Home Blog Page 14

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

kadeswara subramaniam hindu munnani - 2026

திமுகவின் உள்நோக்கத்தைத் தமிழர்கள் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அளித்த தீர்ப்பை திமுக அரசு அடாவடியாக செயல்படுத்தவில்லை. இதற்காக அரசியல் சாசனத்திற்கு எதிராக, அரசு அதிகாரிகளை செயல்பட வைத்தது திமுக செய்த தேச துரோகச் செயலாகும்.

அதேசமயம் திருப்பரங்குன்றத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயன்றதாக திமுகவின் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரி கனிமொழி ஆகியோர் இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளனர்.

ஆனால் அங்கு கலவரத்தை உருவாக்க முயன்றவர்கள் யார்? திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றும் அங்கு கந்தூரி நடத்த ஆட்டை தோளில் போட்டு பிரச்சினை ஏற்படுத்தியவர்கள் திமுக கூட்டணியினர். அதற்கு உடந்தையாக இருந்தவர் திமுகவின் மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது.

அவரைத் தொடர்ந்து இராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுக்கும் நோக்கில் மலைமீது பிரியாணி கொண்டு போய் சாப்பிட்டு விட்டு எச்சிலை அங்கே போட்டதை தனது சமூக ஊடகத்தில் வெளியிட்டார். திருப்பரங்குன்றம் மலை வக்ஃப் வாரிய சொத்து என்று பேட்டி அளித்தார்.

எம்பி கனிமொழி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அவரது கட்சியினரை கலவரம் செய்ய தூண்டி விட்டது உண்மை தானே.

முருக பக்தர்கள் மனதை புண்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் அறிவித்தது. அதற்கு 144 தடை உத்தரவு போட்டு தடுத்தது திமுக அரசு.

எல்லா தடைகளையும் சட்டரீதியாக உடைத்து முருக பக்தர்கள் மன உணர்வை வெளிப்படுத்தியது இந்து முன்னணி.அதன்பிறகு கார்த்திகை தீபத்தை மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஏற்ற நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்றபோது சட்டத்திற்கு புறம்பாக நடந்தது திமுக அரசு.

கோவிலுக்குச் சாதகமாக வந்த தீர்ப்புக்கு எதிராக வாதாட முருக பக்தர்களின் காணிக்கை நிதியை செலவு செய்தது எத்தகைய கொடுமை. இதனை வெட்கமே இல்லாமல் செய்தது திமுக அரசு.

இத்தனை சட்டவிரோதச் செயலுக்கும் காரணம் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும்.

திமுகவின் நயவஞ்சகச் செயலை தமிழர்கள் புரிந்து கொண்டு ஜனநாயக வழியில் தேர்தலில் தக்க பதிலடியை கொடுக்க வேண்டும்.

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?

ipl 2026 season - 2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐந்தாவது ஆட்டம் டெல்லி vs லக்னோ – லக்னோ- ஏப்ரல் 1

          முதலில் ஆடிய லக்னோ அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 141 ரன் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் மிட்சல் மார்ஷ் 35 ரன், அப்துல் சமது 36 ரன் எடுத்தனர். பிற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். குறிப்பாக அணியின் தலைவர் ரிஷப் பந்த் 7 ரன் மட்டுமே எடுத்தது அணிக்கு மிகவும் மோசமாக இருந்தது. டெல்லி அணியில் லுங்கி நிகிடி மற்றும் நடராஜன் தலா 3 விக்கட்டுகள் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய டெல்லி அணி 17.1 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 145 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் சமீர் ரிஸ்வி 70 ரன் (5 ஃபோர், 4 சிக்சர்) அடித்தார்.

ஆறாவது ஆட்டம் – ஹைதராபாத் vs கொல்கொத்தா – கொல்கொத்தா – ஏப்ரல் 2

          ஹைதராபாத் அணி இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடியது 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கட் இழப்பிர்கு 226 ரன் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் (21 பந்துகளில் 46 ரன், 6 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் அபிஷேக் ஷர்மா (21 பந்துகளில் 48 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பான தொடக்கம் தந்தனர். இஷான் கிஷன் 14 ரன் அடித்தார். அவருக்குப் பின் வந்த ஹென்றி கிளாசன் (35 பந்துகளில் 52 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி (24 பந்துகளில் 39 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோரும் அதிரடியாக ஆடினர். கொல்கொத்தா அணியில் முசர்பானி 4 விக்கட்டுகள் எடுத்தார். இரண்டாவதாக ஆடிய கொல்கொத்தா அணி 16 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்தது. கொல்கொத்தா அணியில் ரகுவன்ஷி 52 ரன்னும், ரிங்கு சிங் 35 ரன்னும், ஃபின் ஆலன் 28 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். ஆட்டநாயகனாக நிதீஷ் குமார் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.

ஏழாவது ஆட்டம் – சென்னை vs பஞ்சாப்- சென்னை – ஏப்ரல் 3

          சென்ணையில் நடந்த இந்தாஅட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பரிதாபமாகத் தோல்வியடைந்தது. முதலில் ஆடிய சென்னை அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் இந்த முறையும் குறைந்த ரன்னுக்கு (7 பந்துகள், 7 ரன், ஒரு ஃபோர்) ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர், அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் (22 பந்துகளில் 28 ரன், 2 ஃபோர்) சரியாக விளையாடவில்லை. பின்னர் வந்த ஆயுஷ் மாத்ரெ (43 பந்துகளில் 73 ரன், 6 ஃபோர், 5 சிக்சர்) மற்றும் ஷிவம் துபே (27 பந்துகளில் 45 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) சிறப்பாக ஆடினர். கடைசி நேரத்தில் சர்ஃப்ராஸ் கான் (12 பந்துகளில் 32 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) அதிரடியாக ரன் குவித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கட் இழப்பிற்கு 209 ரன் எடுத்தது. பஞ்சாப் அணியில் விஜயகுமார் வியாஷ்க் 2 விக்கட்டுகளும் பார்லட், யான்சென், சாஹல் மூவரும் தலா ஒரு விக்கட்டும் எடுத்தனர்.

          இரண்டாவதாக ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா (11 பந்துகளில் 39 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) அதிரடித் தொடக்கம் தந்தார். அவருடைய ஜோடியான ப்ரப்சிம்ரன் சிங் (34 பந்துகளில் 43 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) நன்றாக ஆடினார். பின்னர் வந்த கூப்பர் கன்னோலி (36 ரன்) மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் (29 பந்துகளில் 50 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) சிறப்பாக ஆடினர். இதனால் 18.4 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 210 ரன் எடுத்து பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

எட்டாவது ஆட்டம் – டெல்லி – ஏப்ரல் 4 – மும்பை vs டெல்லி

          முதலில் ஆடிய மும்பை அணியில் ரோஹித் ஷர்மா (26 பந்துகளில் 35 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்), சூர்யகுமார் யாதவ் (36 பந்துகளில் 51 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்), நமன் தீர் (21 பந்துகளில் 28 ரன்), மிட்சல் சாண்ட்னர் (13 பந்துகளில் 18 ரன்)ஆகியோர் சிறப்பாக ஆடினர். பிறர் சோபிக்கவில்லை. இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 162 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய டெல்லி அணியில் பதுன் நிசாங்கா (30 பந்துகளில் 44 ரன்), சமீர் ரிஸ்வி (51 பந்துகளில் 90 ரன், 7 ஃபோர், 7 சிக்சர்), டேவிட் மில்லர் (18 பந்துகளில் 21 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடி 18.1 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 164 ரன் எடுத்து அந்த அணியை வெற்றி பெறச்செய்தனர்.  

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

vaiko - 2026

✍️ ஜி.எஸ். பாலமுருகன்

  • செய்திக்கதிர்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில் ம.தி.மு.க. போன்ற கட்சிகள் என்ன செய்யும்?

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர், சீர்காழி (தனி) ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆரம்ப ஒப்பந்தத்தின் படி 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதாக வைகோ அறிவித்திருப்பது ‘சரணாகதி ஒப்பந்தம் போல பார்க்கப்படுகிறது.’

1996-ல் தனி அணியாக 177 இடங்களில் தேர்தல் களம் கண்ட ம.தி.மு.க., படிப்படியாக பெரிய வெற்றி வாகையின்றி, இன்று 4 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் நிலைக்கு வந்துள்ளது.

கட்சியின் அடையாளமாக இருந்த பம்பரம் சின்னம் அரசியல் விளையாட்டில் உடைந்து, இன்று உதயசூரியனில் நிற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

வைகோவின் முடிவை கூட்டணித் தந்திரமாகவும், வாக்கு ஒருங்கிணைப்புக்கான அவசியமான நடவடிக்கையாகவும் சமாதானப்படுத்திக் கொள்ளலாம். “பா.ஜ.க. உள்ளே வந்துரும்; அதனால் தான் இந்த முடிவு” என்று நாளை வைகோ சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் ஒரு கட்சியின் சின்னம் என்பது வெறும் தேர்தல் குறியீடு அல்ல; அது அதன் அரசியல் இருப்பின் அடையாளம். இது கூட்டணியா, அல்லது அரசியல் சரணடைதலா? என்ற ஆழமான கேள்வியை எழுப்புகிறது.

வாரிசு அரசியல் எதிர்ப்பால் தி.மு.க.வில் இருந்து பிரிந்து ம.தி.மு.க.வை தொடங்கியபோது வைகோவிடம் இருந்த தனித்துவ அரசியல், தீவிர தமிழர் உணர்வு, அனல் தெறிக்கும் பேச்சு, சூழலியல் சார்ந்த தீவிர நிலைப்பாடுகள் கட்சிக்கு தனித்துவ முகவரியை உருவாக்கின.

கருணாநிதி குறித்து முன்பு கடுமையான விமர்சன நிலைப்பாடு எடுத்திருந்த நிலையில், இன்று அவரது அரசியல் மரபின் முன் சென்று ஒத்துழைப்புக் கோணத்தில் செயல்படும் நிலையும், ஸ்டாலின் தலைமையின் கீழ் செயல்படும் நிலையும் வைகோவின் அரசியல் நெறி மீது இருந்த மதிப்பு பொதுமக்கள் மத்தியில் சரிந்துவிட்டது.

தி.மு.க., அ.தி.மு.க. என மாறி மாறி கூட்டணி அமைத்த தேர்தல் அரசியல் முடிவுகளே ம.தி.மு.க.வின் இன்றைய நிலைக்கு முக்கிய காரணமாகும். ஒரு கட்டத்தில் ம.தி.மு.க. என்றாலே ‘பேரம் (அரசியல் லாபம் அல்லது ஆதாயம் பெறும் நோக்கில் நடைபெறும் ஒப்பந்த அரசியல்) என்ற விமர்சனம்’ உருவாகியுள்ளது.

“வாரிசு அரசியல்” என்று எதிர்த்த நிலைப்பாடு இன்று குடும்ப அரசியல் முன்னுரிமை பெறும் நிலையில் மாறிவிட்டதாக விமர்சனங்கள் எழுகின்றன. கட்சிக்காக உழைத்தவர்களை பின்தள்ளியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் ம.தி.மு.க.வின் உள் ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்குகின்றன. கடந்த 30 ஆண்டுகளில் கட்சி நடத்தி, மகனை அரசியலில் கொண்டு வந்து தி.மு.க. ஆதரவுடன் எம்.பி.யாக்கியுள்ளீர்கள்.

கூட்டணி அரசியலில் சமரசம் தவிர்க்க முடியாத அரசியல் நிஜம். ஆனால் அது அடையாளத்தையே பாதிக்கும் அளவுக்கு சென்றால் அதன் நீண்டகால அரசியல் பயணம் சந்தேகப்படுத்தப்படுகிறது. குறுகிய கால பலனுக்காக எடுக்கப்படும் முடிவுகள் தனித்துவப் பாதையை மங்கச் செய்யும் என்பதை வைகோ அறியாதவர் அல்ல.

தி.மு.க. கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் “எங்களின் நிலை சிரித்துக்கொண்டே அழுவது போல உள்ளது” என்ற ம.தி.மு.க. அவைத் தலைவர் அர்ஜுன ராஜின் கருத்து கட்சி எந்த நிலையில் உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.

தொகுதி, சின்னம் போன்றவற்றிலான முடிவுகள் அனைத்திலும் கட்சிகளின் சுய முடிவுகள் குறைந்து, அழுத்தத்தின் கீழ் தீர்மானிக்கப்படும் நிலை உருவாகுமானால் அது கூட்டணியா அல்லது கட்டுப்படுத்தப்பட்ட அரசியலா என்ற கேள்வி எழுகிறது. தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கும் சிறிய கட்சிகள் மெதுவாக தங்களின் அடையாளத்தை இழக்கின்றன என்ற விமர்சனம் புதியதல்ல; ம.தி.மு.க.வின் நிலை அந்த விவாதத்தை மேலும் வலுப்படுத்துகிறது. இது தேர்தல் கூட்டணி அல்ல; ‘மேலாதிக்க அரசியல் என்ற விமர்சனம்’ எழுகிறது.

சொந்த கட்சி சின்னத்தில் நிற்க முடியாத அளவுக்கு அங்கீகாரம் குறைந்த ம.தி.மு.க., இன்று உதயசூரியன் சின்னத்தையே தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு வந்துவிட்ட நிலையில், பேசாமல் தி.மு.க.விலேயே சேர்ந்துவிட்டு தாங்கள் சார்ந்த சமூகத்தின் பிரதிபலிப்பாக அக்கட்சிக்குள் செயல்படலாமே?

ஒருகாலத்தில் தி.மு.க. எதிர்ப்பு அரசியலின் கர்ஜனை குரலாக இருந்த வைகோ இன்று கூட்டணி அரசியலின் ஒரு சிறிய அரசியல் புள்ளியாக உள்ளார். இது நல்ல மாற்றம் அல்ல; மாறாக மூன்று தசாப்தங்கள் பழமையான ஒரு அரசியல் கட்சியின் அரசியல் செல்வாக்கு குறைந்து வரும் நிலை என பார்க்கப்படுகிறது.

அரசியல் மாற்றங்கள் காலத்தோடு நிகழ்வது இயல்பானதே; ஆனால் அதன் திசை பற்றிய கேள்விகள்தான் இங்கு எழுகிறது. தன்மானம், சுயமரியாதை பற்றி பிறருக்கு பாடம் எடுத்த வைகோவின் அரசியல் பயணம் இன்று எந்த நிலையை எட்டியுள்ளது?

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

railway news - 2026
#image_title

சென்னை எழும்பூர் வர வேண்டிய பொதிகை நெல்லை உட்பட சில ரயில்களில் ஏப்ரலிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌ தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூரில் நடைபெற்ற வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக செய்யப்பட்ட மாற்றங்கள் ஏப்ரல் இறுதி மற்றும் மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை சென்னை எழும்பூர் இராமேஸ்வரம்
போட் மெயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்பட்டு மீண்டும் புறப்படும் எந்த தேதியும் கிடையாது மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரம் வரை தான் இயங்கும்.

ஹைதராபாத் தாம்பரம் சார்மினார் எக்ஸ்பிரஸ் சென்னை கடற்கரை வரை மட்டுமே இயக்கப்பட்டு புறப்படும் .எந்த தேதியும் கிடையாது மறு அறிவிப்பு வரும் வரை சென்னை கடற்கரை வரை தான் இயங்கும்.

ஏப்ரல் 6 முதல் 21 வரை திருநெல்வேலி சென்னை எழும்பூர் நெல்லை எக்ஸ்பிரஸ் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்
.சென்னை எழும்பூர் திருநெல்வேலி மார்க்கத்தில் எந்த மாற்றமும் கிடையாது
சென்னை எழும்பூர் செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 7 முதல் 22 வரை தாம்பரத்தில் புறப்பட்டு செங்கோட்டை செல்லும் செங்கோட்டைச் சென்னை எழும்பூர் மார்க்கத்தில் எந்த மாற்றமும் இல்லை .

போட் மெயில் எக்ஸ்பிரஸ் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் . ஹைதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ் சென்னை பீச் கடற்கரை நிலையம் வரை இயக்கப்படும் .

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌ தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

railway news - 2026
#image_title

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி & ஈஸ்டர் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

தாம்பரம் முதல் நெல்லை வழியே தென்காசி (செங்கோட்டை) வரை சிறப்பு ரயில் சேவை:

செங்கல்பட்டு விழுப்புரம் விருதாச்சலம் அரியலூர் திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் கொடைக்கானல் ரோடு மதுரை விருதுநகர் சாத்தூர் கோவில்பட்டி திருநெல்வேலி அம்பாசமுத்திரம் வழியாக தென்காசி வரை இயக்கப்படுகிறது.

ரயில் எண் 06135 – ஏப்ரல் 2 வியாழன்கிழமை இன்று இரவு 11.10க்கு தாம்பரத்தில் கிளம்பி, ஏப்.3 வெள்ளிக்கிழமை காலை 9.10க்கு திருநெல்வேலி வந்து, முற்பகல் 11 மணிக்கு தென்காசி வந்தடையும்.

ரயில் எண் 06136 – மீண்டும் வரும் ஞாயிறு ஏப்ரல் 5 அன்று இரவு 11 மணிக்கு செங்கோட்டையில் இருந்து கிளம்பி, நள்ளிரவு 12.50க்கு திருநெல்வேலி வந்து, திங்கள் காலை 10.45க்கு தாம்பரம் சென்றடையும் வகையில் தாம்பரம் வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது.

தாம்பரம் தென்காசி செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஏப்ரல் 2ம் தேதி துவங்கி நடைபெறும். செங்கோட்டை தாம்பரம் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஏப்ரல் 2 காலை 8 மணிக்கு துவங்கும்!

தேவைப்படுவோர் இந்த சிறப்பு ரயில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

odisha day - 2026
  • ஜெயஸ்ரீ எம்.சாரி, ஆதம்பாக்கம்

இன்று ஏப்ரல் – 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி என்னும் இடத்தில் அந்த மாநிலத்தின் இயற்கையையும் கலையையும், கலாச்சாரத்தையும், மக்களிடம் பழகியதையும் அசைப்போடும் ஒரு நினைவாய் எனக்கு அமைந்தது.

ஒடிஷாவின் தாமன்ஜோடியில் இயங்கி வரும் நேஷனல் அலுமினியம் கம்பெனி ( NALCO) மற்றும் இங்க்ட்யூ பப்ளிகேஷன்ஸ், இரண்டும் இணைந்து 2022- ஆம் ஆண்டு ‘ஆஸாத் கா அம்ருத் மஹோத்ஸவ’த்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சியை மூன்று நாட்களுக்கு நடத்தியது. இதில் நான் பன்மொழி கவிஞர்கள் பங்குபெற்ற கவியரங்கத்திலும், இலக்கியத்தில் பெண்கள் என்ற தலைப்பில் இடம்பெற்ற கருத்தரங்கில் தமிழ் இலக்கியத்தில் பெண்கள் என்ற தலைப்பில் கலந்துக் கொண்டேன்.

நாங்கள் அப்போது மஹாராஷ்டிர மாநிலத்தில் நாந்தேட் என்னும் இடத்தில் இருந்தோம். அங்கிருந்து தாமன்ஜோடிக்கு 27 மணி நேர பயணம் செய்ய வேண்டியிருந்தது. நாந்தேட் நகரத்திலிருந்து விசாகப்பட்டினம் வரை இரயிலிலும், அங்கிருந்து தாமன்ஜோடிக்கு மற்ற கவிஞர்களுடன் காரில் பயணம் என எங்கள் பயணத்திட்டம் இருந்தது. நான் என் ஊரில் இருந்து ரெயிலில் ஏசி கோச்சில் ஏறினேன். செகந்திரபாத் வரை என்னைத் தவிர ஒருவரும் இல்லை.

எனக்கு கொஞ்சம் கலக்கமாய் இருந்தது. ரெயில் இரவு ஒன்பது மணிக்கு செகந்திரபாத் வந்தடைந்த போது தான் எனக்கு கொஞ்சம் தைரியமும் வந்தது. பயணியரும் ரெயிலில் ஏறினர். அடுத்த நாள் காலையில் விசாகப்பட்டினம் வந்து சேர்ந்து அங்கிருந்து நான்கு பேர்களுடன் தாமன்ஜோடி நோக்கி கிளம்பினோம். ஆந்திர – ஓடிஷா எல்லையில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையின் அருகில் நின்று ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொண்டேன். இரண்டு மாநிலங்கள் சேரும் இடம் என்பது ஒரு சிறப்பு தானே. அன்று இரவு 8.30 மணிக்கு நாங்கள் தாமன்ஜோடியை அடைந்தோம். எங்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்த அறைகளில் தங்கினோம்.

அடுத்த நாள் காலையில் மலைகள் சூழ்ந்த இடமாய் தாமன்ஜோடி இருந்ததனால் ஆதவனின் உதயத்தை அற்புதமாய் கண்டு ரசித்தோம். மேகங்களானது மலைகளுக்கு மேல் சூழ்ந்திருந்தது கண்கொள்ளா காட்சியாய் இருந்தது. காலையில் ‘ஜெய் ஜெகந்நாத்’ என்று பிரார்த்தனை செய்து கொண்டும், அம்மாநிலத்தின் மாநில மரமான அரசமரத்திற்கும் மரியாதை செய்து நிகழ்ச்சிகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தொடங்கினர்.

நானும் மேற்சொன்ன கருத்தரங்கில் என் கருத்துகளை கூறினேன். பின்னர், மாலை நேரத்தில் அற்புதமான ஒடிஷாவின் நாட்டுப்புற கலைகளை கலைஞர்கள் வழங்கினர். இரண்டாம் நாளன்று பன்மொழி கவிஞர்களின் மாநாடும் தொடங்கியது. இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வந்த கவிஞர்கள் தங்கள் தாய்மொழிகளில் கவிதைகள் வாசித்தனர். தங்களின் கவிதைகளின் சாரத்தினை ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் விளக்கினர்.

நானும் ‘என் பாரதம்’ என்ற தலைப்பின் என் கவிதையை வழங்கினேன். ‘தி க்ளோரியஸ் இந்தியா’ ( The Glorious India) என்ற கவிதை தொகுப்பும் வெளியிட்டனர். அன்று மாலையும் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரும் கலைஞர்களுடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்தார்.

மூன்றாம் நாள் காலையில் எங்களை உள்ளூரில் உள்ள கோயில்கள், கடைகள் போன்றவற்றிற்கு அழைத்துச் சென்றனர். உள்ளூர் மக்களும் எங்களுடன் அற்புதமாய் உரையாடினார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மூன்று நாளும் ஒடிஷாவின் அற்புதமான அறுசுவை உணவினை எங்களுக்கு வழங்கி மகிழ்ந்தார்கள். அன்றே நான் என் ஊருக்கு கிளம்பினேன். அருமையான, அரிதான அனுபவமாய் எனக்கு தாமன்ஜோடி பயணம் அமைந்தது.

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ipl 2026 season - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது. இதில், மார்ச்சு 28 முதல் மே 31ஆம் தேதி வரை மொத்தம் 74 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. சென்ற வருடம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பஞ்சாப் கிங்க்ஸ் அணியை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த வருடம் 10 அணிகள் போட்டியில் கலந்துகொள்கின்றன. இதில் சென்னை சூப்பர் கிங்க்ஸ், கொல்கொத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்க்ஸ் ஆகிய அணிகள் குரூப் A பிரிவில் உள்ளன. மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைடன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னே சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய ணிகள் குரூப் B பிரிவிலும் உள்ளன.

குழுப் போட்டி வடிவமானது, 2023 IPL தொடரில் பின்பற்றப்பட்டதைப் போன்றே அமையுமாறு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறையும், மற்றொரு குழுவில் உள்ள அணிகளுடன் தலா இரண்டு முறையும் மோதும்.

குழு நிலைப் போட்டிகள் நிறைவடைந்த பிறகு, ஒட்டுமொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலையில் உள்ள முதல் நான்கு அணிகள் ‘பிளே-ஆஃப்’ (Playoffs) சுற்றுக்கு முன்னேறும். இந்தச் சுற்றில், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் ஒன்றுடன் ஒன்று மோதும் (இப்போட்டி “Qualifier 1” என அழைக்கப்படும்); அதேபோல, எஞ்சிய இரண்டு அணிகளும் ஒன்றுடன் ஒன்று மோதும் (இப்போட்டி “Eliminator” என அழைக்கப்படும்). Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணியானது நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும்.

அதேவேளையில், அப்போட்டியில் தோல்வியடையும் அணிக்கு இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும்—அவ்வணியானது Eliminator போட்டியில் வெற்றி பெற்ற அணியுடன் மோத வேண்டும் (இப்போட்டி “Qualifier 2” என அழைக்கப்படும்).

இந்த Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணியானது இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அணிகள் வென்றுள்ள கோப்பைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அவை பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு (seeded) வகைப்படுத்தப்பட்டன.

முதல் ஆட்டம் பெங்களூருவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே மார்ச்சு 28ஆம் தேதி நடந்தது. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 9 விக்கட் இழப்பிற்கு 201 ரன் எடுத்தது. இஷான் கிஷன் 38 பந்துகளில் 80 ரன் எடுத்தார்.

இதில் 8 ஃபோர்கள் மற்றும் 5 சிக்சர்கள் அடித்தார். அனிகேத் வர்மா 18 பந்துகளில் 43 ரன் (3 ஃபோர் மற்றும் 4 சிக்சர்கள்) எடுத்தார். ஹென்றி கிளாசன் 22 பந்துகளில் 31 ரன் (2 ஃபோர் மற்றும் 1 சிக்சர்) எடுத்தார். பெங்களூரு அணியில் டஃப்ஃபி, ஷெப்பர்ட் தலா மூன்று விக்கட்டுகள், புவனேஷ் குமார், அபிநந்தன் சிங், சுயேஷ் ஷர்மா தலா ஒரு விக்கட் எடுத்தனர்.

ஆனால் இந்த ஸ்கோரை பெங்களூரு அணி 15.4 ஓவர்களில் எடுத்து அபார வெற்றி பெற்றது. விராட் கோலி ஆட்டமிழக்காமல் 69 ரன் (5 ஃபோர், 5 சிக்சர்), தேவதத் படிக்கல் 61 ரன் (7 ஃபோர், 4 சிக்சர்), ரஜத் படிதார் 31 ரன் (2 ஃபோர், 3 சிக்சர்) அடித்தனர். ஆட்டநாயகனாக ஜேகப் டஃப்ஃபி அறிவிக்கப்பட்டார்.

இரண்டாவது ஆட்டம் மும்பையில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே மார்ச்சு 29ஆம் தேதி நடந்தது. முதலில் ஆடிய கொல்கொத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 220 ரன் எடுத்தது. தொடக்க வீரர்கள் அஜிங்க்யா ரஹானே 67 ரன்( 3 ஃபோர், 5 சிக்சர்) மற்றும் ஃபின் ஆலன் 37 ரன்(6 ஃபோர், 2 சிக்சர்) அபாரமான தொடக்கம் தந்தனர்.

அங்க்ரிஷ் ரகுவன்ஷி 51 ரன்( 6 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் ரிங்கு சிங் 33 ரன் (4 ஃபோர்) அருமையாக விளையாடினர். பின்னர் ஆடிய மும்பை அணி 19.1 ஓவர்களில் 224 ரன் எடுத்து அபார் வெற்றி பெற்றது. ரியன் ரிக்கிள்டன் 81 ரன் (4 ஃபோர், 8 சிக்சர்), ரோஹித் ஷர்மா 78 ரன் (6 ஃபோர், 6 சிக்சர்) அடித்தனர். இவரிகளின் ஆட்டம் மும்பையின் வெற்றியை உறுதி செய்தது.

மூன்றாவது ஆட்டம் மார்ச்சு 30ஆம் தேதி கௌஹாத்தியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணிக்கும் இடையே நடந்தது. முதலில் ஆடிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 127 ரன் எடுத்தது. இஅந்த அணியில் ஜேமி ஓவர்டன் மட்டும் சிறப்பாக ஆடி 43 ரன் சேர்த்தார். மற்றாவர்கள் சரியாக ஆடவில்லை. ராஜஸ்தான் அணியில் ஆர்ச்சர், பர்ஜர், ஜதேஜா ஆகியோர் தலா 2 விக்கட் எடுத்தனர்.

பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்களில் 2 விக்கட் இழப்பிற்கு 128 ரன் எடுத்து வெற்றிபெற்றது. ராஜஸ்தான் அணியின் வைபவ் சூரியவம்ஷி 17 பந்துகளில் 52 ரன் அடித்து வெற்றிக்கு வழி வகுத்தார். சென்ற ஐபிஎல் போட்டியில் கடைசி இடத்தைப் பெற்ற சென்னை அணி இந்த முறை தொடக்க ஆட்டத்திலேயே சொதப்பியது ரசிகர்களை ஏமாற்றியது.

நான்காவது ஆட்டம்மார்ச்சு 31ஆம் தேதி சண்டிகரில் குஜராத் அணிக்கும் பஞ்சாப் அனிக்கும் இடையே நடந்தது. முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 162 ரன் எடுத்தது.

இரண்டாவதாக ஆடிய பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 165 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் கூப்பர் கன்னோலி 72 ரன் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். அவர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.        

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

kamalalayam tn bjp - 2026

முரளி சீதாராமன்

1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- “ஏப்ரல் 4 அன்று பாஜக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள்!”

2) அதே பாலிமர் டிவியில் கீழே ஸ்க்ரோல்:-
“ஏப்ரல் 3 பாண்டிச்சேரி பிரசாரத்துக்கு வரும் மோடி – சென்னையில் பாஜக பொறுப்பாளர்களை சந்தித்து – வேட்பாளர்கள், தொகுதி நிலவரம் குறித்து ஆய்வு செய்யப் போகிறார்.

3) அனைவரும் எதிர்பார்த்தபடி மத்திய பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வருகை.

4) கோவையில் இருந்து அண்ணாமலை பாண்டிச்சேரி சென்று அங்கே ரோட் ஷோ – மற்றும் ராஜ்பவன் தொகுதியில் பிரசாரம்.

5) பிரசாரத்தின் இடையில் சென்னை வரச் சொல்லி அண்ணாமலைக்கு பியூஷ் கோயல் அழைப்பு. அண்ணாமலை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சென்னை வருகை.

6) கமலாலயத்தில் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களுடன் பியூஷ் கோயல் கலந்தாலோசனை.

7) சில நாள்களில் பாஜக பட்டியல் வெளியாகும் – என்று பியூஷ் கோயல் அறிவிப்பு.

JUST I AM CONNECTING THE DOTS. நல்ல முடிவு வரும் என்று நம்புவோமாக.

1984 ல் இந்திரா காந்தி கொலைக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 414 இடங்களைப் பிடித்தது. பாஜக வெறும் 2 இடங்களில்தான் வென்றது. பல பாஜக அபிமானிகள் காங்கிரஸ் மாதிரி பாஜக என்று வளரும் என்று ஏங்கினார்கள்.

பாஜக வளர்ந்தது – மத்தியிலும் பல மாநிலங்களிலும் ஆட்சியையும் பிடித்தது. ஆனால் காங்கிரஸ் மாதிரி மத்திய அதிகாரத்திலும் – பாரதம் முழுக்கப் பரவலாக ஆட்சி அதிகாரத்திலும் பாஜக வளரவேண்டும் என்று குறிப்பாகக் கேட்டுப் பிரார்த்தித்து இருக்க வேண்டும்! ஆனால் கடவுளிடம் மொட்டையாகக் காங்கிரஸ் மாதிரி பாஜக வளர வேண்டும் என்று பிரார்த்தனை செய்ததன் பலன்…

இப்போது பாருங்கள்… கட்சிக்குள் உள் விளையாட்டு, தொகுதிப் பங்கீட்டில் சொதப்பல், வேட்பாளர் தேர்வில் இழுபறி… இப்படிப் பலவற்றிலும் காங்கிரஸ் மாதிரியே வளர்ந்து தொலைத்து இருக்கிறது!

சத்திய மூர்த்தி பவனுக்கும் கமலாலயத்துக்கும் என்ன வித்தியாசம்?

வேட்பாளர் தேர்வில் இழுபறி… ஒருவர் கட்சி போட்டியிட ஏதுவாக ஆண்டுக் கணக்கில் உழைத்து களத்தை தயார் செய்திருப்பார் – அவர் மீது உள்ள அசூயையில் தொகுதியைக் கூட்டணிக் கட்சிக்கு தாரை வார்த்து விடுவது…

மேலிடப் பார்வையாளரிடம் தங்கள் பார்வையில் என்ன படுகிறதோ அதையே கட்சியின் அடிமட்ட RANK AND FILE பார்வைபோல BRIEFING செய்வது… தனக்கு வேண்டாதவரைப் போட்டுக் கொடுப்பது, அல்லது அவருக்கு வாய்ப்பான தொகுதியை ஃப்யூஸ் பிடுங்கி விடுவது…

இப்படி பல விஷயங்களில் சத்திய மூர்த்தி பவனும் – கமலாலயமும் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல என்றே ஒரு அரசியல் பார்வையாளனாகக் கருத வேண்டியுள்ளது. என்ன சத்தியமூர்த்தி பவன் என்றால் சேர்கள் பறப்பு, சட்டை கிழிப்பு, வேட்டி பறிப்பு என்றெல்லாம் நடக்கும் என்பார்கள்.

திமுக 1989 ல் காங்கிரஸ் பற்றி போஸ்டரே ஒட்டியது:- “ஊருக்கு ஊரு இருபது கோஷ்டி – ஊழியர் கூட்டத்தில் கிழியுது வேஷ்டி!”

கமலாலயத்தில் மரியாதையாக ஒருவரை ஒருவர் ஜி ஜி என்றழைத்து கும்பிட்டுக் கொள்வார்கள்!

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

left and congress - 2026

— தவ்லீன் சிங் —
தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்

இந்திய இடதுசாரிகளும் போரும்!

என்னைப் போலவே நீங்களும் துயர் மிகுந்த, நம்பிக்கை அற்ற, ஏழை இந்தியாவில் – அப்போது ராகுல் காந்தியின் பாட்டி பிரதமராக இருந்தார் – வளர்ந்து இருந்தால் நீங்களும் இடதுசாரிகள், போலி தாராளவாதிகள் மீது சந்தேகப்படக் கற்றுக் கொண்டிருப்பீர்கள். அவர்களது மனித உரிமைகள் மற்றும் அரசியல் ஒடுக்குமுறை என்ற உணர்வெழுச்சிகளுக்கு பின் உள்ள அப்பட்டமான பிற்போக்குத்தனத்தை பிரித்தறிய கற்றுக் கொண்டிருப்பீர்கள்.

ஸ்டேட்ஸ்மேன் நாளேட்டில் நிருபராக நான் பணிக்கு சேர்ந்த ஒரு மாதத்தில் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தார். பத்திரிக்கை தணிக்கை கடுமையாக அமல்படுத்தப்பட்டது. அது உண்மையிலேயே நம் வரலாற்றில் மிகவும் இருண்ட, பயங்கரமான அத்தியாயமாகும். ஆனால் அவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முழு ஆதரவு இருந்தது. சோவியத் யூனியனின் ஆதரவும் இருந்தது.

இந்திய இடதுசாரிகளின் கருத்தியலை அமெரிக்க எதிர்ப்புதான் வரையறை செய்தது. இது ஏன் என்று அப்போதே நான் கேள்வி எழுப்பத் தொடங்கி இருந்தேன். சீனாவிலும் சோவியத் ரஷ்யாவிலும் அவர்களது வழிபாட்டு நாயகர்களாக இருந்தவர்கள் செய்த கொடூரமான குற்றங்களை இவர்கள் எப்போதுமே கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். மாவோவும் ஸ்டாலினும் இந்திய இடதுசாரிகளின் நாயகர்களாகவே இருக்கிறார்கள், இன்றும் கூட.

தங்கள் பிள்ளைகளை கல்லூரி படிப்புக்கு அனுப்பும் போது இந்திய இடதுசாரிகள் பொதுவாகவே மேற்கத்திய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களையே தேர்ந்தெடுத்து அனுப்புவதை பார்த்தேன். மேற்கத்திய நாடுகளை வெறுப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். அதேபோல் தாங்கள் நோயுறும் போது சிகிச்சைக்காக மேற்கத்திய நாட்டில் உள்ள மருத்துவமனைகளையே தேர்வு செய்கிறார்கள். ஆண்டுகள் உருண்டோட, எல்லா வகையான இடதுசாரிகள் மீதும் எனக்கு வெறுப்பு வளர்ந்தது. அவர்கள் தீவிரவாத இஸ்லாத்தை வெளிப்படையாக ஆதரிக்கத் தொடங்கிய போது அது ஆழ்ந்த வெறுப்பாக மாறியது. இடதுசாரிக் கட்சிகளின் நிலைப்பாடு எதுவோ அதற்கு நேர் எதிரான நிலைப்பாடுதான் என்னுடையது என்றானது.

கடந்த வாரங்களில் தில்லி, மும்பாயின் பொதுவெளியில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ‘ஆக்கிரமிப்பு’ செய்து வருவதாக இடதுசாரிகளின் குரல் மிக உரக்க எழுந்தது. போர் தொடங்கியவுடன் அப்துல்லா அலி கமேனியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிப்பதாக கூறி முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போது அவர்களது குரல் ‘மதசார்பற்ற’ இடதுசாரிகளின் ஆதரவு குரலுடன் மேலும் வலுப்பெற்றுள்ளது. நமக்கு பக்கத்தில் தாலிபான்களின் இழிவான செயல்களையோ அல்லது அயதுல்லாக்களின் தீய செயல்களையோ கண்டனம் செய்யாதவர்கள் காசாவில் நடந்ததற்காக இஸ்ரேலை வீறிட்டு கண்டனம் செய்கிறார்கள். எல்லாவிதமான கொடூரங்களும் அரசியல் ஒடுக்குமுறையும் ஒரே மாதிரியாக கண்டனம் செய்யப்படாதது ஏன் ? என்ற குழப்பம் எனக்குள்ளது.

இந்திய இடதுசாரிகள், ஜிகாத்திகளின் குரலோடு குடும்ப ஆட்சியில் பல தசாப்தங்களாக அரசு பணியில் இருந்த ‘மதசார்பற்ற’ அதிகாரிகளின் குரலும் சேர்ந்து ஒலிக்கிறது. அந்த அதிகாரிகள் பலரும் என்னைப் போன்றே உயர்குடியில் உரிமைகளோடு பிறந்து ஒட்டுமொத்தமாக ஆளும் வெளியை ஆக்கிரமித்து இருந்தவர்கள். இந்த அதிகாரிகள் போர் குறித்து மோடி அரசின் ‘மௌனத்தை’ வெளிப்படையாக விமர்சித்து வருகிறார்கள். மோடி தனது மௌனத்தின் மூலம் உலக நாடுகள் இந்தியாவை ‘அலட்சியப்படுத்தும்’ இடத்தில் நிறுத்தி உள்ளதாக அவர் மீது தனிப்பட்ட விமர்சனங்களால் தாக்கி வருகிறார்கள். ஈரான் மீது நடந்துள்ள தாக்குதலை பிரதமர் வெளிப்படையாக கண்டனம் செய்ய வேண்டுமென அவர்கள் தெளிவாகக் கூறுகிறார்கள்.

தனிப்பட்ட முறையில், இந்திய அரசு மிகவும் ஆபத்து மிகுந்த சூழ்ச்சிகரமான சாலையில் ஆச்சரியப் படத்தக்க வேகத்தில் பயணிப்பதாகவே, நான் கருதுகிறேன். நாம் எந்த பக்கத்திலும் சேரக்கூடாது. நாம் சேர வேண்டிய ஒரே பக்கம் இந்திய நலன் தான். அமெரிக்கா, இஸ்ரேலை நாம் பகைத்துக் கொள்வது நம்முடைய நலனுக்கு உகந்ததல்ல. அவ்வாறு செய்தால் அது நம்முடைய பழைய பகையாளியான சீனாவின் பக்கத்தில் நம்மை சேர்த்துவிடும். நிச்சயமாக அது இந்திய நலனுக்கு எதிரானது. ரஷ்யா, வடகொரியா போன்றவர்கள் நம் அணிக்கு தேவையில்லாதவர்கள்.

நடுநிலை என்ற நம்முடைய கொள்கையில் நாம் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும். இரு தரப்பினரும் நம்முடன் பேசக்கூடிய நிலை வேண்டும். ஈரான் நம்மை நம்புகிறது. அதனால் தான் ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய எண்ணெய் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி அளிக்கிறது.

என்னுடைய குழந்தைப் பருவம் ஒரு ராணுவ நகரத்திலிருந்து இன்னொன்றுக்கு என்று மாறிக்கொண்டே இருப்பதாக இருந்தது. நான் சந்தித்த வீரர்கள் பலரும் போர் என்பதை மோசமான தேர்வாகவே கருதியதை தெரிந்து கொண்டேன். எந்த பிரச்சினையையும் போர் மூலம் தீர்த்து விட முடியும் என்று நான் நம்பவில்லை. இந்தப் போர் எந்தத் தரப்புக்கும் தெளிவான வெற்றியைத் தருவதாகத் தெரியவில்லை.

இந்தப் போரின் முக்கியமான சாதனை எண்ணெய் விலையை உயர்த்தியதுதான். உலகில் நாம் இருக்கும் பகுதியில் உள்ள பொருளாதாரங்களை அது பாதித்துள்ளது. கடந்த வாரம் சமையல் எரிவாயு உருளைக்காக மக்கள் நீண்ட வரிசையில் நின்று இருந்தது பீதி எங்கும் பரவுவதையே காட்டியது.

ஜனாதிபதி ட்ரம்ப் போரில் ‘வெற்றி’ பெற்று விட்டதாக அறிவித்துள்ளார். எனவே மிக விரைவில் போரை முடிவுக்கு கொண்டு வருவார் என்று நாம் நம்பலாம். சில விமர்சகர்கள் மோடி அமைதி ஏற்பட சமரச முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார்கள். இதற்கு அர்த்தம், மோடியின் ‘மௌனம்’ இந்திய நலன்களை பாதிக்கவில்லை. மாறாக உதவியிருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.

போரின் வெற்றி , தோல்விக்கு அப்பால் ஒரு பிரச்னை தீர்க்கப்படாமலேயே இருக்கப் போகிறது. ஈரானை சர்வதேச பயங்கரவாத முன்னெடுப்பாளராக மாற்றிய ஜிகாத் கருத்தியல். அதுதான் ஈரானிய பெண்கள் மீதான வன்முறையை, அவர்களின் உரிமைகளை நசுக்குவதில் மிகப்பெரிய – உலகில் இரண்டாவது பெரிய நாடாக – மாற்றியது. முதலிடம் தாலிபான்களுக்கு. கடந்த வாரத்துடன் ஆப்கானிய பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு, பணிக்கு செல்லும், தங்கள் சொந்த வாழ்வை தாங்களே நிர்மாணிக்கும் உரிமை மறுக்கப்பட்டு, சுருக்கமாக சொன்னால் வாழும் உரிமை மறுக்கப்பட்டு 1636 நாட்கள் ஆகிறது. கணவன்மார்கள் மனைவிகளின் எலும்பு உடையாமல் அவர்களை அடிக்க சட்டப்படி உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது நமக்கு மிக அருகில் உள்ள அண்டை நாட்டில் நடக்கிறது.

இடதுசாரி எழுத்தாளர்களும் அரசியல்வாதிகள் மனித உரிமை போராளிகளும் பெண்களுக்கு எதிரான இந்த மனிதாபிமானமற்ற பழங்குடித்தனத்திற்கு எதிராக எப்போது பேசப் போகிறார்கள் ?

என் கேள்விக்கு நானே பதில் சொல்லி விடுகிறேன். அவர்கள் ஒரு போதும் பேசப் போவதில்லை. அவர்களது கோபமும் கண்ணீரும், உலகில் எது நடந்தாலும், அமெரிக்காவை பழி சுமத்த வழி கிடைத்தால் மட்டுமே வெளிப்படும். இது போன்ற அர்த்தமற்ற அமெரிக்க எதிர்ப்பு சூழ்நிலையில்தான் நான் வளர்ந்தேன்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்


‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

kadeswara subramaniam hindu munnani - 2026

இந்து பட்டியல் சமூக மக்களின் உரிமையை பாதிக்கும் வகையில் தனித் தொகுதிகளில் போட்டியிடும் வேற்று மதத்தவர்கள் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

தமிழகத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் 46 தனித் தொகுதிகள் உள்ளன.

இந்து பட்டியல் சமூக மக்கள் மட்டுமே போட்டியிடக்கூடிய இந்த தொகுதிகளில் கிறிஸ்தவ மற்றும் வேற்று மதத்திற்கு மாறியவர்கள், அதன் வழிபாட்டு முறையை தொடர்பவர்கள், தங்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கிறிஸ்தவ பெயர்களை வைத்துள்ளவர்கள், கிறிஸ்தவ விழாக்களை கொண்டாடுபவர்கள் சிலர் இந்து பட்டியல் சமூகத்தவர் என போலியாக சான்றிதழ் பெற்று அதன் அடிப்படையில் தனித்தொகுதிகளில் போட்டியிடுவதாகத் தெரிகிறது.

தனித்தொகுதி என்பது இந்துக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள உரிமையாகும். சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலும் மதம் மாறியவர்கள் பட்டியல் சமூக சலுகைகளைப் பெற முடியாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சட்டத்தையும் அரசையும் தேர்தல் ஆணையத்தையும் ஏமாற்றும் வகையில் வேற்று மதத்திற்கு மாறியவர்கள் தாங்கள் மதம் மாறியதை மறைத்து போலியாக சான்றிதழ் பெற்று இந்து மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் இந்து பட்டியல் இனத்தவர் மட்டுமே போட்டியிடக்கூடிய தனித்தொகுதிகளில் போட்டியிட முயன்று வருகின்றனர்.

சிறுவயதில் இந்துவாக இருந்தபோது இந்து பட்டியல் சமூகத்தவர் என சான்றிதழ் பெற்றவர்கள் இடைக்காலத்தில் மதம் மாறியதை மறைத்து பழைய சான்றிதழ் அடிப்படையில் இன்று பட்டியல் சமூக மக்களின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் தனி தொகுதிகளில் போட்டியிட முயன்று வருகின்றனர்.

எனவே தனி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தும் அவர்களது சாதி சான்றிதழ் குறித்தும் தேர்தல் ஆணையம் முறையாக ஆய்வு செய்து வேற்று மதத்தவர்கள் வைத்துள்ள போலிச் சான்றிதழ்களை ரத்து செய்து அவர்கள் வேட்புமனுவையும் தள்ளுபடி செய்யுமாறு இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது.

தனித் தொகுதிகளில் போட்டியிடும் பல்வேறு கட்சியினரின் சாதிச் சான்றிதழ் குறித்து எழும் ஆட்சேபனைகளையும் தேர்தல் ஆணையம் நேரடியாக விசாரிக்க வேண்டும் என இந்துமுன்னணி வேண்டுகோள் விடுக்கிறது.

தமிழகத்தில் சாதிச் சான்றிதழ் வழங்கும் வருவாய் வட்டாட்சியர்கள், தனித் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அந்தந்த தொகுதிகளில் கண்காணித்து, வேற்று மதத்தைச் சார்ந்தவர்கள் தான் என உறுதி செய்யப்பட்டால், அவர்கள் வைத்துள்ள போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!