதை அடுத்து போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்பட்டார். 

புதிய தலைவரை அதிகார பூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சியும், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதும் இன்று மாலை 5 மணி அளவில் சென்னை, வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்க, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மூத்த தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே மனு செய்து இருப்பதாகவும், அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் மாநில தேர்தல் அதிகாரியான சக்கரவர்த்தி அறிவித்தார். 

அதைத் தொடர்ந்து மேலிட பார்வையாளர் கிஷன் ரெட்டி முன்னிலையில் தேசிய தேர்தல் பொறுப்பாளர் தருண்சுக் தமிழக பாஜக.,மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்தார்.  இதை அடுத்து, நயினார் நாகேந்திரன் உறுதிமொழி வாசித்து தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டது. அதன்படி,

1.திருவள்ளுர் – ஏழுமலை
2.சென்னை வடக்கு – சதீஷ்குமார்
3.சென்னை தெற்கு – தமிழிசை சௌந்தர்ராஜன்
4.மத்திய சென்னை – டால்பின் ஸ்ரீதர்
5. ஸ்ரீபெரும்புதூர் – லோகநாதன்
6.காஞ்சிபுரம் – ஸ்ரீ நடேசன்
7.அரக்கோணம் – நாராயணன் திருப்பதி
8.வேலூர் – கார்த்தியாயினி
9.கிருஷ்ணகிரி – நரேந்திரன்
10.தர்மபுரி – ஸ்ரீ நரசிம்மன்
11.திருவண்ணாமலை – ஏழுமலை
12.ஆரணி – வெங்கடேசன்
13.விழுப்புரம் – சிவப்பிரகாசம்
14.கள்ளக்குறிச்சி – அசோக் ஜெயின்
15.சேலம் – அண்ணாதுரை
16.கோவை – அண்ணாமலை
17.நாமக்கல் – டாக்டர்.கே.பி.ராமலிங்கம்
18.ஈரோடு – கனக சபாபதி
19.திருப்பூர் – வானதி சீனிவாசன்
20.நீலகிரி – எல்.முருகன்
21.பொள்ளாச்சி – முருகானந்தம்
22.கரூர் – கராத்தே தியாகராஜன்
23.திண்டுக்கல் – திருமலை சுவாமி
24.திருச்சி – வினோஜ் பி செல்வம்
25.பெரம்பலூர் – ஏஜி சம்பத்
26 கடலூர் – பால் கனகராஜ்
27.சிதம்பரம் – டாக்டர்.பிரேம் குமார்
28.மயிலாடுதுறை – S.G.சூர்யா
29.நாகப்பட்டினம் – எம்.பழனியப்பன் புரட்சி கவிதாசன்
30.தஞ்சாவூர் – கருப்பு. முருகானந்தம்
31.சிவகங்கை – எச்.ராஜா
32.மதுரை – பேராசிரியர்.சீனிவாசன்
33.தேனி – அஸ்வத்தாமன்
34.விருதுநகர் – கரு.நாகராஜன்
35.ராமநாதபுரம் – நரசிங்க பெருமாள்
36.தூத்துக்குடி – சசிகலா புஷ்பா
37.தென்காசி – மகாராஜன்
38.திருநெல்வேலி – சரத்குமார்
39.கன்னியாகுமரி – பொன்.இராதா கிருஷ்ணன்

பொன்முடியின் ஆபாசப் பேச்சு; பாதிக் காரணம், திமுக தலைவர் ஸ்டாலின்!

ponmudi - 2026
#image_title

— ஆர். வி. ஆர்

திமுக-வின் உயர் மட்டத் தலைவர்களின் பொதுவான குணம் இது: ஹிந்து மதத்தை இடித்துப் பேசுவது, இழித்துப் பேசுவது. கிறிஸ்துவ மதத்தையும் இஸ்லாம் மதத்தையும் போற்றிப் பேசுவது, அந்த மதத் தலைவர்களிடம் குழைந்து பணிந்து நடப்பது. திமுக-வின் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் மாநில அமைச்சரான பொன்முடியும் இதில் ஒருவர்.

மிக அநாகரிகமாக, ஆபாசமாக, பெண்கள் கூடி இருக்கும் அவையில், பொன்முடி சமீபத்தில் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. ஹிந்து மத சம்பிரதாயங்களான சைவத்தையும் வைணவத்தையும் குறிப்பிட்டு ஏதோ கீழ்த்தரமாகப் பேசி, கேட்பவர்கள் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தார் பொன்முடி. திமுக-வின் இன்னொரு துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியே கண்டனம் தெரிவிக்கும் வகையில் இருந்தது பொன்முடியின் எட்டாந்தரப் பேச்சு.

பொன்முடியின் ஆபாசப் பேச்சைத் தொடர்ந்து, திமுக-வின் தலைவர் மு.க ஸ்டாலின் பொன்முடியைத் துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி இருக்கிறார் – காரணம் குறிப்பிடாமல். பொன்முடி இதுவரை தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை. தெரிவித்தாலும் அது போலியாக இருக்கும்.

தனது ஆபாசப் பேச்சால் கட்சிப் பொறுப்பில் இருக்கும் தகுதியைப் பொன்முடி இழந்தார், ஆகையால் அவருடைய கட்சிப் பதவி பறி போனது என்றாகிறது. கட்சிப் பொறுப்புக்கு லாயக்கில்லாத பொன்முடி, அமைச்சர் பதவிக்கும் லாயக்கில்லாதவர் ஆயிற்றே? சரி சரி, கண்துடைப்புக்காக எடுத்த நடவடிக்கையில் லாஜிக் பார்க்க முடியுமா?

கீழ்த்தரமாக, ஆபாசமாகப் பொதுமேடையில் பேசிய பொன்முடி, அனுபவமில்லாத இளவயதுக் காரரா? படிப்பறிவும் பெரிதாக இல்லாதவரா? இல்லை. அவருக்கு வயது 75 ஆகப் போகிறது. திமுக-வின் சீனியர் தலைவர்களில் ஒருவர். 18 வருடங்கள் கல்லூரி ஆசிரியராக வேலை செய்தவர். இதையும் நம்புங்கள்: அவர் மூன்று துறைகளில் எம்.ஏ, அது தவிர பி.எட், பி.எல் மற்றும் பி.எச்.டி பட்டங்கள் பெற்றவர். என்ன இருந்து என்ன? கடைசியில் அவர் ஒரு முன்னணி திமுக தலைவர், கட்சித் தலைமைக்கு நம்பிக்கையானவர். அவர்களுக்குள் அதில் நிறைய விஷயம் இருக்கிறது.

நினைத்துப் பாருங்கள். தமிழகத்தில் ஒரு பாஜக தலைவரோ காங்கிரஸ் தலைவரோ பொன்முடி பாணியில் ஆபாசமாக, ஹிந்து மதத்தை மலிவாக இழித்தும், பேசியிருக்க முடியுமா? முடியாது. அதற்குக் காரணம், அது போன்ற அருவருப்பான பேச்சுகளை பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தேசியத் தலைமையில் உள்ள தலைவர்கள் பேசுவதில்லை. ஆனால் திமுக-வின் தலைமை அப்படி அல்ல.

நீங்கள் ஒரு அமைப்பில் பணி செய்கிறீர்கள், அந்த அமைப்பின் தலைவர் நாகரிகமாகப் பேசுகிறவர் என்றால் உங்களுக்கே பிறரிடம் அநாகரிகமாகப் பேசக் கூச்சமாக இருக்கும். ‘அநாகரிகமாகப் பேசினால் தலைமையின் கண்டனத்திற்கு நாம் ஆளாவோம், இந்த அமைப்பிலும் நாம் வளர முடியாது’ என்ற உள்ளுணர்வு உங்களிடம் இயற்கையாக இருக்கும். அப்படியான உள்ளுணர்வு கொண்டவர்கள் தான் அந்த அமைப்பிலும் வந்து சேருவார்கள்.

நீங்கள் பணி செய்யும் அமைப்பின் தலைவரே அநாகரிகமாகப் பேசுகிறவர் என்றால் நீங்களும் பிறரிடம் அநாகரிகமாகப் பேச முனைவீர்கள். ‘அநாகரிகமாகப் பேசினால் நாம் தலைமையால் மெச்சப் படுவோம், இந்த அமைப்பிலும் எளிதாக வளரலாம்’ என்ற உள்ளுணர்வு உங்களுக்கு இயல்பாக வரும் – ஒரு ரவுடிக் கூட்டத்தில் உள்ள மாதிரி. அப்படியான உள்ளுணர்வு கொண்டவர்கள் அந்த அமைப்பில் அதிகம் வந்து சேருவார்கள். அப்படித் திமுக-வில் சேர்ந்து வளர்ந்தவர் பொன்முடி.

திமுக தலைவர்களின் முறைகேடுகளும் முறையற்ற பேச்சுகளும், ஹிந்து மத விரோதப் போக்கும், சமீப காலமாகத் தமிழக பாஜக-வால் கடுமையாக எதிர்க்கப் படுகின்றன. அதனால் பேச்சு அளவிலாவது இதில் திமுக தலைமை சற்றுப் பின் வாங்கி வருகிறது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலும் நடக்கப் போகிறது.

இந்த நேரத்தில், ஹிந்து மதத்தை இழித்துப் பேசுவது, ஆபாசச் சொற்கள் பேசுவது ஆகிய செயல்களைத் திமுக காரண காரியமாகக் கட்சிக்குள் சற்று மட்டுப் படுத்த விரும்பும். அப்படி இருக்கையில் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பேசிய அருவருப்பான பேச்சு, திமுக தலைவர் ஸ்டாலினையே பாதித்திருக்கும். அதனால் பொன்முடியின் கட்சிப் பதவி பறிபோயிருக்கிறது.

சிறிது பள்ளிப் படிப்பு மட்டும் படித்த காமராஜ், அன்றைய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கண்ணியமான பேச்சுக்கள் பேசிய பெருந்தலைவராக விளங்கினார். பொறியியல் படிப்பு மற்றும் எம்.பி.ஏ படித்து ஐ.பி.எஸ்-ஸிலும் தேர்வான அண்ணாமலை இன்று ஒரு பாஜக தலைவராக நாகரிகமாகப் பேசுகிறார். ஆனால் பதினெட்டு ஆண்டுகள் கல்லூரி ஆசிரியராக இருந்த பொன்முடி, எம்.ஏ, பி.எட், பி.எல், பி.எச்.டி என்று பல கல்விப் படங்கள் பெற்ற பொன்முடி, காது கூசும் கீழ்த்தரமான பேச்சை – அதுவும் ஹிந்து மதத்தை அநாகரிகமாகத் தொடும் பேச்சை – பேசக் கூடியவர் என்றால் என்ன அர்த்தம்?

நாகரிகமான சிந்தனையும் பேச்சும் கொண்டவர்கள் திமுக-வில் உயர்வது விதி விலக்கானது, இயல்பானது அல்ல. தரம் தாழ்ந்தவர்கள் திமுக-வில் உயர்வதற்குக் காரணம், அந்தக் கட்சியின் தலைவர் பதவி விகித்தவர்கள் காண்பித்த முன்மாதிரி. அவர்களில் திமுக-வின் முந்தைய நெடுநாள் தலைவர் கருணாநிதி முக்கியமானவர். அவரது புதல்வர் ஸ்டாலினும் முடிந்தவரை தந்தைக்கு இதில் ஈடுகொடுக்க அவ்வப்போது முனைகிறார் – தந்தையின் வீரியம் ஸ்டாலினிடம் இல்லை என்றாலும்.

கிட்டத் தட்ட ஏழு வருடங்களாகத் திமுக-வின் தலைவர் பதவியில் இருப்பவர் ஸ்டாலின். அவர் நினைத்தால், அதற்கான உறுதி அவரிடம் இருந்தால், இந்த ஏழு வருடங்களில் அவர் திமுக-வினரின் கீழ்த்தர அநாகரிகப் பேச்சுகளுக்குத் தடை விதித்திருக்கலாம், அவரும் அந்தத் தடையைக் கடைப் பிடித்திருக்கலாம். ஆனால் ஸ்டாலின் அதைச் செய்யவில்லை. ஏனென்றால் அவரும் திமுக-வின் கலாசாரத்தை உயர்த்திப் பிடிப்பவர்.

அந்நியரைக் கடிக்க உங்கள் நாயை நீங்கள் அனுமதித்து ரசித்தால், அது அடுத்தவரை எந்த அளவு கடிக்கும் என்பதை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது. அது ஒருவரைக் கன்னா பின்னாவென்று கடித்த பின், ஊருக்காக நீங்கள் விரல் அசைத்து அதைக் கண்டிக்கலாம். ஆனாலும் அது உங்கள் அருமைப் பிராணி. நீங்கள் அதற்கு வேண்டிய இறைச்சி கிடைக்க வழி செய்வீர்கள். உங்களுக்கு வேண்டியது உங்களுக்குக் கிடைக்க அது துணையாக இருக்கும், காவலாக நிற்கும். பிறகென்ன?

Author: R. Veera Raghavan Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com