ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.
‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!
மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.
‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!
மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஐ.பி.எல் 2025 – குஜராத் vs ஹைதராபாத் – அகமதாபாத் – 02.05.2025
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
குஜராத் டைடன்ஸ் அணி (224/6, ஷுப்மன் கில் 76, ஜாஸ் பட்லர் 64, சாய் சுதர்ஷன் 48, வாஷிங்டன் சுந்தர் 21, உனத்கட் 3/35, பாட் கம்மின்ஸ் 1/40, சீஷன் அன்சாரி 1/42) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை (186/6, அபிஷேக் ஷர்மா 74, ஹென்றி கிளாசன் 23, நிதீஷ் குமார் ரெட்டி ஆட்டமிழக்காமல் 21, ட்ராவிஸ் ஹெட் 20, பாட் கம்மின்ஸ் ஆட்டமிழக்காமல் 19, சிராஜ் 2/33, பிரசிட் கிருஷ்ணா 2/19, இஷாந்த் ஷர்மா 1/35, ஜெரால்ட் 1/36) 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் குஜராத் டைடன்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் (23 பந்துகளில் 48 ரன், 9 ஃபோர்) மற்றும் ஷுப்மன் கில் (38 பந்துகளில் 76 ரன், 10 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் மிகச் சிறப்பான தொடக்கம் தந்தனர்.
பவர் பிளே ஓவர்களான முதல் ஆறு ஓவர்களில் குஜராத் அணி விக்கட் இழப்பின்றி 82 ரன்கள் எடுத்தனர். ஏழாவது ஓவரில் சாய் சுதர்ஷன் ஆட்டமிழந்தபோது ஜாஸ் பட்லர் (37 பந்துகளில் 64 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) ஷுப்மன் கில்லுடன் இணைந்து அணியின் ஸ்கோரை கிடுகிடுவென்று உயர்த்தினர்.
அதன் பின் வந்தவர்களான வாஷிங்டன் சுந்தர் (16 பந்துகளில் 21, 1 சிக்சர்), ஷாருக் கான் (6 ரன்), ராகுல் திவாத்தியா (6 ரன்), ரஷீத் கான் (பூஜ்யம் ரன்) ஆகியோர் குறைந்த பந்துகளில் வேகமாக ரன் அடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 6 விக்கட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்தது.
வெற்றிக்கு 225 ரன்கள் தேவை என்ற இலக்கோடு இரண்டாவதாக விளையாடவந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் (16 பந்துகளில் 20 ரன், 4 ஃபோர்) மற்றும் அபிஷேக் ஷர்மா (41 பந்துகளில் 72, 4 ஃபோர், 6 சிக்சர்) இருவரும் சுமாரான தொடக்கம் தந்தனர்.
மூன்றாவதாகக் களமிறங்கிய இஷான் கிஷன் (17 பந்துகளில் 13 ரன்), ஹென்றி கிளாசன் (18 பந்துகளில் 23 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) அனிகேத் வர்மா (7 பந்துகளில் 3 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (10 பந்துகளில் 21 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்), கமிந்து மெண்டிஸ் (பூஜ்யம் ரன்), பாட் கம்மின்ஸ் (10 பந்துகளில் 19 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோர் எவ்வளவோ முயன்றும் 20 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் குஜராத் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
குஜராத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
மத்திய அரசுக்கு இணக்கமாக செல்வதை அடிமைத் தனம் என்று அர்த்தம் கொடுத்து.. எப்போதும் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தே மாநிலத்தின் வளர்ச்சியை தடுத்து கொண்டிருந்த திமுகவிற்கு…. கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட், சரியான சவுக்கடி கொடுத்துள்ளது.
விழிஞ்சம் துறைமுகம் தமிழகத்திற்கு வரவேண்டிய திட்டம். சுற்றுச்சூழல் பாதிப்பு, மீனவர்கள் போராட்டம் என்று சகட்டுமேனிக்கு மக்களை தூண்டிவிட்டு அரசியல் ஆக்கியது திமுக. இன்று அந்த திட்டம் கேரளாவுக்கு சென்று விட்டது மோடி அதை துவக்கி வைத்துள்ளார்.
சுற்றுச்சூழல், உயிரியல் என்று பேசிய சுற்று சூழல் வியாதிகள்! 2021 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு, நம்ம ஊர் கனிம வள கொள்ளையைப் பற்றி வாயை திறக்கவில்லை…. அது ஒரு புறம் இருக்கட்டும்…
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமர்ந்த மேடையிலேயே, காங்கிரஸ் கட்சியின் சசிதரூரும்…. ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வரும் ஒருங்கே அமர்ந்து, கேரளாவுக்கான வளர்ச்சி அரசியலை முன்னெடுக்கிறார்கள்! ஆனால் இந்த திராவிட ஆடல் திமுகவோ… ஜெய் ஹிந்த் என்ற வார்த்தையை நீக்குவதும், ரூபாய் சின்னத்தை மாற்றும் “தாழ்ச்சி” அரசியலை முன்னெடுத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்….
அதானி என்று கூறினாலே அய்யோ அம்மா என்று கதறும் அதே கம்யூனிஸ்ட் கட்சி…. தன்னுடைய மாநில வளர்ச்சி என்றவுடன், கப் சிப் ஆகி அதே அதானியிடம் இந்த துறைமுகத்தை ஒப்படைக்கிறது…
வாக்கு அரசியல் வேறு, வளர்ச்சி அரசியல் வேறு என்பதை கேரள கம்யூனிஸ்ட் முழுதும் உணர்ந்து இருக்கிறது இதைச் சுட்டிக்காட்டிய மோடி ஒரே மேடையில் காங்கிரஸ் எம் பி … கம்யூனிஸ்ட் முதல்வரும் ..அவர் விரும்பாத அதானியும் இருப்பதை பார்த்து சிலர் (இண்டி கூட்டணி) இன்று தூங்காமல் இருக்கப் போகிறார்கள் என்று நக்கலும் நையாண்டிமாக பேசியுள்ளார்.
மத்திய அரசுடன் மோதல் போக்கு அரசியலில் மட்டும் திமுக செலுத்திய கவனம்… வளர்ச்சி அரசியலை விலக்கியதன் விளைவு.. இதனால் தமிழகம் இன்று கடன் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
கச்சத்தீவு விவகாரத்தில் தமிழகத்தின் நலனை அடமானம் வைத்தது திமுக !காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை காற்றில் பறக்க விட்டது திமுக. இப்போது மத்திய அரசுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு, தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களையும் தடுத்து இருக்கிறது திமுக !
மாநில நலன் சார்ந்த அரசியலில், மத்திய அரசின் துணையும் அதனுடன் இணக்கமும் தேவை என்பதை கேரள கம்யூனிஸ்ட் முதல்வர் உணர்ந்து விட்டார். தமிழக முதல்வர் நிச்சயம் இதை என்றுமே உணரப் போவதில்லை !!ஸ்டாலினின் உண்மை முகத்தை மக்கள் பார்த்து விட்டார்கள்.
2026 இல் மத்திய அரசின் டபுள் எஞ்சின் சர்க்கார் தமிழகத்தில் அமைவது முக்கியம் என்பதை தமிழ் மக்கள் உணர தொடங்கி விட்டார்கள்.
தென்காசி – புனலூர் இடையே முற்றிலும் விஸ்டாடோம் பெட்டிகளடங்கிய சுற்றுலா ரயிலை குற்றால சீசன் காலத்தில் இயக்க வேண்டி செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே அமைச்சர் உள்ளிட்டோருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் தெரிவித்ததாவது…
தென்காசி – புனலூர் இடையில் தினசரி விஸ்டாடோம் கண்ணாடி மேற்கூரை உள்ள சுற்றுலா ரயில் இயக்க கோரிக்கை விடுத்துள்ளோம். செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் இன்ஜினியர் முரளி செயலாளர் கிருஷ்ணன் உபதலைவர் ராஜேந்திரராவ் ஆகியோர் தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமேலாளர், ரயில்வே அமைச்சருக்கு 2019லேயே கடிதம் அனுப்பி வேண்டுகோள் வைத்தோம்.
அதில், ஜுன் மாதத்தில் குளுகுளு குற்றால சீசன் தொடங்குகிறது. லட்சக் கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தை நோக்கி விரைவார்கள். இந்த சுற்றுலா பயணிகள் செங்கோட்டை புனலூர் ரயில் பாதையில் அமைந்துள்ள இயற்கைக் காட்சிகள் நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் வண்ணமிகு தோற்றங்களையும் பல குகைகளையும் கண்டு மகிழும் வண்ணம் தெற்கு ரயில்வே கண்ணாடி மேற்கூரை உள்ள சுற்றுலாவிற்கென வடிவமைக்கப்பட்ட விஸ்டாடோம் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்ட ஷட்டில் ரயிலை தினமும் தென்காசியிலிருந்து புனலூர் வரை இயக்க வேண்டும்.
தினமும் இரண்டு முறை தென்காசி மற்றும் புனலூரிலிருந்து இந்த ரயில்கள் ஜூன் தொடங்கி நவம்பர் வரை இயங்க வேண்டும். நீலகிரி மலை ரயில் போல இந்த ரயிலும் மிக்க புகழ் பெறும்… என்று குறிப்பிட்டிருந்தனர். தற்போது, ஜூன் மாதம் குற்றால சீஸன் தொடங்கவுள்ள நிலையில், மீண்டும் தங்கள் கோரிக்கையை அதிகாரிகளிடம் முன் வைத்துள்ளனர்.
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு மே 3ம் தேதி, நாளை தொடங்கி 5ம் தேதி வரை நடைபெறுகிறது. தருமபுரம் ஆதினத்தின் சார்பில் நடக்க உள்ள இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரை ஆதினம், மதுரையில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அவரது கார் உளுந்தூர்பேட்டை அருகே ரவுண்டானா பகுதியில் சென்று கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கியது.
அவர் சென்ற காரின் மீது மற்றொரு கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் கார் சேதமடைந்தது என்றாலும், இந்த விபத்தில் இறையருளால் மதுரை ஆதினம் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்.
இந்நிலையில் தருமபுரம் ஆதினம் தமது சமூக வலைதள பக்கத்தில், “மதுரை ஆதினம் கார் விபத்து திட்டமிட்ட சதி” என புகார் தெரிவித்துள்ளார்.
அவர் தமது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
சென்னை வந்துகொண்டிருந்த மதுரையாதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம் காரினை பின்னே வந்து காரில் மோதியுள்ளனர் இது திட்டமிட்ட. சதியாக தெரிகிறது இறையருளால் ஆதீனகர்த்தர் உயிர்தப்பினார் காருக்கு சேதமாயிற்று என்ற விபரமறிந்த குருமணிகள் மதுரையாதீனத்துடன் தொடர்புகொண்டு பேசி நலம் விசாரித்தனர் ஆதீனகர்த்தருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியுள்ளார். – என்று தருமபுரம் ஆதினம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, இந்த செய்தி அறிந்து ஹிந்து முன்னணி அமைப்பு கண்டனம் தெரிவித்ததுடன், அவருக்கு உரிய பாதுகாப்பளிக்க கோரிக்கை வைத்துள்ளது. இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில், மதுரை ஆதீனம் அவர்களின் மீது திட்டமிட்ட கொலை தாக்குதலா? சுவாமிகளுக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
இன்று மதியம் தவத்திரு மதுரை ஆதீனம் அவர்கள் பயணம் செய்த கார் மீது உளுந்தூர்பேட்டை அருகில் விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விபத்தினை ஏற்படுத்தியது பழைய வெள்ளை நிற வாகனம் என்றும், அதன் முன், பின் பக்கங்களில் வாகன எண் பிளேட் இல்லை என்று தெரிய வருகிறது. மேலும் காரில் குல்லா போட்ட நபர் முன் இருக்கையில் இருந்துள்ளார். மேலும் வேகமாக வந்த அந்த கார் தடுப்பு பேரீகார்டு அருகில் வந்து திரும்பி தாக்குவதற்கு முயற்சித்துள்ளது.
அதிருஷ்ட வசமாக இறைவன் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் அருளால் சுவாமிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்து திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என தவத்திரு திருவாவடுதுறை ஆதீனம் அவர்கள் கவலை தெரிவித்து உள்ளார்.
சமீபத்தில் காஷ்மீரில் நடைபெற்ற கொடூர சம்பவம் குறித்து சுவாமிகள் மன வருத்தத்துடன் தெளிவான கருத்தினை உறுதியாக தெரிவித்து இருந்தார். எனவே இவற்றை காவல்துறை கவனத்தில் கொண்டு இந்த விபத்து குறித்து முழுமையான தகவலை திரட்ட வேண்டும். மேலும் முழுமையான விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு இட வேண்டும்.
சுவாமிகளுக்கு தக்க பாதுகாப்பை உடனடியாக அளிக்க தமிழக அரசும் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
விசிஷ்ட அத்வைத தத்துவத்தைப் பரப்பிய மகான் ஸ்ரீ ராமானுஜர் தமிழின் இனிமை கூட்டும் திவ்யப் பிரபந்தங்களை ஆலயங்களில் நிலைபெறச் செய்தார். மக்களிடம் வெகுவாகப் பரப்பினார். திருப்பாவை, திருவாய்மொழி விளக்கவுரைகள் அளித்தார். ஆயினும் அவர் நவரத்தினங்கள் போல் சம்ஸ்க்ருதத்தில் நூல்கள் எழுதினார். அவர் எழுதிய ஒன்பது நூல்களில் முக்கியமானது ‘கத்யத்ரயம்’.
வடமொழியில் பத்யம் என்றால் செய்யுள் என்றும், ‘கத்யம்’ என்றால் உரைநடை என்றும் பொருள். எனவே இது ஓர் உரைநடை நூல். ‘சரணாகதி கத்யம்’, ‘ஸ்ரீரங்க கத்யம்’, ‘வைகுண்ட கத்யம்’ என்ற பெயர்களில் ‘கத்யத்ரயம்’ மூன்று வசன கவிதைகள் எனும் தொகுப்பாக, சரணாகதியின் மேன்மையை விளக்குகின்றன.
ஒரு பங்குனி உத்திர நன்னாளில், திருவரங்கத்தில் பெரிய பிராட்டியாரும் நம்பெருமாளுமாக சேர்த்தியில் சேவை சாதித்த போது, ராமானுஜர், பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு பெருமாளிடம் சரண் புகுந்தார். பெருமாள் அதை அங்கீகரித்து, அவருடைய வாழ்நாள் முடியும் வரை ‘த்வய’ மந்திரத்தின் பொருளையே சிந்தித்து திருவரங்கத்தில் வாழும்படி நியமித்தார். இதை ‘சரணாகதி கத்யத்தில்’ விவரித்தார். ராமானுஜர் அவ்வாறு வாழ்கையில், தாம் வைகுந்தத்தில் சென்று அவருக்குச் செய்யும் தொண்டுகளையே இங்கே திருவரங்கநாதனுக்கு செய்ய வேண்டும் என்று ‘ஸ்ரீரங்க கத்யத்தில்’ வேண்டினார்.
அவர் தொண்டுக்கு மகிழ்ந்த அரங்கன், அவர் வைகுந்தத்தில் பெறவிருக்கும் பேறுகளை மனத்தில் தோற்றுவித்தான். அதனால் மகிழ்ச்சியடைந்த ராமானுஜர் தம் ஆனந்தத்தை ‘வைகுந்த கத்யத்தில்’ வெளிப்படுத்தினார். வைகுந்த மாநகரின் சிறப்புகள், அங்கு திருவோலக்கமிருக்கும் வைகுந்தநாதனின் சிறப்புகள்; அவனால் தாம் அங்கே அடையப்போகும் பேறு இவற்றை விவரித்தார்.
இம்மூன்று கத்யங்களும் நம்பெருமாளுக்கும் ஸ்ரீராமானுஜருக்கும் இடையே நடந்த ரகசிய உரையாடல்களே. ஆயினும் இந்த ரகசிய உரையாடல்களை, உலகத்தார் உய்யும் பொருட்டு, பகிரங்கமாக வெளியிட்டார் ராமானுஜர். இதுவே ‘கத்யத்ரயம்’. சரணாகதி எனும் நெறியின் எல்லா நுண்ணிய நிலைகளுக்கும் தெளிவான, ஐயந்திரிபற்ற விளக்கமாக ‘கத்யத்ரயம்’ அமைந்துள்ளது. சரணாகதி என்பது, ஒருவர் தன் குறைகள், நிறைவின்மை, இயலாமை முதலியவற்றை வெளிப்படையாக அறிவித்து, சரணம் புகுதல்.
கத்யத்தினைப் படைக்கும் முன், பிராட்டியின் திருவடிகளிலே சரணம் புகுகிறார் ராமானுஜர். ஏன்? பிராட்டி தாயாக இருப்பவள். இறைவனுக்குப் பிரியமானவள். சீற்றத்தை ஆற்றுபவள். பக்தனின் முறையீட்டைக் கேட்டு சமயமறிந்து விண்ணப்பித்து அவன் மனத்தில் இரக்கத்தை ஏற்படுத்துபவள்.
ஞானம், பலம், சக்தி, ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் என்ற இந்த ஆறு பண்புகளை உடையவன் பகவான். அவனை நாராயணன் என்ற சொல்லால் விளக்குகிறார்கள். கத்யம் எனும் வசன கவிதை ஆற்றொழுக்குப் போன்ற நடையும், ஓசை நயமும் கொண்டு விளங்குவது. ‘கத்யாம் கவினாம் நிகஷம் வதந்தி – கத்யங்கள் கவிகளுக்கு உரைகல்லாகும்’ எனும் மொழியால் இதன் சிறப்பை உணரலாம்.
ஸ்ரீரங்கம் பங்குனி உத்திரம் சேர்த்தி சேவை
சரணாகதி என்பதும் வேதாந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதுதான்! தைத்ரீய உபநிஷத், நாராயண அனுவாகம் 49, 50, 51வது ரிக்குகள், 1) வாய்மை தவறாமை, 2) உடல் வருத்தி செய்யும் தவம். 3)வெளிப்புலன்களை தன்வசப்படுத்தும் தவம், 4) மனத்தை அடக்கி ஒரே நிலைப்படுத்தும் சரமம், 5) கொடை, 6) அறவழி நடத்தல், 7) நன் மக்களைப் பெறுதல், 8) தினசரித் தீயோம்பல் 9) வேள்வி இயற்றல் 10) தேவர்களை பூசித்தல் 11) மனத்தால் பரப்ரஹ்மத்தை தியானித்தல் 12) பரபிரம்மத்தையே ஒரே பற்றாகக் கொண்டு மற்றெல்லாப் பற்றுகளையும் விட்டு, அவனையே நெறியும் இலக்குமாகப் பற்றும் சரணாகதி – என உயர் வரிசைப்படுத்தி ஒன்றுக்கு ஒன்று மேம்பட்டதாகவும், சரணாகதியை இறுதியாகவும் வைத்துப் பேசுகின்றன.
சரணம்- காப்பு, உதவி, இருப்பிடம். ஆகதி- வழி அடைதல். இவற்றால், சரணாகதி என்பது வேதாந்தத்தில் மிக உயர்வானதும் மிக எளிதானதுமாகச் சொல்லப்பட்டிருப்பது தெளிவாகும்.
இறைவன், உயிர்கள் மற்றும் உயிரற்ற பண்டங்களில் உள்ளுறைந்து, அவற்றைத் தன் உடைமைகளாகக் கொண்டு இயக்குகிறான் என்பதை சான்றுகளுடன் நிறுவினார் ராமானுஜர்.
“தனது வினைகளுக்கு ஏற்ப பிறவி எடுத்துள்ள ஜீவாத்மா, இறைவனுக்கு அடிமை; ஜீவாத்மாவின் அறிவும் இறைவனது ஞானமும் கடுகுக்கும் மலைக்கும் ஒத்து வேறுபட்டவை; ஜீவாத்மா ஞானத்தினால் முக்தியை அடைவது இயலாது; இறைவனது மேன்மையை அறிந்து அவனிடம் நீங்கா அன்பு கொண்டு, எண்ணெய் சீராக ஒழுகுதல் போல் இடைவிடா நினைவில் அவனை நிறுத்தலாகிற உபாஸனம் அல்லது பக்தி, அதன் மூலமே ஜீவாத்மா அவனை அடைய இயலும். பக்தி என்பது ஜீவாத்மா தனக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஞானத்தால் அவனிடம் மாறா விருப்பத்துடன் செயல்படுதல் ஆகும்” என்றார் ராமானுஜர்.
பக்திக்கு, கர்ம வழியிலும் ஞான வழியிலும் தேர்ச்சி வேண்டும்; பக்தி கடைபிடிப்பதற்கு கடினமாகவும் இருக்கும். மேலும் இந்த ஆத்மா அனுபவிக்க வேண்டிய வினைகள் யாவையும் அனுபவித்து முடித்த பிறகுதான் (அதற்கு பல பிறவிகளும் ஆகலாம் ) முக்தி கிடைக்கும். முக்தி அடைதல் இடையில் தடைபட்டுப் போகும் வாய்ப்பும் உண்டு.எனவே கர்ம – ஞான – பக்தி நெறிகளால் இப்பிறவிலேயே முக்தி நிச்சயம் இல்லை என்பதாலும், இந்த நெறிகளைக் கடைப்பிடிக்க முடியாதவர்களும் இருக்கிறார்கள் என்பதாலும், செயலும் ஞானமும் பக்தியும் பொதிந்த சரணாகதியை ராமானுஜர் வகுத்துத் தந்தார்.சரணாகதி, பக்தியினும் மேம்பட்டிருப்பதை இந்த ஒப்புநோக்கு விளக்கும்.
பக்தி
தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டவர்களுக்கே இயலும்.
கடினமான செய்முறை உடையது.
ஓர் ஆத்மா அனுபவித்து வரவேண்டிய வினைகள் (ப்ராரப்த கர்மா) முடியும்போதுதான் முக்தி கிட்டும். இதற்கு, பக்தி வழியிலுமே ஒன்றுக்கு மேற்பட்ட பிறவிகளும் பிடிக்கலாம்.
இடையீடுகள் ஏற்பட வழி உண்டு.
இது தன்முயற்சியை மையமாகக் கொண்டது. அதனால் ஆத்மாவின் இயல்பான ‘பரமாத்மாவுக்கு அடிமை நிலை’ மற்றும் இறைவனின் ஆளுமை நிலை இவற்றுடன் வேறுபடும்.
எனவே இறைவன் திருவுள்ளத்திற்கு அவ்வளவு உகப்பாய் இராது.
பிரபத்தி அல்லது சரணாகதி
இதற்கெனத் தனித்தகுதிகள் தேட வேண்டாம். இருக்கும் நிலையிலேயே சரணாகதியை யாரும் செய்யலாம்.
அவனைச் சரணம் அடைந்தால், நம் ஆத்மாவின் முக்தி அவனது பொறுப்பு ஆகும். அதனால் இடையூறு ஏற்பட வழியே இல்லை.
இது அவன் விருப்பத்தாலேயே கிட்டும் என்பதால் ஆத்மாவின் அடிமை நிலை மற்றும் இறைவனின் ஆளுமை இயல்புகளுக்கு ஒத்திருக்கும்.
அதனால் இறைவன் திருவுள்ளத்திற்கு உகப்பாயிருக்கும். இந்த சரணாகதி தான் வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள ‘ந்யாஸ வித்யை’ என்றும், அதை வலியுறுத்தவே இதிஹாஸங்களான ராமாயணம், மகாபாரதம் எழுந்துள்ளன என்றும் பகவத் ராமானுஜர் ஐயந்திரிபற நிலைநாட்டினார். *
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூவுலகில், அவதரித்து, பூலோக வைகுண்டமாகிய திருவரங்கத்தை,(ஆலயத்தை) நிர்வகித்து, இன்றும் கூட, ஆத்திகரும், நாத்திகரும், பகுத்தறிவு வாதிகளும், மறவாமல் உச்சரிக்கும் ஒரே ஆச்சார்யன், ஸ்வாமி ராமானுஜர் !.ஸ்வாமி ராமானுஜர் பிறந்த நாளில்,அவரின் புகழையும்,அரங்கனுக்கு அவர் செய்த அழிவில்லா கைங்கர்யங்களையும், அவரின் சிஷ்யர்கள் சிலரின் கைங்கர்யங்கள் பற்றி, சற்று விரிவாக பார்ப்போம் !
ராமானுஜர் அன்று நடைமுறைப் படுத்திய நிர்வாக முறை கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாய் இன்றும், நடைபெற்றுக் கொண்டே உள்ளது !.
1. இன்று எம்பெருமானார் அவதார திருநக்ஷத்ரம்.பற்றி..
3. தத்துவ தரிசிகள்! வேத வேதாந்த வித்தகர்கள், வடமொழி விற்பன்னர்கள். தண்டமிழ்ச் சான்றோர்கள்! இலக்கிய மேதைகள்! பொதுவுடைமை வாதிகள்! சமநீதிப் புரட்சியாளர்கள்! தமிழ்ப் பற்றாளர்கள், புதுக்கவிஞர்கள் மனிதநேய மாண்பினர்கள்- என்று இராமானுசரின் வாழ்க்கையை அலசி ஆராயாதவர்களே இல்லை எனலாம்.
4. உலகத்தின் விளிம்புகள் வரை விரிந்த, உடையவரின் உயர்ந்த வாழ்க்கையை, எழுத்துக்களில் வடித்தவர்களில், காலத்தினால் முற்பட்டவர், வடுகநம்பி என்ற ஆந்திரபூர்ணர். இவர் ‘யதிராஜ வைபவம்’ என்ற வடமொழி நூலில் 114 சுலோகங்களில் ஸ்ரீராமாநுஜரின் சரித்திரத்தை எடுத்துரைத்தார். இவர் இராமானுசருக்கு அணுக்கத் தொண்டராக வாழ்ந்தவர்.
5. உடையவர் காலத்திலே வாழ்ந்து அவருடைய குணங்களையும் ஞானத்தின் உயர்வையும் உலகறியச் செய்தவர் திருவரங்கத்தமுதனார். இவர் இயற்றிய இராமானுச நூற்றந்தாதியை இராமானுசரே கேட்டு மகிழ்ந்து அடியார் பெருமக்களை அனுதினமும் அதை அநுஸந்திக்கும்படி ஆணையும் இட்டருளினார்.
6. இராமானுச நூற்றந்தாதி, கட்டளைக் கலித்துறை யாப்பில் 108 பாடல்களைக் கொண்டது. ‘ப்ரபந்ந காயத்ரி’ என்று புகழப்படும் பெருமை வாய்ந்தது.
7. அமுதனாரையும் வடுகநம்பியையும் போல் இராமானுசர் காலத்திலேயே வாழ்ந்த ‘கருடவாஹன பண்டிதர்’ என்ற வித்வானால் விளம்பப்பெற்றது ‘திவ்யஸூரிசரிதம்’ என்ற வடமொழி நூலாகும். இது ஆழ்வார்களின் வரலாற்றையும் சேர்த்துச் சொல்கிறது. காவியரீதியில் இந்நூல் அமைந்து கற்போரைக் களிப்புறச் செய்கிறது.
8. இராமானுசரின் வாழ்க்கையைத் தெரிவிக்கும், பழமையான குருபரம்பரை நூல், ஆறாயிரப்படி குருபரம்பராப்ரபாவம். இந்த நூலை, மணிப்ரவாள நடையில் எழுதியவர், நம்பிள்ளையின் சீடரும்,துறவியுமான,”” பின்பழகிய பெருமாள் ஜீயர்””.
9. ஆசிரியராகிய நம்பிள்ளையினும் மிக மூத்தவரான இவர், ஆசிரியர்க்கு அணுக்கராய்த் தொண்டுகள் செய்தவர்.
10. இத்தகைய பேரறிவாளர் ஆழ்வார்களின் வரலாற்றையும், ஆசார்யர்களின் வரலாற்றையும், சிறப்பாக இராமானுசரின் வரலாற்றையும், உரைநடையில் நூலாக்கி உதவினார்.
11. இராமானுசரின் வரலாற்றை வடமொழியிற் கூறுகின்ற மற்றொரு பெரிய நூல் ‘ப்ரபந்நாம்ருதம்’ ஆகும். இந்நூலை இயற்றியவர், வடுகநம்பியின் திருவம்சத்திலுதித்தவரான, அனந்தாசார்யர் என்பவர்
12. வடமொழியில் அமைந்த மற்றொரு ஸ்தோத்ர நூல் ‘யதிராஜ ஸப்ததி’ ஆகும். இதனை இயற்றியவர் வேதாந்தாசார்யர் என்ற, ஸ்ரீமந் நிகமாந்த தேசிகன். (கி.பி.1268 – 1369). இது 70 ச்லோகங்களைக் கொண்டது. இதில் இராமானுசரின் புகழைப் பல் வகையிலும் பறைசாற்றுகிறார் ஸ்ரீமந் நிகமாந்த தேசிகன்.
13. ஸ்ரீமணவாள மாமுனிகளால் இயற்றப்பெற்றதாய் வட மொழியில் அமைந்து புகழ் பெற்ற ஓரு நூல் ‘யதிராஜ விம்†தி’ ஆகும். இது 20 ச்லோகங்களில் செவிக்கினிதாகத் தொகுக்கப் பெற்றது. இவரது காலம் (கி.பி.1370 – 1443).
14. ஸம்ஸ்க்ருதத்தில் காவியரீதியில் அமைந்துள்ள மற்றொரு அருமையான நூல் ‘ஸ்ரீராமாநுஜ சம்பு’ ஆகும். இதனை இயற்றியவர் கி.பி.1600இல் வாழ்ந்த கர்க்க கோத்ரத்தில் உதித்தவரான ஸ்ரீராமாநுஜாசார்யர் என்பவர்.
15. வடமொழியில் நாடகப் பாங்கில் இயற்றப்பட்ட ஒருநூல் ‘யதிராஜ விஜயம்’ ஆகும். வாத்ஸ்ய வரதர் என்கிற, நடாதூரம்மாள் மரபில் வந்தவரும், சோளசிம்மபுரத்தில் வாழ்ந்தவருமான, “” ஸுதர்சநாசார்யர்”” என்பவருடைய குமாரர் ‘அம்மாளாசார்யர்’ என்ற மற்றொரு பெயர் கொண்ட, வரதாசார்யர் என்பவர். இவரால் இயற்றப்பட்டதே யதிராஜ விஜயம்.
16. குருபரம்பரை என்ற தலைப்பில், ஆசார்யர்களின் வரலாற்றைத் தமிழ்ச்செய்யுள் வடிவில், தெரிவிக்கும் நூல்களும் உள்ளன.
அவை (1) கீழையூர் சடகோப தாசர் இயற்றிய அரிசமய தீபம்,
(2) வடிவழகிய நம்பிதாசர் இயற்றிய குருபரம்பரை
(3) பரமயோகி விலாஸம்
(4) பாகை சீதாராமதாசர் இயற்றிய ‘இராமானுச சரிதை’
(5) குருபரம்பரைப் புராணம்
(6) கோழியாலம் சப்தம் வங்கீபுரம் ஸ்ரீநிவாஸாசார்யர் இயற்றிய திவ்யசூரி சரிதம்.
17. இத்தனை நூல்களுக்கும் நடுவே, தனித்தன்மைகளுடன் விளங்குவது பிள்ளை லோகார்ய ஜீயர் இயற்றிய ‘ராமாநுஜார்ய திவ்ய சரிதை’ என்ற நூல்.
18. இராமானுசரின் வாழ்க்கை வரலாற்றை, விரிவாகவும் புதிய கோணங்களில், பல புதுச்செய்திகளையும் கூறுகின்றது ‘ராமாநுஜார்ய திவ்யசரிதை’ என்ற இந்நூல்.
19. பிள்ளைலோகம் ஜீயர் வரலாற்றுணர்வு மிக்கவர்! காலக் குறிப்புகளை வரலாற்று ஆய்வாளர்களுக்கு விருந்தாகப் படைத்தவர்! இந்தியத் துணைக் கண்டத்தின் நிலவியல் அமைப்பு, தட்பவெப்பநிலை, ஆட்சியாளர்களின் ஆதிக்கம், அரசியல் மற்றும் மாற்றுச்சமயத்தினரின் எதிர்ப்புகள், ஏழை எளிய மக்கள் முதல் மேட்டுக்குடி மக்கள்வரை பரவியிருந்த சமுதாயச் சூழ்நிலை ஆகிய கூறுகளை உட்படுத்தி விரிந்து பரந்த இராமானுச திவ்ய சரித்திரத்தை வழங்கியிருக்கிறார் பிள்ளைலோகம் ஜீயர்.
20. அக்கால ஆட்சியியல், கலையியல், தொழில்முறை, ஆலய நிர்வாஹம் என்று பல்வகைத்துறைகளில் பழகியிருந்த தமிழ்ச் சொற்களை அறிமுகப் படுத்தியிருக்கிறார் இவர் தம் நூலில்.
21. இராமானுசப் பேராறு தென்னரங்கம் தொடங்கி இமயத்தின் கொடுமுடியிலேறியது! விசிஷ்டாத்வைதக் கொடியை ஆங்கே ஏற்றியது, அங்கிருந்து பெருகிஓடி, பல்வேறு மாநிலங்களில், வளம் கொழிக்க வைத்து,மடங்கள் பலவற்றை நிறுவித், தென்னன் தமிழான புல்லாணியில் கடலோடு கலந்தது. அப்பேராற்றில் குள்ளக் குளிரக் குடைந்தாடிய பெருமக்களே, பிள்ளையுறங்கா வில்லிதாசர், கோயில் வண்ணாத்தான், வயலாலி ஞானப்பெண் (இவள் திருக்குலத்தோர் என்று அழைக்கப்படும் தலித் வகுப்பைச் சார்ந்தவள்) ஆகியோரும் மற்றும் மாந்தர் பலரும் ஆவர்.
22. பிள்ளைலோகம் ஜீயர், இராமானுசரின் திக்விஜய வரலாற்றில், நெஞ்சை நெகிழ்விக்கும் நிகழ்ச்சிகள், பலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளார். இராமானுசர் பயணித்த பெருவழிகளைத், திசை சொல்லித் தொலைவு சொல்லி, ஒரு பயணவழிகாட்டும் படத்தையே ஜீயர் வரைந்து முன் வைத்திருக்கிறார். அவ்வழிப் புலம்பற்றி ஐநூறு ஆண்டு களுக்குப் பிறகு, ஜீயர் தாமும் ஒரு புனிதப் பயணம் மேற்கொண்டு வழிச் செலவில், செவிவழிச் செய்திகளைச் சேகரித்துத் தாம் எழுதிய, இராமானுச திவ்ய சரிதைக்குக் கருத்துக் கருவூலங்களைத் தொகுத்து வைத்துள்ளார்.
23. விக்ரமசோழன் திருவீதி கிழக்குப் பகுதியில், (கீழை உத்தர வீதி) இராமானுசர், திருவாய்மொழி விண்ணப்பம் செய்யும், இசைகாரர்களான அரையர்களைக் குடியமர்த்தி, அவ்வீதிக்குச் ‘செந்தமிழ்பாடுவார் வீதி’ என்று பெயர் சூட்டினார். ‘செந்தமிழ் பாடுவார்’ என்ற தொடரைத் திருமங்கை மன்னன் திருவாக்கிலிருந்து தேர்ந்தெடுத்தார். (பெரிய திருமொழி 2-8-2)
24. திருவரங்கம் பெரியகோயிலில் பணிபுரிந்த, அனைத்துக் கொத்திலுள்ளாரையும், அவர்கள் முன்பு வாழ்ந்துவந்த, வெளிச் சுற்றுக்களிலிருந்து குடிபெயரச் செய்து, நம்பெருமாள் கைங்கரியங்களுக்கு உதவும்படி, திருக்கோயிலுக்கு அண்மையில், உள் திருச்சுற்றுக்களில், வாழ்ந்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
25. ஆளவந்தார் வாழ்ந்திருந்த மடத்தினைப் பெரியநம்பிக்கும், அதன் எதிர்மனையை மாடத்திருவீதியில், (தற்போதைய கீழைச்சித்திரை வீதியில்) ஆழ்வானுக்கும், அந்த மனைக்குத் தெற்குப் பகுதியில் முதலியாண்டானுக்கு, ஒரு திருமாளிகையையும் அளித்தார்.
26. பூர்வகாலந்தொட்டு ஸ்ரீபாஞ்சராத்ர ஆகம விதிகளின்படி, திருவரங்கம் பெரியகோயிலில் வழிபாடுகள் நடந்து வந்தன. இடையில் (அவாந்தரத்தில்) வைகாநஸர்களின் ப்ரவேசம் ஏற்பட்டிருந்ததை, இராமானுசர் மாற்றி, மீண்டும்”” ஸ்ரீபாரமேச்வர ஸம்ஹிதை”” ப்ரகாரம், ஸ்ரீபாஞ்சராத்ர ஆகம வல்லுநர்களைக் கொண்டு, திருவாராதனங்களையும், திருவிழாக்களையும், நடத்தி வரும்படியான ஏற்பாடுகளைச் செய்தார்.
27. எம்பெருமானார் 25 ஆண்டுகள், திக் விஜயம் செய்து, திருவரங்கம் திரும்பினார். திக்விஜயயாத்ரையைத் திருமாலிருஞ்சோலையில் தொடங்கினார். அப்போதுதான் நூறு தடா நிறைய, அக்கார அடிசிலும் வெண்ணெயும், ஏறுதிருவுடையானுக்கு ஸமர்ப்பித்தருளினார். அழகர் திருமலையில் ராமாநுஜகூடம் எழுப்பி, பரமஸ்வாமி கைங்கர்யத்தை மேற்பார்வையிடுவதற்கு, ஒரு ஜீயரையும் நியமித்தருளினார்.
28. திருமகள் கேள்வனாய், அரவணைமேல் துயில்பவனாய், எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொண்டவனாய், தாழ்ந்த குணங்களுக்கு எதிரிடையான கல்யாணகுணங்களுக்கெல்லாம் ஒரிருப்பிடமானவனாய், பொருள்கள் அனைத்திலும் உள்ளுறைபவனாய் விளங்குபவன், ஸர்வேச்வரனான ஸ்ரீமந்நாராயணனிடம், நாம் சரணாகதி செய்யவேண்டும் என்ற, உன்னதத் தத்துவத்தைப் போதித்தார்.
29. ஒரு பங்குனி உத்தர நன்னாளிலே, அழகிய மணவாளனும், ஸ்ரீரங்கநாச்சியாரும் சேர்ந்து இருக்கின்ற, இருப்பிலே, நம்போல்வார் நற்கதி அடையும்படி, திவ்ய தம்பதிகளிடம் மூன்று கத்யங்களை (சரணாகதிகத்யம், ஸ்ரீரங்ககத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம்) விண்ணப்பம் செய்தார்.
30. நம்பெருமாளுக்கு, அனைத்துவித கைங்கர்யங்களையும், உரிய காலங்களில் நடத்தி வருவதற்காக,அந்தணர்களைக் கொண்ட, பத்துக் கொத்துக்களையும், அந்தணர் அல்லாதவர்களைக் கொண்ட, பத்துக் கொத்துக்களையும் ஏற்படுத்தி, அனைவரும் ஸ்ரீரங்கநாதனுடைய கைங்கர்யங்களில், தம்மை ஈடுபடுத்திக் கொள்வதற்கான, வழிமுறைகளை, ஏற்படுத்தி வைத்தார்.
32. இவ்வாறாக எழுந்தருளியிருந்த, உடையவரை ஆச்ரயித்த, முதலியாண்டானுடைய திருக்குமாரரான, கந்தாடை யாண்டான், நடாதூராழ்வான், ஸ்ரீபராசரவேதவ்யாச பட்டர், கூரத்தாழ்வான் ஆகியோர், ஸ்ரீபாஷ்யம் எழுதுவதற்கு உறுதுணையாகவும், கூரத்தாழ்வான் எம்பெருமானார் மடத்தில் உள்ள, நூலகத்திற்கு காப்பாளராகவும், பண்டகசாலைப் பொறுப்பான ராகவும் பணியாற்றி வந்தனர்.
33. அருளாளப் பெருமாள் எம்பெருமானார், தாம் மிகச் சிறந்த சாஸ்திரபண்டிதராய்த் திகழ்ந்து வந்தபோதிலும், அழகிய வெண்பாவில் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்த கோட்பாடுகளை எல்லாம், தன்னுள்ளே கொண்டதாய் அமையப்பெற்ற, ஞானசாரம், ப்ரமேய சாரம் என்ற இரண்டு நூல்களை, அருளிச் செய்திட, அதனால் மகிழ்வுற்ற இராமானுசர், தம்முடைய திருவாராதனப் பெருமாளான, ‘பேரருளாளரை திருவாராதனம் பண்ணிக் கொண்டிரும்’ என்று நியமித்தருளினார்.
35. முதலியாண்டான், எம்பெருமானார் திருமண்காப்புச் சாற்றிக் கொள்ளும்போது, அதற்கான பணிவிடைகளைச் செய்வார். அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருவாராதனம் ஸமர்ப்பிக்கும்போது, அவருக்கு அந்த கைங்கர்யத்தில் உதவி செய்திடுவார். எம்பெருமானார், திருவீதிகளில் எழுந்தருளுவதற்கு முன்பாக, அவருக்குத் திருவடி நிலைகளை (பாதுகைகளை) ஸமர்ப்பித்திடுவார்.
36. இந்தக் காரணம் பற்றியே, உடையவரது திருவடி நிலைகளுக்கு, முதலியாண்டான் என்ற பெயர், நிலை கொண்டு ள்ளது. ஆகவே அடியார்கள் எம்பெருமானார் ஸந்நிதியில், ஸ்ரீசடாரி ஸாதித்திடவேண்டும் என்று கேட்காமல் “முதலியாண்டான் ஸாதித்திட வேண்டும்” என்று பணிவோடு ப்ரார்த்தித்துக் கொள்ளவேண்டும்.
37. எம்பார், இரவில் இராமாநுசர் திருப்படுக்கையிலே, சயனித்திருக்கும் போது,அவருடைய திருக்கால்களைப் பிடித்து விடுவர். உடையவருடைய திருப்பரியட்டங்கள் திருத்தவும், திருக்கை ஸமர்ப்பிக்கவும், இரவில் எம்பெருமானார் படுக்கைக்கு எழுந்தருளும் முன்பு, அவருடைய திருப்படுக்கையைச் சோதிப்பதும், எம்பார் மேற்கொண்டு வந்த பணிகளாம்.
38. அன்றாடம் படுக்கை விரிப்புகள் சுத்தப்படுத்தப்பட்டு, வெயிலிலே உலர்த்தப் பெற்ற பிறகு, அவைகள் திருக் கட்டிலிலே சேர்த்திடப்படும். தினந்தோறும் எம்பார், உடையவர் படுக்கையறைக்கு எழுந்தருள்வதற்கு முன்பு, படுக்கையில் படுத்துப் புரள்வாராம். இதைக்கண்ட பலர் எம்பாரிடம் ‘இது தவறானதும், முறையற்ற செயலும் அல்லவா’ என்று வினவிட, அதற்கு எம்பார், தாம் இவ்வாறு செய்வது, படுக்கையில், ஏதேனும் முட்களோ,அல்லது புழுக்களோ, இருந்தால், அவை இராமானுசர் திருமேனிக்குத் துன்பம் விளைத்திடும், அவ்வாறு நேர்ந்திடாவண்ணம், தாம் இவ்வாறு செய்வதாக, மறுமொழி அளித்தார்.
39. கோமடத்து சிறியாழ்வான், திருக்கை செம்பும், ஸ்ரீபாதரக்ஷையும் எடுப்பர். பிள்ளை உறங்காவில்லிதாஸர், வரவு, செலவு கணக்குகளை அன்றாடம் எழுதிக் கொண்டும், கருவூல காப்பாளராகவும் பணிபுரிவர்.
40. அம்மங்கியம்மாள்(தலித் இனத்தைச் சார்ந்தவர் ) பால் அமுது காய்ச்சுவார். உக்கலாழ்வான், திருத்தளிகை மாற்றுவார். மாருதியாண்டான், திருவாராதனத்திற்கும், தளிகைக்குமான நீர் கொணர்ந்து சேர்ப்பார். மாறொன்றில்லா சிறியாண்டான், அமுதுபடி சுத்தம் செய்வது, கரியமுது திருத்துவது ஆகிய பணிகளைச் செய்துபோவார்.
41. வண்டரும், செண்டரும், தினந்தோறும் மடத்துக்கு 1,000 பொன் ஸமர்ப்பிப்பர். இவர்கள் உறையூர் சோழருடைய அரண் மனையில் படைத்தலைவர்களாக,பணி புரிந்து வந்தனர். இவர்கள் மல்யுத்த வீரர்கள்.
42. ராமாநுஜ வேளைக்காரர், எம்பெருமானார் எழுந்தருளும்போது, திருமேனிக்காவலராகப் பணி புரிந்து வந்தனர். அகளங்க நாட்டாழ்வான் எதிரிகளை அழித்து, திருவரங்கத்தைக் காத்திடும் பணியை செய்து வந்தார். இவ்வாறு உடையவரை ஆச்ரயித்திருந்தோர் பலரும், பல கைங்கர்யங்களை செய்து வந்தனர்.
கேரளத்தில் பூர்ணா நதியின் கரையில் உள்ள காலடியில் சிவகுரு – ஆர்யாம்பாள் தம்பதிக்கு ஒரே புதல்வனாக ஸ்ரீ சங்கரர் பிறந்தார். இவர் பொ.ஆ. 788ல் பிறந்தார் என்பது சில ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இவர் இளமையிலேயே குருகுலத்திற்குச் சென்று வேத – வேதாந்தங்களை முற்றும் கற்றார்.
தனது 7-வது வயதில் நதியில் முதலையால் பிடிபட்டபோது, தன்னுடைய தாயாரின் அனுமதி பேரில் சந்யாஸம் மேற்கொண்டு, துறவியாக வெளியே புறப்பட்டார். நர்மதை நதியின் கரையில் தவம் செய்து கொண்டிருந்த ஸ்ரீகோவிந்த பகவத்பாதரை குருவாக ஏற்றுக்கொண்டு அவரிடம் உபதேசம் பெற்றார். ஸ்ரீகுருவின் உத்தரவின்படி ஸ்ரீசங்கரர் காசி க்ஷேத்திரத்திற்குச் சென்று அத்வைத சித்தாந்தத்தை விளக்கும் பாஷ்யங்களை இயற்றினார்.
பாரதத்தில் உள்ள பல க்ஷேத்திரங்களுக்குச் சென்று பிற சமய வாதிகளிடம் வாதம் செய்து அத்வைத சித்தாந்தத்தை நிலை நிறுத்தினார். பல முக்யமான இடங்களில் மடங்களை ஸ்தாபித்து தம் சிஷ்யர்களை அமர்த்தி ஸனாதன தர்மத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்தார். பல கோவில்களுக்குச் சென்று, வழிபாடு முறைகளை சீரமைத்து, அந்தந்த தெய்வங்களின் மீது ஸ்தோத்ரப் பாடல்கள் இயற்றினார்.
இவருடைய பரம குருவான கௌடபாதரும், வியாஸரும் தனித்தனியே தர்சனம் அளித்து இவருக்கு அருள் வழங்கினர். முப்பத்திரண்டாவது வயதிலேயே, எல்லாப் பணிகளையும் பூர்த்தியாகச் செய்து பூதவுடல் களைந்து ப்ரஹ்மத்தோடு ஒன்றினார்.
ஸ்ரீ சங்கர ஜனனம்!
ஆதி சங்கரரின் சரிதத்தையும், மஹிமையையும் விளக்கி சங்கர விஜயம் என்ற தலைப்பில் நூல்கள் பல வெவ்வேறு காலகட்டத்தில் வெளியாகியுள்ளன. காலடி எனும் கிராமத்தில் சிவகுரு – ஆர்யாம்பாள் தம்பதிக்குப் பிறந்தார் சங்கரர் என்பது பொதுப்படையான கருத்து, சங்கரரின் ஜனன காலத்தில் இயற்கையே அந்தச் சம்பவத்தை எவ்வாறு கொண்டாடியது என மாதவ – வித்யாரண்யர் தனது சங்கர விஜயத்தில் விவரிக்கிறார்.
சுபகிரகத்துடன் கூடியதும், சுபனுடைய திருஷ்டியிலுள்ளதுமாகிய சுப லக்னத்தில் சிவகுருவின் மனைவியான ஆரியாம்பாள் என்ற பதிவிருதா ரத்தினம், ஸ்ரீ பார்வதிதேவி சுப்ரமணியனைப் பெற்றதுபோல் சுகமாகப் புதல்வனைப் பெற்றாள். ஆயினும், முறைப்படி நதியில் ஸ்நானம் செய்து ஜாதகர்மத்திற்கு அங்கமாக அந்தணர்களுக்கு ஏராளமான செல்வத்தையும், பூமியையும், பசுக்களையும் தானம் வழங்கினார். அன்றைய தினத்தில், சுபாவமாகவே பகைமையுள்ள மிருகங்கள் விரோதத்தை விலக்கி சந்தோஷத்துடன் சஞ்சாரம் செய்ததுமன்றி ஒன்றுக்கொன்று உதவி செய்துகொண்டன.
மரங்களும் கொடிகளும், மலர்களையும் பழங்களையும் பொழிந்தன. நதிகளில் சுத்தமான தண்ணீர் ஓடியது. மேகமும் ஜலத்தைப் பொழிந்தது. மலைகளிலிருந்து தண்ணீர் திடீரென பெருக்கெடுத்தது.
அத்வைத மதத்திற்கு விரோதமான மதத்தைப் பின்பற்றியவர்களின் கையிலிருந்து புஸ்தகம் கீழே விழுந்தது. வேதங்களுடைய சிரஸ்ஸுகளான உபநிஷத்துக்கள் சந்தோஷமடைந்தன. ஸ்ரீ வேத வியாசருடைய இருதய கமலம் மலர்ச்சியடைந்தது. திசைகள் யாவும் மகிழ்ந்தன. பரிமள வாசனைகளுடன் காற்று ஆனந்தம் அளித்துக்கொண்டு அடித்தது. வலமாகச் சுற்றும் சுடருடன் ஜ்வலித்தன. எல்லா இடங்களிலும் அக்னிகள் அச்சமயத்தில் ஆச்சரியமாக மலர்மாரி பொழிந்தது. அது மிகவும் பரிமள வாசனையுடையதாக இருந்தது. சாதுக்களுடைய சுத்தமான மனம் போல் மங்களத்தைச் செய்கின்றதாகவும் இருந்தது. மனங்களின் நல்ல செயல்கள் அர்ப்பணம் செய்யப்பட்டன.
உலகங்களுக்கெல்லாம் கண்ணாகிய சூரியனால் மூன்று உலகங்கள் விளங்குவது போலவும், சிறந்த மேரு மலையினால் பூமி விளங்குவது போலவும், அடக்கத்தினால் கல்வி விளங்குவது போலவும், உலகில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராமர் முதலிய அரசர்களுடைய தேஜஸ்ஸு அமைந்த அந்தப் புதல்வனால் ஆரியாம்பாள் விசேஷமாக விளங்கினாள்.
விசேஷமாக உபசாரம் செய்து ஜோதிடர்களை வினவியபொழுது அவர்களும் அந்தப் புதல்வனுடைய பிறவிக் காலத்துக் குணங்களை கூறினர். “இவன் ‘ஸர்வக்ஞன்’ (முற்றும் அறிந்தவன்) ஆக விளங்குவான். தனிப்பட்ட சிறந்த நூலை இயற்றுவான். பேசும் திறமை நிறைந்தவர்களை வெல்வான். இந்த உலகம் உள்ள வரையில் தன் கீர்த்தி நிலைக்கும்படியான செயலைச்செய்வான்” என்றும் கூறினர். *
ஏரார் முயல் விட்டுக் காக்கைப்பின் போவதே… – என்று நண்பர் ஒருவர் ஒரு கருத்தை இட்டு, தேடத் தூண்டிவிட்டார்.
அதாவது… அழகான முயல் குட்டி கண் முன்னே விளையாடிக் களிப்பூட்டும் நிலை இருக்க… காகத்தின் பின்னே துரத்திச் செல்லும் பித்தரும் உண்டோ? என்பது பொருள்!
அழகா வெள்ளை வெளேர்னு முயல்குட்டி இருக்கும் போது, கருப்பா இருக்கற காகத்தை யாராச்சும் துரத்திப் பின்னாடி போவாங்களா? அப்டின்னும் பொருள் கொள்ளலாம்.
இருந்தாலும் நம்ம இளம்பருவ நெஞ்சுக்குச் சொல்லும்படியாய் அமைவதென்றால்… கலர்புல்லா ஒண்ணு கண்ணுக்கழகா பக்கத்துல உக்காந்திட்டிருக்கும்போது, எங்கோ போகிற ஒரு கன்னங்கரேல் பின்னே கண்ணு போவலாமாங்கிறதுன்னு வெச்சிக்கலாம்!
சரி.. சரி… கொஞ்சம் இலக்கிய நுகர்ச்சிக்குப் போவோம்.!
தக்காரோடு ஒன்றித் தமராய் ஒழுகினார் மிக்காராம் என்று சிறியாரைத் தாம் தேறார்; கொக்கார் வளவயல் ஊர தினலாமோ அக்காரம் சேர்ந்த மணல் – என்று பழமொழி காட்டி பழந்தமிழை ஊட்டிய பெருமை நம் முன்னோர்க்கு உண்டு.
இப்படிப் பழமொழிகள் காட்டி எத்தனை எத்தனை அறிவுரைகளை நமக்குச் சொல்லியிருக்கிறார்கள்.!
” ஏரார் முயல்விட்டு காக்கைப்பின் போவதே” என்பது, திருமங்கை ஆழ்வாரின் சிறிய திருமடல் வாசகம்!
“முயல் விட்டு காக்கைப்பின் போனவாறே” என்பது, அப்பரடிகளின் தேவாரத்திலும் உள்ளது. அவரது நான்காம் திருமுறையில். திருவாரூர் தலம் குறித்த பாடலிது!
என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட் டு என்னை ஓர் உருவமாக்கி இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட்டு என்னுள்ளங் கோயிலாக்கி அன்பிருத்தி அடியேனைக் கூழாட்கொண்டு அருள்செய்த ஆரூரர்தம் முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக் காக்கைப்பின் போனவாறே – என்று பாடுவர்.
இந்தத் திருவாரூர்ப் பதிகத்தில் உள்ள சிறப்பு, இது போலே 10 பாடல்களிலும், இறுதியில் பழமொழி வந்து கண்காட்டுவது ரசிக்கத்தக்கது!
அழகிய முயலைவிட்டு (உபயோகமற்ற) காக்கை யின் பின்னே தொடர்ந்து போவாருமுண்டோ? என்ற இதன் பின்னணி என்ன என்பதை ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரையில் காணுவோம்…
***- இனி, இம்மூன்று புருஷார்த்தங்களான காமபுருஷார்த்தமே சிறந்ததென்னும் தமது திருவுள்ளத்தை வ்யங்க்யமாக வெளியிடுகிறார், – (இவற்றினிடை அதனை
யெய்துவார் ஆரார், (அவர்) சீராரிருகலையுமெய்துவர்) அதனை என்று தமக்கு உத்தேச்யமான காமபுருஷார்த்தத்தைக் சுட்டினபடி. காம புருஷார்த்தம் எவர்கட்குக் கைவந்ததோ, அவர்கட்கு அறம் பொருள்களும் கைவந்தனவேயாம் என்றபடி. இதன் உட்கருத்து யாதெனில், காம்மேஸாதயம், அதாவது பலன், அதனைப் பெறுதற்கு அறமும் பொருளும் ஸாதநம் (உபாயம்) என்பது இவர் திருவுள்ளம்.
எவர்கட்குப் பலன் கைபுகுந்த்தோ, அவர்கள் அதற்கு வேண்டிய ஸாதநங்களையும் அநுஷடித்தவர்களாக ஆகக்கடவர்களாதலால், காமம் கைவந்தவர்கட்கு அறமும் பொருளும் கைவந்தவேயாமென்பது அர்த்தாத் ஸித்தமாயிற்றென்க. அறம் பொருள்களை இருகலை என்றது –நாம்மே ப்ரதாந அங்கியாய், அவை அதன் கலாமாத்திரமாய் இருத்தல் பற்றியக் கலையாவது ஏகதேசம்.
சிலர், “ஆரார் இவற்றின் இடையதளை எய்துவார்“ என்று பிரித்து –தர்மார்த்த காமங்களுள் நடுப்பட்டதாகிய பொருள் கைவந்தவர்களுக்கு, முன்னும் பின்னுமுள்ள மற்றைப் புருஷார்த்தங்களிரண்டும் கைவந்தனவாம் என்பதாக ஆபாத ப்ரதீதிகொண்டு பொருள் சொல்லக்கூடும். அது ப்ரகரணத்தோடு பொருந்தாது, ஆழ்வார் திருவுள்ளத்துக்கும் சேராது. காமத்தைக் கடைப்பிடித்துச் சிறப்பித்துப் பேசுகிற ப்ரகரணமிறே இது. ஆழ்வார்க்குக் காமத்திலேயிறே இப்போது நோக்கு, காமம் நிஷித்தமன்றோ, அதனை ஆழ்வார் கடைப்பிடிக்கலாமோ?
எனின், விஷயாந்தர காமமென்றும், பகவத் விஷய காமம் என்றும் காமம் இருவகைப்படும், பகவத் விஷயகாமம் வேதாந்தங்களிலும் விதிக்கப்பட்டுள்ளது. அதனையே இங்கு ஆழ்வார் கடைப்பிடித்தாராதலால் குற்றமொன்று மில்லையென்க.
இனி நான்காவதாக மோக்ஷபுருஷார்த்தமென்று ஒன்று உண்டென்பாருடைய ஸித்தாந்தத்தை தூஷிக்கிறார். இதுவென்? ஆழ்வார் நாஸ்திகரன்றே, ஆஸ்திகராயிருந்துவைத்து மோக்ஷத்தை இல்லைசெய்யலாமோ எனின், உட்கருத்து
அறிகின்றிலீரகள். “நீள்விசும்பருளும்“ என்றும் “இறந்தால் தங்குமுர் அண்டமே கண்டுகொண்மின்“ என்றும் தமது பலபல திவ்ய ஸூக்திகளாலே பலச்ருதிகளிலே மோக்ஷத்தை அருளிச்செய்கிற இவ்வாழ்வார் மோக்ஷதூஷகராக எங்ஙனேயாவர்? பின்னே இதுதன்னில் மோக்ஷத்தை இல்லைசெய்வானேன்? என்னில், இங்கு நஹிநிந்தா நியாயம் அநுஸந்திக்கத்தக்கது, மோக்ஷதூஷணம் இங்கு விளங்க நின்றாலும் அர்ச்சாவதார ப்ராவண்யத்தைச் சிறப்பித்துச் சொல்லுவதில் ஆழ்வார்க்கு முக்கிய நோக்கமென்று கொள்ள வேணுமேயல்லது மோக்ஷதூஷணத்தில் நோக்காகக் கொள்ளக்கூடாது. நஹிநிந்தா நியாயத்தின் கருத்து இதுவேயாம்.
மோக்ஷமுண்டென்பது அவிவேகிகள் சொல்லும்சொல் என்றதை நிரூபிக்கிறார் காரார் புரவியேழ் என்று தொடங்கி. மேகமண்டலத்திலே சஞ்சரிக்கின்ற ஏழுகுதிரைகள் பூட்டின ஒற்றைச்சக்கரமுடைய தேரிலே கதிராயிரமுடையனாய் விளங்குகின்ற ஸூர்யனுடைய மண்டலத்தைப் பிளந்துகொண்டு அவ்வழியே போய் ஒரு பரமபதமென்னும் தேசத்தை அடைவதாகவும் அங்கே ஆராவமுதத்தை அநுபவிப்பதாகவும் அவ்விடத்தை விட்டு ஒருநாளும் திரும்பி வருவதில்லையாகவும் இப்படிப்பட்ட கட்டுக்கதைகளைக் கூறுகின்றார்களே விவேகிகள் இப்படி அஸம்பத்தப்ரலாபம் பண்ணுவர்களா வென்று நீங்கள் ஆராயமாட்டீர்களோ வென்கிறார், மேகமண்டலத்தில் அஸம்பாவிதம், அந்தத் தேரை ஏழுகுதிரைகள் இழுக்கவேண்டியதும் அப்ரஸக்தம், நெடுந்தூரத்தினின்றும் கண்ணைச் செம்பளித்துப் பார்க்கவும் முடியாத ஸூர்யணைப் பிளந்துகொண்டு போவதென்பது ஸர்வாத்மநா அஸம்பாவிதம் இந்நிலத்திலே ஆராவமுதமிருப்பதாகச் சொல்லுவதும், அதனை யனுபவிப்பவர் எஞ்ஞான்றும் அந்வாருஹ்யவாதம் பண்ணினாராயிற்று. (அந்வாருஹ்யவாதமாவது – உண்மையில் தமக்கு அபிமதமல்லாத பொருளை ஒரு கார்யார்த்தமாக ஏற்றுக்கொண்டு சொல்லுகை, ஜைமிநிமஹர்ஷி பூர்வமீமாம்ஸையில் நிரீச்வரவாதம் பண்ணிருப்பதை இதற்கு த்ருஷ்டாந்தமாகக் கூறலாம்).
மோக்ஷமுண்டென்றே கொண்டாலும் அர்ச்சாவதாரத்திற் காட்டிலும் அது மிகவும் அஸாரம் என்கிறார் (ஏரார் முயல்விட்டு) என்பதனால், நிலத்திலே ஓடுவது முயல், மரங்களின் மேலே பறந்து திரிவது காக்கை, மாம்ஸம் வேண்டியவன் கைப்பட்ட முயலைவிட்டுக் கைப்பட அரியதும் கைப்பட்டாலும் உபயோகப்படாத்துமான காக்கையைப் பின்பற்றித்திரிதல் எப்படி அவிவேகிக்ருத்யமோ, அப்படியே எளிதாயும் ரஸவத்தரமாயுமுள்ள அர்ச்சாவதார போகத்தைவிட்டு அரிதாயும்
அஸாரமாயுமுள்ள மோக்ஷபோகத்தைப்பெற விரும்புகையும் பேதைமையின் பணி என்றாராயிற்று.
ஆக இதுவரையில் ஆழ்வார் தரமான தன்மையிலே நின்று பேசினதென்றும் மேலுள்ளதெல்லாம் தலைமகள் நிலைமை யெய்திப் பேசுவதென்றும் ர்வஹிப்பதுண்டு. அன்றி ஆதி முதலாகவே முற்றும் நாயகி ஸமாதியாலே பேசுகிற பாசுரமென்றும் யோஜிப்பதுண்டு. இதுவே பெரிய வாச்சான் பிள்ளை திருவுள மென்னத்தகும். இரண்டு படியும் ஏற்றதேயாம்.
தொன்மயிலை கானமர்சோலை கபாலீச்சரம் கற்பகவல்லி அன்னை மீது ஒரு பிள்ளைத்தமிழ்! (புத்தக வெளியீட்டு விழா!).
மயிலாப்பூரில் கானமர்சோலை கபாலீஸ்வரம் என்று கொண்டாடப்படும் திரு கபாலீஸ்வரர் கோயிலில் வீற்றிருந்து அருளும் கற்பகவல்லி அன்னையின்மீது முனைவர் திருமதி. மீனாட்சி பாலகணேஷ் அவர்கள் இயற்றியுள்ள தெய்வீகச் சுவை நிறைந்த “திருமயிலைக் கற்பகவல்லி பிள்ளைத்தமிழ்” என்ற நூலின் வெளியீட்டு விழா வியாழக்கிழமை மாலை (1-5-2025) மயிலாப்பூர் கோகலே ஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
திருமதி காயத்ரி வெங்கட்ராகவன் அவர்களுடைய இறைவணக்கத்துடன் தொடங்கியது நிகழ்ச்சி! சிவத்திரு பூசை ச.ஆட்சிலிங்கம் (சிவசுந்தரி இதழ் பதிப்பாளர்) அவர்கள் விழாவினைச் சிறப்பாக வடிவமைத்து தொகுத்தளித்தார்கள். பேராசிரியர் முனைவர் திரு வ.வே.சு. அவர்கள் தலைமை தாங்கி, நூலை வெளியிட, கலைமகள் ஆசிரியர் கலைமாமணி கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். திருமதி சீதாரவி (மேனாள் கல்கி ஆசிரியர்), தமிழவேள், சிவாலயம் ஜெ.மோகன் (ஆன்மீக இதழ்களின் பதிப்பாளர்), ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.
முதலில் பேசிய சிவாலயம் மோகன் அவர்கள், இம்மாதிரி புத்தகங்கள் அவசியம் வரவேற்கப்பட வேண்டியவை என்றார். மேலும் இந்த பிள்ளைத் தமிழிலிருந்து நான்கு பாடல்களை இசையமைத்துப் பாடிய திருமதி காயத்ரி வெங்கட்ராகவன் அவர்களை மிகவும் பாராட்டினார். இந்த புத்தகத்தில் உள்ள பாடல்கள் அனைத்தையும் காயத்ரி அவர்கள் இசையமைத்துப் பாடி, ஒலி வடிவில் கொண்டு வந்து சேர்க்க வேண்டியதின் அவசியத்தையும் கூறினார்.
திரு கீழாம்பூர், இந்தப் புத்தகத்தில் எடுத்தாளப்பட்டுள்ள சொல் நயங்களை சிலாகித்தார். நதிகளே இல்லாத மயிலையில் கங்கை, யமுனை, நர்மதா, சரஸ்வதி, சிந்து மற்றும் காவிரி போன்ற நதிகளைக் ‘கற்பகவல்லி பிள்ளைத் தமிழில்’ இணைத்துப் பாடியிருப்பதை வெகுவாகப் பாராட்டினார். கற்பகாம்பாள் அருளின்றி இந்தப் புத்தகம் வெளி வந்திருக்க முடியாது என்பதற்குச் சான்றாக, அறுபத்து மூவர் விழாவின் பொழுது இந்த புத்தகத்தின் பி டி எப் பைல் அடங்கிய பென் டிரைவ் காணாமல் போய் எப்படி தெய்வாதீனமாகக் கிடைத்தது என்பதை விவரித்தார். குமரகுருபரரின் மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
திருமதி சீதாரவி பேசும் பொழுது, மீனாட்சி பாலகணேஷ் அவர்களுடனான 25 வருட நட்பினைப் பற்றியும், மீனாட்சி, பிள்ளைத்தமிழ்ப் பாடல்களைக் கேட்கும் பொழுதும், பொதுவாகவே அம்மன் பாடல்களைக் கேட்கும் பொழுதும் எப்படி நெகிழ்ந்து, கண்ணீர் விடுவார் என்பதையும் கூறினார். புத்தகத்திலிருந்து சில பாடல் வரிகளை எடுத்துரைத்து, சிலாகித்தார். மீனாட்சி அவர்களுக்கும், பாடிய காயத்ரி வெங்கட்ராகவன் அவர்களுக்கும் மலர் மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.
நிறைவாகப் பேசிய பேராசிரியர் வ.வே.சு. அவர்கள், மீனாட்சியின் இந்தப் புத்தகத்தை, சிற்றிலக்கியத்திற்கு அவர் செய்திருக்கும் பெரிய தொண்டு என்று பாராட்டினார். தன்னுடைய வழக்கமான நகைச்சுவையுடன், இந்தப் புத்தகத்தில் இருந்து சில பாடல் வரிகளை எடுத்துக் கூறி, அவற்றில் இருக்கும் இலக்கிய நயத்தை மிகவும் பாராட்டிப் பேசினார். காப்பு பருவத்தில், “தலைமகன் தந்திமுகன் தம்பியாம் முருகனுடன்// துணை நின்று தாயினைப் பரிந்தே காப்பான் என்ற அடிகளைக் குறிப்பிட்டு, மூப்படைந்த பெற்றோரைப் பிள்ளைகள் பரிந்து காக்க வேண்டும் என்ற அறிவுரையும் அடங்கியுள்ளது என்றார்.
விழாவினைத் தொகுத்தளித்த புலவர் பூசை ச.ஆட்சிலிங்கம் தன்னுடைய இணைப்புரையில் மயிலாப்பூரின் பெருமைகளையும், பிள்ளைத் தமிழ்ப் பாடல்களைக் குறித்தும் சிறப்பான தகவல்களை அளித்த வண்ணம் இருந்தார்.
ஏற்புரையில் திருமதி மீனாட்சி பாலகணேஷ், திருமயிலைக் கற்பகவல்லி பிள்ளைத்தமிழ் நூலினை எவ்வாறு மிகத் தயக்கத்துடன், மிகவும் யோசித்து, சிறிது சிறிதாக, ஒரு வருடத்தில் எழுதினார் என்பதை அழகாகச் சொன்னார். பிள்ளைத்தமிழ் பத்து அதிகாரங்கள் மேலும் வளையல் போடுதல் கோலம் வரைதல் மருதாணி ஏற்றுக்கொள்ளுதல் பூச்சூடுதல் போன்ற புதிய அதிகாரங்களையும் சேர்த்து எழுதியிருப்பதைப் பற்றிக் குறிப்பிட்டார். புத்தக உருவாக்கத்தில் உதவிய அனைவருக்கும் நன்றி கூறினார்
விழாவின் சிறப்பு நிகழ்வாக மீனாட்சி பாலகணேஷ் அவர்களுக்கும் அவருடைய கணவர் பாலகணேஷ் அவர்களுக்கும் தலையிலே பட்டு கிரீடமும் தோளில் அழகிய மாலையும் சார்த்தி, வந்திருந்த அனைவரும் அவர்களை வாழ்த்தியது வித்தியாசமாகவும் பாராட்ட தகுந்ததாகவும் இருந்தது.
விழா முடிவில் அனைவருக்கும் இனிப்புடன்( பாதுஷா, ஜாங்கிரி) வெண் பொங்கல், புளியோதரை, சுண்டல், மெதுவடை தயிர் சாதம் என இரவு உணவு வழங்கப்பட்டது.
பக்தியுடன் இலக்கியம் கலந்த மிகச் சிறந்த விழாவாக இது அமைந்தது! விருட்சம் இசை புதிது குழுவினரும், எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்களும் கலந்து கொண்டது மனதுக்கு நிறைவாக இருந்தது.
பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் திறனாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் நூலாசிரியர் மீனாட்சி பாலகணேஷ்!
பிள்ளைத் தமிழ் பற்றி சில வரிகள்…..
தமிழ் இலக்கியங்களில் “பிள்ளைப்பாட்டு” எனவும் “பிள்ளைக்கவி” என்றும் அழைக்கப்படும் ‘பிள்ளைத்தமிழ்’ இலக்கியம் குறிப்பிடத்தகுந்தது. இம்மாதிரி சிற்றிலக்கியங்களில் ஏறத்தாழ 196 இலக்கிய வகைகள் உள்ளதாகத் தெரிகிறது.
பெரியாழ்வார் கண்ணனைத் தாலாட்டி, செங்கீரையாட்டி, சப்பாணி கொட்டி, தளர்நடை போடுவதை மிக அழகாகப் பாடியுள்ளார்; அதுவே பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாகக் கொள்ளலாம். ஒட்டக்கூத்தர் இயற்றிய “இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் ” முதல் பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும்.
இறைவனையோ மனிதர்களையோ குழந்தையாக எண்ணிப் பாடப்படுவதே பிள்ளைத்தமிழாகும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரண்டு பால்களிலும் பாடப்படுவதுண்டு. மூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கைக் காலத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்து, ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் என அமைத்துப் பாடப்படுவது வழக்கமாகும்.
ஆண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது. பெண்பாற் பிள்ளைத்தமிழில் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, நீராடல், அம்மானை, ஊஞ்சல் எனும் பருவங்களைக் கொண்டது.
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் (குமரகுருபரர்), சேக்கிழார் பிள்ளைத்தமிழ் (திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை) போன்ற பிள்ளைத்தமிழ் நூல்கள் சிறப்பானவை.
பூவாதலையா வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது. இன்று மும்பை அணி தொட்டதெல்லாம் பொன்.
அதன் தொடக்க வீரர்கள் ரியன் ரிக்கிள்டன் (38 பந்துகளில் 61 ரன், 7 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ரோஹித் ஷர்மா (36 பந்துகளில் 53 ரன், 9 ஃபோர்) சிறப்பான தொடக்கம் தந்தனர்.
அவர்கள் ஆட்டமிழந்த பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் (23 பந்துகளில் 48 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ஹார்திக் பாண்ட்யா (23 பந்துகளில் 48 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் மிக அருமையாக ஆடினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி இரண்டு விக்கட் இழப்பிற்கு 217 ரன் எடுத்தது.
218 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு மட்டையாளர்கூட இன்று சரியாக ஆடவில்லை.
எட்டாவது இடத்தில் இறங்கிய ஜோஃப்ரா ஆர்ச்சர் (27 பந்துகளில் 30 ரன்) தவிர மற்ற வீரர்களான யசஸ்வீ ஜெய்ஸ்வால் (6 பந்துகளில் 13 ரன்), வைபவ் சூர்ய வன்ஷி (பூஜ்யம் ரன்), நிதீஷ் ராணா (9 ரன்), ரியன் பராக் (16 ரன்), துருவ் ஜுரல் (11 ரன்), ஷிம்ரோன் ஹெட்மயர் (பூஜ்யம் ரன்), சுபம் துபே (15 ரன்), தீக்ஷணா (2 ரன்), குமார் கார்த்திகேயா சிங் (4 ரன்) என அனைத்து மட்டையாளர்களும் இன்று மும்பை அணியின் பந்துவீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் திணறினார்கள்.
போல்ட், பும்ரா, கர்ண் ஷர்மா, பாண்ட்யா, தீபக் சாஹார் என அனைத்து பந்துவீச்சாளர்களும் துல்லியமாக பந்துவீசினார்கள்; விக்கட் எடுத்தார்கள்.
மும்பை அணி ஆட்டத்தின் அனைத்து துறைகளிலும் இன்று சிறப்பாகச் செயல் பட்டது.
மும்பை அணியின் தொடக்க வீரர் ரியன் ரிக்கிள்டன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.