Home Blog Page 268

கார்த்திகை தீபம்: பழனி மலையில் ஏற அனுமதி மறுப்பு!

1783428 palani murugan temple - 2026

பழனி மலைக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இன்று சனிக்கிழமை 6-ம் நாள் நிகழ்ச்சியாக சாய்ரட்சை பூஜையின் போது பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சாய்ரட்சை பூஜையின் போது மூலவர் சன்னிதியில் தீபம் ஏற்றப்பட உள்ளது.

இதையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு மேல் பக்தர்கள் மலைக் கோயிலுக்கு மேலே அனுமதிக்கப்பட மாட்டார்கள். விழா முடிந்த பிறகு மாலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

வாண வேடிக்கை காட்டும் சிவகாசியில், ‘வானம்’ காட்டிய வேடிக்கை!

sivakasi rainbow - 2026
#image_title

சிவகாசியில், வானத்தை வளைத்த ‘வானவில்’
பார்த்து, ரசித்து, படம் எடுத்து மகிழ்ந்த மக்கள்!

‘வானவில்’லை பார்ப்பதற்காக, மழைக் காலத்தில் காத்திருக்க வேண்டும். மழைக் காலத்தின் எல்லா நாட்களிலும் வானவில்லை பார்க்க முடியாது. வானவில் என்பது வானில் தெரியும் அற்புத அதிசயமாகவே இன்றளவும் இருந்து வருகிறது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை நேரங்களில், வழக்கம் போல வெயில் குறைவில்லாமல் இருந்தது. பிற்பகலில் அவ்வப்போது குளிர்ந்த காற்றுடன் தூறல் மழை பெய்தது.

மாலை நேரத்தில் மேகங்கள் திரண்டு வந்த நிலையில், லேசான தூறல் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது வானத்தில் லேசான வண்ணங்களில், மெலிதான வடிவில் வானவில் தோன்றியது. இரண்டு, மூன்று நிமிடங்களில் அடர்த்தியான ஏழு வண்ணங்களுடன் பளிச்சென்று வானவில் தெரிந்தது.

சிவகாசி பேருந்து நிலையப் பகுதி, விளாம்பட்டி சாலை, மீனம்பட்டி சாலை, திருத்தங்கல் சாலை பகுதிகளில், வானவில் மிக நன்றாக காணப்பட்டது. சுமார் இரண்டு நிமிடங்கள் மட்டுமே தெரிந்த வானவில்லை, அந்தப் பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். ஆர்வமிக்க சிலர் தங்களது செல்போன்களில், ‘வானவில்’லை படம் பிடித்து, தங்களது நண்பர்களுக்கு அனுப்பி வைத்து மகிழ்ந்தனர்.

மதுரை மாவட்டத்தில் தொடர் மழை: வைகையில் நீர்வரத்து அதிகரிப்பு!

vaigai dam water level - 2026
#image_title

மதுரை: மதுரை மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மதுரை அருகே உள்ள சோழவந்தான், வாடிப்பட்டி, அழகர் கோவில், திருப்பாலை, திருப்பரங்குன்றம், சத்திரப்பட்டி, கருப்பாயூரணி, திருமங்கலம் ஆகிய பகுதிகளில் இன்றும் மழை பெய்தது. மதுரை நகரில் காலை முதலே மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

மதுரை நகரில் பெய்து வரும் மழையால், பல தெருக்களில் சாலையில் மோசம் அடைந்து பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

பல இடங்களில் மதுரை மாநகராட்சியினர் குடிநீர் திட்ட பணிக்காக சாலையில் பள்ளம் தோன்றியதால், பலர் தடுமாறி விழ நேரிட்டது . மேலும், சாலை ஓர பள்ளங்களை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சரிவர மூடாததால், ஆங்கே மழை நீர்கள் குளம் போல தேங்கியுள்ளன.

மதுரை நகரில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், கொசு தொல்லை பெருகி வருகிறது. ஆகவே, மதுரை மாநகராட்சி நிர்வாகம் சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை அண்ணாநகர் தாசில்தார் நகர் வீரவாஞ்சி தெரு, சௌபாக்கிய விநாயகர் கோயில் தெருக்களில்( வார்டு எண் 36, 37) களில், குழாய்களை பதிக்க மதுரை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் தோண்டும் போது பல இடங்களில் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு சீர் செய்யததால், வீரவாஞ்சி தெருவில் கடந்த இரண்டு மாதங்களாக குழாய்களில் குடிநீர் வரவில்லையாம்.

ஆகவே, பொதுமக்கள் தனியார் குடிநீர் லாரிகளில், தண்ணீரை விலைக்கு வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை மாநகராட்சி தலைமைப் பொறியாளர், செயற்பொறியாளர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்னையை தீர்க்க சமூக ஆர்வலர்கள்  கோரியுள்ளனர்.

பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்ற வலியுறுத்தி ஆர்பாட்டம்; இந்து முன்னணியினர் கைது!

thiruparankundram murugan pallakku - 2026
#image_title

மதுரை அருகே பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை, திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி சார்பில் மலை மேல் கார்த்திகை தீபம்யேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றறது. மதுரை தெற்கு காவல் துணை ஆணையர் பிரதிப் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம் மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்ற இந்து முன்னணி இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா போன்ற அமைப்புகள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள விநாயகர் கோவில் அருகே உள்ள மோட்ச தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.

இந்து அமைப்புகளோ மலைமேலுள்ள கார்த்திகை தீபத் தூணில் நீண்ட காலமாக கார்த்திகை தீபம் ஏற்ற கோரி இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் 16 கால் மண்டபத்திலிருந்து
கார்த்திகை தீபம் ஏற்ற ஊர்வலமாக புறப்பட்டனர்.

திருப்பரங்குன்றம் பகுதியில் கார்த்திகை தீபம் தொடர்பாக ஊர்வலம் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் தலைமையில்
மாநில செயலாளர் சேவகன் அரசு பாண்டி கோட்டச் செயலாளர் கலாநிதி மாறன் மாவட்டச் செயலாளர் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட இந்து முன்னணியினர், போலீசார் தடையை மீறி ஊர்வலம் சென்றனர். இதனை அடுத்து, போலீசார் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட அனைவரையும்  கைது செய்தனர்..

திருவண்ணாமலை தீபம்; அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

file picture

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை மகா தீபம் காண பக்தர்கள் அலைமோதி வருகின்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா, கடந்த, 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

முக்கிய நிகழ்வாக நாளை, பஞ்ச பூதங்கள் ‘ஏகன், அனேகன்’ என்பதை விளக்கும் வகையில் அதிகாலை, 4:00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம், ‘அனேகன், ஏகன்’ என்பதை விளக்கும் வகையில் மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயர மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்படவுள்ளது.

மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும். தீபம் ஏற்ற, 4,500 கிலோ நெய், 1,150 மீட்டர் காடா துணியால் ஆன திரி தயாராக உள்ளன. விழாவை முன்னிட்டு, சுவாமி சன்னதி முழுவதும் ரோஜா, சாமந்தி உள்பட பூக்களால் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.

கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோவில் வளாக கலை அரங்கில் சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி, ஆன்மிக பாடல்கள் ஒலித்தபடி, விழா களை கட்டியுள்ளது.

தேஜஸ் போர் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி! புதிய பெருமை!

pm modi in tejas - 2026
#image_title

புதிய பெருமை: பிரதமர் மோடி

பாரதத்திலேயே உருவாக்கப்பட்ட உள்நாட்டு போர் விமானமான தேஜஸ் போர் விமானத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பறந்து சென்று ஆய்வு நடத்தினார்.

தேஜஸ் விமானத்தில் பயணம் செய்தது வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு செழுமைப்படுத்தியது, நமது நாட்டின் பூர்வீக திறன்கள் மீதான எனது நம்பிக்கையை கணிசமாக உயர்த்தியது, மேலும் நமது தேசிய திறனைப் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு அளித்தது என்று இந்த பறந்த பயண அனுபவம் பற்றி பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை (எச்ஏஎல்) பார்வையிட்ட பிரதமர் மோடி, அங்கு தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்தார். இது புதிய அனுபவமாக இருந்ததாக அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல்., – ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம், நமது பாரத ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள், இலகு ரக ஹெலிகாப்டர்கள், இலகு ரக போர் விமானங்கள் ஆகியவற்றை தயாரித்து வடிவமைத்து வருகிறது. இந்நிறுவனத்திடம் எஸ்.யூ., 30 எம்.கே. ஐ.,ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

இது தொடர்பாக அங்கு நடைபெற்று வரும் உற்பத்தி மற்றும் வடிவமைப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய இன்று காலை பிரதமர் மோடி பெங்களூரு வந்தார். எச்ஏஎல் நிறுவனத்தின் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த பிரதமர் மோடி, திடீரென தேஜஸ் போர் விமானத்தில் பறக்கத் தயாராகி, அதில் பயணம் மேற்கொண்டார்.

இது தொடர்பான புகைப்படங்களையும் வீடியோவையும் வெளியிட்டு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். அதில் தேஜஸ் மூலம் புதிய பெருமை கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தபோது, இரட்டை இன்ஜின் கொண்ட பயிற்சி தேஜஸ் விமானத்தில் பிரதமர் மோடி பயணித்தார். தேஜஸ் போர் விமானம் கடந்த அக்.4ஆம் தேதி இந்திய விமானப்படையில் , மத்திய அமைச்சர் அஜய் பட் மற்றும் விமானப்படை தளபதி சவுத்ரி முன்னிலையில் இணைக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில்: ‘108’ போர்வை சாற்றும் வைபவம்!

andal kaisiki ekadasi 108 vastram - 2026
#image_title

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில், ‘108’ போர்வை சாற்றும் வைபவம் நடைபெற்றது.

கார்த்திகை கௌசீக ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீ பூ சமேத வடமஹா தாமஸ்வாமி (மற்றும்) ஸ்ரீ கோதா சமேத ராஜகோபால ஸ்வாமிக்கும் ஆழ்வார் ஆச்சரியர்களுக்கும் 108 போர்வை வைபவம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில், பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில் குளிர்காலம் தொடங்கியதை அறிவிக்கும் வகையில், கார்த்திகை மாத கைசிக ஏகாதசி திருநாள் கொண்டாடப்பட்டது.

கைசிக ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீஆண்டாள் கோவிலில் உள்ள சுவாமிகளுக்கு ‘108’ பட்டு புடவைகள் அணிவிக்கும் போர்வை சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீஆண்டாள் கோவிலில் உள்ள வடபத்ரசயனர் சந்நிதி மண்டபத்தில் ஸ்ரீதேவி – பூதேவி சமேத பெரியபெருமாள், ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார், கருடாழ்வார், பெரியாழ்வார் உள்ளிட்ட 12 ஆழ்வார்கள் எழுந்தருளினர்.

சுவாமிகள் அனைவருக்கும் 108 போர்வைகள் சாற்றப்பட்டது. இதைனையடுத்து அரையர் சேவையும், வேதபிரான் பட்டர் கைசிக புராணம் வாசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தாய்லாந்தில் உலக ஹிந்து மாநாடு: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பேச்சு!

hindu world conference - 2026
#தாய்லாந்தில் தொடங்கியது உலக ஹிந்து மாநாடு

தாய்லாந்தின் பாங்காக் நகரில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் உலக ஹிந்து மாநாடு 2023 பிரம்மாண்டமாகத் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

‘ஜெயஸ்ய ஆயத்னம் தர்மா’ (தர்மம், வெற்றியின் உறைவிடம்) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இம்மாநாடு, இந்துக்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு சவால்களை எதிர்கொள்ளவும், சாதனைகளை கொண்டாடவும், செழுமை மற்றும் நீதி, அமைதிக்கான பொதுவான லட்சியத்தை சாதிக்கவும் வழிசெய்கிறது.

உலகம் முழுவதுமுள்ள ஹிந்து சமூகத்தை ஒன்றிணைக்கும் வகையில், தாய்லாந்தின் பாங்காக் நகரில் “உலக இந்து மாநாடு 2023” இன்று தொடங்கி 26-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பகவத், மாதா அமிர்தானந்தமயி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

மேலும், ஜோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, விஞ்ஞானியும் எழுத்தாளருமான ஆனந்த் ரங்கநாதன், வரலாற்றாசிரியர் விக்ரம் சம்பத் உள்ளிட்டோர் சொற்பொழிவாற்றுகிறார்கள். தவிர, ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறங்காவலர் மற்றும் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி, திரைப்படத் தயாரிப்பாளர் விபுல் ஏ ஷா, பாரதத்தின் மிகப்பெரிய மருத்துவ சாதன உற்பத்தியாளர்களும் ஸ்கன்ரே டெக்னாலஜி நிறுவனர்களுமான விஸ்வபிரசாத் ஆல்வா, ஸ்டான்போர்ட் உள்ளிட்ட வல்லுநர்களின் பேச்சுக்களும் இடம்பெறுகிறது.

அதேபோல, பல்கலைக்கழக பேராசிரியர் அனுராக் மைரல், நேபாள கோடீஸ்வரர் உபேந்திரா மஹதோ, பாகிஸ்தானின் மனித உரிமை ஆர்வலர் ஃபகர் ஷிவா கச்சி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

மாநாட்டில், உலக இந்து பொருளாதார மன்றம், இந்து கல்வி மாநாடு, இந்து ஊடக மாநாடு, இந்து அரசியல் மாநாடு, இந்து பெண்கள் மற்றும் இளைஞர் மாநாடுகள், இந்து அமைப்புகள் மாநாடு உட்பட 7 விதமான தலைப்புகளில், இணை மாநாடுகளும் நடைபெறுகின்றன.

60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் இம்மாநாடு, இந்து சமூகத்தின் முன்பிருக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஆராயவும், விவாதிக்கவும் ஒரு விரிவான தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. மேலும், இந்து ஊடக மாநாடு, விவாதப் பொருட்களை வடிவமைப்பதில் ஊடகத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது.

செய்தி ஊடகங்கள், டிஜிட்டல் செய்தி ஊடகங்களில் போலி விவாதப் பொருட்களை எதிர்கொள்ளுதல், பேச்சு சுதந்திர பிரச்சனைகள், சினிமாவை மறு கட்டமைப்பு செய்து மீட்டெடுத்தல், பொழுதுபோக்குத் துறையில் உள்ள இந்துக்களுக்கு எதிரான வெறுப்புநிலையை எதிர்கொள்ளுதல், தீவிர இடதுசாரித்தனத்தை எதிர்கொள்ளுதல் ஆகியவற்றில் இந்த மாநாடு கவனம் செலுத்தும்.

இந்து பெண்கள் மற்றும் இளைஞர் மாநாடுகள், இந்து மறுமலர்ச்சியில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் ஆக்கப்பூர்வ பங்களிப்புகளை அங்கீகரிக்கும். இந்துக் கோவில்களை அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும். பிற மதத்தினர் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருக்கும் கோவில் நிலங்களை மீட்க வேண்டும்.

உலகம் முழுவதும், இந்துக்களுக்கு எதிராக நடக்கும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும். உலகளாவிய இந்துக்களிடம் பொதுவான பார்வை மற்றும் லட்சியத்தை உருவாக்குவதே மாநாட்டின் சாராம்சம். மாநாடு, ஒரு மகத்தான பயணத்தின் தொடர்ச்சியாகும். இது, உலகம் முழுவதும் உள்ள இந்துக்களின் ஒற்றுமையை பறைசாற்ற இருக்கிறது.

மகிழ்ச்சியையும், அமைதியையும் உலகம் பெற பாரதம் வழிகாட்டும் என மக்கள் நம்புகின்றனர் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் நடந்த ‘உலக ஹிந்து காங்கிரஸ் 2023’ மாநாடு இன்று( நவ.,24) முதல் நவ.,26 வரை நடக்கிறது.

இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:

உலகம் ஒரே குடும்பம். பொருள், மகிழ்ச்சிக்கான அனைத்து வழிகளையும் கையகப்படுத்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்கின்றனர். இதனை நாம் அனுபவித்து உள்ளோம்.

இன்றைய உலகம் தடுமாறி கொண்டு உள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகளாக மகிழ்ச்சி, பேரின்பம், அமைதியைக் கொண்டு வர மனிதர்கள் பல சோதனைகளை மேற்கொண்டனர். கம்யூனிசம், முதலாளித்துவத்தையும் முயற்சி செய்தனர். பல்வேறு மதங்களை வழிபட்டனர். அவர்கள் பொருட்களின் செழிப்பை அனுபவித்தனர். ஆனால், திருப்தியும், மகிழ்ச்சியும் இல்லை.

கோவிட் காலத்திற்கு பிறகு அவர்கள் மீண்டும் சிந்திக்கின்றனர். மகிழ்ச்சியையும், அமைதியையும் பெற பாரதம் வழிகாட்டும் என உலகம் நம்புகிறது. பாரதத்தில் அதற்கான பாரம்பரியம் உள்ளது. இதனை முன்னரே பாரதம் செய்துள்ளது. இந்த நோக்கத்திற்காக தான் நமது சமூகமும், நாடும் உருவானது.

சில மாதங்களுக்கு முன்பு, உலக முஸ்லிம் கவுன்சில் அமைப்பின் பொதுச்செயலாளர், பாரதம் வந்த போது, உலகில் நல்லிணக்கம் நிலவுவதற்கு பாரதம் முக்கிய பங்கு வகிக்கும் என்றார். அதுவே நமது கடமை. இதற்காக தான் ஹிந்து மதம் உருவானது… என்று மோகன் பகவத் பேசினார்.

ஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..

IMG 20231125 WA0024 - 2026
சபரிமலை சிறப்பு ரயில்

சபரிமலை செல்லும் தென்காசி விருதுநகர் சிவகங்கை மாவட்ட ஐயப்ப பக்தர்களே உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி யான் செய்தி ஐயப்ப பக்தர்கள் மற்றும் பயணிகள் நலன் கருதி எர்ணாகுளம் முதல் காரைக்குடி வரை செங்கோட்டை ராஜபாளையம் விருதுநகர் வழியாக சபரிமலை சிறப்பு ரயில் ஐந்து முறை வியாழன் தோரும் இயக்கப்படுகிறது.

எர்ணாகுளம்-காரைக்குடி சிறப்பு இரயில்(06019)வியாழன்தோறும் 30.11.23 முதல் 28.12.23 வரை(5 சேவைகள் இயக்க ப்படுகிறது.

எர்ணாகுளத்தில் அதிகாலை 04:45க்கு கிளம்பி, புனலூர் காலை 10:45 மணி, தென்மலை பகல் 11:43, ஆரியங்காவு மதியம் 12:25 மணி,
செங்கோட்டை மதியம் 13:15 மணி, ராஜபாளையம் மதியம் 14:40 மணி, காரைக்குடி இரவு 19:00 மணிக்கு சென்று சேரும்.

மறுமார்கத்தில், காரைக்குடி-எர்ணாகுளம் சிறப்பு இரயில்(06020)வியாழன்தோறும் 30.11.23 முதல் 28.12.23 வரை 5 சேவைகள் காரைக்குடியில் நள்ளிரவு 23:30க்கு கிளம்பி, விருதுநகர் வழி ராஜபாளையம் நள்ளிரவு(வெள்ளி) 03:00 மணி,செங்கோட்டை அதிகாலை 04:20 மணி, ஆரியங்காவு அதிகாலை 04:46மணி, தென்மலை அதிகாலை 05:15 மணி, புனலூர் காலை 06:55 மணி, எர்ணாகுளம் பகல் 11:40 மணிக்கு சென்று சேரும்,

இந்த ரயில் மூலம் ஐயப்பன் படை வீடு கோவில்களான
அச்சன்கோவில் ஆரியங்காவு கோவில்
தென்மலை அருகில் உள்ள குளத்துப்புழா கோவில்
புனலூர்- பம்பை, எருமேலி & சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லலாம்.

சபரிமலை பயணிக்கும் ஐயப்ப சுவாமிமார்கள் இந்த சபரி சிறப்பு இரயில் சேவையைப் பயன்படுத்தி சபரிமலை யாத்திரையை நிறைவாக மேற்கொள்ளலாம்.

கடந்த ஆண்டு சபரிமலை சீசனுக்கு எர்ணாகுளம் தாம்பரம் இடையே புனலூர் செங்கோட்டை ராஜபாளையம் வழியாக சிறப்பு முறையில் திங்கட்கிழமை தோறும் இயக்கப்பட்டது இந்த ரயிலுக்கு மிக நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த ஆண்டு சபரிமலை சீசனுக்கு இயக்கப்படும் என பக்தர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர் .

ஆனால் தென்னக ரயில்வே தற்போது எர்ணாகுளம் வேளாங்கண்ணி இடையே சனி மற்றும் திங்கட்கிழமையில் விரைவு ரயில் இயக்கி வருவதால் தற்போது வியாழக்கிழமை தோறும் காரைக்குடி எர்ணாகுளம் காரைக்குடி இடையே சிறப்புரையில் இயக்கம் முன்வந்துள்ளது.

இது பக்தர்களுடைய பெரும் வரவேற்பு பெற்றுள்ளது பக்தர்கள் இந்த ரயிலை அதிக அளவில் பயன்படுத்தினால் நிரந்தர ரயிலாக தினசரி எர்ணாகுளம் ராமேஸ்வரம் இடையே இயக்க வாய்ப்பு உள்ளது.

செல்போன் ரீசார்ஜ் செய்தால்… Gpay-யில் ரூ.3 கூடுதல் கட்டணம்!

cellphone in hall - 2026

UPI சேவையைப் பயன்படுத்தி நீங்கள் மொபைல் ஃபோன்களை ரீசார்ஜ் செய்தால், பயனர்களுக்கு Google Pay ரூ.3 என்ற புதிய கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பயனர்கள், Google Pay மூலம் ப்ரீபெய்டு திட்டங்களை ரீ சார்ஜ் செய்யும்போது இந்தக் கட்டணம் பொருந்தும். இது போன்ற பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற கூகுள் பே ஆப்ஸின் முந்தைய கொள்கையில் இருந்து இது மாறியிருக்கிறது.

ஜி-பேயின் இந்த சமீபத்திய நடவடிக்கை, Paytm மற்றும் PhonePe போன்ற பிற கட்டண தளங்களுடன் சீரமைக்கிறது, காரணம் இவை ஏற்கனவே இதே போன்ற பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கின்றன.

இந்த மாற்றம் இருந்தபோதிலும், கூகிள் அதன் கட்டண பயன்பாட்டில் கூடுதல் வசதிக்கான கட்டணங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஒரு வாடிக்கையாளர் ஆன்லைனில் இது குறித்த ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்தார். அதில், ரூ. 3 பயன்பாட்டு வசதிக் கட்டணம் ஜியோவிடமிருந்து ரூ.749 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை மேற்கொண்ட போது பெறப்பட்டிருக்கிறது. செய்திகளின்படி, UPI மற்றும் கார்டு பரிவர்த்தனைகள் இரண்டிற்கும் கட்டணம் பொருந்தும்.

அந்த பயனர், தனது எக்ஸ் தள (ட்விட்டர்) பதிவில் கூடுதல் விவரங்களை அளித்துள்ளார். ரூ.100க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்களில் இந்த வசதிக் கட்டணம் பொருந்தாது. எனினும், ரூ. 100 முதல் ரூ. 200 வரையிலான ரீசார்ஜ்களுக்கு ரூ.2 பயன்பாட்டுக் கட்டணம், மற்றும் ரூ. 200 முதல் ரூ. 300 ரீசார்ஜ்க்கு ரூ. 3 கட்டணம், மற்றும் ரூ.300க்கு மேற்பட்ட ரீசார்ஜ்களுக்கு ரூ. 3 பயன்பாட்டு வசதிக் கட்டணமாக வசூலிக்கப்படுமாம்.

கூகுள் சமீபத்தில் இந்திய பயனர்களுக்கான தனது சேவை விதிமுறைகளை புதுப்பித்துள்ளது, அதன் மூலம், இது புதிய வசதிக் கட்டணங்களை அது வெளியிட்டுள்ளது. இருப்பினும், இது நவ.10ம் தேதி புதுப்பிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக இருந்ததா என்பது தெளிவாக இல்லை.

எனினும், கூகுள் பே மூலமான பரிவர்த்தனையை முடிப்பதற்கு முன், பொருந்தக்கூடிய கட்டணங்கள் குறித்து பயனர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று விதிமுறைகள் கூறுகின்றன. நிறுவனத்தின் விருப்பப்படி கட்டணம் நிர்ணயிக்கப்படலாம் என்றும் விதிமுறைகள் குறிப்பிடுகின்றன.

சுவாரஸ்யமாக, புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள் இருந்த போதிலும், வியாழன் அன்று Google Pay மூலம் Airtel மற்றும் Jio ரீசார்ஜ் திட்டங்களை வாங்க முயற்சிக்கும்போது, ஒரு எண்ணை ரீசார்ஜ் செய்தபோது கூடுதல் கட்டணங்கள் எதையும் அது விதிக்கவில்லை. அதாவது, ஆபரேட்டரின் இணையதளத்தில் இருந்து நேரடியாக ரீசார்ஜ் திட்டங்களை வாங்குவதே இந்த வசதிக் கட்டணங்களைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி என்று தெரிகிறது.

Google Pay கொள்கையில் இந்த மாற்றம் Paytm மற்றும் PhonePe போன்ற பிற கட்டணச் சேவை வழங்குநர்களால் அமைக்கப்பட்ட போக்கைப் பின்பற்றுகிறது. பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் தங்கள் தளங்கள் மூலம் பணம் வசூலிப்பதை அது நோக்கமாகக் கொண்டுள்ளது. உணவுகளை ஆர்டர் செய்தல் அல்லது திரைப்பட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தல் போன்ற பணிகளுக்கு இதே போன்ற கட்டணங்கள் பல்வேறு ஆன்லைன் சேவைகளால் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டுள்ளன.