இன்று விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை சார்பில் யார் அந்த சார் ?? வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மண்ணின் மைந்தர் ஆர்.கே ரவிச்சந்திரன் மற்றும் முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜவர்மன், எதிர்க்கோட்டை சுப்ரமணியம் நகர கழக செயலாளர் சோலை சேதுபதி, திருச்சுழி ஒன்றிய கழக செயலாளர்கள் முனியாண்டி, முத்து ராமலிங்கம், கருப்பசாமி மற்றும் சாத்தூர் ஒன்றிய கழக செயலாளர்கள் குருசாமி, சீத்தாராமன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டை இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் இரா.சக்ரவர்த்தி சங்கர் செய்திருந்தார்.
இந்நிகழ்வில் மகளிர் அணி நிர்வாகி பிரேமா, சீரணி ரமேஷ்,அண்டா நாகராஜ், இ.சுப்ரமணி மற்றும் பாசறை நிர்வாகிகள் க.பாலாஜி, s.பாலாஜி, இரா.சக்திராஜா, விக்னேஷ், கேப்டன் பிரபாகரன், சங்கர் பிரபு, சண்முகராஜன், உடனிருந்தனர்
யுஜிசி விதிகளுக்கு எதிராக தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ளது. நீதிமன்றம் செல்வது தான் இதற்கு சரியான முடிவாக இருக்கும் என்று, அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறினார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தேமுதிக மாவட்ட செயலாளர் செய்யது காஜா செரிப் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக தேமுதிக போது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் வருகை புரிந்தனர். முன்னதாக அருப்புக்கோட்டை அருகே விஜயகாந்த் பிறந்த ஊரான ராமானுஜபுரத்தில் தேமுதிக கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் இணைந்து தேமுதிக கட்சி கொடி ஏற்றி வைத்தனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,
அருப்புக்கோட்டை அருகே ராமராஜபுரத்தில் உள்ள இந்த இடம் விஜயகாந்த் பெயரிலேயே உள்ளது தற்போது இங்கு விஜய பிரபாகரன் கையால் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்த மக்களுக்கு கல்யாண மண்டபம் கட்டித் தருவோம் என இந்த மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளோம் கல்யாண மண்டபம் கட்டித் தந்து இந்த இடத்தை முன்னேற்றாவோம். எங்களுடைய பூர்வீக இடத்திற்கு வந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என பேசினார்
மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் பல்கலைக்கழகங்கள் உள்ளது ஆளுநர் அவருடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர முயற்சிக்கிறார். இது அவருடைய சுயநலத்தை காட்டுகிறது என மு க ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,
அனைத்து பல்கலைக்கழகங்களும் ஆளும் அரசும் ஆளுநரும் இணைந்து தான் செயல்படுத்துகின்றனர். இவர்களுக்குள் இருக்கக்கூடிய ஈகோ காரணமாக ஆளுநருக்கு எந்த உரிமை இல்லை என ஆளுங்கட்சி சொல்வதும் ஆளுநர் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என அவர்கள் சொல்வதும் தொடர்ந்து மூன்று வருடமாக நடைபெற்று வருகிறது. சட்டப்படி அங்கு என்ன நடக்க வேண்டுமோ அது நடந்தால் அனைவருக்கும் நல்லது. இருவரும் ஈகோவுடன் இருப்பதால் யாருக்கும் எந்த பலனும் கிடையாது. அனைவரும் ஒற்றுமையுடன் இருந்தால் இந்த நாட்டுக்கு நல்லது என பேசினார்
பெரியார் குறித்து சீமான் கூறிய கருத்து பற்றி கேட்டதற்கு,
அதைப்பற்றி கருத்து கூற விரும்பவில்லை ஒருவர் கூறிய கருத்தை பற்றி என்னிடம் நீங்கள் கேள்வி கேட்கக்கூடாது. அதற்கான பதிலை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் என பேசினார்
பல்கலைக்கழக யுஜிசி விதிகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு
ஒற்றுமையுடன் செயல்பட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. தொடர்ந்து மூன்று வருடமாக ஆளும் கட்சிக்கும் ஆளுநருக்குமிடையே முரண்பாடாண விஷயங்கள் நடைபெற்று வருகிறது. ஆளுநர் சட்டப்பேரவைக்கு வருவதும் வெளிநடப்பு செய்வதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இரு தரப்பினரும் தங்கள் தரப்பு நியாயம் என்கிறார்கள். நீதிமன்றம் செல்வது தான் இதற்கு சரியான முடிவாக இருக்கும் என பேசினார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் தேமுதிக அதிக வாக்குகள் பெற்றுள்ளது மீண்டும் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தேமுதிக போட்டியிடுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு,
234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி போட்டியிடும். யார் வேட்பாளர் யாருக்கு எந்த தொகுதி என்பதை தற்போது கூற முடியாது. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அது குறித்து தெரிய வரும் என பேசினார்
பிரபல பின்னணிப் பாடகர் பி. ஜெயச்சந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.
மலையாளத் திரையுலகை சேர்ந்த பாடகர் பி.ஜெயச்சந்திரன் தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளி்ல 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வயது மூப்பு மற்றும் உடலநலக்குறைவு காரணமாக கேரளா மாநிலம் திருச்சூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜெயச்சந்திரன் காலமானார்.
1944 மார்ச் 3 ல் தம்புரான் – சுபத்ரகுஞ்சம்மா தம்பதிக்கு 3வது மகனாக எர்ணாகுளத்தில் பிறந்தார். பிறகு இரிஞ்சாலக்குடா பகுதிக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தார். இவருக்கு லலிதா என்ற மனைவி, மகன், மகள் உள்ளனர்.
சிறு வயதிலேயே இசை மீதான ஆர்வத்தால், இசைக்கருவிகளை வாசிப்பதில் ஆர்வம் கொண்டு செண்டா கருவி, மிருதங்கம் வாசிக்கக் கற்றுக் கொண்டார். 1958 ல் மாநில பள்ளி இளைஞர் திருவிழாவில் நடந்த விழாவில் மிருதங்கம் வாசிப்பதில் முதல் பரிசையும், லைட் மியூசிக்கில் இரண்டாம் பரிசையும் வென்றார். இரிஞ்சாலக்குடா கிறிஸ்தவ கல்லூரியில் விலங்கியல் பாடத்தில் பட்டம் பெற்ற இவர், பிறகு சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் இவர் பாடலை கேட்ட திரைப்பட தயாரிப்பாளர்கள் சோபனா பரமேஸ்வரன் நாயர் மற்றும் வின்சென்ட் ஆகியோர் மலையாள திரைப்படத்தில் பாடும்படி அழைத்தனர். முதலில் மலையாள படங்களில் பாடல்களை பாடத் துவங்கி, பிறகு தனக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து முழு நேர பாடகராக மாறினார். சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது, கேரள அரசின் 5 திரைப்பட விருதுகள், கேரள அரசின் ஜேசி டேனியல் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது என விருதுகள் பல பெற்றவர்.
மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு & ஹிந்தி மொழிகளில் சுமார் 16,000 பாடல்கள் பாடியுள்ளார். மென்மையான குரலில் நினைவில் நிற்கும் பாடல்கள் பல பாடியுள்ள பாடகர் ஜெயச்சந்திரன் குரல் எப்போதும் ஒலித் கொண்டே இருக்கும்.
அவர் பாடிய பாடல்கள் தமிழகம் கொண்டாடிய பாடல்கள்.. மாஞ்சோலைக் கிளிதானோ.. கடவுள் வாழும் கோயிலிலே கற்பூரதீபம்’ ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு ” காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி கொடியிலே மல்லிகை பூ மயங்கினேன் சொல்ல தயங்கினேன்.. முக்குளிச்சு நானெடுத்த முத்துச்சிப்பி நீதானே முத்தெடுத்து நெஞ்சுக்குள்ள பத்திரமா வெச்சேனே வெச்சதிப்போ காணாம நானே தேடுறேன்… இப்படி தமிழ்த் திரை வானில் தன் குரல் வளத்தால் ரசிகர்களை தன் வசம் ஈர்த்த பாடல்களைப் பாடியவர்.
குறைந்த விலை, அதிக கையூட்டு, வாங்க மறுக்கும் அதிகாரிகள் – பொங்கல் கரும்பு விவசாயிகளின் துயரைத் துடைக்க வேண்டும்! : அன்புமணி இராமதாஸ்
பொங்கல் கரும்பு இனிப்பானதாக இருந்தாலும், அதை கொள்முதல் செய்வதில் நிகழும் முறைகேடுகள், கையூட்டு ஆகியவற்றால் கரும்பு விவசாயிகளுக்கு கசப்பு தான் பரிசாகக் கிடைத்திருக்கிறது. பொங்கல் கரும்பு சாகுபடியில் உழவர்களுக்கு குறைந்த லாபமே கிடைக்கும் நிலையில், அதையும் பறிக்கும் வகையில் கையூட்டு கொடுத்தால் தான் கொள்முதல் செய்வோம் என அதிகாரிகள் கூறுவது கண்டிக்கத்தக்கது.
பொங்கல் திருநாளையொட்டி அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் 2.20 கோடி குடும்பங்களுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய ரூ.113 மதிப்புள்ள பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடைகள் வாயிலாக பொங்கல் பரிசுத் தொகுப்புகள் இன்று முதல் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், பரிசுத் தொகுப்புக்குத் தேவையான செங்கரும்புகளை கொள்முதல் செய்வதில் நடைபெறும் முறைகேடுகள் உழவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒரு முழு கரும்புக்கான கொள்முதல் விலையாக போக்குவரத்து செலவினம், வெட்டு கூலி, கட்டுக்கட்டும் கூலி, ஏற்றி இறக்கும் செலவு ஆகியவற்றையும் சேர்த்து ரூ.35 வழங்கப்படும் என்று தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், உழவர்களுக்கு ஒரு முழு கரும்புக்கு ஊர்களைப் பொறுத்து ரூ.22 முதல் ரூ.26 வரை மட்டும் தான் வழங்கப்படுகிறது. கரும்புக்கான வெட்டுக் கூலி, கட்டுக்கட்டும் செலவு ஆகியவற்றை உழவர்கள் தான் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனாலும் அவர்களின் கரும்புக்குக்கு உரிய விலை வழங்கப்படுவதில்லை. அதுமட்டுமின்றி, அனைத்து விவசாயிகளின் கரும்புகளையும் அதிகாரிகள் கொள்முதல் செய்வதில்லை. கமிஷன் என்ற பெயரில் கையூட்டு கொடுப்பவர்களிடமிருந்து மட்டும் தான் செங்கரும்புகள் கொள்முதல் செய்யப்படுவதாகவும், அதற்காக ஒரு சரக்குந்தில் ஏற்றப்படும் கரும்புக்கு ரூ.10 ஆயிரம் வரை கையூட்டு வாங்கப்படுவதாகவும் உழவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக உழவர் ஒருவர் வேதனையுடன் புலம்பும் ஒலிப்பதிவு சமூக வலைத்தளங்களில் கடந்த இரு நாட்களாக வேகமாக பரவி வருகிறது.
செங்கரும்பு சாகுபடி என்பது மிகவும் எளிதான ஒன்றல்ல. ஒரு ஏக்கரில் நடுவதற்கான செங்கரும்பு விதைப் புற்களுக்காக மட்டும் ரூ.30 ஆயிரம் செலவாகும். கரும்பு வளர, வளர அதன் தோகையை உரிப்பது, மழைக்காலங்களில் கரும்பு சாய்ந்தால் அதை நிமிர்த்து வைப்பது உள்ளிட்ட அனைத்துக்கும் சேர்த்து ஏக்கருக்கு ரூ.2.50 லட்சம் வரை செலவாகும் என்று உழவர்கள் கூறுகின்றனர். அவ்வாறு வளர்த்தெடுக்கப்படும் கரும்புகளை அரசு நல்ல விலை கொடுத்து வாங்கினால் கூட, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3.25 லட்சம் மட்டும் தான் கிடைக்கும். 10 மாதங்களுக்கு உழவர்கள் அரும்பாடு பட்டால் தான் உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.75,000 மட்டும் தான் லாபம் கிடைக்கும். அதுவும் கூட செங்கரும்பை கொள்முதல் செய்ய உழவர்கள் மறுத்து விட்டால், உழவர்களுக்கு ரூ.2.5 லட்சம் இழப்பு தான் ஏற்படும்.
பொங்கல் திருநாளுக்கு படைப்பதைத் தவிர, செங்கரும்புக்கு வேறு எந்த பயன்பாடும் கிடையாது. தமிழ்நாட்டில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலான குடும்பங்களுக்கு அரசு சார்பில் இலவசமாக செங்கரும்பு வழங்கப்படும் நிலையில், வெளிச்சந்தையிலிருந்து பொதுமக்கள் செங்கரும்பு வாங்கும் வழக்கம் முற்றிலுமாக ஒழிந்து விட்டது. பொங்கல் திருநாளுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டும் தான் உள்ளன. அதற்குள்ளாக செங்கரும்புகளை தமிழக அரசு கொள்முதல் செய்யாவிட்டால், உழவர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாவதுடன், மீள முடியாத கடன் சுமையில் சிக்கிக் கொள்வார்கள். உணவு படைக்கும் கடவுள்களான விவசாயிகளுக்கு அப்படி ஒரு நிலை ஏற்படுவதை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
தமிழ்நாட்டில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க தமிழக அரசை நம்பித் தான் உழவர்கள் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். அவற்றை கொள்முதல் செய்யாவிட்டால் உழவர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள். எனவே, பொங்கல் திருநாளுக்குள் தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்காமலும், கையூட்டு எதிர்பார்க்காமலும் உழவர்களிடமிருந்து செங்கரும்பை முழுமையாக கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
என் வழி… தனி வழி… – இப்போது இந்தியா இப்படி சொல்கிறதாம்….. சுப்பிரமணியம் ஜெய்சங்கர் சொல்கிறார் தனது புத்தகத்தில்.
விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே அதிகார மட்டத்தில் இந்திய அரசியலில் நாடு போற்றும் பெயர் பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால் உலக அளவில் பெரும் செல்வாக்கு மற்றும் தனித்த அடையாளங்களுடன் காணப்படுபவர்கள் வெகு சிலரே. முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி திரு #டிஎன்சேஷன் போல.. தனது அதிகார வரம்புக்குள் அதன் எல்லை வரை சென்றவர். உலகின் மிக பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் சமயத்தில் கட்டுப்படுத்தும் அதிகாரம் மற்றும் அதன் திறன் ஆகியவற்றை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர். இன்றளவுமே இந்திய தேர்தல் ஆணையமே உலகின் மிக பெரிய ஜனநாயகத்தை தேர்ந்தெடுக்க உதவும் தலைசிறந்த அமைப்பாக கொண்டாடப்படுகிறது. அவர் தமிழராக உலக அளவில் கொண்டாடும் அதிகாரியாக வலம் வந்தார். இவருக்காக , இவரின் பணிக்காலத்தில் இவரின் அதிகாரங்களை குறைக்க அன்றைய காங்கிரஸ் அரசு பற்பல விதங்களில் எல்லாம் இம்சை செய்தது.
அதே போலத்தான் இவரும் திரு. #சுப்பரமண்யம்_ஜெய்சங்கர். தமிழர். 1970களில் இந்திய அரசு பணியில் சேர்ந்த இவர் தற்போதைய மத்திய அரசில் வெளியுறவு துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். சுமார் 17 மொழிகளில் சரளமாக பேச மற்றும் எழுத தெரிந்த இவருக்கு சீன அரசியல் அமைப்புக்களின் உள்ள அதிகார மட்டத்தில் நெருங்கிய தொடர்பு உண்டு. கடந்த காலத்தில் வேறு யாருக்கும் தராத தனித்த அனுமதி கைலாஷ் மானசரோவர் பகுதியில் இவருக்கு சீனா தந்தது. அஃதே போல் தற்போதைய எல்லை பிரச்சினையில் இவரது தாக்கமும் பேச்சு வார்த்தையில் ஆதிக்கமும் மேலோங்கி நிற்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.
💞உலக அளவில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் இந்தியா வின் #வெளியுறவுகொள்கை மற்றும் அதன் போக்கில் மிக பெரிய மாற்றங்களை சந்திக்கின்றது என்பதை கண்கூடாக காணமுடிகிறது. அதன் காலங்காலமாக கடைபிடிக்கும் #அணிசேராக்கொள்கையில் இருந்து விலகி வருவது போல் தோன்றினாலும், உலக அளவில் ஜனநாயக நாடுகளான இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்கிறார் போல தனது கொள்கைகளை மாற்றிக் கொண்டு வருகிறது. இது தற்போது மிக முக்கியமான அம்சமாக உலக அளவில் உற்று பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் வரும் நாட்களில் உலக அளவில் அரசியல் போக்கையே மாற்றிட கூடிய சக்தி கொண்டது.
பலரும் கவனமும் இந்த புத்தகத்தின் மீது வீழ்ந்தது என்பதும் நிஜம். தற்போது தமிழிலேயே கிடைக்கின்றன. சொந்த புராணம் ஏதும் இல்லாமல் அதே சமயம் நாட்டின் வெளியுறவு கொள்கையில் உள்ள நுட்பங்கள் சில முக்கியமான நிகழ்வுகளை 6-7 தலைப்பு வாயிலாக இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. கூகுளில் முன்னுரையாக சில பகுதிகள் இடம் பெற்றுள்ளது.
இவரின் பணி காலத்தைய சாகசங்கள் அசாத்தியமானது. இன்றளவும் சீன அதிகார அமைப்புகளில் இவரை குறை சொன்னதே இல்லை எல்லை பிரச்சினையில். அது போலவே இந்திய ராணுவத்தினர் அத்து மீறாமல் தலைமைக்கு கட்டுப்பட்டு மிக சிறந்த அணியாக எல்லையில் நிற்கிறார்கள். மத்திய அரசு இவரது துறைக்கும் நிர்வாகத்துக்கு கொடுத்த சுதந்திரத்தை சரியான விதத்தில் பயன் படுத்தி வித்தை காட்டி வருவது நன்றாகவே தெரிகிறது.
உலக அளவில் சீனா எதை நோக்கி நகருகிறது என்று சரியாக கணித்த மிக சிலருள் இவரும் ஒருவர். அதனால் தான் தற்காப்பு மற்றும் எதிர்த்தாக்குதல் நடவடிக்கைகளை முன்கூட்டியே கணித்து முன்னேற்பாடாக பலவற்றை செய்து வைத்திருக்க நம்மவர்களால் முடிந்தது.
ஒரு சுவாரசியம் சொல்வர். இந்திய ராணுவத்தினர் பயன்பாட்டிற்கு என விலை உயர்ந்த #அப்பாச்சி மற்றும் #சினூக் ரக ஹெலிகாப்டர்களை வாங்க பட்டபோது அவற்றை அவர்கள் இந்திய பாகிஸ்தான் எல்லையில் பயன் படுத்த போவது போல பாவ்லா பண்ணிக் கொண்டு இருந்தனர். ஆனால் நிஜத்தில் அவற்றை 2016-17 காலகட்டத்திலேயே இந்திய சீன எல்லையில் பயன் படுத்த திட்டமிட்டே இதனை வாங்கி உள்ளது தற்போது தெரிய வந்திருக்கிறது.
இது போக நமது சொந்த தயாரிப்பான HAL தயாரிப்பான LCH ரக ஹெலிகாப்டரை தரம் உயர்த்தி தொழில்நுட்ப மேம்பாடுகளை செய்ய திட்டமிட்டு அதற்கான வேலைகளையும் 2017 ஆண்டே முடுக்கி விட்டு உள்ளது மத்திய அரசு. உலகின் பார்வைக்கு வராமல் அதே சமயம் உலக தரத்தில் தற்போது இவைகள் தயாரிக்கப்பட்டு சோதனை பறத்தல்களையும் இமயமலையில் வைத்தே தற்போது வெற்றிகரமாக முடித்து விட்டது . சீன ராணுவம் மட்டும் அல்லாமல் உலக ராணுவ அதிகார அமைப்புகளில் உள்ளவர்கள் ஆடி போய் நின்றது இந்த இடத்தில் தான்.
குறுகிய கால இடைவெளி எப்படி இவர்களால் இவ்வளவு வேகமாக முன்னேறி நிற்க முடிந்தது என்று தலையை பிடித்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இதன் விதை 2016-17 ஆண்டுகளிளேயே போடப்பட்டது என்பதும் அதன் பின்னணியில் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் போல்வாரின் உழைப்பு மற்றும் நாட்டின் நலனுக்காக தன்னலம் பாராது உத்தமர்கள் பலரும் இணைந்து செயல்பட்டு வருவது தற்போது தான் வெளி உலகிற்கு கசிய ஆரம்பித்து இருக்கிறது.
🌺இன்றைய தேதியில் எல்லையில் இந்திய ராணுவத்தினர் பலத்திற்கு சமமாக சீன ராணுவம் வர குறைந்த பட்சம் 24 முதல் 28 மாதங்கள் ஆகும் என்பதே நமது தரப்பினரின் அசாத்திய சாதனை.
பார்த்து பார்த்து கட்டமைப்பு செய்யப்பட்ட நிலையில் உள்ளது நமது இந்திய தரப்பினர். இவர்கள் வசம் அதி நவீன ஆயுத தளவாட வழங்கல் மற்றும் அதனை கொண்டு சேர்க்க திறன் வாய்ந்த ஹெலிகாப்டர் மற்றும் தாக்குதல் விமானங்கள் என சகல விதத்திலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன…..
உதாரணமாக இன்றுள்ள நிலையில் இந்தியா முன்னேறி தாக்க உத்தரவு பிறப்பிக்க பட்டால் சுமார் 70 மணி நேரத்தில் 1962 ஆம் ஆண்டில் நாம் இழந்த பகுதிகளில் 50% வரையும் 10 நாளில் 80% சதவிகிதமும் 20 நாட்களில் கிட்டத்தட்ட முழுமையாக கைப்பற்றி விட முடியும். இது தான் இன்றைய இந்திய ராணுவத்தினர் நிலை மற்றும் அவர்களின் பலம்.
இஃது மிகப்பெரிய விஷயம். தற்போது உள்ள சூழ்நிலையில் சீனாவால் நம்மை தடுத்து நிறுத்த முடியாது.
ஆனால் இந்தியா இதனை முன்னெடுத்துச் செல்ல வில்லை. இது தான் ஏன் என்கிற குழப்பம். இதற்கு பதில் சொல்லியுள்ளார் நமது பாரத பிரதமர் ஐநாவில் வைத்தே.
நாங்கள் பலம் குறைந்த காலத்திலும் கூட போரில் தோற்க வில்லை அதே சமயம் பலம் வாய்ந்த வலிமையான நிலையிலும் வலு சண்டைக்கு போகவில்லை என்று சொன்னார்.
அன்று இது பலருக்கும் புரிய வில்லை, நம்மவர்கள் உட்பட. ஆனால் இன்று இதன் அர்த்தம் மூடுபனி விலகிய காட்சியாக புரிய வர ஆரம்பித்தது இருக்கிறது. இதனை நம் கம்பன் சொன்ன கவியாக சொன்னால் எல்லையில் இன்றுபோய்நாளை_வா என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள் நம் மத்திய அரசாங்கத்தினர்.
சீனா இன்று பல விதங்களில் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியுள்ளது, போதாக்குறைக்கு இயற்கை வேறு அங்கு கதக்களி ஆடிக் கொண்டு இருக்கிறது. இந்த சமயத்தில் அவர்களை தாக்காமல் இந்திய அரசு மௌனம் காக்கிறது. அதேசமயம் அவர்களின் சண்டி தனத்திற்கு முடிவு கட்ட அவர்களின் பல வழிகளில் பொருளாதார அமைப்பை முடக்க சொல்லி சொல்லி அடித்து ஆட ஆரம்பித்தது விட்டனர். இதே நிலை தொடர்ந்தால் சீனா தன் பொருளாதார பலத்தை இன்னும் மூன்று ஆண்டுகளில் இழந்து விடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் பலமற்ற பாகிஸ்தானிய பகுதிகளில் இரவோடு இரவாக சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தியதாக சொன்னவர்கள் இன்று ஆனானப்பட்ட சீனாவையே மடக்கி பிடித்து விட்டது இந்தியா என்று ஆச்சிரியமாக பார்க்க ஆரம்பித்து விட்டனர். இப்போது தான் இதனை தாமதமாக உணர்ந்த பாகிஸ்தான் நல்ல காலம் நாம் அன்று தப்பித்தோம் அபிநந்தன் விஷயத்தில், இல்லை என்றால் இரவோடு இரவாக நம்மை இந்திய ராணுவத்தினர் வாரி சுருட்டி கடாசியிருப்பார்கள் என்று அவர்கள் பாராளுமன்றத்தில் வைத்து தற்போது விவாதித்து கொண்டு இருக்கிறார்கள் .சீனாவோ தலையால் அடுத்து கொண்டு இருக்கிறது அன்றே இந்திய நகர்வுகளை கவனிக்க தவறிவிட்டோமே என்று….
இதனை எல்லாம் சொல்ல வேண்டிய நமது ஊடகங்கள் சில அதனை சொல்லாமல் இன்றளவும் சீன அடிவருடி வேலையில் கண்ணும் கருத்துமாக இப்போதும்கூட இருக்கிறது. என்ன செய்வது இவர்களை எல்லாம்……
ஆக மொத்தத்தில் ஒன்று மாத்திரம் நிச்சயம். இந்திய அரசியல் வரலாறு தற்போது உள்ள மத்திய அரசுக்கு முன், அரசுக்கு பின் என்று மாற்றி எழுதும் காலம் வரும் போல் தெரிகிறது. இல்லையென்றாலும் உலக அரசியல் வெகு நிச்சயமாக கொரானா காலத்திற்கு பின்னான அரசியல் களம் என்பதில் நம் பாரதத்தின் பெயர் பொன் எழுத்துக்களால் குறிக்கப்படும் காலம் ஒன்று வரும்.
இன்று திருவாளர் திரு சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்களுக்கு பிறந்த நாள். அன்னவருக்கு வாழ்த்தினை சொல்லும் வண்ணம்…. இப் பதிவு. அவர் தம் குடும்பத்துடன் வாழ்வாங்கு வாழ நாமும் தாராளமாக வாழ்த்துவோம்.
நீதிமன்றத்தை அவமதிக்கும் அமைப்புகள், மதக்கலவரத்தை உருவாக்கும் முயற்சி. பன்னெடுங்கால வரலாறு கொண்ட திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை ஆக்கும் சதியை முறியடிப்போம் என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்றாகும். இந்தத் திருத்தலம் இருக்கும் மலையானது அகநானூற்றில் முருகன் குன்றம் என்று அழைக்கப்படுகிறது.மேலும் திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, மதுரைக் காஞ்சி, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில் இதன் சிறப்பைப் பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
திருப்பரங்குன்றம் மலை யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சனை வந்த பொழுது அந்த திருப்பரங்குன்றம் மலை முழுவதுமே திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குச் சொந்தமானது என லண்டன் பிரிவியூ கவுன்சில் நீதிமன்ற தீர்ப்பு கூறியுள்ளது. இன்றும் அந்த தீர்ப்பு இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் காலங்காலமாக மலை மேல் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது.
தீபம் ஏற்றுவதை தடுத்த இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அரசு செயல்பட்ட காரணத்தால் 1996 ஆம் வருடம் உயர்நீதிமன்றத்தை அன்றைய பக்தர்கள் அணுகினர். அதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றமும் குன்றில் உள்ள தீபத்தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டது.
இதன் பின்னரும் கூட இந்து சமய அறநிலையத்துறை, தீபத் தூனில் தீபம் ஏற்றாமல் மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றி வருகிறது. தீபத்தூணில் தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென இந்து முன்னணியும் இந்துக்களும் பலமுறை போராட்டம் நடத்தியும் அரசு அனுமதி அளிக்காமல் தடுத்து வருகிறது.
இந்நிலையில் எந்த உரிமையும் இல்லாத இஸ்லாமிய அமைப்புகள் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றும் அந்த மலையில் உள்ள தர்காவில் ஆடு வெட்டி கந்தூரி செய்வோம் என திட்டமிட்டு மதக் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்கள்.
அதற்காக கோவிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி பொதுமக்கள் மத்தியில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் செயல்பட்டு வருகிறார்கள். இந்த செயலை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
திட்டமிட்டு திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை எனக்கூறி அதில் ஆடு பலியிட முயற்சித்து மதக் கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் இஸ்லாமிய அமைப்புகளை எதிர்த்து இந்து முன்னணி சார்பில் மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்பதை அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சார்பாக சித்த ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கல்வெலிபட்டி கிராமத்தில் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட நாட்டு நல பணித்திட்ட முகாமில் ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கல்வேலிபட்டியில் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் சார்பாக ஆயுர்வேத வைத்திய மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை, ஒன்றியக் கவுன்சிலர் ஜெகதீஸ்வரி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
உதவிப் பேராசிரியர்கள் பழனிக்குமார், சந்திரன், ஆகியோர்முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, சித்த வைத்திய மருத்துவ குழுவின் சார்பாக இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில் சர்க்கரை, ரத்த அழுத்தம், காய்ச்சல் ,தலைவலி, இருமல், ஜலதோஷம் உள்ளிட்ட நோய்களுக்கு அக்குபஞ்சர்சிகிச்சை அளிக்கப்பட்டது.
பல்வேறு நோய்களுக்கான ஆயுர்வேத மருந்துகள் வழங்கப்பட்டது. பின்னர் பிளாஸ்டிக் பைகளை மறப்போம். துணி பைகளை பயன்படுத்துவோம் என்று மாணவர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி எடுத்து எடுத்துக் கொண்டனர்.
மேலும் கிராமப்புறங்களில் உள்ள தெருக்கள், சுகாதார வளாகங்கள், கழிவுநீர் கால்வாய்கள், ஆகியவற்றை சுத்தமாக பராமரிப்பதுபயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைகழிவு நீர் கால்வாய்களிலும் குப்பைகளிலும் தூக்கி எறியாமல் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று பிரித்து வழங்கி கிராம சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் வாயிலாக வலியுறுத்தினர்.
தொடர்ந்து. அந்த பகுதியில் உள்ள கிராம கோவில்கள்உள்ளிட்ட பொது இடங்களில் துப்புரவு பணி மேற்கொண்டனர். இந்த நாட்டு நலப்பணித் திட்ட முகாமில்கல்லூரி மாணவர்கள்40 பேர் பங்கேற்றனர்.
உலகப்புகழ் பாலமேடு ஜல்லிக்கட்டு இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணி தீவிரம்!
உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 15ஆம் தேதி புதன்கிழமை அங்குள்ள மஞ்சமலை ஆற்று திடல் வாடிவாசலில் அரசு வழிகாட்டுதல்படி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போது பாலமேடு பேரூராட்சி சார்பில் வாடிவாசல் வண்ணம் பூசும் பணிகள், பார்வையாளர் அமரும் கேலரி அமைப்பது, இரண்டடுக்கு பாதுகாப்பு வேலி, உள்ளிட்ட பல்வேறு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பாலமேடு பேரூராட்சி தலைவர் சுமதி பாண்டியராஜன், துணைத் தலைவர் ராமராஜ், மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு விழாவிற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், தற்காலிக கழிப்பறை வசதிகள், ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் ஆங்காங்கே நின்று கண்டு ரசிக்க பேருந்து நிலையம், விளக்குதூண் உள்ளிட்ட இடங்களில் அகன்ற திரை மூலம் நேரடி ஒளிபரப்பு வசதி, இடங்களில் தற்காலிக குடிநீர் வசதிகள், தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வாகங்கள், உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது..
அலங்காநல்லூரில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலயை திறக்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிச்சாமி தலைமையில் கரும்புகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அலங்காநல்லூர் கேட்டு கடை பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்புகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் .
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கரும்பு விவசாய சங்க மாநில தலைவர் பழனிச்சாமி கூறுகையில்,
மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க கோரி கரும்பு விவசாயிகள் சங்கமும் ஆலைத் தொழிலாளர்களும் கடந்த நான்கு வருட காலமாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் கடந்த ஆண்டு கூட 46 நாள் ஆலைமுன்பாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது வேளாண் துறை அமைச்சரும் வணிகவரித்துறை அமைச்சர்மூர்த்தி அவர்களும் ஆலையை திறப்பதற்காக கருத்து கேட்பு கூட்டம் என்று சொல்லி இங்கு வந்து கூட்டத்தை போட்டார்கள் கூட்டத்தை போட்டு ஆலைக்கு கமிட்டி ஒன்று அமைத்தார்கள் ஆலை திறப்பதற்கு 21 கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்று அரசுக்கு அறிக்கை அனுப்பினாங்க ஆனால் இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வமும் அறிவிச்சாரு ஒன்னு நடக்கல.
எங்களுக்கு அதாவது திராவிட முன்னேற்ற கழக அரசு வந்து கூட்டுறவு சங்கங்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை என்பதைத்தான் நாங்கள் பார்க்கிறோம்
இங்கிருந்த தொழிலாளர்கள் அனைவரையும் வேறு ஆலைக்கு மாற்றி விட்டார்கள் இங்கு கரும்பை பதிவு செய்வதற்கு ஆட்கள் இல்லை அதே நேரத்தில் இந்த வருஷம் இந்த பகுதியில 2 லட்சம் ஏக்கர் ஆலைக்கு உட்பட்ட பகுதியில் கரும்பு போட்டு இருக்கிறார்கள்.
போட்டும் கூட அந்த அமைச்சர் சொல்றாரு கரும்பு இல்லை என்கிறார். மேலூர், தாலுகாவுக்கு செல்லலாம் அல்லது உசிலம்பட்டி செல்லம்பட்டி பகுதிக்கு செல்லலாம் அல்லது திருமங்கலத்திற்கு செல்லலாம் ஒவ்வொரு ஊருக்கும் போனால் இரண்டு மூன்று லட்சம் கரும்பு பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் ,கரும்பு இல்லை என்று சொல்வது ஏமாற்று வேலை.
ஆலையை திறந்து கரும்பு பதிவதற்கு ஆள் இல்லை நாங்கள் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பாக கமிஷன் இடம் போன் பண்ணி தகவல் கேட்டால் அவர்கள் நாங்கள் என்ன செய்வது மந்திரி பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். அதனால் எங்களுக்கு என்ன சந்தேகம் என்றால் தனியார் சர்க்கரை ஆலையை வளர்ப்பதற்கு இதை மூடுகிறார்கள் இந்த ஆலையில் பதிந்த கரும்புகளை வெட்டுவதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை
வெறும் 21 கோடி தான் தேவைப்படுது ஆலயை திறப்பதற்கு 15 கோடி மராமத்து பார்ப்பதற்கும் 17 கோடி ஏற்கனவே மூன்று ஆண்டுகள் சம்பளம் போடாத தொழிலாளர்களுக்கு சம்பளம் போடுவதற்கும் அப்படி ஒரு நிலைமை உள்ளது. அதே நேரத்தில் இந்த ஆலையில் 110 கோடி விவசாயிகள் பணம் 10 கோடி மின்சார நிலையம் திறப்பதற்கு 16 வருடங்களாக இரும்புகள் துருப்பிடித்து போய் சேதம் அடையக் கூடிய நிலைமையில் உள்ளது இதைப் பற்றி இந்த அரசு கண்டு கொள்வதில்லை.
இந்த மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களும் இருக்கிறார்கள் இதைப் பற்றி கண்டு கொள்வதே இல்லை.
அதே நேரத்தில் மக்கள் கோரிக்கை வைக்காத திட்டங்களை செய்கிறார்கள் ரோடு போட சொல்லி கேட்கவில்லை ரோடு போடுகிறார்கள் கலைஞர் ஜல்லிக்கட்டு மைதானம் கட்ட சொல்லி யாரும் கேட்கவில்லை அதை கட்டி இருக்கிறார்கள்.
மக்கள் கோரிக்கை வைக்காத அனைத்தையும் செய்கிறார்கள் ஏன் செய்கிறார்கள் என்று நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஆலை ஓடினால் என்ன லாபம் என்ன நட்டம் என்று பார்க்கிறார்கள் என நினைக்கிறோம். இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
இந்த அரசு பரிசீலனை பண்ணி 2 லட்சம் கரும்பு இருப்பில் உள்ளது ஆலையை இயக்க வேண்டும் இல்லையென்றால் நாங்கள் அனைத்து சங்கங்கள் கட்சிகள் அனைவரையும் இணைத்து தொடர் போராட்டத்தை நடத்துவோம் – இவ்வாறு கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் கரும்பு விவசாய சங்க செயலாளர் கதிரேசன் பொதுச் செயலாளர் ரவீந்திரன் இளங்கோவன் மகேஸ்வரன் அடக்கி வீரணன் ராஜேஸ்வரன் அய்யாக்காளை மொக்க மாயன் முனியாண்டி தேவர் போஸ் ராஜாமணி முருகன் நாகராஜன் கந்தப்பன் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் ஆலை தொழிலாளர்கள் சங்கம் நிர்வாகிகள் தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இஸ்ரோவின் அடுத்த சேர்மன் பொறுப்பிற்கு டாக்டர் V. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதய சேர்மன் S. சோம்நாத்தின் பதவிக் காலம் ஜனவரி 13 ஆம் தேதி நிறைவடைகிறது.
‘இஸ்ரோ’வின் புதிய தலைவருக்கு அறிவியல் வாழ்த்துக்கள்!
— நெல்லை சு.முத்து
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்ட டாக்டர் வி.நாராயணன் அவர்கள், வரும் ஜனவரி 14 அன்று இந்திய விண்வெளித் துறையின் புதிய தலைவராகப் பதவியேற்கிறார்.
டாக்டர் வி நாராயணன், 1984 இல் இஸ்ரோவில் சேர்ந்தவர். தற்போது திருவனந்தபுரம், வலியமலையிலுள்ள திரவ உந்தும அமைப்புகள் மையத்தின் (லிக்விட் ப்ராபல்ஷன் சிஸ்டம்ஸ் சென்டர், எல்பிஎஸ்சி) இயக்குநராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த மையம், திரவ, பகுதி அதி குளிர் (Semi Cryogenic), அதி குளிரிய (கிரையோஜெனிக்) உந்துவிசை நிலைகளின் வளர்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
செயற்கைக்கோள்களுக்கான வேதியியல் மற்றும் மின் உந்துவிசை அமைப்புகளுடன், ஏவுகலன்களுக்கான கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் உந்துவிசை அமைப்பு ஆகியவற்றின் நுட்பமான கண்காணிப்புக்குரிய இயல்மாற்றிகள் உருவாக்கிய பெருமைக்கு உரியவர் நாராயணன் அவர்கள்.
இந்த மையத்தின் இயக்குநராக ஆவதற்கு முன்பு பல்வேறு பதவிகளில் பணியாற்றியவர். ஆரம்பக் கட்டத்தில், ஏறத்தாழ நான்கரை ஆண்டுகள், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (விஎஸ்எஸ்சி) வானிலை ஆய்வூர்திகள் (சவுண்டிங் ராக்கெட்டுகள்), திறன் கூட்டிய செயற்கைக்கோள் ஏவுகலன் (ஏஎஸ்எல்வி), துருவப்பாதைச் செயற்கைக்கோள் ஏவுகலன் (பிஎஸ்எல்வி) ஆகியவற்றின் திட உந்துவிசைத் துறையில் பணியாற்றினார்.
தேய்படு புறக்கூம்புக் குழாய்கள் (Ablative nozzle systems), கோர்வைப் பொருள் உந்துபொறிகலன்கள், எரியூட்டி உறைகள் (Composite motor cases and Composite Igniter cases) தயாரிப்பிலும் பங்களித்த நிபுணர்.
1989 ஆம் ஆண்டில், கரக்பூர், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐ.ஐ.டி) முதுநிலைப் பட்டப் படிப்பில் ‘கிரையோஜெனிக்’ (அதிகுளிரியம்) பொறியியல் துறையி்ல் வெள்ளிப் பதக்கத்துடன் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றவர்.
திரவ உந்தும அமைப்புகள் மையத்தின் கிரையோஜெனிக் உந்துவிசைத் துறையில் பணி தொடங்கி, ‘கிரையோஜெனிக்’ மேல் கட்ட (CUS) உந்துபொறியின் வெற்றிகரமான வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளார்
மேலும், மனித விண்வெளிப் பயணங்களுக்கான முன்பரிசோதனையாக, ‘விண்கூடு வளிமண்டல நுழைவுப் பரிசோதனை’ (Crew module Atmospheric Re-entry Experiment, CARE) இடம்பெற்ற அதி கனரக ‘புவி ஒத்தியக்கச் செயற்கைக்கோள் ஏவுகலன் மார்க்3 (GSLV MkIII) பயணத்திற்காக, ‘சி25’ கிரையோஜெனிக் திட்டத்தின் இயக்குனராக, சி25 கட்டத்தை உருவாக்கி வழங்கியவர்.
இதற்கு மத்தியில், 2001 ஆம் ஆண்டு கரக்பூரில் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் ‘விமானவியல்-விண்பயணப் பொறியியல்’ (‘ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங்’) துறையில் முனைவர் பட்டமும் பெற்றார் என்றால் பாருங்களேன்.
“கிரையோஜெனிக் உந்துபொறிகளில் பயணக் கட்டுப்பாட்டிற்கான பாய்மச் சுழலிப் பகுதிகள்’ (கேவிடேட்டிங் வென்ச்சரிஸ்)” என்ற தலைப்பில் முதுநிலைப் பட்ட ஆய்வறிக்கையின் ஒரு பகுதியாகவும், உந்துவிசைக்கான எரிபொருள்- ஆக்சிகரணிக் கலவை விகிதக் கட்டுப்பாடு அமைப்புகள் (“த்ரஸ்ட் அண்ட் மிக்ஸ்ச்சர் ரேஷியோ ரெகுலேஷன் சிஸ்டம்ஸ் ஃபார் த்ரஸ்ட் அண்ட் மிக்ஸ்ச்சர் ரேஷியோ ரெகுலேஷன் சிஸ்டம்ஸ்”) என்ற தலைப்பில் முனைவர் பட்ட (பிஎச்.டி) ஆய்வறிக்கையின் ஒரு பகுதியாகவும் முனைவர் பட்டப்பணி மேற்கொள்ளப்பட்டது. இந்திய ஏவுகலன்களின் வளர்ச்சியில் நேரடியாகப் பயன்படுத்தப்படத் தக்க வகையில் கிரையோஜெனிக் உந்துவிசை அமைப்புகள் சார்ந்த ஆராய்ச்சி அது.
‘சந்திரயான் நிலாப்பயணம், ‘ககன்யான்’ மனித விண்வெளிப்பயணம், ‘ஆதித்யா எல்-1’ சூரிய ஆய்வுக்கலம் போன்ற முக்கியத் திட்டங்களில் திரவ உந்துபொறி நுட்பத்தில் சிறப்பாகப் பங்களித்தவர் டாக்டர். நாராயணன்.
இவர் இந்திய விண்வெளி அறிக்கைகள் (1200), இதழ்/மாநாட்டுக் கட்டுரைகள் (50) ஆகிவற்றுடன், புத்தக அத்தியாயங்கள் என ஏராளமான தொழில்நுட்பக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
ஐஐடி மற்றும் என்ஐடி உள்ளிட்ட பொறியியல் நிறுவனங்களில் பல முக்கிய உரைகள் ஆற்றியதுடன், பத்து பட்டமளிப்பு விழாக்களில் சிறப்புரைகள் வழங்கி இருக்கிறார்.
இத்தனைச் சிறப்புகள் மிக்கவருக்கு இந்திய விண்வெளி சங்கத்தின் (Astronautical Society of India, ஏஎஸ்ஐ) தங்கப் பதக்கம், ராக்கெட் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களுக்கான ஏஎஸ்ஐ விருது, ‘இந்திய உயர் ஆற்றல்பொருள்கள் சங்கம்’ (‘ஹை எனர்ஜி மெட்டீரியல்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா’) வழங்கிய குழு விருது, சிறந்த சாதனை மற்றும் செயல்திறன் சிறப்பு விருதுகள் சென்னை சத்யபாமா பல்கலைகழகத்தின் கௌரவ அறிவியல் முனைவர் பட்டம் (ஹானரிஸ் காசா) பட்டமும் வழங்கப்பட்டுள்ளதில் வியப்பில்லை.
ஐஐடி, காரக்பூரின் புகழ்பெற்ற முன்னாள் மாணவர் விருது-2018, நேஷனல் டிசைன் & ரிசர்ச் ஃபோரம் ஆஃப் இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் (இந்தியா) வழங்கும் தேசிய வடிவமைப்பு விருது-2019, ‘இந்திய விமானவியல் சங்கம்’ (‘ஏரோநாட்டிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா, AeSI) வழங்கும் தேசிய விருது-2019 ஆகிய பல கௌரவிப்புகளுக்குச் சொந்தக்காரர்.
அன்றியும் டாக்டர். நாராயணன் ‘பன்னாட்டு விண்பயணவியல் கழகம்’ (International Academy of Astronautics), இந்திய தேசிய பொறியியல் அகாடமி ஆகிய அமைப்புகளின் உறுப்பினர், சர்வதேச விண்வெளி மாநாட்டின் விண்வெளி உந்துமத் துறையின் உறுப்பினர், இந்திய அறிவியல், பொறியியல் அமைப்புகள் (சொசைட்டி ஆஃப் சிஸ்டம்ஸ் ஃபார் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், ISSE) உறுப்பினர்.
இந்தியப் பொறியாளர்கள் நிறுவனத்தின் ‘சான்றான்’ (‘ஃபெலோ’) எனப் பல தகுதிகள் கொண்டவரும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்கும் இரண்டாவது தமிழர் என்னும் உன்னதப் பெருமைக்கும் உரிய முனைவர் வி.நாராயணன் அவர்களுக்கு 39 ஆண்டுகள் (1973-2011) இந்திய விண்வெளித் துறையில் பணியாற்றிய விஞ்ஞானியின் அறிவியல். வாழ்த்துக்கள்.