Home Blog Page 13

மீண்டும் உலக சாம்பியன் இந்தியா! நியூஸி,, க்கு எதிராக சூப்பர் வெற்றி

icc t20 worldcup - 2026

மீண்டும் உலக சாம்பியன் ஆனது இந்தியா.. இன்று நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்தினியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தக்க வைத்துக் கொண்டது.

டி20 உலக கோப்பை: போட்டியில் மீண்டும் உலக சாம்பியன் ஆனது இந்தியா.. நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி..

முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது. அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். அதில் ஐந்து 4 எட்டு 6 ரன்கள் அடங்கும். அவருக்கு துணையாக அபிஷேக் ஷர்மா 21 பந்தில் 52 கண்கள் குடித்தார் அதில் 6 நான்கு ரன்களும் 3 சிக்ஸ்களும் அடங்கும். இந்த இணை 7 ஓவரில் 98 ரன்கள் சேர்த்தது. இதுவே இந்திய அணி வெற்றி பெற மிகச்சிறந்த அடித்தளமாக அமைந்தது. அபிஷேக் ஷர்மாவை தொடர்ந்து அந்த இஷான் கிஷன் 25 பந்தில் 54 ரன்கள் எடுத்தார் அதில் தலா நான்கு 4 மற்றும் சிக்ஸ் அடங்கும். இதனால் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது.

256 ரன்கள் இலக்காக கொண்டு ஆடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மீண்டும் உலக சாம்பியன் ஆனது.

பும்ரா அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஈரான் விஷயத்தில் மத்திய அரசைக் குறை கூறும் சோனியா; சரியானதா?

amitsha in parliament - 2026

— ராம் மாதவ் –

தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்

மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்த வார துவக்கத்தில், ஈரானின் உச்சபட்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் மரணத்திற்கு இந்திய அரசு இரங்கல் தெரிவிக்காததை விமர்சித்து கட்டுரை எழுதி உள்ளார் (3 மார்ச் – இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு). ‘நடு நிலைமையை கைவிட்டு விட்ட’தாகவும் ‘நமது அயலுறவு கொள்கை செல்லும் திசை, நம்பகத்தன்மை’ பற்றி கேள்வி எழுப்பி உள்ளார்.

ஈரான் மோதலை அந்த பிராந்தியத்தில் நிலவும் புவியரசியலுடன் விரிவான கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். இது போன்ற நேரங்களில் நடுநிலை மட்டும் போதாது. நாம் எந்த பக்கசாய்வும் இல்லாதவர்கள் என்பது வெளிப்பட வேண்டும். இதைதான் அண்மையில் நடந்த இரண்டு நிகழ்வுகளில் – வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அதிரடி நடவடிக்கை மூலம் அமெரிக்கா பிடித்த போதும் , ஈரானின் உச்சபட்ச தலைவர் உட்பட எண்ணற்றோர் உயிரிழப்புக்கு காரணமான தாக்குதலின் போதும் – இந்திய அரசு கடைபிடித்தது. ‘ஆழ்ந்த கவலையை’ வெளிப்படுத்தியது, ‘பேச்சுவார்த்தை , ராஜதந்திர நடவடிக்கை’களை மேற்கொள்ள வேண்டும் என்றது. ‘அனைத்து தரப்பி’னரும் ‘நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். மோதலை அதிகரிக்கக் கூடாது. பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்’ என்று கூறியது.

இந்தியாவுக்கும் ஈரானுக்கும் அரசு மற்றும் மக்களிடையே நல்லுறவு நிலவுகிறது. அதே வேளையில், முறையான அரசு நடவடிக்கைகள், புவியரசியல் நிதர்சனங்கள், அது சார்ந்த நலன்கள் மற்றும் ஆதாயங்களை உணர்ச்சி கொத்தளிப்பில் பலியிட முடியாது. உலகத்திற்கு சற்றும் அறிமுகம் இல்லாத ஒரு ஆட்சி முறையை ஈரான் பின்பற்றுகிறது. ஒன்பதாம் நூற்றாண்டில் நிலவிய பன்னிருவர் ஷியா மரபை எந்த மாற்றமும் இல்லாமல் இறுக்கமாக பின்பற்றுகிறது. 12 வது இமாமாக இருந்த இமாம் மஹ்தி 869 ஆண்டில் கண்ணுக்கு புலப்படாத ‘அமானுஷ்ய மறைவு நிலை’யை அடைந்தார். அந்த நிலையிலிருந்து ஷியா பிரிவை வழி நடத்தி வருகிறார். இறைவன் இமாம் மஹ்தியை உயிருடன் வைத்திருப்பதாகவும் இறைவன் விரும்பும் போது இமாமை மீண்டும் தோன்ற செய்வார் என்ற நம்பிக்கை ஷியா பிரிவு முஸ்லிம்களிடம் ஆழமாக உள்ளது.

இமாம் திரும்பி வரும் வரையில் அந்த சமயப் பிரிவு வேலாயத் – இ- ஃ பகிஹ் – இஸ்லாமிய நீதி முறைமையை – பின்பற்ற வேண்டும். 1979 இல் நடந்த இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு ஆயதுல்லா ரூஹோல்லா கொமெய்னி தன்னை வலி – இ – மகிஹ்வாக அறிவித்து கொண்டு மேல் சொன்ன இஸ்லாமிய அரசமைப்பை நடைமுறைப்படுத்தினார். அவருக்கு அடுத்து வந்த கமேனி (அண்மையில் கொல்லப்பட்டவர்) எல்லா அதிகாரமும் தன் கைவசம் கொண்டு வந்து உச்சபட்ச தலைவராக ஆனார்.

சோனியா காந்தியின் கட்டுரையில் கமேனியை ‘அரசின் தலைவர்’ என்று மீண்டும் மீண்டும் சொல்லியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. எப்போதும் உச்சபட்ச தலைவர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதில்லை. ஆனால் ஈரானின் ஜனாதிபதிகள் மற்ற நாடுகளுக்கு விஜயம் செய்யும்போது அரசின் தலைவர் என்ற வகையில் அவர்களுக்கு அரசு முறையிலான மரியாதைகள் வழங்கப்படும். ஈரானிய ஜனாதிபதிகள் முகமது கதாமி 2003 லும் மம்முத் அஹமதிநெஜாத் 2008 லும் ஹாசன் ரூஹானி 2018 லும் இந்தியா வந்தபோது அரசின் தலைவர்கள் என்ற வகையில், அரசு முறைமைப்படி , உரிய மரியாதையுடன் வரவேற்கப்பட்டனர். அந்த காரணத்தினால் தான் இந்தியா தனது அயலுறவுத்துறை செயலாளரை ஈரானிய தூதரகத்துக்கு அனுப்பி இரங்கல் பதிவேட்டில் கையெழுத்திட செய்தது. அதன் மூலம் அந்த உச்சபட்ச தலைவரின் மரணத்திற்கு தனது கண்டனத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது.

சோனியா காந்தி கட்டுரையில் 1994 மனித உரிமை கவுன்சிலில் காஷ்மீர் விஷயமாக இந்தியாவுக்கு எதிரான தீர்மானத்தை இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு முன்வைத்தபோது ஈரான் அதை தடுத்தது என்று குறிப்பிட்டுள்ளார். ஈரான் அரசின் நிலைப்பாட்டையும் கமேனியின் நிலைப்பாட்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது . கடந்த பத்தாண்டுகளில் கமேனி காஷ்மீர் விஷயமாகவும் இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை பற்றியும் இந்திய அரசின் செயல்பாட்டையும் பலமுறை கடுமையாக விமர்சித்துள்ளார்.

2019 இல் ஜம்மு-காஷ்மீரில் இருந்த 370 சட்டப்பிரிவை நீக்கியபோது கமேனி டிவிட்டரில் , ‘காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களின் நிலை எங்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. இந்திய அரசு நியாயமான கொள்கையை பின்பற்றும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அந்தப் பகுதியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்களும் அடக்குமுறையும் நிகழாமல் தடுக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம்’ என்று பதிவிட்டார்.

2020 ல் சி ஏ ஏ ( குடியுரிமை சட்ட திருத்தம் ) தொடர்பாக தில்லியில் எதிர்ப்பு எழுந்த போது கமேனி மீண்டும் ட்விட்டர் மூலம் இந்தியா முஸ்லிம்களை ‘திரள்படுகொலை’ செய்வதாக குற்றம் சாட்டினார். ‘உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் இதயங்கள் இந்தியாவில் முஸ்லிம்கள் திரளப்படுகொலை செய்யப்படுவதை கண்டு துயரத்தில் ஆழந்துள்ளன. [இந்திய அரசு] முஸ்லிம்களை திரள்படுகொலை செய்வதை நிறுத்த வேண்டும்’ என்றார் . ‘தீவிரவாத ஹிந்துக்களையும் அவர்களது கட்சிகளையும் இந்திய அரசு எதிர்க்க வேண்டும் . முஸ்லிம்கள் திரள்படுகொலையை தடுக்க வேண்டும்’ என்று அவர் பதிவிட்டார்.

2024 ல் கமேனி இந்தியாவை காசா, மியான்மருடன் ஒப்பிட்டு, ‘மியான்மர், காசா , இந்தியாவில் முஸ்லிம்கள் துன்பப்படுவதை பார்த்துக்கொண்டு சும்மா இருந்தால் நாம் நம்மை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ள அருகதை அற்றவர்கள் ஆவோம்’ என்று மீண்டும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அவரது மேற்கண்ட கூற்றுக்களை இந்தியா தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகவும் ‘தவறான புரிதலால்’ சொல்லப்படுகின்றன என்றும் ‘இதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கூறியது. அவரது கூற்றை உறுதியாக மறுத்த அயலுறவு அமைச்சகம், ‘சிறுபான்மையினரை பற்றி விமர்சிக்கும் நாடுகள் தங்கள் நாட்டில் சிறுபான்மையினரை எப்படி நடத்துகின்றன என்பதை முதலில் பார்த்துவிட்டு அதன் பிறகு மற்றவர்களை விமர்சிக்க வேண்டும்’ என்று காட்டமாக பதிலடி கொடுத்தது.

2015 ல் சவுதி அரேபியாவில் ‘இனப்படுகொலை’ நடப்பதாக கமேனி குற்றம் சாட்டிய போது சவுதி அரேபியா அதற்கு கடுமையாக எதிர்வினையாற்றியது. அதேபோல் அவர் மீண்டும் மீண்டும் ‘அமெரிக்கா அழியட்டும்’ , ‘ இஸ்ரேல் சாகட்டும்’ என்று வெறுப்பை வெளிப்படுத்திய போது கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இது போன்ற பேச்சால் பலருக்கும் அவரை பிடிக்காமல் போனது. இறுதியில் அவரது மரணத்திற்கு ஜி 7 நாடுகளும் பல இஸ்லாமிய நாடுகளும் இன்னும் பிற நாடுகளும் இரங்கல் தெரிவிக்காதது சோகமானது.

மேற்சொன்னதை எல்லாம் மீறி இந்திய அரசு ஈரானிய அரசுடன் நல்லுறவை வளர்த்து வந்தது. ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி 2024 இல் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தபோது இந்தியா ஒரு நாள் துக்கம் அனுஷ்டித்தது. பிரதமர் மோடி , செய்தி கேட்டு அதிர்ச்சியும் துயரமும் அடைந்ததாகவும் ‘இந்த சோதனையான காலத்தில் இந்தியா ஈரானுக்கு துணை நிற்கும்’ என்றும் தனது இரங்கல் செய்திகள் குறிப்பிட்டிருந்தார்.

சோனியா காந்தி ‘நம்முடைய மரபை’ கைவிட்டதாக இந்திய அரசை குற்றம் சாட்டியுள்ளது முற்றிலும் தவறானது. வருகின்ற தேர்தல்களை கருத்தில் கொண்டு காங்கிரசின் பாரம்பரிய சிறுபான்மையினர் கொள்கையை அந்த கட்டுரையில் எதிரொலித்ததாகவே கருத வேண்டியுள்ளது.

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்

கட்டுரையாளர் இந்தியா பவுண்டேசனின் தலைவர். பாஜகவில் இருக்கிறார்.

தமிழகத்தின் ‘மக்கள் ஆளுநர்’!

governor rn ravi at sahajanandar function - 2026

தமிழகம் இதுவரை கண்ட ஆளுநர்களில், மிகச் சிறந்த ஆளுநர் ஆர்.என்.ரவி. அவர் தற்போது பதவிக்காலம் முடிவு பெறுவதை ஒட்டி,  தமிழகத்திலிருந்து மாற்றப்பட்டு அவரது சேவை மேலும் அதிகம் தேவைப்படும் மேற்கு வங்கத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். 

தைரியமான ஓர் ஆளுநராக தன் பதவிக் காலம் முழுமைக்கும் இருந்தவர். ஆளுநர் என்ற பதவிக்கு மிகச்சிறந்த பொருத்தமானவராக,  அந்தப் பதவியின் கௌரவத்தை பொறுப்பை சரியான வகையில் வெளிப்படுத்திய மிகச்சிறந்த நபராகவே தமிழர்களாகிய நாம் அவரைப் பார்க்க முடிந்தது. ராஜ் பவன் என இருந்ததை மக்கள் பவன் என மாற்றி,  எளியோரும் அந்த ஆளுநர் மாளிகையில் அடி எடுத்து வைத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களை ஒரு கௌரவம் நிறைந்தவர்களாக மனதில் எண்ண வைத்த செயல்பாடு ரவீந்திர நாராயணன் ரவிக்கு உரியது. அந்த வகையில் மக்கள் உள்ளங்களை வென்ற மகத்தான நிர்வாகி என்று உறுதியாகச் சொல்லலாம்.

தம் பதவிக் காலத்தில் ஆர். என். ரவி செய்த செயல்கள் மகத்தானவை.  அதுவும் அயோக்கியர்கள் முழுக்க நிறைந்த தமிழக அரசியல் களத்தில் தனி ஒருவராக நின்று தாக்குப் பிடித்த தன்மைக்காகவே அவரைப் பாராட்ட வேண்டும். இவருக்கு முன் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித்தை, வயதான காலத்திலும் இந்த அயோக்கியர்கள் என்ன பாடு படுத்தினார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். மத்திய அரசு திட்ட நிதியில் கட்டப்பட்ட கழிவறைகளின் உறுதித் தன்மையை சோதனையிடச் சென்றவரை, ஒரு பெண் குளித்துக் கொண்டிருக்கும் போது எட்டிப் பார்த்தார் என்ற ரீதியில் மிகக் கேவலமான முறையில் தங்களது ஊடகங்களை வைத்து பிரச்சாரம் செய்த அயோக்கியர்கள் நிறைந்த களம் இது. இந்தக் களத்தில் ஆளுநராக ஆர் என் ரவி வந்தபோது, இவர் எப்படி சமாளிக்க போகிறார் என்ற சந்தேகம் நமக்கும் எழவே செய்தது. 

rn ravi in thiruppullani - 2026
#image_title

ஆனால் பொறுப்பாக, பொறுமையாக, நிகழ்வுகளைக் கையாண்டதில் ஆர் என் ரவி மக்கள் உள்ளங்களை வெகுவாகவே வென்றார். 

தமிழக அரசின் கண்களில் விரலை விட்டு ஆட்டியதில் ஆளுநரின் பதவி என்பது வெறும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல என்பது வெளித் தெரிந்தது. தமிழக அரசியல் சக்திகள், தங்கள் ஊடகங்களை வைத்துக்கொண்டு ஒன்றிய அரசு என பிரச்சாரம் செய்து இந்திய தேசியத்தில் இருந்து தனித்து செயல்பட்டு அச்சுறுத்திய போதெல்லாம், அதற்கு சரியான பதிலடி தந்தவர்.  பிரிவினைவாதிகளுக்கு தமிழக அரசு துணைபோவது போலச் செயல்பட்ட போதெல்லாம், அதை ஓர் இந்தியனாக எதிர்கொண்டு சரியான திசைக்கு திருப்ப முயன்றவர். 

தமிழக அரசியல் களத்தில் அவமானப்படுத்தப்பட்ட போதும்  அவற்றை தாங்கிக் கொண்டு, பொறுமையாக விஷயங்களை அணுகினார்.  

தமிழ் தமிழ் என்று மொழியின் மீது ஏதோ பற்று கொண்டவர்களைப் போல அரசியல் அலட்டல்களையும் ஆர்ப்பாட்டங்களையும் செய்து வந்த  ஆளும் தரப்பின் மத்தியில்,  உண்மையாகவே தமிழ் மொழியின் மீது ஈடுபாடு கொண்டு  ஆளுநர் மாளிகையின் கதவுகளை இலக்கியவாதிகளுக்கு திறந்து விட்டு தமிழ் வளர்ச்சியில் தன் பங்கை சரியாக செலுத்தினார். தமிழ் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள்  பலரை ஆளுநர் மாளிகைக்கு வரவழைத்து கௌரவித்தார்.  தமிழில் செம்மையாகப் பல புத்தக முயற்சிகளை ஆதரித்தார். 

isha yoga rn ravi participated - 2026

முக்கியமாக இதற்கு முன்பு இருந்த ஆளுநர் புரோகித்தைப் போல் பல்கலை., துணை வேந்தர் நியமனங்களில் ஊழலற்ற நடைமுறையை கொண்டு வர பெரிதும் துணை நின்றார்.  

இந்த விவகாரத்தில் தமிழக ஆட்சியாளர்கள் எத்தனையோ குட்டிக்கரணம் அடித்தும்  நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி உலுக்கிய போதும், நீதியை தங்களுக்கு சாதகமாக வளைத்த போதும் உறுதியாக நின்று  உண்மை நின்றிட பாடுபட்டார்  ஆர்.என்.ரவி.

சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பி வைக்கும் பரிந்துரையை ஆளுநர் எவ்வளவு காலத்துக்கு நிறுத்தி வைக்கலாம் என்பதை இந்திய அளவுக்கான சட்டப் பிரச்சினை ஆக்கி குடியரசுத் தலைவர் – உச்ச நீதிமன்றம் என விளக்கங்களை வெளியிடும் அளவுக்கு தேசிய அளவிலான தீர்வுக்கு வழி வகுத்தார். 

tn governor ravi in vallalar vllage - 2026

தமிழகத்தின் பாரம்பரிய கலை வரலாற்று பொக்கிஷங்களை எந்தவித தயக்கமும் இல்லாமல் ஒவ்வொரு ஊராகச் சென்று நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று பலரை ஊக்குவித்து பல அமைப்புகளையும் உயிர் கொடுத்து கை தூக்கி விட்டார்.  அவ்வாறு, ஆளுநர் பரவலான மக்களை சென்றடைந்தார். 

இத்தகைய ஒரு சிறந்த நபர், நம் தமிழகத்தை விட்டுச் செல்வது நமக்கெல்லாம் சற்று வருத்தம் அளிக்கவே செய்கிறது. 

தமிழக அரசியல் அனுபவம், அவருக்கு மனக்கசப்பையே அளித்திருக்கும். என்றாலும் பொறுமை இழக்காமல், தமது ஐபிஎஸ்., என்ற கடந்த கால கரடுமுரடு அனுபவங்களை ஒதுக்கித் தள்ளி மென்மையான மனிதராகவே நிகழ்வுகளை அணுகினார். 

தன்னால் ஏற்க முடியாத சர்ச்சைக்குரிய மசோதாக்களைத் தவிர, மற்ற அனைத்து மசோதாக்களுக்கும் உடனுக்குடன் ஒப்புதல் வழங்கினார். முக்கியமாக, ஆளுநர் உரைகளின் போது அவர் காட்டிய உறுதிப்பாடு வியக்கத்தக்கது. உண்மைக்கு மாறானது,  தேசியத்துக்கு எதிரானது என்று அவர் கருதிய வாசகங்களை  கவர்னர் உரைகளின் போது அப்படியே வாசிப்பது தர்மசங்கடமானது என்பதை உணர்ந்து, அதைத் தவிர்த்தது  குறிப்பிடத்தக்க செயல்பாடுதான்.  அந்த வகையில் ஒரு முன்னுதாரணத்தை அவர் ஏற்படுத்தி இருக்கிறார். 

1083247 ravi33 - 2026

இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் அவர் சட்டசபையிலிருந்து வெளியேறியபோது, பின்னாலிருந்து ஓர் அமைச்சர்  ‘போய்யா’ என்ற மோசமான உடல் மொழியில் காட்டிய சைகையை இந்தத் தமிழகம் பார்த்தது.  அப்போதும் உடனடி அரசியல் எதிர்வினை ஆற்றாமல் தனது போது பதவிக்கு உரிய கௌரவத்தை காப்பாற்றினார். 

உயர் பதவிகளில் இருப்பவர்களிடம் இப்படிப்பட்ட முதிர்ச்சியைக் காண்பது அரிது. 

ஆர் என் ரவி போன்றவர்களை தமிழகமும் தமிழக மக்களும் தான் தவற விடுகிறார்கள்.  தேர்தல் அறிவிக்கப்பட்ட இந்த நேரத்தில்  ஆளுநர் ரவியின் செயல்பாடு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தமிழகத்தில் உள்ள தேசியவாதிகளுக்கு தெரிந்திருக்கிறது! அதனால் தான் இந்த நேரத்தில் அவர் மாற்றம் தேவையா என்கின்ற ஒரு சர்ச்சையையும் அவர்கள் முன்வைத்து வருகிறார்கள்.  அதற்காக உள்துறை அமைச்சகத்துக்கும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். அது நாம் புரிந்து கொள்ள தக்கதே.  எனினும் தமிழகத்தை விட மிக மோசமான நிலையில் இருக்கும் மேற்கு வங்கத்திற்கு அவரது சேவை மிக முக்கிய தேவை என்பதை மத்திய அரசு உணர்ந்து இருப்பதையே இந்தப் இடமாற்றம் காட்டுகிறது. 

வரும் காலத்தில்  பாரத அரசின் குடியரசுத் தலைவராகவே பதவி வகிக்கும் அளவுக்கு நற்தகுதி அவருக்கு இருக்கிறது. அவரது எதிர்காலம் மட்டுமல்ல, நம் நாட்டின் எதிர்காலமும் அதன் மூலம் சிறப்பாக அமைய வாழ்த்துவோம்!

சங்கீதா குறிப்பிட்ட நடிகை இவர்தானாம்! விஜய் ‘வீம்பு’!

vijay sangeetha thrisha - 2026

ஏ.ஜி.எஸ். தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும், த்ரிஷாவும் ஒரே காரில் சென்று பங்கேற்றனர். இருவரும் ஒரே நிற உடையில் பங்கேற்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

முன்னதாக, கடந்த மாதம் ஒரு பேட்டியில் தமிழக பாஜக., தலைவர், விஜய் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, “விஜய் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். அவர் திரிஷாவை விட்டு வெளியே வர வேண்டும்” என்றார். அதற்கு கண்டனங்கள் பல எழுந்தன. பாஜக.,வினரே கண்டனங்களைத் தெரிவித்தனர். த்ரிஷாவும் தன் பங்குக்கு அரசியலில் இல்லாத என்னை அரசியல் கருத்துக்கு இழுக்காதீர் என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், கடந்த வாரம் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது விவாகரத்து மனுவில் குறிப்பிட்டிருந்த விஷயம் அப்போது பேசுபொருளானது. 

அவர் தாக்கல் செய்த மனுவில் பிரபல நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருந்து வந்தார். அதனை தான் 2021 ஆம் ஆண்டு தான் கண்டுபிடித்தேன். அதன் பிறகு அந்த நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை முறித்துக் கொள்வதாக எனக்கு வாக்குறுதி அளித்தார். ஆனாலும் விஜய் தொடர்ந்து அந்த நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்தார். இதனால், தான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். பலமுறை கேட்டும் விஜய் அந்த உறவில் தொடர்ந்து வந்தார். கடந்த 2021 முதல் விஜய் தன்னை உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் காயப்படுத்தினார். அதுமட்டுமின்றி 2021 இல் இருந்து என்னை தனியாக வாழுமாறு நிர்ப்பந்தித்தார். விஜயுடன் அடிக்கடி வெளிநாட்டு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை அந்த நடிகை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியது.

என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியிட்டு வருவது எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் அவமானத்தை தருகிறது. திருமணத்தை மீறிய அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார். தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கில் இரண்டாவது மனுதாரராக சேர்ப்பேன். எனக்கு நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள திருமணத்தை மீறிய உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வழங்குவேன் என்று சங்கீதா அந்த மனுவில் குறிப்பிட்டார்.

சங்கீதா தன் மனுவில் ஒரு நடிகையுடன் விஜய்க்கு தொடர்பு என்றுதான் குறிப்பிட்டிருந்தார். அந்த நடிகை யார் என்று அவர் அப்போது சொல்லவில்லை என்றாலும், நடிகை திரிஷா மட்டுமே விஜய்யுடனான படங்களை சமூகத் தளங்களில் பகிர்ந்து வந்ததால் அது வெளிப்படையாகத் தெரிந்தது. இந்நிலையில், விஜய் ஆமாண்டா, நான் அப்படித்தான் என்று வீம்புக்கு செய்வதைப் போல், திரிஷாவுடன் நிகழ்ச்சியில் ஒன்றாகக் கலந்து கொண்டு மேலும் பரபரப்பைக் கொளுத்தியுள்ளார்.

விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் ஒரு சமூகத் தளக் கருத்து, தஞ்சை ராஜேஷ் என்பவர் பெயரில் வைரலானது. அக் கருத்து…

விஜய்க்கு ஒரு குணம் உண்டு… எதை சொல்லி மற்றவர்கள் விமர்சிக்கிறார்களோ… “ஆமாண்டா.. நான் அப்படித்தான் பண்ணுவேன்.. உன்னால் என்ன பண்ண முடியும்” என்ற முரட்டுத்தனம்…

முன்பு ஒரு முறை எச் ராஜா அவர்கள் இவரது பெயர் ஜோசப் விஜய் என்று சொன்னதும்…

கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தன்னுடைய பெயர், லெட்டர்பேட் எல்லாவற்றிலும் “விஜய்” என்று மட்டும் குறிப்பிட்டு வந்தவர்… அடுத்த நாளே “ஜோசப் விஜய்” என்று புதிய லெட்டர்பேடில் அறிக்கை வெளியிட்டார்.,..

அதே போல் இப்போது இவர் மனைவியை துன்புறுத்தி, தனிமையில் விட்டுவிட்டு திரிஷா வுடன் திருமணம் மீறிய உறவில் இருப்பதாகவும்.. இந்த புகைப்படங்கள் வெளியாகி தனக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் திருமதி சங்கீதா விவாகரத்து கோரிய செய்திகள் பொது வெளியில் பேசப்படுவதால்….

இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரிஷாவுடன் சேர்ந்து வந்து கலந்து கொண்டு… “ஆமாம்டா.. நான் இந்த நடிகை உடன் தான் இருக்கிறேன்.. உங்களால் என்னடா செய்ய முடியும்” என்ற மெசேஜை சொல்லி இருக்கிறார்…

தேர்தல் அரசியலில் இறங்கி விட்டு… பல்வேறு வயதினரின், அனைத்து பாலினத்தவரின் ஓட்டுகளையும் பெற வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் விஜய்.. இப்படி கள்ள உறவை கெத்தாக வெளியே சொல்லி சவால் விடும் துணிச்சல் எதனால் வந்தது…

சமூக வலை தளங்களில்…

“அவருக்கு தங்கச்சியா இருப்போம் அக்காவா இருப்போம் பொண்டாட்டியா கூட இருப்போம்” என்றும்…

“குப்பை அள்ளுறவனே 4 பொண்டாட்டி வைக்கும் போது காசு வைத்திருக்கும் அவர் 10 பொண்டாட்டி வச்சிருந்தாலும் தப்பில்ல” என்றும்…

இடுப்பில் குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு “என் குழந்தையை விட எனக்கு அவரைதான் பிடிக்கும்” என்றும்,

“என் புருசனை விட அவரைதான் ரொம்ப பிடிக்கும்.. ஹாஹாஹா ” என்றும்…

விஜய் என்ன செய்தாலும் அதை ஆதரிக்கும் வெறி பிடித்த அழிவு சக்தி கூட்டம் தன்னிடம் இருக்கும் துணிச்சலில் தான் அவர் இதை எல்லாம் செய்கிறார்…

அவர் ஆரம்பத்தில் இருந்தே.. தன்னுடைய ஒவ்வொரு அசைவிலும் பேச்சிலும் தனது ரசிகர்களை மட்டும் engage செய்யும் விதமாக செயல்பாடுகிறார்… ரசிகர்களை தாண்டி பொதுமக்கள் என்று ஒரு சமுதாயம் இருக்கிறது… அவர்களின் நன் மதிப்பையும் ஆதரவையும் பெற்றால் தான் அரசியலில் அங்கீகாரம் பெற முடியும் என்ற உண்மையை அவர் ஏற்கவில்லை… தமிழ்நாட்டில் உள்ள எல்லா பெண்களும் தன்னுடைய ரசிகர்கள் என்று ஆழமாக நம்புகிறார்…

ஒவ்வொரு வீட்டிலும் உள்ள இளைஞர்கள் எல்லாரும் தன்னுடைய ரசிகர்கள் என்று உறுதியாக நம்புகிறார்…

அதனால்… தான் என்ன செய்தாலும் அதை அவர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பி..

திருமதி சங்கீதா மற்றும் அவர்களது மகன், மகள் ஆகியோரின் மன வலியை வேதனையை மேலும் மேலும் அதிகரிக்கும் விதமாகவும், பொது வெளியில் தன்னை விமர்சிப்பவர்களிடம் சவால் விடும் வகையிலும் இப்படி தன்னுடைய ஆணவத்தை வெளிப்படுத்துகிறார்…

தன்னுடைய மனுவில் நடிகையின் பெயரை கூட குறிப்பிடாமல் கண்ணியம் காத்துள்ளார் திருமதி சங்கீதா.. இது போல இவர் வேண்டுமென்றே அவரது வயிற்றிரிச்சலை கொட்டினால்… நாளைக்கே சங்கீதா மீடியா முன்பு வந்து நின்று தன்னுடைய மனக்குமுறலை கொட்டி அழுதால் விஜய் என்ன செய்வார்..

தேர்தல் அரசியலில் இதெல்லாம் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்… ரசிகரல்லாத மற்றவர்களின் வெறுப்புக்கும் அருவருப்புக்கும் ஆளாவார்…

இது நடிகர் வடிவேலுக்கு நேர்ந்ததை போல.. தேர்தலில் தோற்ற பிறகு மீண்டும் நடிக்க வந்தால்… அப்போதும் இந்த அருவருப்பால் ஒதுக்கிய மக்களின் ஆதரவை பெற முடியாமல் சினிமாவில் இரண்டாவது இன்னிங்சும் தோல்வி அடைய வாய்ப்புள்ளது…

அகத்தால் அழிந்தான் ராவணேஸ்வரன்.. எண்ணத்தால் கெட்டான் துரியோதனன்..

ஆணவம் அறிவுக்கு சத்ரு என்பதை விஜய் இப்போது புரிந்து கொள்ள மாட்டார்.

இன்று சனி பெயர்ச்சி: சிறப்பு ரயில்கள் இயக்கம்

railway news - 2026
#image_title

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் வெளியிட்ட அறிக்கை: காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா இன்று மார்ச் 6இல் நடைபெறுகிறது.

இந்த விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காகவும், கூட்டநெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை வெள்ளி, சனிக்கிழமைகளில் தெற்கு ரயில்வே இயக்குகிறது.

விழுப்புரத்திலிருந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் (மார்ச் 6, 7) காலை 9.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் – நாகப்பட்டினம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06133), பிற்பகல் 1.05 மணிக்கு நாகப்பட்டினம் ரயில் நிலையம் சென்றடையும்.

எதிர்வழித்தடத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (மார்ச் 6, 7) பிற்பகல் 1.20 மணிக்குப் புறப்படும் நாகப்பட்டினம் – விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06134), மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.

சிறப்பு ரயில்கள் பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், கடலூர் துறைமுகச் சந்திப்பு, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை, பேரளம், திருநள்ளாறு, காரைக்கால், நாகூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

T20 WC 2026: இறுதிப் போட்டியில் இந்திய அணி!

icc t20 worldcup - 2026

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி
அரையிறுதி ஆட்டங்கள் 05.03.2026

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          முதல் அரையிறுதி ஆட்டம் 04.03.2026 அன்று கொல்கொத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. பூவாதலையா வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாடவந்த தென் ஆப்பிரிக்க அணியின் மட்டையாளர்கள் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறினார்கள். முதலிரண்டு விக்கட்டுகள் இரண்டாவது ஓவரில் விழுந்தன.

தொடக்க மட்டையாளர்கள் எய்டன் மர்க்ரம் (20 பந்துகளில் 18 ரன்), க்விண்டன் டி காக் (8 பந்துகளில் 10 ரன்), ரியன் ரிக்கிள்டன் (பூஜ்யம் ரன்), டேவிட் மில்லர் (6 பந்துகளில் 6 ரன்) என நிலைத்து ஆட்டமல் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். டிவால்ட் ப்ருவிஸ் (27 பந்துகளில் 34 ரன்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (24 பந்துகளில் 29 ரன்) மற்றும் மார்கோ யான்சன் (30 பந்துகளில் 55 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.

          இரண்டாவதாக ஆடவந்த நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. அந்த அணியின் டிம் செய்ஃபர்ட் (33 பந்துகளில் 58 ரன்), ஃபின் ஆலன் (33 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன், 10 ஃபோர், 8 சிக்சர்) மற்றும் ரவின் ரச்சீந்திரா (11 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 13 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடி 12.5 ஓவர்களில் 173 ரன் எடுத்து நியூசிமாந்து அணியை 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். ஃபின் ஆலன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்தியா அபார வெற்றி

          மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் மட்டையாடவந்த இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக ஷர்மா (9 ரன்) இந்த ஆட்டத்திலும் குறைந்த ரன்னுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் மூன்றாவது ஓவரில் ஒரு கேட்ச் கொடுத்து அவுட் ஆக இருந்தார்.

இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் ப்ரூக் அந்த சுலபமான கேட்சை பிடிக்கத் தவறினார். அவர் 14ஆவது ஓவர் வரை விளையாடி 42 பந்துகளில் 89 ரன் அடித்தார். அதில் 8 ஃபோர்கள் 7 சிக்சர்கள். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் அதிரடியாக ஆடினர். இஷான் கிஷன் (18 பந்துகளில் 39 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்), ஷிவம் துபே (25 பந்துகளில் 43 ரன், 1 ஃபோர், 4 சிக்சர்) (இவர் சற்று முன்னதாக மட்டையாட அனுப்பப்பட்டார்), ஹார்திக் பாண்ட்யா (12 பந்துகளில் 27 ரன்), திலக் வர்மா (7 பந்துகளில் 21 ரன்)என அனைவருமே அதிரடியாக ஆடினர். சரியாக விளையாடாதவர், அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் (6 பந்தில் 11 ரன்) தான். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 253 ரன் எடுத்தது.

          இரண்டாவதாக ஆடவந்த இங்கிலாந்து அணி பில் சால்ட் (5 ரன்), ஜாஸ் பட்லர் (25 ரன்) மற்றும் ஹாரி ப்ரூக் (7 ரன்) ஆகியோரை பவர் பிளே ஓவர்களுக்குள் இழந்து 64 ரன் மட்டுமே எடுத்தது. ஜேகப் பெதல் (48 பந்துகளில் 105 ரன், 8 ஃபோர், 7 சிக்சர்) சிறப்பாக ஆடினார். 15 ஓவர்கள் வரை இங்கிலாந்து அணி சிறப்பாகவே ஆடியது.

ஆனால் கடைசி 5 ஓவர்களில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி, இரண்டு விக்கட்டுகளையும் எடுத்து, ரன் ரேட்டைக் கட்டுப்படுத்தினர். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுகள் இழப்பிற்கு 146 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர் வீசி 64 ரன் கொடுத்தார். இது ஒரு மோசமான சாதனையாகும். ஆட்ட நாயகனாக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டார்.

          இறுதி ஆட்டம் இந்தியம் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் 08.03.2026 ஞாயிற்றுக்கிழமை இரவு 0700 மணிக்கு நடைபெறும்.      

மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! 

TN Governor RN Ravi
TN Governor RN Ravi

தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றம்!

  • தமிழ்நாடு ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்காளத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கேரள மாநில ஆளுநராக உள்ள ராஜேந்திர விஷ்வநாத் ஆர்லேகர், தமிழ்நாடு ஆளுநரின் பொறுப்புகளை கூடுதலாக மேற்கொள்வார்.
  • இமாச்சலப் பிரதேச ஆளுநராக இருந்த சிவ் பிரதாப் ஷுக்லா தெலங்கானா மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தெலங்கானா ஆளுநராக இருந்த ஜிஷ்னு தேவ் வர்மா மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.
  • நந்த் கிஷோர் யாதவ் நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சயீத் அதா ஹஸ்நைன் பீகார் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • லடாக் துணைநிலையாட்சியராக இருந்த கவிந்தர் குப்தா, இமாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • டெல்லி துணைநிலையாட்சியராக இருந்த வினய் குமார் சக்சேனா, லடாக் துணைநிலையாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • முன்னாள் இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து, டெல்லி துணைநிலையாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா செய்ததை அடுத்து ஆளுநர்கள் வரிசையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அனந்த் போஸுக்கு பதிலாக தமிழக ஆளுநராக உள்ள ரவீந்திர நாராயண் ரவி, மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை உள்துறை அமைச்சர் தம்மிடம் கூறியதாக மம்தா பானர்ஜி அதிர்ச்சிகரமாக சமூகத் தளங்களில் பதிவு செய்துள்ளார்.

மேற்கு வங்க சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கே அரசியல் களம் விறுவிறுப்பாக உள்ளது. இந்நிலையில் அந்த மாநில ஆளுநராக உள்ள சி.வி ஆனந்த போஸ் தனதுபதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போது தில்லியில் இருக்கும் அவர், ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் மேற்கு வங்க ஆளுநராக சுமார் மூன்றரை ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். தாம் ராஜினாமா செய்ததை உறுதி செய்துள்ள ஆனந்த போஸ், ஆளுநர் பதவியில் போதுமான காலம் இருந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

1977ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான அவர், கடந்த 2022 நவ.23ல் மேற்கு வங்கத்தின் 21வது ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவருக்கும் முதல்வர் மம்தாவுக்கும் தொடக்கம் முதலே மோதல் போக்கு இருந்து வந்தது.

இது தொடர்பாக மம்தா வெளியிட்ட அறிக்கையில்,

மேற்கு வங்க ஆளுநர் பதவியில் இருந்து ஆனந்த போஸ் திடீரென ராஜினாமா செய்தது அதிர்ச்சியளிக்கிறது. அவரது ராஜினாமாவுக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை. ஆனாலும், தற்போதைய சூழலில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சில அரசியல் விருப்பங்களை பூர்த்தி செய்ய ஆளுநருக்கு மத்திய உளதுறை அமைச்சரிடம் இருந்து சில அழுத்தம் ஏற்பட்டு இருந்தால் எனக்கு ஆச்சர்யம் இல்லை.

தமிழக ஆளுநர் ஆர்என் ரவி மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுஉள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் என்னிடம் கூறியுள்ளார். இது குறித்து என்னிடம் அவர் ஆலோசிக்கவில்லை. இத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவை குறைத்து மதிப்பிடுவதோடு, நமது கூட்டாட்சி அமைப்பின் அடித்தளத்தையே தாக்குகின்றன.

மத்திய அரசு கூட்டாட்சிக் கொள்கைகளை மதிக்க வேண்டும். ஜனநாயக மரபுகளையும், மாநிலங்களின் கண்ணியத்தையும் சிதைக்கும் ஒரு தலைபட்ச முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் – என்று மம்தா கூறியுள்ளார்.

சனாதன தர்மத்தில் வேறுபாடுகள்; சர்ச்சைகள்; தீர்வு என்ன?

sankarar thirumoolar vinayakar - 2026

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா 
தமிழில்: ராஜி ரகுநாதன்


சனாதன தர்மத்தில் கருத்து வேறுபாடுகளும் வாதங்களும், விவாதங்களும் எண்ணற்றவை. அவற்றைத் தவறு என்று கூறுவதற்கில்லை. பன்முகத் தன்மை என்பது மனித ஐயல்பு. அது படைப்பின் இயற்கை. இன்னும் கூற வேண்டுமானால், மதங்கள், கோட்பாடுகள், துறைகள் அனைத்திலும் பன்முகத் தன்மை காணப்படுகிறது.

பல யுக வரலாறு கொண்ட நம் சரித்திரம் பற்றியும் பல கருத்துகள் நிலவுகின்றன. சில ஆயிரம் ஆண்டுகால வரலாறே கொண்ட வெளிநாட்டவர், பாரத தேசத்திற்கு இருக்கும் கல்பங்கள், யுகங்கள், பண்டைய வரலாறு போன்றவற்றைப் புரிந்து கொள்ள இயலாமல், அவையெல்லாம் கற்பனை என்றும் பொய் என்றும் கூறி வருகின்றனர். அதனால் நம் பாரம்பரியம் எல்லாம் கட்டுக்கதையாக மாறிப் போனது.  

நட்சத்திரங்களின் நிலை, கிரகங்களின் சஞ்சாரம் போன்றவற்றின் உண்மையான வரலாற்றை, வானியல் அறிவின் அடிப்படையில் வழங்கினார் அறிஞர் ஸ்ரீ கோட்ட வேங்கடாசலம். அவரைப் போன்ற சான்றோர் பழமையான நூல்கள், சாசனங்கள், கட்டடங்களின் ஆராய்ச்சியில் ஈடுபட்டுப் படைத்த ‘பாரததேச சரித்திர’ த்தை படித்து, அதன் அடிப்படையில் உண்மையை அறியாமல், வெளிநாட்டு மதக் கண்ணோட்டத்தின் யூகங்களை சுதந்திர இந்தியாவிலும் ஏற்பது வருந்தத்தக்கது.   

நாத்திகர்களின் மனப்பான்மை ஒரு புறம் இருக்கட்டும். ஆத்திகர்களான அறிஞர்களும் கல்வி நிலையங்களுக்குப் பரித்துரைத்த வரம்புக்குள் இந்த நவீன முறையைப் புகுத்தி,   கிபி, கிமு, பிசி, சிஇ, எடி, என்பவற்றின் எல்லையிலேயே நம் பழமையை அமர்த்தி இலக்கியம், கல்வி போன்றவற்றின் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இத்தகைய பார்வையால் ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாறு மறைக்கப்பட்டு, தவறாக சித்திரிக்கப்படுகிறது. இது பல வேறுபட்ட கருத்துகளுக்கு வழிவகுக்கிறது.  

‘பண்டைய காலத்தில் யாகங்கள் இருந்தன. ஆனால் கோவில்கள் இல்லை விக்ரக வழிபாடு வேத காலத்தில் இல்லை. பிற்காலத்தில் ஏற்பட்டன. வேதங்கள் வேறு புராணங்கள் வேறு. அவை ஒன்றுகொன்று தொடர்பற்றவை. அவற்றின் காலங்கள் வெவ்வேறு’. இப்படிப்பட்ட பிரித்துப் பார்க்கும் முறை தவறான வரலாற்றுக் கணக்கீட்டின் மூலம் உருவான பிழை. இது சனாதன தர்மத்தை முழுமையாக அறிய முடியாத சூழலை உருவாக்குகிறது.

கோட்பாடுகளை அனுசரித்து பாரதத்தின் சமுதாயக் கட்டமைப்பைப் பற்றி முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. உழைப்புக்கான சிறந்த பிரிவுகளோடும், பரஸ்பரம் கௌரவத்தோடும் பல்வேறு வாழ்கை முறைகளை உருவாக்கிய வர்ண அமைப்பைச் சிதைத்து, வக்கிரமாக விமர்சித்து, அதை ஜாதிப் பாகுபாடு என்று சித்திரிப்பது இன்னுமொரு துரதிருஷ்டம்.

வழிபாடு, உபாசனை போன்றவற்றின் வசதிக்காக ஒரே பரமாத்மாவை வெவ்வேறு பெயர்கள், வடிவங்கள், ஆகமங்களுடன் வழிபடும் சைவம், வைணவம், சௌரம், சாக்தம், காணபத்யம், கௌமாரம் என்ற சம்பிரதாயகளாக ஏற்படுத்தினர். அவற்றைத் தனித்தனியாக பார்த்து, அவற்றின் இடையே குறைகளையும் முரண்பாடுகளையும் ஏற்படுத்துவது இன்னொரு கவலை தரும் அம்சம். அவை ஒவ்வொன்றிலும் மேலும்  பல்வேறு வேறுபாடுகளைப் புகுத்தினர்.  

வெவ்வேறு ஆகம வழிமுறைகளின் படி வைணவத்தில் வேறுபட்ட சித்தாந்தங்கள். அதே போல் ராதாவையும் கிருஷ்ணரையும் வணங்கும் வைணவம் ஒன்று. அதை ஏற்காத  வைணவம் இன்னொன்று. சைவ மதத்தில் ஸ்ரோதி சைவம், வீரசைவம், பாசுபத சைவம், காஷ்மீர சைவம் என்ற வேறுபாடுகள். சாக்தத்தில் வாமாசாரம், தக்ஷிணாசாரம், கௌளாசாரம் போன்றவை. வைதிகம், தாந்திரிகம் என்று வேறுபாடுகள். இது வைதிகமா? பௌத்தமா? என்று இன்னொரு தகராறு. அதேபோல் காணாபத்யத்திலும், சௌரத்திலும்  வேறுபாடுகள். அதற்குள் மற்றொரு அறிஞர் இருந்தாற்போலிருந்து சிவன், விஷ்ணு, ராமன், கிருஷ்ணன் எல்லாம் புராண கற்பனைகள். வேதங்களின்படி இந்திரன்தான் உயர்ந்த கடவுள் என்று விவாதித்து அதற்கென்று ஒரு சம்பிரதாயத்தைப் புகுத்தினார்.

இவற்றைத் தவிர  உருவமற்ற நிர்குண பிரம்மவாதிகள் ஒரு புறம். உண்மையில் இவை எல்லாவற்றையும் விட யோக மார்க்கமே சிறந்தது என்று மற்றொரு கருத்து உள்ளது. இவை தவிர ஸ்மார்த்த வழியில் மற்றொரு வழிபாட்டு முறை உள்ளது. சுருதி, ஸ்ம்ருதி புராணங்களைக் கொண்டு சிவன், விஷ்ணு, சக்தி, சூரியன், கணபதி எல்லோரையும்  ஒன்றாக வழிபடுவதே ஸ்மார்த்தம். அதுவே பஞ்சாயதன வழிபாட்டு முறை. இதுவும் சைவம், வைணவம் போன்று பழமை வாய்ந்ததே. ‘ஸ்மார்த்தம் சைவம் அல்ல’ என்று இன்று நிறைய பேருக்குத் தெரியாது. அது ‘அபேத’ சித்தாந்தம்.

இந்த வழிமுறையை ஆதிசங்கரர் எடுத்து வந்தார் என்று சிலரும், இல்லை.   வித்யாரண்யர் அறிமுகம் செய்தார் என்று சிலரும் கூறுகின்றனர். ஸ்மார்த்த குடும்பத்தில் ஆதிசங்கரர் தோன்றினார் என்று வரலாறு கூறுகிறது. அவர் பெயரும், அவருடைய பெற்றோரின் பெயர்களும் அதையே குறிப்பிடுகின்றன. ஸ்மார்த்தத்திற்கு சம்பிரதாயமான பஞ்சாயதன வழிபாட்டு முறையை ஆதிசங்கரரோ, வித்யாரண்யரோ அறிமுகம் செய்தார் என்பது யூகம்தான்.

ஒருவேளை இருவரில் ஒருவர் அறிமுகம் செய்திருந்தாலும், சாஸ்திரத்திற்குப் புறம்பில்லாத ஒருங்கிணைந்த முறையாக இருப்பதால் அதனை நல்ல சம்பிரதாயமாக ஏற்றுக் கடைப்பிடிக்கலாம்.

சைவம் அல்லது வைணவம் இரண்டில் ஒன்றுதான் பெரியது என்ற கருத்து  பழமையானது என்று கூற இயலாது. மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் புராணங்களிலும் இதுபோன்ற வார்த்தை ஜாலங்களைக் காண முடியாது.

இஷ்ட தெய்வமாக ஒருவரை வணங்கினாலும் பிற தெய்வங்களை வெறுக்காமல் வணங்குவதை அவற்றில் பார்க்கிறோம். சைவமும் வைணவமும் பரஸ்பரம் வெறுப்பின்றி வளர்வதற்காக முனிவர் பெருமக்கள் முயற்சித்துப் பல நூல்களைப் படைத்தனர்.

துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் என்று மூன்று கோட்பாடுகள் உள்ளன. இந்த மும்மதங்களும் சங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியார் ஆகிய மூவாரல் தோற்றுவிக்கப்படவில்லை. அவர்களுக்கு முன்னரே ‘அபேதம், பேதாபேதம், பேத வாதம்’ என்ற பெயர்களோடு அவை இருந்தன. இந்த மூவருக்குமே வேதங்களும் புராணங்களும்  பிரமாணங்கள். சித்தாந்தம் மட்டுமே மாறுபட்டது. இந்த மூன்றையும் ஆன்மீக சாதனை வரிசையில் அழகான மூன்று தங்குமிடங்களாக அற்புதமாக கருத்தொற்றுமை செய்த மகநீயர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

இந்த சித்தாந்தங்களில் காணப்படும் முரண்பாடுகளை பரஸ்பரம் மறுத்தும், விவாதித்தும் பல புத்தகங்களின் சுமை உருவாகியுள்ளது. அவை அறிஞர்களின் வாக்குத் திறமைக்கு  உதவுமே தவிர, சாமானியர்களின் ஆன்மிக சாதனைக்குப் பயனளிக்காது. அவை அவர்களுக்குச் சற்றும் புரியாத வகையில் இருக்கும் கட்டுரைகள்.

முடிந்த முடிவான பரமார்த்தம் அத்வைதமே என்றாலும், நடைமுறையில் துவைதத்தைத்  தவிர்க்க முடியாது. அதனால்தான் நடைமுறையில் கர்மாநுஷ்டானம், உபாசனை, வழிபாடு போன்றவை துவைத நிலையில் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால் அத்வைதத்தை மதிக்கும் சிலர், மனத்தளவில் அத்வைதத்தைக் கடைப்பிடித்து, ‘சோஹம்’ என்ற உணர்வுடன் ஆன்மீக சாதனை செய்ய வேண்டும் என்றும், செயலில் அத்வைதத்தைக் காட்டுவது கூடாதென்றும் கூறுகின்றனர்.

சாத்விக இயல்புள்ளவர், சைவத்திலோ, வைணவத்திலோ இருந்துகொண்டு, தம்  சம்பிரதாயத்தைக் கடைப்பிடித்தாலும், பிற சம்பிரதயங்களையும் மதித்து நடந்து கொள்வர். அவர்கள் மூலம் ஒரு சமரசச் சூழல் சமுதாயத்தில் ஏற்படும். இந்துக்களில் பலர் அது போல் உள்ளனர். தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் அத்தகையவர்களின் எண்ணிக்கை அதிகம். ஹரி, ஹர வேறுபாட்டையும் விவாதங்களையும் அங்கு அவ்வளவாகப் பார்க்க முடியாது. மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் மூன்று கோட்பாடுகளின் முக்கிய ஆதரவாளர்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

பீடங்களை எடுத்துக் கொண்டால், அங்கும் கணக்கற்ற வேறுபாடுகளும், சர்ச்சைகளும்  உள்ளன. சங்கரரின் காலத்தைக் குறித்து வெவ்வேறு முடிவுகள் காணப்படுகின்றன. ஸ்ரீகோட்ட வேங்கடாசலம் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு ஆராய்ந்து, காஷ்மீர், நேபாள் அரச வம்சங்களின் வரலாறு, பண்டைய கால கட்டிடங்கள், சாசனங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சங்கரரின் காலத்தை நிர்ணயம் செய்தார்கள்.

வெவ்வேறு நூலாசிரியர்கள் எழுதிய சங்கர விஜயங்கள் வேறுபட்ட கால நிர்ணயங்களையும், சம்பவ வேறுபாடுகளையும் கொண்டுள்ளது உண்மைதான் என்றாலும் அவற்றில் சங்கரரின் வரலாறு பற்றியும் பீடங்களை அமைத்தது பற்றியும் வேறுபாடு இல்லாத பொதுவான கருத்தைப் பார்க்க முடிகிறது.

சங்கரர் பீடங்களை நிறுவவில்லை என்ற கூற்று ஆதாரமற்றது. பீடங்களின் அமைப்பை உருவாக்கி தேசத்தின் நாற்புறங்களிலும் ரிஷிகளின் தர்மத்தை முழுமையாக்கிய தவ சக்தி நிறைந்தவர் ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதர். ஒவ்வொரு பீடத்திற்கும் அதற்கான  பிரமாணங்களும், பாரம்பரியமும் உண்டு. ஆனால் அந்தந்த பீடங்களின் சீடர்கள் என்று கூறிக் கொள்ளும் சில பிரிவினர் வேறுபாடுகளை எழுப்பி இடைவெளிகளைத் தோற்றுவித்துச் சண்டை மூட்டும் சூழல் உள்ளது.

அனைத்து சங்கர பீடங்களும் இருமை வாதங்களுக்கு அப்பாற்பட்ட சித்த புருஷர்களைக் கொண்ட, சிறந்த ஆச்சார்ய பரம்பரையோடு கூடியவை. இந்த பீடங்களின் மூலம் சங்கரரின் அத்வைத கோட்பாடு, வேத சாஸ்திர சம்ரக்ஷணம், வேத அறிஞர்களின் பராமரிப்பு, சமுதாய நல அமைப்புகள் போன்றவை பெரிய அளவில் செயல்பட்டு வருகின்றன. சிறந்த பாரம்பரியத்தைக் கொண்ட இந்த பண்டைய பீடங்களையும், அவற்றின் நற்செயல்களையும் மதித்து வாதங்களோ, சர்ச்சையோ இன்றி அந்தந்த ஆச்சார்யர்களை வணங்குவது ஆன்மீக சாதனை நோக்கம் கொண்ட தார்மீர்களின் இயல்பு.

இந்து மதத்தைக் கடுமையாகத் தாக்கி அழித்த பிற மதத்தவர், எந்த வித்தியாசமும் இன்றி ஹிந்து தர்மத்தைச் சேர்ந்த அனைவரையும் ஒன்றாகப் பார்த்தார்கள். ஆனால் ஹிந்துக்களான நாமோ நமக்குள் வேறுபாடுகளை வளர்த்துக் கொள்கிறோம். நாம் வேறுபாடுகளைக் களைந்து ஒருமைப்பாட்டை சாதிக்கா விட்டால் நம் அழிவுக்கு பிறருக்கு வாய்ப்பளித்தது போலாகிவிடும்.

இத்தனை முரண்பாடுகளும், பன்முகத்தன்மையும் கொண்ட ஹிந்து தர்மத்தை, இத்தகைய சர்ச்சைகளின் பின்னணியில் எவ்வாறு புரிந்து கொள்வது? எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?

உண்மையில் சுருதி, ஸ்ம்ருதி, புராணங்களில் இருக்கும் ஒருமைப்பாட்டை உணர வேண்டும். அவற்றில் தெளிவான சமரசமும், ஒருங்கிணைப்பும் உள்ளன.

எல்லா சம்பிரதாயங்களிலும் மகா புருஷர்கள், சித்தர்கள், யோகிகள் உள்ளனர். இவை அனைத்தையும் கவனித்து, ‘அநேகம் இணைந்த ஏகமாக’ ஹிந்து மதத்தை தரிசிப்பதே கடமை.

அவரவர் மரபுகளும், நூல்களும் அவரவருக்கு அடிப்படைச் சான்றுகளாக உள்ளன. ஒருவர் இன்னொருவரைக் குறைகூறுவதும், ஏளனம் செய்வதும், இழிவுபடுத்துவதும் தவறு.

யார் எத்தனை கடினமாக முயன்றாலும், பன்முகத்தன்மை கொண்ட வழிகள் இருப்பதை யாராலும் அகற்ற முடியாது. தம் மார்க்கத்தை மட்டுமே நிலைநிறுத்த இயலாது.

வாதங்களிலும் சச்சரவுகளிலும் வாழ்நாளை வீணடிக்காமல், கபடமின்றி, பக்தியோடு தம் தெய்வத்தையே அனைத்திலும் தரிசித்து, உத்தம சாதகர்கள் பரமார்த்தத்தைப் பெற முடியும். வாதங்களை விட ஆன்மீக சாதனைகள் உயர்ந்தவை.

(தலையங்கம், ருஷிபீடம், மார்ச் 2026)

பென் குரியன் சொன்னதும், மோடி செய்ததும்!

pm modi speech about operation sindoor - 2026

— பேராசிரியை லாரன் தகன் ஆமோஸ்
– தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார் –

1950 ல் இஸ்ரேலிய பிரதமர் பென் குரியன் அப்போதைய இந்திய ராஜ்ஜிய நடவடிக்கைகளுக்கு அப்பால் நெடுநோக்குடன் இந்தியாவை பார்த்தார். இந்தியா எதிர்காலத்தில் ஒரு மகத்தான சக்தியாக உருவெடுக்கும். இன்று தூங்கிக் கொண்டிருக்கும் அது ஒரு நாள் விழித்தெழும். அப்போது புதிய சர்வதேச சட்டங்களும் முறைமைகளும் உருவாகும். அவ்வாறு இந்தியா விழித்தெழும்போது இஸ்ரேல் ஏற்கெனவே இந்தியாவின் முன்பு அங்கீகாரம் பெற்றதாக, புரிந்து கொள்ளப்பட்டதாக தன்னை முன்னிறுத்த வேண்டும் என அவர் விரும்பினார்.

இந்தியா 1950 செப்டம்பர் 17 இஸ்ரேலை அங்கீகரித்த போது, அது அரசியல் ரீதியான அரவணைப்பாக இல்லாமல் உலக அரங்கில் இஸ்ரேலில் இருப்பை ஏற்றுக்கொண்ட யதார்த்தமாக இருந்தது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவான தனது வரலாற்று பூர்வமான நிலைப்பாட்டை இந்தியா மாற்றிக் கொள்ளவில்லை. மாறாக ஒரு கதவை திறப்பதாக அது அமைந்தது. 1950ல் திறந்த அந்த கதவு 1992 வரையிலும் நீண்ட தாழ்வாரத்துக்கு வழிவிட்டது. பின்பு, 2017-ல் உறுதியான தளமிடப்பட்ட அது 2026 ல் பாதை திரும்பி, வளைந்து செல்வதாக உள்ளது.

1992ல் இந்தியா – இஸ்ரேல் இடையே முழுமையான ராஜ்ஜிய உறவுகள் நிலை பெற்றன. 2017ல் மோடி, முதன் முதலில், அதுவரை மூடிய கதவுக்குள் இருந்த உறவை வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். ‘நிலைத்த உறவாக’ இருந்ததை 2026ல் உறுதியான லாபத்தை தரக்கூடிய முதலீடாக மாற்ற முயல்கிறார்.

இதுதான் அவரது சமீபத்திய இஸ்ரேல் விஜயத்தின் ஆழ்ந்த பொருள். இதுவரை தளவாடங்களை வாங்கும் உறவாக இருந்த நிலை மாறி, இனி அவ்வாறு இல்லாமல் வளர்ச்சி, உற்பத்தி, தொழில்நுட்பம், ஒத்துழைப்பு என்று கூட்டாளியாக மாறக்கூடிய கட்டமைப்பை உருவாக்குவதாக அமைந்துள்ளது. இந்த மேம்பட்ட உறவு, விரிவான தளத்தில் ஏற்பட்டுள்ள புரிதல், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப துறை சார்ந்த ஒப்பந்த ஆவணங்களில், அதிகார பூர்வ மொழியில், வெளிப்பட்டுள்ளது.

இந்த கோணத்தை இஸ்ரேலியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா இஸ்ரேல் மீது ‘காதலில் விழுந்து விடவில்லை’. அதுவொரு வலிமையான கருவியை வளர்த்தெடுக்கிறது. இந்திய பாதுகாப்புத்துறை பல்முனை அச்சுறுத்தலை (பாகிஸ்தான், சீனா, பயங்கரவாதம்) சந்தித்து வருகிறது. தேசம் இதை உறுதியாக எதிர்கொள்ள தொழில்நுட்பத்தில் முன்னேற்றம், உள்நாட்டில் உற்பத்தி, உளவு நுண்ணறிவு, சரியான தற்காப்பு என ஒருங்கே திரட்டி வருகிறது என்பதே அண்மைய பாடமாக உள்ளது.

அதனால்தான் மோடியும் அவரை சூழ்ந்து இருப்பவர்களும் ‘தளவாடங்களை’ வாங்குவது என்ற நிலையில் இருந்து போர்க் கருவிகளின் உற்பத்தி, உற்பத்தியை நிலைநிறுத்தல், மேம்படுத்துதல் என்று பாதுகாப்புத் துறையில் மேம்பட்ட கூட்டாளி என்ற நிலையை நோக்கி நகர்கிறார்கள். இந்த விஜயத்தின் போது பொதுவெளியில் சொல்லப்பட்ட பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு, புதிய கண்டுபிடிப்புகள், சைபர் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஒத்துழைப்பு என்ற வார்த்தைகளுக்கு பின்னணியில் இருப்பது மேற்சொன்ன விஷயம்தான்.

இதன் பிறகு தான் இஸ்ரேலியர்களுக்கு ஏமாற்றம் தரும் முரண்பாடு போல தெரியும் உண்மை வருகிறது. பாதுகாப்புத் துறையில் இஸ்ரேலுடன் உறவை வலுப்படுத்தும் இந்தியா அதே வேளையில் இஸ்ரேலுக்கு எதிராக ஐநா.,வில் ஓட்டளிப்பதும், சர்வதேச அரங்குகளில் இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளில் கண்டனம் செய்யும் அறிக்கைகளை ஆதரிப்பதும் ஏன்? என்று அவர்கள் மனதில் வினா எழுகிறது. இது கபடத்தனம் அல்ல, மாறாக இந்திய பாணியிலான சொற்சீர் பிரிப்பு என்பதுதான் பதில்.

இந்தியா பல தசாப்தங்களாக அணிந்து வந்த ‘பாலஸ்தீனிய முட்டாக்கு’ இஸ்ரேலுடன் வெளிப்படையான, முழுமையான உறவை மேற்கொள்ள முடியாதபடி தடுத்து வந்தது. இப்போதும் அந்தக் கொள்கை முட்டாக்கு முழுமையாக விலகவில்லை. இந்தியா தொடர்ந்து இரு-தேசம் என்ற தீர்வை முன்னிறுத்தி வருகிறது. 2026 பிரதமர் மோடியின் விஜயம் தொடர்பாக பார்த்தோமானால் அவரது வருகைக்கு ஒரு வாரம் முன்பு மேற்கு காசா பகுதியில் இஸ்ரேல் தன் எல்லையை விரிவாக்குவதாகக் கூறி அதை கண்டனம் செய்யும் ஐநா., அறிக்கையை இந்தியா ஆதரித்தது.

இதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் கொள்கை உரையாடல் என்பதை ‘சித்தரிப்பு உரையாடல்’ என்ற சொல்லால் பதிலீடு செய்ய வேண்டும். இந்தியா தனது மதிப்பீடுகளை மாற்றிக் கொள்ளவில்லை. அதன் இயங்கு முறையை மாற்றிக் கொண்டுள்ளது.

இஸ்ரேலை ‘பாலஸ்தீனியர்’களுடன் வலுக்கட்டாயமாக பிணைத்துப் பார்க்கும் நிலைப்பாட்டை இரு நாடுகளிடையான உறவுகள் விஷயத்தில் பிரித்துப் பார்க்கிறது இந்தியா. சர்வதேச அரங்கில் தெற்குலகின் குரலாக, சர்வதேச மனசாட்சியின் குரலாக எதிரொலிக்கிறது. இதன் மூலம் அரபு நாடுகள், முஸ்லிம்கள் மூலம் ஏற்படும் அரசியல் பாதிப்புகளை குறைத்துக் கொண்டுள்ளது. அதேவேளையில், அதற்கு இணையாக, ‘ஐநா., வளையத்துக்கு அடியில்’ இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுகிறது. பாதுகாப்பு, தொழில்நுட்பம், தொழில் துறை, புதிய கண்டுபிடிப்புகள் என்று அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சொல்லாடல் அது.

இது அயலுறவில் மட்டும் அல்ல. இந்தியாவின் உள்நாட்டு அரசியல் சிக்கலானது. அங்கு முஸ்லிம் மக்கள்தொகை அதிகம். ‘குறிப்பிட்ட ஒரு முகாமைச்’ சார்ந்தவர் என்று இல்லாமல், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தலைவர் என்பதற்கு அங்கு கடுமையான போட்டி உள்ளது. வேறு விதமாக சொல்வதானால், வேற்றுமைகளை உள்ளிழுத்து தன்வயமாக்கிக் கொள்ளும் தன்மையை இந்தியா உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது.

அது இஸ்ரேலிடம் இப்படி சொல்லக்கூடும்: பயங்கரவாதத்திற்கு எதிராக, அந்த எதிர்ப்பை கூர்மைப்படுத்துவதில் நாங்கள் உங்களுடன் துணை நிற்கிறோம். அதே மூச்சில், சர்வதேச சமுதாயத்திடம்: ஒருதலை பட்சமாக எல்லையை விரிவாக்குவதை நாங்கள் எதிர்க்கிறோம் என்று சொல்லும். இது இரு தரப்பையும் மென்மைப்படுத்தும் நிலைப்பாடு அல்ல. மாறாக இன்னல்களை தவிர்க்கும் நிர்வாகவியல்.

இஸ்ரேல் தன் தரப்பிலிருந்து எதிர்பார்ப்புகளை மாற்றிக் கொள்ள வேண்டும். ‘எல்லா சூழ்நிலையிலும் ஆதரிப்பதை’ எதிர்பார்க்கும் இஸ்ரேலியர்கள் வருத்தமடையக் கூடும். மாறாக இந்தியா என்னும் வலிமையான சக்தி தன் செயல் அரங்குகளை பல்வேறாகப் பிரித்து, தன்னுடைய நலனை அதிகரித்துக் கொண்டு வருகிறது என்று பார்ப்பவர்கள் இதை நல்வாய்ப்பாகக் கருதுவார்கள். நல்ல வாடிக்கையாளர் என்ற நிலையிலிருந்து உற்பத்தி – தொழில்நுட்ப துறையில் கூட்டாளி என்ற நிலைக்கு மாறுவது நல்லதொரு வாய்ப்பு. ஏனெனில் இஸ்ரேல் அந்த துறையில் வலிமையாக இருக்கிறது.

பல்லடுக்கு வான் பாதுகாப்பு, டிரோன் எதிர்ப்பு தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் போர்த் திறன், தரவுகளை அடிப்படையாகக் கொண்ட நுண்ணறிவு, சைபர் நுண்ணறிவு , சமூக கண்டுபிடிப்புகளை பாதுகாப்புத் துறையில் பயன்படுத்துவது போன்ற விஷயங்களில் இந்தியா ‘பசி’யோடு இருக்கிறது. சமீபத்திய விஜயம் இதைதான் சொல்லுகிறது. சம்பந்தமே இல்லாத தனித்தனியான நடவடிக்கைகளை அல்ல, ஆழமான ஒத்துழைப்புக்கான எல்லைகளை விரிவாக்குகிறது.

இங்குதான் 1950- 2026 வட்டம் முழுமை பெறுகிறது. இங்குதான் பென் குரியனின் புரிதல் வெளிப்படுகிறது. எதிர்கால சக்திகளுடன் முன்னமே தொடர்பில் இருப்பவர்களுக்கு காலம் உதவி செய்யும் என்று அவர் கூறுவார். மோடி அந்தக் கூற்றை மெய்ப்பிக்கிறார். இஸ்ரேல் மீதுள்ள காதலால் அல்ல, இஸ்ரேலுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் அது இந்தியாவை மேலும் பன்மடங்கு வலிமையுள்ளதாக்கும் என்ற யுக்தியினால்.

இஸ்ரேலும் தன் பங்கிற்கு எந்தவிதமான பாசாங்கும் இல்லாமல் இந்த வரைபடத்தை படிக்க வேண்டும். இரண்டு தேசம் என்ற கருத்தை இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும். ஐநா மூலமாக இந்தியா மேற்கொள்ளும் ராஜதந்திர நடவடிக்கைகள் நமக்கு உவப்பாக இருக்காது. ஆனால் நாம் சரியான முறையில் பேசினால் , தொழில்துறையில் தொழில்நுட்பத் துறையில் வலிமை என்ற மொழியில் பேசினால் , அரசியல் ரீதியான அழுத்தங்களை மீறி ஒத்துழைப்பை ஆழப்படுத்தலாம். கூட்டாளியை காணலாம்.

2026 விஜயத்தை இஸ்ரேல் இந்த தருணத்தின் உச்சமாக மட்டுமே கருதாமல் நிரந்தரமான மாற்றத்திற்கு வித்திட நினைத்தால் அது இந்தியாவில் திட்டங்களை நிறைவேற்றுவதுடன் நின்று விடக்கூடாது. மாறாக நிலைத்த ஒத்துழைப்புக்கான செயல்முறைகளை, கட்டமைப்புகளை , கூட்டாக ஆய்வுகளை மேற்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும். புதுதில்லி தன் மக்களுக்கு, நாம் ‘பக்க சாய்வு’ இல்லாமலே இவ்வளவு விஷயங்களை பெற்றிருக்கிறோம், சாதித்து இருக்கிறோம் என்று வெளிப்படையாக காட்டும்படியாக அவை அமைய வேண்டும்.

இது சமரசம் அல்ல. தனக்கேவுரிய வகையில் உலக கட்டமைப்பை மாற்றி அமைக்கும் வலிமையான சக்தியுடன் நாம் உறவாடுவதற்கான ஒரே வழி.

நன்றி: கார்டியன் நாளேடு


கட்டுரையாளர் இஸ்ரேலில் ரமத்கானில் உள்ள பார் – இலான் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக உள்ளார்.


பெண்களின் சபரிமலை ஆற்றுகால் பகவதி கோயில் பொங்கல் பெருவிழா..

1001291839 - 2026

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்பட்டு வரும் கேரளா மாநிலத்தில் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுகால் பகவதி கோயிலில் இன்று மாசி பூரம் பொங்கல் பெருவிழாவில் திருவனந்தபுரத்தில் மாநகர் முழுவதும் பல லட்சம் பெண்கள் பொங்கல் இட்டு வழிபாடு நடத்தினர்.

திருவனந்தபுரம் நகரம் முழுவதும் பெண்கள் பொங்கலிட்டு ஆற்றுகால் அம்மனை வழிபடும் இந்த விழா பார்க்க மிக அற்புதமான இந்து கலாச்சாரம் நிகழ்ந்த விழாவாக அமைந்தது.இதற்காக திங்கட்கிழமை மாலை முதலே பெண்கள் திருவனந்தபுரத்தில் குவிந்தனர். இந்த ஆண்டு சுமார் 40 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டதாக கூறப்படுகிறது

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் பொங்காலை வழிபாடு நடப்பது வழக்கம். பொங்காலை வழிபாட்டின்போது பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதால் பெண்களின் சபரிமலை என ஆற்றுகால் கோயில் அழைக்கப்படுகிறது.

தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி தேவி இத்திருத்தலத்தில் பகவதி அம்மனாக வீற்றிருக்கிறார். மதுரை சென்ற கோவலன் மகாராணியின் கால் சிலம்பை திருடிவிட்டதாக தவறாக குற்றம்சாட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். கணவனுக்கு நேர்ந்த அநீதியை கண்டு கோபத்தால் கொந்தளித்த கண்ணகி பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு தனது ஒற்றைக்கால் சிலம்புடன் அரண்மனை சென்றார். அங்கு தன் கணவன் கோவலன் கள்வன் அல்ல என உணர்த்த தனது கால் சிலம்பை வீசி எறிந்தார். அநீதி இழைத்து விட்டோமே என உணர்ந்த பாண்டிய மன்னன் மரணமடைந்தார்.அதைத்தொடர்ந்து மகாராணி மரணம் அடைந்தார். சினம் தணியாத கண்ணகி மதுரையை தீக்கிரையாக்கிவிட்டு கோபாவேசத்துடன் தெற்கு நோக்கி சென்று திருவனந்தபுரம் கிள்ளிப்பாலம் பகுதியில் ஆற்றின் கரையில் இளைப்பாறினார். அப்போது அந்த ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த முதியவர் கண்ணகி தெய்வம் என்பதை அறிந்து அவரை ஆற்றுபடுத்தி அங்கேயே குடியமர்த்தினர்


ஆற்றங்கரையில் அமைந்த கண்ணகி தேவியை ஆற்றுகால் பகவதி அம்மனாக மக்கள் வழிபடத்தொடங்கினர். ஆற்றுகால் பகவதி அம்மன் சாந்த சொரூபியாக, பெண்களுக்கெல்லாம் காவல் தெய்வமாக அருள்பாலித்து வருகிறார். ஆற்றுகால் தேவிக்கு ஆண்டுதோறும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் பூரம் நாளில் பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டுவருகின்றனர். ஆற்றுகால் பகவதி கோயில் பொங்கல் பெருந்திருவிழா கடந்த மாதம் 23-ம் தேதி மாலை 5.30 மணிக்கு அம்மனுக்கு காப்புகட்டி குடியிருத்தும் நிகழ்வுடன் தொடங்கியது. கண்ணகி தேவியின் வரலாற்றை தோற்றம் பாட்டாக தினமும் பாடுவது இந்த விழாவின் முக்கிய சடங்காக பார்க்கப்படுகிறது.

தினமும் அதிகாலை 4.30 மணி தொடங்கி மதியம் 1-மணிவரையும், மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நள்ளிரவு 1 மணி வரையும் சிறப்பு பூஜைகள், களபாபிஷேகம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன.

பொங்காலை விழாவுக்காக திருவனந்தபுரம் நகரத்தை தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கிவைத்த மேயர் வி.வி.ராஜேஷ்
9-ம் நாள் விழாவான இன்று அதிகாலை 4.30 மணிக்கு பள்ளி உணர்தல், 5 மணி நிர்மால்ய தரிசனம், 5.30 மணி அபிஷேகம், 6.05 மணி தீபாராதனை, 6.40 மணிக்கு உஷபூஜை, தீபாராதனை, 8.30 மணி பந்தீரடி, தீபாராதனை, 9.15 மணிக்கு சுத்த புண்யாகம், காலை 9.45 மணிக்கு அடுப்பு வெட்டி பண்டார அடுப்பில் அம்மனுக்கு பொங்கலிடும் நிகழ்ச்சி கோவில் மேல்சாந்தி தலைமையில் நடந்தது. பின்னர் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட துவங்கி அம்மனை வழிபடுகின்றனர். ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் பொங்காலையிடுவதற்காக பெண்கள் விரதமிருந்து வருவது வழக்கம். கோயில் வளாகம் மட்டும் அல்லாது திருவனந்தபுரம் நகரம் முழுவதும் பெண்கள் பொங்கலிட்டு ஆற்றுகால் அம்மனை வழிபட்டனர். அதற்காக அதிகாலை முதலே பெண்கள் திருவனந்தபுரத்தில் குவிந்து பொங்கல் இட தயாராகினர்.இந்த ஆண்டு சுமார் 40 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் கண்டதாக கூறப்படுகிறது.பொங்கால் மஹோத்ஸவம் நடைபெறும்போது கண்ணகி தேவி பாண்டிய மன்னனை வதம் செய்யும் நிகழ்வு தோற்றம் பாடலாக பாடப்படுகிறது.

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்காலை விழா
மதியம் 2.15 மணிக்கு உச்ச பூஜை, பொங்காலை நைவேத்யம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. திருவனந்தபுரம் நகரம் முழுவதும் பொங்கலிட்டபின் நைவேத்யம் அம்மனுக்கு சமர்ப்பிக்கும் விதமாக கோயிலில் இருந்து புனிதநீர் பொங்காலை பானைகள் மீது தெளிக்கப்படும். இதற்காக 350 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை 3.10 மணி முதல் இரவு 7 மணிவரை சந்திரகிரகணம் என்பதால் கோயில் திருநடை அடைக்கப்பட்டிருக்கும். இரவு 7 மணிக்கு நடை திறக்கப்படும். 7.30 மணிக்கு தீபாராதனை, 8.30 மணிக்கு குத்தியோட்டம், சூரல்குத்து நடைபெறுகிறது. இரவு 10.45 மணிக்கு அம்மன் எழுந்தருளல் நிகழ்வு நடக்கிறது.நாளை புதன்கிழமை இரவு திருவிழா நிறைவடைகிறது.