Home Blog Page 12

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

railway news - 2026
#image_title

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி & ஈஸ்டர் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

தாம்பரம் முதல் நெல்லை வழியே தென்காசி (செங்கோட்டை) வரை சிறப்பு ரயில் சேவை:

செங்கல்பட்டு விழுப்புரம் விருதாச்சலம் அரியலூர் திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் கொடைக்கானல் ரோடு மதுரை விருதுநகர் சாத்தூர் கோவில்பட்டி திருநெல்வேலி அம்பாசமுத்திரம் வழியாக தென்காசி வரை இயக்கப்படுகிறது.

ரயில் எண் 06135 – ஏப்ரல் 2 வியாழன்கிழமை இன்று இரவு 11.10க்கு தாம்பரத்தில் கிளம்பி, ஏப்.3 வெள்ளிக்கிழமை காலை 9.10க்கு திருநெல்வேலி வந்து, முற்பகல் 11 மணிக்கு தென்காசி வந்தடையும்.

ரயில் எண் 06136 – மீண்டும் வரும் ஞாயிறு ஏப்ரல் 5 அன்று இரவு 11 மணிக்கு செங்கோட்டையில் இருந்து கிளம்பி, நள்ளிரவு 12.50க்கு திருநெல்வேலி வந்து, திங்கள் காலை 10.45க்கு தாம்பரம் சென்றடையும் வகையில் தாம்பரம் வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது.

தாம்பரம் தென்காசி செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஏப்ரல் 2ம் தேதி துவங்கி நடைபெறும். செங்கோட்டை தாம்பரம் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஏப்ரல் 2 காலை 8 மணிக்கு துவங்கும்!

தேவைப்படுவோர் இந்த சிறப்பு ரயில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

odisha day - 2026
  • ஜெயஸ்ரீ எம்.சாரி, ஆதம்பாக்கம்

இன்று ஏப்ரல் – 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி என்னும் இடத்தில் அந்த மாநிலத்தின் இயற்கையையும் கலையையும், கலாச்சாரத்தையும், மக்களிடம் பழகியதையும் அசைப்போடும் ஒரு நினைவாய் எனக்கு அமைந்தது.

ஒடிஷாவின் தாமன்ஜோடியில் இயங்கி வரும் நேஷனல் அலுமினியம் கம்பெனி ( NALCO) மற்றும் இங்க்ட்யூ பப்ளிகேஷன்ஸ், இரண்டும் இணைந்து 2022- ஆம் ஆண்டு ‘ஆஸாத் கா அம்ருத் மஹோத்ஸவ’த்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சியை மூன்று நாட்களுக்கு நடத்தியது. இதில் நான் பன்மொழி கவிஞர்கள் பங்குபெற்ற கவியரங்கத்திலும், இலக்கியத்தில் பெண்கள் என்ற தலைப்பில் இடம்பெற்ற கருத்தரங்கில் தமிழ் இலக்கியத்தில் பெண்கள் என்ற தலைப்பில் கலந்துக் கொண்டேன்.

நாங்கள் அப்போது மஹாராஷ்டிர மாநிலத்தில் நாந்தேட் என்னும் இடத்தில் இருந்தோம். அங்கிருந்து தாமன்ஜோடிக்கு 27 மணி நேர பயணம் செய்ய வேண்டியிருந்தது. நாந்தேட் நகரத்திலிருந்து விசாகப்பட்டினம் வரை இரயிலிலும், அங்கிருந்து தாமன்ஜோடிக்கு மற்ற கவிஞர்களுடன் காரில் பயணம் என எங்கள் பயணத்திட்டம் இருந்தது. நான் என் ஊரில் இருந்து ரெயிலில் ஏசி கோச்சில் ஏறினேன். செகந்திரபாத் வரை என்னைத் தவிர ஒருவரும் இல்லை.

எனக்கு கொஞ்சம் கலக்கமாய் இருந்தது. ரெயில் இரவு ஒன்பது மணிக்கு செகந்திரபாத் வந்தடைந்த போது தான் எனக்கு கொஞ்சம் தைரியமும் வந்தது. பயணியரும் ரெயிலில் ஏறினர். அடுத்த நாள் காலையில் விசாகப்பட்டினம் வந்து சேர்ந்து அங்கிருந்து நான்கு பேர்களுடன் தாமன்ஜோடி நோக்கி கிளம்பினோம். ஆந்திர – ஓடிஷா எல்லையில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையின் அருகில் நின்று ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொண்டேன். இரண்டு மாநிலங்கள் சேரும் இடம் என்பது ஒரு சிறப்பு தானே. அன்று இரவு 8.30 மணிக்கு நாங்கள் தாமன்ஜோடியை அடைந்தோம். எங்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்த அறைகளில் தங்கினோம்.

அடுத்த நாள் காலையில் மலைகள் சூழ்ந்த இடமாய் தாமன்ஜோடி இருந்ததனால் ஆதவனின் உதயத்தை அற்புதமாய் கண்டு ரசித்தோம். மேகங்களானது மலைகளுக்கு மேல் சூழ்ந்திருந்தது கண்கொள்ளா காட்சியாய் இருந்தது. காலையில் ‘ஜெய் ஜெகந்நாத்’ என்று பிரார்த்தனை செய்து கொண்டும், அம்மாநிலத்தின் மாநில மரமான அரசமரத்திற்கும் மரியாதை செய்து நிகழ்ச்சிகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தொடங்கினர்.

நானும் மேற்சொன்ன கருத்தரங்கில் என் கருத்துகளை கூறினேன். பின்னர், மாலை நேரத்தில் அற்புதமான ஒடிஷாவின் நாட்டுப்புற கலைகளை கலைஞர்கள் வழங்கினர். இரண்டாம் நாளன்று பன்மொழி கவிஞர்களின் மாநாடும் தொடங்கியது. இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வந்த கவிஞர்கள் தங்கள் தாய்மொழிகளில் கவிதைகள் வாசித்தனர். தங்களின் கவிதைகளின் சாரத்தினை ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் விளக்கினர்.

நானும் ‘என் பாரதம்’ என்ற தலைப்பின் என் கவிதையை வழங்கினேன். ‘தி க்ளோரியஸ் இந்தியா’ ( The Glorious India) என்ற கவிதை தொகுப்பும் வெளியிட்டனர். அன்று மாலையும் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரும் கலைஞர்களுடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்தார்.

மூன்றாம் நாள் காலையில் எங்களை உள்ளூரில் உள்ள கோயில்கள், கடைகள் போன்றவற்றிற்கு அழைத்துச் சென்றனர். உள்ளூர் மக்களும் எங்களுடன் அற்புதமாய் உரையாடினார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மூன்று நாளும் ஒடிஷாவின் அற்புதமான அறுசுவை உணவினை எங்களுக்கு வழங்கி மகிழ்ந்தார்கள். அன்றே நான் என் ஊருக்கு கிளம்பினேன். அருமையான, அரிதான அனுபவமாய் எனக்கு தாமன்ஜோடி பயணம் அமைந்தது.

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ipl 2026 season - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது. இதில், மார்ச்சு 28 முதல் மே 31ஆம் தேதி வரை மொத்தம் 74 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. சென்ற வருடம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பஞ்சாப் கிங்க்ஸ் அணியை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த வருடம் 10 அணிகள் போட்டியில் கலந்துகொள்கின்றன. இதில் சென்னை சூப்பர் கிங்க்ஸ், கொல்கொத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்க்ஸ் ஆகிய அணிகள் குரூப் A பிரிவில் உள்ளன. மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைடன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னே சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய ணிகள் குரூப் B பிரிவிலும் உள்ளன.

குழுப் போட்டி வடிவமானது, 2023 IPL தொடரில் பின்பற்றப்பட்டதைப் போன்றே அமையுமாறு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறையும், மற்றொரு குழுவில் உள்ள அணிகளுடன் தலா இரண்டு முறையும் மோதும்.

குழு நிலைப் போட்டிகள் நிறைவடைந்த பிறகு, ஒட்டுமொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலையில் உள்ள முதல் நான்கு அணிகள் ‘பிளே-ஆஃப்’ (Playoffs) சுற்றுக்கு முன்னேறும். இந்தச் சுற்றில், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் ஒன்றுடன் ஒன்று மோதும் (இப்போட்டி “Qualifier 1” என அழைக்கப்படும்); அதேபோல, எஞ்சிய இரண்டு அணிகளும் ஒன்றுடன் ஒன்று மோதும் (இப்போட்டி “Eliminator” என அழைக்கப்படும்). Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணியானது நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும்.

அதேவேளையில், அப்போட்டியில் தோல்வியடையும் அணிக்கு இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும்—அவ்வணியானது Eliminator போட்டியில் வெற்றி பெற்ற அணியுடன் மோத வேண்டும் (இப்போட்டி “Qualifier 2” என அழைக்கப்படும்).

இந்த Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணியானது இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அணிகள் வென்றுள்ள கோப்பைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அவை பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு (seeded) வகைப்படுத்தப்பட்டன.

முதல் ஆட்டம் பெங்களூருவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே மார்ச்சு 28ஆம் தேதி நடந்தது. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 9 விக்கட் இழப்பிற்கு 201 ரன் எடுத்தது. இஷான் கிஷன் 38 பந்துகளில் 80 ரன் எடுத்தார்.

இதில் 8 ஃபோர்கள் மற்றும் 5 சிக்சர்கள் அடித்தார். அனிகேத் வர்மா 18 பந்துகளில் 43 ரன் (3 ஃபோர் மற்றும் 4 சிக்சர்கள்) எடுத்தார். ஹென்றி கிளாசன் 22 பந்துகளில் 31 ரன் (2 ஃபோர் மற்றும் 1 சிக்சர்) எடுத்தார். பெங்களூரு அணியில் டஃப்ஃபி, ஷெப்பர்ட் தலா மூன்று விக்கட்டுகள், புவனேஷ் குமார், அபிநந்தன் சிங், சுயேஷ் ஷர்மா தலா ஒரு விக்கட் எடுத்தனர்.

ஆனால் இந்த ஸ்கோரை பெங்களூரு அணி 15.4 ஓவர்களில் எடுத்து அபார வெற்றி பெற்றது. விராட் கோலி ஆட்டமிழக்காமல் 69 ரன் (5 ஃபோர், 5 சிக்சர்), தேவதத் படிக்கல் 61 ரன் (7 ஃபோர், 4 சிக்சர்), ரஜத் படிதார் 31 ரன் (2 ஃபோர், 3 சிக்சர்) அடித்தனர். ஆட்டநாயகனாக ஜேகப் டஃப்ஃபி அறிவிக்கப்பட்டார்.

இரண்டாவது ஆட்டம் மும்பையில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே மார்ச்சு 29ஆம் தேதி நடந்தது. முதலில் ஆடிய கொல்கொத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 220 ரன் எடுத்தது. தொடக்க வீரர்கள் அஜிங்க்யா ரஹானே 67 ரன்( 3 ஃபோர், 5 சிக்சர்) மற்றும் ஃபின் ஆலன் 37 ரன்(6 ஃபோர், 2 சிக்சர்) அபாரமான தொடக்கம் தந்தனர்.

அங்க்ரிஷ் ரகுவன்ஷி 51 ரன்( 6 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் ரிங்கு சிங் 33 ரன் (4 ஃபோர்) அருமையாக விளையாடினர். பின்னர் ஆடிய மும்பை அணி 19.1 ஓவர்களில் 224 ரன் எடுத்து அபார் வெற்றி பெற்றது. ரியன் ரிக்கிள்டன் 81 ரன் (4 ஃபோர், 8 சிக்சர்), ரோஹித் ஷர்மா 78 ரன் (6 ஃபோர், 6 சிக்சர்) அடித்தனர். இவரிகளின் ஆட்டம் மும்பையின் வெற்றியை உறுதி செய்தது.

மூன்றாவது ஆட்டம் மார்ச்சு 30ஆம் தேதி கௌஹாத்தியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணிக்கும் இடையே நடந்தது. முதலில் ஆடிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 127 ரன் எடுத்தது. இஅந்த அணியில் ஜேமி ஓவர்டன் மட்டும் சிறப்பாக ஆடி 43 ரன் சேர்த்தார். மற்றாவர்கள் சரியாக ஆடவில்லை. ராஜஸ்தான் அணியில் ஆர்ச்சர், பர்ஜர், ஜதேஜா ஆகியோர் தலா 2 விக்கட் எடுத்தனர்.

பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்களில் 2 விக்கட் இழப்பிற்கு 128 ரன் எடுத்து வெற்றிபெற்றது. ராஜஸ்தான் அணியின் வைபவ் சூரியவம்ஷி 17 பந்துகளில் 52 ரன் அடித்து வெற்றிக்கு வழி வகுத்தார். சென்ற ஐபிஎல் போட்டியில் கடைசி இடத்தைப் பெற்ற சென்னை அணி இந்த முறை தொடக்க ஆட்டத்திலேயே சொதப்பியது ரசிகர்களை ஏமாற்றியது.

நான்காவது ஆட்டம்மார்ச்சு 31ஆம் தேதி சண்டிகரில் குஜராத் அணிக்கும் பஞ்சாப் அனிக்கும் இடையே நடந்தது. முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 162 ரன் எடுத்தது.

இரண்டாவதாக ஆடிய பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 165 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் கூப்பர் கன்னோலி 72 ரன் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். அவர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.        

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

kamalalayam tn bjp - 2026

முரளி சீதாராமன்

1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- “ஏப்ரல் 4 அன்று பாஜக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள்!”

2) அதே பாலிமர் டிவியில் கீழே ஸ்க்ரோல்:-
“ஏப்ரல் 3 பாண்டிச்சேரி பிரசாரத்துக்கு வரும் மோடி – சென்னையில் பாஜக பொறுப்பாளர்களை சந்தித்து – வேட்பாளர்கள், தொகுதி நிலவரம் குறித்து ஆய்வு செய்யப் போகிறார்.

3) அனைவரும் எதிர்பார்த்தபடி மத்திய பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வருகை.

4) கோவையில் இருந்து அண்ணாமலை பாண்டிச்சேரி சென்று அங்கே ரோட் ஷோ – மற்றும் ராஜ்பவன் தொகுதியில் பிரசாரம்.

5) பிரசாரத்தின் இடையில் சென்னை வரச் சொல்லி அண்ணாமலைக்கு பியூஷ் கோயல் அழைப்பு. அண்ணாமலை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சென்னை வருகை.

6) கமலாலயத்தில் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களுடன் பியூஷ் கோயல் கலந்தாலோசனை.

7) சில நாள்களில் பாஜக பட்டியல் வெளியாகும் – என்று பியூஷ் கோயல் அறிவிப்பு.

JUST I AM CONNECTING THE DOTS. நல்ல முடிவு வரும் என்று நம்புவோமாக.

1984 ல் இந்திரா காந்தி கொலைக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 414 இடங்களைப் பிடித்தது. பாஜக வெறும் 2 இடங்களில்தான் வென்றது. பல பாஜக அபிமானிகள் காங்கிரஸ் மாதிரி பாஜக என்று வளரும் என்று ஏங்கினார்கள்.

பாஜக வளர்ந்தது – மத்தியிலும் பல மாநிலங்களிலும் ஆட்சியையும் பிடித்தது. ஆனால் காங்கிரஸ் மாதிரி மத்திய அதிகாரத்திலும் – பாரதம் முழுக்கப் பரவலாக ஆட்சி அதிகாரத்திலும் பாஜக வளரவேண்டும் என்று குறிப்பாகக் கேட்டுப் பிரார்த்தித்து இருக்க வேண்டும்! ஆனால் கடவுளிடம் மொட்டையாகக் காங்கிரஸ் மாதிரி பாஜக வளர வேண்டும் என்று பிரார்த்தனை செய்ததன் பலன்…

இப்போது பாருங்கள்… கட்சிக்குள் உள் விளையாட்டு, தொகுதிப் பங்கீட்டில் சொதப்பல், வேட்பாளர் தேர்வில் இழுபறி… இப்படிப் பலவற்றிலும் காங்கிரஸ் மாதிரியே வளர்ந்து தொலைத்து இருக்கிறது!

சத்திய மூர்த்தி பவனுக்கும் கமலாலயத்துக்கும் என்ன வித்தியாசம்?

வேட்பாளர் தேர்வில் இழுபறி… ஒருவர் கட்சி போட்டியிட ஏதுவாக ஆண்டுக் கணக்கில் உழைத்து களத்தை தயார் செய்திருப்பார் – அவர் மீது உள்ள அசூயையில் தொகுதியைக் கூட்டணிக் கட்சிக்கு தாரை வார்த்து விடுவது…

மேலிடப் பார்வையாளரிடம் தங்கள் பார்வையில் என்ன படுகிறதோ அதையே கட்சியின் அடிமட்ட RANK AND FILE பார்வைபோல BRIEFING செய்வது… தனக்கு வேண்டாதவரைப் போட்டுக் கொடுப்பது, அல்லது அவருக்கு வாய்ப்பான தொகுதியை ஃப்யூஸ் பிடுங்கி விடுவது…

இப்படி பல விஷயங்களில் சத்திய மூர்த்தி பவனும் – கமலாலயமும் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல என்றே ஒரு அரசியல் பார்வையாளனாகக் கருத வேண்டியுள்ளது. என்ன சத்தியமூர்த்தி பவன் என்றால் சேர்கள் பறப்பு, சட்டை கிழிப்பு, வேட்டி பறிப்பு என்றெல்லாம் நடக்கும் என்பார்கள்.

திமுக 1989 ல் காங்கிரஸ் பற்றி போஸ்டரே ஒட்டியது:- “ஊருக்கு ஊரு இருபது கோஷ்டி – ஊழியர் கூட்டத்தில் கிழியுது வேஷ்டி!”

கமலாலயத்தில் மரியாதையாக ஒருவரை ஒருவர் ஜி ஜி என்றழைத்து கும்பிட்டுக் கொள்வார்கள்!

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

left and congress - 2026

— தவ்லீன் சிங் —
தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்

இந்திய இடதுசாரிகளும் போரும்!

என்னைப் போலவே நீங்களும் துயர் மிகுந்த, நம்பிக்கை அற்ற, ஏழை இந்தியாவில் – அப்போது ராகுல் காந்தியின் பாட்டி பிரதமராக இருந்தார் – வளர்ந்து இருந்தால் நீங்களும் இடதுசாரிகள், போலி தாராளவாதிகள் மீது சந்தேகப்படக் கற்றுக் கொண்டிருப்பீர்கள். அவர்களது மனித உரிமைகள் மற்றும் அரசியல் ஒடுக்குமுறை என்ற உணர்வெழுச்சிகளுக்கு பின் உள்ள அப்பட்டமான பிற்போக்குத்தனத்தை பிரித்தறிய கற்றுக் கொண்டிருப்பீர்கள்.

ஸ்டேட்ஸ்மேன் நாளேட்டில் நிருபராக நான் பணிக்கு சேர்ந்த ஒரு மாதத்தில் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தார். பத்திரிக்கை தணிக்கை கடுமையாக அமல்படுத்தப்பட்டது. அது உண்மையிலேயே நம் வரலாற்றில் மிகவும் இருண்ட, பயங்கரமான அத்தியாயமாகும். ஆனால் அவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முழு ஆதரவு இருந்தது. சோவியத் யூனியனின் ஆதரவும் இருந்தது.

இந்திய இடதுசாரிகளின் கருத்தியலை அமெரிக்க எதிர்ப்புதான் வரையறை செய்தது. இது ஏன் என்று அப்போதே நான் கேள்வி எழுப்பத் தொடங்கி இருந்தேன். சீனாவிலும் சோவியத் ரஷ்யாவிலும் அவர்களது வழிபாட்டு நாயகர்களாக இருந்தவர்கள் செய்த கொடூரமான குற்றங்களை இவர்கள் எப்போதுமே கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். மாவோவும் ஸ்டாலினும் இந்திய இடதுசாரிகளின் நாயகர்களாகவே இருக்கிறார்கள், இன்றும் கூட.

தங்கள் பிள்ளைகளை கல்லூரி படிப்புக்கு அனுப்பும் போது இந்திய இடதுசாரிகள் பொதுவாகவே மேற்கத்திய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களையே தேர்ந்தெடுத்து அனுப்புவதை பார்த்தேன். மேற்கத்திய நாடுகளை வெறுப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். அதேபோல் தாங்கள் நோயுறும் போது சிகிச்சைக்காக மேற்கத்திய நாட்டில் உள்ள மருத்துவமனைகளையே தேர்வு செய்கிறார்கள். ஆண்டுகள் உருண்டோட, எல்லா வகையான இடதுசாரிகள் மீதும் எனக்கு வெறுப்பு வளர்ந்தது. அவர்கள் தீவிரவாத இஸ்லாத்தை வெளிப்படையாக ஆதரிக்கத் தொடங்கிய போது அது ஆழ்ந்த வெறுப்பாக மாறியது. இடதுசாரிக் கட்சிகளின் நிலைப்பாடு எதுவோ அதற்கு நேர் எதிரான நிலைப்பாடுதான் என்னுடையது என்றானது.

கடந்த வாரங்களில் தில்லி, மும்பாயின் பொதுவெளியில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ‘ஆக்கிரமிப்பு’ செய்து வருவதாக இடதுசாரிகளின் குரல் மிக உரக்க எழுந்தது. போர் தொடங்கியவுடன் அப்துல்லா அலி கமேனியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிப்பதாக கூறி முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போது அவர்களது குரல் ‘மதசார்பற்ற’ இடதுசாரிகளின் ஆதரவு குரலுடன் மேலும் வலுப்பெற்றுள்ளது. நமக்கு பக்கத்தில் தாலிபான்களின் இழிவான செயல்களையோ அல்லது அயதுல்லாக்களின் தீய செயல்களையோ கண்டனம் செய்யாதவர்கள் காசாவில் நடந்ததற்காக இஸ்ரேலை வீறிட்டு கண்டனம் செய்கிறார்கள். எல்லாவிதமான கொடூரங்களும் அரசியல் ஒடுக்குமுறையும் ஒரே மாதிரியாக கண்டனம் செய்யப்படாதது ஏன் ? என்ற குழப்பம் எனக்குள்ளது.

இந்திய இடதுசாரிகள், ஜிகாத்திகளின் குரலோடு குடும்ப ஆட்சியில் பல தசாப்தங்களாக அரசு பணியில் இருந்த ‘மதசார்பற்ற’ அதிகாரிகளின் குரலும் சேர்ந்து ஒலிக்கிறது. அந்த அதிகாரிகள் பலரும் என்னைப் போன்றே உயர்குடியில் உரிமைகளோடு பிறந்து ஒட்டுமொத்தமாக ஆளும் வெளியை ஆக்கிரமித்து இருந்தவர்கள். இந்த அதிகாரிகள் போர் குறித்து மோடி அரசின் ‘மௌனத்தை’ வெளிப்படையாக விமர்சித்து வருகிறார்கள். மோடி தனது மௌனத்தின் மூலம் உலக நாடுகள் இந்தியாவை ‘அலட்சியப்படுத்தும்’ இடத்தில் நிறுத்தி உள்ளதாக அவர் மீது தனிப்பட்ட விமர்சனங்களால் தாக்கி வருகிறார்கள். ஈரான் மீது நடந்துள்ள தாக்குதலை பிரதமர் வெளிப்படையாக கண்டனம் செய்ய வேண்டுமென அவர்கள் தெளிவாகக் கூறுகிறார்கள்.

தனிப்பட்ட முறையில், இந்திய அரசு மிகவும் ஆபத்து மிகுந்த சூழ்ச்சிகரமான சாலையில் ஆச்சரியப் படத்தக்க வேகத்தில் பயணிப்பதாகவே, நான் கருதுகிறேன். நாம் எந்த பக்கத்திலும் சேரக்கூடாது. நாம் சேர வேண்டிய ஒரே பக்கம் இந்திய நலன் தான். அமெரிக்கா, இஸ்ரேலை நாம் பகைத்துக் கொள்வது நம்முடைய நலனுக்கு உகந்ததல்ல. அவ்வாறு செய்தால் அது நம்முடைய பழைய பகையாளியான சீனாவின் பக்கத்தில் நம்மை சேர்த்துவிடும். நிச்சயமாக அது இந்திய நலனுக்கு எதிரானது. ரஷ்யா, வடகொரியா போன்றவர்கள் நம் அணிக்கு தேவையில்லாதவர்கள்.

நடுநிலை என்ற நம்முடைய கொள்கையில் நாம் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும். இரு தரப்பினரும் நம்முடன் பேசக்கூடிய நிலை வேண்டும். ஈரான் நம்மை நம்புகிறது. அதனால் தான் ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய எண்ணெய் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி அளிக்கிறது.

என்னுடைய குழந்தைப் பருவம் ஒரு ராணுவ நகரத்திலிருந்து இன்னொன்றுக்கு என்று மாறிக்கொண்டே இருப்பதாக இருந்தது. நான் சந்தித்த வீரர்கள் பலரும் போர் என்பதை மோசமான தேர்வாகவே கருதியதை தெரிந்து கொண்டேன். எந்த பிரச்சினையையும் போர் மூலம் தீர்த்து விட முடியும் என்று நான் நம்பவில்லை. இந்தப் போர் எந்தத் தரப்புக்கும் தெளிவான வெற்றியைத் தருவதாகத் தெரியவில்லை.

இந்தப் போரின் முக்கியமான சாதனை எண்ணெய் விலையை உயர்த்தியதுதான். உலகில் நாம் இருக்கும் பகுதியில் உள்ள பொருளாதாரங்களை அது பாதித்துள்ளது. கடந்த வாரம் சமையல் எரிவாயு உருளைக்காக மக்கள் நீண்ட வரிசையில் நின்று இருந்தது பீதி எங்கும் பரவுவதையே காட்டியது.

ஜனாதிபதி ட்ரம்ப் போரில் ‘வெற்றி’ பெற்று விட்டதாக அறிவித்துள்ளார். எனவே மிக விரைவில் போரை முடிவுக்கு கொண்டு வருவார் என்று நாம் நம்பலாம். சில விமர்சகர்கள் மோடி அமைதி ஏற்பட சமரச முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார்கள். இதற்கு அர்த்தம், மோடியின் ‘மௌனம்’ இந்திய நலன்களை பாதிக்கவில்லை. மாறாக உதவியிருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.

போரின் வெற்றி , தோல்விக்கு அப்பால் ஒரு பிரச்னை தீர்க்கப்படாமலேயே இருக்கப் போகிறது. ஈரானை சர்வதேச பயங்கரவாத முன்னெடுப்பாளராக மாற்றிய ஜிகாத் கருத்தியல். அதுதான் ஈரானிய பெண்கள் மீதான வன்முறையை, அவர்களின் உரிமைகளை நசுக்குவதில் மிகப்பெரிய – உலகில் இரண்டாவது பெரிய நாடாக – மாற்றியது. முதலிடம் தாலிபான்களுக்கு. கடந்த வாரத்துடன் ஆப்கானிய பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு, பணிக்கு செல்லும், தங்கள் சொந்த வாழ்வை தாங்களே நிர்மாணிக்கும் உரிமை மறுக்கப்பட்டு, சுருக்கமாக சொன்னால் வாழும் உரிமை மறுக்கப்பட்டு 1636 நாட்கள் ஆகிறது. கணவன்மார்கள் மனைவிகளின் எலும்பு உடையாமல் அவர்களை அடிக்க சட்டப்படி உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது நமக்கு மிக அருகில் உள்ள அண்டை நாட்டில் நடக்கிறது.

இடதுசாரி எழுத்தாளர்களும் அரசியல்வாதிகள் மனித உரிமை போராளிகளும் பெண்களுக்கு எதிரான இந்த மனிதாபிமானமற்ற பழங்குடித்தனத்திற்கு எதிராக எப்போது பேசப் போகிறார்கள் ?

என் கேள்விக்கு நானே பதில் சொல்லி விடுகிறேன். அவர்கள் ஒரு போதும் பேசப் போவதில்லை. அவர்களது கோபமும் கண்ணீரும், உலகில் எது நடந்தாலும், அமெரிக்காவை பழி சுமத்த வழி கிடைத்தால் மட்டுமே வெளிப்படும். இது போன்ற அர்த்தமற்ற அமெரிக்க எதிர்ப்பு சூழ்நிலையில்தான் நான் வளர்ந்தேன்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்


‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

kadeswara subramaniam hindu munnani - 2026

இந்து பட்டியல் சமூக மக்களின் உரிமையை பாதிக்கும் வகையில் தனித் தொகுதிகளில் போட்டியிடும் வேற்று மதத்தவர்கள் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

தமிழகத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் 46 தனித் தொகுதிகள் உள்ளன.

இந்து பட்டியல் சமூக மக்கள் மட்டுமே போட்டியிடக்கூடிய இந்த தொகுதிகளில் கிறிஸ்தவ மற்றும் வேற்று மதத்திற்கு மாறியவர்கள், அதன் வழிபாட்டு முறையை தொடர்பவர்கள், தங்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கிறிஸ்தவ பெயர்களை வைத்துள்ளவர்கள், கிறிஸ்தவ விழாக்களை கொண்டாடுபவர்கள் சிலர் இந்து பட்டியல் சமூகத்தவர் என போலியாக சான்றிதழ் பெற்று அதன் அடிப்படையில் தனித்தொகுதிகளில் போட்டியிடுவதாகத் தெரிகிறது.

தனித்தொகுதி என்பது இந்துக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள உரிமையாகும். சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலும் மதம் மாறியவர்கள் பட்டியல் சமூக சலுகைகளைப் பெற முடியாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சட்டத்தையும் அரசையும் தேர்தல் ஆணையத்தையும் ஏமாற்றும் வகையில் வேற்று மதத்திற்கு மாறியவர்கள் தாங்கள் மதம் மாறியதை மறைத்து போலியாக சான்றிதழ் பெற்று இந்து மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் இந்து பட்டியல் இனத்தவர் மட்டுமே போட்டியிடக்கூடிய தனித்தொகுதிகளில் போட்டியிட முயன்று வருகின்றனர்.

சிறுவயதில் இந்துவாக இருந்தபோது இந்து பட்டியல் சமூகத்தவர் என சான்றிதழ் பெற்றவர்கள் இடைக்காலத்தில் மதம் மாறியதை மறைத்து பழைய சான்றிதழ் அடிப்படையில் இன்று பட்டியல் சமூக மக்களின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் தனி தொகுதிகளில் போட்டியிட முயன்று வருகின்றனர்.

எனவே தனி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தும் அவர்களது சாதி சான்றிதழ் குறித்தும் தேர்தல் ஆணையம் முறையாக ஆய்வு செய்து வேற்று மதத்தவர்கள் வைத்துள்ள போலிச் சான்றிதழ்களை ரத்து செய்து அவர்கள் வேட்புமனுவையும் தள்ளுபடி செய்யுமாறு இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது.

தனித் தொகுதிகளில் போட்டியிடும் பல்வேறு கட்சியினரின் சாதிச் சான்றிதழ் குறித்து எழும் ஆட்சேபனைகளையும் தேர்தல் ஆணையம் நேரடியாக விசாரிக்க வேண்டும் என இந்துமுன்னணி வேண்டுகோள் விடுக்கிறது.

தமிழகத்தில் சாதிச் சான்றிதழ் வழங்கும் வருவாய் வட்டாட்சியர்கள், தனித் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அந்தந்த தொகுதிகளில் கண்காணித்து, வேற்று மதத்தைச் சார்ந்தவர்கள் தான் என உறுதி செய்யப்பட்டால், அவர்கள் வைத்துள்ள போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

pamba river for arattu - 2026

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வரும் நிலையில் வரும் ஏப்ரல் 1 நாளை பாம்பை நதியில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா விமரிசையாக நடைபெறும்.

விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், உத்சவ பலி, சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. விழாவின் 9-வது நாளான இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளிவேட்டை சடங்கு நடைபெறும். திருவிழா நிறைவாக நாளை ஏப்ரல் 1ம் தேதி பம்பை ஆற்றில் அய்யப்ப சாமிக்கு ஆராட்டு நடைபெறும்.

இதையொட்டி காலை 8.30 மணிக்கு சன்னிதானத்தில் சிறப்பு பூஜை நடத்தி பின்னர் அலங்கரிக்கப்பட்ட யானை மீது அய்யப்ப சாமி எழுந்தருளி மேளதாளம் முழங்க பக்தர்கள் புடைசூழ ஆராட்டு ஊர்வலம் புறப்படும். இந்த ஊர்வலம் காலை 10.45 மணிக்கு பம்பை கணபதி கோவிலை வந்து தொடர்ந்து 11 மணிக்கு பம்பை ஆற்றில் அய்யப்ப சாமிக்கு களபம் சார்த்தி தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் ஆராட்டு நடைபெறும்.

ஆராட்டு சடங்குகளுக்கு பின்னர் புத்தாடை அணிவிக்கப்பட்ட அய்யப்ப சாமி பக்தர்களின் தரிசனத்திற்காக பம்பை கணபதி கோவிலில் சிறப்பு அலங்காரத்துடன் அருள் பாலிப்பார். பிற்பகல் 3 மணிக்கு சாமி ஊர்வலம் பம்பை கணபதி கோவிலில் இருந்து சன்னிதானம் நோக்கி புறப்பட்டு இந்த ஊர்வலம் சன்னிதானம் வந்ததும் மாலை 6 மணிக்கு திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வர்.

தற்போது சபரிமலை வனப்பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக பம்பை நதியில் குறிப்பிடத்தக்க அளவு நீர்வரத்து உள்ளது.

பக்தர்களுக்கு எச்சரிக்கை: சமீபத்தில் கேரளாவில் நிலவிய “அமீபா மூளை காய்ச்சல்” அச்சுறுத்தல் காரணமாக, பம்பையில் நீராடும் போது மூக்கை இரண்டு விரல்களால் மூடிக்கொண்டு நீராடுமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஆற்றில் கோலிஃபார்ம் பாக்டீரியாக்களின் அளவு அவ்வப்போது அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதால், பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோடைக்காலங்களில் பம்பை நதி வறண்டு விடாமல் இருக்க, அருகிலுள்ள சபரி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு நீர் இருப்பு பராமரிக்கப்படுகிறது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

rahul and stalin - 2026

✍️ ஜி.எஸ். பாலமுருகன்

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது. தேர்தல் நேரத்தில் வெளிப்படும் தொடர்ச்சியான உள் எதிர்ப்பு, காங்கிரஸ் கட்சியை தாண்டி பொது விவாதமாக மாறியுள்ளது.

தற்போதைய காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மீதான கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியின் திடுக்கிடும் குற்றச்சாட்டு, தி.மு.க.வையும் கலங்கடித்திருக்கிறது.

தேர்தல் வந்தாலே தமிழகத்தில் காங்கிரஸ் சுறுசுறுப்பாகும். தலைமைக்கு எதிரான அதிருப்தி, கூட்டணியை விமர்சிக்கும் பேச்சுகள், கோஷ்டி பூசல் – உட்கட்சி மோதல்கள் வெளிப்படையாக வெடிக்கும் காட்சிகள் புதிதல்ல. இந்த முறையும் அது விதிவிலக்கல்ல.

“காங்கிரஸ் தொகுதி தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை; கட்சியின் நலன் முழுக்கவும் சமரசம் செய்யப்பட்டுவிட்டது. கட்சிக்காக ஒரு சிறு துறும்பைக் கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத்திண்பது வேதனையாக உள்ளது; இந்த அணுகுமுறை தொடர்ந்தால் காங்கிரசை யாராலும் காப்பாற்ற முடியாது” என்று கொந்தளித்திருக்கிறார் ஜோதிமணி. இந்த குற்றச்சாட்டே, காங்கிரஸ் கட்சிக்குள் உருவாகியிருக்கும் சிக்கலின் தீவிரத்தை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.

செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றதிலிருந்து, அவரைச் சுற்றிய எதிர்ப்பு அடங்கவில்லை. தி.மு.க. ஆதரவாளர் என்ற அடையாளம், காங்கிரசின் தனித்துவத்தை மங்கச் செய்ததாக அவரது எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதே பின்னணியில், கடந்த சில மாதங்களில் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து முன்னணி தலைவர்கள் வெளியிட்ட கருத்துக்கள், உள் முரண்பாட்டை வெளிப்படையாக காட்டியுள்ளன. மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, பிரவீன் சக்கரவர்த்தி, திருச்சி வேலுச்சாமி உள்ளிட்டோர் தெரிவித்த எதிர்ப்பு, காங்கிரசை தாண்டி தி.மு.க.வையும் கடுப்பேற்றியுள்ளது.

ஏகப்பட்ட அழுத்தங்களுக்குப் பிறகு கூடுதல் தொகுதிகளை பெற்றிருந்தாலும், இப்போது வெடித்திருக்கிறது தொகுதி தேர்வு முறை. “காங்கிரசின் நலனை தி.மு.க.விடம் சமரசம் செய்து விற்றுத் திண்பதா” என்று ஜோதிமணி எழுப்பிய கேள்வி, பணம் முக்கிய பாத்திரம் வகித்ததா என்ற சந்தேகத்தையும் வலுப்படுத்துகிறது. தேர்தல் நேரத்தை பயன்படுத்தி ஆதாயம் தேடும் இந்த போக்கு, அரசியலில் இருக்கும் மரியாதையை சீர்குலைக்கும் அபாயம் உள்ளது.

நேர்மை, கட்சிப் பணி, மக்கள் சேவை ஆகியவற்றை விடுத்து, தலைமைக்கு இணக்கமும் தனிப்பட்ட நலன்களும் அடிப்படையாக கொண்டு வேட்பாளர் தேர்வு நடைபெறுமானால், இது எந்த வகையான அரசியல்? காங்கிரஸ் தொண்டர்களின் எதிர்பார்ப்பும், தலைமையின் முடிவுகளும் நேருக்கு நேர் மோதும் நிலையில், காங்கிரஸ் அடித்தள அமைப்பாக செயல்படுகிறதா அல்லது தலைமை சார்ந்த அரசியலாக மாறியிருக்கிறதா என்ற கேள்வி வலுப்பெறுகிறது.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் மௌனமும் கவனிக்கத்தக்கது. கூட்டணி உறுதி செய்யப்பட்ட பின்னரும், அதை உறுதிப்படுத்தும் அரசியல் சைகைகள் வெளிப்படாதது குழப்பத்தை அதிகரிக்கிறது. தமிழகம் பக்கம் அவரது ஈடுபாடு குறைவாக இருப்பது, தேர்தல் களத்தில் காங்கிரஸ் எந்த அடிப்படையில் மக்களிடம் வாக்கு கேட்கப் போகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.

இதன் பின்னணியில், இப்போது எழுந்திருக்கும் ஜோதிமணி போன்றோரின் எதிர்ப்பு சத்தங்கள் வெறும் உள் மோதலாக அல்ல. இது காங்கிரஸ் கட்சியின் அடையாளத்தையும் எதிர்கால திசையையும் தீர்மானிக்கும் கட்டமாக இந்த தேர்தல் மாறியுள்ளது. இதன் தீர்ப்பு தான் காங்கிரஸின் அடுத்த பாதையை தீர்மானிக்கும்.

  • செய்திக்கதிர்

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

write thoughts - 2026
#image_title

– ஜி.எஸ். பாலமுருகன் –

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன் அறிவிப்பும் கவர்ச்சிகரமாக வாக்கு அறுவடையை மையப்படுத்தியதாக உள்ளன. அதில் குற்றம் சொல்லவில்லை என்றாலும், கடந்த கால வாக்குறுதிகளின் நிலையை பார்க்கும் போது இப்போது சொல்லியிருப்பது ஏமாற்று வேலையாக தோன்றுகிறது.

“ரூ.8,000 மதிப்பிலான கூப்பனை பயன்படுத்தி வாஷிங் மெஷின், டி.வி., ஃபிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் ஓவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை, வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் புதிதாக வாங்கிக்கொள்ளவோ அல்லது பழையவற்றை மாற்றிக்கொள்ளவோ வழங்கப்படும்” என்பது தி.மு.க.வின் வாக்குறுதி.

    இது பெண்களின் வாக்குகளை இலக்கு வைக்கும் முயற்சி. இந்த திட்டம் காகிதத்தில் கவர்ச்சியாக தோன்றினாலும், நடைமுறையில் இது குடும்பங்களுக்கு கூடுதல் நிதிச்சுமையையே ஏற்படுத்தும். அதே ரூ.8,000-ஐ நேரடியாக பணமாக வழங்கினால், குடும்பங்கள் தங்களுக்குத் தேவையான செலவுகளுக்கு பயன்படுத்துவார்களே; ஏன் கட்டாயமாக குறிப்பிட்ட பொருட்களை வாங்க சொல்லப்படுகிறார்கள் என்ற விவாதமும் உருவாகிறது.

    கூப்பன் இல்லத்தரசிகளுக்காக என்றாலும், அதன் பின்னணியில் வரும் செலவுச் சுமை குடும்பத் தலைவர்கள் மீதே விழும். ரூ.8,000 கூப்பனை வைத்து வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி. வாங்கலாம் என கூறப்படுகிறதே தவிர, இப்போதைய சந்தை விலையில் இவற்றில் ஒன்றை வாங்கவே ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை செலவாகிறது. அதனால், கூப்பன் ஒரு சிறிய பங்காக மட்டுமே இருக்கும்; மீதி தொகையை மக்கள் கூடுதலாக செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    மேலும், இந்த கூப்பன் குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட விற்பனையகங்களுக்குள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டால், மக்களின் தேர்வு சுதந்திரம் குறைக்கப்படுமா என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது. “ரூ.8,000 குடுத்து ரூ.20,000 செலவு செய்ய வைக்கிற திட்டமா இது?” என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.

    “ரூ.8,000 கிடைக்கிறது” என்ற மனநிலை, தேவையில்லாத வாங்குதல்களையும் தூண்டும் அபாயம் உள்ளது. ஏற்கனவே நல்ல நிலையில் பயன்படுத்தி வரும் பொருட்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவாகி, தேவையற்ற செலவுகள் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது. இது உண்மையில் மக்கள் நலத்திட்டமா, அல்லது வீட்டு மின் சாதன சந்தையை ஊக்குவிக்கும் மறைமுக முயற்சியா என்ற விவாதமாகிறது.

    இதற்கு மேலாக, அரசு எந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வது என்பது பற்றிய தெளிவும் இல்லாதது மற்றொரு கவலைக்குரிய அம்சமாக பார்க்கப்படுகிறது. கூப்பன் கொடுக்கும் போது ஸ்டார் (*) போட்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று சொல்லிவிட்டால் என்ன ஆகும்? தி.மு.க. வாக்குறுதியை எப்படி நம்ப முடியும்? ஒப்பந்தங்கள் வழங்கும் முறையில் வெளிப்படைத்தன்மை இருக்குமா, அல்லது தரம் மற்றும் விலை தொடர்பான விஷயங்களில் சந்தேகங்கள் எழுமா என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

    கூப்பன் தருவதற்காக, தரம் குறைந்த நிறுவனங்களுடன் அரசு ஒப்பந்தம் செய்தால், மக்கள் கூடுதல் பணம் செலவழித்தும் தரமற்ற பொருட்களை வாங்க வேண்டிய நிலை உருவாகும். எனவே எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்று விரிவான திட்டத்துடன் வாக்குறுதியை கொடுங்கள். முடிந்தால் எப்போதிலிருந்து செயல்படுத்தப் போகிறோம் என “தேதி போட்டு சொல்லுங்க!”

    ஏனெனில், 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதி என்ன? “தமிழ்நாட்டில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000” வழங்கப்படும் என்று உறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும், “அனைவருக்கும் அல்ல… தகுதியுள்ள மகளிர்க்கு மட்டும்” என்ற வரையறை கொண்டு வரப்பட்டது. மகளிர்க்கு எப்படி தகுதி நிர்ணயம் செய்தார்கள் என்பது இப்போது வரை தெளிவாக இல்லை. ‘அனைவருக்கும்’ என்று சொன்ன சொல்லை நிறைவேற்றவில்லை.

    மேலும், 2021 தேர்தலில் அளிக்கப்பட்ட ஐநூற்றுக்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் பல இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. மாதந்தோறும் மின் கட்டணம் வசூல் செய்யப்படும், சிலிண்டருக்கு ரூ.100 குறைக்கப்படும், பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படும், நீட் தேர்வு ஒரே கையெழுத்தில் ரத்து செய்யப்படும் போன்ற வாக்குறுதிகள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.

      மேலும், இந்த ரூ.1,000 உரிமைத்தொகை ஆட்சிக்கு வந்த உடனே வழங்கப்படவில்லை; 27 மாதங்கள் கழித்தே வழங்கப்பட்டது. அதுவும் 2024 நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் அமல்படுத்தப்பட்டது. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த காலகட்டத்தில், “வாக்குறுதிகள் எப்போது நிறைவேறும்?” என்ற கேள்விக்கு அப்போதைய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் “தேர்தல் அறிக்கையில் தேதி போட்டுக் கொடுத்தோமா?” என்று பதிலளித்தது நினைவில் கொள்ளத்தக்கது.

      இப்போது சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ரூ.1,000 உரிமைத் தொகையை ரூ.2,000 ஆக உயர்த்துவோம் என்று புதிய வாக்குறுதி அளிக்கப்படுகிறது. இதனால், ஒருவேளை மீண்டும் ஆட்சிக்கு வந்த உடனேயே, ஜூன் மாதத்திலிருந்து ரூ.2,000 வழங்கப்படுமா? அல்லது மீண்டும் தகுதி என்ற அடிப்படையில் வடிகட்டல் செய்யப்படுமா? தற்போது ரூ.1,000 பெறுபவர்களில் சிலருக்கே ரூ.2,000 வழங்கப்படுமா? அல்லது இந்தத் திட்டமும் 2029 தேர்தல் காலம் வரை தாமதப்படுத்தப்படுமா? என்ற கேள்விகள் எழுகின்றன.

      முடிவாக, ரூ.8,000 கூப்பன் அல்லது ரூ.2,000 உரிமைத்தொகை என எந்தத் திட்டமாக இருந்தாலும், வாக்குறுதி மட்டும் போதாது; அது எப்போது நடைமுறைக்கு வரும் என்ற செயல் திட்டம் பற்றிய தெளிவே தி.மு.க.வின் நம்பிக்கையை நிர்ணயிக்கும். இதுபோன்ற இலவசங்களையெல்லாம் கடந்து, வாக்காளர்களும் பொதுமக்களும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

      ஒருமுறை வழங்கப் போகிற ரூ.8,000 கூப்பனுக்காகவே உங்கள் வாக்கை செலுத்தப் போகிறீர்களா? அல்லது தொலைநோக்கு சிந்தனை பார்வையுடன் தேர்தலை அணுகப் போகிறீர்களா? “ரூ.8,000 சலுகை என்பது, சாதாரணமாகவே கடைகளிலும் இ-காமர்ஸிலும் கிடைக்கும் ஒன்றே! அதற்காகவே வாக்கு செலுத்த வேண்டுமா?”

      (செய்திக்கதிர் வாட்ஸ்அப் குழு)

      வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

      hindu
      ohm

      தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
      தமிழில்: ராஜி ரகுநாதன்

      சனாதன தர்மத்தில் நூல்களின் செழிப்பு அதிகம். மிகப் பெரிய அறிவுப் பெட்டகம் நமக்குள்ளது. முனிவர்கள் தம் தவ வலிமையால் கேட்டுணர்ந்த, ஆழ்ந்த, நுட்பமான மறை பொருளைக் கொண்ட கம்பீரமான வேத மந்திரங்களின் குவியல் அது. அடிப்படை அறிவின் சாராம்சம். அவை சாட்சாத் சப்த வடிவான இறைவன். ஒலி வடிவில் வெளிப்பட்ட இறைசக்தி. அவற்றின் பொருளை உலகியல் மொழியறிவு கொண்டோ, சமுதாயக் கோணத்திலோ முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது. சமுதாயத்திற்கும், சாமானியரின் பார்வைக்கும் அப்பாற்பட்ட விஸ்வ ரகசியங்கள் பல அவற்றில் பொதிந்துள்ளன. அவற்றை மீண்டும் முனிவர்களே நமக்கு அளிக்க வேண்டும். அதனால்தான் புராணம், இதிகாசம், தர்ம சாஸ்திரம், மந்திர சாஸ்திரம், தந்திர சாஸ்திரம் என்று பல வகைகளில் அவை தவ முனிவர்களின் வாயிலாகவே உலகிற்கு வெளிப்பட்டன.

      அவற்றில் சில விஷயங்கள் நவீன காலத்திற்குப் பொருத்தமற்றவை என்றும், சமூகத்தில் பகைமையை வளர்ப்பவை என்றும், எவ்விதப் பொருளுமற்றவை என்றும் அவற்றை வக்கிரப் பார்வையோடு பார்த்து வாதிட்டவர் உள்ளனர். அதுமட்டுமின்றி, இவற்றின் மேல் மதிப்பு கொண்டவர்களிடம் கூட அவற்றின் நம்பகத்தன்மையைச் சந்தேகிக்கும் மனப்போக்கு காணப்படுகிறது. இவை உண்மைதானா என்று ஐயுறுவதாகத் தோன்றுகிறது. அதனால் புராணங்கள், தர்ம சாத்திரங்கள் போன்றவை ஆதாரமற்றவை என்றும், பிற்காலத்தில் இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்டவை என்றும் முத்திரை குத்தும் கூற்றுகளையும் நாம் எதிர்கொள்ள நேர்கிறது. ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்திற்குக் கட்டுப்பட்ட சிலர், தம் விருப்பத்திற்கு இணங்காத எதையும் பயனற்றது என்றும் ஆதாரமற்றது என்றும் வகைப்படுத்துகின்றனர். ஒத்திசைவு இன்மையாலும், ஆழமான உட்கருத்துகளை உள்வாங்க இயலாமல் போவதாலும், தாம் உருவாக்கிக் கொண்ட இறுக்கமான கட்டமைப்பிலிருந்து வெளியில் வரத் தயங்கும் மனப்பான்மையாலும் உருவான கருத்துகளே இவை.

      இக்காரணத்தாலேயே நம் தர்ம நூல்களை ஏளனம் செய்வதற்கு, தம்மைத் தாமே அறிவுஜீவிகள் என்று அறிவித்துக் கொள்ளும் சிலர் சமுதாயத்தில் உலவுகின்றனர்.   ஆனால் முனிவர்கள் எழுதிய தொன்மையான நூல்களின் உள்ளடக்கங்களை ஆராய்வதற்கு, அவை இயற்றப்பட்ட காலத்தில் வழக்கத்திலிருந்த கலைச்சொற்களையும் மருபு சார்ந்த மொழி பற்றிய புரிதலையும் கொண்டிருப்பது இன்றியமையாதது. ஒரு சொல் உணர்த்தக் கூடிய பன்முகப் பொருள்களை இனங்கண்டு அறியும் திறன் வேண்டும். 

      எடுத்துக்காட்டாக, “இந்திரன் (கோ) பசுக்களால் பாறையைத் தாக்கினான்” என்ற மத்திரத்திற்கு, “வேதத்தில் பசுக் கொலை உள்ளது” என்று பொருள் கூறியவர்கள் உள்ளனர். ஆனால் ‘கோ’ என்ற சொல்லுக்கு ‘ஒளிக்கதிர்’ என்று ‘வேத நிருக்தம்’ கூறும் பொருளும் உண்டு. சூரியனுக்கும் இந்திரன் என்ற பெயர் உண்டு. சூரியனின் ஒளிக்கதிர்களின் வலிமையால் பாறை சிதறும் நிகழ்வை விவரிக்கும் மந்திரத்திற்குப் புரிதல் இன்மையால், பசுவதை என்று பொருள் கூறுவது பெரும் பிழை அல்லவா?

      ஆகவே, சாதாரண மத நூலாக வேதங்களைப் பார்க்கக் கூடாது. அதேபோல் தெய்வங்களைக் குறித்த சில கதைகள் குறியீட்டு மொழியிலும், வேத மொழியிலும்  கூறப்பட்டுள்ளன. இப்பிரபஞ்சம் தோன்றி விரிவடைந்த மாற்றங்களைச் சித்திரிக்கும்  பலவகைக் குறியீட்டுக் கதைகள் உள்ளன. வானியல் அறிவியலின் கண்ணோட்டத்தோடு பார்க்கும் போது இவற்றின் உண்மையான உட்பொருள் தெளிவாகப் புரியும்.

      இது வெறும் சமூக அம்சங்களை மட்டும் உற்று நோக்கும் விஷயம் அல்ல. ஜோதிட விஞ்ஞானம், யோக விஞ்ஞானம், தத்துவ விஞ்ஞானம், மந்திர விஞ்ஞானம், யக்ஞ விஞ்ஞானம், மருத்துவக் கல்வி, உடற்கூறியல், வேதங்களின் பொருளை உணர்ததும்  விஞ்ஞானம் போன்ற பல்வேறு துறைகள் கதைகளாகவும் போதனைகளாகவும், கவிதை வடிவிலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. அவற்றை முறையாகப் புரிந்து கொள்ளும் போது, அவற்றில் மறைத்துள்ள உட்பொருள் பற்றிய தெளிவு மேலும் அதிகமாகும்.

      அதனால்தான், சிக்ஷா (உச்சரிப்பு, ஒலியியல்), வியாகரணம் (இலக்கணம்), சந்தஸ் (யாப்பு), நிருக்தம் (சொற்பிறப்பியல்), ஜோதிடம் (வானியல், ஜோதிடம்), கல்பம் (சடங்குகள்) என்ற ஆறு (வேதங்களின் துணை நூல்கள்) வேதாங்க சாஸ்திரங்களில் பயிற்சி பெற்றவர்கள் வேதங்களின் பொருளை உண்மையாக அறிவார்கள் என்று சம்பிரதாய அறிஞர்கள் கூறுவர்.

      சிலர் வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள். ஆனால் அவை ஒன்றுக்கொன்று துணையாக சனாதன தர்மமாக, நித்திய நூதனமாக பல யுகங்களாகத் தொடர்ந்து இருந்து வருகிறன்றன. 

      மனிதர்களின் உயிரியல் பண்புகள், விருப்பங்கள், உடல் நிலைகள், உள்ளத்தின் எண்ணங்கள், உணர்வுகள் போன்றவை ஒன்று போல் இருக்காது. இக்காரணத்தால் பல்வேறு இயல்புள்ளவர்களுக்கு ஏற்ப தனித்துவமான ஆன்மீகப் பாதைகளை முனிவர்களின் நூல்களான ஞான இலக்கியங்கள் வழங்கியுள்ளன.

      தந்திர நூல்களின் அற்புதங்கள், யோக சாஸ்திரங்களில் ஹட யோகம், லய யோகம், நாத யோகம், ராஜ யோகம், மந்திர யோகம் என்று பலவேறு பிரிவுகள், ஸ்வரம் (இசை ஒலி) , பிரச்னம் (கேள்வி ஜோதிடம்), ஜோதிஷம் (வானியல் ஜோதிடம்) போன்ற அறிவியல்கள், அறநெறி ஒழுக்கத்தை போதிக்கும் நூலகள், தனிமனித ஆளுமையை மலரச் செய்யும் அறிவுரைகள் போன்றவை அவற்றில் ஏராளமாக உள்ளன. எண்ணற்ற கவிஞர்களும், உரையாசிரியர்களும், அறிஞர்களும் அவற்றை மேலும் செழுமையாக்கி விரிவுபடுத்தினர்.

      எந்த நிலையில் இருப்பவரானாலும் அவரவருக்குப் பிடித்த வகையில் ஆன்மீக சாதனை செய்து, பக்குவத்தை அடையும் பலவேறு பாதைகளை நம் முன்னோர் அளித்துள்ளனர். அவற்றைக் கடைப்பிடித்து உய்வடைந்தவர் மிகப்பலர் உள்ளனர்.

      “இத்தனை உயர்ந்த ஆன்மீக நிலைத் தத்துவத்தை போதிக்கும் நீங்கள் ஹிந்து மதத்தில் இருக்கும் அற்பமான விக்ரக வழிபாட்டை எவ்வாறு நியாயப்படுத்துகிறீர்கள்?” என்று சிலர்  சுவாமி விவேகானந்தரைக் கேட்டபோது, அவர் “எந்த வழிமுறையைப் பற்றிப் பேசினாலும் அந்தப் பாதையைப் பின்பற்றுபவரின் தரத்தையும் பார்க்க வேண்டும். நீங்கள் அற்பம் என்று புறக்கணிக்கும் விக்ரக வழிபாட்டு முறையில் எண்ணற்ற பக்தர்களின் வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்திய தத்துவ ஞானிகள் உள்ளனர். அந்த வகையில் அந்த பாதையும் உயர்ந்ததே” என்றார்.

      விக்ரகங்களின் வடிவமைப்பு, அளவுகள், பூஜை விதிமுறைகள் இவையனைத்தும் சிறந்த நுட்பமான அறிவியல் சாத்திரங்களாக விரிந்துள்ளன. அவற்றை ஆராயாமல் வெறும் மேலெழுந்தவாரியாகப் பார்த்து விமர்சிப்பது சரியல்ல.

      அதனால் சம்பிரதாயமாக வரும் நம் முனிவர்கள் அளித்த ஞானத்தை, எண்ணற்ற மகான்களால் போற்றப்பட்ட கருத்துகளை அவசரப்பட்டு புறக்கணிப்பதோ தவறுதலாக விமர்சிப்பதோ சரியல்ல. நம் அனைத்து பாரம்பரிய வழிமுறைகளும் உயர்ந்தவையே. ஒரு குறிப்பிட்ட பாதைக்குக் கட்டுப்பட்டு பின்பற்றி மகிழ்வதும் நல்லதே. ஆனால் மீதியிருப்பவற்றை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதோ இழிவுபடுத்துவதோ பொருந்தாது.   ஒரு தவளைக்குத் தன் கிணற்றின் ஆழம் மட்டுமே தெரியும்.

      இன்னொரு முக்கியமான விஷயம். ஒருவர் தனக்குத் தற்போது ஏற்புடையதல்ல என்று தோன்றிய கருத்தையோ, வழிமுறையையோ கடைபிடிக்காமல் ஒதுக்கி வைக்க நினைக்கலாம். நம் தொன்மையான நூல்களில் முக்காலத்திற்கும் பொருத்தமான நன்மை பயக்கும் விஷயங்களும் கருத்துகளும் ஏராளம் உள்ளன. அவற்றை அறிந்து கொள்ளலாம். எந்தக் காலத்திற்கும் எந்த மனிதருக்கும் பயன்படும் நல்ல கருத்துகள் செழுமையாக நம் நூல்களில் உள்ளன. காலத்திற்கேற்ப அப்போதைக்கப்போது மனித இனத்தைத் தொடர்ந்து வழிநடத்தும் மாபெரும் இலக்கியக் களஞ்சியமும், பாரம்பரிய ஒழுக்க விதிகளும் உறுதியாக நிலைத்து நின்கின்றன. 

      நமக்கு பிடிக்காதவற்றை நிராகரித்தாலும், பிடித்தவை பல எஞ்சியிருக்கும். மொத்தத்தில் அபாரமான இலக்கியச் செல்வத்தில் அத்தனை விதமான பயன்களையும் அற்புதமாக நிறைவேற்றும் காலத்தால் அழியாத கருத்துகள் பல உள்ளன. அவற்றை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். திறந்த மனத்தோடு, கபடமின்றி, நேர்மையாக அவற்றை ஆராய வேண்டும். அழகாக கருத்தொருமை காண வேண்டும். அதன் மூலம் வாழ்வின் முழுமையை சாதிக்க வேண்டும்.

      (Source: தலையங்கம், ருஷிபீடம் மாத இதழ், ஏப்ரல் 2026)