Home Blog Page 11

சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

1001362803 - 2026

கேரளாவின் பிரசித்தி பெற்ற புத்தாண்டு பண்டிகையான  சித்திரை மேஷ விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் விசு கனி காணும் விழா இன்று புதன்கிழமை மிகவும் கோலாகலமாக நடைபெற்றறது

  •  இன்று ஏப்ரல் 15-ஆம் தேதி அதிகாலை 4:00 மணி முதல் காலை 7:00 மணி வரை பக்தர்கள் விஷு கனி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
  • விஷு கனி அலங்காரம்: சுவாமி ஐயப்பனின் கருவறைக்கு முன்பாக கணிக்கொன்றை மலர்கள், நவதானியங்கள், பலாப்பழம், காய்கறிகள், தங்க நாணயங்கள், மற்றும் கண்ணாடி போன்ற மங்கல பொருட்கள் நிரப்பப்பட்ட உருளிகள் வைக்கப்பட்டு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.தரிசனம் செய்த பக்தர்களுக்கு கோவில் தந்திரியும் மேல்சாந்தியும் புத்தாண்டு பரிசாக நாணயங்களை (கைநீட்டம்) தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல் சாந்தி வழங்கினார்கள். 

விஷு பூஜைகளுக்காக ஏப்ரல் 11-ஆம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. ஏப்ரல் 18-ஆம் தேதி வரை நெய்யபிஷேகம், படிய பூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

  • வழக்கமாக சித்திரை 1-ஆம் தேதி (ஏப்ரல் 14) இந்த விழா நடக்கும். ஆனால் இந்த ஆண்டு சாஸ்திர கணக்குகளின்படி, சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நேரத்தைக் கணக்கிட்டு ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு கணித்து இன்று புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

லட்சக்கணக்கான பக்தர்கள் “சுவாமியே சரணம் ஐயப்பா” என்ற முழக்கத்துடன் இந்த புனிதமான கனி காணும் தரிசனத்தில் கலந்து கொண்டனர். 

கேரளாவில் பிரசித்தி பெற்ற ஐயப்பனின் படை வீடு கோவில்களான குளத்துப்புழா பாலகன் தர்ம சாஸ்தா கோவில் ஆரியங்காவு அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோவில் மற்றும் குருவாயூர் கிருஷ்ணன் கோவில் உட்பட பல்வேறு கோவில் விசு கனி தரிசனம் கைநீட்ட பிரசாதம் வழங்கும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது சபரிமலை வரும் பக்தர்களுக்கு முக்கிய ஊர்களில் இருந்து பம்பைக்கு நேரடி பஸ் வசதிகளை கேரளா அரசு போக்குவரத்து கழகம் செய்திருந்தது

சாத்தூர் -ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் பலி..

சாத்தூரில் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் வந்த +2 மாணவர்கள் 3 பேர் ஆம்னி பேருந்து மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சாத்தூரிலிருந்து கோவில்பட்டி நோக்கி 3 பள்ளி மாணவர்கள் ஒரே இரு சக்கர வாகனத்தில் எதிர்திசையில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கன்னியாகுமரியிலிருந்து மதுரை நோக்கி வந்த ஆம்னி பேருந்து எதிரே வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது பேருந்து மோதியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

இதில் இரத்த வெள்ளத்தில் 3 மானவர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்த மாணவர்கள் சிவகாசி பேர்நாயக்கன்பட்டியை சேர்ந்த லிங்கம் என்பவரது மகன் கோகுல் (17), சிவகாசி டவுன் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் பிரசன்னா (17), சிவகாசி ஹவுசிங் போர்டு பகுதியை செந்தில்குமார் என்பவரது மகன் யுவராஜ் (17) என்பதும் அவர்கள் மீது மோதிய ஆம்னி பேருந்து கன்னியாகுமரியில் இருந்து மதுரை நோக்கி செல்லும் ஆம்னி பேருந்து என்றும் அதனை ஓட்டிய ஓட்டுநர் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஆஸ்டின் (26) என்பதும் தெரிய வந்துள்ளது. இந்தநிலையில் சாத்தூர் தாலுகா போலீசார்
ஆம்னி பேருந்து ஒட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வளர்ச்சிக்கு பாஜக – அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

1001362789 - 2026

தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாஜக – அதிமுக கூட்டணி அவசியம். என நடிகர் பாஜக நிர்வாகி சரத்குமார் சாத்தூரில் தேர்தல் பரப்புரையாற்றினார்.


சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து, பாஜக பொதுக்குழு உறுப்பினரும் நடிகருமான சரத்குமார் சத்தூர் அருகிலுள்ள ஏழாயிரம்பண்ணையில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தின் போது பேசிய சரத்குமார், “தாமரை சின்னத்திற்கு நீங்கள் அளிக்கும் வாக்கு இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கான வாக்கு. ஒரு சிறந்த அரசு என்பது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். குறிப்பாகச் சுகாதாரத்துறையில், 30,000 பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதாரா நிலையம் இருக்கும் போது. 15,000 பேருக்கு ஒரு டாஸ்மாக் இருக்கிறது.


தமிழகத்தின் தற்போதைய ஆட்சி நிர்வாகத்தை விமர்சித்த அவர், “திமுகவில் ஒரு குடும்பம் மட்டுமே அதிகாரத்தில் இருக்க நினைக்கிறது. உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வரமாட்டேன் என்றார், ஆனால் வந்தார்; சட்டமன்ற உறுப்பினர் ஆகமாட்டேன் என்றார், ஆனால் ஆனார்; அமைச்சராகவோ அல்லது துணை முதலமைச்சராகவோ பொறுப்பேற்க மாட்டேன் என்றார், ஆனால் தற்போது அந்தப் பதவிகளிலும் அவரே இருக்கிறார். அந்த ஒரு குடும்பத்திற்காக மட்டுமே இயங்கும் இந்த ஆட்சியை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியா இன்று உலக அளவில் பொருளாதாரத்தில் 2014 ஆண்டு 10 இடத்தில் இருந்தோம் தற்போது நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. விரைவில் மூன்றாம் இடத்தைப் பிடிக்கப் போகிறோம். உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நமது நாட்டின் மனிதவளம் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். நாட்டின் பொருளாதாரம் மேம்படவும், தமிழகம் வளர்ச்சி பெறவும் மத்தியில் ஆளும் அரசுடன் இணக்கமான ஒரு சிறந்த ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும். அதற்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவது அவசியம்” என்று தெரிவித்தார்.

‘தாமரை வாக்குறுதிகள்’ என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

bjp election manifesto - 2026

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத்திற்கான “தாமரை வாக்குறுதிகள்” என்ற பெயரிலான தேர்தல் அறிக்கையை பாஜக முன்னாள் தேசியத் தலைவரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான ஜே.பி. நட்டா சென்னையில் இன்று வெளியிட்டார். தமிழக மக்களின் நலன் காக்கவும், வளர்ச்சியடைந்த தமிழகத்தை உருவாக்கிடவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வழியில், பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை வெளியிடுவதாகக் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் பெண்கள், விவசாயிகள், தொழில்முனைவோர், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையையும் மேம்படுத்திடும் வகையிலான தேர்தல் அறிக்கையை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட பாஜக.,வினர், தமிழக பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் செயல்பட்டதாகக் குறிப்பிட்டனர்.

தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை, தமிழக பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாஜக.,வின் 27 வேட்பாளர்களைக் குறிக்கும் வகையில் 27 முக்கிய வாக்குறுதிகளைக் குறிப்பிட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் உள்ள முக்கிய வாக்குறுதிகள்:

1.குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ₹2,000 உதவித்தொகை மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹10,000 நிதியுதவியாக ஒருமுறை வழங்கப்படும்.

2. ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். அவை பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தீபாவளி பண்டிகைகள் பொழுது வழங்கப்படும்.

3. பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒழிக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம். இதற்காகத் தடையற்ற ‘ஜீரோ-எப்ஐஆர்’ (Zero-FIR) பதிவுமுறை, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளருக்கான பாதுகாப்பு, பாலியல், போக்ஸோகுற்றங்கள் உள்ளிட்ட கொடூரமான வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள், பேருந்துகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 100% கண்காணிப்பு கேமரா (CCTV) வசதி மற்றும் ‘நிர்பயா’ நிதியை முழுமையாகப் பயன்படுத்துவது ஆகியவற்றை உறுதி செய்வோம்.

4. பெண்கள் தலைமையிலான கூட்டுறவு சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (MSME), உற்பத்தி அலகுகளை அமைக்க ₹50 லட்சம் வரை வட்டி இல்லாக் கடன்கள் வழங்கப்படும். மேலும், அரசின் கொள்முதலில் பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு 20% இட ஒதுக்கீடு (Procurement Quota) கட்டாயமாக்கப்படும்.

5. முருகப் பெருமானின் பெருமையைப் போற்றும் வகையில், தைப்பூசத் திருநாளை மாநில விழாவாக அறிவிப்போம்.

6. திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரியம் மீண்டும் தொடங்கப்படுவதையும், அது காலம் முழுவதும் பாதுகாக்கப் படுவதையும் உறுதி செய்வோம்.

7. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க, சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் படை பிரிவுடன் கூடிய ‘தமிழக போதைப்பொருள் ஒழிப்புத் துறை’ உருவாக்கப்படும். கடல்வழி கடத்தலைத் தடுக்க ‘கடலோர போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவு’, துரித நடவடிக்கைக்காக பிரத்யேக உதவி எண், சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். மேலும், மீண்டும் குற்றம் செய்வோர் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு NDPS சட்டத்தின் கீழ் மரண
தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

8. ‘உழவே தலை’ திட்டத்தைத் தொடங்கி, பிஎம்-கிசான் நிதியுதவியுடன் மாநில அரசின் பங்காக ₹3,000 கூடுதலாக வழங்கி, ஆண்டுக்கு மொத்தம் ₹9,000 நிதியுதவி வழங்குவோம். மேலும் மாநிலக் கூட்டுறவு பருத்தி உற்பத்தியாளர்கள் சங்கம் அமைக்கப்பட்டு 100 கி.மீ தொலைவிற்குள் பருத்தி அரைக்கும் ஆலைகள் (Ginning Mills) நிறுவப்படும். அத்துடன் மரவள்ளிக்கிழங்கு, தக்காளி, மாம்பழம், வாழை மற்றும் மிளகாய் ஆகிய பயிர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட சந்தை ஆதரவு வழங்கப்படும்.

9.பஞ்சாயத்து அளவில் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளுக்காக சிறிய எஃகு சேமிப்புக் கிடங்குகளையும் (Steel Silos), பழங்கள், காய்கறிகள் மற்றும் மலர்களுக்காகக் குளிர்பதனக் கிடங்குகளையும் அமைப்பதன் மூலம், சேமிப்பு இழப்புகளையும் அவசர காலத்தில் குறைவான விலைக்கு விற்பனை செய்வதையும் (Distress sales) தடுப்போம். மேலும், வட்டார அளவில் போக்குவரத்து வசதியுடன் கூடிய சந்தை இணைப்பு மையங்களையும் (Market Connector Hubs), மாவட்ட அளவில் பிரம்மாண்ட எஃகு சேமிப்புக் கிடங்குகளையும் உருவாக்கித் தடையற்ற பாதுகாப்பை உறுதி செய்வோம்.

10.’உழவர் உறுதுணைத் திட்டத்தின்’ கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகள் கால்நடை வளர்ப்பு, இறால் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்றவற்றைத் தொடங்குவதற்கு ஒருமுறை நிதியுதவியாக ₹50,000 வழங்கப்படும்.

11. மீனவர்களுக்கு நியாயமான இழப்பீட்டை வழங்கும் வகையில், 61 நாட்கள் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை ₹8,000-லிருந்து ₹12,000-ஆகவும், மீன்பிடி குறைநிலை காலத்திற்கான உதவித்தொகையை ₹6,000-லிருந்து ₹8,000-ஆகவும் உயர்த்துவோம். மேலும், 60 வயதிற்கு மேற்பட்ட மீனவர்களுக்கு மாதந்தோறும் ₹2,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.

12. தமிழக இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்ய, முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு ₹10 லட்சம் வட்டியில்லா கடன், வேலைவாய்ப்பின்மை காரணமாக இ.எம்.ஐ (EMI) செலுத்த முடியாதவர்களுக்குக் கல்விக்கடன் தள்ளுபடி மற்றும் 1 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். மேலும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி, மாவட்டந்தோறும் தமிழ் வழியிலும் பயிற்சி அளிக்கும் போட்டித் தேர்வு மையங்கள், திறன் கணக்கெடுப்பு மற்றும் தொழில்துறையுடன் இணைந்த பயிற்சிகள் வழங்கப்படும்.

13. தமிழ்நாட்டின் 10 நகரங்களை தேசத்தின் முதல் 100 தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம்பெறச் செய்வோம்.

14. 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்தும் வகையில், ஒவ்வொரு வட்டார வள மையத்திலும் செயற்கை நுண்ணறிவு (Al) மற்றும் ரோபாட்டிக்ஸ் (Robotics) துறைகளில் செய்முறைப் பயிற்சிகளுடன் கூடிய பிரத்யேக வாராந்திரப் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும்.

15. முதன்முறை தொழில் தொடங்கும் 2,000 இளைஞர்களுக்கு 5 ஆண்டு காலத்திற்கு ₹15 லட்சம் வரை வட்டியில்லா கடன், ஜிஎஸ்டி (GST) தொடர்பான சலுகைகள் மற்றும் மானியங்கள் வழங்கப்படும்.

16. மின்சார இருசக்கர வாகனங்கள் (e-scooters) வாங்குவதற்குத் தகுதியுள்ள பெண்களுக்கு ₹25,000 மானியம் வழங்கப்படும்.

17. தமிழக நாட்டுப்புறக் கலைகள் மற்றும் கோவில் மரபுகளைப் பாதுகாக்கும் வகையில் ‘திருக்கோவில் நித்ய பூஜை தொகுப்புத் திட்டம்’ செயல்படுத்தப்படும். இதன் மூலம் மாதந்தோறும் அத்தியாவசியப் பொருட்கள் (கற்பூரம், நெய்/எண்ணெய், 60 கிலோ அரிசி குங்குமம், மஞ்சள், விபூதி), ஒருமுறை வழங்கப்படும். கோயில் உபகரணங்கள் (கோயில் மணி தாம்பூலம், ஆர்த்தி தட்டுகள், வேட்டித் தொகுப்பு) மற்றும் கோவில் திருவிழாக்கள் மற்றும் பராமரிப்பிற்காக ஆண்டுக்கு ₹25,000 நிதியுதவி வழங்கப்படும்.

18. மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டமான ‘பாரத் உத்யோகிக் விகாஸ் யோஜனா’ (BHAVYA) திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 10 ‘பிளக்-அண்ட்-பிளே’ (Plug-and-Play) தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம். தொழில் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் தயார் நிலையில் உள்ள இந்தத் தொழிற்பூங்காக்கள் மூலம், தமிழகத் தொழிலதிபர்கள் அத்திட்டத்தின் முழுப்
பலன்களையும் பெறுவதை நமது அரசு உறுதி செய்யும்.

    19. இ-ஷ்ரம் (e-Shram) போர்ட்டலில் 100% பதிவை உறுதி செய்வதன் மூலம் கிக் தொழிலாளர்களை (Gig workers) ஆதரிப்போம். மாதந்தோறும் ₹1,500 மின்வாகன சார்ஜிங் அல்லது எரிபொருள் மானியம், ஒருமுறை வழங்கப்படும் ஐஎஸ்ஐ (ISI) சான்றளிக்கப்பட்ட பாதுகாப்புக் கருவிகள் மற்றும் விபத்துக் காப்பீட்டுத் தொகையை ₹5 லட்சத்திலிருந்து ₹10 லட்சமாக உயர்த்தி வழங்குவோம்.

    20. ஒவ்வொரு மாவட்ட அரசு மருத்துவமனையையும் மேம்படுத்தும் வகையில், கூடுதல் 3 ஆம்புலன்ஸ்கள், உயர் சிறப்புப் பிரிவுகள் (Super-speciality wings), இலவச டயாலிசிஸ் மையங்கள், போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்கள், 4 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ICU), முழுமையாகச் செயல்படும் நவீன அறுவை சிகிச்சை அரங்குகள், முதியோர் நல மையங்கள், 10 படுக்கைகள் கொண்ட நவீன குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (PICU) மற்றும் பிரத்யேகத் தாய்ப்பால் வங்கிகள் ஆகியவை அமைக்கப்படும்.

    21. 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ஆண்டுதோறும் இல்லத்திற்கே சென்று இலவச உடல்நலப் பரிசோதனை செய்யும் திட்டம், மாவட்டந்தோறும் ஒருங்கிணைந்த போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்கள், அதிநவீன இசிஆர் (ECR) விபத்து சிகிச்சை மையம், இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை 50-ஆக உயர்த்துதல் மற்றும் அரிய வகை நோய்கள் பாதுகாப்பிற்காக ₹100 கோடி மதிப்பிலான சிறப்புத் திட்டம் ஆகியவற்றின் மாநில அளவிலான சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவோம்.

    22. மத்திய அரசுடன் இணைந்து, நிலத்தை நியாயமான விலையில் கையகப் படுத்துவதன் மூல தமிழகத்தின் இரயில்வே கட்டமைப்பை முழுமையாக விரிவுபடுத்துவோம். இதற்காக சென்னை – பெங்களூரு மற்றும் சென்னை – ஹைதராபாத் இடையே அதிவேக இரயில் வழித்தடங்கள் (High Speed Rail Corridors), கோவை – திருப்பூர் – சேலம் இடையே பிராந்திய அதிவேக போக்குவரத்து அமைப்பு (RRTS), விழுப்புரம் – சென்னை இடையே சிறு-நகர்ப்புற
    இரயில் சேவை (Semi-Urban Rail), ஹைட்ரோ பவர் ரயில் திட்டம் (Hydro Power Train) மற்றும் சென்னையை டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களுடன் இணைக்கும் புதிய படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் (Sleeper Vande Bharat) இரயில்கள் போன்ற திட்டங்கள் மூலம் இரயில் இணைப்பை விரிவுபடுத்துவோம்.

    23. நவீன காலத் தொழில்நுட்பங்கள் குறித்த பாடத்திட்டங்களை வழங்கும் தமிழ்நாடு மாநில திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகத்தை நிறுவி, மாநிலத்தின் அனைத்து மண்டலங்களிலும் அதன் வளாகங்களை அமைப்போம்.

    24. தமிழகத்தை இந்தியாவின் கடல்நீர் சுத்திகரிப்புத் தலைநகராக (Desalination Capital of India) மாற்றுவோம்; இதற்காகக் கூடுதலாக 500 MLD திறன் கொண்ட கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்தல், வட்டப் பெருங்குழாய் வழித்தடம் (Ring main network) மூலம் நீர் அமைப்புகளை இணைத்தல் மற்றும் கடலூரில் பிரத்யேகக் கடல்நீர் சுத்திகரிப்பு ஆராய்ச்சி மையத்தை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகளை எடுப்போம்.

    25. மத்திய அரசின் ‘பி.எம். சூர்ய கர் முஃப்த் பிஜிலி யோஜனா’ (PM Surya Ghar Muft Bijli Yojana) திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தமிழகப் பயனாளிகள் ஒவ்வொருவருக்கும், மத்திய அரசின் ஊக்கத்தொகையுடன் மாநில அரசின் பங்காக ₹25,000 கூடுதல் ஊக்கத்தொகை (State Top-Up) வழங்கப்படும்.

    26. தமிழகத்தின் கடல், மலைகள், காடுகள், கோயில்கள் மற்றும் பண்பாடு சுற்றுலா மூலம் ஆண்டு முழுவதும் சுற்றுலாவை மேம்படுத்துவோம்; அத்துடன், நாட்டுப்புற மரபுகள் மற்றும் உள்ளூர் தெய்வங்களின் சிறப்புகளைப் பறைசாற்றும் வகையில் நாடு தழுவிய அளவில் ‘தமிழக கிராம தெய்வங்கள் சங்கமம்’ நிகழ்ச்சியை நடத்துவோம்.

    27. தென் தமிழகத் திருத்தலப் பயண அனுபவங்களை மேம்படுத்தும் வகையில் ‘தென் தமிழகத் திருத்தல யாத்திரை’ திட்டம் செயல்படுத்தப்படும்; இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக பக்தர்கள் வருகை தரும் முக்கிய கோவில்களில், நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் உள்ளூர் மக்களுக்காக பிரத்யேக தரிசன நேரம் ஒதுக்கப்படும்.

    பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

    dmk candidate rajapalayam house robery - 2026

    திமுக வேட்பாளர் வீட்டில் 122 பவுன் தங்க நகைகள் கொள்ளை தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் துணிகரக் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

    நேற்று இரவு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த திமுக வேட்பாளர் வீட்டில் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, மூன்று பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் இருந்த தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளதாக தெரிய வருகிறது.

    ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் திமுக வேட்பாளர் கடற்கரைராஜ் -ஐ ஆதரித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பி சண்முகம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இந்த நேரத்தை சாதகமாக பயன்படுத்திய திருடர்கள் வீட்டுக்குள் நுழைந்து திருடியதாக கூறப்படுகிறது.

    வேட்பாளர் வீட்டில் களவு போன சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் துறையினர் தகவல் அளித்தனர் சம்பவம் குறித்த தகவல் அறிந்த சாத்தூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர் அதனை தொடர்ந்து

    சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் குருசாமி தலைமையில் நகர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் வீட்டிலிருந்த 122 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. விசாரணையின் ஒரு பகுதியாக கைரேகை நிபுணர் எஸ்.ஐ. சுரேஷ்குமார் மற்றும் மோப்ப நாய் ராணி ஆகியவை வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்க தடயங்கள் சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    சம்பவ இடத்தை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா நேரில் சென்று ஆய்வு செய்தார் இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக வத்சலாதேவி (30) கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு வீட்டில் இருந்தால் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து திருட்டு கும்பலைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளர் வீட்டில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

    1001359208 - 2026

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல் திங்கட்கிழமை காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.பலர் காயமடைந்தனர்.

    •  சாத்தூர் அருகே உள்ள மடத்துப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த எக்ஸெல் பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பட்டாசு ஆலை தரைமட்டமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    •  இந்த விபத்தில் பாண்டி மற்றும் ரவி என்ற இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆலையின் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    அரசு அதிகாரிகளின் நெருக்கடி அதிகமாக உள்ள காரணத்தால் தான் தொழிலாளர்களை அவசர படுத்தி வேலை வாங்கும் சூழ்நிலையால் தான் இது போன்ற பட்டாசு ஆலை வெடிவிபத்து நடப்பது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது-சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தை நேரில் பார்வையிட்ட பின் பாஜக மாநிலத்தலைவரும் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    1001359209 - 2026

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சத்திரப்பட்டியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான எக்ஸெல் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் தாயில்பட்டியை சேர்ந்த பாண்டி என்ற தொழிலாளி உடல்கருகி பலியானார்.மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்த நிலையில் 5 தொழிலாளர்கள் லேசான காயமுடன்
    மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிசணைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் வெடிவிபத்து நடந்த பட்டாசு ஆலைக்கு பாஜக மாநிலத்தலைவரும் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டார்.பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
    இது போன்ற பட்டாசு விபத்து நடந்ததை முதல் முறையாக இப்போது தான் பார்க்கிறேன் என்றும் இந்தப் பகுதி வானம் பார்த்த பூமி, இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமே பட்டாசு தொழிலை நம்பி தான் உள்ளது என்றும் அரசு அதிகாரிகளின் நெருக்கடி அதிகமாக உள்ள காரணத்தால் தான், தொழிலாளர்களை அவசரப்படுத்தி வேலை வாங்கும் சூழ்நிலையால் தான் இது போன்ற விபத்து நடப்பது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் அரசு அதிகாரிகள் எடுக்கக்கூடிய தீவிர நடவடிக்கையும் இதற்கு ஒரு காரணம் என்றும் அரசு அதிகாரிகள் பட்டாசு தொழிலாளர்களை துன்புறுத்துவதாக தான் நான் நினைக்கிறேன் இந்தப் பகுதியில் இத் தொழிலை விட்டால் மக்களுக்கு வேறு தொழில் கிடையாது. இதனால் மாநில அரசாங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இதுபோன்ற தொந்தரவுகளை அதிகம் செய்யக்கூடாது என அறிவுறுத்த வேண்டும்.இதுகுறித்து சட்டமன்றத்தில் நான் பேசுவேன் என்றும் இதுபோன்று எதிர்பாராத விதமாக வெடி விபத்து நடக்கும் போது காயம் அடைந்தவர்களை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டி உள்ளது இது போன்று அவசரமாக செல்லும் நிலையில் சிவகாசியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையும் உள்ளது அதனால் வெம்பக்கோட்டை பகுதியிலேயே சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையை கொண்டு வர நான் முயற்சிப்பேன் குரல் கொடுப்பேன் என்றார். அரசு அதிகாரிகள் பட்டாசு ஆலை தொழிலாளர்களை நிம்மதியாக வேலை பார்க்க விட வேண்டும் ஆலை உரிமையாளர்களையோ தொழிலாளர்களையோ விரைவு படுத்த அவர்களை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளக்கூடாது அரசு இதில் தனி கவனம் செலுத்த வேண்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் ஆவது நிதி உதவி வழங்க வேண்டும். இதற்காக சட்டமன்றத்தில் நான் நிச்சயம் குரல் கொடுப்பேன் என்றும் முதல் வருடம் கூறி கண்டிப்பாக உரிய நிதி உதவியை பெற்றுக் கொடுப்பேன் சாத்தூர் தொகுதியை பொருத்தமல்லி சபிக்கப்பட்ட தொகுதியாக தான் நான் நினைக்கிறேன். நான் வந்தபோது மிக மோசமாக இருந்ததை உணர்ந்தேன் குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் இல்லை சாலை வசதி இல்லை கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லை இந்த நேரத்தில் அரசை நான் குற்றம் சாட்ட விரும்பவில்லை வரும் காலத்தில் என்ன தேவையோ அதை செய்து கொடுப்பேன் என்றார்.

    ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனால் தேறும் சென்னை அணி!

    ipl 2026 season - 2026

    முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

    பதினேழாவது ஆட்டம் ஹைதராபாத் vs பஞ்சாப் – புதிய சண்டிகர் – ஏப்ரல் 11 – முதல் ஆட்டம்

              முதலில் ஆடிய ஹைதராபாத் அணி சிறப்பாக ஆடி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 219 ரன் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் 74 ரன் (5 ஃபோர், 8 சிக்சர்) அடித்தார். அவருக்குப் பின் வந்த ட்ராவிஸ் ஹெட் (23 பந்துகளில் 38 ரன்), இஷான் கிஷன் (17 பந்துகளில் 27 ரன்) கிளாசன் (33 பந்துகளில் 39 ரன்), அனிகேத் வர்மா (9 பந்துகளில் 18 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை 219க்கு உயர்த்தினர். இரண்டாவதாக ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் பிரியான்ஷ் ஆர்யா (20 பந்துகலில் 57 ரன்) மற்றும் ப்ரிப்சிம்ரன் சிங் (25 பந்துகளில் 51 ரன்) சிறப்பான தொடக்கம் தந்தனர். பின்னர் அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் (33 பந்துகளில் 69 ரன், 5 ஃபோர், 5 சிக்சர்) அதிராடியாக ஆடியதால் பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 223 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஹைதரபாத் அணியின் ஷிவாங் குமார் 3 விக்கட்டுகள் எடுத்தார்.

    பதினெட்டாவது ஆட்டம் சென்னை vs டெல்லி – சென்னை – ஏப்ரல் 11 – இரண்டாவது ஆட்டம்

              முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கட் இழப்பிற்கு 212 ரன் எடுத்தது. இந்த பெரிய ஸ்கோர் அந்த அணிக்கு முதல் வேற்றியை இன்று பெற்றுத்தந்தது. சென்னை அணியின் சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 115 ரன் அடித்தார். அதி 15 ஃபோர்கள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும். ருதுராஜ் கெய்க்வாட் (18 ரன்), ஆயுஷ் மாத்ரே (36 பந்துகளில் 59 ரன், 3 ஃபோர், 4 சிக்சர், ரிடயர்ட் அவுட்), ஷிவம் துபே (10 பந்துகளில் 20 ரன்) ஆகியோரும் சிறப்பாக ஆடினர். இரண்டாவதாக ஆடிய டெல்லி அணியில் பதுன் நிசாங்கா (24 பந்துகளில் 41 ரன்), கே.எல். ராகுல் (10 பந்துகளில் 18 ரன்), சமீர் ரிஸ்வி (6 ரன்), அக்சர் படேல் (1 ரன்), டேவிட் மில்லர் (17 ரன்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (38 பந்துகளில் 60 ரன்), அஷுத்தோஷ் ஷர்மா (19 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். ஆயினும் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 189 ரன் மட்டுமே எடுத்தது. அதனால் சென்னை அணி வெற்றி பெற்றது. சென்னை அணியின் ஜமி ஓவர்டன் 4 விக்கட்டுகளும் அன்ஷுல் காம்போஜ் 3 விக்கட்டுகளும் எடுத்தனர். சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

    பத்தொன்பதாவது ஆட்டம் லக்னோ vs குஜராத் – லக்னோ – ஏப்ரல் 12 – முதல் ஆட்டம்

              முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 164 ரன் எடுத்தது. அந்த அணியின் எந்த மட்டையாளரும் நீண்ட நேரம் நிலைத்து ஆடவில்லை. அந்த அணியின் எட்டு மட்டையாளர்கள் இரட்டை இலக்க ரன் சேர்த்தனர் ஆனால் 20 ரன்னுக்குக் குறைவாக. எய்டன் மர்க்ரம் 30 ரன் அடித்தார். குஜராத் அணியின் பிரசித் கிருஷ்ணா 4 விக்கட் எடுத்தார். இரண்டாவதாக ஆடிய குஜராத் அணியின் ஷுப்மன் கில் (40 பந்துகளில் 56 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் ஜாஸ் பட்லர் (37 பந்துகளில் 60 ரன், 11 ஃபோர்) இருவரும் சிறப்பாக ஆடினர். அதனால் குஜராத் அணி 18.4 ஓவர்களில் 3 விக்கட் இழப்பிற்கு 165 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பிரசித் கிருஷ்ணா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

    இருபதாவது ஆட்டம் பெங்களூரு vs மும்பை – மும்பை வான் கடே மைதானம் – ஏப்ரல் 12 – இரண்டாவது ஆட்டம்

              முதலில் ஆடிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் ஃபில் சால்ட் (36 பந்துகளில் 78 ரன், 6 ஃபோர், 6 சிக்சர்) மற்றும் விராட் கோலி (38 பந்துகளில் 50 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். அதன் பின்னர் ஆடவந்த ரஜத் படிதர் (20 பந்துகலில் 53 ரன், 4 ஃபோர், 5 சிக்சர்) அதிரடியாக ஆடினார். அதன் பின்னர் டிம் டேவிட் (16 பந்துகளில் 34 ரன்) ஜித்தேஷ் ஷர்மா (9 பந்துகளில் 10 ரன்) இருவரும் சிறப்பாக ஆடியதால் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு 240 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய மும்பை அணியின் அதிரடி ஆட்டக்காரர்கள் வரிசை சொதப்பியது. ரன் ரேட்டை அதிக அளவில் வைத்திருப்பதற்காக தேவையில்லாத ஷாட்டுகள் விளையாடி அந்த அணியின் மட்டையாளர்கள் விக்கட்டுகளை வேகமாக இழந்தனர். ரூதர்ஃபோர்ட் (71 ரன்), ஹார்திக் பாண்ட்யா (40 ரன்), ரியன் ரிக்கிள்டன் (37 ரன்), சூர்யகுமார் யாதவ் (33 ரன்), ரோஹித் ஷர்மா (19 ரன்) ஆகியோர் வேகமாக ரன் எடுத்தும் நிலையாக ஆடாததனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 222 ரன் எடுத்து தோல்வியடைந்தது.

    ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

    ambedkar - 2026
    #image_title

    — சாந்தி ஸ்ரீ தூளிபுடி பண்டிட்
    தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்

    பொதுவாக சமூக மாற்றத்தின் வரலாறு இயக்கங்களை முன்னெடுத்தவர்களின் வாழ்க்கையோடு இணைந்து, அதன் மூலம் கிடைக்கும் அதிகார பீடத்தில் அமர்ந்து எழுதப்படுகிறது. இது புரிந்து கொள்ளக் கூடியதே. அதேவேளையில் இது சில வரம்புகளையும் கொண்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த வரலாற்றை உருவாக்கியவர்களின் வாழ்க்கை சூழ்நிலையை விவரித்தால் அது நீண்டதாகிவிடும் என்பதால் தவிர்த்து விடுகின்றனர்.

    சுதந்திர இந்தியாவின் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவரான பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு அப்படிப்பட்ட ஒன்று. அவரது அரசியல், அறிவார்ந்த பங்களிப்புகள் பற்றி எழுதப்பட்டுள்ளன. அவை முக்கியமானவை , மையமானவைதான். அவரது பங்களிப்பை தொடர்ந்து, நீட்டித்து செய்வதற்காக பங்காற்றியவர்களின் வாழ்க்கையை பற்றி மிகக் குறைவாகவே கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ரமாபாய் அம்பேத்கர், சவிதா அம்பேத்கரின் வாழ்க்கையை கூர்ந்து நோக்குவது பாபாசாகேப் அம்பேத்கர் உருவாக்கிய சமூக மாற்றத்தின் வரலாற்று உண்மையில் எப்படி வாழ்ந்து, முன்னோக்கி வளர்த்தெடுக்கப்பட்டது என்பதை முழுமையாக புரிந்து கொள்ள தேவையானது.

    ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார். சிறு வயதிலேயே தனது பெற்றோரை இழந்து பம்பாய்க்கு போக வேண்டி இருந்தது. அங்கு வாழ்வதற்கே சிரமப்பட வேண்டியிருந்தது. பல சமரசங்களை செய்ய வேண்டியிருந்தது. அங்கு முறையான கல்வி கிடைக்கவில்லை. எந்த அமைப்பும் அவருக்கு ஆதரவு கரம் நீட்டவில்லை. முன்னேற வழி இல்லாமல் இருந்தது. 1906 இல் அவருக்கு அம்பேத்கருடன் திருமணம் நடந்தது. அத்துடன் குடும்ப பொறுப்பும் வந்தது. அந்த குடும்பமோ பல ஆண்டுகள் பொருளாதார ரீதியாக பலவீனமாக இருந்தது.

    திருமணத்துக்குப் பிறகு நிலையான, உறுதியான சூழ்நிலை ஏற்படுவதற்கு மாறாக நிலையற்ற நிலையே நீடித்தது. அம்பேத்கர் மேற்படிப்புக்காக வெளிநாட்டுக்கு சென்ற போது ரமாபாய் பம்பாயிலேயே இருந்தார். கடுமையான நெருக்கடியில் வீட்டுச் சூழல் இருந்தது. நிதி ஆதாரம் பலவீனமாகவும் நிச்சயமற்றும் இருந்தது. உளரீதியான அழுத்தமும் அதற்கு இணையாக இருந்தது. அவருக்கு பிறந்த ஐந்து குழந்தைகளில் நான்கு இறந்து விட்டன. இது அவரது தனிப்பட்ட துயரத்தை மட்டும் காட்டவில்லை, பலவீனமான சூழலையும் காட்டுகிறது. அவ்வப்போது வந்த கஷ்டங்கள் அல்ல தொடர்ச்சியாக நிலவிய அழுத்தம் அவரது தினசரி வாழ்க்கையை தீர்மானித்தது.

    இதனால் ரமாபாயின் பங்களிப்பை வழக்கமான ஆதரவு நிலையோடு ஒப்பிட முடியாது. இடையூறு அல்லது குறுக்கீடு எப்போது வேண்டுமானாலும் ஏற்படும் நிலையில் அவர் சூழ்நிலையை தொடர்ந்து ஒரே மாதிரியாக வைத்திருந்தார். குறைவான பண வரவில் குடும்பத்தை நடத்துவது, மீண்டும் மீண்டும் வரும் அதிர்ச்சிகளை தாங்கிக் கொள்வது எல்லாம் கடுமையான கட்டுப்பாட்டையும் நீண்ட கால கண்ணோட்டத்துடன் பொறுமையாக அவற்றை தாண்டி தொடர்வதை அவரது பண்பாக்கியது. பாபா சாகேப்பின் கல்வியின் தேவையைப் பற்றி அவருக்கு விரிவான புரிதல் இருந்ததை அவர் வாழ்க்கையில் பார்க்கிறோம். அம்பேத்கர் அவருடன் இல்லாததை பற்றி கேட்கும் போதெல்லாம் அது தேவை என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி கூறியுள்ளார். அன்றாட குடும்ப விவகாரங்களை விட மேலானது அவரது அறிவார்ந்த பணி என்ற புரிதல் அவருக்கு இருந்தது.

    எதிர்கால கண்ணோட்டத்தோடு பணி புரிவது என்பது கல்வி கற்றல் மூலமாக வராமல் அனுபவத்தினால் அவருக்கு ஏற்பட்டது. பலவீனமான சூழ்நிலையில் சிதறி விடாமல் தொடர்ந்து தக்க வைத்திருந்த அவரது திறன், அவரது பங்களிப்பை பொருள் மீக்கதாக்குகிறது. இந்த வகையான உழைப்பு, பங்களிப்பு அரிதாகவே பொருட்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது பாட நூல்களின் இல்லை. அமைப்புகளால் சொல்லிக் கொடுக்கப்படவில்லை. ஆனால் இதை புறம் தள்ள முடியாது. இது போன்ற தொடர்ச்சியான ஆதரவு இல்லை என்றால் நீண்ட கால அறிவார்ந்த செயல்பாடுகளை செய்வது கடினம். பொறுமையுடன் கஷ்டங்களை தாங்கி கொள்ளுதல், ஒருங்கிணைத்தல், எதிர்கால நோக்கம் பற்றிய தெளிவு ஆகியவற்றை ரமாபாயின் வாழ்க்கை வெளிப்படுத்துகிறது. இவை வரலாற்று ரீதியான மிகப்பெரிய சாதனைகளுக்கு ஏதுவாக அமைந்தன என்றால் அது மிகையல்ல.

    சவிதா அம்பேத்கரின் பாதையோ முற்றிலும் வேறான சமூக சூழலில் நடை போட்டு அதே சமூக வரலாற்றில் முக்கியமான சந்திப்பில் இடையிட்டு சிறப்பானதொரு பங்களிப்பை ஆற்றியது. அவர் 1909 இல் படித்த, முற்போக்கான மனப்பான்மை கொண்ட குடும்பத்தில் பிறந்தார். பெண்களுக்கு கல்வியறிவு குறைவாக இருந்த அந்த காலத்திலேயே அவர் உயர்கல்வி பெற்றார். மருத்துவரான அவர் பாபா சாகேப் அம்பேத்கரின் வாழ்க்கையில் 1940 ல் இணைகிறார். அப்போது அம்பேத்கரின் செயல்பாடுகள் தீவிரமாகவும் ஓய்விற்கு நேரம் இல்லாமலும் இருந்தன. அது அவரது உடல் நிலையை பாதித்தது.

    பாபா சாகேப்பின் அறிபார்ந்த வெளிப்பாடுகளும் அவரது உடல் ஆரோக்கியமும் அப்போது இக்கட்டான சூழ்நிலையில் இருந்தன. நீரிழிவு, மன அழுத்தம் உட்பட பல நீண்ட கால நோய்களால் அவர் எதிர்பார்த்தபடி முழுமையாகவும் தொடர்ந்தும் செயல்பட முடியாத நிலையில் இருந்தார். இந்த சூழலில் தான் சவிதாவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிறது.

    அவரது இணைவு ஆரோக்கியத்தை பராமரித்தல் என்ற பொதுவான எல்லைக்கும் மேலாக இருந்து. சீரான உணவு, உரிய மருந்துகள், தினசரி வழமைகளை உறுதியாக பின்பற்ற வைப்பது என்று திட்டமிட்ட நிர்வாகத்தை அம்பேத்கரின் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தினார். அத்துடன் டாக்டர் அம்பேத்கரின் அறிவார்ந்த சக பயணியாகவும் அவரது பிற்கால எழுத்துக்களை ஆரம்ப நிலையிலே படித்து கருத்திட்டு, மேம்படுத்தினார். அவரது கல்வித் தகுதியானது டாக்டர் அம்பேத்கரின் ஆய்வு பணிகளை ஒருங்கிணைக்கவும், ஆய்வேடுகளை பிழையின்றி செப்பனிடவும், அவரது படைப்புகள் இறுதி வடிவம் பெறும் போது அவரது கூட்டாளியாகவும் ஆக்கின. இந்த வகையில் டாக்டர் அம்பேத்கரின் பணி தொடர்ந்து நடைபெறுவதற்கு சவிதாவின் பங்களிப்பு நேரடியாகவும் முக்கியமானதாகவும் இருந்தன.

    டாக்டர் அம்பேத்கரின் உடல் ஆரோக்கியத்தை முடிந்த வரை நல்ல நிலையில் பராமரித்தார். சிந்திப்பது, எழுதுவது, அரசியல் செயல்பாடுகள் என்று மிகவும் உழைப்பை கோரும் நிலையிலும் அவரது ஆரோக்கியத்தை பாதுகாத்தார். அவரது வாழ்க்கையின் இறுதி காலத்தில் புத்த சமய தத்துவம் குறித்தும், அவரது பிரதான படைப்புகளையும் எழுதினார். சவிதாவின் பங்களிப்பு அவரது அறிவார்ந்த செயல்பாடுகளை, எழுத்துக்களை முழுமை பெற உதவின என்ற வகையில் புரிந்து கொள்ள வேண்டும்.

    1956 இல் டாக்டர் அம்பேத்கர் புத்த சமயம் தழுவிய போது அவருடன் சவிதா இருந்தார் . இது அவருடைய சமூக, கருத்தியல் ரீதியான ஈடுபாட்டை வெளிப்படுத்தியது. அம்பேத்கரின் மரணத்துக்கு பிறகு சவிதாவின் பங்களிப்பு சரியாக அங்கீகரிக்கப்படவில்லை. சந்தேகத்துடன் பார்க்கப்பட்டு அம்பேத்கர் இயக்கத்தில் தள்ளி வைக்கப்பட்டார். இத்தனைக்கும் அம்பேத்கரின் எழுத்து, அறிவு பணியில் அவர் முக்கிய பங்காற்றியது தெரிந்த நிலையில் நடந்தன. பின்னர் ஏற்படுத்தப்பட்ட விசாரணை குழு அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களிலிருந்து அவரை விடுவித்தது. ஆனாலும் சமூக அங்கீகாரம் உடனடியாக கிடைக்கவில்லை. அவர் எந்த வரலாற்றை நிலை பெற உதவினாரோ அந்த வரலாற்றின் விளிம்புகளில் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டார்.

    ரமாபாய், சவிதாவை பற்றி ஒருங்கே படிக்கும் போது சமூக மாற்றத்துக்கு பெண்களின் பங்களிப்பை பற்றிய சீரிய புரிதல் ஏற்படுகிறது. அவர்களின் வாழ்க்கை ஒரே மாதிரியானவை அல்ல. ரமாபாய் ஏழ்மையில் வாழ்ந்தார் . கல்வியறிவு பெற முடியாத சூழ்நிலையில் இருந்தார் . சவிதா முற்றிலும் வேறான சூழலில் இருந்து வந்தவர். அறிவார்ந்த இணையாக, மருத்துவ அறிவுடன் உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பவராக, தேர்ந்த அறிவுடன் தெளிவான அணுகுமுறை கொண்டிருந்தார் . வேறுபாடுகள் வெளிப்படையாக தெரியும்படி இருந்தபோதிலும் இருவரும் அம்பேத்கரின் பணியில், அதன் தொடர்ச்சியில், முக்கியமான பங்களிப்பை நிகழ்த்தியுள்ளனர்.

    இது, இவர்களது பங்களிப்பை பற்றிய வரையறையை, அங்கீகாரத்தை மறு வரையறை செய்ய கோருகின்றன. வெளிப்படையாக தெரிந்த, எழுதப்பட்ட, முறையான அதிகாரத்துடன் வந்தவை மட்டுமே வரலாற்று நிகழ்வுகளை ஏற்படுத்திவை என்றில்லாமல் இவர்கள் போன்றவர்களின் பங்களிப்பும் வரலாற்றை நிகழ்த்தியுள்ளன. தொடர்ச்சியை தக்க வைப்பது, கஷ்டங்களை, சிரமங்களை திறம்பட எதிர்கொண்டு நிர்வாகிப்பது ஆகியவை நீண்ட கால நோக்குடன் பணி செய்ய உதவுபவை, முக்கியமானவை என்றாலும் அவையின் உரிய கவனமும் அங்கீகாரமும் பெறுவதில்லை. ரமாபாயின், சவிதாவின் வாழ்க்கைகள், இதுபோன்ற உழைப்புகள் எதிர்பாராமல் நிகழ்ந்தவையோ, இரண்டாம் பட்சமானவையோ அல்ல.

    இவர்களது வாழ்க்கை வரலாறு திறந்த மனதுடன் அணுக வேண்டியவை . தனிப்பட்ட விவரிப்புகள், சமூக நினைவு, சமூக அறிவு ஆகியவற்றை அதிகாரப்பூர்வமான ஆவணங்களில் பதிவாவதில்லை. இந்திய அறிவு மரபு இந்த விஷயத்தில் உதவிகரமான வரையறையை முன் வைக்கிறது. அது வாழ்க்கை அனுபவங்களையும் அது தொடர்பான உழைப்பையும் உணர்வுகளையும் உண்மையான ஆதாரமாகக் கொண்டு புரிந்து கொள்ள முனைகிறது. இது வரலாற்றை நூல்கள் , அமைப்புகள் மூலம் மட்டுமின்றி வாழ்க்கை, அதன் மீது ஏற்பட்ட அழுத்தங்கள், தாக்கங்கள். காலவோட்டத்தை மீறி நின்ற அதன் நோக்கம் ஆகியவற்றின் மூலமாக தெரிந்து கொள்ள செய்கிறது.

    ரமாபாய் , சவிதாவை முன் வைப்பது பாபா சாகேப் அம்பேத்கரின் ஆளுமையை, மரபை குறைப்பதாகாது. மாறாக அவரை முழுமையாக புரிந்து கொள்ள உதவுபவை. இரு பெண்மணிகளின் வாழ்க்கையும் அம்பேத்கர் வாழ்க்கையின் நீட்சி அல்ல. இருவரது வாழ்க்கையும் தனித்துவமானவை. அவர்கள் பிறந்து வாழ்ந்த சூழ்நிலையில் உருவானவை . அவர்கள் செய்த முடிவுகளாலும் அவர்களது வலிமையினாலும் வடிவம் பெற்றவை. அதேவேளையில், இது போன்ற உழைப்பை, பங்களிப்பை கோரும் பெரிய வரலாற்று நிகழ்வுடன் ஆழமாக பிணைந்தவை.

    எனவே, சமூக மாற்றமானது வெளிப்படையாக தெரிந்த, முறையாக பதிவு செய்யப் பட்டவற்றிக்கும் மேலான அம்சங்களை தெரிந்து கொள்ளும் போது மட்டுமே முழுமை பெறுகிறது. அமைதியாக, இடையறாமல் தொடர்ந்து செய்யப்பட்ட பணிகள் அங்கீகரிக்க படாமல் போகக் கூடாது. அந்த வகையில் ரமாபாய் , சவிதா அம்பேத்கர் இருவரும் வரலாற்றின் விளிம்பில் நிற்கவில்லை. விளிம்பிலிருந்து விலகி மையத்தில் உறுதியாக நிலை பெற்றுள்ளார்கள்.

    நன்றி: சண்டே கார்டியன்


    கட்டுரையாளர் தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளார்.

    ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

    china formed new county near afghan border pok - 2026

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

    பண்டைய பட்டுப்பாதையின் வரலாற்று மையமான காஷ்கர், சீனாவுக்கும், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கும் இடையே ஒரு முக்கிய இணைப்பாகச் செயல்படுகிறது. இது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகச் செல்லும் 60 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் (CPEC) தொடக்கப் புள்ளியாகவும் உள்ளது; இத்திட்டத்துக்கு இந்தியா ஏற்கெனவே கடும் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளது.

    உய்குர் பிரிவினைவாதப் போராளிகளைத் தடுப்பதற்காக, சீனா தனது பதற்றமான சின்ஜியாங் மாகாணத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் ஒரு புதிய மாவட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த நடவடிக்கை, குறுகிய வக்கான் வழித்தடத்தில் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு முயற்சியையும் உள்ளடக்கியுள்ளது.

    சென்லிங் எனப் பெயரிடப்பட்ட இந்தப் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம், காரகோரம் மலைத்தொடருக்கு அருகிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு அருகிலும் அமைந்துள்ளது; இது அதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. பெரும்பாலும் முஸ்லிம் உய்குர் மக்கள் ஆதிக்கம் செலுத்தும் சின்ஜியாங் பிராந்தியத்தில், ஓராண்டுக்கும் சற்று அதிகமான காலத்தில் சீனாவால் நிறுவப்பட்ட மூன்றாவது புதிய மாவட்டம் இது.

    ஹியான் மற்றும் ஹெகாங் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கு இந்தியா முன்னதாகவே எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்தப் பகுதிகளின் சில பாகங்கள் நமது லடாக் யூனியன் பிரதேசத்திற்குள் வருவதாக இந்தியா வாதிட்டது. ஹியான், சர்ச்சைக்குரிய சீன ஆக்கிரமிப்பு காஷ்மீரப் பகுதியான அக்சாய் சின்னின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை உள்ளடக்கியுள்ளது. இப்பகுதியை சீன-இந்தியப் போரிலிருந்து சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதுடன், இது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தின் முக்கிய மையமாகவும் நீடிக்கிறது.

    ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ பத்திரிகை செய்தியின்படி, சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்திய அரசு மார்ச் 26 அன்று சென்லிங் நிறுவப்பட்டதை அறிவித்தது; இருப்பினும், அதன் நிர்வாகப் பிரிவுகள் மற்றும் நிலையான எல்லைகள் குறித்த முழுமையான விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.

    பண்டைய பட்டுப்பாதையில் அமைந்துள்ள ஒரு வரலாற்று மையமான காஷ்கர், சீனாவுக்கும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கும் இடையே ஒரு முக்கிய இணைப்பாக விளங்குகிறது. இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகச் செல்லும் 60 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் (CPEC) தொடக்கப் புள்ளியாகவும் உள்ளது. இந்த வழித்தடத்திற்கு இந்தியாவிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. சென்லிங் நிறுவப்பட்டது, எல்லை மேலாண்மை மற்றும் பாதுகாப்பில் பெய்ஜிங்கின் கவனம் அதிகரித்து வருவதை இது எடுத்துக்காட்டுவதாகக் கூறப்படுகிறது.

    தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

    Nirmala Sitharaman
    Nirmala Sitharaman

    ”நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான, அரசியல் உள்நோக்கம் கொண்ட, தமிழக விவசாயிகளை திசைதிருப்பும் நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு திரிபு என்பது தெளிவாகிறது.

    தமிழகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்ட தகவல், மாநில அரசுகள் வழங்கும் ஊக்கத்தொகை கொள்கைகளை தேசிய முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற ஓர் ஆலோசனையே ஆகும்.

    மத்திய அரசின் இந்த ஆலோசனை, பயிர் பல்வகைப்படுத்துதலை (Crop Diversification) ஊக்குவித்தல் மற்றும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றில் சுயசார்பு அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் தொலைநோக்குப் பார்வையாகும். இதன் மூலம், உள்நாட்டுத் தேவை அதிகமாக உள்ள பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து, அதிக லாபத்தைப் பெற வழிவகை செய்யப்படும்.

    குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) மேல் ஊக்கத்தொகை அல்லது போனஸ் அறிவிப்பது என்பது எப்போதும் மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது. அந்த அதிகாரத்தை யாரும் பறிக்கவில்லை.

    முதல்வர் ஸ்டாலின், தேச நலனில் அக்கறை கொண்டு ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவதற்குப் பதிலாக, தங்களின் குறுகிய சுயநல அரசியல் ஆதாயத்திற்காகத் திட்டமிட்டுத் திசைதிருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

    தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

    அரசியலமைப்புச் சட்டப்படி உயர் பதவியில் இருக்கும் ஒரு முதலமைச்சருக்கு இத்தகைய நடத்தை அழகல்ல. தமிழக விவசாயிகள் தங்கள் கவலைகளையே வாக்குகளுக்காக ஆயுதமாக்கும் அரசை அல்ல, மாறாக தங்கள் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக உழைக்கும் அரசையே எதிர்பார்க்கிறார்கள்.

    எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஒவ்வொரு விவசாயிக்காகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசு சோர்வின்றித் தொடர்ந்து பணியாற்றும். இத்தகைய திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பிரச்சனைகளால் நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.”

    – நிர்மலா சீதாராமன், மத்திய நிதி அமைச்சர்