“ஆவினை அழித்து, தனியார் பால் நிறுவனங்களை வளர்க்கும் நோக்கமா..?” என்று அரசின் செயல்பாட்டை விமர்சித்து பால் முகவர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம். நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கை:
பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தி வழங்கயிருந்தாலும் அது யானைப் பசிக்கு சோளப்பொறி போன்று அமைந்ததாலும், கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கான தொகையை பட்டுவாடா செய்வதில் நீண்ட காலம் (50நாட்கள் கடந்தும்) எடுத்துக் கொள்வதாலும் தமிழகத்தில் ஆவினுக்கான பால் வரத்து கடந்த ஓராண்டு காலமாக கடுமையாக குறைந்து போன காரணத்தால் “இணையத்தில் பால் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது” என சென்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து கொள்முதல் செய்யப்படும் பால் அனுப்பப்பட்டு வருவதால் 27மாவட்ட ஒன்றியங்களில் பால் பாக்கெட்டுகள், பால் பொருட்கள் உற்பத்தியும், விற்பனையும் பல மாதங்களாவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி ஆவினுக்கான பால் வரத்து குறைவு காரணமாக வெண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு அதன் காரணமாக வெண்ணெய் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் ஆவின் தயிர், மோர் மற்றும் பால் பொருட்களான பனீர், வெண்ணெய், நெய்க்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசின் ஆவின் நிறுவனம் “National Cooperative Dairy Federation of India” (NCDFI) மூலம் ஈரோடு, சேலம், மதுரை, திருவள்ளூர் ஒன்றியங்களில் கையிருப்பில் உள்ள சுமார் 290மெட்ரிக் டன் Mix Milk பிப்ரவரி 13ல் விற்பதற்கு E-Action கோரியுள்ளது கடும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
ஏனெனில் ஏற்கெனவே ஆவினுக்கான பால் வரத்து கடுமையாக குறைந்திருக்கும் சூழலில் விரைவில் கோடைகாலமும் நெருங்கி வருகிறது. பொதுவாகவே கோடைகாலத்தில் பால் உற்பத்தி பாதிப்பு இன்னும் அதிகமாகும், அதுமட்டுமின்றி ஏற்கனவே மகராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வெண்ணெய் கொள்முதல் செய்து வரும் சூழலில் சொந்த உற்பத்தி மூலம் கையிருப்பில் இருந்த வெண்ணையையும் கடந்த சில மாதங்களுக்கு முன் இதே போல் NCDFI மூலம் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
எந்த ஒரு பொருளாக இருந்தாலும் தனக்கு மிஞ்சித் தான் தான தர்மம் செய்ய வேண்டும் என்பார்கள். தர்மம் செய்வதற்கே அப்படி எனும் போது ஏற்கனவே பால் உற்பத்தி குறைந்து குறைந்து வருவதால் தனியார் பால் நிறுவனங்களோடு போட்டி போட வேண்டிய ஆவின் நிர்வாகம் எவ்வளவு முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும்..?
மேலும் பால் கொள்முதல் இறங்கு முகமாக இருப்பதால் அதனை சமாளிக்க பால் பவுடர் (SMP, Mix Milk) கூடுதலாக தேவைப்படும் போது கையிருப்பில் உள்ளவற்றை சக போட்டியாளர்களான தனியார் பால் நிறுவனங்களும் இடம்பெற்றுள்ள National Cooperative Dairy Federation of India (NCDFI) மூலம் விற்பனை செய்ய ஒப்பந்தம் கோருவது ஒருவேளை ஆவினை அழித்து, தனியாரை வளர்க்கின்ற முடிவிற்கு வந்து விட்டார்களோ..? என்கிற சந்தேகம் எழுவதோடு, ஆவின் நிர்வாகத்தின் இது போன்ற தவறான செயல்பாடுகளை தமிழ்நாடு அரசும், பாலுற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறையும் கண்டு கொள்ளாமல் அமைதி காப்பதும் புரியாத புதிராகவே இருப்பதோடு, கூடுதல் சந்தேகங்களையும் எழுப்புகிறது.