Home Blog Page 10

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

hrnce commissioner office chennai - 2026

தவெக அரசு 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான 3 ஆயிரத்து 84 ஏக்கர் திருக்கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்க எடுத்துள்ள முடிவு துரதிருஷ்டவசமானது. இந்து சமயத்துக்கு எதிரானது. இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து, தற்போது ராஜினாமா செய்துவிட்ட எம்.ஆர். விஜயபாஸ்கர், கரூரில் நடந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர்‌ ஜோசப் விஜய் முன்னிலையில் பேசிய போது, இனாம் ஒழிப்பு சட்ட நடைமுறையை, திருக்கோவில்களின் சொத்துக்களில் கொண்டு வர வேண்டும்; உழுதவர்களுக்கே நிலம் சொந்தம் என்பதாக என்று குறிப்பிட்டுப் பேசினார். குறிப்பாக கரூரில் உள்ள திருக்கோவில்களின் சொத்துக்களை ஆக்கிரமித்து கட்டியவர்களுக்கே அந்நிலம் சொந்தம் என உத்தரவிட வேண்டும் என பேசினார். அவர் பேசி முடித்தவுடன் தமிழக அரசு, அந்த நிலங்களைப் பதிய விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தது. இது ஹிந்து கோவில்களுக்கு த. வெ. க‌ அரசு செய்துள்ள பச்சை துரோகம் என்ற கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

திருக்கோவில்களின் அசையா சொத்தை, அது ஒரு சிறிய அளவில் இருந்தாலும் கூட இந்து சமய‌அறநிலையத்துறைக்கே விற்க அனுமதி இல்லாத போது த.வெ.க வின் தமிழக அரசு என்ன அடிப்படையில் பத்திரம் பதிய இருந்த தடையை நீக்கி உத்திரவிட்டுள்ளது என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. எனவே ஜோசப் விஜய் தலைமையிலான தவெக., அரசு உடனடியாக இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

”கோவில் நிலங்களை எந்த அடிப்படையில் தனியாருக்கு பட்டா வழங்கினர் என்பது குறித்து முதல்வரும், அறநிலையத்துறை அமைச்சரும் விளக்கம் அளிக்க வேண்டும்,” என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை பீளமேட்டில் உள்ள பாஜக., அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கோரிக்கை விடுத்தார்.

கரூர் மாவட்டத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நான்கு கோவில்களின் நிலத்தை, அவசர கதியில், அறநிலைய துறை இணை ஆணையர் பரிந்துரையில் ஒரே நாளில், தனியாருக்கு பட்டா வழங்கி உள்ளனர். கோவில் நிலங்களுக்கு எந்த அடிப்படையில் பட்டா வழங்கப்பட்டது என்பது குறித்து முதல்வரும், அறநிலையத் துறை அமைச்சரும் விளக்கம் அளிக்க வேண்டும். கோவில் நிலங்களை தனியாருக்கு வழங்க அரசுக்கு எந்த தகுதியும் இல்லை. கோவில் சொத்துக்களை மீட்கும் போராட்டத்தை பா.ஜ., நடத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

கரூர் கோவில் சொத்துக்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்க துணியும் தவெக அரசை வன்மையாக கண்டிப்பதாக, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது…

கோவிலுக்கு சொத்துக்களை தானமாக வழங்கி பக்தியை பண்பாட்டை வளர்த்தார்கள் அந்த கால ஆட்சியாளர்கள்!இந்த கால ஆட்சியாளர்கள் கோவில் சொத்துக்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களுக்கு அள்ளி கொடுத்து கோவிலை அழிக்க துணிகிறார்கள் சுயநலவாத ஆட்சியாளர்கள்!

கரூரில் நான்கு பிரதான கோவில்களின் 3084 ஏக்கர் நிலங்கள் கோவிலின் பொருளாதாரம் மற்றும் கோவிலுக்கு சேவை செய்யும் மக்கள் வாழ்வதற்கு தரப்பட்டவை ஆகும். ஆனால் காலபோக்கில் அந்த அப்பாவி மக்களை ஏமாற்றி பணத்தாசை காட்டி சட்டவிரோதமாக பலர் ஆக்கிரமித்துள்ளனர். கோவிலுக்கு தொண்டு செய்தவர்களுக்கு உதவியாக கொடுத்த கோயில் நிலத்தை ஆக்கிரமித்து அனுபவிப்பவர்களுக்கும் கோவிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆகவே ஆக்கிரமிப்புகள் தர்மத்திற்கு எதிரானது.

ஆனால் ஆக்கிரமித்தவர்கள் சொத்துக்களை சொந்தம் கொண்டாட விதித்த தடையை இந்து சமய அறநிலையத்துறை தற்போது விலக்கிக் கொண்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. அரசின் நிலத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டப்பட்டுள்ளது என்று 200-க்கும் மேற்பட்ட கோவில்களை இடித்த மாநில அரசு கோயில் நிலங்களை கூறுபோட்டு தாரை வார்க்க என்ன அருகதை உள்ளது.

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாநில அரசின் இந்த அநியாய செயலை உரிய முறையில் நீதிமன்றத்தில் இந்து முன்னணி எடுத்துரைத்து கோயில் சொத்துகளை பாதுகாக்க இந்து முன்னணி தொடர்ந்து போராடும். கோயில் சொத்துகள் பறிபோவதற்கு துணைபோகும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியை இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறது. கோயில் சொத்துகளை தாரைவார்க்கும் அரசின் உத்தரவை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது!

அருந்தமிழ் 50: திறனாய்வு!

Dhinasari Home page
aunthamizh 50 - 2026

நூல் பெயர்: அருந்தமிழ் 50
நூல் வகை: புதுக்கவிதைகளின் தொகுப்பு
ஆசிரியர் பெயர்: ஜெயஸ்ரீ எம்.சாரி
வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்- சென்னை
ஆண்டு: எப்ரல் 2026
நூல் வாங்க அலைபேசி: 9380530884
விலை: 100 ரூபாய்


திறனாய்வு: முனைவர் மா. தாமோதரகண்ணன்

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

“சொற்கள் நடந்தால் உரைநடை சொற்கள் நடனம் ஆடினால் கவிதை” என்று சொல்லுவார்கள். அந்த வகையில் கவிஞர் தன் மனதில் இயல்பாக எழுந்த உணர்ச்சிகள் முத்தமிழ்ச்சொற்களாகக் கவிதையாக நடனமாடியதை நூல் முழுவதும் காணலாம்.

மரபுக்கவிஞர்கள் பலர் இலக்கண வரம்பிற்கு உட்பட்டு சொல்லின் கட்டுப்பாட்டில் இயங்கி விடுவதைக் காணலாம். புதுக்கவிஞர்களுக்கு அத்தகைய இலக்கண வரம்பெல்லாம் கிடையாது. புதுக்கவிஞர்களின் கட்டுப்பாட்டில் சொற்கள் இருக்கும்.

மரபுக் கவிஞர்கள் சொல்லின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். புதுக்கவிஞர்கள் தான் நினைக்கின்ற சிந்தனையும் அதனை அப்படியே வெளிப்படுத்தும் சொற்களும் இணைந்து இயல்பாக வந்துவிடும். அதை அப்படியே பதிவு செய்து வெற்றியும் பெற்று விடுவார்கள்.

கவிஞர் நினைப்பது போலவே அப்படியே வாசகரும் நினைக்க வேண்டும்.வாசகர் கவிதை அனுபவத்தை கவிஞர் அனுபவித்ததைப் போலவே அனுபவிக்க வேண்டும். அப்பொழுது தான் கவிதை வெற்றி பெறும்.இந்நூலாசிரியரும் தன்னுடைய முன்னுரையில் “என் மனதில் தோன்றும் எண்ணங்களை எழுத்துகளாக முயற்சித்தேன் ” என்று எழுதி உள்ளார். நூலின் தொடக்கத்தில் மூன்று வகையான உட்தலைப்புகளுடன் தமிழ் வணக்கத்தோடும் வாழ்த்தோடும் கவிதையைத் தொடங்கியுள்ளார்.”ஏற்றமாய் இருந்தாலும் செருக்கு அற்றவள் “

“ஞானத்தால் தமிழர்கள் ஞானத்தை வெல்வதை “என்னும் பொன் வரிகளால் தமிழன்னையை வணங்கியும் புகழ்ந்தும் உள்ளார்.

இந்நூலாசிரியர் தன் படைப்புகளில் எதுகை, மோனை, இயைபு, அணி போன்ற இலக்கிய நயங்களுக்கு கூறுகளுக்கெல்லாம் ஆசைப்படவில்லை அதேவேளை ஓசைப்படாமல் இயல்பாக அத்தகைய இலக்கியக் கூறுகள் வருவதை அப்படியே பதிவு செய்துள்ள பாங்கும் போற்றத்தக்கது. இக்கவிதை நூல் வாசகர் மனதில் நிச்சயமாக இடம் பெறும். காலமும் அதனை மறக்காமல் இந்நூலை அசை போடும்.

திருக்குறளைப் புதியக் கண்ணோட்டத்தில் இரசித்துள்ளார். திருக்குறளில் காணப்படும் எதிர் எதிர் அதிகாரத்தில் தலைப்புகளைக் கொண்டுள்ள திருக்குறளைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.”எதிரெதிர் தலைப்புகளில் எதிரொலிக்கும் வார்த்தைகளாமது கல்வியின் பயனுமாம் கல்லாமையின் நிலையுமாம் ” என்று பாடியுள்ளார். மேலும் மருந்து, நட்பாராய்தல் அதிகாரங்களின் தலைப்பிலான திருக்குறளுக்கும் புதுக்கவிதை நடையில் புதுமையாய் விளக்கம் தந்துள்ளார்.”உலகியலுக்கு ஒவ்வாத நட்பு நலம் அன்று ” என மனதில் பதியும் வண்ணம் எழுதியுள்ளார். “நேர விரயமானாலோ வாழ்வும் விரயமே ” என்று திருக்குறளைப் பற்றி அருமையாகத் தமிழ் வார்த்தைகளில் செதுக்கியுள்ளார்.

சிறுவயதில் தன்னை போற்றி வளர்த்த வானொலிக்கு நன்றி சொல்லி “என்னை எழுப்பும் அலாரமாம் வானொலி ” என்று சுவைபட கவிதை எழுதியுள்ள பாங்கு நன்றாக உள்ளது. புதுக்கவிதையில் சோதனை முயற்சியாக அந்தாதி நடையில் மூன்று தன்னம்பிக்கை ஊட்டும் கவிதைகளை எழுதியுள்ளார்.

“காலம் காட்டும் கண்ணாமூச்சி ” என்னும் தலைப்பில் “வாய்ப்பினையும் கொடுத்து வினையும் வைப்பான்;வைத்த வினையின் வழியையும் விளக்குவான்”என்னும் வைர வரிகள் வாழ்வியலை உணர்ந்து கொள்ளச் சொல்லும் அழகான வரிகளாக அமைகிறது.
“ஆளுமை கொள் ” என்னும் கவிதையானது அகர வரிசையில் அமைத்து நற்செய்திகளை உரைக்கும் ஆத்திச்சூடி கவிதை என்றும் புகழ்ந்துரைக்கலாம்.

“வாரச்சந்தை” பற்றி பெரும்பாலும் கிராமங்களில் நடக்கும் சுவாரசியங்களைத் தொகுத்து “சில்லறைத்தனமாய் பேரம் பேசுவோரும் கூடும் இடமாம் சில்லறையுடன் சிரிப்பையும் இலவசமாய் பெறக்கூடிய இடமாம் “என்று கலகலப்பாக எழுதியுள்ளார்.

“தோல்வியின் வலி” அனைவருக்குமான தன்னம்பிக்கை வெளிச்சம் தரும் கவிதையாக வலம் வருகிறது.”தத்தி தத்தி நடக்க முயலும் குழந்தையின் தோல்வியோ பாதங்களை வலிமையாக்கும் “, “மிதிவண்டி கற்கும் போது ஏற்படும் சரிவே மீண்டும் முயல வழிவகுக்கும்” என்று பாடியுள்ளார்.

காந்தியடிகளின் குடில் பற்றிய வரலாற்றுச் செய்திகளை உள்வாங்கிய கவிதை காந்தியடிகள் வாழ்ந்த காலச்சூழலுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.தோழிகள் பேசிக் கொள்வது போல நாட்டுப்புற மெட்டில் “மண்வாசனை” என்னும் கவிதை மண்வாசனைக் கமழும் கவிதையாக இடம் பெறுகிறது.

“பிறக்கும் சொற்களால் பிறரும் மகிழட்டுமே” என்று மனித நாக்கு பற்றிய கவிதை நயமாக உள்ளது. நேரடியாக நட்புப் பாராட்டுகின்ற பழக்கம் குறைகிறது.அருகருகே அமர்ந்திருந்தாலும் அலைபேசியில் தனித்தனியே மூழ்கி விடும் அவல நிலையை ஒரே வரியில் “முகநக நட்பை முகநூல் முந்துகிறதே” என்று ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“செவிகள் திறக்கட்டும்” கவிதையில் இயற்கையில் எழுதும் ஆயிரக்கணக்கான ஒலிகளை இவ்வுலகில் கேட்டுக் கேட்டு மகிழ்வுறவே சொல்கின்றார். அக்காலத்தில் திருபாவையாக விளங்கிய ஆண்டாள் பாடிய திருப்பாவை நூலின் பெருமைகளைச் சொல்லும் கவிதை இந்நூலுக்கு அணிசேர்க்கிறது.

புத்தம் புதிய சிந்தனையில் “முதியோர் இல்லம்” இருப்பதால் முதியவர்கள் பெரும் நன்மைகளை நயமாய் பட்டியலிடுகிறது. “நூலினைப் பகுத்துணர் ” கவிதை நூல் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ” சுட்டிகளின் சேட்டைகள் “கவிதைகள் படிக்கும் அனைவரின் பழைய நினைவுகளை மீட்டெடுத்து இரசிக்க வைக்கிறது.

“அடுக்குத்தொடர் கவிதை” தாய்மையின் சிறப்புகளை ஒவ்வொரு அடியிலும் அடுக்குத்தொடர் சொல்லாட்சிகள் அமைந்து நல்லதொரு புதுக்கவிதை உத்தியாக இடம் பெற்றுள்ளது. “தீப்பொறி ” கவிதையில் இயைபுத்தொடையில் தீப்பொறியாய் படிப்பவர் மனதில் தன்னம்பிக்கையை ஊட்டும் சொற்கள் இடம் பெறுகிறது.

“பாரதத்தின் தீ பாரதி” என்னும் கவிதையில் இரத்தினச் சுருக்கமாகப் படிப்பவர் மனதில் தைக்கும் படியாகச் சொற்களை அமைத்துள்ளார். “நவீனமாய் ஒரு தாலாட்டு” கவிதையில் பாடுபொருளும் பாடிய விதமும் நவீனப் புதுக்கவிதையாகப் புகழ் பெறும் என்பதில் ஐயமில்லை.

வேலைக்காரி பாடுவதாக “வீடு முழுக்க விளையாட்டு பொம்மைகள் தான் உன்னோடு விளையாடத் தான் ஒருத்தரும் இல்லையே” என்று ஏங்குகிறாள்.

கதிரவன் தன் கதிர்வீச்சால் ஏற்படுத்தும் வர்ணஜாலங்களை “கரம் இல்லா ஓவியன்” என்னும் தலைப்பில் பாடியுள்ளார். குறிஞ்சி நிலம் முல்லை நிலம் பற்றியும் பாடல்களில் விளக்கி எழுதியுள்ளார். “அம்மையின் வயிற்றில் ஆரம்பித்த பயணம் “, “சுடர் தீபமாய் அக இருளை அகற்றுவதால் இன்பமுடன் என் பயணங்கள் என்றும் முடிவதில்லை”என்று கவிஞர் பயணங்கள் முடிவதில்லை என்று பாடிய படியே அவருடைய தமிழ்க் கவிதை பயணம் இந்நூலின் வழியாக தொடரும் என்றும் தொடரட்டும் என வாழ்த்துகின்றோம்.
அருந்தமிழ் நூல் அருமையான தேன் தமிழ்க் கவிதைகளை உள்ளடக்கிய நூல்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

pmmodi in third time - 2026

புறவழி பேச்சுவார்த்தை – உண்மை என்ன ?

— ராம் மாதவ் —
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்

உளவியல் போர் நடவடிக்கை என்பது ராணுவம் மற்றும் உளவு துறை தந்திரங்களில் ஒன்று. பல நாடுகள் இதை சிறப்பாக பயன்படுத்துவதில் தேர்ந்தவை. தவறான செய்திகளை பரப்புவதன் மூலம் எதிரி நாடுகளில் உள்ளவர்களை குழப்பி சந்தேகப்பட வைப்பது அதில் அடங்கும். அதற்கு சிறந்த உதாரணம் இந்தியா பாகிஸ்தானிடையே அதிகார பூர்வமற்ற, அரசு முறை சாராத, இரண்டாவது வழித்தட பேச்சு வார்த்தை கொழும்புவில் நடந்தது என்ற பொய்யான செய்தி. இது உள்நோக்கம் கொண்டவர்களால் பரப்பப்பட்டு வருகிறது.

சில அப்பாவி ஊடகங்களும், எப்போதும் எதையாவது பேசிக்கொண்டே இருக்கும் ஊடகங்களும், சில அரசியல்வாதிகளும், பல சமூக ஊடகவியலாளர்களும் அந்த செய்தியின் உண்மையை சோதிக்காமல் தங்கள் பெயரிலோ அல்லது பெயர் இல்லாமலோ விமர்சித்து வருகின்றன. அதை பரப்பி வருகின்றன.

லண்டனிலிருந்து இயங்கும் புகழ்பெற்ற அறிஞர்கள் அமைப்பு ஒரு தசாப்ததிற்கும் மேலாக தெற்காசிய மாநாட்டை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதில் சிந்தனையாளர்கள், ஓய்வு பெற்ற ராஜதந்திரிகள், ராணுவம் மற்றும் உளவுத்துறை சேர்ந்தவர்களும் அரிதாக சில அரசியல்வாதிகளும் பணியில் உள்ள அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள். அந்த மாநாட்டில் தெற்காசிய நாடுகளில் இருந்து மட்டுமல்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனாவில் இருந்தும் பலர் கலந்து கொள்வார்கள்.

அது போன்ற மாநாடுகள் இரண்டாம் வழித்தட பேச்சு வார்த்தைகளில் வராது என்று இந்திய அயலுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெளிவுபடுத்தி உள்ளார். இரண்டாம் வழித்தட பேச்சு வார்த்தை என்பது இரு தரப்பு அல்லது பல்முனை பேச்சு வார்த்தையை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக , சம்பந்தப்பட்ட அரசுகளின் மறைமுக ஒப்புதலுடன் நடத்தப்படுவது. பல நாடுகளுக்கு அதுபோன்ற பேச்சுவார்த்தை நடத்த நாம் களம் அமைத்துள்ளோம். ஆனால் இரண்டாம் வழித்தட பேச்சுவார்த்தை அரை டஜன் நாடுகள் சூழ்ந்திருக்க நடத்தப்படுவதில்லை.

மேற்சொன்ன கருத்தரங்கு இந்தியா உட்பட உலகம் எங்கும் நடத்தப்படும் வழக்கமான ஒன்று. இதுபோன்ற நிகழ்வுகளில் பல முறை கலந்து கொண்ட ஒருவர் இதைப் பற்றி மிக சரியாக ‘பேச்சுக் கடைகள்’ (Talk Shops) என்று குறிப்பிட்டுள்ளார். அவை ரகசிய பேச்சு வார்த்தைகள் கிடையாது. இரண்டாம் தடப்பேச்சுவார்த்தை போல் குறிப்பிட்ட நோக்கம் இல்லாதவை. அதே வேளையில் அவை திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் கொண்டதாக நடத்தப்படுபவை. அதில் கலந்து கொள்பவர்களும் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக சொல்வார்கள்.

வழக்கமாக ஆண்டுதோறும் நடத்தப்படும் மாநாடு இம்முறை கொழும்புவில் நடத்தப்பட்டது. அதில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்ரீலங்கா, பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் பங்கேற்றனர். பல்வேறு தலைப்புகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதில் உரையாற்றினார்கள். நான் ஒரு அரங்கில் பேசி விட்டு கிளம்பி விட்டேன். பக்குவப்பட்ட பார்வையாளர்களுக்கு அந்த மாநாட்டில் பேசப்பட்ட விஷயங்கள் பற்றி ஆவல் எழுவது இயல்பு. ஆனால் ஏன் பேசினாய் , பேச வேண்டிய தேவை / நோக்கம் என்ன என்று கேட்பது பொருத்தமற்றது.

இந்தியா – பாகிஸ்தான் தொடர்புடைய எந்த விஷயமும் இந்தியாவில் தீவிரமான உணர்ச்சியை தூண்டக் கூடியதாக இருக்கிறது. இதுபோன்ற மாநாடுகளிலும் அது எதிரொலிக்கிறது. இந்தியாவுடன் அதிகாரபூர்வமாக தொடர்பு கொள்ள வேண்டுமென பாகிஸ்தான் மிகவும் ஆவலாக இருக்கிறது. ஆனால் இந்தியா உறுதியாக மறுத்து வருகிறது. இந்தியாவின் நிலைப்பாட்டில் இரட்டை தன்மை கிடையாது.

பாகிஸ்தான் உடனான உறவு ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்து போயிருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அதை உடைத்தார். 2014 இல் தனது பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பை அழைத்தார். அதன் பிறகு ஓராண்டு கழித்து லாகூருக்கு (நவாஸ் மகள் நிச்சயதார்த்தத்திற்கு) தானே சென்று நட்புக் கரம் நீட்டினார். ஆனால் கட்டுப்பாடற்ற குணம் கொண்ட அண்டை நாடு அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளாமல் தனது வழக்கமான பாணியில் ஊரி , புல்வாமா பயங்கரவாத தாக்குதல்கள் மூலம் பதிலளித்தது. இந்தியாவில் யாருடன் மோதுகிறோம் என்று அது புரிந்து கொள்ளவில்லை. மோடி அரசு பாகிஸ்தானுடன் எல்லா விதமான நேரடி உறவையும் துண்டித்து விட்டது. அதனால் பாகிஸ்தான் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியதாயிற்று.

கிரிக்கெட் போன்று, விளையாட்டுத் துறை தவிர்த்து வேறெந்த வகையிலும் இந்தியா பாகிஸ்தானுடன் தொடர்பு கொள்வதில்லை. இது பாகிஸ்தானுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா எல்லா நாடுகளுடன் ,அது சிறிதோ பெரிதோ, நல்லுறவு வைத்துக் கொண்டு பாகிஸ்தானுடன் தொடர்பு கொள்ள மறுப்பதன் மூலம் தன்னை அலட்சியப்படுத்தி, அற்பமாக நடத்துவதாக நினைக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் மோடி தலைமையில் பெரிய நாடுகளுக்கு இணையாக நாம் வளர்ந்து வருகிறோம். இந்த நேரத்தில் மேற்குப் பக்கம் உள்ள தோல்வி அடைந்த அண்டை நாட்டுடன் இந்தியா தேவையற்ற சச்சரவை தவிர்க்க முயல்கிறது. அது மட்டுமல்ல 2025 ஏப்ரலில் பெகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தனது அரசின் கொள்கையாக வைத்து கொண்டு இருப்பதையும் அதன் மூலம் இந்தியாவை மீண்டும் மீண்டும் தாக்கலாம் என்ற அதன் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்பதும் உறுதிப் பட்டுள்ளது.

இதுபோன்ற நிலையில் பாகிஸ்தான் உடனான உறவை மீண்டும் தொடங்குவதில் இந்தியாவுக்கு அவசரமும் இல்லை ஆர்வமும் இல்லை. பெகல்காமுக்கு பிறகு இந்தியா சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு உள்ளே இருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை வெற்றிகரமாக அழித்தது. இந்தியா நினைத்ததை சாதித்த பிறகு தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்தது. பாகிஸ்தானுடன் இனி இதுதான் ‘புதிய நடைமுறை’ என்று மோடி அறிவித்து விட்டார். அது இப்போது வரை உறுதியாக தொடர்கிறது.

கடந்த அக்டோபர் மாதம் ஐநா பொது சபையில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் இந்தியாவுடன் அமைதியை ஏற்படுத்த போவதாக பேசி உள்ளார். ஆனால் நடைமுறையோ வேறு விதமாக இருக்கிறது. பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதல் நடக்கவில்லை என்றாலும் கூட அதற்கு விழிப்போடு இருக்கும் இந்திய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையின் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளே காரணம்.

பாகிஸ்தான் வழக்கம் போல் உலகளாவிய பயங்கரவாதத்தின் விளைநிலமாகவே இருக்கிறது. பெகல்காம் தாக்குதலுக்கு காரணமானவனும் லக்சர் இ தொய்பாபின் தலைவனுமான சைபுல்லா கசூரி பாகிஸ்தானின் சுதந்திரமாக திரிவது மட்டுமல்லாமல் ‘காஷ்மீர் நடவடிக்கை’யில் இருந்து பின் வாங்க போவதில்லை என்று இந்தியாவுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டு உள்ளான். அவன் காஷ்மீர் விஷயத்தை ‘சூடாக’ வைத்திருக்க விரும்புகிறான். பயங்கரவாதத்தில் அவனுக்கு போட்டி அமைப்பான ஜெய்ஸ் இ முகம்மத் துபாயில் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடப்பதற்கு சில மணி நேரம் முன்பாக கூட ஆள்சேர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளையும் ஆயுதங்களையும் பணத்தையும் போதை பொருட்களையும் தொடர்ந்து காஷ்மீருக்குள் அனுப்பி கொண்டே இருக்கிறது. கடத்த ஆண்டு பயங்கரவாதிகளை உள்ளே அனுப்ப ஐந்து முறை முயன்றுள்ளது. அந்த முயற்சிகளை இந்திய பாதுகாப்பு படைகள் தடுத்து நிறுத்த , எட்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள். உட்பகுதியில் நடந்த வேறொரு நடவடிக்கையில் 13 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதுடன் இருவர் உயிருடன் பிடிபட்டனர்.

அந்த இருவரும் மின்னணு சோதனை சாதனங்களுக்கு சிக்காமல் இருக்க மாற்று கருவிகளை வைத்திருந்தார்கள். பாகிஸ்தானில் உள்ள அவர்களது தலைவர்களின் அறிவுறுத்தலின்படி இந்தியாவுக்குள் நீண்ட காலம் தங்கியிருந்து, இங்குள்ள இளைஞர்களுக்கு மூளை சலவை செய்து அவர்களை கொண்டு பயங்கரவாத செயல்களை நிகழ்த்த வேண்டும் என்பது அவர்களது திட்டம்.

ஆன்லைன் மூலமாகவும் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்ட மூளைச்சலவை செய்து வருகிறது. அதற்காக டி ஆர் ஆர் (புரட்சிகர எழுச்சி) , ஜி யூ வி (எதிர்ப்பின் ஆன்மா) என்ற ஆன்லைன் பத்திரிகைகளை பயங்கரவாத அமைப்புகள் மூலம் நடத்தி வருகிறது. இந்திய உளவுத்துறையினர் அவற்றின் ஐபி விலாசத்தை தேடி பார்க்க அவை அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து செயல்படுவது தெரிய வந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை செய்வதும் அமைதியை சீர்குலைப்பதும் காஷ்மீரை பிரிக்க வேண்டுமென தூண்டுவதும் அவற்றின் முக்கிய நோக்கம்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலையற்ற அமைதி உடன்படிக்கைக்கு மேடை அமைத்ததால் பாகிஸ்தான் தன்னை அமைதி தூதுவனாக பீற்றிக்கொள்ள முயல்கிறது. ஆனால் அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் ‘பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது’ என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

கட்டுரையாளர், தில்லியில் உள்ள இந்தியா பவுண்டேசனின் தலைவராக இருக்கிறார். பாஜகவைச் சேர்ந்தவர்.

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

fifa2026 - 2026

உலகக் கோப்பை கால்பந்துப்போட்டி 2026 : ரவுண்ட் 16 கடைசி நான்கு ஆட்டங்கள்

 போர்ச்சுகல் அதிர்ச்சித் தோல்வி

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          காலிறுதிக்கு முந்தைய சுற்று ஜூலை 4ஆம் தேதி தொடங்கியது. கடைசி நாலு ஆட்டங்கள் ஜூலை 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடந்தது. இதில் போர்ச்சுகல் அணி ஸ்பெயின் அணியிடல் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது. இது போட்டியின் ஒரு அப்செட் தோல்வியாகும். அதுபோல போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான அமெரிக்க அணி பெல்ஜியம் அணியிடம் 1-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. போட்டியை நடத்தும் மூன்று நாடுகளும் போட்டியில் இருந்து தோல்வியடைந்து விலகிவிட்டன.

          காலியிறுதிக்கு முந்தைய கட்டத்தின் ஐந்தாவது ஆட்டம் ஆர்லிங்க்டனில் ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது. போர்ச்சுகல், ஸ்பெயின் அனிகள் மோதின. இரண்டு அணிகளும் கோல் அடிக்காமல் ஆட்டநேர இறுதி வரை சென்றன. ஆனால் 91ஆவது நிமிடத்தில் ஸ்பெயினின் மிக்கல் மெரினோ கோல் அடித்தார். “லா ராஜா” என ஸ்பானிஷ் மொழியில் அழைக்கப்படும் ஸ்பேயின் அணி இந்த ஒற்றை கோலால் வெற்றி பெற்றது. போர்ச்சுகல் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரொனால்டொ இந்தத் தோல்வியால் மனமுடைந்து போனார்.

          ஆறாவது ஆட்டம் அமெரிக்கா, பெல்ஜியம் அணிகளுக்கு இடையே சியாட்டிலில் ஜூலௌ 6ஆம் தேதியன்றெ நடைபெற்றது. இதில் பெல்ஜியம் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது. ஏழாவது ஆட்டம் அர்ஜெண்டைனா, எகிப்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடந்தது. ஆட்டத்தின் 15ஆவது நிமிடத்திலும் 67ஆவது நிமிடத்திலும் கோலடித்து எகிப்து அணி கோலடித்து முன்னணியில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் அர்ஜெண்டைனா அணியின் ரொமெரோ (79ஆவது நிமிடம்), மெஸ்ஸி (83ஆவது நிமிடம்), ஃபெர்னான்டஸ் (92ஆவது நிமிடம்) கோல் அடித்து அர்ஜெண்டைனா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறவைத்தனர். இந்த ஆட்டத்தில் நடுவர்கள் எகிப்து அணிக்கு எதிராகவும் அர்ஜெண்டைனா அணிக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

          காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும் கோல் போடவில்லை. இதனால் பெனால்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டது. இதில் சுவிட்சர்லாந்து அணி 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது.

காலிறுதி ஆட்டங்கள்

ஜூலை 9இல், ஃபாக்ஸ்பர்ரோவில் ஃபிரான்சு, மொராக்கோ அணிகளுக்கு இடையேயும் 

ஜூலை 10ஆம் நாள் இங்க்லேவுட்டில் ஸ்பெயின், பெல்ஜியம் அணிகளுக்கு இடையேயு

ஜூலை 11இல், மியாமியில் இங்கிலாந்து, நார்வே அணிகளுகிடையேயும்

ஜூலை 11இல் கன்சாஸில் அர்ஜெண்டைனா, சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையேயும் நடைபெறுகின்றன.

பிரான்சு, ஸ்பெயின், இங்கிலாந்து, அர்ஜேண்டைனா ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது என்னுடைய கணிப்பு.

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

england vs india t20 - 2026

இந்திய அணி மிக மோசமான தோல்வி

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          இங்கிலாந்து 20 ஓவர்களில் 201/7 (பில் சால்ட் 70, பட்லர் 36, சாம் கரன் 41, ஹர்ஷித் ராணா, பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கட்) இந்திய அணி 11.4 ஓவர்களில் 76க்கு ஆல் அவுட் (ஜோஷ் டாங் 4/28, ஆர்ச்சர் 3/29)

          பூவாதலையா வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் மட்டையாடவந்த இங்கிலாந்து அணி தொடக்க வீரர்கள் பில் சால்ட் (70 ரன்), ஜாஸ் பட்லர் (36) இருவரும் நல்ல தொடக்கம் தந்தனர். பின்னர் ஹர்ஷித் ராணா மற்றும் பிரின்ஸ் யாதவ் பந்துவீச்சில் சில விக்கட்டுகள் வீழ்ந்தன. இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் இன்று சிறப்பாகப் பந்துவீசவில்லை. இதனால் 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கட் இழப்பிற்கு 201 ரன் எடுத்தது.

          இதன் பின்னர் இரண்டாவதாக ஆடவந்த இந்திய அணியின் தொடக்கவீரர்கள் அபிஷேக் ஷர்மா (10 ரன்) மற்றும் வைபவ் சூர்யவன்ஷி (13 ரன்) தங்களுடைய சிக்சர்கள் மூலம் விறுவிறுப்பாக ரன் சேர்த்தனர். ஆனால் இரண்டாவது ஓவரில் அபிஷேக் ஷர்மா, மூன்றாவது ஓவரில் வைபவ் சூர்யவன்ஷி, நாலாவது ஓவரில் இஷான் கிஷன், ஐந்தாவது ஓவரில் அக்சர் படேல் என வரிசையாக மட்டையாளர்கள் ஆட்டமிழந்தனர். பின்னால் வந்த மட்டையாளர்கள் எவரும் ஒற்றை இலக்க ஸ்கோரைத் தாண்டவில்லை. இதனால் இந்திய அணி 11.4 ஓவர்களில் 76 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது,

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

sarala bhat in kshmir - 2026

சரளா பட் கொலை மீள் விசாரணை ஏன்?

— ராகுல் பண்டிதா —
தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக காஷ்மீரில் இருந்து சிறுபான்மையினரான ஹிந்து சமூகத்தினர் (பண்டிதர்கள்) வெளியேற்றப்பட்ட விஷயம் இந்திய அரசியலில் அசாதாரணமான இடத்தை பிடித்துள்ளது. இந்த விஷயம் தொடர்ந்து எழுப்பப்படுகிறது. ஆனால் இது ஏன் நிகழ்ந்தது என்று யாரும் ஆராய்வதுமில்லை விவாதிப்பதும் இல்லை.

காஷ்மீருக்கு வெளியே இது தேச பக்தி மற்றும் மத சார்பின்மை என்ற கருத்தியல் போராட்டத்திற்கு கருவியாக பயன்படுத்தப்படுகிறது. காஷ்மீருக்கு உள்ளேயோ இது ஒரு விஷயமாகவே இல்லை. எப்போதாவது மிக எச்சரிக்கையுடன் பட்டும் படாமல் சில குரல்கள் எழும்பும்.

1990 ம் ஆண்டு இஸ்லாமிய தீவிரவாதிகளால் 3.5 லட்சம் ஹிந்துக்கள் காஷ்மீரில் இருந்து விரட்டி அடிக்கபட்டார்கள். அதைப்பற்றி விவாதம் எழும்போதெல்லாம் யார் பாதிக்கப்பட்டார் (காஷ்மீரிகளா பண்டிதர்களா) என்று போட்டி ஏற்பட்டு விவாதம் சரிந்து விழும்.

இப்போது, இரண்டு விஷயங்கள் அதை அடியோடு மாற்றி அமைத்துள்ளது.

அண்மையில் காஷ்மீரின் முக்கிய தலைவர்களும் பிரிவினைவாத தலைவர்களும் பண்டித சமூகத்தினரிடம் நெருங்கி வந்துள்ளனர். கடந்த வாரம் மக்கள் ஜனநாயக கட்சியின் (பி டி பி) தலைவி மெஹ்பூபா முப்தி ஷீர்பவானி கோயிலின் வருடாந்திர உற்சவத்தில் கலந்து கொண்டு, பண்டிதர்கள் காஷ்மீருக்கு திரும்பி வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அதே வேளையில், ஜம்மு காஷ்மீர் காவல்துறை 1990 ஆண்டு சரளா பட் என்ற இளம் ஹிந்து செவிலியர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது குறித்து மறுவிசாரணையை துவங்கி உள்ளது. பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரிக்க ஆரம்பித்த காலங்களில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைகளை பற்றி முதல் முறையாக தீவிரமான விசாரணை மேற்கொள்ளப்பட துவங்கியுள்ளது.

இரண்டு நிகழ்வுகளும் — காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் பண்டிட்கள் திரும்பி வர அழைப்பு விடுப்பது , பண்டிட்களின் கொலைகள் பற்றி விசாரணை தீவிர படுத்தப்படுவது — ஒரு விஷயத்தை நோக்கியே நம்மை நகர்த்துகின்றன. பண்டிட்கள் வெளியேற்றப்பட்டது இனியும் அடி குறிப்பாக இல்லாமல் நிகழ்வுக்கு காரணம் எது, யார் என்பதை ஒத்துக் கொள்ளவும் நிகழ்வுக்கு பொறுப்பேற்க செய்வதும் என்ற கட்டத்தை நோக்கி செல்வதை சொல்லுகின்றன.

பண்டிட்கள் விரட்டியடிக்கப்பட்டது யாரால், ஏன் என்ற காரணத்தை கஷ்டப்பட்டு தேடி போக வேண்டியது இல்லை. கடந்த மாநில சட்டமன்ற தேர்தலில் ஜமாத் இ இஸ்லாமி சார்பில் நிறுத்தப்பட்ட (போலி) போட்டி வேட்பாளர்கள் கூட பண்டிட்கள் திரும்பி வரவேண்டும் என்று கூறினர் . 2019 க்கு முன்பு காஷ்மீரில் இது கற்பனை கூட செய்ய முடியாத விஷயம். 2019 க்கு பிறகு காஷ்மீர் அரசியல் மாறிவிட்டது. டில்லி எதிர் ஸ்ரீநகர், பிரிவினைவாதம் எதிர் மைய நீரோட்டம் என்ற பழைய இருமை அரசியல் மறையவில்லை ஆனால் மங்கியுள்ளது.

ஆனால் இரண்டு நிகழ்வுகளும் ஒரே திசையை நோக்கி பயணிக்கின்றன என்று சொல்ல முடியாது. பண்டிட்களின் வெளியேற்றத்திற்கு பொறுப்பேற்றுக் கொள்ளாமல், வெறுமனே, அது நடந்தது என்று பேச்சளவில் ஒப்புக்கொள்வது எந்த விளைவையும் தராது. பண்டிட்கள் காஷ்மீர் சமுதாயத்தின் ஒருங்கிணைந்த அங்கம் என்பது இப்போது காஷ்மீர் அரசியலின் சொல்லாடல் ஆகியுள்ளது. ஆனால் அதற்கு பொறுப்பு ஏற்றுக் கொள்வதென்பது முற்றிலும் வேறொரு விஷயம்.

பொறுப்பேற்றுக் கொள்வது என்றால் வெளியேற்றப்பட்டனர் என்ற உண்மையை ஒப்புக் கொள்வதில்லை மட்டுமல்ல. எதனால் அது நடந்தது, அது நடக்க காரணமானவர்கள் எவர், அடையாளம் தெரியாத நபர்கள் என்றில்லாமல் யார் என்று பெயர் குறிப்பிட்டு, அறிக்கை என்று இல்லாமல் சான்றுகள் சாட்சிகளுடன் பொறுப்பாக்க வேண்டும். 1990 இல் நடந்த வன்முறைகள் இனியும் சமுதாயத்தின் கூட்டு நினைவில் இருண்ட பக்கமாக இருக்க முடியாது.

பண்டிட்கள் திரும்பி வரவேண்டும் என்று கேட்பது ஒரு விஷயம். அவர்களை அச்சுறுத்தியவர்கள் யார், அவர்களை கொன்றவர்கள் யார், காஷ்மீரில் வாழ முடியாது வெளியேறி விடுவது தான் பாதுகாப்பானது என்று ஒட்டுமொத்த சமூகத்தையும் நினைக்க வைத்த சூழல் யாரால் உருவாக்கப்பட்டது என்று கேட்பது வேறொரு விஷயம்.

பண்டிட் களின் மத உற்சவத்தின் போது நடக்கும் ஒரு நடனத்தை முக்கியமான முஸ்லிம் தலைவர் கலந்து கொண்டு பார்ப்பது என்பது ஒரு முக்கிய குறியீடு. இதுவரை காஷ்மீரில் பொது மொழியில் தவிர்க்கப்பட்டு வந்த விஷயம் , சந்தேகம் இல்லை. ஆனால் இந்த குறியீடு கடினமான இதர விஷயங்களுடன் பொருந்த வேண்டும். திரும்பி வாருங்கள் என்று அழைப்பு வன்முறை நடந்தது ஏன் என்று கேள்வியை மனதிடத்துடன் எதிர்கொள்ளும் விருப்பம் இல்லாமல் விடுக்கப்பட்டால், திரும்பி வாருங்கள் என்று அழைக்க வேண்டியதற்கான முதல் காரணத்தை மறைத்து விடுக்கப்பட்டால் அது அர்த்தமற்றதாகும்.

இந்த இடத்தில்தான் சரளா பட் கொலை குறித்த விசாரணை ஒரு வழக்கு என்பதற்கும் அப்பால் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. தாமதம் என்றாலும் கூட , அரசியல் அறிக்கைகளால் மட்டுமே பதிலளிக்க முடியாத விஷயங்கள் குறித்து அரசு நிர்வாகம், நிறுவனங்கள் கேள்வி எழுப்ப தொடங்கியதை இது சுட்டிக்காட்டுகிறது.

சரளா பட் கொலை விசாரணை ஏன் முக்கியமானது என்பதை புரிந்து கொள்ள 1990 ஆண்டு வசந்த காலத்திற்கு செல்ல வேண்டும் . அப்போதுதான் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதுவரை இல்லாத வகையில் பயம் கவ்வியது. அரசு நிர்வாகம் முற்றிலும் சரிந்தது. பயங்கரவாதிகள் பண்டிட்களை குறிவைத்து கொல்லும்போது அவர்களை காப்பாற்ற யாரும் அங்கில்லை. ஆரம்பத்தில் நீதிபதிகள், அரசியல் செயல்பாட்டாளர்கள், அரசு அதிகாரிகள் என்ற நிலையில் இருந்த பண்டிதர்கள் மட்டுமே தங்கள் இயக்கத்துக்கு எதிரி என்று அடையாளப்படுத்தப்பட்டு குறி வைத்து தாக்கப்பட்டார்கள் . ஆனால் அது விரைவில் சாதாரண மக்களையும் கொல்வதாக ஆனது. வெளியேற்றம் தொடங்கியது.

சரளா பட் உடல் தகனத்தின் போது இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மயானத்திற்கு வந்து அவளது இறுதி அஸ்தியை மிதித்தும், கூடியிருந்த அவரது உறவினர்களை காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டுமென்றும் அச்சுறுத்தினர். ஷிரி இ காஷ்மீர் மருத்துவமனையில் குறை பிரசவ குழந்தைகள் சிகிச்சை பிரிவில் 23 வயது சரளா பட் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அண்மையில் நிறுவப்பட்ட மாநில காவல் துறையின் சிறப்பு விசாரணை , அவர் 1990 ஏப்ரல் 18 தேதி மதியம் பணி முடித்து மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார் . அதுதான் நண்பர்கள் அவரை கடைசியாக உயிருடன் பார்த்தது. அவளை ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியினர் (ஜே கே எல் எப்) கடத்திக்கொண்டு ஜம்மு நகரத்துக்குள் கொண்டு சென்றனர் . அவளை உடலியல் ரீதியாக தாக்கினர். கொடுமைப்படுத்தினர். இறுதியாக சுட்டுக்கொன்றனர். அவளது உடல் மறுநாள் வேறொரு இடத்தில் கண்டறியப்பட்டது, என்று அறிக்கையை பதிவு செய்துள்ளது.

ஹிந்து பண்டிட் பெண்ணின் கொலை விசாரணை அப்போதைய மாநில அரசுக்கு முக்கியமான படவில்லை. ஆஜாதிக்காக (விடுதலைக்காக) போராடும் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளை சூழ்ந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாக வெறி கூச்சலிட்ட உள்ளூர் மக்களின் செயல் உறைய வைப்பதாக இருந்தது. 200க்கும் மேற்பட்ட அந்த வெறி கும்பல் சரளா பட் அஸ்தியை காலால் மிதித்தும் அவளது உறவினர்கள் காஷ்மீரை விட்டு வெளியேறும்படியும் அச்சுறுத்தியது. அடுத்த நாள் சரளா பட் வீட்டின் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. மொத்த குடும்பமும் காஷ்மீரை விட்டு வெளியேறியது. இதை சரளாவின் உறவினர் ஜம்முவில் உள்ள ஒரு தொலைக்காட்சி நிருபரிடம் கூறியுள்ளார். அடுத்த சில மாதங்களிலேயே 700க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் சரளாவை போலவே கொடூரமாக கொல்லப்பட்டனர்.

சரளா பட்டின் கொலை ஜே கே எல் எஃப் தலைமையின் உத்தரவுபடி தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது. அதில் குர்ஷித் அகமத் சால்கு உட்பட பலர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று காவல்துறை கூறியது. கடந்த 35 ஆண்டுகளாக சரளாவின் கொலை மற்ற பண்டிதர்களின் கொலை போல வெறும் புள்ளி விவரமாக இருந்தது. ஆரம்பத்தில் நடந்த காவல்துறை விசாரணை வழக்கமான சடங்குகளை தாண்டி செல்லவில்லை. அரசு நிர்வாகமும் அதை தொடர்ந்து பல தசாப்தங்கள் அமைதியில் உறைந்து விட்டது.

கடந்த ஆண்டு அந்த வழக்கு மீண்டும் தொடங்கியது. நடந்த குற்றத்தை போலவே அதை தொடர்ந்த அமைதியை இப்போது அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை அமைப்பு தீர்க்க முனைகிறது. சாட்சிகளின் மறுவிசாரணை, புதிய அறிக்கைகள், குற்றம் நடந்த இடத்தை சம்பவத்தை மீண்டும் கட்டமைத்து பார்ப்பது, ஆதாரங்களை கைரேகைகளை ஆய்வு செய்வது , முன்னாள் ஜே கே எல் எஃப் தீவிரவாதிகளை தேடுவது ஆகியவற்றுக்கு பிறகு சரளா பட் மீது நடத்தப்பட்ட கொடூரமும் கொலையும் ஜே கே எல் எஃப் தலைவனான யாசின் மாலிக்கின் கட்டளைப்படி அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டது என்று சிறப்பு விசாரணை அமைப்பு முடிவுக்கு வந்துள்ளது.

யாசின் மாலிக் பயங்கரவாத செயலுக்கு நிதி அளித்த விஷயமாக வேறொரு வழக்கில் சிறையில் உள்ளான். சரளா பட் வழக்கு ஒரு தனி விஷயம் அல்ல. காஷ்மீர் பண்டிட் சமூகத்தை அச்சுறுத்தி ஒட்டுமொத்தமாக மாநிலத்தை விட்டே ஓட செய்யும் விரிவான திட்டத்தின் ஒரு பகுதிதான் என்கிறது சிறப்பு விசாரணை அமைப்பு. விசாரணையின் ஊடாக ஒரு முக்கிய செய்தியையும் அனுப்பியுள்ளது அது .

காவல்துறையின் குற்றப்பத்திரிகை கடந்த ஜூன் 29 தேதி பதிவானது. அதில் : ” இது (குற்றப்பத்திரிக்கை) வலுவான, தவறவே விட முடியாத ஒரு செய்தியை சொல்கிறது. காலத் தாமதம் ஒருபோதும் பயங்கரவாதத்திற்கு கேடயமாக இருக்க முடியாது. எவ்வளவு ஆண்டுகள் கடந்தாலும் பயங்கரவாத கொடூர செயல்களுக்கு சட்டத்தின் முன் பதில் சொல்லியே ஆக வேண்டும். பயங்கரவாத செயல்கள் பயத்தினாலோ அச்சுறுத்தலினாலோ வன்முறையினாலோ நீதியை தள்ளி போட முடியுமே அன்றி சட்டத்தின் ஆட்சியை நிரந்தரமாக எப்போதும் தோற்கடிக்க முடியாது. “

மேற்கண்ட முடிவுரை நீதிமன்றத்திற்கு அப்பால் விளைவுகளை எதிர் நோக்குகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி, சகோதரத்துவத்தை பற்றி வாய் நிறைய பேசுவோரின் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளது. ஹிந்து பண்டிட் கொலை விசாரணை குறித்த தகவல் வெளிவந்த பிறகு எந்த காஷ்மீர தலைவரும் வாய் திறக்கவில்லை. ஒரு மூத்த காவல்துறை அதிகாரி இந்த செய்தியாளரிடம் பேசும் போது, காஷ்மீரை சேர்ந்த தலைவர்கள் பலரிடம் அசாதாரணமான நிலையை இந்த விசாரணை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற விசாரணையின் பின்னால் உள்ள ‘நோக்கத்தை’ குறித்து அவர்கள் சந்தேகம் கிளப்பி வருகிறார்கள் , என்றார்.

காவல்துறை சிறப்பு விசாரணை அமைப்பின் குற்ற பத்திரிக்கை வெளிவந்த வேளையில், பண்டிதர்களுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து உள்ளவர்களிடமிருந்து மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்து வருகிறது அரசு. இதுவரை சுமார் 3000 கனால் (ஒரு கனால் = 5445 சதுர அடி) பகுதி மீட்கப்பட்டு உண்மையான சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் காஷ்மீர் தலைவர்களின் பதில் வினை எப்படியாக இருந்தாலும், எப்படிப்பட்ட அரசியல் விளைவுகளை ஏற்பட்டாலும் கூட விசாரணை குறித்த விவாதம் குறிப்பிட்ட குற்ற செயலின் சரித்திரம், அதை செய்தவர்களின் பெயர்கள், அதை செய்ய கட்டளையிட்டவர்கள் / தூண்டியவர்களின் அதிகார படிநிலை , நோக்கம் ஆகியவற்றைப் பற்றி கவனத்தை திருப்பி உள்ளது.

விசாரணை அமைப்புடன் சம்பந்தப்பட்ட மூத்த காவல்துறை அதிகாரி, இது ஆரம்பம்தான் வரும் நாட்களில் மேலும் அதிகமான கொலை வழக்குகள் விசாரணை செய்யப்படும், என்று உறுதிப்பட தெரிவித்தார். ‘சரளா பட் கொலை விசாரணையின் போது வேறு பல கொலைகள் குறித்த தகவல்களும் ஆதாரங்களும் எங்களுக்கு கிடைத்துள்ளன’, என்று அவர் கூறினார்.

இனி என்ன ? ஹிந்து சமய விழாக்களில் கலந்து கொள்வது ஒன்று. பழைய ஹிந்து நண்பர்களை தேடிச் சென்று சந்திப்பதாக காணொலி வெளியிடுவது வேறொன்று. ஆனால் , காஷ்மீர வரலாற்றில் பண்டிட்கள் தங்கள் பங்களிப்பு பற்றி கேட்கும் போது என்ன நடக்கும் ? அந்த கதையில் தங்களை கொலை செய்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவது பற்றி கேட்கும்போது ? இது போன்ற கேள்விகளுக்கு நீண்ட கால நோக்கில் அரசியல் ஒருமித்த கருத்து உருவாவதை பொறுத்தே ஒற்றுமையும் நல்லிணக்கமும் உருவாகி வரும்.

சரளா பட் வழக்கு ஒரு விதிவிலக்காக , ஒரு குறியீட்டு மதிப்பாக அமைந்து விட்டால் மாற்றம், சீரமைப்பு போன்றவற்றிற்கு வலு குறைந்து விடும். மாறாக விரிவான வகையில் நிர்வாக அமைப்புகளிலும் முறைமைகளிலும் மாற்றம் ஏற்பட்டு மற்ற கொலை வழக்குகளும் விசாரிக்கப்படுமானால் 1990 காஷ்மீர் வன்முறை குறித்த கண்ணோட்டத்தில் அடியோடு மாற்றம் வரும்.

அதுவே இப்போது காஷ்மீர அரசியல் அகராதியில் இடம் பிடித்துள்ள திரும்பி வாருங்கள், ஒன்றாக வாழ்வோம், நட்போடு வாழ்வோம் என்ற வார்த்தைகளுக்கு பொருள் சேர்க்கும். ஏனென்றால் திரும்பி வருவதென்பது வேலைவாய்ப்பு, பாதுகாப்பு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. வெளியேற்றப்பட்டவர்களை திரும்பி வாருங்கள் என்று வரவேற்கும் சமூகத்தின் மீதான நம்பிக்கையை பொருத்தது. நிகழ்த்திய வன்முறையை அவர்கள் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்பதை பொருத்தது.

இதுதான் சரளா பட் கொலை விசாரணையின் அரசியல் முக்கியத்துவம். மீண்டும் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது என்பது எப்போதோ நடந்த குற்ற செயல்கள் இன்று அரசியல் ரீதியாக அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது என்பதால் அவை முக்கியமற்றவை என்பதாகி விடாது என்ற முக்கியமான சமிக்கையை வெளிப் படுத்துகிறது.

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

நன்றி : ஓப்பன் மேகசீன்

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

sabarimalai and pamba - 2026

உலக அளவில் பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோவில்‌ ஆடி கர்கடக மாத பூஜை வழிபாடு நடத்த வரும் ஜூலை 16ம் தேதி திறக்கப்படும்.

ஆடி கர்கிடக மாத சடங்குகளுக்காக சபரிமலை ஸ்ரீ ஐய்யப்ப சுவாமி கோயில் ஜூலை 16 அன்று மாலை 5:00 மணிக்கு, தந்த்ரி கண்டரரு மகேஷ் மோகனார் முன்னிலையில், மேல்சாந்தி பிரசாத் இ.டி. கருவறையைத் திறந்து விளக்கேற்றுவார். அதைத் தொடர்ந்து, 18 புனிதப் படிகள் கீழே உள்ள ஆழியில் புனித அக்னி ஏற்றப்படும். தொடர்ந்து, மாளிகப்புரம் மேல்சாந்தி எம்.ஜி.மனு நம்பூதிரி தலைமையில் மாளிகப்புரம் சன்னதி திறக்கப்படும்.

கர்கிடக மாதத்தின் முதல் நாளான ஜூலை 17 அன்று, காலை 5:00 மணிக்கு கோயில் தரிசனத்திற்காகத் திறக்கப்படும். கர்கிடக மாதத்தின் முதல் நாளிலிருந்து, ஒவ்வொரு நாளும் சந்தியா தீபாராதனைக்குப் பிறகு 18 படிகளில் படிபூஜை நடத்தப்படும். கர்கிடக மாத சடங்குகள் நிறைவடைந்த பிறகு, சபரிமலை கோயில் ஜூலை 21 அன்று இரவு 10:00 மணிக்கு மூடப்படும்.

ஜூலை மாதத்திற்கான மெய்நிகர் முன்பதிவுகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்களின் தரிசன நேரங்களை www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

சன்னிதானத்தில் தங்குமிட முன்பதிவு: www.onlinetdb.com

யாத்ரீகர்களுக்கு இலவச அன்னதானம், மலிவு விலை தங்குமிடங்கள் மற்றும் சாமான்கள் வைக்கும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

சபரிமலை யாத்திரையைத் தொடங்குவதற்கு முன், பக்தர்கள் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தால் நடத்தப்படும் பம்பா மற்றும் சபரிமலை சன்னிதானத்தில் உள்ள அன்னதான மண்டப மையங்களில் இலவச உணவைப் பெற்றுக்கொள்ளலாம். யாத்ரீகர்கள் வாரியத்தால் வழங்கப்படும் தங்குமிட வசதிகளையும் குறைந்த கட்டணத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், பம்பாவில் உள்ள சாமான்கள் வைக்கும் மையங்களில், பக்தர்கள் யாத்திரையை மேற்கொள்வதற்கு முன் குறைந்த கட்டணத்தில் தங்கள் உடைமைகளைப் பாதுகாப்பாக ஒப்படைக்கலாம்.

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

crime scene - 2026

சாத்தூர் அருகே மனைவி குத்தியதில் கணவர் உயிர் இழந்தார்; நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் கணவர் உயிரிழந்தது சாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சாத்தூர் அருகிலுள்ள சங்கராபுரம் கிராமத்தில் ஆர்.சி தெரு சேர்ந்த சாமி என்பவரது மகன் மணி (வயது 34) . இவர் அருகிலுள்ள பகுதியில் தனியார் அட்டைக் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். மணி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள அப்பனேரி பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகள் திவ்யபாரதி (24) ஆகிய இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து இருவரும் சலராபுரத்தில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து 8 ஆண்டுகளாக இருவருக்கும் குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் திவ்யபாரதிக்கு வேறு ஒருவருடன் தெடர்பு இருப்பதாக சந்தேகத்தின்பேரில் மணி தினமும் குடித்து விட்டு வந்து அடிக்கடி சண்டை போடுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போலே இருவருக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. இதில் திவ்யபாரதி தள்ளிவிட்டதில் மணி வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. சமபலம் குறித்து தகவலறிந்த சாந்தூர் தாலுகா போலீசார் சம்பல இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரதே பரிசோதணைக்கு விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மணியின் மனைவி திவ்யபாரதியை நடத்திய குறுக்கு விசாராணையில் திவ்யபாரதி சண்டையின் போது மணியை பாத்ரூமில் தள்ளி விட்டுவிட்டு கத்தியை எடுத்து மணியின் தொடையில் குத்தியதும் அதிலிருந்து வெகு நேரம் இரத்தம் வெளியேறியதால் மணி உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சாத்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ராமராஜ் தலைமயிலான போலீசார் திவ்யபாரதியை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

fifa2026 - 2026

உலகக் கோப்பை கால்பந்துப்போட்டி 2026
ரவுண்ட் 16 முதல் நாலு ஆட்டங்கள்

பிரேசில் அதிர்ச்சித் தோல்வி

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          காலிறுதிக்கு முந்தைய சுற்று ஜூலை 4ஆம் தேதி தொடங்கியது. முதல் கனடா, மொராக்கோ இடையே ஹூஸ்டனில் நடைபெற்றது. இதில் மொராக்கோ அணி கனடா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. மொராக்கொ அணியின் ஔனாதி 50 நிமிடத்திலும் 82 ஆவது நிமிடத்திலும் இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். 98ஆவது நிமிடத்தில் ரஹ்மி ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் மொராக்கோ காலிறுதிக்கு முன்னேறியது.

          அதே தினம் பிலடெல்பியாவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பாராகுவே அணியும் ஃபிரான்சு அணியும் மோதின. ஃபிரான்சு அணியின் முன்னனி ஆட்டக்காரர் மபாபே யொ நிமிடத்தில் பெனால்டி கிக் மூலமாக அந்த அணி ஒரு கோல் அடித்தது. இதன் மூலம் ஃபிரான்சு அணி வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

          மூன்றாவது ஆட்டம் கிழக்கு ரூதர்ஃபோர்டு, மெட்லிஃபெ மைதானத்தில், ஜூலை 5ஆம் நாள், பிரேசில் நார்வே அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. பிரேசில் அணியின் நெய்மர் 100ஆவது நிமிடத்தில் ஒரு பெனால்டி கிக் மூலம் ஒரு கோல் அடித்தார். ஆனால் நார்வே அணி 70ஆவது நிமிடத்திலும், 90ஆவது நிமிடத்திலும் இரண்டு கோல்கள் அடித்திருந்ததால் ஆட்டத்தில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது. நெய்மர் கண்ணீருடன் தான் கால்பந்து ஆட்டங்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

          அதே நாள் மெக்சிகோவில் நடந்த ஆட்டத்தில் மெக்சிகோ அணியும் இங்கிலாந்து அணியும் விளையாடின. இங்கிலாந்து அணி தோற்கவேண்டும் என்பதற்காக முதல் நாள் இரவு அந்த அணி தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியில் மெக்சிகோ அணியின் ரசிகர்கள் அதிக சத்தம் எழுப்பும் வகையில் ஆட்டம், பாட்டம் என ரகளை செய்தனர். ஆட்டத்தின்போதும் மெக்சிகோ அணி இங்கிலாந்து அணி வீரர்களை தாக்கும் வகையில் ஆடினர். இருந்தபோதிலும் இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

england vs india t20 - 2026

இங்கிலாந்து இந்தியா டி-20 தொடர்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          இங்கிலாந்து இந்திய அணிகளில் டி-20 தொடர் ஜூலை 1ஆம் தேதி தொடங்கியது. இதற்கு முன்னர் இந்திய அணி அயர்லாந்து அணியுடன் இரண்டு டி-20 ஆட்டங்கள் ஆடியது. இரண்டிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்திய அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன் இரண்டு ஆட்டங்களிலும் சரியாக விளையாடவில்லை. அதனால் அவருக்குப் பதிலாக வைபவ் சூர்யவன்ஷியை ஆடவைக்கவேண்டும் என கருத்து எழுந்தது.

          முதல் ஆட்டம் இங்கிலாந்தில் செஸ்டர்-லே ஸ்ட்ரீட் மைதானத்தில் நடந்தது. மழை காரணமாக இந்த ஆட்டம் கைவிடப்பட்டது. டாஸ் வென்று, இந்திய அணி முதில் மட்டையாடியது. தொடக்கவீரர் சஞ்சு சாம்சன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் பூஜ்யம் ரன்னுக்கு ரன் அவுட் ஆனார். அபிஷேக் ஷர்மா 59 ரன்னும் (24 பந்துகள்), ஷ்ரேயாஸ் ஐயர் 68 ரன்னும் (47 பந்துகள்) ஷிவம் துபே 42 ரன்னும் (ஆட்டமிழகாமல், 21 பந்துகளில்) அடித்தனர். இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 189 ரன் எடுத்தது. இதன் பின்னர் ஏற்பட்ட மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது.

          இரண்டாவது ஆட்டம், மான்செஸ்டரில் ஜூலை 4ஆம் தேதி நடைபெற்றது. பூவாதலையா வென்ற இந்திய அணி முதலில் மட்டையாடியது. சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக வைபவ் சூர்யவன்ஷி தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கினார். அவர் 10 பந்துகளில் 14 ரன் (2 சிக்சர்கள்) அடித்து ஆட்டமிழந்தார். அபிஷேக் ஷர்மா 24 பந்துகளில் 43 ரன் அடித்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் (22 பந்துகளில் 37 ரன்), இஷான் கிஷன் (40 பந்துகளில் 49 ரன்), திலக் வர்மா (11 பந்துகளில் 24 ரன்) நன்றாக ஆடினர். ஷிவம் துபே (5 ரன்) திலக் வர்மாவிற்கு முன்னதாக களமிறங்கினார்; ஆனால் சோபிக்கவில்லை. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கட் இழப்பிற்கு 190 ரன் அடித்தது.

          இரண்டாவதாகக் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அதிரடி மட்டையாளர்கள் பில் சால்ட் மற்றும் ஜாஸ் பட்லர் இருவரும் ரன் எடுக்காமல் முதல் ஓவரில் அர்ஷதீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஹாரி ப்ரூக் (39 ரன்), ஜேகப் பெதல் (76 ரன்), டாம் பேண்டன் (39 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 191 ரன் எடுத்து வெற்றிபெற்றது.

          16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார். அதற்கடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் மற்றொரு சிக்சர் அடித்தார். நான் காவது பந்தில் ஒரு ஃபோர் அடிக்கப்பட்டது. ஐந்தாவது பந்தில் ஒரு சிக்சர் அடிக்கப்பட்டது. இந்த ஓவரில் மொத்தம் 29 ரன்கள் அடிக்கப்பட்டது.  

          ஐந்து ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் மூன்றாவது ஆட்டம் நாட்டிங்ஹாமில் நாளை நடைபெறுகிறது.