Home Blog Page 115

கழுத தேஞ்ச கதையா மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்! இனி வெறும் எஞ்சின் மட்டும் ஓடுமோ?

railway news - 2026
#image_title

போகிற போக்கைப் பார்த்தால் இந்த செங்கோட்டை – மயிலாடுதுறை செங்கோட்டை ரயிலுக்கு நாளுக்கு நாள் பெட்டிகள் எண்ணிக்கையைக் குறைத்து தற்போது வெறும் பத்து பெட்டிகளுடன் இயங்கும் ரயில் நாளடைவில் வெறும் இன்ஜின் மட்டும் இயங்குமோ என்ற அச்சம் பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

எப்போது இந்த ரயிலுக்கு விடிவுகாலம் வருமோ என பயணிகள் ஏக்கத்தில் உள்ளனர். 16 பெட்டிகளுடன் விழாக் காலங்களில் கூடுதல் இரண்டு பெட்டிகளும் கொண்டு இயங்கிய மதுரை செங்கோட்டை பயணிகள் ரயில் மற்றும் 16 பெட்டிகளுடன் இயங்கிய திண்டுக்கல் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் இரண்டையும் இணைத்து 2022 அக்டோபர் முதல் வெறும் 12 சில நேரங்களில் 10 பெட்டிகளுடன் மட்டும் இயங்கும் செங்கோட்டை – மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில் குறைந்தபட்சம் 18 பெட்டிகளாக்கி இரண்டு ரிசர்வேஷன் கோச்சுக்களும் ஏற்படுத்தி தர பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

திருநெல்வேலியில் இருந்து 80 கிலோ மீட்டர் தூரமுள்ள செங்கோட்டைக்கு 12 பெட்டிகளுடன் இயங்கும் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகளை சேர்த்து 16 பெட்டிகளுடன் இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது..ஆனால் விட்ட நாள் முதல் பயணிகளின் குமுறலாக உள்ள செங்கோட்டை மயிலாடுதுறை செங்கோட்டை விரைவு ரயிலில் எப்போது பெட்டிகள் எண்ணிக்கை அதிகரித்து இயக்கப்படும் என தென்காசி கொல்லம் திருவனந்தபுரம் விருதுநகர் மதுரை மாவட்ட பயணிகள் பெரும் ஏக்கத்துடன் உள்ளனர்.

செங்கோட்டையிலிருந்து மதுரை சென்ற பயணிகள் ரயில் திண்டுக்கல் மயிலாடுதுறை பயணிகள் ரயிலை இணைத்து 450 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் செங்கோட்டை மயிலாடுதுறை செங்கோட்டை ரயிலில், 10 பெட்டிகள் மட்டும் உள்ள நிலையில் மக்கள் சிரமப்பட்டு பயணிக்கின்றனர்.

மதுரை- – செங்கோட்டை வழித்தடத்தில் தினமும் 3 நேரம், 16முதல்18 பெட்டிகளுடன் பயணிகள் ரயில் இயங்கி வந்தது. இதனால் தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்ட மக்கள் பயணித்து வந்தனர். மதுரையில் இருந்து மயிலாடுதுறை/ஈரோடுக்கு தினமும் ஒரு ரயில் இயங்கியது.

திண்டுக்கல்லில் இந்த ரயில் இரண்டாக பிரிக்கப்பட்டு ஒரு பாதி ஈரோடுக்கும், மற்றொரு பாதி மயிலாடுதுறைக்கும் செல்லும். இந்நிலையில் மயிலாடுதுறை– திண்டுக்கல், மதுரை- – செங்கோட்டை இரு ரயில்களையும் இணைத்து செங்கோட்டை– மயிலாடுதுறை ரயிலாக தற்போது இயங்கி வருகிறது.

16பெட்டிகளுடன் இயங்கிய மதுரை – செங்கோட்டை ரயில் மயிலாடுதுறை வரை நீட்டிக்கப்பட்ட பிறகு 10 பெட்டிகளாக குறைக்கப்பட்டது. இந்த ரயிலில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. மக்கள் உயிரை பணயம் வைத்து படியில் தொங்கிக்கொண்டு பயணித்து வருகின்றனர்.

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 18 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரிவருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து 80 கிலோமீட்டர் தூரமுள்ள செங்கோட்டைக்கு 12 பெட்டிகளுடன் இயங்கிய பயணிகள் ரயிலில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் ஏப். 24ல் மதுரையில் நடந்த எம்.பிக்கள் ஆலோசனை கூட்டத்தில் திருநெல்வேலி காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் ப்ரூஸ் விடுத்த கோரிக்கையை ஏற்று மறுநாளே கூடுதலாக 4 பெட்டிகளை சேர்த்து இயக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

ஆனால், செங்கோட்டையில் இருந்து 450 கிலோமீட்டர் தூரம் உள்ள மயிலாடுதுறைக்கு இயங்கும் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பதற்கு பதிலாக, இருந்ததையும் குறைத்து இந்த ரயில் இயங்குவதால் மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட மக்கள் சாதாரண நாட்களில் கூட உட்கார இடம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

இது குறித்து ரயில் பயணிகள் சங்கங்கள், மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

எனவே, திருநெல்வேலி எம்.பி.யைபோல் தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, மயிலாடுதுறை தொகுதி எம்.பி.க்களும் ரயில்வே உயர் அதிகாரிகளை அழைத்து வந்து மக்களுடன் ரயிலில் பயணித்து அவர்களின் சிரமங்களை உணரச் செய்து, கூடுதலாக 6 பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

தென்கரை மூலநாத ஸ்வாமி கோயிலில் சித்திரை திருவிழா முகூர்த்தக் கால் நடல்!

chozhavanthan tenkarai temple panthakal vaibhavam - 2026

சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி மூலநாத சாமி கோவில் சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் அமைந்துள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் உடனுறை திரு மூலநாத சுவாமி திருக்கோவில் சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கொடி மரத்திற்கு பால் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து சாமி திருவீதி உலா வரும் சப்பர தேருக்கும் அபிஷேகம் நடைபெற்றது

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகின்ற 8ம் தேதியும் திருத்தேர் ஊர்வலம் 9ஆம் தேதியும் அதனைத் தொடர்ந்து 10ஆம் தேதி தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறும். ஏற்பாடுகளை செயல் அலுவலர் கார்த்திகை செல்வி மற்றும் தென்கரை கிராமத்தினர் செய்து வருகின்றனர்.

சோழவந்தான் திரௌபதை அம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்!

chozhavanthan draupadi amman temple kalyana utsavam - 2026

சோழவந்தான் திரௌபதை அம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

சோழவந்தான் திரவுபதிஅம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மேளதாளத்துடன் வடக்கு ரத வீதி வெள்ளாளர் உறவின் முறை சங்க தலைவர் சுகுமாரன் தலைமையில், நிர்வாகிகள் முன்னிலையில் பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். திரௌபதை அம்மன் அர்ச்சுனன் அலங்கரித்து கோவில் வளாகத்தில் சுற்றி வந்தனர்.

திருமண மேடையில் வந்து திருமண கோலத்தில்அலங்காரம் செய்தனர். இதை தொடர்ந்துபிரசாந்த் சர்மா தலைமையில் திருக்கல்யாண யாகபூஜை நடந்தது. பரம்பரையை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி,ஜவஹர்லால்,குப்புசாமி ஆகியோர் மாப்பிள்ளை விட்டார், பெண்வீட்டாராக இருந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்துதிருமணத்தை நடத்தி வைத்தனர்.

அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசாதம், முன்னாள் நிர்வாக பரம்பரை அறங்காவலர் ஆதிமூலம்பிள்ளை குடும்பத்தினர் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.,

பேரூராட்சி தலைவர் ஜெயராமன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் எம்.கே.முருகேசன்,மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல் சத்தியபிரகாஷ், வார்டு கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன், செல்வராணிஜெயராமச்சந்திரன், நிஷா கௌதமன், கோவில் பணியாளர் கவிதா, மற்றும் கோவிலைச் சேர்ந்தவர்கள் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இரவு அம்மனும் சுவாமியும் யானை வாகனத்தில் எழுந்தருளி கண்ணப்பர் ஒயிலாட்ட குழுவினருடன் வீதிஉலா நடந்தது. உபயதார் சிவஞானம் பிள்ளை குமாரர் அய்யப்பன் பிரசாதம் வழங்கினார்.

இன்று மாலை சக்கர வியூககோட்டை சைந்தவன் வதம், நாளை வெள்ளிக்கிழமை கருப்பட்டியில் பீமன் கீசகன், வருகிற சனிக்கிழமை சோழவந்தானில் பீமன் கீசகன் வதம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

பெட்டிக்கடையில் மது விற்பனை! பொதுமக்கள் மனது வேதனை!

liquour sales in petty shop - 2026

மதுரை விக்கிரமங்கலத்தில் காவல் நிலையம் அருகே பெட்டிக்கடையில் கள்ளத்தனமாக மது  விற்பனையால் பொதுமக்கள் வேதனை

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் பகுதியில் காவல் நிலையம் அருகில் பெட்டிக்கடையில் கள்ளத்தனமாக  மது விற்கும் அவலம் அரங்கேறி வருகிறது. மது விற்பனை காவல் துறையினருக்கு தெரிந்தே, நடைபெறுகிறதா அல்லது  டாஸ்மாக் பணியாளர்கள் பெட்டிக்கடையில் வைத்து மதுபானங்களை கள்ளத்தனமாக விற்கிறார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 மதுரை மாவட்டம்,  விக்கிரமங்கலம் கீழப்பட்டி ரோட்டில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் விக்கிரமங்கலம் பேருந்து நிலையம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் விக்கிரமங்கலம் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது இந்த காவல் நிலையத்திற்கு எதிர்ப்புறம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகிலேயே பெட்டிக்கடையில் வைத்து கள்ளத்தனமாக மது விற்பனை ஜருராக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 மேலும்,  இதன் அருகிலேயே விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். விக்கிரமங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதியில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் பேருந்து நிலையத்தில் இறங்கி பள்ளிக்கு செல்லும் வழியிலேயே இந்த பெட்டிக்கடையும் உள்ளது என வேதனை தெரிவிக்கின்றனர் 

பகல் 12 மணிக்கு   டாஸ்மாக் திறக்கும் நிலையில், அதிகாலை முதல் பெட்டிக்கடையில் வைத்து கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவது இங்குள்ள காவல் துறையினருக்கு தெரிந்தே விற்கப்படுகிறதா, அல்லது அருகில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு டாஸ்மாக்கில் பணிபுரியும் பணியாளர்கள் மதுபானங்களை மொத்தமாக பெட்டிக் கடையில் வைத்து விற்பனை செய்கிறார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 மாவட்ட நிர்வாகம், விக்கிரமங்கலம் பகுதியில் ஆய்வு செய்து கள்ளத்தனமாக மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  இதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வார்த்தைகளின் வலிமையை உணர்த்தும் ‘ஆகக்கடவன’

நாம் பேசும் வார்த்தைகளின் வலிமையை உணர்த்தும் 'ஆகக்கடவன'

‘சாரா கலைக்கூடம்’ நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ ராஜா இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஆகக்கடவன’.

இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் அரசு திரைப்படக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவரான தர்மா.

புதுமுகமான ஆதிரன் சுரேஷ் கதை நாயகனாக நடித்துள்ளார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் வின்சென்ட், சி ஆர் ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், தட்சணா மற்றும் நிவாஸ் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

நெடுஞ்சாலையில், பஞ்சரான பைக்கோடு, தன் நண்பனுடன் காத்திருக்கும் ஹீரோவிற்கு, அடுத்தடுத்து அங்கு நடக்கும் சம்பவங்கள், அவன் வாழ்க்கையையே ஆபத்தில் கொண்டு சேர்க்கிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லராக சொல்வதுதான் “ஆகக் கடவன” திரைப்படம்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் லியோ வெ ராஜா. நெடுஞ்சாலைகளிலும், முள் காடுகளிலும், பாக்கு தோப்பிலும் பயணிக்கும் இவரது கேமரா கோணங்கள் கதையின் ஓட்டத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

சுமார் 2000 குறும்படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் புதுச்சேரியை சேர்ந்த சாந்தன் அன்பழகன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பின்னணி இசைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்திற்கு மிகச் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். அவர் பின்னணி இசை கன்டிப்பாக அனைவராலும் பேசப்படும்.

படத்தொகுப்பை சுமித் பாண்டியன் மற்றும் புமேஷ் தாஸ் இணைந்து சிறப்பாக செய்துள்ளனர்.

படத்தைப்பற்றி இயக்குனர் கூறுகையில்,

“நாம பேசுற வார்த்தைகள் நம் வாழ்க்கையில் மட்டுமில்லாமல், நம்மை சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையிலும் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை கூறும் படமிது.

அதேநேரம் இதனை வெறும் கருத்து கூறும் படமாக மட்டுமில்லால் சுவாரஸ்யமான திரைக்கதையோடு, சஸ்பென்ஸ் திரில்லராக சொல்லியிருக்கிறோம்.

இக்கதை நடைபெறும் இடங்கள், இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்திடாத இடங்கள். ஆதலால், படம் பார்க்கும் பார்வையாளர்கள் கன்டிப்பாக சர்ப்ரைஸ் ஆவார்கள்.

மேலும், இது பார்வையாளர்களை சீட்டின் நுனியில் அமர்ந்து படம் பார்க்கும்படி காட்சிக்கு காட்சி பரபரப்பாக நகர்ந்து கொண்டே இருக்கும். மே மாதம் திரைக்கு வருகிறோம்.” என்றார்.

IPL 2025: சென்னை அணியின் கௌரவமான தோல்வி!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – சென்னை vs பஞ்சாப் – சென்னை – 30.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை (19.2 ஓவர்களில் 190, சாம் கரன் 88, டிவால் பிரிவிஸ் 32, யஸ்வேந்திர சாஹல் 4/32, அர்ஷதீப் சிங் 2/25, மார்கோ ஜேன்சன் 2/30, உமர்சராய் 1/39, ஹர்பிரீத் ப்ரார் 1/21) பஞ்சாப் கிங்க்ஸ் அணி (19.4 ஓவர்களில் 194/6, ஷ்ரேயாஸ் ஐயர் 72, பிரப்சிம்ரன் சிங் 54, பிரியான்ஸ் ஆர்யா 23, ஷஷாங்க் சிங் 23, கலீல் அகமது 2/28, பதிரனா 2/45, ஜதேஜா 1/32, நூர் அகமது 1/39) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற பஞ்சாப் கிங்க்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது.

அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஷேக் ரஷீத் (12 பந்துகளில் 11 ரன்) மாற்றும் ஆயுஷ் மஹத்ரே (6 பந்துகளில் 7 ரன்) இருவரும் இன்று சரியாக ஆடவில்லை.

ஆனால் மூன்றவதாகக் களமிறங்கிய சாம் கரண் (47 பந்துகளில் 88 ரன், 9 ஃபோர், 4 சிக்சர்), ரவீந்திர ஜதேஜா (12 பந்துகளில் 17 ரன்) மற்றும் டிவால்ட் ப்ரிவிஸ் (26 பந்துகளில் 32 ரன்) இருவருடனும் இணைந்து அணியின் ஸ்கோரை நிலைப்படுத்தினார்.

அவரது அதிரடி ஆட்டத்தால் அணி 220 ரன் வரை போகும் எனக் கணக்கிட்டிருந்த நிலையில் ஷிவம் துபே (6 ரன்), தோனி (11 ரன்), தீபக் ஹூடா (2 ரன்), அன்ஷுல் காம்போஜ் (பூஜ்யம் ரன்), நூர் அகமது (பூஜ்யம் ரன்), கலீல் அகமது (ஆஅட்டமிழக்காமல் பூஜ்யம் ரன்) ஆகியோர் அதற்கு மேல் ரன் சேர்க்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.

குறிப்பாக யசுவேந்திர சாஹல் வீசிய 19ஆவது ஓவரைக் குறிப்பிட வேண்டும். அதில் அவர் நான்கு விக்கட்டுகள் எடுத்தார்; அதில் ஒரு ஹாட்ரிக்கும் அடங்கும். இதனால் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து சென்னை அணி 190 ரன் எடுத்தது.

இந்த ஐபிஎல்லில் சென்னை அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இது.

191 ரன் எடுத்தால் வெற்றி என்ற வெற்றி இலக்கோடு இரண்டாவதாகக் கள்மிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் பிரியான்ஷ் ஆர்யா (15 பந்துகளில் 23 ரன், 5 ஃபோர்) மற்றும் பிரப்சிம்ரன் சிங் (36 பந்துகளில் 54 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) நல்ல தொடக்கம் தந்தனர்.

அதன் பின்னர் பஞ்சாப் அணியின் அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் (41 பந்துகளில் 72 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) அணியை வெற்றிப்பாதையில் இட்டுச் சென்றார். அவருக்குத் துணையாக ஷஷாங்க் சிங் (12 பந்துகளில் 23 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) விளையாடினார். நெஹல் வதேரா (5 ரன்) இன்று சரியாக விளையாடவில்லை.

அணியின் ஸ்கோர் 188ஆக இருக்கும்போது ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 2 ரன் எடுக்கவேண்டிய கட்டம். அந்த ஓவரிலும் ஷெட்கே ஆட்டமிழக்க, அவருக்குப் பின்னால் வந்த மார்கோ ஜேன்சன் ஒரு நாலு அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

ஆட்டநாயகனாக ஷ்ரேயாஸ் ஐயர் அறிவிக்கப்பட்டார்.

தவறைத் தவிர வேறெதுவும் செய்யாத அமைச்சரவையின் முதல்வர்!

annamalai in trichy meeting - 2026

— கு. அண்ணாமலை —

சட்டம் ஒழுங்கு சீர்குலைவும், போதைப் பொருள் புழக்கமும், கள்ளச்சாராயமும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறைகளும் பல மடங்கு அதிகரித்துள்ள இந்த மக்கள் விரோத திமுக ஆட்சியை எப்போது வீட்டுக்கு அனுப்பலாம் என்று, தமிழக மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கையில், version 2.0 என்று பொதுமக்களைப் பயமுறுத்தியிருக்கிறார் முதலமைச்சர் திரு முக ஸ்டாலின்.

பாஜக ஆட்சி செய்யும் அசாம் மாநிலத்தில், கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 37 லட்சம் தாய்மார்களுக்கு மாதம் ரூ.830 வழங்கப்படுகிறது. பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில், கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், 1 கோடியே 29 லட்சம் தாய்மார்களுக்கு மாதம் 1250 ரூபாய் வழங்கப்படுகிறது.

ஆட்சிக்கு வந்து 29 மாதங்களுக்குப் பிறகு, தமிழக பாஜக பலமுறை வலியுறுத்திய பிறகே, கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்துதான் தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. அதுவும், தகுதியுடைய என்று கூறி, பல லட்சம் தாய்மார்களுக்கு இன்னும் உதவித்தொகை வழங்கப்படவில்லை.

ஆனால், தமிழக முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்களோ, திமுக அரசுதான் முதன்முதலில் வழங்கியதாகக் கதைகளை அவிழ்த்து விடுகிறார். என்ன இருந்தாலும், ஒரு கதாசிரியரின் மகனல்லவா.

தமிழகத்தில், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பில்லாத அவல நிலை நிலவுகிறது. கனிமவளக் கொள்ளையைத் தடுத்த அரசு அதிகாரிகளை, அவர்கள் அலுவலகத்தில் புகுந்தே தாக்கி, கொலையும் செய்த செய்திகள் இதே திமுக ஆட்சியில்தான் நிகழ்ந்தன.

நாள்தோறும் நடக்கும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் குற்றங்களை எல்லாம், அங்கொன்றும், இங்கொன்றுமான தனிநபர் பழிக்குப் பழி வாங்கும் சம்பவங்கள் என்று எளிதாகக் கடந்து செல்ல, முதலமைச்சருக்குக் கூச்சமாக இல்லையா?

நாகரிகமாக நடந்து கொள்கிறார்களாம். நாகரிகத்தின் எல்லையைக் கடந்தால் நடவடிக்கை எடுப்பார்களாம். இப்படி எல்லாம் பேச உங்களுக்கே சிரிப்பு வரவில்லை முதலமைச்சரே?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை ஜாதியின் பெயரைச் சொல்லி பொது மேடையில் அவமானப்படுத்தியபோதும், இலவசப் பேருந்தில் பயணம் செய்யும் தாய்மார்களை ஓசி என்று அவமானப்படுத்தியபோதும், கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டு இருந்து விட்டு, தற்போது விரைவில் தேர்தல் வரவிருப்பதால், நடவடிக்கை என்ற பெயரில் நீங்கள் நாடகமாடுவது தெரியாதா?

ஒட்டு மொத்த அமைச்சரவையிலும், ஊழல் குற்றச்சாட்டு இல்லாத அமைச்சர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இப்படி இருக்கையில், உச்சநீதிமன்றத்தின் கடுமையான கண்டிப்புக்குப் பிறகு, வேறு வழியின்றி சாராய அமைச்சரைப் பதவி நீக்கம் செய்திருக்கிறீர்கள்.

பதிலுக்கு, ஆவின் பால் கொழுப்பில் கூட ஊழல் செய்யலாம் என்று கண்டுபிடித்தவருக்கு, மீண்டும் பதவி கொடுத்து அழகு பார்க்கிறீர்கள். இதுதான் உங்கள் முன்னோடிகள், உங்களுக்குக் கற்றுத் தந்த பண்பா?

உங்கள் தந்தையார் கலைஞர் கருணாநிதி, உங்களுக்காகவே ஒன்றை எழுதி வைத்துச் சென்றிருக்கிறார்.

“ஓர் அமைச்சரவையில், தவறு செய்த அமைச்சர்களே இத்தனை பேர் என்றால், அந்தக் கட்சியின் செயல்பாடு எத்தகையது? அந்தக் கட்சியை ஆட்சிக்கு வரவிடலாமா?”

தவற்றைத் தவிர வேறொன்றும் செய்யாத ஒட்டு மொத்த அமைச்சரவையின் முதல்வராக இருக்கும் உங்களுக்கு, வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக மக்கள் வழங்கப் போவது, படுதோல்வி மட்டுமே.

செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா: அலகு குத்தி தீச்சட்டி எடுத்து வழிபாடு!

sengottai mupidathi amman temple function - 2026

செங்கோட்டை ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா: பக்தர்கள் அலகு குத்தி தீச்சட்டி எடுத்து வழிபாடு!

செங்கோட்டை ஆரியநல்லூர் தெருவில் உள்ள ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் ஆரியநல்லூா் தெருவில் உள்ள யாதவா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.

முக்கிய விழாவான , குற்றாலத்திலிருந்து புனிதநீா் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் அதனை தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிசேகமும், மாலையில் கோயில் வளாகத்தில் பொங்கலிடுதல் உள்ளிட்டவை நடைபெற்றன.

தொடா்ந்து, விநாயகா் கோயிலிலிருந்து சுப்பிரமணிய தெரு பகுதியைச் சோ்ந்த பக்தா் ராம்தாஸ் என்பவா் நீளமான சூலத்தை வாயில் அலகு குத்தி முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்தாா்.

அப்போது ஏராளமான பெண்கள் தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனா். நேற்று நள்ளிரவில் அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதியுலாவும் இன்று மதியம் மாபெரும் அன்னதானமும் நடைபெற்றது.

விழாவில், செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை யாதவா் சமுதாயத்தினா், இளைஞரணியினா் செயதிருந்தனா்.

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

usilai kumbabishekam - 2026

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது திருவேங்கட பெருமாள் கோவில்., சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் இந்து அறநிலைத்துறை சார்பில் புரனமைப்பு பணிகள் மேற்
கொள்ளப்பட்டு சுமார் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

நேற்று கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் துவங்கி, மூன்று கால பூஜைகள் செய்யப்பட்டு உருவேற்றப்பட்ட கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி பட்டாச்சியர்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

தொடர்ந்து, கருவறையில் உள்ள திருவேங்கட பெருமாள் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்த பின் தீபாராதனை நடைபெற்றது.

உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் மற்றும் உசிலம்பட்டி திமுக நகர செயலாளர் தங்கப்பாண்டியன், வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

varalakshmi vratham - 2026
#image_title

அனைவருக்கும் இனிய அட்சய திருதியை காலை வணக்கங்கள் வாழ்த்துக்கள். அட்சயம் பலமாப்னோதி ஸர்வஸ்ய…அட்சய திருதியை!*

இளம் வயதில் துறவு பூண்ட ஆதிசங்கரர் தமது துறவு நெறிக்கேற்ப நாள்தோறும் இறைவழிபாடு முடிந்து உஞ்சவிருத்தி எடுத்து மற்றவர் இட்டதை உண்டு தம் இறைப்பணியைத் தொடருவார்.

அப்படி ஒரு நாள் ஸ்ரீசங்கரர் சோமதேவர் என்பவருடைய இல்லத்திற்குச் சென்று “பவதி பிஷாந்தேஹி” என மும்முறை உச்சரித்தார். சோமதேவர் அப்போது இல்லத்தில் இல்லை. அவருடைய துணைவியார் தருமசீலை இருந்தார், அவருக்கு வியப்பு மூண்டது.

பாலசங்கரரைப் பார்த்தவுடனே, சிவபெருமானே பிச்சைக்கு வந்துவிட்டாரோ என்று அதிசயித்தார்.

ஆம் ஆதிசங்கரரின் முகத்தில் அப்படியொரு லஷ்மி கடாக்ஷம். ஆனால் அவரிடத்தில் பிச்சை இடுவதற்கான பொருள்கள் ஏதும் இல்லை.

வேதத்தில் தேர்ச்சி பெற்றிருந்த சோம தேவர் வறுமையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவரும் சங்கரரைப் போலவே பிச்சை கேட்க சென்றிருந்தார்.

வீட்டில் ஒன்றும் இல்லை. எனவே, மிகுந்த வருத்தத்துடன் அம்மையார் சங்கரரைப் பார்த்து, “நான் கொடிய பாவம் செய்தவளப்பா. நீங்கள் பிச்சைக்கு வந்திருக்கும் போது, கொடுப்பதற்கு ஒன்றுமில்லையே என ஏங்குகிறேன். என்னை மன்னிக்க வேண்டும்” என இறைஞ்சினார்.

ஆனால் சங்கரரோ, “அன்னையே! அடியேனுக்குக் கொடுக்க ஏதும் இல்லை எனக் கலங்க வேண்டாம். அன்னமிட வழியில்லை என்றால் பரவாயில்லை. அன்னத்திற்குத் துணையாக இருக்கும் உண்ணக் கூடிய எதுவானாலும், சிறிதளவேனும் அன்போடு தாருங்கள்” என வேண்டினார்.

உடனே, வீட்டிற்குள் சென்று பார்த்த அம்மையாருக்கு ஒன்றும் கிடைக்காமல் ஒரு பழைய பாத்திரத்தில் நெடு நாட்களுக்கு முன்பு செய்த நெல்லிக்காய் ஒன்று மீதமிருந்தது.

அந்த நெல்லிக்காயை மிகுந்த மனத் தயக்கத்துடன் மகான் சங்கரரின் பிச்சைப் பாத்திரத்தில் அம்மையார் இட்டார்.

இதனால் மனம் மகிழ்ந்த ஆதிசங்கரர், “தாயே! அன்புடன் தாங்கள் எனக்களித்த இந்த நெல்லிக்காயைவிடச் சிறந்த பொருள் இவ்வுலகில் எதுவும் கிடையாது.

இது என் தாயாருக்கு மிகவும் பிடித்த உணவாகும். அதிதிக்கு அளித்த இந்த உணவால் உங்களைப் பிடித்திருந்த வறுமை இன்றோடு அழிந்துவிட்டது. இனிமேல் உங்கள் கணவர் பிச்சைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை” எனக்கூறி விட்டு, செல்வத்துக்கு அதிதேவதையான ஸ்ரீமஹாலஷ்மி தேவியை மனதால் நினைத்து தியானம் செய்து அங்கம் ஹரே புளக பூஷணே என்று தொடங்கும் இந்த “கனகதாரா” ஸ்தோத்திரத்தைப் பாடி ஸ்ரீலட்சுமி தேவியை வழிபட, அவர் முன் தோன்றிய மகாலட்சுமி, வறுமையில் வாடிய குசேலரும் சுசிலையும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவருளால் குபேர சம்பத்தைப் பெற்றனர்.

வறுமையில் வாடியவர்கள் பெற்ற செல்வத்தால் நியமங்களையும், ஆசார அநுஷ்டானங்களையும் மறந்துவிட்டனர். எனவே, அப்பாவ வினையின் பயனாக, இந்த யுகத்தில் அவர்கள் இங்கு வறுமைப் பிடியில் சிக்கித்தவித்து வாழ்கின்றனர் என்ற உண்மையை ஸ்ரீ சங்கரரிடம் ஸ்ரீமஹாலஷ்மி தேவி கூறினார்.

இருப்பினும் இப்படிபட்ட வறுமையிலும் திடமனதுடன் ஆதி சங்கரருக்காக நெல்லிக்காயைப் பிச்சையாக இட்ட காரணத்தினால், ஸ்ரீலஷ்மி தேவி மனமுருகி அந்த இல்லத்தின் மீது தங்கமயமான நெல்லிக்காய்களை பொழிந்த தினம் தான் “அட்சய திருதியை”. ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறை மூன்றாம் நாளை (திரிதியை) கொண்டாடுகிறோம்.

அட்சயம் என்ற சொல்லுக்கு – அள்ள அள்ளக் குறையாமல் இருக்கும் – என்று பொருள். அட்சய திருதியை நாளில் எந்த நற்செயல் செய்தாலும் அது குறைவில்லாமல் பெருகும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

கோயில்களுக்குச் செல்வது, ஜபதபங்கள் செய்வது போன்ற புண்ணியச் செயல்களுக்கெல்லாம் அன்று வழக்கத்தை விடப் பல மடங்கு பலன் கிட்டும்.

சூதாட்டத்தில் நாட்டை இழந்த பஞ்ச பாண்டவர்கள் துரியோதனன் விதித்த நிபந்தனையின்படி வனவாசம் மேற்கொண்டார்கள். நாட்டைத் துறந்து பாஞ்சாலியோடு வனம் நோக்கி அதன் எல்லையை அடைந்தவுடன் அவர்கள் வயிற்றுப் பசியை உணர்ந்தார்கள். துன்பம் வரும்போதெல்லாம் அவர்களைக் காக்கும் கண்ணனை நினைத்தார்கள், உணவோடு அவர்கள் முன் தோன்றி அவர்களின் பசியைத் தீர்த்து வைத்தான் பரந்தாமன்.

வனவாசத்தில் அவர்கள் வயிற்றுப் பசி போக்கும் வழியையும் எடுத்துச் சொல்லி சூரிய பகவானை உபாசனை செய்து வற்றாமல் உணவளிக்கும் அட்சய பாத்திரத்தை வேண்டிப் பெற்றுக் கொள்ளும், சூரிய உபாசனைக்கான மந்திரத்தையும் பாண்டவர்களுக்கும் பாஞ்சாலிக்கும் அவனே உபதேசித்தான்.

அந்த மந்திரத்தை உச்சரித்து உபாசனை செய்தார்கள் அவர்கள் முன் தோன்றி அவர்கள் வேண்டியபடி அட்சய பாத்திரத்தை அருளினான். வனவாச காலத்தில், அள்ள அள்ளக் குறையாமல் அன்னம் தரும் அட்சய பாத்திரத்தால் வந்த விருந்தினர்க்கெல்லாம் அமுது படைத்து மகிழ்ந்தாள் பாஞ்சாலி என்கிறது மகாபாரதம்.

அட்சய பாத்திரத்தை சூரியனிடம் தர்மபுத்திரர் பெற்றது இதே அட்சய திருதியை நன்னாளில்தான். எனவே அட்சய திருதியை அன்று அன்னதானம் செய்வது சிறப்பு அன்று செய்யும் அன்னதானத்தின் புண்ணிய பலன் பல மடங்கு கிட்டும்.

காயசண்டிகை மணிமேகலைக்கு அமுதசுரபி என்கிற அட்சய பாத்திரம் வழங்கியதும் இந்நாளே என்றும் கூற கேள்விப்பட்டு இருக்கிறேன். அட்சய திருதியை அன்று வழக்கமாக உள்ளதை விட அதிகமாக இறைச் சிந்தனையில் ஈடுபட வேண்டும்.

அட்சய திருதியை போலவே கிரகண காலத்திலும் எது செய்தாலும் அது வளரும் என நம்பப்படுகிறது. இத்தகைய எண்ணற்ற சிறப்புகள் உள்ள நாளில் அதிகமாக மந்திர ஜபம் செய்தும் இறைச் சிந்தனையில் ஈடுபட்டும் நம் மனத்தை மாசில்லாததாக ஆக்கிக் கொள்வோம்…

பின் குறிப்பு : அட்சய திருதியை என்றாலே கடைக்குப் போய் ஏதேனும் சிறிய அளவிலாவது தங்கம் வாங்க வேண்டும் என்பது சமீப காலத்தில் பெருகிப் போய்விட்டது. புத்தியை பிளக்கும் சக்தி விளம்பரத்திற்கு உண்டு. விளம்பரத்தில் வீழும் புத்தி மக்களுக்குண்டு.

எப்படியும் விளம்பரம் செய்து எந்த வகையிலாவது வியாபாரம் செய்ய முனைவோரை தடுக்க வழியே கிடையாது. சிக்கியவன் கூக்குரலிட்ட செய்தி கிடைத்தால் அதை முடிந்த வரை நட்பு சுற்றம் வட்டாரத்திற்கு பகிர்ந்து விட்டு அதே கடையிலே அடைக்கலமாகும் வாடிக்கையாளர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!