Home Blog Page 12

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

isreal iran war - 2026

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது, நடுவே சென்று அவர்களது சண்டையை விலக்கி விட்டால், ஒரு நண்பர் நமக்குக் கிடைப்பார். அதே நேரம் நமக்கு நன்கு அறிமுகமான இரண்டு நண்பர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, அவர்களை விலக்கி விட முயன்றால், அந்த இருவரில் ஒருவர் நமக்கு எதிரி ஆவார் என்பது அந்தப் பழமொழியின் சாரம்.

பாரதம் இந்தப் பழமொழியின் உள் அர்த்தத்தை நன்றாகப் புரிந்து கொண்டிருப்பதால்தான் ஈரான் இஸ்ரேல்/அமெரிக்கா நடுவே நடக்கும் சண்டையை தீர்ப்பதற்கு, பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று தானாக முன்வரவில்லை. காரணம் ஈரானும் இஸ்ரேல் தரப்பும் நமக்கு நட்பு நாடுகளாகவே இருக்கின்றன.  சமரசம் என்று பேச வரும் போது ஏதாவது ஒரு தரப்புக்கு அவர்கள் நிலையில் இருந்து சற்று பின் வாங்கி பாதகமாகவே இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். அது அந்த நட்புறவை கட்டாயப்படுத்தி இணங்கச் செய்வதாகவே முடியும். அதனால் ஏற்படும் காயம் உள்ளுக்குள் விரோதமாக வளர்ந்து நட்புறவை முறிக்கவும் செய்யும்.

தன் நாட்டு நலனை விரும்பும் ஒரு தலைவன், இரு தரப்புக்கும் நடுவில் அறிவுரை சொல்வதோடு நிறுத்திக் கொள்வான். அதைத்தான் பிரதமர் மோடி செய்திருக்கிறார்! அந்த அளவில் அவருடைய செயல்பாடு பெரிதும் பாராட்டுக்கு உரியதே!

இங்கே பாகிஸ்தானின் செயல்பாட்டை நாம் பார்க்க வேண்டும்.

அமெரிக்காவின் அடிமையாக, அமெரிக்கா சொல்வதைச் செய்யும் அடியாளாக செயல்படும் பாகிஸ்தானின் இயல்பு, ஈரானுக்குத் தெரியாமல் இல்லை! அதை பாகிஸ்தானே வெளிச்சம்போட்டுக் காட்டிவிட்டது. யுஎஸ் என்ன போஸ்ட் போட வேண்டும் என சொல்கிறதோ அந்த ட்ராஃப்ட்டை அப்படியே அடித்தல் திருத்தல் இல்லாமல் தன் அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பாகிஸ்தான் பிரதமர் பகிர்கிறார். அதைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு, மண்டை மேல உள்ள கொண்டையை மறைங்கடா என்று அமெரிக்கா சொன்ன பிறகு அந்த எக்ஸ் தள போஸ்டை நீக்கிவிட்டு, திருத்தப்பட்ட போஸ்ட்டை வெளியிடுகிறது பாகிஸ்தான்.

இப்படிப்பட்ட அமெரிக்க அடிமை பாகிஸ்தான், தங்கள் தரப்புக்கு நியாயமாக நடந்து கொள்ளுமா என்பதை ஈரான் பலமுறை யோசித்துப் பார்த்திருக்காதா என்ன? மேலும் சன்னி முஸ்லிம் நாடாக உள்ள பாகிஸ்தான் ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தும் அக்கிரமங்களை, ஷியா முஸ்லிம் நாடான ஈரான் அறியாதா என்ன?

இன்னொருபுறம், இஸ்ரேலியர்களை சீண்டி, யூதர்களை இன அழிப்பு செய்வதே முஸ்லிம் நாடுகளின் கொள்கை என்பதுபோல் போஸ்ட் போட்டு மேலும் கடுப்பேற்றினார் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர். அதன் விளைவு, பாகிஸ்தான் நம்புவதற்கு உகந்த நாடல்ல என்று இஸ்ரேல் பகிரங்கமாக அறிவித்தது. இப்படிப்பட்ட சூழலில் பாகிஸ்தான் முன்னெடுப்பதாக நடித்துக் கொண்டிருக்கும் அமைதிப் பேச்சு எப்படி வெற்றி பெறும்?!

இந்தப் பின்னணியை பாரதம் அறியாதா என்ன? அதனால் தான் பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக, தன் வேலையைப் பார்த்துக் கொண்டு அமைதியாகக் கடந்து செல்கிறார். அதே நேரம், ஈரான் ஒன்றும் பாரதத்துக்கு நம்பிக்கையான நாடு என்று சொல்வதற்கும் கடந்த கால ஈரானின் நடவடிக்கைகள் வழி செய்யவில்லை.

ஒரு புறம், “காஷ்மீரை ஆக்கிரமிக்காதே பாரதமே” என்று கூவிக் கொண்டு மறுபுறம், “ஈரான் பாரதம் பாய் பாய்” என்று ஈரான் உருட்டுவதெல்லாம் என்ன ரகம்? இஸ்ரேலும் அமெரிக்காவும் தன்னைத் தொடர்ந்து தாக்குவதை அடுத்து, “ஈரானும் இண்டியாவும் நெருங்கிய நண்பர்கள்” என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறது ஈரான். பாரதத்தின் ஆதரவு தனக்கு முக்கியம் என்பதை இப்போதைய கட்டத்தில் மிகத் தாமதமாக உணர்ந்திருக்கிறது போல!

ஈரான் தன் சமூகத் தளப் பதிவில், ஈரானில் இருக்கும் சாபஹார் துறைமுகத்தைக் காட்டி, “இது ஈரான் இந்தியாவுக்கான தங்கப் பாலம்” என்று குறிப்பிட்டிருக்கிறது.

இந்த சாபஹார் துறைமுகத்தை மோடியின் பாரத அரசு தொடர்ந்து நடத்த பல தடைகளைப் போட்டது ஈரான் அரசு. அத்தனை தடைகளையும் பொறுத்துக் கொண்டது மோடியின் அரசு. அதற்குக் காரணம் INSTC என்று சொல்லப்படும் International North–South Transport Corridor இணைப்புக்கு ஈரானின் சாபஹார் துறைமுகம் முக்கியப் புள்ளி என்பது தான். இந்த இணைப்புப் புள்ளி வழியே தான் பாரதத்தின் பொருட்கள் மத்திய ஆசியா, ரஷ்யா, ஐரோப்பா என பல நாடுகளையும் சென்றடைகிறது.

இதைத் தடுக்க அமெரிக்கா எவ்வளவோ முயற்சியும் செய்தது. மோதிஜியின் பொறுமை முடிவில் வென்றது. என்றாலும், ஈரான் மீது இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதல் நிச்சயம் என்று தெரிந்ததும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பாரதம் வலியுறுத்தியதாகவும், அதை ஈரான் நிராகரித்ததாகவும் செய்திகள் உண்டு. ஈரான் திருந்தப் போவதில்லை என்பதால், சாபஹார் துறைமுகத்துக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை பாரதம். சாபஹார் துறைமுகத்தையும் கைவிட்டது.

இத்தனைக்குப் பிறகும் ஈரான், “சாபஹார் துறைமுகம் ஈரான் இந்தியாவுக்கான தங்கப் பாலம்” என்றெல்லாம் உருட்டுவது என்ன ரகம்? ‘ஈரான் அண்ணே, ரீல் அறுந்து ரொம்ப நாளாச்சுண்ணே… உங்க இந்தியா விரோதப் போக்கை மறக்க மாட்டோம்ண்ணே’ என்று குரல் எழும்புகிறது இந்தியாவில்!

ஆனால் மோடி விரோதத்தை மனதில் கொண்டு இந்தியா விரோதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய அரசியல்வாதிகள் மட்டும், ஈரானுக்கு இந்தியா பகிரங்க ஆதரவளிக்க வேண்டும் என்று கூக்குரலிடுகிறார்கள். அவர்களின் ஒரே நோக்கம், இந்தியாவுக்கு எதிராக இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைத் திருப்பி விட வேண்டும் என்ற தேசவிரோத எண்ணம் மட்டுமே!

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

actor vijay - 2026
#image_title

விஜய் நடித்துள்ள ஜனநாயக படம் முழுமையும் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக இந்தப் படம் சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக பிரச்சனையில் சிக்கி சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சென்சார் சான்றிதழ் இல்லாமலேயே முழு படமும் இணையத்தில்  கசிய விடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

இதனை வெளியிட்டவர்கள் யாராக இருக்கும் என்ற அனுமானங்கள் சமூக தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் சென்சார் சான்றிதழுக்காக  உள்ளதால் சென்சார் போர்டு இதை கசிய விட்டிருக்கும் என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்தனர். ஆனால், ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்ததற்கு நாங்கள் காரணம் அல்ல என்று மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

‘ஜனநாயகன்’ படத்தை சென்சார் போர்டு கசிய விட்டதாக பரப்பப்படும் தகவல் ஆதாரமற்றது, உண்மைக்கு புறம்பானது. தயாரிப்பு நிறுவனம் வசமுள்ள KDM கடவுச் சீட்டு இல்லாமல் சென்சார் போர்டால் படத்தை பார்க்கவே முடியாது. ‘ஜனநாயகன்’ திரைப்படத் தொகுப்பை மார்ச் 17ஆம் தேதியே தயாரிப்பு நிறுவனத்திடம் நாங்கள் திருப்பி வழங்கிவிட்டோம். தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களும் பாதுகாப்பாக கையாளப்படுகின்றன, என்று சென்சார் போர்ட் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அரசியல் கட்சி தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் இறங்கியுள்ள நடிகர் விஜய், ஜனநாயகன் என்ற திரைப்படத்தை கடைசியாக முடித்துக் கொடுத்தார். அதுவே தமது திரைவாழ்வின் கடைசிப் படம் என்று அவர் அறிவித்துவிட்டு, கட்சியைத் தொடங்கி, தற்போது தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார். 

ஆனால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட ஜனநாயகன் படம், சென்சார் சான்றிதழ் பெற முடியாமல், நீதிமன்றத்தை விஜய் தரப்பு அணுகி, அங்கும் குட்டுப்பட்டு, தற்போது வரை எப்போது வெளியாகும் என்று தெரியாத சூழலே நிலவுகிறது.  இந்நிலையில், படம் வெளியாகாததற்கு அரசியலே காரணம் என்று விஜயும், அவரது ரசிகர்களும் கூறி வருகின்றனர். 

இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் 5 நிமிட காட்சிகள் அண்மையில் சட்ட விரோதமாக இணையத்தில் வெளியானது. திட்டமிட்டபடி படம் ரிலீஸ் ஆகாத சூழலில், இணையத்தில் படத்தின் காட்சிகள் வெளியானதால் படத் தயாரிப்புக் குழு அதிர்ச்சி அடைந்தது. மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், தற்போது மொத்த படமுமே இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், ஜனநாயகன் படம் லீக் ஆனதற்கு நாங்கள் தான் காரணம் என்ற புகார் தவறானது; அடிப்படை ஆதாரமற்றது என்று மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் தணிக்கை வாரியம் வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது. இந்த நடைமுறை கடவுச்சொல் மூலமே பாதுகாக்கப்படுகிறது. இந்த KDM கடவுச்சொல் ஆனது, தயாரிப்பாளரிடம் மட்டுமே தான் இருக்கும்.

இந்தக் கடவுச்சொல்லைத் தவிர வேறு ஏதேனும் கடவுச்சொல்லை பயன்படுத்தி படத்தைப் பார்க்க முடியாது. ஜனநாயகன் படம் டிஜிட்டல் சினிமா தொகுப்பு, உரிய ஒப்புதலுடன் மார்ச் 17ம் தேதி மும்பையில் படத்தை சான்றிதழுக்காக விண்ணப்பித்தவர்களிடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அன்றைய தினம் முதல், படத்தின் சினிமா தொகுப்பு அவர்களிடமேதான் இருக்கிறது – என்று மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.

கேடிஎம் என்பது என்ன?

மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (CBFC), திரையிடலின் போது திரைப்படங்கள் கசிவதைத் தடுக்க, பாதுகாப்பான, காலவரையறைக்குட்பட்ட KDM (திறவுகோல் விநியோக செய்தி) முறையைப் பயன்படுத்துகிறது. 

KDM என்பது ஒரு டிஜிட்டல் சினிமா தொகுப்பை (DCP) இயக்குவதற்குத் தேவைப்படும் மறைகுறியாக்கப்பட்ட கோப்பு ஆகும். KDM-கள் தயாரிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், குறுகிய காலத்திற்கு (எ.கா., 5 மணிநேரம்) மட்டுமே செல்லுபடியாகும் என்றும், அவை திரைப்படக் கசிவுகளுக்குக் காரணம் அல்ல என்றும் CBFC வலியுறுத்துகிறது. 

பாதுகாப்பு நெறிமுறை: DCP மறைகுறியாக்கப்பட்டுள்ளது, மேலும் ஒரு குறிப்பிட்ட KDM மட்டுமே அதை இயக்க அனுமதிக்கிறது, இது அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுக்கிறது.

கசிவுத் தடுப்பு: அனைத்து சான்றிதழ் சமர்ப்பிப்புகளுக்கும் CBFC ஒரு பாதுகாப்பான, கடவுச்சொல்-பாதுகாக்கப்பட்ட KDM செயல்முறையைப் பின்பற்றுகிறது. 

தயாரிப்பாளரின் பொறுப்பு: சமீபத்திய சர்ச்சைகளில், KDM வாரியத்திடம் இல்லாமல், தயாரிப்பாளர்/திரைப்படத் தயாரிப்பாளரிடமே உள்ளது என்று CBFC தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு DCP கோப்பு நகலெடுக்கப்பட்டாலும், அதற்கான திறவுகோல் இல்லாமல் அதை இயக்க முடியாது என்பதை KDM அமைப்பு உறுதி செய்கிறது; இந்தத் திறவுகோல் குறிப்பிட்ட, அங்கீகரிக்கப்பட்ட கணினிகளுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது.

யார் பார்த்த வேலை?

இனையத்தில் கசிந்த படத்தின் டிஜிட்டல் அளவு, நேற்று முதலில் 650 எம்பி அளவில் வெளியானதாகச் சொன்னார்கள். பிறகு 1.4 ஜிபி அளவு என்றார்கள்.  இன்று காலையில 3.96 ஜிபி அளவு என்றார்கள். இப்போது 8.5 ஜிபி அளவு என்கிறார்கள். அப்படி என்றால் அது, Ultra 4K தியேட்டர் பிரின்ட்டு! எனில் யார் பார்த்த வேலை இது..? என்று இணையதளங்களில் கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன. 

தேர்தல் அரசியலுக்காக, தேர்தல் நேரத்தில் தயாரிக்கப்பட்ட படம் ஜனநாயகன். படத்தின் தலைப்பு பெயரே அதன் உள்நோக்கத்தைச் சொல்லும். இந்நிலையில், சென்சார் போர்டில் சிக்கிக் கொண்டு காத்திருக்கும் ஒரு படத்தை சென்சார் சான்று இல்லாமலேயே வெளியிடும் துணிச்சல் விஜய் தரப்பைத் தவிர வேறு எவருக்கும் வந்திருக்காது என்ற கருத்துகளும் பலமாக எதிரொலிக்கின்றன. அப்படி நிகழ்ந்திருந்தால் விஜய் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர் என்றும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

actor vijay - 2026
#image_title

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

பொதுவாக, ஒரு படம் திரையரங்குகளில் வெளியான பிறகு தான் Piracy நடக்கும். அங்கு கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட பதிப்புகள் தான் வெளியேறும். ஆனால், “ஜனநாயகன்” விவகாரத்தில் Edit Reference Mark உடன் படம் வெளியானதாக கூறப்படுவது, இது ஒரு Personal Copy ஆக இருக்கலாம் என்ற முக்கியமான சந்தேகத்தை எழுப்புகிறது.

திரைப்படத் துறையில் இப்படிப்பட்ட Personal Copy-கள் தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர், எடிட்டர் ஆகிய சிலரிடம் மட்டுமே இருக்கும் என்பது அறியப்பட்ட நடைமுறை. இதனால், இந்த கசிவு வெளிப்புற Piracy அல்ல, உள்ளகத் தரப்பிலிருந்து நடந்திருக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவது, சம்பவத்தின் நேரம். தேர்தல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் பின்னணியுடன் உருவானதாக கூறப்படும் ஒரு படம் திடீரென லீக் ஆகிறது. இது சீரற்ற நிகழ்வா அல்லது திட்டமிட்ட நடவடிக்கையா என்ற விவாதத்தை தூண்டுகிறது.

இந்த விவகாரத்தை புரிந்துகொள்ள, சமீபத்திய நிகழ்வுகளின் காலவரிசையை கவனிக்க வேண்டியுள்ளது. நடிகர் விஜய் தனது “தமிழக வெற்றிக் கழகம்” (TVK) கட்சியை பிப்ரவரி 2024-ல் தொடங்கினார். அதற்கு முன்னதாகவே, “Whistle Podu” பாடலில் அரசியல் சைகைகள் இருப்பதாக விவாதம் எழுந்தது. பின்னர், 2026 தேர்தலை முன்னிட்டு ‘விசில்’ சின்னம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இதே காலப்பகுதியில், “ஜனநாயகன்” திரைப்படம் டிசம்பர் 2025-ல் சான்றிதழுக்காக சமர்ப்பிக்கப்பட்டும், இன்னும் வெளியாகாத நிலையில் உள்ளது. இப்படியான சூழலில், படம் லீக் ஆனதாக தகவல் வெளியாகிறது.

இந்த தொடர் நிகழ்வுகள் அனைத்தும் சேர்ந்து பார்க்கும்போது, இது ஒரு சாதாரண தொழில்நுட்ப கசிவு மட்டுமா என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக, படத்தில் அரசியல் சார்ந்த வசனங்கள் அதிகம் உள்ளதாக கூறப்படுவது, இந்த நேரத்திலான லீக்கின் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது.

தமிழ் ஊடக வரலாற்றிலும் எதிர்பாராத ஒளிபரப்புகள் நடந்துள்ளன. “கில்லி” திரைப்படம், பிரபலமான ஒரு சேனலில் திட்டமிட்ட ஒளிபரப்புக்கு முன்பே மற்றொரு சேனலில் ஒளிபரப்பான சம்பவம், போட்டி சூழலில் தகவல் மற்றும் அணுகல் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை நினைவூட்டுகிறது.

இந்நிலையில், “ஜனநாயகன்” லீக் — ஒரு Piracy சம்பவமா, உள்ளகத் தகவல் கசிவா, அல்லது அரசியல்-சினிமா இணைப்பில் நிகழும் திட்டமிட்ட நகர்வா என்ற கேள்வி தொடர்கிறது.

இந்த கேள்விகளுக்கு தெளிவான பதில் கிடைக்க வேண்டுமெனில், அதிகாரப்பூர்வ விசாரணைகள் அவசியம். அதுவரை, “ஜனநாயகன்” லீக் — சாதாரண சம்பவமா அல்லது பெரிய திட்டமா என்பது தான் முக்கியமான கேள்வியாக இருக்கும்.

  • செய்திக்கதிர் குழு

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

write thoughts - 2026
#image_title

இந்தியாவில் ‘டேட்டிங்’ செயலிகளை சுமார் 40 லட்சம் பேர் பயன்படுத்தி வருவதும், அவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்களாக இருப்பதும், பெண்களின் பங்களிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 148 சதவிகிதம் அதிகரித்திருப்பதும் சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

அனைத்து ‘டேட்டிங்’ பயன்பாடுகளும் தவறானவை அல்ல என்றாலும், ‘டேட்டிங்’ செயலிகளின் பயன்பாடு அதிகரித்து, திருமணத்தை மீறிய உறவுகள் உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் காட்டுவது சமூகத்தின் தற்போதைய பாதை கவலைக்கிடமாக உள்ளதை சுட்டிக்காட்டுகிறது. இளம் வயது இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே இவ்வகை செயலிகளின் பரவல், சமூக ஒழுக்கம் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையை உருவாக்குகிறது.

திருமணம், வேலைவாய்ப்பு, குடும்ப வாழ்க்கை போன்ற அடிப்படை நிலைகள் சரியாக அமையாதது போன்ற காரணங்களுடன், மது, போதைப் பொருள் பழக்கங்கள் மற்றும் தவறான நட்புகள் இணைந்து இளைஞர்களை தவறான பாதைகளுக்கு இட்டுச் செல்கின்றன. இதனால் சமூகத்தில் ஒழுங்கின்மை மட்டுமல்லாமல், குற்றச்செயல்கள் மற்றும் நெறி சிதைவும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவது என்னவெனில், இந்தப் போக்கு கல்வியறிவு பெற்ற மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடமும் காணப்படுகிறது.

மேலும், ‘டேட்டிங்’ செயலிகள் சைபர் குற்றங்களுக்கு வழிவகுக்கும் அபாயமும் அதிகரித்து வருகிறது. அறிமுகமற்றவர்களுடன் தொடர்பு கொண்டு, தங்களுக்கே தெரியாமல் பதிவு செய்யப்படும் தனிப்பட்ட தகவல்கள், வீடியோ, ஆடியோ போன்றவற்றை பின்னர் பயன்படுத்தி மிரட்டல் மற்றும் பண மோசடி நடத்தும் சம்பவங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இது தனிநபர் மரியாதை மட்டுமின்றி, குடும்பத்தின் சமூக மதிப்பையும் பாதிக்கக்கூடியதாகும். ‘டேட்டிங்’ செயலிகளில் ஒரு தனிப்பட்ட தொடர்பாக தொடங்கி, திட்டமிட்ட மோசடியாக மாறும் அபாயம் அதிகம். ஒரு கிளிக்கில் தொடங்கும் தொடர்பு, ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தை பாதிக்கும் நிலைக்கு செல்லக்கூடும்.

இதே போக்கின் ஒரு பகுதியாக, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்க்கும் காட்சிகளுடன் சிலர் தோன்றி, “சாட்டிங் செய்ய வேண்டுமா, ‘டேட்டிங்’ செய்ய வேண்டுமா?” என அழைக்கும் வகையில் சிறு வீடியோக்கள் மற்றும் விளம்பரங்கள் பரவுவது கவலைக்கிடமானதாக உள்ளது. இத்தகைய உள்ளடக்கங்கள் இளைஞர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் அபாயம் இருப்பதால், இவ்வாறான விளம்பரங்களையும் கட்டுப்படுத்துவது அவசியமாகிறது.

பெருநகரங்களில் தொடங்கிய ‘டேட்டிங்’ கலாச்சாரம், பிற நகரங்கள் மற்றும் இளைஞர்களிடமும் பரவுவதற்கு முன், மத்திய மற்றும் மாநில அரசுகள் இதுகுறித்து முழுமையான ஆய்வு செய்வதுடன், பயன்பாட்டை கட்டுப்படுத்தும் கொள்கைகள் அவசியம்.

இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், ஒரு குறிப்பிட்ட வயது வரையிலான கட்டுப்பாடுகள் அல்லது கடுமையான விதிமுறைகள் கொண்டு வரப்பட வேண்டும். கேமிங், சூதாட்ட செயலிகளை தடை செய்தது போல், ‘டேட்டிங்’ செயலிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் அல்லது தேவையெனில் தடை செய்ய வேண்டும்.

இல்லையெனில், தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும் எச்சரிக்கை மணி ஆகும்.

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

arunthamizh 50 book release - 2026

இலக்கியச்சாரல் அமைப்பின் நிறுவனர் கவிமாமணி இளையவன், சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல் அலுவலகத்தில் வைத்து வெளியிட்டார்.

இந்த அமைப்பின் பொருளாளர் பாமா ரவி, இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பாளர் (பணி நிறைவு) என். திருமலை, விஜயலெக்ஷ்மி திருமலை ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

ஜெயஸ்ரீ எம். சாரி எழுதியுள்ள இரண்டாவது நூலான அருந்தமிழ் 50 என்ற கவிதை நூல், 50 தலைப்புகளைக் கொண்டது. இந்நூலினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார் இளையவன்.

தன் ஏற்புரையில் நூலாசிரியர் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய இளையவன், காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவ பானுமதி ரமேஷ், வாழ்த்துரை வழங்கிய ஆன்மீக சொற்பொழிவாளர் சீதாலெக்ஷ்மி, இலக்கியச் சாரல் இதழின் ஆசிரியர் ரெ. முரளி, நூல் வெளிவர உதவியவர்கள் என அனைவருக்கும் தன் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

ilakkiyacharal book release function - 2026
  • ஜெயஸ்ரீ சாரி

கவிமாமணி இளையவன், அரிமா எஸ். கிருத்திவாசன் பற்றி எழுதிய ‘வரலாறு படைத்த வள்ளல்’ நூல் வெளியீட்டு விழா, இலக்கியச் சாரல் காலாண்டு இதழ் வெளியீட்டு விழா ஆகியவை, ‘நிறை இலக்கிய வட்ட’த்தின் தலைவர் ஸ்ரீநிவாஸனின் இல்லத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ‘இலக்கியச் சாரல்’ அமைப்பின் காவியக் கன்றுகளின் உற்சாகமான பங்களிப்பு, நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை பெரிதும் கவர்ந்தது.

இந்நிகழ்ச்சியில் சீதாலெக்ஷ்மி வரவேற்புரை ஆற்றினார். சிறுமி இமிழிசை காத்யாயினி இறை வணக்கம் பாடினார். சிறுவர்கள் லவன் , குசன் இருவரும் தமிழ் மொழியின் பெருமையை பேச்சுக் கலை மூலம் உணர்த்திய விதம் நிகழ்ச்சிக்கு மணி மகுடமாய் அமைந்தது. சிறுமி க. திவாஷிணி, அப்துல்கலாம் குறித்து ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

சிறுவன் க. கிரித்விக் திருக்குறள் சொல்ல, சாய் அபிராமி ஆத்திசூடி, பாரதியார் பாடல்களைச் சொன்னார். சிறுவன் ஷாஷ்வத் முகுந்தன் ஜிம்னாஸ்டிக் செய்து காட்டினார். சிறுவர்கள் ஷாஷ்வத், யுவனேஷ், சிறுமி பைரவி ஆகியோர் தங்களது அறிவியல் ப்ராஜெக்டுகளை செய்து காட்டினர்.

சிறுவன் அத்வைத் மழைநீர் சேகரிப்பு குறித்த கவிதையைச் சொல்லியும் திருப்புகழ் பாடியும் அசத்தினார். சிறுமி அதிதி, கந்தர் அனுபூதி பாடல்களைப் பாடினார். மேலும், புத்தகம் படிக்கும் பழக்கம் வளர வேண்டும் என்று சொல்லி, தனக்கு ஏற்பட்ட கதைப் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தால், தான் விரும்பிப் படித்த எழுத்தாளர் மாயூரனின் கதையை சுவைபட எடுத்துரைத்தார். இப்படி இலக்கியச் சாரலின் காவியக் கன்றுகள் அருமையாய் தங்களது திறமைகளை வெளிபடுத்தினார்கள்.

கம்ப ராமாயணத்தில் விபீஷணன் சரணாகதி பற்றிய உரையை கோகுல் ராம் நிகழ்த்த, அது நிகழ்ச்சிக்கு ஒரு மணி மகுடமாகத் திகழ்ந்தது.

பின்னர் இளையவன் எழுதிய ‘வரலாறு படைத்த வள்ளல்’ நூலை ஈசநேசன் மகஸ்ரீ வெளியிட, திவாகர் கிருத்திவாசன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் இளையவன் ஏற்புரை வழங்கினார்.

தொடர்ந்து, இலக்கியச்சாரல் காலாண்டு இதழை ஸ்ரீநிவாஸன் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து இந்நிகழ்ச்சிக்காகவே வந்திருந்த ஶ்ரீ அறம் அறக்கட்டளை நிறுவனர் சாய் ஈஸ்வரி, எழுத்தாளர் இன்பா ஆகியோர் உரையாற்றினர்.

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வுக்கு தமிழ்நாட்டிலிருந்து ஆசிரியர்கள் பங்கேற்கவும், அவர்களின் செயல்களுக்கு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த இலக்கியச் சாரல் அமைப்பின் மூத்த உறுப்பினர் குச்சனூர் டி. கோவிந்தராஜனுக்கு பாராட்டு மடல் அளித்து இளையவன் கௌரவித்தார்.

இலக்கியச் சாரல் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சுந்தர மகாலிங்கம், முன்னாள் தலைவர் நாகராஜன், விஜயலெக்ஷ்மி நாராயணன், பாமா ரவி, பெற்றோர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

வாழிய செந்தமிழ் பாடலுடன் விழா நிறைவுற்றது. வந்திருந்த அனைவருக்கும் நிறை இலக்கிய வட்ட தலைவர் சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் இரவு உணவு அளித்து மரியாதை செய்தனர்.

ஐபிஎல் 2026: அதிரடி ரன் குவிப்பின் ஆட்டக்களமானது!

ipl 2026 season - 2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பதிமூன்றாவது ஆட்டம் ராஜஸ்தான் vs மும்பை – கௌஹாத்தி – ஏப்ரல் 7

          முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி தொடக்க வீரர்கள் யசஸ்வீ ஜெய்ஸ்வால் (32 பந்துகளில் 77 ரன், 10 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் வைபவ் சூர்யவன்ஷி (14 பந்துகளில் 39 ரன், 1 ஃபோர், 5 சிக்சர்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். மழை காரணமாக ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. இரு அணிகளுக்கும் 11 ஓவர்கள் என அறிவிக்கப்பட்டது. அனுபவமிக்க பும்ரா ஓவர்களில் புதிய வீரர் சூர்யவன்ஷி எப்படி ஆடுவார் என்பது ஒரு பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த 15 வயது நிரம்பாத பையன் பும்ராவின் முதல் பந்தை சிக்சர் அடித்தான். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். அந்த ஓவரில் ஜெய்ஸ்வால் 4, 6, 4, 0, 4, 4 என 22 ரன்கள் அடித்தார். அடுத்த பும்ரா ஓவரில் சூர்யவன்ஷி இரண்டு சிக்சர் அடித்தார். மூன்றாவது ஓவரை போல்ட் வீசினார். அந்த ஓவரில் ஜெய்ஸ்வால் இரண்டு சிக்சர்களும் சூர்வன்ஷி ஒரு சிக்சரும் அடித்தனர். ஐந்தாவது ஓவரில் சூர்யவன்ஷி ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் துருவ் ஜுரல் (2 ரன்) ஆட்டமிழந்தார். ஒன்பதாவது ஓவரில் ரியன் பராக் (20 ரன்) ஆட்டமிழந்தார். 11ஆவது ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கட் இழப்பிற்கு 150 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 77 ரன், மற்றும் ஹெட்மயர் 6 ரன் அடித்திருந்தனர்.

          ராஜஸ்தானின் இளைய வீரர்கள் ஆடிய ஆட்டத்திற்கு எதிராக அனுபவமிக்க மும்பை எப்படி விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பொடு மும்பை இன்னிங்க்ஸ் தொடங்கியது. ரியன் ரிக்கிள்டன் (8 ரன்) முதல் ஓவரில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் (6 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மூன்றாவது ஓவரில் ரோஹித் ஷர்மா (5 ரன்) அவுட் ஆனார். ஹார்திக பாண்ட்யா (9 ரன்) ஐந்தாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் திலக் வர்மாவும் (14 ரன்) அவுட் ஆனார். அதிரடியாக ஆடிய ரூதர்ஃபோர்ட் (8 பந்துகளில் 25 ரன்) 8ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைப்போலவே அதிரடியாக ஆடிய நமன் தீர் (25 ரன்) 9ஆவது ஓவரில் அவுட் ஆனார். 11 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கட்டுகள் இழப்பிற்கு 123 ரன் எடுத்துத் தோல்வியடைந்தது. ஆட்டநாயகனாக யசஸ்வீ ஜெய்ஸ்வால் அறிவிக்கப்பட்டார்.

பதிநான்காவது ஆட்டம் குஜராத் vs டெல்லி – டெல்லி – ஏப்ரல் 8

          முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு 210 ரன் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர், தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஷன் (12 ரன்) இன்று சரியாக ஆடவில்லை. மற்றொரு தொடக்க வீரரான அணித்தலைவர் ஷுப்மன் கில் (45 பந்துகளில் 70 ரன், 4 ஃபோர், 5 சிக்சர்), ஜாஸ் பட்லர் (27 பந்துகளில் 52 ரன், 3 ஃபோர், 5 சிக்சர்), வாஷிங்க்டன் சுந்தர் (32 பந்துகளில் 55 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) ஆகியொர் சிறப்பாக ஆடியதால் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 210 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய  டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் பதும் நிசாங்கா (24 பந்துகளில் 41 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் கே. எல். ராகுல் (52 பந்துகளில் 92 ரன், 11 ஃபோர், 4 சிக்சர்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். அதற்குப் பின்னர் வந்தவர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். டேவிட் மில்லர் மட்டும் ஆட்டமிழக்காமல் 41 ரன் (20 பந்துகள், 3 ஃபோர், 3 சிக்சர்) அடித்தார். ஆயினும் 19.5ஆவது பந்தில் ஒரு ரன் எடுக்க அவர் தவறினார். கடைசி பந்தில் சிக்சர் அடிக்கலாம் என எண்ணியிருப்பார் போலும். கடைசிப் பந்தில் ஒரு ரன் ஓட முயல மறுமுனை மட்டையாளர் குல்தீப் யாதவ் ரன் அவுட் ஆனார். அதனால் டெல்லி அணி 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது.  

பதினைந்தாவது ஆட்டம் கொல்கொத்தா vs லக்னோ – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா – ஏப்ரல் 9

          எப்போதும் அதிரடியாக ஆடும் கொல்கொத்தா நைட் ரைடர் அணியின் ஆட்டக்காரர்கள் இன்று லக்னோ அணிக்கு எதிராக அதிரடியாக ஆட முடியவில்லை. இருப்பினும் அணித்தலைவர் அஜிங்க்யா ரஹானே (24 பந்துகளில் 41 ரன்), ரகுவன்ஷி (33 பந்துகளில் 45 ரன்), காமரூன் கிரீன் (24 பந்துகளில் 32 ரன்), ரோமன் போவெல் (24 பந்துகளில் 39 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு 181 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய லக்னோ அணியின் வீரர்களும் தொடக்கத்தில் சரியாக ஆடவில்லை. அந்த அணி 12 ஓவர்கள் முடிவதற்குள் அந்த அணி நாலு முக்கியமான வீரர்களான மிட்சல் மார்ஷ் (15 ரன்), மர்க்ரம் (22 ரன்), ரிஷப் பந்த் (10 ரன்), நிக்கோலஸ் பூரன் (13 ரன்) ஆகியோரை இழந்து விட்டது. ஆயுஷ் பதோனி (34 பந்துகளில் 54 ரன்) மற்றும் முகுல் சவுத்ரி (27 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 54 ரன்) எடுத்தனர். கடைசி ஓவரில் 14 ரன் கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முகுல் சவுத்ரி இரண்டு சிக்சர்கள் அடித்து வெற்றிக்கு வழிகோலினார். இதனால் லக்னோ அணி வெற்றிபெற்றது.

பதினாறாவது ஆட்டம் பெங்களூரு vs ராஜஸ்தான் – கௌஹாத்தி – ஏப்ரல் 10

          முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 10.5 ரன் ரேட்டில் 8 விக்கட் இழப்பிற்கு 201 ரன் எடுத்தது. அந்த அணியின் விராட் கோலி (16 பந்துகளில் 32 ரன்), படிக்கல் (7 பந்துகளில் 14 ரன்), ரஜத் படிதர் (40 பந்துகளில் 63 ரன்), ஷெப்பர்ட் (11 பந்துகளில் 22 ரன்), வெங்கடேஷ் ஐயர் (15 பந்துகளில் 29 ரன்) ஆகியோர் சுமாராக ஆடினர். ராஜஸ்தான் அணியின் ஆர்ச்சர், ரவி பிஷ்னோய், பிரிஜேஷ் ஷர்மா தலா 2 விக்கட்டுகள் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய ராஜஸ்தான் அணியின் வைபவ் சூர்யவன்ஷி (26 பந்துகளில் 78 ரன், 8 ஃபோர், 7 சிக்சர்) மற்றும் துருவ் ஜுரல் (43 பந்துகளில் 81 ரன், 8 ஃபோர், 3 சிக்சர்) அதிரடியாக விளையாடினர். இதனால் 18 ஓவர்களிலேயே 4 விக்கட் இழப்பிற்கு 202 ரன் எடுத்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

reserve bank of india rbi - 2026
#image_title
  • சக்கரவர்த்தி மாரியப்பன்

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

நமது அந்நியச் செலாவணி கையிருப்பு இன்னும் 11 மாதங்கள் வரை தாங்கும் அளவுக்கு பலமாக உள்ளது. இரண்டாவதாக சிறப்பாக நிதி நிர்வாகம் செய்யக்கூடிய வங்கிக் கட்டமைப்பு தற்காலிக சந்தை அபாயங்களைத் தாங்கிக் கொள்ள உதவும். – உலக வங்கி.

பெட்ரோலியப் பொருள்கள் தட்டுப்பாடு விலையேற்றம் நிச்சயம் நம்மை பாதித்தாலும், மத்திய அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

● பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்புக் கூடுதல் கலால் வரியை லிட்டருக்கு ரூ.10 குறைத்துள்ளது. தற்போது டீசலுக்கு கூடுதல் சுங்க வரி கிடையாது. பெட்ரோலுக்கு ரூ.3 (முன்பு ரூ.13).

இது எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் நஷ்டத்தைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை. இதில் உத்தேசமாக 15 நாள்களுக்கு ரூ.7000 கோடி வருமான இழப்பு ஏற்படும்.

● ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருள்களுக்கு சுங்க வரியை உயர்த்தியுள்ளது. டீசல் – லிட்டருக்கு ரூ.21.50, விமான எரிபொருள் ATF – லிட்டருக்கு ரூ.29.5. இதன் மூலம் ரூ.1500 கோடி வருவாய் கிடைக்கும்.

● இவை தவிர ஜூன் 30 வரை, 40 பெட்ரோலியப் பொருள்கள் இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்துள்ளது. இவை பிளாஸ்டிக், பெட்ரோகெமிக்கல், ஜவுளி, பேக்கேஜிங், மருந்து, ரசாயனம் மற்றும் வாகன உதிரி பாக உற்பத்தி நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும்.

● மேலும் ஏற்றுமதியாளர்களுக்கு பயணத்தில் உள்ள ரிஸ்க், ஏற்படும் கூடுதல் காப்பீடு செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு துறைமுகங்களில் வாடகை, குளிர்சாதன வசதி கொண்ட கண்டெய்ணர்கள் கட்டணம் போன்றவற்றில் சலுகை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

● வீடுதோறும் குழாய் வழி எரிவாயு இணைப்புகளைப் பயன்படுத்த புதிய இலக்குகள் நிர்ணியிக்கப்பட்டு வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

● வருங்காலத்தில் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் இலக்கான 500 GW ஐ நோக்கி நாம் நகர்ந்து கொண்டு இருக்கிறோம். தற்போது 280 GW இலக்கை அடைந்து உலகின் புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் சக்தியில் மூன்றாவது பெரிய நாடாக விளங்குகிறோம்.

● பாதுகாப்பான Small Modular Reactors, Fast Breeder Reactors கொண்ட அணுவுலை மூலம் மின்சார உற்பத்தி அதிகரிக்கும் போது நமது இறக்குமதி கணிசமாகக் குறையும். பார்க்கலாம்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

1001355335 - 2026

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 10ம் தேதி இன்று மாலை திறக்கப்பட்டது. சபரிமலையில் பிரசித்தி பெற்ற விஷுக்கனி தரிசனம் 15ம் தேதி நடைபெறுகிறது.தமிழகத்தில் ஏப்ரல் 14ல் சித்திரை விஷு கொண்டாடப்படுகிறது.

சித்திரை விஷு பண்டிகை மற்றும் சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கமாகும். கேரளாவில் இவ்வருட சித்திரை விஷு பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று 10ம் தேதி மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் திறக்கப்பட்டது.

இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு 15ம் தேதி அதிகாலை 4 மணி முதல் காலை 7.30 வரை விஷுக்கனி தரிசனம் நடைபெறும். விஷுக்கனியை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் நாணயங்களை வழங்குவார்கள். வரும் 18ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். அன்று இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கியது.

வரும் 18-ந் தேதி வரை 8 நாட்கள் நெய்யபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை, புஷ்பாபிஷேகம் நடைபெறும்.

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

pakistan defense minister khawaja asif - 2026

இஸ்ரேலை “அழிக்க வேண்டும்” என பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆசிஃப் கவாஜா சமூக வலைதளத்தில் வெளியிட்ட கருத்தை தொடர்ந்து இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆசிஃப் தனது எக்ஸ் தளத்தில், “இஸ்ரேல் மனிதகுலத்திற்கு தீங்கு விளைவிக்கும் நாடு; பாலஸ்தீன நிலத்தில் உருவாக்கப்பட்ட இந்த நாடு அழிக்கப்பட வேண்டும்” என்ற கருத்தை பதிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் காசா, ஈரான், லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு பதிலளித்த இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், “இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்ற அழைப்பு எந்த அரசிலிருந்தும் வருவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கண்டனம் தெரிவித்தது. இந்த சர்ச்சைக்குப் பிறகு, ஆசிஃப் தனது எக்ஸ் கணக்கை நீக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இரு தரப்புகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.

அமெரிக்க-ஈரான் போர்நிறுத்தத்திற்கு மத்தியில் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய கொடிய தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு “அதிர்ச்சியளிக்கிறது” என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

ஒரு கூர்மையான மற்றும் முன்னெப்போதும் இல்லாத வகையில், அமெரிக்க-ஈரான் போர்நிறுத்தத்திற்கு மத்தியில் லெபனான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலை, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் வியாழக்கிழமை “தீயது” என்றும் “மனிதகுலத்திற்கே ஒரு சாபம்” என்றும் அழைத்தார். இதற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடமிருந்து ஒரு வலுவான மறுப்பு வந்தது.

X தளத்தில் தற்போது நீக்கப்பட்ட ஒரு பதிவில், “இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், லெபனானில் இனப்படுகொலை நடத்தப்படுகிறது” என்று ஆசிஃப் கூறியிருந்தார்.

“முதலில் காசாவிலும், பின்னர் ஈரானிலும், இப்போது லெபனானிலும் அப்பாவி குடிமக்கள் இஸ்ரேலால் கொல்லப்படுகிறார்கள், ரத்தக் கொதிப்பு தடையின்றி தொடர்கிறது,” என்று அவர் எழுதியிருந்தார்.

“ஐரோப்பிய யூதர்களை ஒழிப்பதற்காக பாலஸ்தீன மண்ணில் இந்த புற்றுநோய் போன்ற அரசை உருவாக்கியவர்கள் நரகத்தில் எரிய வேண்டும் என்று நான் நம்பி பிரார்த்திக்கிறேன்,” என்று ஆசிஃப் மேலும் கூறினார்.

இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் அழைப்பு “அதிர்ச்சியளிக்கிறது” என்று நெதன்யாகு கூறினார்.

“இது எந்தவொரு அரசாங்கத்திடமிருந்தும், குறிப்பாக அமைதிக்கான நடுநிலை நடுவர் என்று கூறிக்கொள்ளும் ஒரு அரசாங்கத்திடமிருந்தும் பொறுத்துக் கொள்ளக்கூடிய ஒரு அறிக்கை அல்ல,” என்று அவரது அலுவலகம் X தளத்தில் பதிவிட்டது.

முறையான உறவுகளைப் பேணாத இரு நாடுகளுக்கு இடையே அரிதான நேரடி இராஜதந்திர மோதலைக் குறிக்கும் வகையில், இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கிடியான் சாரும் பாகிஸ்தான் தலைமையை பகிரங்கமாகக் கண்டித்தார்.

“வெளிப்படையான யூத-விரோத இரத்த அவதூறுகள்” என்று அவர் விவரித்ததைக் கண்டித்த சாரும், இஸ்ரேலை “புற்றுநோய்” என்று முத்திரை குத்துவது அதன் அழிவுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்தார். “இஸ்ரேலை அழிப்பதாக சபதம் செய்யும் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ளும்” என்று அவர் கூறினார். இது, இஸ்லாமாபாத்திலிருந்து வெளிவரும் சொல்லாடல்களை டெல் அவிவ் எவ்வளவு தீவிரமாகப் பார்க்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கடுமையாகக் கண்டித்ததில் இருந்து தொடங்கிய தொடர் நிகழ்வுகளுக்குப் பிறகு இஸ்ரேலின் இந்த எதிர்வினை வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, குவாஜா ஆசிஃப் சமூக ஊடகங்களில் ஆத்திரமூட்டும் கருத்துக்களைப் பதிவிட்டார்.

இஸ்ரேலிடமிருந்து எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து ஆசிஃப் தனது பதிவை நீக்கிவிட்டார்.

ராஜதந்திர உறவுகள் இல்லாத நிலையில், டெல் அவிவ் வரலாற்று ரீதியாக பாகிஸ்தானுடன் நேரடித் தொடர்பைத் தவிர்த்து வந்த நிலையில், இஸ்ரேலியத் தலைவர் பகிரங்கமாகப் பதிலளித்த இந்த முடிவு, அவரது கடந்தகால நடைமுறையிலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.

எந்தவொரு மத்தியஸ்த முயற்சியிலும் பாகிஸ்தானின் பங்கு குறித்த இஸ்ரேலின் அவநம்பிக்கை முன்னரே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான இஸ்ரேலின் தூதர் ரூவன் அசார், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானை ஒரு நம்பகமான மத்தியஸ்தராக இஸ்ரேல் கருதவில்லை என்று கூறினார்.

இஸ்ரேல்-லெபனான் மோதல்

போரின் முதல் நாளிலேயே கொல்லப்பட்ட உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் கொலைக்குப் பழிவாங்கும் விதமாக, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இஸ்ரேலிய நகரங்களை நோக்கி ராக்கெட்டுகளை வீசியபோது, மார்ச் 2 அன்று லெபனான் மத்திய கிழக்கு போரில் இழுக்கப்பட்டது.

ஹிஸ்புல்லா போரில் நுழைந்ததிலிருந்து லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய மிகக் கடுமையான தாக்குதல்கள் புதன்கிழமை நூற்றுக்கணக்கானோரைக் கொன்றன. இது, வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான அமைதியற்ற போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த 48 மணி நேரத்திற்குள் ஆட்டம் காணச் செய்தது.

ஈரான் மீதான தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவை இஸ்ரேல் ஆதரிப்பதாக நெதன்யாகு கூறியுள்ளார். ஆனால், இந்த போர் நிறுத்தம் லெபனானை உள்ளடக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் அறிவிப்புக்கு முரணாக உள்ளது.

மத்திய கிழக்கு போரில் மத்தியஸ்தராக செயல்பட்டு வரும் ஷெரீப், அமெரிக்கா, ஈரான் மற்றும் அவற்றின் நட்பு நாடுகள் ஒப்புக்கொண்ட போர் நிறுத்தம், லெபனான் உட்பட “எல்லா இடங்களிலும்” நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

ஷெரீப்பின் கூற்றை ஈரான் ஆதரித்த நிலையில், ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைகளை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள டிரம்ப் மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் ஆகியோர், லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இல்லை என்றனர்.

இதற்கிடையில், ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்குவதில் கவனம் செலுத்தி, லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துமாறு தனது அமைச்சர்களுக்கு நெதன்யாகு வியாழக்கிழமை உத்தரவிட்டார். இஸ்ரேலும் லெபனானும் அடுத்த வாரம் வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்தும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது உருவாகிவரும் சூழ்நிலைக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, லெபனானில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், சனிக்கிழமை இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவுடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை தெஹ்ரான் இடைநிறுத்தக்கூடும் என்று ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இராஜதந்திர முயற்சிகள் தடம்புரளக்கூடும் என்ற கவலைகளை இந்த நிகழ்வு எழுப்புகிறது.

எதிரி நாட்டை ‘முற்றிலுமாக அழிப்பதற்கான’ டொனால்ட் டிரம்பின் காலக்கெடு முடிவடைவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு, அமெரிக்காவும் ஈரானும் செவ்வாயன்று இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. போர் நிறுத்தம் கோரியிருந்த ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோருடன் பேசியதாக டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து, கடைசி நேரத்தில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

ஏப்ரல் 10-ஆம் தேதி, ஒரு “முடிவான ஒப்பந்தத்தை” எட்டுவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளுக்காக, இரு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத் வரவேற்கும் என்று ஷெரீப் தெரிவித்தார். பின்னர், அப்பேச்சுவார்த்தைகள் ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டன.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியதன் விளைவாக, பிப்ரவரி 28-ஆம் தேதி வெடித்த மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் பாதையில், பாகிஸ்தானில் வைத்து வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தை நடத்த தான் ஒப்புக்கொண்டிருப்பதாக டெஹ்ரான் தெரிவித்தது.