Home Blog Page 5629

மும்பையில் தொடங்கியது ரஜினியின் ‘காலா’ படப்பிடிப்பு: புகைப்படங்கள் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி!

IMG 20170528 WA0047 - 2026
IMG 20170528 WA0050 - 2026
IMG 20170528 WA0048 - 2026
IMG 20170528 WA0049 - 2026

 

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில்
இன்று தொடங்கியது.

கபாலி படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணி மீண்டும்
இணைந்துள்ள படம் காலா. ரஜினியின் 164வது படமாக உருவாக உள்ள இப்படத்தை
ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன்
இசையமைக்கிறார்.

காலா’ படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளின் பர்ஸ்ட் லுக்
போஸ்ட்ர்களை தயாரிப்பாளர் தனுஷ் அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில்
வெளியிட்டார். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் மே 28ம் தேதி
மும்பையில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என படக்குழு அறிவித்தது.

‘காலா’ படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னையிலிருந்து
மும்பைக்கு சென்றார் ரஜினி.

இந்நிலையில், மும்பை தாராவி பகுதியில் இன்று படப்பிடிப்பு தொடங்கியது. காலா
படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
ரஜினி தாடி மற்றும் கருப்பு கண்ணாடி, வேஷ்டி சகிதமாக ஸ்டைலாக நிற்கும் அந்த
புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில் நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி உள்ளிட்ட நடிகர்கள் உள்ளனர்.

இணையத்தில் வெளியான இந்த புகைப்பட விவகாரம் காலா படக்குழுவினர் அதிர்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது.

இலங்கை வெள்ளத்தில் 122 பேர் பலி: மீட்பில் ராணுவம்; நிவாரணப் பொருள்களுடன் இந்தியக் கப்பல்

srilanka flood ins ship army - 2026

கொழும்பு :

இலங்கையில் கன மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது. இதனை இலங்கை தேசிய பேரிடர் மீட்புக் குழு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. நிவாரணப் பணிகளுக்கு சர்வதேச உதவியை இலங்கை கோரியுள்ளது. 2003க்குப் பின்னர் மிக மோசமான வெள்ள நிலையில் இலங்கை தவித்து வருகிறது.

வெள்ளத்துக்கு 90 பேர் உயிரிழந்ததாக அறிவித்திருந்த நிலையில், தற்போது பலி 122 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 97க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இலங்கையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கீலனி ஆற்றையொட்டி வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு இலங்கை தேசிய பேரிடர் மீட்பு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும், தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

srilanka flood ins ship - 2026

இந்நிலையில் இந்திய தரப்பில் கொச்சி கடற்படைத் தளத்தில் இருந்து உடனடியாக 3 கப்பல்கள் இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு விரைந்தன. சனிக்கிழமை கொழும்பு வந்து சேர்ந்த கப்பலில், உணவு, மருந்துகள், நிவாரணப் பொருள்கள் ஆகியவை வந்தன. உடன் மருத்துவர்கள் குழுவும் வந்திறங்கியது.

மேட்டூரை தூர்வாரும் பணி தொடக்கம்: 83 வருடத்துக்குப் பிறகு விழித்திருக்கிறது அரசு!

mettur dam - 2026

சென்னை:

83 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று முதல் மேட்டூர் அணை தூர்வாரப்பட உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தப் பணியைத் தொடங்கி வைக்கிறார்.

மேட்டூர் அணை கட்டப்பட்டு 83 ஆண்டுகள் ஆகிறது. இந்த அணை கட்டப்பட்ட பின்னர் இன்று தூர்வாரும் பணியை முதல்வர் தொடங்கி வைக்கிறார். மேட்டூர் அணை நீரால், தமிழகத்தில் காவிரி பாசன மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் நீர் வசதி பெறுகிறது. அணை தூர்வாரப்படாததால் வெள்ளப்பெருக்கு மற்றும் மழை காரணமாக, 20 சதவீத அளவுக்கு சகதி படிந்துள்ளதாம். இதனால் மேட்டூர் அணையில் முழு கொள்ளளவில் தண்ணீரை சேமிக்க இயலவில்லை. இந்நிலையில், வாப்காஸ் நிறுவனம் மூலம் வண்டல் மண் படிந்துள்ள இடங்கள் எவ்வளவு என்பது குறித்து ஆய்வும், அவற்றை அப்புறப்படுத்தும் முறைகளும் ஆலோசிக்கப்பட்டன. மேலும் அணையில் இருந்து எடுக்கப்படும் மண்ணை விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகிக்க திட்டமிடப்பட்டது.

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 டிராக்டரும், மண்பாண்டம் செய்வோருக்கு 20 டிராக்டர்களும், கிராவல் மண் நபருக்கு 10 டிராக்டரும் அள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தப் பணியில் முதல் கட்டமாக சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணையின் வலது கரையில் பண்ணவாடி , மூலக்காடு பகுதிகளிலும் இடது கரையில் கூணாண்டியூர், கீரைக்காரனூர் பகுதிகளிலும், தர்மபுரி மாவட்டம் நாகமரை கிராமத்தில் ஆசாரி கிணற்றுப்பள்ளம், சித்தையன் கோவில் ஏரி பகுதிகளிலும் மேட்டூர் நீர் தேக்கத்தில் படிந்துள்ள வண்டல் மண்ணை அள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் மேட்டூர் அணை தூர் வாரும் பணி மற்றும் விவசாயிகள் வண்டல் மண் எடுக்கும் பணிகளை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

அணை தூர்வாரப்பட்டால், அணையில் கூடுதல் தண்ணீர் தேக்க முடியும். மேலும் தென் மேற்கு பருவ மழை அடுத்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. அவ்வாறு நீர் அதிகமாக வந்தால், கூடுதல் நீரை சேமித்து வைக்க இயலும்.

தனியார் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்

water can business in chennai - 2026

சென்னை:
தனியார் குடி நீர் கேன் உற்பத்தியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர்.

பொது மக்களின் குடிநீர் தேவையைத் தீர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் தனியார் குடிநீர் கேன்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பில் 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜி.எஸ்.டியில் 18 சதவீத வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து தனியார் கேன் உற்பத்தியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தெரிவித்திருந்தனர்.

இதை அடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள உற்பத்தியாளர்கள் இன்று மாலை முதல் போராட்டத்தை துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் குடிநீர் கேன்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்று தெரிகிறது.

அக்னி நட்சத்திர வெயிலுக்கு இன்று குட் பை: மழை வருமா என மக்கள் ஏக்கம்!

Regional Meteorological Center 1 - 2026

சென்னை:

மக்களை கடுமையாக வாட்டி வதைத்த அக்னி நட்சத்திர வெய்யில் இன்று முடிவுக்கு வருகிறது.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உணரப் பட்டது. கடந்த டிசம்பரில் தாக்கிய புயலால் மரங்கள் பல சாய்ந்ததில், காற்றுக்கும் பஞ்சம் வந்தது. வெப்பநிலையும் அதிகம் உணரப் பட்டது. கடும் வறட்சியின் காரணமாக பொதுமக்கள் குடிநீருக்கும் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இம்மாதம் 4ஆம் தேதி துவங்கிய அக்னி நட்சத்திர வெய்யில் பெரும்பாலான இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் சென்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் அதிகப்படியாக 110.48 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. சென்னையை அடுத்த திருத்தணியில் 114 டிகிரிக்கும் சென்றது. இந்நிலையில் தமிழகத்தை வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.

தென் மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால், வெப்பநிலை படிப்படியாகக் குறையும் என்று அவர் தெரிவித்தார்.

“காஞ்சி பெரியவரும் காந்திஜியும்….” ( பாலக்காடு அருகிலுள்ள நெல்லிசேரி கிராமத்தில்)

947129 585338794830241 865216797 n - 2026

“காஞ்சி பெரியவரும் காந்திஜியும்….”

( பாலக்காடு அருகிலுள்ள நெல்லிசேரி கிராமத்தில்) (மாலை ஐந்தரை மணி ஆகிவிட்டது.
காந்திஜி மாலை ஆறு மணிக்கு மேல் எதையும் சாப்பிட மாட்டார். ராஜாஜியின் மனம்
பரபரத்தது. வெளியே காத்திருந்த ராஜாஜி உள்ளே சென்று காந்திஜியிடம், அவரது
சாப்பாட்டு நேரத்தை நினைவுபடுத்தினார். ‘இனி எனக்கு உணவு தேவையில்லை.
பெரியவரின் சொல்லமுதத்தை செவி வழியே உண்டு பசியாறி விட்டேன்,” என பரவசத்துடன்
கூறினார்.)

மே 27,2017-தினமலர்-திருப்பூர் கிருஷ்ணன்.

1927ல் தென் இந்தியப் பயணம் மேற்கொண்டிருந்தார் காந்திஜி. பெரியவரைப் பற்றிக்
கேள்விப்பட்டிருந்த காந்திஜி, அவரைத் தரிசிக்க எண்ணினார். அப்போது பெரியவர்
பாலக்காடு அருகிலுள்ள நெல்லிசேரி கிராமத்தில் முகாமிட்டிருந்தார். அங்கு
ராஜாஜியுடன் காந்திஜி சென்றார். அங்கிருந்த ஒரு மாட்டுக் கொட்டகையில் பெரியவர்
அமர்ந்திருந்தார். அவர்கள் தனித்து உரையாடினர். ராஜாஜி கொட்டகையின் வெளியே
காத்திருந்தார்.

பெரியவருடனான சந்திப்பு காந்திஜிக்கு ஒரு தனித்த அனுபவமாக அமைந்தது.
ஆதிசங்கரரின் சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்த புகழ்மிக்க துறவி எளிமையே வடிவாக,
மாட்டுக்கொட்டகை தரையில் அமர்ந்திருந்தது காந்திஜியைக் கவர்ந்தது. எளிமை தானே
காந்திஜியின் உபதேசங்களில் தலையாயது.
சில நிமிடங்கள் காந்திஜியையே அருள்பொங்கப் பார்த்த பெரியவர், சமஸ்கிருதத்தில்
உரையாடினார். காந்திஜி அவரிடம், ”என்னால் சமஸ்கிருதத்தைப் புரிந்து கொள்ள
முடியும், ஆனால் உரையாடுமளவு தேர்ச்சி இல்லை. நான் உங்களுடன் இந்தியில்
பேசுகிறேன். நீங்கள் சமஸ்கிருதத்திலேயே பேசலாம்,” என்றார்.

பெரியவர் புன்முறுவல் பூத்தவாறே சமஸ்கிருதத்தில் கேள்விகளைக் கேட்டார்.
காந்திஜி பவ்வியமாக இந்தியில் பதிலளித்தார். அதுபோன்றே காந்திஜியின் இந்திக்
கேள்விகளில் பொதிந்திருந்த சந்தேகங்களுக்குப் பெரியவர் சமஸ்கிருதத்தில்
பதிலளித்தார்.

ஒரு மணிநேரம் அந்த சந்திப்பு நடந்தது. அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது
யாருக்கும் தெரியாது. அது தனிப்பட்ட சந்திப்பு என்பதால் பத்திரிகையாளர்கள்
யாரும் வரவில்லை. அவர்கள் பேச்சு எங்கும் பதிவாகவில்லை.

மாலை ஐந்தரை மணி ஆகிவிட்டது. காந்திஜி மாலை ஆறு மணிக்கு மேல் எதையும் சாப்பிட
மாட்டார். ராஜாஜியின் மனம் பரபரத்தது. வெளியே காத்திருந்த ராஜாஜி உள்ளே சென்று
காந்திஜியிடம், அவரது சாப்பாட்டு நேரத்தை நினைவுபடுத்தினார். ‘இனி எனக்கு உணவு
தேவையில்லை. பெரியவரின் சொல்லமுதத்தை செவி வழியே உண்டு பசியாறி விட்டேன்,” என
பரவசத்துடன் கூறினார்.

பெரியவரிடம், காந்திஜி விடைபெற்ற போது ஓர் ஆரஞ்சுப் பழத்தைக் கொடுத்து
ஆசீர்வதித்தார். ‘பழங்களிலேயே ஆரஞ்சு தனக்கு மிகவும் பிடித்தது’ என்று கூறி
காந்திஜி அதைப் பக்தியுடன் பெற்றுக் கொண்டார்.

காந்திஜி மறைந்த பிறகு, 1968ல் சென்னைப் பல்கலைக்கழகம் ‘காந்தியச்
சிந்தனைகளின் இன்றைய தேவை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தி மலர்
வெளியிட்டது. மலருக்காக பெரியவரிடம் வாழ்த்துச் செய்தி கேட்கப்பட்டது.

அந்த செய்தியில், ‘தன்னை யாரேனும் கொல்ல முயன்றாலும், தன்னைக் கொல்பவர் மீதும்
அன்பு செலுத்தும் மனம் தனக்கு அமைய பிரார்த்திக்கிறேன்,’ என்று காந்திஜி
தன்னிடம் கூறியதாக பெரியவர் குறிப்பிட்டிருந்தார்.

என்னை வேலை செய்ய விடுங்க: ஊடகத்தினருக்கு ரஜினி வேண்டுகோள்

kala rajinis new film - 2026

சென்னையில்ரஜினி திடீர் பேட்டி அளித்தார்பேட்டி விவரம்…

என்ன வேலை செய்ய விடுங்க – ஊடகத்தினருக்கு ரஜினி வேண்டுகோள்!

சென்னையில் ரஜினிகாந்த் திடீரென பேட்டியளித்தார். அப்போது, ஷூட்டிங் போய்ட்டு இருக்கேன். காலா ஷூட்டிங். பாம்பேல ஷூட்டிங்கிற்காக போய்கிட்டு இருக்கேன்.

ஷூட்டிங் நாளைக்கு ஸ்டார்ட் ஆகுது. அந்த ஷூட்டிங்குக்காக போய்க்கிட்டு இருக்கேன்.

என்னுடைய வேலை. என்னுடைய தொழில். அத கவனிக்க போய்க்கிட்டு இருக்கேன். இது உங்க வேலை. நீங்க பார்த்துட்டு இருக்கீங்க. என்னையும் வந்து என் வேலையை செய்ய விடுங்க. நன்றி வணக்கம். என்று கூறிச் சென்றார்.

அவன் உகக்கும் ரஸம்

நம்பெருமாள் மோஹினி அலங்கார சேவை, முன்னழகும் பின்னழகும்

ரங்கநாதன் சந்நிதிக்குச் செல்லும் படிகளொன்றில் உட்கார்ந்த வண்ணம் வயதான அரையர் ஒருவர் திருவாய்மொழிப் பாசுரங்களை மெல்லிய குரலில் இசைத்துக் கொண்டிருந்தார். அவர் கண்களிரண்டும் பார்வை இழந்து இருந்தன. எத்தனையோ நல்லவராய் இருப்பினும் சதா வெற்றிலை போடும் ஒரு பழக்கம் மட்டும் அவருக்கு இருந்ததால் மடியில் ஒரு வெற்றிலைச் செல்லமும் கிடந்தது.

அந்த வெற்றிலைப் பெட்டியில் வெற்றிலைப் பாக்குடன் ஒரு ஸாளக்கிராமத்தையும் வைத்திருந்தார் அரையர்,

பாக்கைத் தேடி பெட்டியைத் தடவினார் ஒருமுறை. ஸாளக்கிராமம் கிடைத்தது. அதைப் பாக்கென்று நினைத்து வாயில் போட்டுக் கடித்துப் பார்த்தார். ஸாளக்கிராமம் என்று தெரிந்ததும் அதை வாயிலிருந்து எடுத்து மேல் வேஷ்டியில் துடைத்து மீண்டும் பெட்டியில் போட்டுவிட்டார்.

பிறகு பாக்கொன்றை எடுத்து வாயில் போட்டு வெற்றிலையையும் சுண்ணம் தடவி கிழித்து மென்று சுவைக்கலானார்.

இது நடப்பது முதல் தடவையல்ல. தினமும் பலமுறை நடந்த விபரீதந்தான். இதை ஒரு மிக வைதீக வைஷ்ணவர் நீண்ட நாளாகப் பார்த்துக் கொண்டிருந்தார், அரையர் ஸாளக்கிராமத்துக்கு இழைக்கும் அநாசாரத்தையும் அபசாரத்தையும் அவரால் பொறுக்க முடியவில்லை.

ஆகவே ஒரு நாள் ஸ்வாமி தினம் பெருமாளை வாயில் போட்டு எச்சில் பண்ணுகிறீரே. இது நியாயமா?” என்று கேட்டார்.
”கண் தெரியவில்லை” என்றார் அரையர்,

அப்படியாயானால் பெருமாளே என்னிடம் கொடுமே. நான் ஆசாரமாக வைத்து ஆராதனம் செய்கிறேன்” என்றார்.

“தாராளமாக எடுத்துப் போம்” என்று ஸாளக்கிராமத்தை எடுத்து அந்த வைதிகரிடம் கொடுத்து விட்டார் அரையர்,

அன்று அந்த வைஷ்ணவப் பிராம்மணர் வீட்டில் ஒரே தடபுடல் சாளக்கிராமத்தை அவர் தனது கோவிலாழ்வாரில் எழுந்தருளப் பண்ணினார். திருமஞ்சனம் கண்டருளப் பண்ணி, புளியோதரை, தத்தியோதனம் முதலிய பிரசாதங்களேயெல்லாம் அமுது செய்வித்தார். சேவை, சாற்றுமுறைக்கு வேறு இரண்டு மூன்று ஸ்வாமிகளையும் எழுந்தருளப் பண்ணி அதையும் விமர்சையாகச் செய்து முடித்தார்.

அன்று நிம்மதியாகப் படுத்தார் அந்த வைதிகர். அவர் நல்ல துயில் கொண்டதும் பெருமாள் அவர் சொப்பனத்தில் வந்து ‘நீ எதற்காக என்னை அரையர் வெற்றிலப் பெட்டியிலிருந்து எடுத்து வந்தாய்’ என்று கேட்டார் கோபத்துடன்

‘ஸ்வாமி அங்கு உமக்கு அபசாரம் நடக்கிறது. அதனால் எடுத்து வந்தேன்’ என்றார் அந்த ஸ்வாமி,

“என்ன அபசாரம்?’ என்று பெருமாள் கறுவினர்.

“தேவரீரை தினம் பத்து தடவையாவது எச்சில் செய்கிறார் அரையர்’ என்று சொன்னார் அந்த ஸ்வாமி.

”அட பைத்தியக்காரா அது திருவாய்மொழி சொல்லும் வாயடா. தினம் அந்த ரஸத்தை சிறிது நேரமாவது நான் அனுபவிக்கிறேன். அதிலிருந்து என்னை பிரிந்து இந்த மரப் பெட்டியில் ஏன் அடைத்து வைத்திருக்கிறாய்? உடனே கொண்டுபோய் அரையர் பெட்டியில் என்னை சேர்த்து விடு” என்றார் பெருமாள்.

சொப்பனத்திலிருந்து விழித்து எழுந்து உட்கார்ந்தார் வைதிகர். பகவான் திருவுள்ளத்தை நினைத்து நினைத்து உருகினார். ”திருவாய்மொழி அனுசந்திக்கும் நாவே நாவு, அதில் ஊறும் நீரே அமுதம் அதுவே அவன் உகக்கும் ரஸம்” என்று சொல்லிக் கொண்டார்.

மறுநாளே பெருமாள் பழையபடி வெற்றிப்பெட்டிக்குள் பாக்குடன் கலந்து கிடந்தார். அரையர் கையும் ஒருமுறை பாக்கைத் தேடி பாக்குக்குப் பதில் ஸாளக்கிராமத்தை வாயில் போட்டு மீண்டும் எடுத்து துணியில் துடைத்து பெட்டியில் சேர்த்தது. வாய் திருவாய்மொழியை மெல்ல இசைத்தது.

சாண்டில்யன்,

கீதாசார்யன், நவம்பர் – 1978

நாட்டின் நீளமான பாலம் திறப்பு: வல்லரசுக் கனவு வடகிழக்கில் இருந்து தொடங்கட்டும் என மோடி பேச்சு!

dhola sadiya bridge opened by modi - 2026

கௌஹாத்தி:

வடகிழக்கு மாநிலங்களான அசாமின் தின்சுகியா மாவட்டத்துக்கு உட்பட்ட சாதியா நகருக்கும், அருணாசல பிரதேசத்தின் தோலாவுக்கும் இடையே, பிரம்மபுத்திராவின் கிளைநதியான லோஹித் நதியில் நாட்டின் மிக நீளமான பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

9.15 கி.மீ. தொலைவு கொண்ட இந்தப் பாலம் இந்தியாவிலேயே மிகவும் நீளமானது. மும்பையில் பந்த்ரா– ஒர்லி இடையே கடல் மீது கட்டப்பட்டு உள்ள பாலத்தை விட 3.5 கி.மீ. நீளம் அதிகமானது. மேலும் ஆசியாவில் 2–வது நீளமான பாலம் என்ற சிறப்பையும் இந்தப் பெற்றுள்ளது.

இதுவரை இதன் ஒரு கரையில் உள்ள மக்கள் மறுகரைக்கு சென்று வர பெரும்பாலும் படகுகள் உள்ளிட்ட நீர்வழி போக்குவரத்தையே நம்பியிருந்தனர். இப்போது இந்தப் பாலத்தால், பயண நேரம் 7 மணிவரை குறையும், 165 கி.மீ., தொலைவு பயண வழித் தடம் குறையும்.

3 பாதைகளைக் கொண்ட இந்தப் பாலம் கனரக ராணுவ வாகனங்களை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 60 டன் பீரங்கிகள் உள்ளிட்ட படைக்கலன்களை எடுத்து செல்லும் வகையில் கட்டப்பட்டிருக்கிறது. சீன எல்லையில் இருந்து 100 கி.மீ. தொலைவுக்குள் உள்ள இந்தப் பாலம் தேசிய நெடுஞ்சாலை–37–ல் ரூபாலி (அசாம்) நகரையும், தேசிய நெடுஞ்சாலை–52–ல் மேகா (அருணாச்சல பிரதேசம்) பகுதியையும் இணைக்கிறது. கடந்த 2011–ம் ஆண்டு இந்த பாலத்தின் கட்டுமானப்பணிகள் தொடங்கியது. ரூ.2056 கோடி செலவில் பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தின் திறப்பு விழா, அதன் அசாம் முனையான சாதியா நகரில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பாலத்தை திறந்துவைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பாலத்தை திறந்து வைத்த பின்னர், பாதுகாப்பு வீரர்கள் யாரும் இல்லாமல் பாலத்தில் தனியாக நடந்து சென்றார் பிரதமர். சிறிது தொலைவு சென்ற அவர், பாலத்தின் கீழே ஓடும் பிரம்மபுத்திரா நதியின் அழகையும், பாலத்தின் கம்பீரத்தையும் கண்டு ரசித்த பின்னர் வாகனம் மூலம் பாலத்தின் மற்றொரு முனையான அருணாசல பிரதேசத்தின் தோலாவுக்கு சென்று விட்டு, மீண்டும் சாதியாவுக்கு திரும்பினார்.

தொடர்ந்து சாதியா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். மத்திய அரசின் 3 ஆண்டு நிறைவையொட்டி நடந்த இந்தக் கூட்டத்தில் அவர் பேசியபோது,

தனது இசையாலும், பாடல்களாலும் தேச ஒற்றுமைக்கு அவர் அயராது பாடுபட்டார் சாதியாவை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற பாடகர் புபென் ஹசரிகா. தற்போது திறக்கப்பட்ட இந்த பாலத்துக்கு அவரது பெயரே சூட்டப்படுகிறது.

இந்த பாலம் அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச மக்களின் நெருக்கத்துக்கு வழிவகுக்கிறது. இதன் மூலம் இரு பிராந்தியங்களுக்கு இடையிலான தொலைவு 165 கி.மீ. வரை குறைக்கப்படுவதுடன், பயண நேரமும் 7 முதல் 8 மணி வரை குறையும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய கதவுகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. அசாம் மற்றும் அருணாசல பிரதேச வளர்ச்சிக்கு உதவுவதுடன், இந்தியா வல்லரசாகும் கனவையும் இந்த பாலம் நிறைவு செய்யும். அந்த வளர்ச்சி இந்த வடகிழக்கு பிராந்தியத்தில் இருந்து தொடங்கவும் வழிவகுக்கும்.

வடகிழக்கு பகுதியில் உயர்தர இஞ்சி விவசாயிகளுக்கு புதிய வழி திறந்திருப்பதுடன், அவர்களது பொருளாதார நிலைமை மேம்படவும் இந்த பாலம் பயனுள்ளதாக இருக்கும். நிரந்தரமான வளர்ச்சிக்கு சிறந்த கட்டமைப்புகளே முதல் தேவை. அந்தவகையில் நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் நிரந்தரமான கட்டமைப்புகளுக்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது.
– என்று நரேந்திர மோடி பேசினார்.

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 10)

varadharajaperumal - 2026
யாக சாலையை மொத்தமாக அழித்து, பிரமனுடைய வேள்வியைச் சிதைத்து , எம்பெருமானை தரிசித்து விடவேண்டும்; பிரம்ம பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற அவனுடைய எண்ணத்தைத் தவிடுபொடியாக்கிட விரும்பின அஸுரர்கள் , பெருங்கூட்டமாக யாக பூமியை நெருங்கவும் , வழக்கம் போல் அயன் பெருமானைப் பணிந்தான் !

அப்பொழுது பெருத்த சப்தத்துடன், யாக சாலையின் நடுவில் ,மேற்கு நோக்கியபடி நரஸிம்ஹனாய் பகவான் தோன்றி யாகத்தையும் பிரமன் முதலானவர்களையும் காத்தான் என்பதனை,

“ந்ருஸிம்ஹோ யஜ்ஞசாலாயா : மத்யே சைலஸ்ய பச்சிமே |

தத்ரைவாஸீத் மகம் ரக்ஷந் அஸுரேப்ய: ஸமந்தத : ”

என்கிற புராண ச்லோகத்தினால் நாம் அறியலாம் !!

மெய் சிலிர்த்து நின்றான் பிரமன் !
இமையோர் தலைவா ! அழைக்கும் முன்பே..நினைத்த மாத்திரத்திலே ஓடோடி வந்து ரக்ஷிக்கின்றாயே !! இப்பெருமைக்குரியவன் உனையன்றி மற்றொருவருளரோ ??

“சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி ” எங்கும் பரந்தாற் போலே , இப்படி எங்கும் நிறைந்து எங்களை ரக்ஷிக்கும் இந்நீர்மையை யாரே வருணிக்கவியலும் ?!

அதுவும் நரஹரியாக, நரஸிம்ஹனாகவன்றோ தேவரீர் ( நீங்கள் ) தோன்றியிருக்கிறீர் !!

அவதாரங்களுக்குள்ளே மிகச்சிறந்த அவதாரமாக கொண்டாடப்படும் பெருமை உடைய அவதாரம், இப்படி என் கண்களுக்கு விஷயமானதே ! என்னே என் பாக்கியம்!!
என்று பலவாறாகத் துதித்தான்..

” த்ரீணி ஜகந்த்யகுண்ட  மஹிமா வைகுண்ட கண்டீரவ : ” என்பர் வேதாந்த தேசிகன் !

எம்பெருமானுக்கு வைகுண்டன் ( வைகுந்தன் ) என்று பெயர் !

வைகுண்ட கண்டீரவன் = பகவத் ஸிம்ஹம் ( பகவானாகிற ஸிம்ஹம் ) என்று பொருள் !!

நரங்கலந்த சிங்கமாய் அவன் தோன்றியது ப்ரஹ்லாதாழ்வானைக் காக்க மட்டுமன்று  என்றருளுகிறார் தசாவதார ஸ்தோத்ரத்தில் !!

பிரமன் விஷயத்தில் எத்தனை ஸத்யமான வார்த்தைகளாயிற்று இவைகள் !

வேள்வியைக் காக்க நரஸிம்ஹனாய் வரவேண்டும் என்கிற நிர்ப்பந்தமேதுமில்லையே !!

ஆயினும் , யாகத்தைக் காத்து , பின்பு இங்கேயே தங்கி நம் அனைவரையும் ரக்ஷித்திடத் திருவுள்ளம் பற்றியன்றோ அவன் இவ்விதம் தோன்றியது ..

பிரமன் , மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்ட சீரிய சிங்கத்தின் அழகில் தன்னையே பறி கொடுத்திருந்தான் !

பிரமன் மட்டுமா !? வசிஷ்டர், மரீசி முதலான ஆசையை வென்றவர்களாக அறியப்பட்டவர்களும் அவனை (பரமனை) ஆசைப்பட்டனர்..

ஸாக்ஷாத் மந்மதனும் மயங்கும் மந்மதனன்றோ இவன் ! அதனாலன்றோ காமன் என்று இவனை அழைக்கிறோம் ! ( பகவானுக்கு காமன் என்றொரு  பெயர் உண்டு ..தமிழில் அதுவே ” வேள் ”  என்றாகிறது – வேள் ஆசையோடிருக்குமிடம் வேளிருக்கை !! அதுவே மருவி வேளுக்கை ஆயிற்று !! )

“அழகியான் தானே அரியுருவன் தானே ” என்றார் மழிசை வந்த சோதி .

அதனால் தான் பெருமானுக்கு அழகிய சிங்கன் என்று திருநாமமாயிற்று ! ஸஹஸ்ரநாமமும் ” நாரஸிம்ஹ வபு : ஸ்ரீமாந்” என்றது .. ஸ்ரீமாந் – செல்வமுடையவன்.. அழகையே பெருஞ்செல்வமாகவுடையவன் என்றபடி !!

அவதாரங்களில் சில அவதாரங்கள் ம்ருகாவதாரங்கள் ( மிருக உருக் கொண்டவை ) ; சில அவதாரங்கள் மனித உருக் கொண்டு தோன்றினான் !

பராசர பட்டர் ரஸமாக ஒரு விஷயம் ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவத்தில் ஸாதிக்கிறார் ( பேசுகிறார் ) ..

சிலர் பால் பருகுகின்ற பழக்கத்தினைக் கொண்டிருப்பர்கள்.. சர்க்கரையைத் தொட்டே பார்த்திருக்க மாட்டார்கள்.. சிலருக்கு சர்க்கரை என்றால் ரொம்பப் பிடித்தமானதாக இருக்கும் .. பால் பருக மாட்டார்கள்.. பாலோடு சர்க்கரையும், சர்க்கரையோடு பாலும் சேர்த்துப் பருகினால் அவர்கள் இது நாள் வரையிலும் இந்தச்சுவையை அறியாமல் போனோமே என்று வருந்துவர்களாம்..

ம்ருகமாகவே அவன் எடுத்த பிறப்புகள் வெறும் பாலைப்போலே; மனிதனாகவே அவதரித்தவைகள் வெறும் சர்க்கரையைப் போலே..

ஆனால் , பாலும் சர்க்கரையும் சேர்ந்தாற் போன்ற ( மிருகமும், மனித உருவுமான ) ஒரு அவதாரம் உண்டெனின் அஃது நரஸிம்ஹாவதாரம் மட்டுமே !!

எத்தனைச் சுவையான விளக்கம்..

ஸத்யம் விதாதும் நிஜ ப்ருத்ய பாஷிதம் என்கிறபடியே , ” உண்மையான தொண்டனான ” ப்ரஹ்லாதனுக்காக எத்தனை வேகமாய் ஓடி வந்தான் பகவான்..

பிரமனுக்காகவும் .. ஆம் அவனுமன்றோ அணுக்கத் தொண்டன்.. எனவே தான் இங்கும் யஜ்ஞ ரக்ஷகனாய் நரஹரி தோன்றினான்..

“த்ரவந்தி தைத்யா : ப்ரணமந்தி தேவதா : ” – எங்கு நரஸிம்ஹன் புகழ் பாடப் படுகின்றதோ அங்கு ; தீயவர்கள் ஓட்டம் பிடிக்கின்றார்கள்.. தேவதைகள் பாடுகின்றவர்களை வணங்குகின்றார்கள்..

என்னே அத்புத கேஸரியின் மஹிமை !

அநுபவிக்க அநுபவிக்கத் திகட்டாததன்றோ நம் வேளுக்கை நாயகன் வைபவம்..

அவனுக்கே முகுந்த நாயகன் என்கிற பெயரும் உண்டு !!

அப்படியென்றால்..

வரதன் வந்த கதை ( பகுதி 10ல் -2 )

ஆம்..வேளுக்கை ஆளரிக்கு முகுந்த நாயகன் என்றே திருநாமம் ! முகுந்தன் என்றால் முக்தியளிப்பவன் என்று பொருள்.. ஸம்ஸாரமாகிற பெரும்பிணியிலிருந்து நாம் விடுபட அவனே நமக்கு மருந்து !

இரணியனை வதம் செய்த பிற்பாடு , தான் இளைப்பாறத் தகுந்த இடம் தேடினான் இறைவன்.. இவ்விடமே ( திருவேள் இருக்கை) அவனுக்குப் பிடித்திருந்ததாம். எனவே தான் இன்றளவும் அவன் இங்கு உளன் !

நரஸிம்ஹாவதாரம்..

தானவ சிசுவான ( அசுரன் பிள்ளையான ) ப்ரஹ்லாதனைக் காப்பாற்ற அவன் கொண்ட கோலமிதென்பது நாமறிந்ததே ! பிரமன் வரங்களைக் ( இரணியனுக்கு ) கொடுத்துவிட்டான் என்பதற்காக , அவைகளுக்குக் கட்டுப்பட்டு தூணில் இருந்து வெளிப்பட்டு இரணியனை முடித்தான்.

பிரமன் பேச்சு பொய்யாகி விடக்கூடாது என்பதில் தான் எத்தனை அக்கறை !

அவன் அவதாரங்கள் செய்வதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன.. தானே கீதையில் அவதாரத்திற்கான காரணங்களைப் பட்டியலிடுகின்றான் கண்ணன்.

ஸாதுக்களை ( நல்லவர்களை ) ரக்ஷிப்பதற்காகவும், தீயவர்களை ஒடுக்கவும், தர்மத்தை நிலைநாட்டுதற் பொருட்டும் தான் அவதரிப்பதாக அவனே திருவாய் மலர்ந்தருளியுள்ளான்..

தர்மத்தை நிலைநாட்டுதல் என்றால்.. ?

அதனைத் தெரிந்துகொள்ள ஆசையிருப்பின் , தர்மம் என்றால் என்ன என்று அறிந்து கொள்வது இன்றியமையாததாகிறது !

தர்மம் = திருக் கல்யாண குணங்கள் என்றருளுகிறார் ஸ்ரீ பராசர பட்டர் ..

அப்படியெனில் தன்னுடைய ” எண்ணில் பல் குணங்களை ” வெளியிடுவதற்காகவே அவன் தோன்றுவது !

” அஜாயமான : பஹுதா விஜாயதே ” என்கிறது வேதம்.. ( பிறப்பில்லாதவன் ; பல படிகளாகப் பிறக்கிறான் ) என்பது பொருள் !

அதாவது நம்மைப் போல் கர்மத்தின் காரணமாகவல்லாமல், தன் இச்சையின், மற்றும் நம் பால் கொண்டிருக்கிற அன்பின் காரணமாகப் பிறக்கிறானாம் !

இச்சா க்ருஹீதோபிமதோரு தேஹ : என்கிறது ஸ்ரீ விஷ்ணு புராணம் !

ஓரோர் அவதாரமும் ஓரோர் குணத்தை வெளியிடுவதில் நோக்காயிருக்கும் !

( அவதாரங்களில் எல்லா திருக்குணங்களையும் அவன் பால் நாம் காண முடியுமாயினும், முக்கியமாக ஓரோர் அவதாரத்திலும் ஓரோர் திருக்குணம் ஒளி விடும் ! )

ந்ருஸிம்ஹாவதாரத்தில் , உள்ளும் புறமும் நீக்கமற நிறைந்திருக்கை என்கிற தன்மை வெளிப்படுகின்றதாம் !

அவனுக்கே “அந்தர்யாமி” என்றொரு பெயர் உண்டு ! உள்ளுக்குள்ளே இருந்து கொண்டு ( நம்மை) நியமிப்பவன் என்பது பொருள் !

அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண : ஸ்தித : என்று உள்ளும் புறமும் நிறைந்திருப்பவன் அவனே என்கிறது வேதமும் !

இந்தத் திருக் குணத்தை, தன்மையை நமக்கு நன்கு விளக்குவதே நரஸிம்ஹாவதாரம்..ப்ரஹ்லாதன் அதனைத்தானே ” தூணிலும் இருப்பான் துரும்பிலுமிருப்பான் ” என்று சிறு குழந்தையும் புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துரைத்தான்.. !

ஆழ்வாரும் ” எங்குமுளன் கண்ணனென்ற மகனைக் காய்ந்து ” என்று இவ்வர்த்தத்தை அறுதியிடுகிறார் !

சிங்கப்பிரான் பெருமை நாம் ஆராயுமளவோ ?!

வேள்வியைக் காக்க வந்த வேளுக்கை ஆளரி , அசுரர்களை முடித்துப் பிரமனையும் காத்தான் !

பிரமன் வேள்வியைத் தொடர்ந்தார் !

அசுரர்களால் கலங்கின மதியை உடையவளான கலைவாணீ , வேள்வியைக் குலைக்க வேறோர் திட்டம் தீட்டினாள் !

என்ன திட்டம் அது ?!

அறியக் காத்திருப்போம் !

எழுத்து: ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி

குறிப்பு: இந்தத் தொகுப்பு விரைவில் நூலாக்கம் பெறுவதால், இதனை அச்சுக்கு எடுத்துக் கையாள வேண்டாமே!

Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami With his Thiruttagappanaar (in the framed photo )
Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami
With his Thiruttagappanaar (in the framed photo )